செவ்வாய், 19 ஜூன், 2012

89- எவ்வுயிரும் நம் உயிரே. திருக்குறள் கதைகள்

.
ஒரு காட்டில் நல்ல பாம்பு ஒன்று வாழ்ந்து வந்தது. சற்று வயதான பாம்பு அது. ஒரு நாள் அது இரை தேடிக்கொண்டே காட்டுக்குள் அலைந்து திரிந்து கொண்டிருந்தது.அப்போது ஒரு மரத்தடியில் முனிவர் ஒருவர் தவம் செய்து கொண்டு அமர்ந்திருந்தார்.அவரிடம் சென்று பணிந்து நின்றது பாம்பு.
அதைக் கண்களைத் திறந்த முனிவர் பார்த்தார்.புன்னகை புரிந்தார்.
"உனக்கு என்ன வேண்டும்?"
"சுவாமி, நான் போன பிறவியில் பாவம் செய்து இந்தப் பிறவியில் பாம்பாகப் பிறந்துள்ளேன்.அதனால் மீண்டும் பிறவாதிருக்க நான் என்ன செய்யவேண்டும் தயவு செய்து எனக்கு உபதேசம் செய்ய வேண்டும்." என்று கேட்டுக் கொண்டது.அதைப் பார்த்துப் புன்னகை புரிந்த முனிவர்,
"நீ இந்தப் பிறவியில் யாரையும் கடித்துத் துன்புறுத்தாமல் இருந்தால் போதும்.உனக்கு அடுத்த பிறவியில் நல்ல உயர்ந்த பிறவி கிட்டும்" என்று உபதேசித்து ஆசிகூறினார்.
அதைக் கேட்டு மகிழ்ந்த பாம்பு அவரை வணங்கி விடைபெற்றது.
சில நாட்கள் கழிந்தன.காட்டில் திரிந்த பாம்பு தைரியமாக ஊருக்குள் வந்தது.நாம்தான் யாரையும் கடிப்பதில்லை யாருக்கும் தீங்கு செய்வதில்லை என முனிவரிடம் கூறிவிட்டோமே.அதனால் நமக்கும் யாரும் தொந்தரவு தரமாட்டார்கள் என எண்ணிக் கொண்டது.
அதனால் அந்தப் பாம்பு ஊரின் ஓரமாக உள்ள ஒரு மைதானத்தில் உலவியபடி இரை தேடிக்கொண்டு  இருந்தது. அப்போது அங்கு விளையாட வந்த சில சிறுவர்கள் அங்கு உலவும் பாம்பைப் பார்த்து அலறினார்கள்.அந்த நல்ல பாம்பு யாரையும் லட்சியம் செய்யாமல் தன் வழியே போய்க் கொண்டு இருந்தது.ஆனால் சிறுவர்கள் விடுவார்களா? பாம்பின் அருகே வந்து சூ., சூ எனக் குரல் கொடுத்து அந்தப் பாம்பை விரட்டினர்.
அப்போதும் அந்தப் பாம்பு தன் வழியிலேயே போய்க் கொண்டு இருந்ததைக் கண்டு சிறுவர்களின் பயம் சற்று விலகியது."டேய், பாம்புக்குக் கண் தெரியலை போல இருக்குடா.,நம்மளைப் பார்த்தும் அது ஓடாமல் மெல்லப் போகுதுடா!"என்றான் ஒருவன் அதைக் கேட்ட மற்ற சிறுவர்களுக்கு பயம் அறவே நீங்கியது. பாம்பின் அருகே இருந்த கற்களை எடுத்து வீசத் தொடங்கினர்.சில கற்கள் பாம்பின் மீது பட்டு ரத்தம் கசியத் தொடங்கியது.
அப்போதும் பாம்பு தன் தலையைத் தூக்காது மெல்ல மெல்ல ஊர்ந்து கிடைத்த பொந்தில் நுழைந்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டது. சற்று நேரம் சிறுவர்கள் அந்தப் பொந்தின் முன் நின்று கூச்சல் போட்டுவிட்டுச் சென்று விட்டனர்.
பாம்பு இரவானதும் அந்த இடத்தை  விட்டு வெளியே வந்து தன் இருப்பிடமான காட்டை நோக்கிச் சென்றது.அதனால் ஊர்ந்து செல்ல முடியாதபடி உடல் முழுவதும் காயம்.ரத்தம் சிந்தும் உடலை வலியுடன் நகர்த்திக் கொண்டு சென்று முனிவர் முன் நின்றது.
அதிகாலையில் ரத்தம் சொட்டும் உடம்புடன் வந்து நின்ற பாம்பைப் பார்த்து திடுக்கிட்ட முனிவர்,"என்னவாயிற்று?ஏன் இப்படி காயப் பட்டு வந்திருக்கிறாய்?"என்று அன்போடு வினவினார்.
துக்கம் தொண்டையை அடைக்க கூறியது பாம்பு. "சுவாமி, நீங்கள் சொன்னபடியே யாரையும் கடிப்பதில்லை என முடிவு செய்து விட்டோமே என்று  ஊருக்கு வெளியே இருந்த மைதானத்துக்குச் சென்றிருந்தேன்.அங்கு யாரையும் தொந்தரவு செய்யாமல் என் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் அங்கு விளையாடவந்த சிறுவர்கள் என்னைப் பார்த்ததும் என்னை இந்த நிலைக்கு ஆளாக்கி விட்டார்கள்."என்று கூறிக் கண்ணீர் விட்டது.
அதன் பரிதாப நிலைக்கு இறங்கிய முனிவர் அதன் காயத்துக்கு மருந்து போட்டபடி பேசினார்.
"உன்னைக் கடிக்காதே என்றுதானே சொன்னேன். நீ உன் பிறவிகுணத்தைக் காட்டவேண்டியதுதானே?"
பாம்புக்குப் புரியவில்லை.அது "என்ன சுவாமி சொல்கிறீர்கள்?"என்று கேட்டது.
"ஆமாம் உன் பாம்பு குணமான சீறும் குணத்தைக் காட்டியிருந்தால் ஓடியிருப்பார்கள் நீயும் அடிபடாமல் தப்பியிருக்கலாமே என்றுதான் சொன்னேன்."
"உண்மைதான் சுவாமி நீங்கள் கடித்துத் துன்புறுத்தாதே என்றுதான் கூறினீர்கள் சீறிப் பயமுறுத்தாதே என்று சொல்லவில்லையே"
புன்னகையோடு அந்தப் பதிலை ஏற்றுக் கொண்ட முனிவர் பாம்புக்கு விடை கொடுத்து அனுப்பினார்.
சில நாட்கள் கழித்து அந்தப் பாம்பு காட்டின் எல்லையில் ஒரு பாறை அருகே படுத்திருந்தது. அப்போது சில மாடு மேய்க்கும் சிறுவர்கள் அங்கு வந்தனர். பாம்பு படுத்திருப்பதைப் பார்த்தனர். ஒவெனக்  கூவியவாறு ஓடினர்.
மீண்டும் அருகே வந்தபோது பாம்பு புஸ் என  சீறவே தங்களின் மாடுகளை விரட்டிக் கொண்டு அவ்விடம் விட்டு விலகினர்.பாம்பு நலமுடன் தன் இருப்பிடம் வந்து சேர்ந்தது.
அடுத்த பிறவி நல்ல பிறவியாக அமையவேண்டுமாயின் இப்பிறவியில் யாருக்கும் தீங்கு செய்யாமல் இருக்கவேண்டும் என்ற கொள்கையைக் கடைபிடித்தது அந்தப் பாம்பு.அதே போல் தனக்கு தீமை  ஏற்படுமாயின் தன் குணத்தைக் காட்டித் தப்பிப்பதும் தவறு அல்ல என்பதைப் புரிந்து கொண்டது அந்தப் பாம்பு.
இந்தக் கருத்தையே வள்ளுவரும் கூறுகிறார்.
"தீப்பால  தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை  அடல்வேண்டா  தான்."
எவனொருவன் தீமையின்றி வாழ நினைக்கிறானோ அவன் யாருக்கும் தீங்கு செய்யாதிருப்பானாக. என்கிறார்.இக்கருத்தை நாம் பாம்பின் வாழ்க்கையிலிருந்து தெரிந்து கொண்டோமல்லவா?
"எவ்வுயிரும் என்னுயிர்போல் எண்ணியிருக்கும்" உயர்ந்த வாழ்வைப் பெற்று இன்புற்றிருப்போம்.



ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

4 கருத்துகள்: