ஞாயிறு, 13 மார்ச், 2011

62nd story குருவும் சீடனும்.

குருவும் சீடனும்.

ஒரு காட்டில் ஒரு குரு இருந்தார். அவருக்கு பல சீடர்கள் இருந்தனர். அவர்களுள் ஒரு சீடனுக்கு அடிக்கடி சந்தேகங்கள் தோன்றிக்கொண்டே இருக்கும்.

தன் குருவிடம் அதனைக் கேட்டுக் கொண்டே இருப்பான். குருவும் அவனுக்குப் புரியும்படி கூறி அவன் சந்தேகங்களைப் போக்கிக் கொண்டே இருப்பார். 

பல சமயங்களில் அவரது விளக்கங்கள் அந்த சீடனுக்குத் திருப்தியைத் தருவதில்லை. இருப்பினும் குருவுக்கு மரியாதை தரும் நிமித்தமாக 

மெளனமாக இருப்பான். புரிந்தது போலவும் தலையை அசைப்பான்.

குருவும் இதைப் புரிந்துகொண்டு புன்னகை செய்வார்.

வழக்கம்போல அந்த சீடனுக்கு ஒரு சந்தேகம் வந்துவிட்டது. அதைத் தன் குருவிடம் கேட்டான்.

"குருவே, இறைவன் பாதங்களைப் பற்றிக்கொண்டால் இந்த பவசாகரத்தைக் கடந்து விடலாம் என்கிறீர்களே அது எப்படி குருவே? எனக்குப் புரியும்படி 

கூறுங்கள்" என்றான் அந்த சீடன்.

குரு அந்த சீடனிடம் தன்னை இரவு தனிமையில் சந்திக்கும் படி கூறியனுப்பினார்.

இரவு வந்தது. குருவை நாடிச் சென்றான் அந்தசீடன். அவனைத் தன் முன்னே அமர்த்திக் கொண்டார் அந்த குரு.

" மகனே இப்போது நாம் இருவரும் வேறு ஒரு உயிராக மாறப் போகிறோம். அந்த உயிர் போகும் இடமெல்லாம் நீ உடன் வந்தால் உனக்கு உண்மை 

புரியும்" என்றார் அந்த குரு. சீடனும் அவர் சொல்லியபடியே தன் கண்களை மூடிக்கொண்டான்.

இப்போது குருவும் சீடனும் இரண்டு புழுவாக உருவெடுத்தனர். அவர்கள் இருந்ததோ ஒரு மலையின் உச்சி. அங்கே பல பயங்கர மிருகங்கள் உலவின.

இரண்டு புழுக்களின் அருகே ஒரு சிங்கம் கர்ஜித்துக் கொண்டு அமர்ந்திருந்தது. குருவான புழு சீடனிடம் அந்த சிங்கத்தின் காலில் ஏறி அமர்ந்துகொள்ளச் 

சொல்லியபடி தானும் ஏறிக் கொண்டார். சீடனும் அப்படியே செய்தான். 

"சீடனே நாம் இப்போது இந்த மலை உச்சியில் இருந்து அடுத்த மலை உச்சிக்குப் போகப் போகிறோம்."

"எப்படி குருவே?"

"பொறுத்திருந்து பார் "

சற்று நேரத்தில் சிங்கம் அடுத்த மலையிலுள்ள இரையைப் பார்த்தது. ஒரே பாய்ச்சலில் அடுத்த மலை உச்சியை அடைந்தது. 

குரு சீடனைப் பார்த்துக் கூறினார். "பார்த்தாயா. எவ்வளவு சுலபமாக மலையைக் கடந்தோம்!"

"குருவே, ஓரளவு புரிந்தது. இதுபோல  விண்ணைக் கடக்க இயலுமா?"

"கண்டிப்பாக முடியும்" என்ற குரு சற்று தூரம் நெளிந்தபடி சென்றார். சீடனும் அவரைப் பின்பற்றினான். அப்போது அங்கே ஒரு காட்சியைக் கண்டனர்.

ஒரு கருடன் இரையைக் கொத்திக் கொண்டிருந்தது.

"சீடனே! இந்த கருடனின் சிறகின் அடியில் மறைந்து கொள்." என்றபடியே குருவும் தன்னை சிறகில் மறைத்துக் கொண்டு அமர்ந்தார்.

சற்று நேரத்தில் கருடன் விண்ணில் பறக்கத் தொடங்கியது. 

சீடன் பயந்தான்."குருவே விண்ணில் பறந்தது போதும் கீழே இறக்குங்கள்."

"  பொறு சீடனே. அதோ அந்த ஆற்றின் அருகே எப்படியும் கருடன் இறங்கும். அப்போது இறங்கிவிடலாம்."

இப்போது கருடனிடமிருந்தும் இறங்கியாயிற்று. இப்போதும் மற்றொரு சந்தேகம் சீடனுக்கு. தன் எதிரே இருக்கும் நீண்ட ஆற்றைப் பார்த்தான்.

"குருவே, இந்தப் பெரிய ஆற்றை நாம் எப்படிக் கடப்பது?"

"அதோ அந்த ஓடக்காரனின் முண்டாசு இருக்கிறது பார். அதில் ஏறி மறைந்து கொள்." என்றபடியே குரு தானும் முண்டாசில் மறைந்து கொண்டார்.

சற்று நேரத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு படகு புறப்பட்டது.அக்கரையை அடைந்த படகோட்டி தரையில் இறங்கித் தன் முண்டாசை எடுத்து 

உதறிவிட்டு முகத்து வியர்வையைத் துடைத்துக் கொண்டான். அப்போது இரண்டு புழுக்களும் தரையில் வைக்கப்பட்டிருந்த ஒரு கயிற்றின் அருகே 

விழுந்தன.

அந்தக் காட்டுக்கு விறகுவெட்ட கோடாலியுடன் வந்த விறகுவெட்டியின் கையிலிருந்த அந்தக்  கயிற்றில் ஏறிக்கொண்ட குருவும் சீடனும் தாங்கள் 

வசிக்கும் காட்டுக்கு வந்து சேர்ந்தனர்.

அப்போது சூரியன் முளைத்துவிட்டதால் குரு கண்களைத் திறந்தார். சீடனைத் தட்டி எழுப்பிக் கேட்டார்..

"சீடனே, எத்தனை இடங்களுக்குப் போய் வந்தாய்?" 

"குருவே! நான் ஒரு சிறு புழுவாக இருந்தாலும் மலையையும் விண்ணையும் பெரும் நீர்ப்பரப்பையும் கடந்து என்னிடத்திற்கே வந்து சேர்ந்துவிட்டேன்.

இது எப்படியென்றுதான் புரியவில்லை."

"மகனே! ஒரு உயிர் இறைவனின் பாதங்களைப் பற்றிக் கொண்டால் எந்த இடரையும் கடக்கலாம் என்பதற்காகவே உனக்கு நான் இந்தக் காட்சியைக் 

காட்டினேன். ஒவ்வொரு இடத்திலும் உனக்குத் துணையாக வந்தது இறைவனின்  வேறு வேறு அவதாரங்களே. மலை உச்சியில் கண்ட சிங்கம் 

நரசிம்மமாகவும் கருடனின் உருவில் மகாவிஷ்ணுவும் ஓடக்காரன் உருவில் அந்த பராசக்தியும் விறகு வெட்டியாக  அந்த பரமேஸ்வரனும் நம்மைப் 

பாதுகாக்கக் காத்திருக்கிறார்கள். அவர்களின் பாதங்களைப் பற்றிக் கொண்டால் உலகத் துன்பங்களிலிருந்து கண்டிப்பாக மீளலாம்.

இப்போது புரிந்து கொண்டாயா மகனே!"

அனுபவத்தினால் ஏற்பட்ட அறிவினால் ஆண்டவனின் கருணையைப் புரிந்து கொண்ட சீடன் கண்ணீருடன் குருவின் பாதங்களைப் பணிந்தான்.

இறைவனின் மீது உண்மையான பக்தி செலுத்தி நம்பிக்கையுடன் அவனை நாமும் பணிந்து நற்கதி அடைய முயல்வோம்.

கடவுளை நம்பினோர் கைவிடப் படார் என்பதையும் தெய்வம் நமக்குத் துணை பாப்பா என்று சொன்னதையும் 

நாம் மறக்கலாகாது.





















ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com : email : rukmani68sayee@gmail.com