புதன், 15 ஜூலை, 2009

விடுதலை பெற்ற கதை - தெனாலி ராமன் கதைகள்

தெனாலிராமன் இராயரின் சபையில் பல வேடிக்கைகளைச் செய்தபடி இன்பமாக வாழ்ந்து வந்தான். ஒரு சமயம் இராயரிடம் பகை கொண்ட ஒருவன் அவரைக் கொல்ல ஒரு சதிகாரனை அனுப்பினான். சதிகாரனும் தெனாலிராமனின் உறவினன் என்று சொல்லிக் கொண்டு அவனது வீட்டில் தங்கியிருந்தான். ஒரு நாள் தெனாலிராமன் இல்லாத சமயம் பார்த்து அந்த சதிகாரன் இராயருக்குக் கடிதம் ஒன்று எழுதினான். அதில் அரசர் உடனே தன் வீட்டுக்கு வந்தால் அதிசயம் ஒன்றைக் காட்டுவதாக எழுதி தெனாலிராமன் என்று கையொப்பமிட்டு அனுப்பினான்.

கடிதத்தைக் கண்ட இராயரும் நம் தெனாலிராமன் ஏதோ அதிசயத்தைக் காட்டப் போகிறான் என்ற ஆவலில் உடனே குதிரை மீது ஏறிப் புறப்பட்டார். அவசரமாகப் புறப்பட்டதால் ஆயுதம் எதையும் கொண்டு வரவில்லை. மூடியிருந்த கதவை லேசாகத்தள்ளி "இராமா!" என அழைத்தவாறே உள்ளே நுழைந்தார். அங்கு மறைவாக நின்றிருந்த சதிகாரன் கட்டாரியால் அரசரைக் குத்த முயன்றான். சட்டென்று அவன் கரத்தைப் பிடித்து வளைத்துப் பின்புறமாகப பிணைத்து விட்டார் அரசர். தம் மன்னர் தனியாக இராமனின் வீட்டுக்குள் நுழைவதைப் பார்த்த மக்கள் பின்னாலேயே வந்து அந்தச் சதிகாரனை அங்கேயே அடித்துக் கொன்றனர்.

மறுநாள் சபை கூடியது. தெனாலிராமன் குற்றம் சாட்டப் பட்டு குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப் பட்டான். அரசரைக் கொலை செய்ய முயற்சிப்பது பெரும் குற்றம். அதற்கு உடந்தையாக இருப்பதும் குற்றமே. சதிகாரனுக்கு ஆதரவளித்ததால் தெனாலிராமனும் குற்றவாளியென்று கூறி அவனுக்கு மரண தண்டனை அளித்தார் கிருஷ்ணதேவராயர. . .

தெனாலிராமன் "அந்த சதிகாரன் என் உறவினன் என்று சொல்லிக்கொண்டு வந்ததால் இடமளித்தேன். அவன் இப்படி சதி செய்வான் என்று தெரியாது." என வாதாடிப் பார்த்தான். அறியாமல் நேர்ந்த தவறுக்கு மன்னிப்பு வேண்டினான். அரசர் சற்று நேரம் சிந்தித்தார். பிறகு சொன்னார்." இராமா! சட்டப்படி குற்றம் சாட்டப் பட்ட உன்னை மன்னிக்க முடியாது. வேண்டுமானால் உன் விருப்பப்படி சாக அனுமதி அளிக்கிறேன். நீ எப்படி சாக விரும்புகிறாய் என்பதைச் சொல். அதை நிறைவேற்றுகிறேன்." என்றார்.

ஒரு நிமிடம் தெனாலிராமன் சிந்தித்தான். பிறகு சட்டென்று " அரசே! நான் வயதாகி முதுமை அடைந்த பிறகு இயற்கையாக சாக விரும்புகிறேன்." என்றான். அரசர் அவன் புத்தி கூர்மையை மெச்சி அப்படியே வாக்களித்து அவனை விடுதலை செய்தார். தெனாலிராமன் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினான்.

நம்பினோர் கெடுவதில்லை

ஓர் ஊரில் ஓர் ஏழைச்சிறுவன் தன தாயுடன் வசித்து வந்தான். அவன் பெயர் கோபால். தந்தை இறந்து விட்டதால் இருவரும் மாடுகளை மேய்த்து வாழ்ந்து வந்தனர். மிகவும் ஏழையானாலும் தன மகனைக்கல்வி அறிவுள்ளவனாக்க அவன் தாய் விரும்பினாள். எனவே அடுத்த ஊரில் உள்ள ஒரு குருவிடம் கல்வி கற்க அனுப்ப எண்ணினாள்.

ஒரு நாள் தன மகனை அழைத்தாள். " கோபால்! நீ ஒரு குருவிடம் சென்று கல்வி பயின்றால் தான் உன் வாழ்வு வளமாக இருக்கும். எனவே நீ அடுத்த ஊரில் உள்ள குருவிடம் கல்வி கற்க சென்று வா." என்று கூறினாள் கோபாலுக்கு வெகு தொலைவு சென்று படிக்க தயக்கமாக இருந்தது. அத்துடன்வழியில் ஒரு காடு இருந்தது. தனியே அந்தக்காட்டை கடந்து செல்ல வேண்டுமே என்ற அச்சமும் இருந்தது.எனவே தன தாயிடம் தயக்கத்துடன் கூறினான்."அம்மா! அடர்ந்த காட்டினூடே தனியாக நடந்து செல்ல பயமாக உள்ளதம்மா "

"கோபாலா! பயப்படாதே. நாம் வணங்கும் கிருஷ்ணர் உனக்குத்துணையாக இருப்பார்."

"எனக்குத்துணையாக அவர் வருவாரா அம்மா ?"

"கட்டாயம் வருவாரப்பா. உனக்குப்பயமாக இருந்தால் நீ கண்ணா கண்ணா என்று உரக்கக் கூப்பிடு. உனக்குத்துணையாக அந்தக்கண்ணன் கட்டாயம் வருவார்."

தாயின் வார்த்தைகளால் மன நிம்மதி யடைந்தான் கோபால் .மறுநாள் குருவின் வீட்டை நோக்கி நடந்தான். அவன்தாய் அவனை மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தாள். விரைவாக நடந்த கோபால் நடுக்காட்டை அடைந்தான்.காட்டின் அமைதியும் காற்றின் ஒலியும் அவனுக்கு அச்சத்தை ஊட்டின அவனுக்குத் தன தாயின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தன. உடனே உரக்க " கண்ணா! கண்ணா! நீ எங்கிருக்கிறாய் ? எனக்குத்துணையாக வா கண்ணா!" எனக்கூவி அழைத்தான். உரக்கக்குரல் எழுப்பியவாறே காட்டில் நடந்து சென்றான் கோபால்.

திடீரென்று அவன் எதிரே ஒரு சிறுவன் கையில் கோலுடனும் குழலுடனும் வந்து நின்றான். கோபலனைப்பர்த்து ச சிரித்தான். அவனைப்பார்த்த
கோபால் " நீதான் கண்ணனா? நீதான் எனக்குத்துணையாக வருவாய் என என் அம்மா சொன்னார்களா?" என்றான் மெதுவாக.
புன்னகை புரிந்த கண்ணன் கோபாலின் கரங்களைப் பற்றிக்கொண்டான்.
"ஆமாம் நாந்தான் கண்ணன். இந்தக்காட்டிலே மாடு மேய்ப்பவன். என்னைப்பற்றி உன் அம்மா சொன்னார்களல்லவா? "
" ஆமாம் சொன்னார்கள். நீ தினமும் எனக்குத்துணையாக வருவாயா? "
" தினமும் நீ என்னை அழைத்தால் கண்டிப்பாகவருவேன்." என்று பேசியபடியே இருவரும் கை கோர்த்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் நடந்தனர்.

நாட்கள் கடந்தன. கோபால் தினமும் குருவிடம் சென்று கல்வி பயின்று வந்தான். ஒரு நாள் குருவிற்குப் பிறந்தநாள் வந்தது. அன்றைய தினம் மாணவர்கள் அனைவரும் குருவிற்கு ஏதேனும் பரிசளிக்க முடிவு செய்தனர். ஒவ்வொருவரும் தான் கொண்டுவரும் பரிசு பற்றிப்பெருமையோடு பேசினர். ஒருவன் " நான் வெள்ளித்தட்டு தருவேன்" என்றான். மற்றொருவன் நான் பட்டாடை பரிசளிப்பேன்" என்றான்.

பாவம் கோபால் என்ன செய்வான். ஏழையான அவன் தாய் எதைக் கொடுப்பாள்? தன்னால் குருவிற்கு ஒன்றும் கொடுக்க இயலவில்லையே என கோபால் மனம் வருந்தினான். இதைக்கண்ட அவன் தாய் மகனை அருகே அழைத்து "கோபாலா! உன் நண்பனை நீ தினமும் பார்க்கிறாயே அவனிடம் கேளேன்." என்றாள்.

கோபாலும் தன நண்பன் கண்ணனிடம் தன அசிரியருக்குத்தர பரிசொன்றைக் கேட்டான். கண்ணன் ஒரு தயிர் நிறைந்த பானையைக் கொடுத்தான். "இதையே உன் பரிசாகக்கொடு " என்றான். கோபாலும் அதை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டு ஆசிரியர் வீட்டை அடைந்தான். அங்கு மற்ற மாணவர்கள் அளித்த உயர்ந்த பரிசுப்பொருள்களைப் பார்த்து தன தயிர்ப்பானையை அவைகள் முன் தரத்தயங்கினான். யாருக்கும் தெரியாமல் அதை அனைவரும் சாப்பிடும் இடத்தில் வைத்துவிட்டான். விழா முடிந்தபின் அனைவரும் சாப்பிட அமர்ந்தனர். பரிமாறுவதற்குத் தயிர் இல்லை என்பதை அப்போதுதான் பார்த்தனர். ஒரே ஒரு பானை தயிர் மட்டும் உள்ளது இதை வைத்து பரிமாறுவோம் என நினைத்தார் ஆசிரியர். எனவே அந்தத்தயிரை வேறு பாத்திரத்தில் ஊற்றினர். பானையில் மீண்டும் தயிர் நிறைந்தது. மீண்டும் ஊற்ற மீண்டும் தயிர் நிறைந்தது. செய்தி அறிந்த அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.

" யார் இந்தத்தயிர்ப்பானையைக் கொண்டு வந்தது?" என விசாரித்தனர். அப்போது கோபால் தனக்குக்காட்டில் தன நண்பன் கொடுத்ததாகச்
சொன்னான்.

ஆசிரியர் நண்பனாக வந்தது இறைவனே எனப்புரிந்து கொண்டார். "கோபாலா! அந்த உன் நண்பனை எனக்குக்காட்டு " என்று அவனுடன் காட்டுக்கு விரைந்தார். அவருடன் மற்ற மாணவர்கள் அனைவரும் காட்டை நோக்கி நடந்தனர். காட்டுக்குள் நுழைந்த கோபாலன்," கண்ணா! கண்ணா! உன்னைக்காண என் ஆசிரியரும் நண்பர்களும் வந்துள்ளனர். வா கண்ணா!"
எனப்பலமுறை அழைத்தும் கண்ணன் வரவில்லை.

கோபாலனுக்கு அழுகை வந்தது. அழத்தொடங்கினான். அப்போது ஒரு குரல் கேட்டது. " கோபாலா! உண்மையான அன்புடனும் நான் வருவேன் என்ற நம்பிக்கையோடும் என்னை அழைத்தால் நான் வருவேன்.உன்னிடம் நான் வருவேன் எனக்கூறிய உன் தாயின் நம்பிக்கையை ப பொய்யாக்க விரும்பாமல்தான் நான் உன் முன் வந்தேன்.என் மீது உண்மையான பக்தியும் நம்பிக்கையும் கொண்டவர் முன்னால் மட்டுமே நான் வருவேன்.உன்னைப்பார்த்து மற்றவர்கள் நம்பிக்கையின் பெருமையைப் புரிந்துகொள்ளட்டும். வாழ்க! "என்று கூறிய கண்ணனின் குரல் மறைந்தது.
இத்தனை நாட்களாக கண்ணனுடன் பழகிவந்த கோபாலனை அனைவரும் பக்தியுடனும் அன்புடனும் வணங்கினர்.

பேரக்குழந்தைகளே! நாம் எந்த ஒரு சொல்லிலும் செயலிலும் நம்பிக்கை வைத்தால் அது கட்டாயம் நிறைவேறும் என்பதைப்புரிந்து கொண்டீர்களா?
நம்பினோர் கெடுவதில்லை என்ற மூத்தோர் சொல் எத்தனை உண்மையானது!