செவ்வாய், 15 டிசம்பர், 2009

பலன் நோக்காத பக்தி

பஞ்சபாண்டவர்கள் ஐந்து பேர். தருமன், பீமன் அர்ஜுனன் நகுலன் சகாதேவன் என்று அவர்களுக்குப் பெயர்.இவர்களுள் அர்ஜுனன் கண்ணனிடம் மிகவும் அன்பும் பக்தியும் கொண்டவன். தினமும் ஒரு வண்டி அளவு பூக்களைப் பறித்து வந்து கிருஷ்ணனைப் பூசிப்பான். அதனால் தானே மிகவும் பக்திமான் என்ற கர்வம் அவனிடம் குடி கொண்டது. தன்னை விட கண்ணனை நேசிப்பவர் இவ்வுலகில் யாருமில்லை என்று இருமாந்திருந்தான். உறவு முறையில் கண்ணன் அர்ஜுனனுக்கு மைத்துனன். கண்ணனின் சகோதரி சுபத்திரையை அர்ஜுனன் மணந்திருந்தான்.

பாரதப் போர் முடிந்து தருமன் பட்டமேற்று பல ஆண்டுகள் ஆட்சி செய்தான். காலம் ஓடியது. பாண்டவரின் காலம் முடிந்தது. அனைவரும் ஸ்வர்க்கம் செல்ல விண் வழியே பயணப்பட்டனர். தருமன் முன்னே செல்ல அவனைத் தொடர்ந்து கண்ணன் செல்ல அவனருகே பீமன் சென்றான். அவன் பின்னே அர்ஜுனன் சென்றான். அர்ஜுனன் எவ்வளவு முயற்சித்தும் பீமனைத் தாண்டி கண்ணனின் அருகே செல்ல இயலவில்லை.


அப்போது அர்ஜுனன் கண்ணனிடம் கேட்டான். " கண்ணா! ஏன் உன்னிடம் என்னால் நெருங்க முடியவில்லை? என் பக்தியில் ஏதேனும் குறை உண்டா? பீமனால் மட்டும் உன்னருகே நெருங்க முடிகிறதே?


கண்ணன் புன்னகைத்தான். "அர்ஜுனா! என்னைப் பூஜித்ததால் அதுவும் வண்டி அளவு பூக்களைப் போட்டுப் பூஜித்ததால் நீயே மிகவும் பக்தி கொண்டவன் என்று எண்ணிக்கொண்டாயல்லவா?" என்று கூறியபோது அர்ஜுனன் திகைத்தான்.


"ஆம் கண்ணா! அதிலென்ன சந்தேகம்? எண்ணற்ற மலர்களைக் கொண்டு உன்னைப் பூஜித்தவனல்லவா நான்?"


"அப்படியானால் உ ன்னிலும் அதிக மலர்களைக் கொண்டு என்னைப் பூஜித்தவனை உன்னை விட அதிக பக்தியுள்ளவன் என்று கூறலாமல்லவா?"


"அப்படிப் பூஜித்தவன் உள்ளானா கிருஷ்ணா?"

"ஆம். அவன்தான் பீமன்.உன் அண்ணன்." அர்ஜுனன் திகைத்தான்.
"கண்ணா! பீமன் ஒருநாள் கூட உன்னைப் பூஜித்து நான் பார்க்கவில்லையே? "


"உண்மைதான். பீமன் பூஜித்தது யாருக்கும் தெரியாது. எனக்கும் பீமனுக்கும் மட்டுமே தெரியும்."


அர்ஜுனன் துக்கத்தில் ஆழ்ந்தான். அவன் உள்ளம் துயரத்தில் மூழ்கியது.கண்ணனைக் கண்ணீர் மல்கப் பார்த்தான்.


"அர்ஜுனா! துயரப்படாதே. உன் உள்ளத்தில் நீயே பக்திமான் என்றும் உனக்கே நான் உரிமையானவன் என்றும் நீ கர்வம் கொண்டிருந்தாய்.

அது சரியல்லவென்பதை அறிவிக்கவே இந்நிகழ்ச்சி நடந்தது."
"பீமன் யாரும் அறியாதவாறு எவ்வாறு பூஜை செய்தான்?"

"அர்ஜுனா! நீங்கள் வனவாசத்தின் போதும் அக்ஞாத வாசத்தின் போதும் காடுகளிலும் பல ஊர்களிலும் அலைந்து திரிந்தீர்கள் அல்லவா?

அப்போது பீமன் தன் கண்ணில் கண்ட மலர்கள் அத்தனையையும் கிருஷ்ணார்ப்பணம் என்று எனக்கு அர்ச்சித்து விடுவான். நானும் அவனது உள்ளத்தின் அன்பைப் புரிந்து கொண்டு அனைத்தையும் ஏற்றுக்கொண்டேன். அப்படி அவன் அர்ச்சித்த மலர்கள்தன்ன் அதோ பார். மலைபோல் குவிந்துள்ளது. நீஅர்ச்சித்தவை இதோ இச்சிறு குன்று போல் உள்ளது. உள்ளத்தின் தன்னலமில்லாத அன்பே உண்மையான பக்தி. நீ மலர் பறித்து பூஜை செய்ததை விட மனதளவில் பூஜித்த பீமனின் பக்தியே சிறந்தது. ஒப்புக்கொள்கிறாயா?"


அர்ஜுனனின் கண்கள் திறந்தன. அவனது கர்வம் அகன்றது. பரிசுத்தமான மனதோடு கண்ணனை தியானித்தான். தூய்மையான அர்ஜுனனை இப்போது கண்ணன் கைகளைப் பற்றி அழைத்துச் சென்றான். அனைவரும் வைகுண்டம் சேர்ந்தனர்.