செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

94- திருக்குறள் கதைகள்..என்பும் உரியர் பிறர்க்கு

ஒருமுறை விருத்ராசுரன் என்ற அசுரன் பிரம்மாவைக் குறித்துத் தவமிருந்தான்.பல ஆண்டுகள் கடுந்தவமிருந்தான். அவனது தவத்திற்கு மெச்சிய பிரம்மா அவன் முன் தோன்றினார்.
மனமகிழ்ந்த விருத்ராசுரன் அவரை வணங்கி நின்றான்.
"விருதரா, உன் தவத்திற்கு மெச்சினேன். என்ன காரணத்திற்காக இந்தத் தவம் உனக்கு என்ன வேண்டுமோ கேள் "என்று அன்புடன் கேட்டார் பிரம்மா.
"சுவாமி, நான் என்றுமே சாகாதிருக்க அருள் செய்யுங்கள். இந்த வரம்தான் தேவை"என்றான் வேகமாக.
"விருதரா, உலகில் தோன்றியவை அனைத்துமே அழியவேண்டியது இயற்கை நியதி. அதை மாற்ற என்னால் மட்டுமல்ல மும்மூர்த்திகளாலும் ஆகாது.எப்படியெல்லாம் சாகக் கூடாது என்றுவேண்டுமானால் கேள். வரம் தருகிறேன்."என்றார் பிரம்மா.
சற்று சிந்தித்தான் அசுரன். பின்னர் "தேவா, நான் எந்த உலோகத்தாலான ஒரு ஆயுதத்தாலும் பஞ்ச பூதங்களாலும் உலகில் தோன்றிய எந்த உயிரினத்தாலும் நான் சாகக் கூடாது."என்று கேட்டுக் கொண்டான்.அப்படியே ஆகட்டும் என்று வரம் தந்து மறைந்தார் பிரம்மா.
பிரம்மாவின் இந்த வரத்தால் மிகவும் கர்வம் கொண்ட விருத்ராசுரன் அனைவரையும் கொடுமைப் படுத்த ஆரம்பித்தான்.யாராலும் அவனை வெல்ல இயலவில்லை.
மக்கள், ரிஷிகள் தேவர்களும் கூட அவனை வெல்ல முடியாமல் திகைத்தனர்.எந்த ஆயுதம் கொண்டு அவனைத் தாக்குவது சாகாவரம் பெற்ற காரணத்தால் அவனை வீழ்த்த இயலவில்லை.தேவர்கள் அனைவரும் சிவ பெருமானிடம் சென்று முறையிட்டனர். உலக உயிர்களின் துன்பம் கண்டு சிவன் அவர்களுக்கு அனுக்ரகம் செய்ய எண்ணினார்.தன் முன்னே பணிவுடன் நின்ற தேவேந்திரனைப் பார்த்து "தேவேந்திரா, மனமுவந்து யாரேனும் தனது எலும்பைக் கொடுத்தால் அதை ஆயுதமாக்கி அந்த அசுரனை நீ வென்று விடலாம்."என்றபோது மகிழ்ச்சியுடன் இந்திரன் "அப்படியே கொண்டு வருகிறேன் சுவாமி."என்று புறப்பட்டான்.
எலும்பைக் கொடுப்பார் யாரிருப்பார் என பூலோகம் முழுவதும் தேடி வருகையில் ஒரு மலை மீது ஒரு காலில் நின்றபடியே தவம் செய்யும் ஒரு ரிஷியைக் கண்டான்.அவரே ததீசி முனிவர்.
நேரே அவர் முன் சென்று நின்று கைதொழுதான்.வெகு நேரம் கழித்துக் கண் திறந்த ரிஷி ததீசி ஆச்சரியமாகப் பார்த்தார்.
"யாரது? தேவேந்திரனா என் முன் நிற்பது?"
"ஆம் மாமுனியே, தங்களால் ஆகவேண்டிய காரியம் ஒன்று இருக்கிறது."
"என்ன வேண்டும் சொல் தேவேந்திரா."
"சுவாமி, லோக க்ஷேமத்துக்காக ஒரு அசுரனை வதைக்க வேண்டியுள்ளது அதற்கு ஆயுதமாக உபயோகிக்க ஒரு மனிதரின் முதுகெலும்பு வேண்டும்.உலக மக்களின் நன்மை கருதி தவம் செய்யும் தாங்கள்தான் அதற்கு உதவ வேண்டும்"
ரிஷி புன்னகை புரிந்தார்."இந்த உடல் ஒரு நல்ல காரியத்திற்குப் பயன் படுமாயின் மிக்க மகிழ்ச்சி.நான் என் தவ வலிமையால் நெருப்பில் என் உடலை எரித்துக் கொள்கிறேன்.பின்னர் அந்த சாம்பலின் உள்ளே இருக்கும் என் முதுகெலும்பை நீ எடுத்துச் செல். உனக்கு ஆசிவழங்குகிறேன்."
என்று கூறித் தன் உடலை எரித்துக் கொண்டார்.அந்த்சாம்பலின் ஊடே இருந்த முதுகெலும்பை எடுத்துக் கொண்டு இந்திரன் சிவனை நாடிச் சென்று கொடுத்தார்.
அனைத்தையும் அறிந்த சிவன் ததீசி முனிவருக்கு கைலாச பதவி அளித்தார். தேவேந்திரன் கொடுத்த முதுகெலும்பை வஜ்ராயுதம் என்னும் ஒரு ஆயுதமாக ஆக்கித் தந்தார்.அதைக் கொண்டு படை நடத்தி வெற்றி பெறுவாய் என்றும் ஆசி வழங்கினார்.
அந்த எலும்பாலான ஆயுதமே வஜ்ராயுதம். அதைக் கொண்டு படை நடத்தி விருத்ராசுரனை அழித்தான் இந்திரன்.
அன்புடையவர்கள் தங்களின் எலும்பையும் மற்றவருக்குக் கொடுப்பார்கள் என்ற உண்மையை இந்த கதை மூலம் தெரிந்து கொள்ளலாம்.'
இதைத்தான் வள்ளுவரும்
                     "அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
                       என்பும் உரியர் பிறர்க்கு." என்று கூறியுள்ளார்.
அன்பில்லாதவர் எல்லாப் பொருள்களும் தமக்கே உரியன என நினைப்பார்.ஆனால் அன்புடைய உயர்ந்த மனிதர் தனது உடமையையும் பிறர்க்குக் கொடுப்பார். உடமை மட்டுமன்றி தம் உடலோடு சேர்ந்த எலும்பையும் பிறர்க்குக் கொடுப்பார் அன்புடையோர்.
இப்படிப் பட்ட மனிதர்கள் நம் வாழ்வின் வழிகாட்டிகளன்றோ?



ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com