வெள்ளி, 17 ஜூன், 2011

அறிமுகம்

 
அன்பு நெஞ்சங்களுக்கு வாழ்த்துக்கள். பாட்டிசொல்லும் கதைகளை கடந்த ஓராண்டுக்கும் மேலாகப் படித்து எனக்கு ஆதரவு அளித்து வரும் உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.இந்தக் கதைகள் உங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்குப் பயன்பட்டிருக்குமேயானால் அதுவே எனக்கு மிக்க மகிழ்ச்சி. குழந்தைகளுக்காக எழுதிவந்த நான்இப்போது என்னையொத்த அன்புச் சகோதரர்களுடன் பேசுவதற்காகவும் என் மன எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளவும் மணி மணியாய் சிந்தனை என்ற புதிய தளத்தைத் தொடங்கியுள்ளேன். இதில் நான் அடைந்த அனுபவங்கள், நான் ரசித்த காட்சி, நான்படித்த புத்தகம் என்ற என் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள விழைந்துள்ளேன்.
பாட்டி சொல்லும் கதைகளுக்கு அளித்த ஆதரவைப் போலவேஇந்த  மணி மணியாய் சிந்தனை என்ற தளத்துக்கும் ஆதரவு அளிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். தங்கள் அனைவரின் எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன் சகோதரி 
ருக்மணி சேஷசாயி.
--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

ஞாயிறு, 12 ஜூன், 2011

67 சத்தியம் தவறாத மன்னன்.

                                      
        ஒரு முறை தேவலோகத்தில் வசிஷ்டருக்கும் விச்வாமித்திரருக்கும் பெரும் வாக்குவாதம் நடந்தது.பொய் சொல்லாத மானிடரும் உண்டு என்று வசிஷ்டர் கூற "பொய் பேசாத மனிதர்களே இருக்கமாட்டார்கள். மனிதனாய்ப் பிறந்த அனைவரும் பொய் பேசியே தீருவார்கள்" என வாதிட்டார் விசுவாமித்திரர்.

"அப்படியானால் பூவுலகில் அயோத்தியில்மன்னனாக உள்ள ஹரிச்சந்திரனை  ஒரு பொய் சொல்ல வைத்து விடுங்கள். உங்களிடம் நான் தோற்றதாக ஒப்புக் கொள்கிறேன்." என்று கூறினார் வசிஷ்டர்.

"அப்படியே. ஹரிச்சந்திரனைப் பொய் சொல்ல வைக்கிறேன். வருகிறேன் ." என்று கூறிய விசுவாமித்திரர் கோபமாக அந்த இடத்தை விட்டு வெளியேறினார்.
பூலோகம் வந்தவர் நேராக அயோத்தி மன்னனை நாடிச் சென்றார். அவரது அறிவு சிந்திக்கத் தொடங்கியது.ஏதாவது சிக்கலில் இந்த அரசனை சிக்கவைத்துப் பின்னர்தான் பொய் சொல்ல வைக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.

அரண்மனையில் நுழைந்த மகரிஷியை மரியாதையுடன் வரவேற்றான் மன்னன் ஹரிச்சந்திரன்.அவனை வாழ்த்திய விசுவாமித்திரர்
 "ஹரிச்சந்திரா! நான் செய்யும் யாகத்திற்கு சிறிது பொருள் தேவைப் படுகிறது அதனால் உன்னை நாடி வந்துள்ளேன்."என்றார்.

மிகவும் மகிழ்ந்த ஹரிச்சந்திரன் ஆயிரம் பொற்காசுகளை அளித்தான். அதைப் பெற்றுக்கொண்ட விசுவாமித்திரர் ஹரிச்சந்திரனை நோக்கி,"மன்னா, இந்தப் பொற்காசுகள் உன்னிடமே இருக்கட்டும். தேவையானபோது வந்து பெற்றுக் கொள்கிறேன்." என்று கூறிவிட்டு அரண்மனையை விட்டு வெளியேறினார்.

நாட்கள் கடந்தன. விசுவாமித்திரர் மீண்டும்  ஹரிச்சந்திரனை நாடிச் சென்றார்.வழக்கம்போல மன்னன் அவருக்கு வரவேற்பு அளித்து அமரச் செய்தான்.பின் அன்புடன் கேட்டான்.
"சுவாமி, நான் செய்யும் காரியம் ஏதேனும் உள்ளதா சுவாமி?"

"ஹரிச்சந்திரா, நீ சொன்ன சொல் தவறாதவன் என்றும்சத்தியமே பேசுபவன் என்றும் அறிந்தேன்.நேற்று என் கனவில் உன் நாட்டை எனக்குத் தானமாகக் கொடுப்பது போல் கனவு கண்டேன்.அப்படி நடக்குமா என்ன!"
கள்ளச் சிரிப்பைத் தன் இதழ்களில் நெளிய விட்டபடி கேட்டார் விசுவாமித்திரர்.

"முனி சிரேஷ்டரே, கனவிலே சொன்னால் என்ன நனவிலே சொன்னால்தான் என்ன? சொன்னது சொன்னதுதான்.
என் நாட்டைத் தங்களுக்குத் தானமாக இப்போதே தருகிறேன்."

மகிழ்ச்சியுடன் கூறிய ஹரிச்சந்திரன் உடனே தன் நாட்டை முனிவருக்குத் தானமாக தாரை வார்த்துக் கொடுத்தான்.
அடுத்த சில நிமிடங்களில் தன் மனைவி மகன் லோகிதாசன் சகிதம் அரண்மனையை விட்டுப் புறப்பட்டான்.

அதைக் கண்ட விசுவாமித்திரர், "நில் ஹரிச்சந்திரா, என் ஆயிரம் பொற்காசுகளைத் தந்துவிட்டுப் போ."

"சுவாமி அந்தப் பணமும் அரண்மனை கருவூலத்தில் தான் உள்ளது."

"அதுநீ மன்னனாக இருக்கும் போது. இப்போது அனைத்துச் செல்வங்களையும் தானமாகத் தந்து விட்டாய். இப்போது அவை எனக்குச் சொந்தம்.எனவே நீ தரவேண்டிய ஆயிரம் பொற்காசுகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறாய்?"

ஹரிச்சந்திரன் என்ன பதில் கூறுவான்! தலை குனிந்து நின்றான். அப்போது முனிவர்  மெதுவாக அவன் அருகில் வ்ந்தார்."ஹரிச்சந்திரா, நான் ஆயிரம் பொற்காசுகளை உன்னிடம் தரவே இல்லை என ஒரு பொய் சொல்லிவிடு உன் நாட்டையே நான் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்" `

 ஹரிச்சந்திரன் திடுக்கிட்டான். பொய் சொல்வதா! அது என்னால் இயலாது என்பதுபோல் தலையை அசைத்துவிட்டு நடந்தான்.

விசுவாமித்திரர் விடவில்லை."என் ஆயிரம் பொற் காசுகளுக்குப் பதில் சொல்லிவிட்டுப் போ" என்றார்.தான் சம்பாதித்துத் தருவதாகக் கூறிய மன்னன் ஒரு சீடனைத் தன்னுடன் அனுப்பும்படி கூறி அவனையும் அழைத்துக் கொண்டு அரண்மனையை விட்டுப் புறப்பட்டான். 
 காட்டில் அலைந்து திரிந்த அரச குடும்பத்தினர் தங்கள் பசியைத் தாங்கிக் கொண்டு தங்களுடன் வந்த சீடனின் பசியைப் போக்கப் பாடுபட்டனர்.அந்த சீடனோ விசுவாமித்திரரின் கட்டளைப் படி வேண்டுமென்றே பசி பசி என்று மன்னனைப் பாடாய்ப் படுத்தினான்.

எப்படியாவது ஆயிரம் பொற்காசுகளைக் கொடுத்து அந்தச் சீடனை அனுப்பிவிடத் துடித்தான் மன்னன்.என்ன செய்வது என்பதுதான் அவனுக்குப் புரியவில்லை.

சில நாட்கள் கழிந்ததும் அரச தம்பதியர் காட்டை விட்டு ஒரு ஊருக்குள் புகுந்தனர் அந்த ஊரில் காலகண்டன் என்னும் ஒரு செல்வந்தர்வாழ்ந்து வ்ந்தார். அவர்  வீட்டில்பணிப  பெண்ணாகத தன் மனைவி சந்திரமதியை விற்றான்.அந்தத் தொகை கடன் தீர்க்கப் போதாமையால் ஹரிச்சந்திரன் இடுகாட்டில் பிணம் சுடும் வேலைக்குப் போனான். அதில் கிடைக்கும் வருமானத்தை கடனுக்குக் கொடுத்து வந்தான்.கிடைக்கும் அரிசியை உணவாக உண்டு வந்தான்.

நாட்கள் நகர்ந்தன.அடிமையாக வேலை செய்துவந்த சந்திரமதியை மட்டுமல்லாது அவள் மகன் லோகிதாசனையும் கடுமையாக வேலை வாங்கினாள் காலகண்டன் மனைவி.

ஒருநாள் காலகண்டன் லோகிதாசனை தர்ப்பைப் புல் பறித்துவர காட்டுக்கு அனுப்பினான்.அங்கு நாகப் பாம்பு லோகிதாசனைக் கடிக்க அவன் மரணமடைந்தான்.உடன் சென்ற சிறுவர்கள் வந்து சொன்ன இச் செய்தியைக் கேட்ட சந்திரமதி துடித்தாள்.

மகனை அடக்கம் செய்து சீக்கிரமே திரும்பவேண்டும் என்ற தன் எஜமானனின் கட்டளையைத் தலைமேல் தாங்கிய சந்திரமதி காட்டுக்கு ஓடினாள்.அங்கே தன் மகனின் உயிரற்ற உடலைக் கண்டு கதறினாள். கடமை நினைவுக்கு வரவே தன் மகனின் உடலைத் தூக்கிக் கொண்டு இடுகாடு நோக்கிச் சென்றாள்.

அங்கே தன் மகனைக் கிடத்தி அழுதுகொண்டே சிதை மூட்டினாள்.அப்போது அங்கே வந்த ஹரிச்சந்திரன் ,
"பெண்ணே! கால்படி அரிசியும் முழத் துண்டும் கால்பணமும் கொடுக்காமல் நீ இந்தப் பிணத்தை எரிக்க முடியாது."
என்றான்.
"ஐயா! நான் பரம ஏழை. அடிமையாகப் பணி புரிகிறேன்.என்னிடம் ஏது பணமும் அரிசியும்?தயவு செய்யுங்கள்"என்று மன்றாடினாள்.
"உன் கணவனிடம் கேட்டு வா"
"என் கணவர் இங்கு இல்லை ஐயா. என்னிடமும் எந்த பணமும் இல்லை."
"அப்படியானால் உன் கழுத்தில் இருக்கும் மாங்கல்யத்தை விற்று எனக்குச் சேர வேண்டியதைக் கொடு." திடுக்கிட்டாள் சந்திரமதி.தன் கணவன் ஒருவனைத் தவிர அன்னியர் யார் கண்ணுக்கும் தென்படாதது அந்த மாங்கல்யம். எனவே தன் முன்னே நிற்பது தன் கணவனே எனத் தெரிந்து கொண்டாள்.
அதனால் அவனது  சொற்களைக் கேட்டதும்  சந்திரமதி "ஐயோ சுவாமி! தாங்களா? தங்களுக்கா இந்த நிலை? நான்தான் உங்கள் சந்திரமதி.இறந்து கிடப்பவன் நம் மகன்." என்று கதறினாள்.
சந்திரமதியின் இந்த சொற்களைக்  கேட்ட ஹரிச்சந்திரன் மகனது உடலைக் கட்டிக் கொண்டு அழுதான்.பிறகு ஒருவாறு மனம் தேறி மனைவியைப் பார்த்துக் கூறினான்.
" சந்திரமதி நீ உன் எஜமானனிடம் சென்று நான் கேட்ட பொருட்களைக் கொண்டு வா. அதுவரை இந்த உடலை நான் பார்த்துக் கொள்கிறேன்"
சந்திரமதி அழுதாள்."உங்கள் மகனுக்குக் கூடவா நீங்கள் பணம் கேட்கிறீர்கள்?"
"என் எஜமானனுக்கு நான் உண்மையானவனாக இருக்கவே விரும்புகிறேன்.நீ சென்று வா."
இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த விசுவாமித்திரருக்கு பெரும் வியப்பு ஏற்பட்டது. தன் வாதத்தில் வசிஷ்டரிடம் தோற்று விடுவோமோ என்ற அச்சமும் ஏற்பட்டது.
ஹரிச்சந்திரனுக்கு மேலும் துன்பம் கொடுக்க எண்ணினார்.
சந்திரமதி நடந்து செல்லும் பாதையில் அந்நாட்டு மன்னனின் மகனது இறந்த உடல் விழும்படி செய்தார்.காசிராஜாவின் மகனைக் கொன்றவள் எனப் பழி சுமததப் பட்டாள் சந்திரமதி. 
அதனால் அவளே குற்றவாளி எனத் தீர்ப்பளித்த காசி மன்னன் அவளைச் சிரச்சேதம் செய்ய ஆணையிட்டான்.கொலைக் களத்துக்குக் கொண்டு வரப்பட்ட சந்திரமதியைக் கொல்லவேண்டிய கடமையை ஹரிச்சந்திரனே ஏற்க வேண்டியதாயிற்று.
அந்த நிலையிலும் மனம் கலங்காது நின்றான் ஹரிச்சந்திரன்.அப்போது அங்கு வந்த விசுவாமித்திரர் "ஹரிச்சந்திரா! இப்போதேனும் நான் சொல்வதைக் கேள். எனக்கு வாக்குக் கொடுக்கவில்லை என ஒரு பொய் சொல்லிவிடு. மீண்டும் அரசபதவி, அமோகமான வாழ்க்கை உனக்குக் கிடைக்கும்."எனக் கூறியதைப் புன்னகையுடன் மறுத்தான் ஹரிச்சந்திரன்.
அவன் எஜமான் கட்டளையிட்டவுடன் கத்தியை ஓங்கி சந்திரமதியின் கழுத்தில் வீசினான். என்ன ஆச்சரியம் கத்தி மாயமானது கழுத்தில் மாலையுடன் நின்றாள் சந்திரமதி.
சிவனும் பார்வதியும் வசிஷ்டரும் தோன்றிஆசி கூறினர்.காசிமன்னன் மகனும் லோகிதாசனும் எழுந்து ஓடிவந்து இறைவனை வணங்கி நின்றனர்.
விசுவாமித்திரர் தன் தோல்வியை ஒப்புக் கொண்டார்.
இறைவன் திருவாய் மலர்ந்தருளினார்."ஹரிச்சந்திரா, உலகில் உண்மை, சத்தியம் என்ற பண்புகள் உள்ளவரை உன் பெயரும் நின்று நிலைக்கும். உன்நாட்டை அடைந்து பல்லாண்டுகள் வாழ்வாயாக."என்று ஆசி வழங்கி மறைந்தார்.
வசிஷ்டரும் விசுவாமித்திரரும் ஆசி வழங்க நாட்டை அடைந்தான் ஹரிச்சந்திரன்.
வசிஷ்டர் புன்னகை புரிந்தார். "மகரிஷி! ஒரு மனிதனின் பெருமையை உலகுக்குக் காட்டவேண்டுமெனில் அவன் புடம் போடப் படவேண்டும் அதனால்தான் ஹரிச்சந்திரனுக்கு இத்தனை துன்பங்களைக் கொடுத்தீரோ?"
"ஆம் இம்மன்னனது பெருமையை உலகில் நிலை நாட்ட வேறு வழியில்லையே"என்று புன்னகைத்தார் விசுவாமித்திரர்.

எத்தனை துன்பங்கள் நேர்ந்தாலும் தன் கொள்கையில் சற்றும் வழுவாத ஹரிச்சந்திரனின் வாழ்க்கை நமக்கெல்லாம் ஒரு பாடமல்லவா?



ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com : email : rukmani68sayee@gmail.com