திங்கள், 23 செப்டம்பர், 2019

madhwachariyar.


                                                                                                 மத்வாச்சாரியார்.
         உலக நன்மைக்காகப் பிறவி எடுத்து உலக மக்களை உய்விக்க வந்த ஒவ்வொருவரும் மகான்களே. செயற்கரிய செய்வர் பெரியர் என்ற வாக்கிற்கிணங்க செய்தற்கு அருமையான செயல்களைச் செய்து தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்ந்த மகான்கள் பிறந்த புண்ணிய பூமி நம் பாரத நாடு. இங்கு அவதரித்து மக்களுக்கு நல்லுபதேசம் செய்த மகான்களின் வரிசை மிக நீண்டது.அது காலத்திற்குக் காலம் வேறு பட்டாலும் உலக நன்மை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டது.அப்படிப்பட்ட மகான்களின் வரிசையிலே பதினான்காம் நூற்றாண்டிலே அவதரித்த மகான் மத்வாச்சாரியார் என்னும் புனிதர்.
         கர்நாடகத்தின் தெற்குப் பகுதியிலிருக்கும் உடுப்பி என்னும் க்ஷேத்திரத்திற்கு அருகே ஏழாவது மைலில் உள்ள "பாஜக" என்னும் இடத்தில்தான் இம்மகான் பிறந்தார். இங்குதான் இவர் ஓடியாடி விளையாடி லீலைகள் பல புரிந்தார்.இவரது லீலைகளே இவர் ஒரு அவதார புருஷர் என்பதற்குச் சான்றாக அமைந்திருந்தன.
         திரேதாயுகத்தில் அஞ்சனாதேவியின் புத்திரன் ஆஞ்சநேயனாக அவதரித்து தன் பராக்ரமத்தைக் காட்டி ராமகாதையில் பெரும் பங்கு வகித்தார்.அடுத்து த்வாபர யுகத்தில் குந்திதேவிக்கு மகனாக அவதரித்து பீமசேனன் என்ற பெயர் தாங்கி கிருஷ்ணனுக்கு உற்ற தோழனாக இருந்து தருமருக்கு சிறந்த சகோதரனாகவும் திகழ்ந்தார். கலியுகத்தில் பக்தியைப் பரப்பவும் தீய எண்ணங்களை ஒழிக்கவும் கிருஷ்ண ஆராதனையின் பெருமையை உலகெங்கும் பறைசாற்றவும் மத்வாச்சாரியாராகத் தோன்றி த்வைதமதத்தையும் ஏற்படுத்தினார். வாயு தேவரே இந்த மூன்று அவதாரங்களாகத் தோன்றினார் என்பதற்கு அவர்களது புஜ பல பராக்ரமமே சாட்சியாக நிற்கிறது. ஆஞ்சநேயனும் பீமசெனனும் ஆற்றிய அருஞ்செயல்களை இராமாயண, மகாபாரதக் காவியங்களின் மூலம் அறிந்துள்ளோம் மத்வரின் வாழ்க்கை வரலாற்றிலும் அத்தகைய பல செயல்களை நாம் காணலாம்.
மூன்று வயதுக் குழந்தையாக இருக்கும்போதே ஒரு பானை நிறைய வேகவைத்த கொள்ளை உண்டு ஜீரணித்தவர்.
நான்கு பேறாகத் தூக்கினாலும் தூக்க முடியாத கல்லாலான பலகையை அநாயாசமாகத் தூக்கி தயிர்ப் பானையை மூடியது.பால் பானையை பெரும் பாறையால் மூடியது. போன்ற அதிசயங்களை இவர் நிகழ்த்தியதால் இவர் பீமனின் அவதாரம் என்று நிரூபித்தார். ஒரு முறை பாம்பு ரூபத்தில் வந்த அசுரன் இவரை வழிமறிக்க அவனது தலையைத் தன் காலில் வைத்து அவனை நசுக்கிக் கொன்றார்.இப்போதும் இந்த அடையாளங்கள் எல்லாம் "பாஜக" க்ஷேத்திரத்தில் காணலாம்.
              வாயு தேவரின் மூன்று அவதாரங்களாக அனும பீமா மத்வா என த்ரேதா யுகம், த்வாபரயுகம், கலியுகம் என்ற மூன்று யுகங்களிலும் நிகழ்ந்ததாக நம்பப் படுகிறது.
              சுமார் எழுநூறு ஆண்டுகளுக்கு முன் உடுப்பி அனந்தேஸ்வரரின் அருளால் திரு மத்யகேகய பட்டருக்கும் 
வேதவதி தேவிக்கும் மகனாக அவதரித்தவர் மத்வாச்சாரியார்.வாசுதேவன் என்ற திருநாமம் சூட்டப்பெற்றார். திருமணம் முடித்து இல்லற வாழ்க்கையிலிருந்து துறவறம் செல்லாமல் திருமணத்தன்றே துறவறத்தை நாடிப் புறப்பட்டுவிட்டார். "பூரணப் பிரக்ஞர்" "ஆனந்த தீர்த்தர்" முதலிய பல பெயர்களைப் பெற்றுத் திகழ்ந்தார்.சிறந்த ஹரிபக்தியில் திளைத்தார்.பிரகல்லாதனைப் போல் பக்தி செலுத்தி அனைவரையும் களிப்பில் ஆழ்த்தினார்.ஒவ்வொரு த்வாதசியன்றும் அருகிலிருந்த குஞ்சாறு என்ற குன்றைச் சுற்றியிருந்த நான்கு தீர்த்தங்களில் நீராடி வரும் பழக்கத்தைக் கொண்டிருந்தார் மத்தியகேகய பட்டர். அன்று அவரால் சென்று தீர்த்தமாட முடியவில்லை. அதனால் வருத்தத்துடன் காணப்பட்டார்.இதைப் பார்த்த மத்வர் தன் தந்தைக்காக நான்கு தீர்த்தங்களின் புனிதம் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து தங்களின் வீட்டின் பின்புறமே "வாசுதேவ தீர்த்தத்தை"
நிர்மாணித்தார்.அதன் புனிதத்தை நிரூபிக்கும் பொருட்டு அங்கிருந்த ஆலமரத்தைப் பெயர்த்து தலைகீழாக நட்டு இந்த தீர்த்தத்தின் நீரை விட்டு வர வேரிலிருந்து துளிர் விட்டு கிளைகள் விழுதுகள் எனப் படர்ந்து வளர்ந்தது.அந்த மரமும் வாசுதேவ தீர்த்தமும் இன்றும் சாட்சியாக உள்ளன.
               இவர் சிறுவனாக இருந்த போது தந்தையின் கடனைத் தீர்க்கும் பொருட்டுக் கடன்காரருக்குப் புளியங் 
கொட்டையைக் கொடுத்தாராம். அவரும் அதை எடுத்துச் சென்றார். சில நாட்களிலேயே அவர் பெரும் தனவந்தர் ஆகிவிட்டதாகக் கூறி மகிழ்ந்து மத்திய கேகய பட்டருக்கு மரியாதை செய்தாராம்.இப்படிப் பல லீலைகளைப் புரிந்த 
மத்வர் உடுப்பியில் ஸ்ரீ கிருஷ்ண விக்ரகத்தை பிரதிஷ்டை செய்த வரலாற்றையும் பார்ப்போம்.
மல்ப்பே கடற்கரை அழகும் செழுமையும் நிறைந்தது.வரலாற்றுப் பெருமை மட்டுமல்லாது ஆன்மீகச் சிறப்பும் கொண்டது. அது ஒரு இயற்கைத் துறைமுகமாகத் திகழ்ந்துகொண்டிருக்கிறது. படகுகளும் சிறு கப்பல்களும் 
சூராவளியினின்றும் தப்பிக்க இந்தத் துறைமுகத்தில்தான் ஒதுங்குவது வழக்கம். அப்படிப்பட்ட கடற்கரையில் மத்வாச்சாரியார் தியானத்தில் அமர்ந்திருந்தார்.அப்போது பெரும் சூறாவளி ஏற்பட்டது. கடலில் வந்த சிறிய கப்பல் ஒன்று அந்தச் சூறாவளியில் சிக்கித் தடுமாறியது. கடற்கரை நோக்கி நகரமுடியாதபடி  பெரும் காற்று அந்தக் கப்பலை அலைக்கழித்தது. மூழ்கி விடும் போலத் தள்ளாடியது கப்பல்.
             அதில் பயணம் செய்த வணிகர்கள் உயிருக்குப் பயந்து பெரும் கூச்சலிட்டனர். வெகு தொலைவில் கரையையும்  அங்கு அமர்ந்திருக்கும் ஒரு சந்நியாசியையும் கண்டனர். கப்பலில் இருந்த பலரும் அவரை நோக்கிக் காப்பாற்றும் படி கூவினர். கண்களைத் திறந்த மத்வர் நிலைமையைப் புரிந்து கொண்டார். காற்றுக்கு அதிபதி வாயுதேவர்.அவரை எண்ணி வாயுஸ்துதி செய்தார் மத்வர். தனது காவி வஸ்திரத்தை அசைத்தார். காற்றும் நின்றது கப்பலும் கரையை அடைந்தது.அந்தக் கப்பலிலிருந்த வணிகர்கள் மத்வரைப் பணிந்து காணிக்கை கொடுக்க முன் வந்தனர் ஆனால் அதை ஏற்காத மத்வாச்சாரியார் அவர்கள் கப்பலைத் தாங்குவதற்காக சுமைக்காக வைக்கப் பட்டிருந்த கோபிச்சந்தனக் கற்களைத் தருமாறு கேட்டார்.
           அவரது விருப்பப் படியே அந்தக் கட்டிகளைக் கொடுத்தார் கப்பல் தலைவர்.மத்வர் அந்தக் கட்டியை உடைக்க அதற்குள் கையில் மதத்துடன் நிற்கும் கிருஷ்ணா விக்கிரகம் காட்சியளித்தது.அந்த விக்கிரகத்தை அனந்தேஸ்வரர் கோயிலின் அருகே பிரதிஷ்டை செய்தார்.அந்த இடம் இன்று உடுப்பி என்ற புண்யக்ஷேத்திரமாக விளங்குகின்றது.(தொடரும்)





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக