வியாழன், 3 டிசம்பர், 2009

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

சிரவணன்  என்று  ஒரு  சிறுவன் இருந்தான். அவனது  தாயும்  தந்தையும்  மிகவும்  வயதானவர்கள்.அத்துடன்  இருவரும்  கண்  தெரியாதவர்கள்.தங்களின்  மகனின்  உதவியில்லாமல்  எந்த ஒரு  வேலை யையும்  செய்ய  இயலாதவர்கள்.  சிரவணனின்  தந்தையார்  ஒரு  ரிஷி.
 

ஆகவே  அவர்கள்  ஒரு  வனத்தில்  வாழ்ந்து  வந்தனர்.

அவர்கள்  தங்கியிருந்த  வனத்தில்  நீரின்றி  வறட்சி  ஏற்பட்டது.  ஆகவே  வேறு  வானத்தைத்  தேடிப்  புறப்பட்டனர்.  நடக்க இயலாமலும்  கண்  தெரியாமலும்  தவிக்கும்  தன்  பெற்றோருக்கு  ஊன்றுகோலாகவும்  கண்ணாகவும்  இருந்தான்  சிரவணன்.  இரண்டு  பெரிய  பிரம்புத் தட்டுகளில்  இருவரையும்  அமரவைத்து  அத்தட்டுகளைத்   தராசு  போல்  அமைத்து   அதைத்தன்  தோளில்  தூக்கிக்  கொண்டான்.  வாலிப  வயதை  நெருங்கியவன்  ஆனதால்  சிரவணன்  சிரமமின்றி   தன்  பெற்றோரைச்  சுமந்து  சென்றான்.

வெகு தூரம்  நடந்து  வேறு ஒரு  காட்டுப்  பகுதியை  அடைந்தனர்.  சிரவணனின்  தயார்  நீர்  அருந்தக்  கொண்டுவருமாறு  கூறினார். தந்தையாரும்  தாகமாக  உள்ளது   எனக்கூறவே  இருவரின்  தாகத்தையும்  நீக்க  எண்ணினான்.  குடுவையில்  நீர்  காலியாக  இருந்ததால்  குளமோ  கிணறோ  அருகில்  உள்ளதா  எனத்  தேடிச்  சென்று  நீர்  கொண்டு  வருவதாகக்  கூறினான்  சிரவணன்..விரைவில்  வந்துவிடுமாறு  கூறி   அனுப்பிவைத்தனர்  அந்த  வயோதிகத்  தம்பதியர்.   அவர்களை  வணங்கி  விடை  பெற்றுப்  புறப்பட்டான்  சிரவணன்.

அந்தப்  பகுதி  அயோத்தி  நகரைச்  சேர்ந்தது.  அயோத்தி  அரசன்  தசரதன்.  காட்டுவிலங்குகளின்  துன்பத்திலிருந்து  மக்களைக்  காப்பதற்காக  துஷ்ட    மிருகங்களை  வேட்டையாட  தசரதன்  கானகம்  வந்திருந்தான்.  மாலைநேரம்.  இருள்  லேசாகக்  கவிந்து  கொண்டிருந்தது.  மரத்தடியில்  ஓய்வெடுத்துக்  கொண்டிருந்தான்   மன்னன்.  அவன்  அருகே  மிருகம்  ஒன்று  தண்ணீர்  குடிப்பதுபோல  சத்தம்  கேட்டது. மன்னன்  துள்ளி  எழுந்தான்.தன்  வில்லில்  நாணைத்  தொடுத்தான்.  வில்லிலிருந்து  அம்பு  புறப்பட்ட  மறுகணமே   "அம்மா !"  என்ற  அலறல்  குரல்  கேட்டது.

மனிதக்  குரலைக்  கேட்ட  மறுகணம்   மன்னன்  திடுக்கிட்டான்.  குரல்  வந்த  திசை  நோக்கி  ஓடினான்.  அங்கே  சிரவணன்  அம்பு  பட்டு  வீழ்ந்து  கிடந்தான்.  அவனிடம்  தசரதன்  மன்னிக்குமாறு  வேண்டினான். தவறு  நேர்ந்துவிட்டது  என்று  புலம்பி அழுதான். அவனைத்  தடுத்த  சிரவணன்,
"அரசே!  என்  பெற்றோர்  வனத்தில்  தாகத்தால்  தவித்தவாறு  உள்ளனர்.  அவர்களிடம்  நான்  இறந்த  செய்தியைச்  சொல்லாமல்  அவர்களை  நீர்  அருந்தச்  செய்துவிடுங்கள். பெற்ற  தாய்  தந்தையரின்  நீர்  வேட்கையைத்  தீர்க்காமல்  சாகிறேன்  .நீங்கள்  அவர்களின்  மகனாக  இருந்து  அவர்கள்  தாகத்தைத்  தீர்த்து  விடுங்கள்.  இதுதான்  என் கடைசி  ஆசை."என்று  கூறிவிட்டு  இறந்தான். 

சிரவணன்  கூறியது  போல்  நீரை  எடுத்துக்கொண்டு  அவன்  பெற்றோர்    இருக்குமிடம்  நோக்கிச்  சென்றான்  தசரதன்.  குரலைக்  காட்டாமல்  நீரை  அந்த  வயோதிகத்  தாயிடம்  கொடுத்தான்.  தசரதனின்   கை  பட்டதுமே  "யார்  நீ?" என்று  சத்தமிட்டாள்  அந்தத்தாய்.  இருவரும்  "எங்கள்  மகன்  எங்கே?  நீ  ஏன்  வந்தாய்? எங்கள்  மகனுக்கு    என்னவாயிற்று?"  என்று  அழுது  புலம்பினர்.  அதைத்  தாங்காத  தசரதன்  தான்  தவறாக  அம்பெய்திய  காரணத்தால்  சிரவணன்  மாண்ட  செய்தியைக்  கூறினான்.  புத்திர  சோகம்  தாங்காத  அந்தப் பெற்றோர்  "ஏ! மன்னா!  நாங்கள்  மகனை  இழந்து  தவித்து  உயிர்  விடுவது  போலவே  நீயும்  எத்தனை  புத்திரர்களைப்  பெற்றாலும்  யாரும்  அருகே  இல்லாமல்  புத்திர  சோகத்தாலேயே உயிர்  விடுவாய்.   இது  எங்கள்  சாபம்  "  என்று  சபித்துவிட்டு  உயிர்  விட்டனர்.

பின்னாளில்  இந்த  தசரதன்  ராமனை  வனவாசத்திற்கு  அனுப்பிவிட்டு  புத்திரசோகத்தில்  ஆழ்ந்து  துன்பப்பட்டான்.  பரதனும்  சத்ருக்னனும்   கேகயநாடு  செல்லவும்   ராம  இலக்குவர்  வனம்  ஏகவும்  தசரதன்  தனிமையில்  தவித்து  பின்  உயிர்  விட்டான்.  நல்லோர்  சொல்லுக்கு  வலிமை  உண்டு.பெற்றோரை  தெய்வமாக  எண்ணி  அவர்களுக்கு  அன்புடன்  சேவை  செய்து  வந்த  சிரவணன்  பண்பால் பெருமை  பெற்றான். அவன்  பெற்றோரின்  சாபம்  பலித்துவிட்டது.  எனவே   பெற்றோரிடம்  நாம்  ஆசிபெற   என்றும்  அவர்களை  வணங்க  வேண்டும்.