ஞாயிறு, 15 டிசம்பர், 2013

பழமொழிக்கதைகள் ---மின்னுவதெல்லாம் பொன்னல்ல


     பூஞ்சோலை என்று ஒரு கிராமம். அந்த கிராமத்தில் தனகோடி என்ற பெயருடைய தனவந்தர் ஒருவர் வசித்து வந்தார்.அவர் பலருக்கும் தேவையான உதவிகளைச் செய்து வந்தார்.
       அவரை  கொடைவள்ளல் என்றும் தாராளப் பிரபு என்றும் வானளாவப் புகழ்ந்தனர்.எந்த உதவிஎன்றாலும் தனகொடியைக் கேட்டால்  கிடைக்கும் என்று நம்பியிருந்தனர்.
அந்த தனவந்தரிடம் முனியன் என்று ஒரு வேலைக்காரன் இருந்தான்.பல வருடங்களாக அவரிடம் வேலை செய்து வந்தான். அவனுக்கு ஒரு மகன் இருந்தான்.தன மகன் வேலுவை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்று முனியன் விரும்பினான்.வேலுவும் பள்ளியில் நன்றாகப் படித்து வந்தான்.
                          அவ்வூரின் தனவந்தர் தனகோடியின் மகனும் அதே வகுப்பில் படித்து வந்தான்.ஆண்டு முடிவில் தேர்வு முடிவுகள் வந்தபோது வேலு அதிக மதிப்பெண் எடுத்து பள்ளியிலேயே  முதலாவதாக வந்திருந்தான்.  
                             தனகொடியின் மனம் பொறாமையில்  தவித்தது.தன்னிடம் உதவி கேட்டு வந்த முனியனைக் கடுமையாகப் பேசினார்."முனியா, உன் மகனுக்கு என்னிடமே வேலை போட்டுத் தருகிறேன்.அவன் வருமானம் வந்தால் உனக்கு வசதியாக இருக்குமே. மேல்படிப்பெல்லாம் வேண்டாம். வீணாகச் செலவு செய்யாதே."என்று வேலுவின் மேல்படிப்புக்குப் பணஉதவி செய்ய முடியாது என்பதை ஜாடையாகத் தெரிவித்தார்.
              இதைக் கேட்டு முனியனும் வேலுவும் கவலையும் கூடவே கோபமும் கொண்டனர்.உனக்கு இஞ்சினீயர் சீட்டு கெடைச்சும் பணமில்லாததாலே படிக்க முடியலையே.முதலாளி உதவி செய்வாருன்னு நினைச்சிருந்தேனே.புள்ளைய படிக்க விடாமே செஞ்சிட்டாரே."என்று புலம்பினான்.
                ஆனால் வேலுவோ கலங்காமல் தன தந்தையைத தேற்றினான்."அப்பா, நான் வேலைசெய்து பணம் சேர்த்துப் படிப்பேன் அப்பா, நீங்க வருத்தப்படாதீங்க."என்று தேற்றினான்.
                  "தன பிள்ளைக்கு சீட்டுக் கிடைக்கலையின்னு பொறாமையிலே உன்னைப் படிக்க விடாம செஞ்சுட்டாரே.இவரோட பொறாமை பிடிச்ச மனசாலே இவுரு எவ்வளவு நல்ல காரியம் செஞ்சு நல்ல பேரு எடுத்து என்ன புண்ணியம்?"
    வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முனியனும் வேலுவும் முதலாளி வீட்டு வாயிலில் நின்று வருந்திக் கொண்டிருந்தனர்.
"அப்பா, நம்ப முதலாளி உண்மையிலேயே ஜனங்களுக்கு நல்லது செய்ய நினைக்கலேப்பா. அவரை  நாலு பேரு புகழணும்னுதான் இப்படி செஞ்சிட்டு வராரு."
"இருக்கும். அவுக எப்படியானும் இருக்கட்டும் உனக்கு படிப்பு நிக்கிதே"
மன வருத்தத்துடன் நின்றான் வேலு.செய்வதறியாமல் சிந்தனையுடன் முனியனும் நின்றிருந்தான்.
அப்போது அந்தவீட்டு தோட்டக்கார முத்துராஜா அங்கே வந்தார்.அறுபது வயதைத் தாண்டினாலும் இளமையோடு காட்சியளிப்பவர். எப்போதும் புன்னகைத்துக் கொண்டே இருப்பவர்.
"என்ன வேலு, காலேஜிலே சேரலியா.எப்போ சேரப்போறே?"
"அதுக்குத்தான் முதலாளிகிட்டே பணம் கேட்டேன் தாத்தா."  
"குடுத்தாரா?"
வேலுவும் முருகனும் பெருமூச்சுடன் நின்றனர்.
"விடு தம்பி.எவ்வளவு கட்டணும்னு சொல்லு நான் அந்தப் பணத்தை உனக்குக் குடுக்குறேன்.நம்ம ஏழை ஜாதியிலே ஒருத்தன் படிக்க நான் உதவினேன் அப்படீங்கர திருப்தியே எனக்குப் போதும்பா."
"தாத்தா"என்று ஆசையுடன் அழைத்தபடியே அவரை நன்றியோடு கட்டிக் கொண்டான் வேலு.
முனியனோ "ஐயா நீங்க ஆயிரக்கணக்கான பணத்தை எப்படிப் புரட்டுவீங்க"என்றான் சந்தேகத்தோடு.புன்னகை புரிந்த முத்துராஜா,
"எங்க பூர்வீக சொத்தை  வித்து வந்த பணம் அது."
"ஐயா,அதுஉங்கபொண்ணுகலியாணத்துக்குன்னுல்ல சொன்னீங்க "தடுமாற்றத்துடன் கேட்டான் முனியன்.
புன்னகையுடன்முத்துராஜா, "படிப்புக்கு அப்புரம்தாம்பா மத்ததெல்லாம் கலியாணத்துக்கு ஆண்டவன் வேற வழி காட்டுவாரு. நீ நாளைக்கே போயி காலேஜிலே சேர்ந்துடு என்ன. யோசிக்காதே வேலு! நீ நல்லாப் படிச்சு இந்த ஊருக்கு நல்லது செய்யணும்தம்பி "என்று சொன்னவர் வேலுவின் தலையில் கை வைத்து ஆசிகூறி நடந்தார்.தெய்வமே நடந்து போவது போல் உணர்ந்தனர் முனியனும் வேலுவும்.
வேலு தந்தையிடம் கண்களில் நீர் மல்க,"அப்பா, கடவுள்தான் தாத்தாவா வந்திருக்குராருப்பா.ஊருக்கெல்லாம் உதவுற பணக்காரருக்கு இல்லாத நல்ல மனசு இந்த தாத்தாவுக்கு இருக்குதேப்பா."
"நாமுமநம்ம முதலாளி  உதவி செய்வாருன்னு நம்பிட்டமேப்பா".
"இதைத்தாம்பா மின்னுவதெல்லாம் பொன்னல்ல அப்பிடீன்னு பழமொழியாச் சொல்லியிருக்காங்க.பணக்காரரும் உதவல்லே.அவரு பணமும் நமக்கு உதவல்லே." 
நீ சொல்றதும் சரிதான் என்றபடி நிம்மதியுடன் படுத்துக் கொண்டான் முனியன். வேலுவும் தாத்தா சென்ற திசை நோக்கி வணங்கி விட்டுத் தானும் பாயில் தந்தையின் அருகில் படுத்துக் கொண்டான். இனிமேல் முத்துராஜாதானே அவனுக்குத் தெய்வம்.




ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

ஞாயிறு, 10 நவம்பர், 2013

113. பழமொழிக் கதைகள்.--ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.

ஓர் ஊரில் ஒரு சிவன் கோவில் இருந்தது.கணபதிசர்மா என்று ஒரு அந்தணர் அந்தக் கோவிலில் பூஜை செய்து வந்தார். அவருக்குப் பல ஆண்டுகளாகக் குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. தினமும் இறைவனை மனமுருகப் பிரார்த்தித்து வந்தார்.அவர் மனைவியும் விரதங்கள் தானங்கள் என்று செய்து வந்தாள்.ஆனாலும் இவர்களுக்குப் பிள்ளையில்லை.
    வீட்டில்  இருக்கையில் ஒரு மாலைவேளையில் கணபதியின் மனைவி முன் ஒரு  சிறிய குட்டி கீரிப்பிள்ளை வீட்டுக்குப் போகத் தெரியாமல் நின்றது. அதைப் பார்த்த அந்தணர் மனைவி  அதற்குப் பாலும் சோறும் வைத்தாள் .பசியுடன் இருந்த அந்த கீரி பாலைப் பருகிப் பசியாறியதும் அங்கேயே படுத்துக் கொண்டது.
சிலநாட்களில் அந்தக் கீரிப் பிள்ளை அந்த வீட்டின் செல்லப் பிள்ளையானது.கணபதிசர்மாவும் அவர் மனைவியும் அந்தப்
பிள்ளையைத் தங்கள் சொந்தப் பிள்ளையாகவே நினைத்து வளர்த்து வந்தனர்.
சுமார் இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன.இப்போது கணபதிசர்மாவுக்கு ஒரு அழகிய ஆண்குழந்தை பிறந்திருந்தது.
அந்தக் குழந்தையைக் கண்ணும் கருத்துமாக வளர்த்தனர் கணவனும் மனைவியும்.கீரிப்பிள்ளையும் அக்குழந்தையுடன் சேர்ந்து வளர்ந்து வந்தது.
ஒருநாள் கணபதிசர்மா கோவிலில் பூஜைக்குப் போயிருந்தார்.வீட்டில் சமைப்பதற்குத் தண்ணீர் இல்லை என்று குடத்துடன் ஆற்றுக்குக் கிளம்பினாள்  அவர்மனைவி
             ஆற்றுக்குப் புறப்படுமுன் கீரியிடம் "குழந்தை தொட்டிலில் தூங்குகிறான்.பத்திரமாகப் பார்த்துக் கொள்.நான் சீக்கிரம் வந்துவிடுகிறேன்."என்று சொல்லிவிட்டு வேகமாக நடந்தாள்.

              அவள் சென்ற சற்று நேரத்தில் கீரிப் பிள்ளையும் தொட்டிலின் கீழேயே அமர்ந்து கொண்டது.கணபதிசர்மாவும் பூஜையை முடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார்.அதே நேரம் குடத்தில் நீர் மொண்டு கொண்டு அவர் மனைவியும் வீட்டின் முன் நின்றாள். இருவரும் வீட்டின் முன் நின்ற கீரிப்பிள்ளயைப் பார்த்துத் திடுக்கிட்டனர்.
                அவர்கள் செல்லமாக வளர்த்த கீரிப்பிள்ளை வாயில் ரத்தம் ஒழுக நின்றிருந்தது.மிகவும் பரபரப்பாக இங்குமங்கும் அலைந்து கொண்டு இருந்தது.இவர்களைப் பார்த்ததும் அதன் பரபரப்பு அதிகமானது.வாயில் ரத்தம் ஒழுக நின்ற கீரியைப் பார்த்து கணபதியின் மனைவி தன குழந்தையைக் கடித்துக் கொன்றுவிட்டது என்ற முடிவு செய்தாள்."ஐயோ என் குழந்தையைக் கொன்று விட்டதே" என்று அலறினாள்..
                  இந்த வார்த்தைகளைக் கேட்ட கணபதிசர்மா "என் குழந்தையைக் கொன்று விட்டாயா, நீயும் ஒழிந்து போ"என்ற படியே அருகே நின்றிருந்த மனைவியின் இடுப்பிலிருந்த குடத்தைப் பிடுங்கி கீரியின் மேல் போட்டார்.விசுக்கென்ற சத்தத்துடன் அது நசுங்கித் தன உயிரை விட்டது.

                கணவன் மனைவி இருவரும் வீட்டுக்குள் ஓடிப்பார்த்தனர்.குழந்தை தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தது.அப்பாடா என்று இருவரும் மகிழ்ச்சிப் பெருமூச்சு விட்டனர்.உடனே கீரியின் நினைவு வந்தது.அதன்வாயில் எப்படி ரத்தம் வந்தது என்று சுற்றிப் பார்த்தபோது தொட்டிலின் மறுபக்கம் ஒரு பெரிய நாகப் பாம்பு இறந்து கிடந்தது.அது இரண்டு மூன்று துண்டாகக் கிடந்தது.

                இப்போதுதான் கணபதிசர்மாவிற்குப்  புரிந்தது.
"ஐயோ' என்ன காரியம் செய்துவிட்டேன்.என்குழந்தையைக் கடிக்கவந்த நாகத்தைக் கொன்று விட்டு அதைச் சொல்லத்தானே வாயிலில் வந்து நின்றது அந்தக் கீரிப்பிள்ளை.
ஆத்திரப்பட்டு என் செல்லப் பிள்ளையை நானே கொன்று விட்டேனே "என்று புலம்பி அழுதான்.
 "ஐயோ நான் தான் அவசரப்பட்டு குழந்தையைக் கொன்று விட்டாயே என்று அலறினேன்.அதனால்தானே நீங்கள் கீரியைக் கொன்றீர்கள் நான் தான் தவறு செய்தவள் "என்று அழுதாள் அவர் மனைவி.
ஆண்டாண்டு  காலம் அழுதாலும் மாண்டார் மீண்டு வருவாரோ.அவர்கள் அவசரப் பட்டதற்கு உரிய தண்டனை அடைந்துவிட்டனர்.
'ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு' என்ற பழமொழியை மெய்ப்பிப்பது போல் இவர்களின் இந்த செயல் அமைந்து விட்டது. எனவே இந்தக் கதை மூலம் எப்போதும் அவசரமோ ஆத்திரமோ படாமல் நிதானமாக ஒரு செயலைச் செய்யவேண்டும் என்னும் அறிவுரையை நாமும் கற்றுக் கொண்டோம் அல்லவா.




--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

ஞாயிறு, 27 அக்டோபர், 2013

112. பழமொழிக் கதைகள்.--கடவுளை நம்பினோர் கைவிடப் படார்.

வளமையான ஒரு சிற்றூர். அந்த ஊரில் சாந்தோபா என்ற ஒரு பெரியார் வாழ்ந்து வந்தார்.அவர் ஒரு முறை துக்காராம் மகாராஜ் அவர்களின் சரித்திரத்தைக் கேட்டார். அவரைப் போலவே தாமும் பற்றற்று வாழ வேண்டும் என்று முடிவெடுத்தார்.
    இந்த எண்ணம் நாளும் வளரலாயிற்று.எனவே தன செல்வம் அனைத்தையும் ஏழைகளுக்குத் தானம் செய்து விட்டுக் காட்டை நோக்கிச் சென்று தவம் செய்யத் தொடங்கினார்.இவரது தாயாரும் மனைவியும் எவ்வளவு தடுத்தும் இவர் கேட்கவில்லை.
      சிலநாட்கள் சென்றன.ஒருநாள் உறவினன் ஒருவன் சாந்தோபா காட்டில் இருக்கும் இடத்தைக் கண்டு வந்து சொன்னான்.உடனே சாந்தோபாவின் தாய் தன மருமகள் யசோதாவிடம்  கணவன் மனதை மாற்றி அழைத்து வருமாறு கூறினாள். யசோதாவும் கணவனைத் தேடிக் காட்டுக்கு வந்தாள்.
     நிஷ்டையில் இருக்கும் கணவர் முன் அமர்ந்து கொண்டு அவர் கண் திறக்கும் வரை காத்திருந்தாள் யசோதா.
கண் திறந்த சாந்தோபா தன மனைவியைப் பார்த்துத் திகைத்தார்.
 அவளிடம் நீ ஏன் இங்கு வந்தாய்?திரும்பிப் போ"என்றார்.
அவளோ  "ராமன்  இருக்குமிடமே அயோத்தி.நான் தங்களை விட்டுப் போகப் போவதில்லை "என்றாள்  பிடிவாதமாக.
அவளது சொற்களைக் கேட்டு மகிழ்ந்த சாந்தோபா "என்னைப் போலவே பற்றுகளை விட்டு என்னுடன் இருக்கவேண்டும்" என்றார். யசோதாவும் அவருக்குப் பணிவிடைகள் செய்து கொண்டு வாழ்ந்து வரலானாள்.   
                     தினமும் ஊருக்குள் சென்று பிக்ஷை  ஏற்றுக் கொண்டு வந்து தன கணவருக்குப் பணிவிடைகள் செய்து வரலானாள்.அந்த ஊரிலேயே சாந்தோபாவின் சகோதரி வாழ்ந்து வந்தாள்.அவள் இல்லத்திற்குப் பிக்ஷைக்குப் போனாள்  யசோதா. தன அண்ணன் மனைவியை உள்ளே அழைத்து நெய், சர்க்கரை சேர்த்துச் செய்த அடைகளைக் கொடுத்தாள் அவற்றை வாங்க யசோதா மறுத்த போதும் பிடிவாதமாக அவள் புடவையில் வைத்துக் கட்டி அனுப்பிவிட்டாள் 
     தங்கள் இருப்பிடம் வந்த யசோதா கணவரிடம் நடந்ததைக் கூறி அடைகளைக் காட்டினாள் .அவளிடம்," நீ உடனே இவைகளைத்  திருப்பிக் கொடுத்துவிட்டு வா" என்று கூறவே யசோதா அப்படியே தன்  நாத்தியிடம் அவைகளைக் கொடுத்துவிட்டுத் திரும்பினாள்.வரும் வழியில் மழையும் காற்றும் பலமாக வீசியது. நதியில் வெள்ளம் அதிகரிக்கவே அதைக் கடக்க இயலாமல் யசோதா திகைத்து நின்றாள்.அவள் மனம் இறைவனை வேண்டியது.
          அப்போது ஓர் ஓடக்காரன் அங்கு வந்தான். கவலையுடன் நிற்கும் யசோதையிடம் வந்தான். "அம்மா, அக்கரைக்குப் போகவேண்டுமா?நான் கொண்டுபோய் விடுகிறேன்.வாருங்கள்" என்று அழைத்தான்."பாண்டுரங்கா," என்று இறைவன் நாமத்தைச் சொல்லியவாறே அவனுடைய ஓடத்தில் ஏறினாள் யசோதா.அக்கரை  வந்து சேர்ந்தவுடன் கரை இறங்கிய யசோதா ஓடக்காரனைக் காணாது திகைத்தாள்.ஓடம் நின்ற இடத்தில் ஒரு மயிலிறகு கிடந்தது.அதை மிகுந்த பக்தியுடன் எடுத்துக் கண்களில் ஒத்திக் கொண்டாள்.வந்தவன் அந்தப் பாண்டுரங்கனே என்று புரிந்து கொண்டாள்.இந்த அற்புதத்தைக் கணவனிடம் சொன்ன போது சாந்தோபா கண்ணீர் விட்டான். தன மனைவி செய்த புண்ணியம் தான் செய்யவில்லையே.என்று மிகவும் வருந்தினான்.
  தனக்கும் அவன்  காட்சி தரும் வரை உணவு உண்பதில்லை என்று நோன்பிருக்கத் தீர்மானித்தான்.அதேபோல் கண்களை மூடி அமர்ந்துகொண்டான்.நாட்கள் கடந்தன. சாந்தோபாவின்  உடல் வாடியது.இளைத்துத் துரும்பாகிவிட்டான்.  ஒருநாள் பாண்டுரங்கன்  சங்கு சக்ர கதா தாரியாய் இவன் முன் தரிசனம் தந்து"அன்பனே நான் என்றும் உன்னுடனேயே இருக்கிறேன்.வருந்தாதே"என்று ஆசி கூறி மறைந்தார்.மனம் மகிழ்ந்த சாந்தோபா தன மனைவியுடன்  மீண்டும் பிக்ஷை எடுப்பதும் தவம் செய்வதும் இறைவன் நாமத்தைப் பாடுவதுமாக வாழ்ந்து வரலானார்.
               அத்துடன்  மக்களின் துயர் துடைப்பதும் அவர்களை நல்வழிப் படுத்துவதுமாகக் காலம் கழித்துப் பின்  பேரின்பப் பெருவீட்டை அடைந்தார். இத்தகைய பெரியவர்களின் வாழ்க்கைத் தத்துவம் நமக்கெல்லாம் கடவுளை நம்பினோர் ஒருக்காலும் கைவிடப்படார் என்ற உண்மையை விளக்குகிறது.





















ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

சனி, 12 அக்டோபர், 2013

111 பழமொழிக் கதைகள்.--துணையோடல்லது நெடுவழி போகேல்.-

துணையோடல்லது நெடுவழி போகேல்.

              ராசம்மாவுக்கு இரண்டுபிள்ளைகள் இருந்தார்கள்.அவர்களை மிகவும் அன்புடனும் பாசத்துடனும் வளர்த்து வந்தாள்.
இரண்டு சகோதரர்களும் ஒற்றுமையாகவும் பிரியமாகவும் வளரவேண்டும் என்று ராசம்மா ஆசைப் பட்டாள்.அதனால் அவர்கள் எங்கு சென்றாலும் ஒன்றாகச் செல்லவேண்டும் ஒன்றாகசாப்பிடவேண்டும் விளையாடவேண்டும் என  விரும்பி அப்படியே வளர்த்தாள்.
அண்ணன் விநாயகம்,தம்பி வேலனை  விட்டு விட்டு ஓடிவிடுவான். ஆனால் ராசம்மா அவனைத் தேடிவந்து தம்பியை அவனிடம் விட்டு வருவாள். அத்துடன் தனியாகப் போகாதே என்று அறிவுரை சொல்லி வருவாள்.
நாட்கள் செல்லச் செல்ல விநாயகத்துக்கு யார் துணையும் இன்றி எங்கும் தனியாகப் போவதுதான் பிடித்திருந்தது. அதனால் அவன் எங்கும் தனியாகச் சென்று வருவான்.
            ஒருமுறை அவன் அம்மாவுக்கு உடல் நலமில்லாமல் போகவே மருந்து வாங்கிவர வைத்தியர் வீட்டுக்குச் செல்லவேண்டியிருந்தது.தம்பி வேலனை  அம்மாவுக்கு உதவியாக வைத்துவிட்டு வைத்தியர் வீட்டுக்குப் புறப்பட்டான் 
அப்போது ராசம்மா "ஐயா விநாயகம் ,யாரையாச்சும் துணைக்கு அழைச்சுக்கிட்டுப் போப்பா,தனியாப் போகாதே" என்றாள் 
 ஆனால் விநாயகமோ"போம்மா, நான் இப்போ பெரியவனாயிட்டேன்.தனியாவே போறேன்.நீயேன் பயப்படுறே?" என்றான் கோபத்தோடு.
      அப்போது ராசம்மா, "அப்படியில்லேப்பா, தொலைவாப் போறதுன்னா, யாரோடாவதுசேர்ந்துபோப்பா.துணையில்லாமல்  நெடுவழி போகக் கூடாதுன்னு சொல்லியிருக்காங்கப்பா" என்று கவலையோடு சொல்லிப் பார்த்தாள் .
ஆனால் கேட்காத விநாயகம் இப்போ யாரைத் துணையா அழைத்துப் போறது?தனியாப் போனா ஒண்ணும் ஆயிடாது. நீ பயப்படாதே."என்றான் வீராப்போடு.
"என் ராசா. வழியில ஒரு பூனையோ  நாயோ கிடைச்சா அதையாவது கூட்டிப்போ. அதுவே உனக்குத் துணையாயிருக்கும்.என்று மீண்டும் சொல்லவே அம்மாவின் சொற்படியே எதையாவது எடுத்துச் செல்வதாகக் கூறினான் விநாயகம்.
"இருட்டும் முன் வந்துவிடப்பா" என்றவள் கண்களை மூடிப் படுத்து விட்டாள்.
                   வினாயகம்வேகமாக நடந்தான். வழியில் பெரிய குளம் ஒன்று இருந்தது.அதன் கரையில் சென்று நின்றான்.குளத்து நண்டு ஒன்று கரை ஓரமாக நடந்து கொண்டிருந்தது.அதைப் பிடித்துத் தன்னிடமிருந்த பையில் போட்டுக் கொண்டான். வைத்தியர் வீடு வெகு தொலைவில் இருந்தது.அவர் வரும்வரை காத்திருந்து மருந்து வாங்கிக் கொண்டு மீண்டும் தன வீடு நோக்கி நடந்தான் விநாயகம்.
சற்று நேரத்தில் நல்ல மழை பிடித்துக் கொண்டது.வழியில் தெரிந்த ஒரு பாழ் மண்டபத்தில் சென்று ஒதுங்கினான்.
                 சூரியன் மறையும் நேரம் வரவே வினாயகத்திற்கு பயம் பிடித்துக் கொண்டது.யாரேனும் வருகிறார்களா என சுற்றிலும் பார்த்தான்.தனியாக இருக்கப் பயமாக இருக்கவே தன பையில் இருந்த நண்டை வெளியே எடுத்து அதன் காலில் கீழே கிடந்த ஒரு கயிற்றால் கட்டினான்.அங்கேயே அமர்ந்து கொண்டான். அவன் கையிலிருந்த நண்டு அவனைச் சுற்றிச் சுற்றி வந்தது. அவனுக்கு அது வேடிக்கையாக இருந்தது.சற்றுநேரம்தான்.மீண்டும் பயம் பிடிக்கவே எழுந்து நின்றான். அந்த நண்டு அவனது பின் பக்கமாகச் சென்றுஎதையொ பிடித்துக் கொண்டு போராடியது.திடுக்கிட்டுத் திரும்பியவன் "ஐயோ" என்று அலறிவிட்டான். 
                   அவன் பின்னால் ஒரு பாம்பின் கழுத்தைப் பிடித்துக் கொண்டிருந்தது அந்த நண்டு.இருட்டையும் மழையையும் லட்சியம் செய்யாமல் அந்த இடத்திலிருந்து வீட்டை நோக்கி ஓடினான் விநாயகம்.வீட்டை அடைந்தபின்னர்தான் அவன் ஓட்டம் நின்றது.
உள்ளே நுழைந்தவுடன் ராசம்மா வந்திட்டயாப்பா.என்றபோது அம்மாவிடம் மருந்தைக் கொடுத்துவிட்டு "அம்மா, நான் உன் சொல்படி ஒரு துணையோடுதான் போனேம்மா. இனியும் நான் எங்கே போனாலும் தம்பியோடு போவேனம்மா."என்றான்.
துணையில்லாமல் அவன் தனியாகச் சென்றிருந்தால் இப்போது உயிரோடு இருந்திருக்க முடியுமா. அம்மா பழமொழியாக துணையோடல்லது நெடுவழி போகேல் என்று சொன்னதன் பொருளை இப்போது புரிந்து கொண்டான் விநாயகம்.
ராசம்மாவும் மகனின் மாற்றத்தை அறிந்து மனம் மகிழ்ந்தாள்.




ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

சனி, 28 செப்டம்பர், 2013

பழமொழிக் கதைகள் ---கிட்டாதாயின் வெட்டென மற

வீரன்பட்டி வீரன்பட்டி என்று ஒரு சிறு கிராமம்.அந்த கிராமத்தில் வீரையன் என்று ஒரு விவசாயி வாழ்ந்து வந்தான்.அவனுக்கு பாலன், கோபு என்று 

இரண்டு பிள்ளைகள் இருந்தனர்.வீரையனுக்கு இளம் வயதில் படிக்கவேண்டும் என்று நிறைய ஆசை இருந்தது. ஆனால் அவனால் படிக்க

முடியாத சூழ்நிலை.

அதனால் தனது இரண்டு பிள்ளைகளையும் நன்கு படிக்கவைக்க விரும்பினான். ஒருநல்ல நாளில் இருவரையும் அழைத்துக் கொண்டு அருகே 

நகரத்தில் உள்ள பள்ளிக்கு அழைத்துச் சென்றான்.இருவரையும் பள்ளியில் சேர்த்துவிட்டு மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினான்.

சில மாதங்கள் பிள்ளைகள் ஒழுங்காகப் பள்ளி சென்று வந்தனர்.

பள்ளியில் காலாண்டுத் தேர்வு வந்தது.கோபு பாலன் இருவரின்  ஆசிரியர் அவர்களுக்கு தரச் சான்றிதழ் எனப்படும் ப்ரோக்ரஸ் ரிபோர்ட் கொடுத்தார்.
இருவருமே சுமாரான மதிப்பெண்ணே பெற்றிருந்தனர்.இதைத் தந்தையிடம் கொடுப்பதற்கு மிகவும் பயந்தனர்.ஆனால் சிறியவன் கோபு தன தந்தையிடம் தன சான்றிதழைக் கொடுத்து அவர் முன் தயங்கியபடியே நின்றான்.அவன் எடுத்திருந்த மதிப்பெண்கள் எல்லாமே சராசரிக்கும் கீழேயே இருந்தன.வீரையனுக்கு ஒரே கோபம்.மூத்தவனாவது நல்ல மதிப்பெண் எடுத்திருப்பானோ என்று பாலனைக் கேட்டான்."ஏண்டா, தம்பி எல்லாத்திலையும் குறைச்ச மார்க்கு வாங்கியிருக்கிறானே, நீ எப்படி?"
தயங்கியபடியே தன ரிபோர்டைக் கொண்டுவந்து கொடுத்தான் பாலன்.அதைப் பார்த்த வீரையன்,"தம்பியைவிட பரவாயில்லை. ஆனாலும் நல்லாப் படிக்கோணும்டா" என்று சற்றுக் கடுமையாகக் கூறினான்.இருவரும் சரியெனத் தலையை ஆட்டினர்., 
நாட்கள் செல்லச் செல்ல கோபுவுக்குப் படிப்பின் மீது நாட்டமே இல்லாமல் போயிற்று.அவன் அண்ணன் பாலன்  அவனிடம் தந்தையின் ஆசை பற்றிச் சொல்லி அவனைப் பள்ளிக்கு இழுத்து வந்தான்.
அன்றும் பாலன் பள்ளிக்குப் புறப்பட்டு விட்டபோதும் கோபு கன்றுக் குட்டியுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.அவனிடம் வந்த பாலன் "டே,தம்பி என்னடா, பள்ளிக்கூடம் வரலையா?"என்று கடுகடுப்போடு கேட்டான். அதைக் கேட்ட கோபு "எனக்குதான் படிப்பே ஏறலியே நான் 
ஏன் பள்ளிக்கூடம் வரணும்? நீ வேணுமானா போ. நான் வரலை" என்றான்..
அதைக் கேட்டபடியே வந்த வீரையனுக்குக் கோபம் மூண்டது."ஏண்டா, உங்களை எப்படியாவது படிக்கவைக்க நான் படாத பாடு படுறேன் உனக்கு வெளையாட்டா இருக்காடா? மருவாதையா அண்ணன்கூடப் போற வேலையைப் பாரு. இல்லேயின்னா..."என்று பற்களைக் கடித்தான் வீரையன்.அவனது கோபத்தைப் பார்த்த கோபு உடனே தன புத்தகப் பையைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு பள்ளியை நோக்கி வெளியே ஓடினான்.
அன்று மாலையே அழுதபடியே வீட்டுக்கு வந்த கோபு தன தந்தையிடம் வந்து நின்றான்."அப்பா, உங்களுக்குப் பிடிக்குதுன்னு என்னைப் பள்ளிக்கூடம் போகச் சொல்றீங்களே எனக்கு படிப்பு வருதான்னு பாக்க வேண்டாமா?இன்னிக்கு எங்க வாத்தியாரு என்ன சொன்னாரு தெரியுமா? எட்டாத பழத்துக்குக் கொட்டாவி விடாதேடா வராத படிப்பை நினைச்சு  ஏன் வீணா கஷ்டப் படுறே"அப்படின்னு சொல்லித் திட்டுறாங்கப்பா.நான் உங்க கூட வயலுக்கு வந்து விவசாயத்தைப் பாத்துக்குறேன்.அண்ணனுக்குப் புடிச்சா அவன் படிக்கட்டும்."
வீரையன் சற்று சிந்தித்தான்.அவன் மனம் பேனா பிடிக்க ஒரு கை போனால் ஏரைப் பிடிக்க ஒரு கை இருக்கட்டும் என்று எண்ணினான்.
"சரிகோபு, நீ என்கூட வயலுக்கு வா."என்றவுடன் மகிழ்ச்சியுடன் ஓடினான் கோபு.
                               வருடங்கள் ஓடின. இன்று பாலன் கல்லூரியில் படிக்கும் மாணவன்.ஆனால் கோபுவோ வயலில் பாடுபட்டு விளைச்சலைப் பெருக்கி வீட்டின் செல்வ நிலையையும் உயர்த்தியிருந்தான். முதுமையின் விளிம்பில் நிற்கும் வீரையன் தனக்கு பெரும் உதவியாக இருக்கும் கோபுவைப் பற்றிப் பெருமை கொண்டிருந்தான். பலவிஷயங்களைத் தெரிந்து கொண்டு இன்னும் சிறப்பான முறையில் தன நிலத்தைப் பாதுகாக்கவும் விளைச்சலைப் பெருக்கவும் முயன்றான். தினமும் நூல்நிலையம் சென்று விவசாயம் சம்பந்தமான நூல்களைப் படித்தான்.பொது அறிவையும் வளர்த்துக் கொண்டான். 
அடிக்கடி தந்தையின் சந்தேகங்களைப் போக்கவும் அவன் அறிவை எண்ணி வீரையன் ஆச்சரியப் பட்டான்.
                                 பாலன் கஷ்டப் பட்டு கல்லூரிப் படிப்பை  முடித்தான்.ஆனால்வேலைக்காக அலைவதே அவன் வேலையாக இருந்தது.
ஆனால் கோபுவோ நிற்க நேரமின்றி வயல் வேலை என்று ஓடிக்கொண்டிருந்தான். ஒருநாள் அந்த ஊருக்கு மாவட்டக் கலெக்டர் வருகை புரிந்தார்.அவ்வூர் அதிகாரிகள் கூடியிருக்கும் கூட்டத்தில் வீரையன் பெருமைப் படும் ஒரு காரியத்தைச் செய்தார்.ஊரே கூடியிருக்கும் அந்த இடத்தில் சிறந்த விளைச்சலைக் காட்டிய கோபுவுக்கு நமது குடியரசுத் தலைவர் பாராட்டும் பரிசும் அளிக்க இருக்கிறார் என்ற செய்திதான் அது.ஊர் பெரியவர் முதல் அனைத்து மக்களும் சிறந்த மகனைப் பெற்ற தந்தை என்று பாராட்டிப் புகழ்ந்தனர்.
அன்று இரவு வீரையன் தன பிள்ளைகள் இருவருடனும் அமர்ந்து கொண்டான்.
"கோபு, உன் அண்ணன் படிக்கப் போனபோது நீயும் போகலையேன்னு கோபப்பட்டேன். ஆனால் நீயோ வாத்தியாரு ஏதோ சொன்னாருன்னுட்டு படிப்பை நிறுத்திட்டே, நீ உருப்படுவியான்னு கவலைப் பட்டேன். ஆனா, அந்தக் கவலை இப்போ இல்லை."
"அப்பா, வாத்தியாரு ஏதோ சொல்லலைப்பா, வாழ்க்கைக்குத் தேவையான பழமொழியைத் தான் சொல்லியிருக்காரு.
கிட்டாதாயின் வெட்டென மற அப்படின்னு." அவரு சொன்னபடி எனக்கு வராத படிப்பை நினைச்சு நான் வருந்தாம அதை மறந்துட்டு நமக்கும் நாட்டுக்கும் எது தேவையோ அதைக் கத்துக்கிட்டேன்.அந்த விவசாயம் நம்மையும் உசத்தி நாட்டையும் உசத்திடுச்சில்லெப்பா?"
முகத்தில் புன்னகை மாறாமல் நின்ற பாலனும் "என்னோட கல்வி அறிவையும் பயன் படுத்தி தம்பிக்கு உதவியா நான் இருப்பேன் அப்பா."
என்றவுடன் அவனையும் சேர்த்து அனைத்துக் கொண்டு மகிழ்ந்தான் வீரையன்.
            அதனால் நம்மால் முடிந்ததை முயன்று கற்கவேண்டும் இயலவில்லையேல் அதைமறந்துவிட்டு இயன்றதைத் தெரிந்து கொண்டுஅதிலும் வெற்றி அடைவதே நம் குறிக்கோளாக இருக்கவேண்டும்.
















ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

வெள்ளி, 26 ஜூலை, 2013

தகப்பன் சாமி.

           ஒரு கிராமத்தில் செந்தில் என்று ஒரு விவசாயி வசித்து வந்தான்.அவனுக்கு பூவாயி என்ற மனைவி இருந்தாள்.மிகவும் கர்வத்துடன்  யாரையும் மதிக்காமலும் எவர் சொல்லையும் கேட்காமலும் இருந்தாள்
              
            செந்திலின் அம்மா அவன் கூடவே வாழ்ந்து வந்தார்.

அவருக்குபூவாயியின் செயல்பிடிக்கவில்லை.அதனால் அடிக்கடி அவளுக்கு அறிவுரை சொல்லி வந்தார். இது பூவாயிக்குப் பிடிக்கவில்லை.அதனால் எப்போதும் அவர்மீது எரிந்து விழுந்து கொண்டிருப்பாள் மனம் புண்படும்படி பேசுவாள்.

              பூவாயியின் குணம் சரியில்லையென்றாலும் செந்தில் அவளைக் கண்டிக்காமல் இருந்தான். அத்துடன் தன அம்மாவையும் பூவாயியை ஒன்றும் சொல்லாதே என்று கண்டித்தான்.அதனால் அவர்களுக்குள் அடிக்கடி சண்டை நடந்து வந்தது.
         
                செந்திலுக்கு மணியரசு என்ற மகன் இருந்தான்.அவனுக்கு நான்கு வயதுதான் இருக்கும்.அவன் எப்போதும் பாட்டியிடம் அமர்ந்து கதை கேட்பது வழக்கம்.பூவாயிக்கு இது பிடிக்காததால் மகனைப் பாட்டியிடம் விடாமல் தடுத்தாள்.

                  அத்துடன் அந்த வயதான தாயைத் திட்டவும் அலட்சியப் படுத்துவதும் நேரத்திற்கு சாப்பாடு தராமலும் இருந்தனர்.வீட்டிலோ பாட்டி மாடுகளைக் குளிப்பாட்டுவது பாத்திரம் தேய்ப்பது வீடு பெருக்குவது என்று பலவேலைகளைச் செய்தும் செந்தில் தாயைக் கவனிப்பதே இல்லை.

                    ஒருநாள் மாட்டின் அருகே பூவாயி சென்றபோது அது மிரண்டு முட்ட வந்தது.அதைப் பார்த்து மணியரசு தன தாயிடம் கேட்டான்.
"ஏம்மா, அது உன்னை முட்ட வருது?"
"அதுக்கு உங்க பாட்டியைத்தான் பிடிக்கும்போல."என்று அலட்சியமாகச் சொல்லிச் சென்று விட்டாள் 
மணியரசு தன அப்பாவிடம் சென்றான்.செந்தில் அவனை மடியில் வைத்துக் கொண்டான்.
"அப்பா, நம்ம வீட்டு மாடு ஏம்ப்பா அம்மாவை முட்ட வருது?"
"அதுக்குப் பிடிக்காதவங்களோ, பிடிக்காகாரியத்தைசெய்தாலோ அதுக்குக் கோபம் வரும் அவங்களைக் கிட்டவே நெருங்க விடாது.

"அப்படியா அப்பா, கண்ணுக்குட்டியைத் தொட்டாககூட கோபம் வருமா அப்பா?"
"ஆமாண்டா கண்ணு.  கோபம் வரும். நாம ஏதாவது கெடுதல் பண்ணிடுவோமுன்னு அது பயந்து தன குட்டியைக் காப்பாத்த முட்டவருது."

"அப்போ உங்கம்மாதானே பாட்டி. உன்னையும் நீ சின்னவனா இருக்கும் போது இப்படித்தானே பார்த்துகிட்டிருப்பாங்க."

செந்திலால் பேச முடியவில்லை.திரும்பி அம்மாவைப் பார்த்தான்.பசி மயக்கத்துடன் மாட்டுக் கொட்டிலைப் பெருக்கிக் கொண்டிருந்தாள் அந்தத் தாய்.

நேராக அருகே சென்று அவள் கையிலிருந்த துடைப்பத்தை வீசிவிட்டு உள்ளே அழைத்து வந்தான் செந்தில்..மணியரசு மகிழ்ச்சியுடன் பாட்டியின் கையைப் பற்றிக்  கொண்டான்.

பாட்டி ஒன்றும் புரியாமல் திகைத்தாள்.அவனது அன்பைப் புரிந்து கொண்டு மகிழ்ந்தாள் .அம்மாவை அனைத்துக் கொண்ட செந்தில் தகப்பன்சாமியான தன மகனையும் அணைத்துக் கொண்டான்.இவர்களின் அன்புக்கு முன்னால்  பூவாயியால் ஒன்றும் பேசமுடியவில்லை. 


-- 
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

ஞாயிறு, 7 ஜூலை, 2013

108-பழமொழிக்கதைகள் -கைக்கு எட்டியது

                                                  ஒரு ஊரின் அருகே பெரிய காடு ஒன்று  இருந்தது.அந்தக் காட்டில் பலவித மரங்கள் நன்கு 
    1.                செழித்து வளர்ந்திருந்தன.  
    அந்த மரங்களை நாடி பலவிதமான பறவைகளும்   வந்து 
      1. மகிழ்ச்சியோடு தங்கிச் செல்லும். இவற்றை வேட்டையாட வேட்டைக்காரர்களும் வருவார்கள்.
            
            ஒருநாள் இந்தக் காட்டுக்கு ஒரு வேட்டைக்காரன் வந்தான். வெகுநேரமாகியும் அவனுக்கு எந்தப் பறவையோ விலங்கோ அகப்படவே இல்லை.மிகவும் களைத்துப்போனவன் ஒரு மரத்தடியில் சற்றே ஓய்வெடுக்கலாம் என அமர்ந்திருந்தான்.திடீரென இனிமையான குரல் கேட்டது.அந்த மனிதன் சுற்றிச் சுற்றிப் பார்த்தான்.சற்றே தலையைத் தூக்கி மரத்தின்மேல் பார்த்தான். ஆச்சரியப் பட்டுப்போனான்.
            மரத்தின்மேல் அவன் கண்டது தங்கமயமான அழகிய பறவை. அதைப் பிடிக்க விரும்பியவன் தன கையிலிருந்த வில்லில் அம்பு தொடுத்தான்.அப்போது அந்தப் பறவை ஒரு தங்கச் சிறகை அவன்மீது உதிர்த்தது.அந்தச்சிறகை எடுத்துச் சென்றவன் அதைவிற்று நல்ல உடை உணவு பெற்று நிம்மதியாக இருந்தான்.
ஆனால் பேராசை அவனை விடவில்லை.மீண்டும் காட்டுக்குச்சென்றான். அதே மரத்தடியில் வெகுநேரம் காத்திருந்தான். அவன் எதிர்பார்த்தது போலவே அந்தத் தங்கப் பறவை அங்கு பறந்து வந்து ஒரு கிளையில் அமர்ந்தது. வேடன் சட்டென அம்பை எடுத்து அந்தப் பறவையைக் குறி பார்த்து அடித்தான். அடிபட்ட பறவை வேடனின் காலடியில் விழுந்தது.சட்டென அதைப் பிடித்துக் கொண்ட வேடன் அதன் காயத்திற்கு காட்டிலிருந்து ஒரு பச்சிலையைப் பறித்துக் கட்டுப் போட்டான்.சற்று நேரத்தில் அந்த வேடன் அந்தப் பறவையுடன் தன வீடு நோக்கி நடந்தான்.
  அவன் வீட்டைச் சென்று அடைந்தவுடன் அந்தத் தங்கப் பறவை ஒரு சிறகை உதிர்த்தது. அந்தச்சிறகை விற்று  தங்கப் பறவைக்கு ஒரு கூண்டும் தன்குடும்பத்திற்கு வேண்டிய பொருள்களையும் வாங்கி வந்தான்.

             அன்று இரவு படுத்துக் கொண்டிருந்த அந்த வேடனுக்கு திடீரென்று ஒரு சந்தேகம் முளைத்தது.நம் நாட்டு அரசனுக்கு இந்தஅரிய  பறவையைப் பற்றித் தெரிந்தால் நான் மறைத்து வைத்தது குற்றம் என்று என்னைத் தண்டித்து விடுவாரே. இந்த அபூர்வப் பறவை மன்னருக்குத்தான் சொந்தம் நாளையே இதை மன்னரிடம் சேர்த்து விடுவோம் என்று முடிவு செய்தான்.
               மறுநாள் காலையில் அந்த அதிசயப் பறவையைக் கூண்டுடன் எடுத்துக கொண்டு அரச சபைக்குச் சென்றான். வழியெங்கும் மக்கள் அந்த அழகிய தங்கப் பறவையைப்  பார்த்து அதிசயப் பட்டு நின்றனர். சிலர் அவனுடன் சென்று சபையில் நடப்பதைக் காணவேண்டும் என்னும் ஆவலுடன் சென்றனர். 
மன்னன் முன் சென்று அந்தப் பறவையை வைத்து வணங்கினான் வேடன். அப்போது மன்னனின் முன்பாகவே ஒரு தங்கச் சிறகை உதிர்த்தது அந்தப் பறவை.அதைக் கண்டு மன்னன் மிகவும் ஆச்சரியப் பட்டான். சேவகரிடம் அந்தப் பறவையைக்  கவனமாகப் பார்த்துக்கொள்ளும்படி ஆணையிட்டான்.வேடனுக்கு மிகுந்த பொன்னும் பொருளும் கொடுத்தனுப்பினான்.வேடனும் மகிழ்ச்சியுடன் தன இருப்பிடம் சென்றான்.
           மந்திரியார் மெதுவாக மன்னனிடம் பேசினார்."மன்னா, இது ஏதோ மந்திரப் பறவை போலத் தோன்றுகிறது.இது அரசரின் அரண்மனையில் இருந்தால் அதனால் அரசருக்கும் இந்நாட்டுக்கும் ஏதேனும் தீங்கு விளைந்துவிடுமோ என நான் அஞ்சுகிறேன் மன்னா,"
அரசனும் சிதித்தான்."உண்மைதான் நீங்கள் சொல்வதும் சிந்திக்கவேண்டிய விஷயம்தான்.நானும் இதுவரை இதுபோன்ற பறவையைப் பார்த்ததில்லை.என்ன செய்யலாம் என்று நீங்களே கூறுங்கள் மந்திரியாரே."
சற்றும் தாமதியாது," விட்டு விடுங்கள். அது எங்கேயானும் போய்த் தொலையட்டும்."என்றார்.
மன்னனும் சிந்தித்தான்."ஆம் மந்திரியாரே, எனக்கும் அச்சமாகத்தான் உள்ளது.நீங்கள் சொல்வதுபோல் இதைவெளியே விட்டு விடுவதே நல்லது."
            உடனே காவலனை அழைத்து, "அந்தப் பறவையைக் கூண்டைத் திறந்து வானில் பறக்க விட்டு விடுங்கள்." என்று ஆணையிட்டான் மன்னன். கூண்டு திறக்கப் பட்டது பறவை ஆனந்தமாக விண்ணில் பறந்தது.காட்டை நோக்கி அது பறக்குமுன் அது  தனக்குள் கூறிக்கொண்டது.சரியான முட்டாள் மக்கள்.
இவர்களுக்கு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே. என்னைப் பிடித்தவேடனுக்கு என் சிறப்பை நான் காட்டியும் அவன் அதைப் பயன்படுத்திக் கொள்ளாதது  முட்டாள்தனம்.என்னைப் பிடித்த வேடன் அதை மன்னனிடம் கொடுத்தது முட்டாள்தனம். அந்த மன்னன் முன் நான் தங்கச் சிறகை உதிர்த்தும் என் சிறப்பைப் புரிந்து கொள்ளாமல் என்னை ஏதோ தீய சக்தி என நினைத்தது பெரிய முட்டாள்தனம்.
அத்துடன் மந்திரியின் அர்த்தமற்ற பேச்சைக் கேட்டு என்னை விரட்டிவிட்டது பெரிய முட்டாள்தனம்.இத்தகையவர்களுக்கு எத்தகைய சந்தர்ப்பம் வாய்த்தாலும் அதைப் பயன்படுத்திக் கொள்ளத்  தெரியாது. இவர்கள் தங்களின் கைக்கு எட்டியதை வாய்க்கெட்டவிடாது செய்து கொண்டனர்.
                  ஆனாலும் என்ன! இவர்கள் முட்டாள்தனம் எனக்கு விடுதலை கிடைத்துவிட்டது. என்று சொல்லிக் கொண்டே மகிழ்ச்சியுடன் பறந்து சென்றது அந்தப் பறவை.
எனவே வாழ்க்கையில் நமக்குக் கிடைக்கும் சந்தர்ப்பத்தைப பயன் படுத்திக் கொள்ளும் அறிவை நாம் பெற்றிருக்கவேண்டும்  
கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்பவனே வாழ்க்கையில் வெற்றி பெறுவான். மகிழ்ச்சியாகவும் வாழ்வான்.




ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

சனி, 29 ஜூன், 2013

பழமொழிக் கதைகள். துஷ்டரைக் கண்டால் தூர விலகு.

ஒரு காட்டில் பல விலங்குகள் வாழ்ந்து வந்தன.அந்த விலங்குகளைப் பிடிக்க பலரும் அந்தக் காட்டுக்கு வேட்டைக்கு வருவது வழக்கம். ஒருமுறை வேட்டைக்காரன் ஒருவன் அந்தக் காட்டில் ஒரு கூண்டை வைத்துவிட்டுப் போய் விட்டான். அந்தக் கூண்டில் ஒரு புலி மாட்டிக் கொண்டது.

--                 அந்தக் கூண்டில் அகப்பட்ட புலி உறுமிக் கொண்டே நடை பயின்று கொண்டிருந்தது.அப்போது அந்தக் காட்டுவழியே ஒரு வழிப்போக்கன் சென்று கொண்டிருந்தான்.அவனைப் பார்த்து அந்தப் புலி 
"ஐயா, தயவு செய்து என் அருகே வாரும் "என்று அழைத்தது. புலியைக் கண்டு பயந்து தூர விலகிச் சென்றவன் அதன் அழைப்பைக் கேட்டு கூண்டின் அருகே வந்தான். அவனைப் பார்த்து,அந்தப் புலி பரிதாபமாகக் கூறியது.
"ஐயா, எனக்கு மிகவும் வயதாகிவிட்டது.கண்ணும் தெரியவில்லை. இந்த வேட்டைக்காரன்  என்னைப் பிடித்துப் போய் துன்புறுத்துவான். தயவு செய்து என்னை விடுவித்து விட்டுப் பிறகு உங்கள் வழியே போகலாம் ஐயா."
அதன் முகத்தையும் கூர்மையான  அதன் பற்களையும் பார்த்துப்  பயந்த அந்த வழிப்போக்கன்,"ஹூ...ஹூம் நான் மாட்டேன்.நீ துஷ்ட மிருகம். உன்னை வெளியே விட்டால் என்னைக் கொன்று தின்று விடுவாய்."என்று மறுத்தான். தன வழியே போகத் தொடங்கினான்.

அப்போது அந்தப் புலி," ஐயா, நான் சைவமாக மாறி ரொம்ப காலமாயிற்று. இப்போதெல்லாம் நான் மனிதர்களையே தின்பதில்லை. என்னை வெளியே விட்டுப் பாருங்கள் ஐயா.அப்போதுதான் தெரியும் நான் எவ்வளவு நல்லவன் என்று." எனக் கெஞ்சியது.
தயங்கி நன்ற வழிப்போக்கனிடம் அது கெஞ்சியது.மன்றாடியது. "உன்னைத் தின்னமாட்டேன்" என்று சத்தியம் செய்தது. அதன் தவிப்பைப் பார்த்த அந்த வழிப்போக்கன் பாவமாயிருக்கிறதே இந்தப் புலியைப் பார்க்க என எண்ணி அந்தக் கூண்டின் அருகே சென்று அதைத் திறந்து விட்டான்.

என்ன நடக்கும்?வெளியே வந்த புலி "என்ன நண்பரே, நலமா?" என்றா விசாரிக்கும்?

ஒரே பாய்ச்சலில் பாய்ந்து அந்த வழிப்போக்கனைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டது. அந்த மனிதன் பயந்து அலறினான்.

"ஏ புலியே, என்னைத் தின்னமாட்டேன் என்று சத்தியம் செய்தாயே,இப்போது கொல்ல  வருகிறாயே,"

"அட அப்பாவி மனிதா,பட்டினியாய் இருப்பவர் முன் உணவு கிடைத்தால் உண்ணாமல் இருப்பது முட்டாள்தனம் அல்லவா? இது தெரியாதா உனக்கு?"

"இதோ பார், நீ செய்வது நியாயம் என்று யாராவது சொன்னால் நான் உனக்கு உணவாகிறேன்."
என்றான் நடுங்கியவாறே.
அந்த சமயம் பார்த்து ஒரு நரி அந்த இடத்துக்கு வந்தது.நரியைப் பார்த்த வழிப்போக்கன்
"இந்த நரியிடம் நியாயம் கேட்போம்" என்றான்.
 புலி "இதுவும் நம் இனத்தைச் சேர்ந்தது. எனக்கு சாதகமாகத்தான் சொல்லும் என எண்ணிக் கொண்டு      
நரியிடம் நியாயம் கேட்க சம்மதித்தது.

அருகே வந்த நரியைப் பார்த்து புலி அதிகாரத்துடன் பேசியது.
"நரியாரே, நீரே நியாயம் சொல்லும்.நான் கூண்டுக்குள் இருந்தேனா, இந்த மனிதன் வெளியே போய்க்கொண்டு இருந்தாரா,"என்று சொல்லும்போது நரி குறுக்கிட்டு, "என்ன என்ன, யார் உள்ளே இருந்தது, யார் வெளியே இருந்தது?" என்று ஒன்றுமே புரியாதது  போல் கேட்டது.

புலி பொறுமையாக மீண்டும் கூறத் தொடங்க, நரி "ஒ..ஹோ.. இந்த மனிதன் கூண்டுக்குள்ளும் நீங்கள் வெளியிலும் இருந்தீர்களா?" என்று வேண்டுமென்றே கூறியது.
புலி பொறுமையிழந்து,உறுமியது.அதைக்கண்டு அஞ்சியது போலப் பாசாங்கு செய்த நரி,
"புலியாரே, மன்னியுங்கள் எனக்கும் வயதாகிவிட்டதால் மறதி அதிகம். சரி தாங்கள் எங்கு இருந்தீர்களோ அங்கு சென்று நின்று சொல்லுங்கள் என்றதும் புலி கூண்டுக்குள் சென்று நின்றது." இதோ பார், நான் இங்குதான் இருந்தேன். இந்த மனிதன்..."என்று நரிக்கு விளக்கமாக சொல்வதில் கவனமாக இருக்கும்போது, நரி மெதுவாக அந்த வழிப்போக்கனிடம்,"ஓய், சீக்கிரம் கூண்டுக் கதவைச் சாத்துமஅய்யா, நிற்கிறீரே"என்று கூறவும் பாய்ந்து சென்று கூண்டுக் கதவைச் சாத்தி விட்டு அப்பாடா என்று பெருமூச்சு விட்டான் அந்த மனிதன்.

அந்தநரி, "துஷ்டரைக் கண்டால் தூர விலகு "என்ற பழமொழியை அறியமாட்டீரா,உங்கள் வழியைப் பார்த்துக் கொண்டு போங்கள்  ஐயா"என்று சொல்லிவிட்டுக் காட்டுக்குள் ஓடிவிட்டது.

உண்மைதான் அனுபவபூர்வமாக அறிந்து கொண்டேன் என்று சொல்லியவாறே வேகமாக அங்கிருந்து நடந்தான் அந்த மனிதன்.
அறியாமையாலும் அவசரத்தாலும் ஆணவத்தாலும் மீண்டும் கூண்டுக்குள் அகப்பட்டுக் கொண்டதைஎண்ணி உறுமியவாறு நின்றிருந்தது அந்தப் புலி.

நம்  வாழ்க்கையிலும் நாம் இந்தப் பழமொழியை மறவாமல் இருந்தால் பல துன்பங்கள் நம்மை அணுகாது நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.





ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

செவ்வாய், 11 ஜூன், 2013

சிற்றுளியும் மலை பிளக்கும்.--- திருக்குறள் கதைகள்.


                    மகேந்திரன் மச்ச நாட்டு மன்னன். அவனது நாட்டுக்கு அருகாமையில் உள்ள நாடு மருத நாடு
மருதநாட்டு மன்னன் சுரோசனன். மருத நாடு படைபலம் கொண்டது. ஆனால் மச்சநாடு அந்த அளவுக்கு படை பலம் கொண்டதல்ல.இருப்பினும் மகேந்திரன் மிகவும் பேராசை கொண்டவனாக இருந்தபடியால் மருத நாட்டை வெல்லவேண்டும் என்ற பேராவல் கொண்டிருந்தான். அதனால் அடிக்கடி சுரோசனன் மீது படையெடுத்து வந்தான்.. தோல்வியடைந்தபோதும் மீண்டும் மீண்டும் மருத நாட்டின் மீது படைஎடுத்தவண்ணம் இருந்தான்.
                     சுரோசனனின் நாடும் பெரிது படையும் பெரிது. அதனால் மகேந்திரன் தோல்வியடைந்த வண்ணமே இருந்தான்.
ஒருமுறை ஒற்றர் மூலம் மகேந்திரன் மீண்டும் படையெடுக்கப் போவதை அறிந்த சுரோசனனின் மதியூக மந்திரி மகிபாலர் மன்னனுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
"மன்னா, மகேந்திரன் மீண்டும் படையெடுக்கப் போகிறானாம். நமது படைகளைச் சற்று சீரமைக்கவேண்டும். கட்டளையிடுங்கள்" என்றார். சுரோசனன் சிரித்தான்."மந்திரியாரே, எத்தனை முறை அவன் படையெடுத்தாலும் அவனால் நம்மை வெல்ல இயலாது.நமது படைக்குமுன் அவன் படை எம்மாத்திரம்?"
"அப்படி அலட்சியமாக இருக்கக் கூடாது மன்னா,நமது வீரர்கள் போரிட்டுக் களைத்திருப்பர் என்றுதான் மீண்டும் உடனே  படையெடுத்து வருகிறான். நமது குதிரைப் படைதான் நமது வெற்றிக்குக் காரணம்.குதிரைகளும்  நமது படையில் அதிகம்.அவை பலமுறை போரிட்டதால்  கால்களிலுள்ள குளம்புகளில் ஆணிகள் தேய்ந்து போய் விட்டன.அவற்றிற்கு லாடம் அடிக்கவேண்டும்.அப்போதுதான் நம்மால் படை நடத்த முடியும்."என்றார் பணிவோடு.

ஆனால் சுரோசனன்,"இப்போது அதற்கு அவசரமில்லை. மகேந்திரனின் படையை வெற்றிகொண்டு  துரத்திய பிறகு பார்த்துக் கொள்ளலாம்." என்று அலட்சியமாகக் கூறிவிட்டு அந்தப்புரம் சென்று விட்டான்.
சில நாட்களில் மகேந்திரன் மீண்டும் படையெடுத்தான் இரு மன்னர்களும் தங்கள் படைகளுடன் புறப்பட்டனர்.சுரோசனன் புன்னகையுடன் தன குதிரைப்படையை நடத்திச் சென்றான்.திடீரென்று படையிலிருந்த குதிரைகள் கீழே விழுந்தன சில சரியாக ஓட முடியாமல் தடுமாறின மகேந்திரனின் படை சிறிதானாலும் எல்லா வகையான பராமரிப்பும் செய்யப்பட்டிருந்தன குதிரைகள் லாடம் அடிக்கப்பட்டு நன்கு ஓய்வெடுத்து போருக்குத் தயாராக சிலிர்த்துக் கொண்டு நின்றிருந்தன.ஆனால் சுரோசனன் படையோபெரியதாக இருந்தாலும்  போதிய பராமரிப்பு இன்மையால் பாதிக்குமேல் படுத்து விட்டன. மன்னன் சுரோசணனும் அச்சமும் சோர்வும் அடைந்துவிட்டான். தக்கதருணம் பார்த்து மகேந்திரன் சுரோசனனையும் மந்திரி மகிபாலரையும் கைது செய்து சிறையில் அடைத்தான்.
இப்போது இருவரும் மச்சனாட்டுச் சிறையில் இருந்தனர் 

மந்திரியின் சொல்லைக் கேளாததால்தான் தனக்கு இந்த நிலை வந்ததென்று வருந்திப் பேசினான் சுரோசனன். அப்போது மகிபாலர்"மன்னா, சிறிய உளிஎன்று நினைப்பது தவறு, அதுதான் பெரிய மலையைப் பிளக்கிறது. மேலும் ஆணிதானே அடிக்கவேண்டும் பிறகு செய்யலாம் என்று நினைத்ததால்தான் போரில் தோற்கும் நிலை வந்தது.படை பெரிதாயிருந்தும் தக்க தருணத்தில் தேவையான பராமரிப்பைச் செய்யாததால்தான் தங்களுக்கு இந்த நிலை."என்றபோது மன்னனுக்குப் புத்தி வந்தது. வள்ளுவப் பெருந்தகையின குறளும்   நினைவுக்கு வந்தது.
                                          

                                          "வருமுன்னர்  காவாதான்   வாழ்க்கை எரிமுன்னர்
                                            வைத்தூறு    போலக்   கெடும்." 

துன்பம் வருவதற்கு முன்பாகவே அதைத் தடுப்பதற்கேற்ற  முன்னேற்பாடுகளை செய்யத் தவறி யவன்வாழ்க்கை நெருப்பின் முன் வைக்கப்பட்ட வைக்கோல் போரின் நிலையை அடையும்.

எந்த சிறு விஷயமாக இருந்தாலும்  தக்க தருணத்தில்  சரியானபடி கவனிக்கவேண்டும் என்ற உண்மையை சுரோசனன் மட்டுமல்ல் நாமும் புரிந்து கொண்டோம் அல்லவா?


ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

வெள்ளி, 24 மே, 2013

. தெய்வம்இகழேல்....

ஒரு ஊரில் ஏழை விவசாயி ஒருவர் இருந்தார். அவருக்கு ஒரே ஒரு மகன் இருந்தான்.அவனுக்கு ரவிச்சந்திரன் எனப் பெயரிட்டு மிகவும் செல்லமாக வளர்த்து வந்தார்.இப்போது அவனுக்கு பனிரெண்டு வயது..அவன் ஆறாம் வகுப்பில் படித்து வந்தான்.

அவன் அம்மாவும் வயல் வேலைக்குச் சென்று பாடுபட்டு சம்பாதித்தார்.அதனால் ரவிக்குக் கஷ்டம் தெரியாமவளர்த்தனர்.அவன் நன்றாகப் படித்து பெரிய வேலைக்குப்போய் உயர்ந்த நிலையில் வாழ வேண்டுமென தினமும் கடவுளை வேண்டிக் கொண்டனர்.

ஆனால் ரவி இவர்களது கஷ்டத்தைப புரிந்து கொள்ளாமல் தான் விரும்பியதையெல்லாம் வேண்டும் என்று கேட்டு வாங்கிக் கொண்டான்.அவன் அம்மாவுக்கு மட்டும்  இவன் கஷ்டம் தெரியாமல் வளர்கிறானே என்று மனம் மிகவும் வேதனைப் பட்டது.அதனால் ரவி ஏதேனும் கேட்டால் போடா போய்க் கடவுளிடம் கேளு அவர் உனக்குத் தருவார்.என்று சொல்லிவிடுவார்.

ஒருநாள் ரவியின் அம்மா அவசரமாக வயலுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார்.அப்போது ரவி பள்ளிக்குப் புறப்பட பையைத் தூக்கிக் கொண்டவன் அம்மா என்றான். மெதுவாக அவரின் அருகே சென்றவன் "அம்மா, எங்க வகுப்பிலே நிறைய பேரு ஸ்கூலுக்கு சைக்கிளில்தான் வாராங்கம்மா.எனக்கும் சைக்கிள் வாங்கிக் குடும்மா.என்றான்.

"சரிதான், அதெல்லாம் பணக்காரங்களுக்குத்தான் முடியும் நீ படிச்சி பெரிய வேலைக்கு வந்து வாங்கிக்கோ. எங்களாலெல்லாம் முடியாது."
ரவி அப்படியே திண்ணையில் அமர்ந்து கொண்டான்.அவன் கோபத்தைப் பார்த்த அம்மா," ரவி, அந்த சாமிகிட்ட வேண்டிக்  கேளுப்பா, அவரு மனசு வச்சா, உனக்கு எல்லாம் தருவாரு.அழுவாமே ஸ்கூலுக்குப் போ"என்று சமாதானம் செய்துவிட்டுப் போய்விட்டார்.

ரவி மனதில் நினைத்தபடியே நடந்தான்.அம்மா சொல்வதுபோல் சாமி நினைச்சா எல்லாம் தருவாரா?நாந்தான் சாமியைக்  கும்பிடுறதே இல்லையே, இன்னிக்கி கேட்டுப் பார்ப்போம்.என்றபடியே நடந்தான்.

வழியில் ஒரு அம்மன்கோயில் இருந்தது.அந்தக் கொஇயிலுல்லெ நுழைந்து அம்மனின்முன் நின்றான் ரவி.தன கண்களை மூடி "சாமி அம்மா இன்னைக்கி மட்டும் எனக்கு புது சைக்கிளு  ஓட்டக் கெடச்சா, உன்னை நம்புறேன். தெனமும் உன்னைக் கும்பிடுறேன்.இனி என்ன வேணுமின்னாலும் உன்னையே கேட்பேன் என் அப்பா அம்மாவைத் தொந்தரவு செய்ய மாட்டேன்.என் ஆசையை நிறைவேத்தி வெச்சுடு."என்று வேண்டிக் கொண்டு பள்ளிக்கு விரைந்தான்.

வேகமாக நடையைப் போட்டவன் முன்னால்  ஒரு பெரியவர் தடாலென்று சரிந்து விழுந்தார்.சட்டென்று பயந்தபடி நின்று விட்டான் ரவி.அருகே நடந்து போய்க்கொண்டு இருந்தவர்கள் அவரைத் தாங்கிப் பிடித்து நீர் கொடுத்து எழுப்பினர் அவர் மயக்கமாக கிடந்தார். ரவியும் வேடிக்கை பார்த்தபடி அருகே நின்றான்.ஒருவர் மயக்கமாகக் கிடந்தவரின் சட்டைப்பையைப் பார்த்தார். அதில் அவரது வீட்டு விலாசம் இருக்கவே அருகே நின்றிருந்த ரவியை அழைத்து "தம்பி, இந்த விலாசம் தெரியுமா உனக்கு?"என்றதும் ரவி தெரியும் என்று தலையை அசைத்தான்.
"அப்படீன்னா, இந்தா இந்த சைக்கிளை எடுத்துட்டுப்போய் அவங்க வீட்டிலே தாத்தா மயக்கமா இருக்காரு.ஆசுபத்திரிக்குக் கூட்டிட்டுப்போயிருக்காங்கன்னு சொல்லிட்டு வாப்பா"
ரவி மிகுந்த ஆவலோடு அந்த சைக்கிளை எடுத்துக் கொண்டு நான்கு தெரு தாண்டிச் சென்றான்.போகும்போதே ஆஹா, புதுசைக்கில் ஓட்டற சொகமே தனிதான்.காலைலேதான் நம்ப அம்மன் கோயிலிலே சைக்கிள் ஓட்டக் கிடைக்கணும்னு வேண்டிக்கிட்டேன். இதையே சொந்தமா வேணும்னு கேட்டிருந்தா சாமி குடுத்திருக்குமே.
அம்மா சொன்னது நெசந்தான். இனி எதுவும் வேணுமின்னா நாம சாமியைத்தான் கேக்கோணும்
நம்ம அவ்வையார் தெய்வம் இகழேல்னு சொல்லியிருக்காரே.இனிமே தினமும் கோயிலுக்குப் போயி நல்லாப் படிக்கணும் பெரிய பணக்காரனா ஆகணும்னு வேண்டிக்கணும் என்று முடிவு செய்து கொண்டு கன்னத்தில் போட்டுக் கொண்டான் ரவி.










--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayeerukman
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

புதன், 24 ஏப்ரல், 2013

திருக்குறள் கதைகள்- குணம் நாடுதல் பெருங்குணம்.

பரிமளம் என்னும் ஒரு சிறுமி இருந்தாள்  அவளுக்கு பத்து வயதுதான் இருக்கும்.அவள் அப்பா வங்கியில்  

பெரிய பதவி வகித்து வந்தார்.அத்துடன் பரிமளம் அவரின் செல்லப் பெண்.எனவே அவள்  கேட்டதையெல்லாம் 

வாங்கித் தருவார். 

அவளும் தேவையற்றதைக் கேட்காமல் தனக்கு எது தேவையோ அதை மட்டும் கேட்டுப் பெறும் 

குணமுடையவளாக இருந்தாள்.அதனால் இந்த அவளின் நல்ல குணத்தை அறிந்திருந்த அவளின் தந்தை அவள் 

எது கேட்டாலும் காரணம் கேட்காமல் வாங்கித் தருவார்.

ஒருமுறை பொங்கல் பண்டிகை வந்தது.பரிமளத்திற்கு அவள் அப்பா பட்டுப் பாவாடை வாங்கித் தருவதாகச் 

சொல்லி கடைக்கு அழைத்துச் சென்றார்.ஆனால் கடைக்குச் சென்றதும் பரிமளம் தனக்கு ஒரு பட்டுப் 

பாவாடைக்குப் பதில் மூன்று சாதாரணப் பாவாடை வாங்கித் தருமாறு கேட்டுக் கொண்டு அதேபோல் 

வாங்கிவந்தாள்.

தன மகள் பட்டுப் பாவாடை கட்டிப் பார்க்க ஆசைப்பட்ட அவளின் அம்மா பரிமளத்தைக் கடிந்து கொண்டார். 
ஆனால் புன்னகையையே பதிலாகத் தந்து விட்டு அந்த உடைகளை வாங்கிச் சென்று விட்டாள் பரிமளம்.
மறுநாள் பொங்கல் பண்டிகையன்று பரிமளத்தின் பள்ளித் தோழிகள் அவள் வீட்டுக்கு வந்தனர்.அவர்களை உபசரித்து அமரச் சொல்லி பொங்கல் வடை கரும்பு பணம் முதலியன கொடுத்து மகிழ்ச்சியுடன் அனுப்பினாள்  பரிமளம்.அவளுடன் படிக்கும் வள்ளிக்கு தான் வாங்கிவந்த உடைகளில் ஒன்றைக் கொடுத்தாள் . வள்ளியின் முகத்தில் அப்போது தோன்றிய  மகிழ்ச்சியையும் நன்றிக் கண்ணீரையும் கண்டு பரிமளத்தின் பெற்றோரே மனம் நெகிழ்ந்தனர்.
அவளது இந்தப் பண்பைப் பார்த்து அவளின் பெற்றோர் மிகவும் பெருமைப் பட்டனர்.மகளின் இயற்கையான உயர்ந்த பண்பைக் கண்டு அவர்கள் மனம் மகிழ்ச்சியடைந்தது.பரிமளமும் தன பெற்றோர் தனக்குத் துணையாக இருப்பதை உணர்ந்து மிகவும் மகிழ்ந்தாள்.
இவளது இந்த உதவும் பண்பை தனக்கு சாதகமாகப் பயன் படுத்திக் கொள்ள நினைத்தாள் ஜோதி என்ற பள்ளித் தோழி.
அவள் அடிக்கடி தன உறவுக்காரப் பெண் ஒருத்தி மிகவும் கஷ்டப் படுவதாகக் கூறி பரிமளத்திடம் உதவி பெற்று வந்தாள். எப்போதும் முகம் சுளிக்காமல் அவள் கேட்ட உதவிகளைச் செய்து வந்தாள்  பரிமளம்.
இவளின் தோழிகளில் ஒருத்தி ஜோதியின் கெட்ட எண்ணத்தை அவளிடம் கூற அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாத பரிமளம் 'எப்படியோ யாருக்கோ உதவி செய்யணும் அப்பிடின்னு நினைக்கிறாள் இல்லையா?அந்த நல்ல குணம் இருக்கு இல்லையா? அதுபோதும் எனக்கு.' என்று சொல்லிவிட்டு தொடர்ந்து உதவிகள் செய்து வந்தாள் .ஏதேனும் தேவைப் பட்டால் இப்போதெல்லாம் சில சிறுமியர் பரிமளத்திடம் கேட்காமல் ஜோதியிடம் கேட்டுப் பெறத் தொடங்கினர்.
நல்ல உள்ளம் படைத்த பரிமளம் எப்படியோ பிறருக்கு உதவ முடிந்தால் போதும் என்று வழக்கம்போல ஜோதிக்கு உதவி செய்து வந்தாள்.
ஒருமுறை ஜோதி 'ஒரு ஏழைப் பெண்ணின் வீடு தீப்பற்றிக் கொண்டது நாம் ஏதேனும் உதவணும் பரிமளா' என்று கூறி நிறைய உடைகள் கொஞ்சம் கணிசமான பணம் வேண்டும் என்று கேட்டுப் பெற்றாள். பரிமளமும் தன தந்தையாரிடம் கேட்டு வாங்கிவந்து ஜோதியிடம் கொடுத்தாள்.
பல நாட்களாக சேமித்த பணம் ஜோதியிடம் இருந்தது.பணம் சேர சேர ஜோதியின் ஆசையும் அதிகமாயிற்று. ஏழைக்கு வேண்டும் என்று கேட்டுப் பெற்ற உடைகளைக் கூட ஜோதி கடையில் விற்றுப் பணமாக்கிக் கொண்டாள் 
அந்தப் பணத்தை மறைத்து வைத்துக் கொள்வதிலும் இன்னும் பணம் சேர்ப்பதிலும் கவனமாக இருந்ததால் ஜோதிக்கு  படிப்பில் கவனம்  குறைந்தது.
அரையாண்டுத் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது.அன்று தேர்வு எழுத ஜோதி பள்ளிக்கு வரவில்லை.காரணம் கேட்டபோது அவள் தந்தையாரை காவலர் பிடித்துச் சென்றதாகக் கூறினார்கள்.அவர் ஒரு கடையில் கணக்கெழுதும் வேலையில் இருந்தார். அங்கு பணம் திருட்டுப் போய் விட்டதாகவும் ஜோதியின் வீட்டில் அந்தப் பணம் கண்டெடுக்கப் பட்டதாகவும் கூறினார்கள்.
அதனால் அவரைக் கைது செய்து காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விட்டார்கள் காவலர்கள் 
அது என்பணம் என்று ஜோதி எவ்வளவு சொல்லியும் அதை நம்பவில்லை காவல் அதிகாரி.
இந்த செய்தி காதில் விழுந்தவுடன் பரிமளம் தன தந்தையை அழைத்துக் கொண்டு காவல்நிலையம் சென்றாள்..
அங்கே அழுதுகொண்டு நின்றிருந்த ஜோதியையும் அவள் தாயாரையும் பார்த்து ஆறுதல் கூறினாள் 
தன்னுடன் இரண்டு தோழிகளையும் அழைத்து வந்திருந்தாள்  பரிமளம்.
நேரே காவல் அதிகாரியிடம் சென்றாள் 
அவரை வணங்கினாள் அவர் என்னம்மா?என்றதும் பேசத் தொடங்கினாள் 
"ஐயா, நாங்கள் ஜோதியுடன் படிக்கிறோம்.அவர்கள் வீட்டில் நீங்கள் கண்டெடுத்த பணம் நாங்கள் சேர்த்த பணம்.கொஞ்ச நாள் முன்னேதான் ஒரு விபத்தில் சிக்கிய பெண்ணுக்கு உதவ நாந்தான் ஆயிரம் ரூபாய் வரை என் தகப்பனாரிடம் கேட்டுக் கொடுத்தேன்.அதனால் அது திருட்டுப் பணம் இல்லை.நாங்கள் சேர்த்த பணம். அத்துடன் ஜோதிதான் பலருக்கும் உதவி செய்கிறாள் அதனால் அவளிடமே  இந்தப் பணத்தையும் கொடுத்து ஏழைக்கு உதவுமாறு சொன்னேன்.எங்கள் தந்தையாரையும் கேட்டுப் பாருங்கள்."
பரிமளத்தின் துணிவான பேச்சைக் கேட்டு காவலர் மனம் மாறினார்.ஜோதியின் தந்தையாரை விடுவித்து அனுப்பினார்.அத்துடன் ஏழைகளுக்கு உதவும் நற்பண்புடைய ஜோதியையும் பாராட்டினார்.
தவறு செய்து வந்த ஜோதியை புகழேணியில் ஏற்றிவிட்டாள்  பரிமளம்.
கண்களில் நீருடன் நன்றிப் பெருக்குடன் பரிமளத்தின் கைகளைப் பிடித்துக் கொண்டு கண்ணீர் விட்டாள்  ஜோதி.
மறுநாள் பள்ளிக்கு வந்த பரிமளத்தை சூழ்ந்து கொண்ட பிற தோழிகள் "உன்னை ஏமாற்றிப் பணம் பறித்துவந்த ஜோதிக்கு நீ நல்ல பெயரைத் தேடித் தந்து விட்டாயே பரிமளா "என்ற போது பரிமளம் சிரித்தாள் 
"அவள் நல்ல குணம் உங்களுக்குத் தெரியவில்லை.எவ்வளவு கஷ்டப் பட்டு சேமித்திருக்கிறாள்.
இதேபோல எல்லோருக்கும் சேமிக்கும் குணம் வளரவேண்டும் என்கிற எண்ணத்தை  எல்லோரும் கற்றுக் கொள்ளுங்கள் யாரிடமும் உள்ள நல்லதைப் பார்க்கணுமே தவிர குறைகளைப் பார்க்கக் கூடாது.
அந்த வகையில் ஜோதி ஒரு நல்லபெண்" என்று கூறியதை அனைவரும் ஒப்புக் கொண்டாலும்
" நீ எல்லோரிடமும் உள்ள நல்லதையே பார்க்கிறாய் பரிமளா, உனது இந்த பண்பும் எங்களுக்கு வேண்டும்" என்று சொன்னதைப் புன்னகையோடு ஏற்றுக் கொண்டாள் பரிமளம்.
ஜோதி பள்ளிக்கு வந்ததும் நேரே பரிமளத்திடம் சென்றாள் அதுவரை அவளை ஏமாற்றிச் சேர்த்த பணத்தை பரிமளத்திடம் சேர்த்தாள் .
  "என் குற்றத்தையும் குறையையும் பாராமல் அதிலும் நிறைவைப் பார்த்த உன் நல்ல குணம் தெரியாமல் தவறு செய்துட்டேன்.என்னை மன்னிச்சுடு. இனிமேல் நாம் ரெண்டு பெரும் சேர்ந்து மற்றவருக்கு உதவி செய்வோம்.முதலில் இந்தப் பணத்தைத் தலைமையாசிரியரிடம் கொடுத்து ஏழைப் பிள்ளைகளுக்குத் தேவையானதை வாங்கித் தரச் சொல்வோம் வா"என்று பரிமளத்தின் கையைப் பற்றிக் கொண்டு ஓடினாள்  ஜோதி..
                     " குணமநாடி  குற்றமும்   நாடி  அவற்றுள் 
                       மிகைநாடி   மிக்க    கொளல் "

என்ற வள்ளுவரின் கருத்தமைந்த பண்பை  பரிமளத்திடமிருந்து நாமும் கற்றுக் கொள்வோம்.

ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

புதன், 3 ஏப்ரல், 2013

thirukkural kadhigal -- முக்திக்கு வித்து


முக்திக்கு வித்து 

பாண்டவருக்கும் துரியோதனாதியர்க்கும் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீரன் படைக்குத் தலைமை தாங்கிக் கொண்டிருந்தனர். கௌரவர்  படைக்கு அன்று கர்ணன் படையை நடத்தத் தயாரானான்.இந்தச் செய்தியைக் கண்ணன் அறிந்தான்.பாண்டவர் தாயான குந்திதேவியைத் தேடிச் சென்றான்.
அவளின் நலம் விசாரித்துப் பின் பேசினான்.
"அத்தை, உங்களின் மூத்த புதல்வனைப் பற்றிய செய்தி ஏதேனும் தெரிந்ததா?"
"அதை இப்போது ஏன் நினைவு படுத்துகிறாய் கண்ணா?"
"காரணம் இருக்கிறது. உங்கள் மூத்த மகன்தான் அந்தக் கர்ணன்.இதைத் தெரிந்து கொண்டுதான் தங்களிடம் சொல்ல வந்தேன்.நீங்களே இதை நேரில் சென்று பரீட்சித்துப் பாருங்கள்" என்றான் கபடமாக.
உடனே தன மூத்த மகனைக் காணப் புறப்பட்டு விட்டாள் குந்திதேவி.
"சற்று இருங்கள் அத்தை.அவன்தான் தங்களின் மூத்த மகன் என்று தெரிந்தபின் அவனை பாண்டவர் பக்கம் வந்து சேர்ந்து விடச் சொல்லுங்கள். அவன் ஒப்புக் கொள்ள மாட்டேன் என்றால் இரண்டு வரங்களையாவது வாங்கி வாருங்கள்."
"வரமா? நான் கேட்பதா?"என்று தயங்கினாள்  குந்தி.

"ஆம் அத்தை.கர்ணன் சுத்த வீரன் அவனுக்கு இணையானவன் அர்ஜுனன் ஒருவன்தான்.எனவே அர்ஜுனன் தவிர வேறு யாருடனும் போரிடக் கூடாது.அத்துடன் அவனிடமுள்ள நாகாஸ்திரத்தை அர்ஜுனன் மீது  ஒருமுறைக்கு மேல் மறுமுறை  ஏவக் கூடாது. என்ற இரு வரங்களை மட்டும் பெற்று வாருங்கள்."என்றான் 

குந்தியும் சம்மதித்தாள்.மகனைக் காண ஆவலுடன் சென்றாள் 

கர்ணன் அவளை வணங்கி வரவேற்றான்.அவள் தன்னை மகனே என அழைத்தது கேட்டு மகிழ்ந்தான். தன்னிடமிருந்த பட்டுச் சேலையைக் காட்டி குந்தி அதைத் தன மீது போர்த்துக் கொண்டு அழுததைக் கண்டு அவளே தன தாய் எனக் கண்டு கொண்டான்.மனம் மிக மகிழ்ந்தான்.வெகுநேரம் கடந்தபின் குந்தி,
"மகனே நீ பாண்டவருக்கு மூத்தவன்.குருட்சேத்திரப் போரில் பாண்டவர் வெற்றி பெற்றபின் நீயே இந்த நாட்டுக்கு மன்னனாக முடிசூடவேண்டியவன்.கௌரவரை விட்டு பாண்டவர் பக்கம் வந்து விடு.உன் தம்பிமாரான தருமன் முதலானோர் மிகவும் மகிழ்வார்கள்."என்று மெதுவாக கேட்டுக் கொண்டாள்.

அவள் மடியில் படுத்திருந்த கர்ணன் விருட்டென எழுந்தான்."தாயே, என்ன வார்த்தையம்மா கூறினீர்கள்., துரியோதனன் என் உயிரினும் மேலானவன்.மானம் காத்த மாமனிதன்.இன்னுயிரினும் மானம் மேலானதன்றோ மன்னனுக்கு?நானோ நேற்றுவரை அனாதையாக இருந்தவன்.தேரோட்டிமகன் நான்.மன்னர் சபையில் என் மானம் 
கா த்து என்னை அங்கதேசத்தின் மன்னன் என்று அனைவரிடமும் கூறி என்னைத் தலை நிமிர வைத்தவன் அல்லவா அம்மா அவன்?அவனை எப்படிப் பிரிவேன். என் உயிர் கூட அவனுக்குத் தானே சொந்தம்?"

"கர்ணா, உன் உடன் பிறந்தவருடன் சேர்ந்து இருக்க உனக்கு விருப்பமில்லையா?"

"அம்மா, இதைவிடுத்து வேறு என்ன வேண்டுமானாலும் தருகிறேன் கேளுங்கள் ஆனால் நன்றி மறக்கும் செயலை மட்டும் செய்யச் சொல்லாதீர்கள். என்னை மன்னித்து விடுங்கள் அம்மா.துரியோதனனின் அன்பை நான் மறந்தால் எனக்குப் பெரும் பாவம் மட்டுமல்ல பழியும் வந்து சேரும்."

"அப்படியானால் நீ அர்ஜுனனைத் தவிர வேறு யாரையும் கொல்லக்  கூடாது. நாகாஸ்திரத்தை அர்ஜுனன் மீது ஒருமுறைக்கு மேல் பிரயோகிக்கக் கூடாது.இந்த இரண்டு வரங்களைத் தருவாயா?"

"நிச்சயமாகத் தருகிறேன். தாங்களும் எனக்கொரு வரம் தரவேண்டும்."

"கேள் மகனே"

 "போர்க்களத்தில் நான் இறந்து விட்டால் தாங்கள் என்னை மடியில் வைத்து மகனே என்று கூவி அழவேண்டும் இந்த உலகுக்கெல்லாம் நான் தங்கள் மகன் என்ற உண்மையைப் பறைசாற்றவேண்டும் நான் இறக்கும் வரை இந்த  உண்மையை யாரிடமும் தெரிவிக்கக் கூடாது. இந்த வரத்தை எனக்குத் தாங்கள் தரவேண்டும் அம்மா."

கண்களில் கண்ணீருடன் குந்தி"அப்படியே செய்கிறேன் கர்ணா,"என்றபடியே திரும்பி இருப்பிடம் வந்து சேர்ந்தாள் 

தம்பியரானாலும் தாயானாலும் கர்ணனுக்கு  துரியோதனனின் நன்றிக்கடனுக்கு முன் எதுவும் முக்கியமல்ல.

இவனது இரண்டு முக்கியமான செயல்களாலேயே இறைவனின் அன்புக்குப் பாத்திரமானான்.
இவனது நன்றி மறவாமை.மற்றொன்று அள்ளிக் கொடுக்கும் வள்ளல்தன்மை.

இந்தப் பண்புகளாலேயே இதிகாசத்தில் இவன் போற்றப் படுகிறான்.வள்ளுவரின் குறளுக்கும் எடுத்துக் காட்டாகத் திகழ்கிறான்.

                                        "எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை 
                                          
                                          செய்நன்றி கொன்ற மகற்கு."


 கர்ணனின் முக்திக்கு அவனது நன்றி மறவாத் தன்மையே வித்தாக இருந்தது என்பதை நாமும் ஒப்புக் கொள்ளத்தானே வேண்டும்.




ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

வெள்ளி, 22 மார்ச், 2013

என் பேத்தியின் திருமணம்

 என் பேத்தியின் திருமணம் பற்றிய விமரிசனம்.
கடந்த பிப்ரவரி மாதம் 9--ஆம் தேதி அமெரிக்க மாப்பிள்ளையும் அவரது பெற்றோர் நண்பர்கள் என எட்டுபேர் சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கினர். அவர்களை ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்க வைத்துவிட்டு இல்லம் திரும்பினோம். 12---ஆம் தேதி காலை எட்டு மணிக்கு அனைவரும் திருமண மண்டபத்திற்கு வந்து சேர்ந்தனர்.அவர்களை மாலை மரியாதையுடன் வரவேற்றனர் பெண்வீட்டார்.அவர்களை கவனித்துக் கொள்ள பெண்ணின் சித்தப்பா கூடவே இருந்தார்.அவரும் சிகாகோவில் வசிப்பவர். அமெரிக்க பழக்கங்கள் அறிந்தவர்.
                              எட்டு மணிக்கு எங்கள் குல முறைப்படி (மாத்வா )  ஆச்சாரியார் மந்திரங்கள் ஓதி நாந்தி தேவுரு சமாராதனை பாதபூஜை என்று அனைத்தையும் மிகவும் அக்கறையோடு மாப்பிள்ளை வீட்டார் கவனித்தனர்.பனிரெண்டு மணிக்கு சுமங்கலி பிரார்த்தனையின்போது மாப்பிள்ளையின் தாயார் திருமதி மார்த்தா ரே உடன் இருந்து எல்லாவற்றையும் கேட்டுத் தெரிந்து கொண்டார்.
                              மாலையில் மூன்று மணிக்கு முன்பாகவே ஜானவாசம் தொடங்கியது. பெண்பார்க்கும் வைபவத்தில் வைக்கப் பட்டிருந்த பொருட்களை ஆச்சரியமும் மகிழ்ச்சியும் பொங்கப் பார்த்தனர்.அவர்கள் அனைவரும் நமது நாட்டுப் பட்டுப் புடவை உடுத்தி தலையில் மல்லிகை சூடியிருந்தது மிகவும் அழகாக உள்ளது என்று அனைவரும் பாராட்டியபோது மகிழ்ச்சியுடன் அதை ஏற்றுக் கொண்டு புன்னகைத்தனர்.
                              திருமதி மார்த்தாவும் திரு ரே அவர்களும் மிகவும் கஷ்டப்பட்டு கீழே அமர்ந்து மிகவும் அக்கறையுடன் ஆச்சாரியார் சொன்னபடி செய்து கொண்டு வந்தனர்.பெண்ணுக்குப் பொட்டு வைத்து பூமுடித்து புடவை கொடுத்து பின் அவர்கள் வாங்கி வந்த நகையை அணிவித்தனர்.
அதேபோல் மாப்பிள்ளையை அமரவைத்து அவருக்கும் பாண்ட்டு ஷர்ட் கொடுத்து செயின் மோதிரம் போட்டபின் விளையாடல் சாமான்கள் ஒவ்வொன்றாகக் கொடுக்க அவர்கள் வாங்கி வைத்தனர்.அதன்பின் அனைவரும் டிபன் சாப்பிட்டபின் அலங்காரம் செய்துகொண்டு வரவேற்புக்குத் தயாரானார்கள்.
                             திருமண வரவேற்புக்கு உறவினர்களும் நண்பர்களும் வந்திருநதனர்.இரவு விருந்து  கேண்டில் லைட் டின்னர் என்று சொன்னார்கள்.வட்ட மேஜையில் நடுவே அலங்கார மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் குடும்பமாக அமர்ந்து விருந்து உண்டார்கள். பார்க்க அழகாக இருந்தது.அனைவரும் விரைவாகவே தூங்கப் போய்விட்டார்கள். அதற்குமேல் ஐந்து சுமங்கலிகள் அமர்ந்து கருகமணியும் தாலிப் பொட்டும் கோர்த்து மங்கல நாண்  கொர்த்துவைத்தனர்.
                              மறுநாள் காலை நான்கு மணிக்கே பெண்ணை அமரவைத்து மங்கள ஸ்நானம் செய்வித்து கௌரி பூஜையில் அமரவைத்த்னர்  
சரியாக ஆறுமணிக்கு மாப்பிள்ளை வீட்டார் மண்டபத்திற்குள் நுழைந்தனர்.மாப்பிள்ளைக்கு காசியாத்திரை அலங்காரம் செய்தனர்.காசியாத்திரை செல்லவேண்டும் எனக் கூறியபோது நான் திருமணத்திற்கல்லவா வந்துள்ளேன் என்னை ஏன் காசியாத்திரை அனுப்புகிறீர்கள் எனக் கேட்டபோது அனைவரும் சிரித்தபின் ஆச்சாரியார் விளக்கினார்.
                               பெண்ணின் தாயார் மாப்பிள்ளைக்கு குங்குமம் வைத்து கண்மை இட்டு அலங்கரித்தபின் கையில் விசிறியும் தோளில் பையுமாக 
காசியாத்திரை சென்று வந்தார்.ஆரத்தி எடுத்தபின் நேராக மாப்பிள்ளை மணமேடைக்கு அழைத்துச் செல்லப் பட்டார்.அந்தரபட்டா  என்று சொல்லப்பட்ட திரை விரிக்கப்பட்டது. கௌரி பூஜையில் இருந்த மணப்பெண்ணை மாலையிட்டு கைபிடித்து அவளின் தாய்மாமன் மணமேடைக்கு அழைத்து வந்தார். மங்களாஷ்டகம் சொல்லி முடித்தபின் சீரகமும் வெல்லமும் இருவரும் ஒருவர் மீது ஒருவர் தூவினார்கள்.பின்னர் கன்னிகாதானம், அரிசி போடுதல், மாலை மாற்றுதல் எல்லாம் முடிந்தது. முஹூர்த்தப் புடவை மேல் தேங்காய் மஞ்சள் குங்குமம் அதன்மீது திருமாங்கல்யம் வைத்து அனைவரிடமும் ஆசீர்வாதம் வாங்கி வந்தனர்.பின்னர் ஆச்சாரியார் மாங்கல்யம்......தந்துனானேனா   என்று மந்திரம் ஒத மாப்பிள்ளை ஜேசன் மணமகள் சினேகாவின் கழுத்தில் மங்கல நாண்  பூட்டினான். அனைவரும் மலரும் அட்சதையும் தூவி ஆசி வழங்கினர்.
இவ்வாறாக சினேகா ஜேசன் திருமணம் இனிதே நடந்தது.அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர்களானாலும் இந்தியாவுக்கு வந்து இந்திய முறைப்படி தன மகனுக்கு திருமணம் செய்து கொண்ட ரே, மார்த்தா தம்பதிகளை அனைவரும் பாராட்டினர்.அவர்களும் நம் கலாச்சாரத்தைத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டியதோடு அதை அந்த இரண்டு நாட்களும் கடைப் பிடித்த அந்த நாகரீகத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

பின் வரும் புகைப் படங்கள் மூலம் திருமணம் எப்படி நடந்துள்ளது என்பதை அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்.
என் பேத்திக்கு அனைவரும்  நல்லாசி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Photo
Like ·  ·  · Tuesday at 6:00pm · 
--






ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

வியாழன், 21 மார்ச், 2013

மகளிர் தினம்.

மகளிர் தினம்.

கடந்த 16-ம் தேதி அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தினரால் மகளிர் தின விழா சந்திரசேகர் திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.அவ்வமயம சிறப்பான மகளிரைப்  (நீலாம்பிகை, ருக்மணி அருண்டேல், தில்லையாடி வள்ளியம்மை, வை.மு.கோதைநாயகி முதலியோர்) பற்றி திருமதிகள் சாரதா நம்பியாரூரான், பர்வீன் சுல்தானா ஹேமா சந்தானராமன் உள்ளிட்ட  ஆறு மகளிர் பேசினார்கள்.இந்த மேடையில்  அடியேனும்  75 அகவை கண்ட மூத்த எழுத்தாளர் என்று .மதுரை நகர நீதிபதியாக விளங்கும் திருமதி வாசுகி அம்மையாரின் பொற்கரங்களால் பொன்னாடை போர்த்தப் பட்டு கௌரவப் படுத்தப் பட்டேன். எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் திரு விக்ரமன் அய்யா அவர்களுக்கும், செயலாளர் அன்புச் சகோதரி திருமதி வாசுகி கண்ணப்பன் அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

வெள்ளி, 8 மார்ச், 2013

102--திருக்குறள் கதைகள்.-காலத்தினால் செய்த நன்றி.

செல்லப்பன் ஒரு தொழிற்சாலையில் பணி புரிந்து வந்தான்.அவனுக்கு ஒரு மகன் இருந்தான்.ரவி என்று பெயரிட்டு மிகவும் செல்லமாக வளர்த்து வந்தான்.அவனுக்கு பத்து வயதுதான் இருக்கும்.
செல்லப்பனுக்கு தன மகன் மீது கொள்ளை பிரியம்.தினமும் அருகில் இருக்கும் ரொட்டிக் கடையில் ரொட்டி வாங்கிக்கொடுத்து அவன் தின்ற பிறகே வேலைக்குச் செல்வான். ரவியும் அப்பாவின் மடியில் அமர்ந்து கொண்டு ரொட்டி தின்றுவிட்டுப் பள்ளிக்குச் செல்வான்.
ஒருநாள் தொழிற்சாலைக்குச் சென்ற செல்லப்பன் விபத்தில் அடிபட்டு இறந்துவிட்டார்.
அவன் அம்மாவோ ராணிமாதிரி வாழ்ந்தவள் இப்போது கணவன் செய்த கூலிவேலைக்குச் செல்லத் தொடங்கினாள். சிலநாட்கள் வரை தன கணவன் செய்தது போல் மகனுக்கு ரொட்டி வாங்கிக் கொடுத்தாள். அவளுக்கு உடல்நலம் பாதிக்கப் பட்டதால் வேலைக்குச் செல்ல முடியவில்லை.அதனால் ரொட்டி வாங்கிக் கொடுக்க இயலவில்லை.ஆனால் சிறுவனான ரவிக்கு இதெல்லாம் புரியாது. அவன் தினமும் ரொட்டிக் கடைமுன் சென்று நின்று அழுதுகொண்டு இருப்பான்.
ஒருநாள் அந்த ரொட்டிக் கடை முதலாளி அவனிடம் ஒரு ரொட்டியைக் கொடுத்தார். மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்டான்.மறுநாளும் அங்கு வந்து நின்றான்.அந்த முதலாளி அவன் கையைப் பிடித்து அருகே அமர்த்திக் கொண்டார்.
"தம்பி ரவி, நான் தினமும் உனக்கு ரொட்டி தாரேன்.தின்னுட்டு நீ பள்ளிக்கூடம் போகணும்.அங்கே உனக்கு மதியச் சாப்பாடு போடுறாங்க இல்லே 
அதைச் சாப்பிட்டுட்டு நல்லாப் படிக்கோணும்.உனக்குப் பதினெட்டு வயசானப்புறம் நீ ப்ளஸ் டூ முடிச்சப்புறம் என் கடையிலேயே வேலை செய்யணும்.செய்வியா?"என்றார். தினமும் ரொட்டி கிடைக்கும் என்ற மகிழ்ச்சியுடன் தலையை ஆட்டினான் ரவி.ரொட்டியை வாங்கித் தின்றுவிட்டு பரபரப்புடன் வீட்டுக்குள் நுழைந்தான். தன் நீலக் கால்சட்டையையும் வெள்ளைச் சட்டையையும் தேடிப்  போட்டுக் கொண்டான். நெற்றியில் திருநீற்றை இட்டுக் கொண்டு கையால் தலையை ஒதுக்கிக் கொண்டான்.மூலையில் கிடந்த தன பையையும் புத்தகங்களையும்  தேடி எடுத்துக் கொண்டவன் 'அம்மா, நான் இஸ்கூலுக்குப் போய்வாறேன்"  என்றபடியே ஓடினான். அவன் செயலைப் பார்த்துக் கொண்டிருந்த அவன் அம்மாவுக்கு மனம் மகிழ்ச்சியடைந்தது.
வருடங்கள் செல்லச் செல்ல ரவிக்குக் கல்வி அறிவோடு நல்ல ஒழுக்கமும் வளர்ந்தது.இப்போது அவன் பத்தாவது படிக்கும் மாணவன்.
மாலைநேரத்தில் பள்ளிவிட்டபின் ரொட்டிக்கடை முதலாளிக்கு உதவியாக இருக்கத் தொடங்கினான்.ஏனென்றால் தினமு ஓசியில் ரொட்டி வாங்கித் தின்ன அவன் மனம் இடம் கொடுக்க வில்ல.அவன் தன்மானத்தைப் பார்த்த அந்த முதலாளிக்கு அவன்மீது மிகுந்த மதிப்பு  ஏற்பட்டது.
நல்ல முறையில் பத்தாம் வகுப்புத் தேறிய ரவிக்கு அந்த முதலாளி பாராட்டுத் தெரிவித்ததோடு மேலே படிக்க உதவுவதாகக் கூறினார்.ஆனால் தன அம்மாவை நல்ல முறையில் காப்பாற்றவேண்டுமானால் வேலை செய்துதான் ஆகவேண்டும் என்ற ரவி அந்தக் கடையிலேயே வேலை செய்வதாகக் கூறிவிட்டான்.
அதை ஏற்றுக் கொண்ட கடை முதலாளி அவனுக்கு ஒரு சிறிய ரொட்டிக் கடை வைத்துக் கொடுத்தார். ஐந்தாண்டுகளில் ரவி நல்ல நிலைக்கு உயர்ந்தான்.அவனது அயராத உழைப்பும் நாணயமும்தான் அவனை உயர்த்தின.
அன்று ரவியின் கடை திறந்த ஐந்தாம் ஆண்டு விழா.கடை அலங்கரிக்கப்பட்டு வந்தவர்களுக்கு அமர இருக்கைகள் போடப்பட்டிருந்தன தனக்கு உதவி செய்து தன்னை உயர்த்திய முதலாளியை வணங்கி அவருக்கு மாலையிட்டு மரியாதை செய்தான் ரவி.
மிகவும் கூச்சத்துடன் அந்த முதலாளி,"ரவி இதென்னப்பா, எனக்குப் போயி மாலையெல்லாம்..." என்று கூறினார். 
ரவியோ அவர் கால்களில் விழுந்து வணங்கினான்.
"ஐயா, நீங்க இல்லேன்னா இன்னைக்கி நான் இல்லே."
"என்னப்பா ரவி,உன்னோட உழைப்பாலே நீ முன்னுக்கு வந்தே.என்னை எதுக்கு இப்படி உயர்த்தி வைக்கிறே?"
"ஐயா, நான் சின்னப் பையனா இருந்தப்போ நீங்க ரொட்டித் துண்டைக் குடுத்து பள்ளிக்கூடம் போன்னு  சொன்னதாலே நான் படிச்சேன்.
நல்ல விஷயங்களைக் கத்துக்கிட்டேன்.உங்ககிட்டேருந்து உழைப்பையும் கத்துகிட்டேன்.நீங்க என்னை அன்னிக்கி விரட்டி விட்டிருந்தா,ஒரு ரொட்டித்துண்டாலே நான் திருடனா ஆகியிருப்பேன்.இன்னைக்கி நான் உயர்ந்து நிக்க நீங்கதான் ஐயா காரணம்."
"என்னப்பா இது, ஒரு சின்ன உதவி செய்ததையா நீ இவ்வளவு புகழ்கிறே?"
"ஐயா, 
                   "காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும் 
                     ஞாலத்தின் மாணப் பெரிது."     அப்படீன்னு படிச்சிருகேனய்யா. என்னுடைய சின்ன வயசுல நீங்க செஞ்ச உதவி இந்த உலகத்தை விடப் பெருசுங்கய்யா."என்று கண்களில் நன்றிக் கண்ணீருடன் பேசினான் ரவி.
ரவியின் நன்றி பாராட்டும் பண்பையும் அவன் முதலாளியின் தகுந்த காலத்தில் உதவி செய்யும் குணத்தையும் மறவாமல் அவர்களைப் போல வாழ்ந்தால் வாழ்க்கை சிறப்பாக அமையுமல்லவா?





ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

ஞாயிறு, 13 ஜனவரி, 2013

pongal vaazhththu.

பொங்கல் வாழ்த்து.


அன்பு நெஞ்சங்களுக்கு என் இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
 இறையருளும் திருவருளும் கிடைக்கப் பெற்று அனைவரும் வாழ்வாங்கு வாழ்ந்திட 
இறைவனை வேண்டிக் கொள்கிறேன். பால் பொங்குவதுபோல் உள்ளம் மகிழ்ச்சியில் பொங்கட்டும்.பொங்கலைப் போல 
வாழ்வில் இனிமை  பெருகட்டும்.
அன்புப் பாட்டி,
ருக்மணி சேஷசாயி.






ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com