சனி, 1 ஆகஸ்ட், 2009

அன்பின் சக்தி - இரண்டாம் பகுதி

அன்பின் சக்தி - முதல் பகுதி

நாட்கள் பறந்தன. ராஜாவைச் சுற்றி ஒரு கூட்டம் கூடிக்கொண்டே இருந்தது. பத்து நாட்கள் வரைதான் ராஜாமோகம் அதிகமாக இருந்தது. பிறகு ஒவ்வொருவராக சோமுவைச் சுற்றத் தொடங்கினர். ராஜா தன் கையில் பிஸ்கட் சாக்லேட் என்று வைத்துக்கொண்டு கூப்பிட்டாலும் ஒதுங்கிச் சென்றனர்.ஏனென்று ராஜாவுக்கு விளங்கவில்லை.அவன் நண்பன் நாணாவைப் பார்த்து,"ஏண்டா நாணா! ஏன் சீனு, ரமேஷ், பாலு, ரங்கன் இவங்கெல்லாம் என்னை விட்டுவிட்டுப் போயிட்டாங்க. எவ்வளவு தின்பண்டம் வாங்கித்தந்தேன்?

இன்னும் என்ன வேணும்னாலும் வாங்கித்தரேன்னு சொல்லு. அவங்களையெல்லாம் கூட்டிட்டு வாடா!" என்றான் படபடப்பாக.

நாணா அலட்சியமாகப் பதில் சொன்னான்."போனாப்போறாங்க விடு.நாம ரெண்டு மூணு பேருதான் இருக்கோமே ஜாலியா இருக்கலாம் நீ ஏண்டா கவலைப் படுறே?"

அவன் கையில் ராஜா வாங்கிக் கொடுத்த ஐஸ் உருகி கை வழியே வழிய அதை வேக வேகமாக நாவால் நக்கியபடி பதிலளித்தான் நாணா. ராஜாவை கவலை லேசாக சூழத் தொடங்கியது. எப்படியாவது சோமுவிடம் அதிக நண்பர்கள் சேராமல் செய்து விட வேண்டும் என்ற எண்ணம் அவனை இரவு முழுவதும் தூங்க விடாமல் செய்தது.

ராஜா அன்று பள்ளிவிட்டு வரும்போதும் தன் நண்பன் நாணாவைச் சந்தித்தான். அவனுடன் ஆலோசனை செய்தபடி நடந்தான். நாணா சொன்னபடியே மறுநாள் சோமுவின் புத்தகப் பையைத் திருடி எடுத்துப் போய் பள்ளித் தோட்டத்துக் கிணற்றில் போட்டுவிட்டான். புத்தகப்பையைக் காணாத சோமு மிகவும் வருத்தத்துடன் வீட்டுக்கு வந்தான்.

அவனுடன் வந்த அவன் நண்பர்கள் ஒவ்வொருவரும்,"கவலைப் படாதே சோமு! உனக்கு என்னென்ன புத்தகம் தேவையோ அதை நாங்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புத்தகமாக நாங்கள் தருகிறோம். நீயும் படித்துப் புரிந்து கொண்டு எங்களுக்குச் சொல்லிக் கொடு. உன்னிடம் பாடம் கேட்கும்போது நன்றாகப் புரிவதோடு பயப்படாமல் சந்தேகங்களையும் கேட்டுக் கொள்ள முடிகிறது." எனக் கூறியபோது சோமு அனைவருக்கும் நன்றி சொல்லி அனுப்பி வைத்தான்.

நாட்கள் கடந்தன , இன்னும் பத்து நாட்களே ஆண்டுதேர்வுக்கு இருந்தன. சோமுவின் புத்தகங்கள் தொலைந்து போனதால் மாணவர்கள் தரும் புத்தகங்களை கடனாகப் பெற்றுப் படித்த சோமு இன்னும் அதிக கவனத்துடன் படித்தான். படித்ததை தன் நண்பர்களுக்கு அவர் கேட்கும்போதெல்லாம் விளக்கி சொன்னான். சோமுவின் பாடம் சொல்லும் முறைக்க்காகவும் அவனது நல்ல பண்பிர்க்காகவும் வகுப்பில் பாதிபேருக்கு மேல் சோமுவின் வீட்டில் மாலை நேரங்களில் கூடதொடங்கினர். அவரவருக்குத் தேர்வில் வெற்றிபெரவேண்டுமே என்ற கவலை வந்துவிட்டது .

அன்று மாலை ஆறு மணியிருக்கும். கணிதப்பாடத்தில் கடினமான கணக்கை விளக்கி சொல்லிகொண்டிருந்த சோமு அவன் பெயர் சொல்லி பெரியவர் அழைப்பதைப் பார்த்து எழுந்து நின்றான் .ராஜாவும் அவன் அப்பாவும் நின்றுருப்பதைப் பார்த்து கைகுவித்து அவருக்கு வணக்கம் சொன்னான். அங்கிருந்த ஒரு கிழிந்த பாயை மடித்துப் போட்டு அவரை அமரசொல்லி உபசரித்தான். அவன் அம்மா உள்ளே இருந்து நீர் மோர் கொண்டுவந்து கொடுத்து உபசரித்தாள். ராஜா நாணித் தலை குனிந்து நின்றிருந்தான். பெரியவர் பெரியசமியே பேசினார்.

"தம்பி சோமு! இதனை பைய்யங்கள் உங்க வீட்லயே இருக்கங்களே. அவங்களையெல்லாம் நீயே வீட்டுக்கு வாங்கனு கூப்பிடியா? அல்லது அவங்களாவே உன்னைத் தேடி வந்தாங்களா?"
அருகே நின்றிருந்த ரங்கன் , "நாங்களாதான் வந்தோங்க" என்றபோது கணக்கை போட்டு கொண்டிருந்த ரமேஷ் நிமிர்ந்தான். அவன் முகம் மகிழ்ச்சியால் மலர்ந்திருந்தது.

"சோமு! இப்போ செரியாப் போட்டுட்டேன் பார். விடை வந்திடுச்சு." கைகொட்டி மகிழ்ச்சி ஆரவாரத்துடன் சொன்னபடியே நிமிர்ந்தவன் பெரியவரை பார்த்து மௌனமானான். நோட்டை மட்டும் சோமுவிடம் தந்தான்.அதை வாங்கி பார்த்தார் பெரியசாமி. அதில் சோமு சொல்லிக் கொடுத்த கணக்குகள் எழுதப்படிருந்தன.

"இத்தனை பேர் உன் வீட்டிலே இருக்கிறார்களே! இவங்களோட பெற்றோர் இவங்களைத் திட்ட மாட்டாங்களா?" என்று சொன்னபோது , ரங்கன் இடைமறித்தான் ."எங்கள் வீட்டிலெல்லாம் பத்திரமா போய்வானு அனுப்புவாங்க."

பெரியசாமி தன் மகனைத் திரும்பிப் பார்த்துவிட்டு ஒரு பையனைக் கேட்டார். "ஏன் தம்பி! உனக்கு வாத்தியார் சொல்லிதருவதில்லையா? ஏன் சோமுவிடம் வந்து படிக்கிறாய்?"

"வாத்தியாரை விட சோமு சொல்றது நல்லாப் புரியுது. அதோட சந்தேகம் வந்தாலும் பயமில்லாம, தைரியமா கேக்க முடியுது. அதனால எங்க வீட்டிலெல்லாம் சோமு வீட்டுக்கு போனாதான் படிப்பே " ன்னு சொல்லி அனுப்பிடுவாங்க.

"ஐயா! எனக்கு தெரிஞ்சதை என் நண்பர்களுக்கு விளக்கி சொல்றதாலே எனக்கும் மறக்காம இருக்கு. பரீட்சையிலே நல்லா எழுத முடியுது. அதனால் கேக்குறவங்களுக்கு நான் மறுக்காம சொல்லி தர்றேன் . எல்லாரும் என் கூடவே மாலை நேரத்திலே கொஞ்சநேரம் விளையாடிட்டு எங்க வீட்டுலே கூடிப் படிப்பாங்க. வேற காரணம் எதுவுமில்லே ஐயா" பணிவுடன் சோமு கூறவே பெரியசாமி அவனைப் பார்த்து அன்புடன் புன்னகைத்தார்.

அவனை அருகே அழைத்து அன்புடன் அவனைத் தடவிக் கொடுத்தார். " சோமு, நீ ஏழை இல்லேப்பா, பெரிய பணக்காரன். அறிவும் பணிவும் யார்கிட்ட இருக்குதோ அவன்தான் செல்வம் உடையவன். யார்கிட்ட பிறருக்கு உதவணும் என்கிற எண்ணம் இருக்கோ அவனே உயர்ந்தவன். நீ உயர்ந்தவன் , செல்வந்தன். இனி நீயும் எனக்கு ஒரு மகன்போலதான். ராஜா! நீ சொன்னபடி சோமுகிட்ட மன்னிப்புக்கேள். போட்டியிலே நீ தோத்துட்டே" என்றபோது சோமு ஒன்றும் புரியாமல் திகைத்தான். "ஐயா! என்கிட்டே ராஜா ஏன் மன்னிப்பு கேட்கணும்னு சொல்றீங்க. அவன் எந்த தப்பும் பண்ணலியே" என்றான்.

"உனக்குத் தெரியாது சோமு, உன் புத்தகப்பைய்யை இவன் கூட்டாளி நாணா கூட சேர்ந்துகிட்டு கிணத்துக்குள்ளே போட்டுட்டு உன்னைப் படிக்கவிடாம செய்யப் பார்த்தாங்க. ஆனா அதுவும் நடக்கல", என்று சொல்லிவிட்டு ராஜாவைப் பார்த்தார். கண்டிப்புடன் பார்த்த அவரது ஆணையை மீற முடியாமல் சோமுவின் கையயைப் பற்றிக் கொண்டான் ராஜா. அவன் தோள் மீது கை போட்டு அணைத்துக் கொண்ட சோமுவைக் கண்டு பெருமையுடன் சிரித்தார் பெரியசாமி. தன் மகன் திருந்திவிட்டான் என்ற மகிழ்ச்சி அவர் முகத்தில் தெரிந்தது.

அன்பின் சக்தி - முதல் பகுதி

சோமு எட்டாம் வகுப்பில் படிக்கும் சிறுவன். அவன் தகப்பனார் கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வருபவர் . சோமுவும் தன் தந்தையின் கஷ்டத்தை உணர்ந்து நன்கு படித்து வந்தான். அவன் எண்ணமெல்லாம் தான் நன்றாக படித்து பெரிய டாக்டராகி அந்த ஊரிலயே ஒரு மருத்துவ விடுதி கட்டவேண்டும் என்பதுதான்.

எனவே இரவும் பகலும் எந்நேரமும் படிப்பு படிப்பு தான். அத்துடன் தன் வ்குப்பு மாணவர்களுக்கு கணிதம் அறிவியல் போன்ற கடினமான பாடங்களை எல்லாம் எளிதாகக் கற்றுத்தருவான். இதனால் பல மாணவர்கள் சோமுவுக்கு நண்பர்களானார்கள்.

அந்த ஊரிலேயே பெரிய பணக்காரர் பெரியசாமி. அவ்வூரிலேயே பெரிய ஆலைக்குச் சொந்தக்காரர். அவரது மகன் ராஜாவும் சோமுவின் வகுப்பிலேயே படித்து வந்தான். மாணவர்கள் பணக்காரனான என்னிடம் சேராமல் சொமுவைச் சுற்றி வருவதைப் பார்த்துப் பொறாமை கொண்டான்.

இந்தச் செய்தியை அவன் தந்தை அறிந்து கொண்டார். ஏழைகளை எப்போதும் மதிப்புடன் நடத்துபவர். நல்ல பண்பாளர். தன் மகன் ஏழைகளை அலட்சியமாக நடத்துவது அவருக்குப் பிடிக்கவில்லை. எப்படியாவது தன் மகனைத் திருத்த வேண்டும் என நினைத்தார்.

அன்று மாலை வீட்டுக்கு ஓடி வந்த ராஜாவை அன்புடன் அழைத்தார்
பெரியசாமி.அருகே வந்து நின்ற ராஜாவை அன்புடன் பார்த்தார்.

" ராஜா!உன் வகுப்பில் முதலாவதாக வரும் மாணவன் யார்?"

"சோமுதான். வெறுப்பை உமிழ்ந்தான் ராஜா.

"உனக்கு அவன் மேல் என் இத்தனை வெறுப்பு? அவனைப்போல் நீயும் படித்து முதலாவதாக வர முயற்சிக்கலாமே?"

"நான் ஏன் கஷ்டப்படவேண்டும்? அவன் அப்பா கூலி வேலை செய்பவர். அதனால் அவன் கஷ்டப்பட்டுப் படிச்சுதான் ஆகணும்.நான் ஏன்....." என்று பேசிக்கொண்டே போனவனைத் தடுத்து நிறுத்தினார் அவன் அப்பா.

"இதோ பார் ராஜா! ஏழை ஏழை என்று ஏளனமாகப் பேசாதே.பல ஏழைகளின் வியர்வையும் ரத்தமும்தான் ஒருவனைப் பணக்காரனாக்கும் சாதனங்கள்."

"அப்பா! ரத்தமாவது வியர்வையாவது! எல்லாம் பணம் செய்யும் வேலையப்பா. ஒருவனிடம் பணம் இருந்தால் அவனிடம் எல்லோரும் கும்பிடு போட்டுக்கொண்டு நிற்பார்கள்." அவன் விளக்கத்தைக் கேட்ட பெரியசாமி புன்னகைத்துக் கொண்டார்.

" சரி நீதான் பணக்காரனாயிற்றே. சோமு ஏழையாயிற்றே. உனக்கு நண்பர்கள் அதிகமா சோமுவுக்கு நண்பர்கள் அதிகமா?"

"இப்போதைக்கு சோமுவுக்குத் தான் நண்பர்கள் அதிகம். ஆனால் நீங்கள் பணம் தந்தால் ஒரு மாதத்தில் அத்தனை பேரையும் எனக்கு நண்பர்கள் ஆக்கிக் காட்டுவேன்." சவால் விட்டான் ராஜா.

பெரியசாமியும் அந்த சவாலை ஏற்றுக் கொண்டார்.
"சரி. உனக்கு தினமும் பத்து ரூபாய்கள் தருகிறேன்.உன் விருப்பம்போல் செலவு செய்.ஒரே மாதம்தான். கடைசி நாளன்று உன்னிடம் மாணவர்கள் அதிகம் சேர்ந்து உள்ளார்களா சோமுவுடன் சேர்ந்து உள்ளார்களா என்று பார்க்கிறேன்."

"கட்டாயம் என்னிடத்தில் தான் சேர்ந்திருப்பார்கள்."

"அப்படியில்லா விட்டால் நீ சோமுவிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அவனுக்கு நண்பனாயிருக்க வேண்டும். அத்துடன் ஏழைகளை அலட்சியப் படுத்துவதை விட்டு விட வேண்டும்.. சரியா?" என்றார்.

"சம்மதம் அப்பா! நாளை முதல் பாருங்கள்." என்றான் ராஜா.

மறுநாள்காலை சோமுவை வெற்றி கொள்ளப் போகிறோம் என்ற நம்பிக்கையுடன் தன் பள்ளிச்சீருடை அணிந்து கொண்டு தன் தந்தையின் முன் வந்து நின்றான் .பெரியசாமி புன்னகையுடன் ,"என்ன ராஜா! போட்டிக்குத் தயாராகி விட்டாய் அல்லவா? இந்தா, பத்து ரூபாய். உன் விருப்பம்போல் செலவு செய் சரியாக முப்பது நாட்கள் கழித்து நானே உன் பள்ளிக்கு வருவேன் சம்மதமா?"என்றார்.

ராஜா மகிழ்ச்சியுடன் தலையை அசைத்தவாறே பத்து ரூபாயைப் பெற்றுக்கொண்டு ஓடினான்.

வியாழன், 30 ஜூலை, 2009

புலவர் பெருந்தலைச்சாத்தனார்

சோழநாட்டைச் சேர்ந்த ஆவூர் என்பது வளம் நிறைந்த ஊர். அவ்வூர் நிலங்கள் மிகுந்த விளைச்சலைத் தரக்கூடியவை. சோலைகளும் தோப்புகளும் மிகுந்திருந்தன. அவ்வூரில் மூலங்கிழார் என்பவர் வாழ்ந்து வந்தார். கல்வி கேள்விகளிலும் ஒழுக்கத்திலும் உயர்ந்தவர்.இவர் தனது இல்லறத்தை இனிதே நடத்தி வந்தார்.

இறைவன் திருவருளால் இவருக்கு ஓர் ஆண்மகவு பிறந்தது. அம்மகவுக்குப் பெருந்தலைச்சாத்தன் என்று பெயரிட்டு வறுமையிலும் செம்மையாக வளர்த்து வந்தார். ஆவூர் மூலங்கிழார் தன மகனுக்குத் தானே ஆசானாக இருந்து கல்வி கற்பித்து வந்தார். இளமையிலேயே பெருந்தலைச்சாத்தன் சிறந்த தமிழ் இலக்கிய இலக்கண நூல்களை நன்கு பயின்றார். இதனால் இவர் கவி இயற்றும் ஆற்றல் பெற்றார். தக்க பருவத்தில் திருமணம் முடித்து நல்லறமாம் இல்லறத்தை ஏற்றார். பெற்றோர் காலமான பிறகு இவரே குடும்பத் தலைவரானார். அவ்வப்போது கிடைத்த பரிசில் பொருள்களைக் கொண்டு மன நிறைவுடன் வாழ்க்கை நடத்தி வந்தார்.

நாட்கள் செல்லச்செல்ல குடும்பச் சுமை அதிகரிக்கவே வள்ளல்களை நாடிச் செல்லவேண்டிய தருணம் வந்தது. கல்விமான்கள் பலர் செல்வா வளமின்றி இருக்கும் காரணத்தை எண்ணிப்பார்த்த வாறே நடந்தார். ஊரை விட்டு வெகு தூரம் நடந்தார். வழியில் புலவர் ஒருவர் யானை மீது வருவதைக்க் கண்ண்டார். அவரிடம் பெருஞ்செல்வம் இருப்பதையும் அறிந்தார். அவ்வாறு வந்தவர் பெருஞ்சித்திரனார் என்னும் புலவரே. குமணன் என்ற வள்ளலை நாடிச்சென்று பரிசில் பெற்று வருவதாகக் கூறி அவரையும் குமண வள்ளலிடம் செல்லுமாறு ஆற்றுப்படுத்தினார். அவருக்கு நன்றி கூறி குமணனை நாடிச் சென்றார் பெருந்தலைச் சாத்தனார். பலநாட்கள் நடந்து குமணன் ஆளும் முதிர மலையை வந்தடைந்தார்.

முதிர மலையையும் அதனைச் சுற்றியுள்ள நாட்டையும் குமணன் திறம்பட ஆண்டு வந்தான்.கல்விமான்களை ஆதரித்தான். தமிழ்ப் புலவர்களைத் தெய்வமாக மதித்துப் போற்றி வந்தான். தன்னைச் சந்திக்க வரும் புலவர்களுக்கு அவர் வேண்டும் பொருள் கொடுத்து அவரது வறுமை நிலையைப் போக்கும் பண்பு கொண்டவன். இப்படிப் பட்ட சிறந்த புகழ் வாய்ந்த குமணனுக்கு இளங்குமணன் என்ற ஒரு தம்பி இருந்தான். அவன் தீ நட்புக் கொண்டவன். சில தீயவர்களின் ஆலோசனையால் குமணன் செய்யும் தான தருமங்களால் நாட்டின் செல்வம் அழிந்து வறுமை வந்துவிடுமோ என அஞ்சினான்.எப்படியேனும் தன அண்ணனைக் கொன்று விட்டுத் தானே மன்னனாகி விடத் திட்டமிட்டான். இச்செய்தியை ஒற்றர் மூலம் அறிந்தான் குமணன்.

தனக்கு வாரிசு இல்லாததால் தனக்குப் பிறகு தன தம்பி தானே நாட்டை ஆள வேண்டும் என எண்ணிய குமணன் தம்பியிடம் நாட்டை விட்டு விட்டு காட்டுக்குப் போய் தவம் செய்ய லானான். குமணன் காட்டுக்குச் சென்ற பின்னர் பெருந்தலைச் சாத்தனார் குமணன் வாழ்ந்திருந்த அரண்மனைக்குச் சென்றார். அடையாத குமணனின் அரண்மனைக் கதவு அடைக்கப் பட்டிருந்தது. குமணன் காட்டுக்கு ஏகியதை மக்கள் கூறக்கேட்டு அறிந்து கொண்டார். எனவே குமணனைக் காணும் எண்ணத்துடன் காட்டை நோக்கிச் சென்றார். பல துன்பங்களுக்குப் பின் குமணனைக் கண்டார்.

புலவரைக்கண்ட குமணன் மனம் மகிழ்ந்து வரவேற்றான். அன்புடன் பேசினான். புலவரின் சூழ்நிலையைக் கேட்டான்..புலவர், " வள்ளலே! நான் சோற்று வளம் மிக்க சோழ நாட்டைச் சேர்ந்தவன். ஆயினும் நான் வறுமையால் வாடுகிறேன்.என் வீட்டு அடுப்பில் காளான் பூத்திருக்கிறது. என் குழந்தை தாய் முகம் பார்த்து அழுகிறது. என் மனைவி என் முகம் பார்க்கிறாள். .நான் நின் முகம் நோக்கி ஓடி வந்தேன். நீயோ நாட்டை விட்டுக் காட்டில் அவதிப படுகிறாய். உன் நிலை கண்டு நான் வருந்துகிறேன். " என்ற பாடலைப்பாட குமணன் அவரது நிலை கண்டு கண்ணீர் விட்டான். "
குமணனின் உள்ளம் புலவருக்கு ஏதேனும் பரிசு கொடுக்க வேண்டும் எனத் துடித்தது.ஆனால் எதைக் கொடுப்பது என்ற சிந்தனையில் ஆழ்ந்தான். புலவர் அவனைச் சிந்திக்க விட்டுக் காத்திருந்தார். சிந்தனை செய்தவாறே நடந்து கொண்டிருந்த குமணன் நின்றான். அவன் முகம் திடீரென ஒளி பெற்றுப் பிரகாசித்தது.
மலர்ந்த முகத்துடன் அவன் புலவரைப் பார்த்தான். " புலவரே! நான் மன்னனாயிருந்தபோது தாங்கள் வந்திருந்தால் உமது வறுமையை விரட்டியிருப்பேன். இப்போது எதையும் கொடுக்க இயலாதவனாக உள்ளேன்.இருப்பினும் நீர் செல்வம் பெற ஒரு வழி உள்ளது." என்று சொல்லி தனது உடைவாளை உருவி புலவரின் கையில் கொடுத்தான்.

" புலவரே! என் தம்பி இளங்குமணன் என் தலையைக் கொண்டு வருபவருக்குப்பெரும் பொருள் தருவதாகக் கூறியுள்ளான். என் தலையை அவனிடம் கொடுத்துப் பெரும் பொருள் பெற்று தங்களின் வறுமையைப் போக்கிக் கொள்ளுங்கள்."என்று குமணன் கூறியதைக் கேட்ட புலவர் கண்ணீருடன் அவனது உடைவாளைப் பெற்றுக்கொண்டார்.பின்னர் மன்னனைப் பார்த்துக் கூறினார்." வேந்தே! உமது தலையை எனக்குத் தந்து விட்டீர்கள். இனி இது எனக்குச் சொந்தம். நான் மீண்டும் வந்து இதனைப் பெற்றுக் கொள்ளும் வரையில் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளவும். மீண்டும் வருகிறேன்." என்று சொல்லிவிட்டு வாளுடன் புறப்பட்டார் பெருந்தலைச்சாத்தனார்.

அவர் உள்ளத்தில் குமணன் தலையைப் பாதுகாத்துக் கொள்வான். வேறு யாரேனும் வந்தால் தலையைத் தந்து விட மாட்டான் என்ற அமைதி ஏற்பட்டது. நேராக இளங்குமணன் வாழும் அரண்மனைக்கு வந்தார். அரண்மனையில் சிந்தனையுடன் அமர்ந்திருந்தான் இளங்குமணன்.அவன் இயல்பிலேயே மிகவும் நல்லவன். சில தீய நண்பர்களின் ஆலோசனையினால் தான் தவறிழைத்து விட்டதை உணர்ந்து வருந்திக்கொண்டிருந்தான். அத்துடன் தன தீய நண்பர்களின் சுயநலப் போக்கையும் மக்களின் வெறுப்பையும் அண்ணனின் பெருமையையும் உணர்ந்து கொண்டதனால் மனம் திருந்தி வருந்திக் கொண்டிருந்தான்.

அதே நேரம் கையில் வாளுடன் புலவர் அவன் முன் நின்றார்.குமணனின் வாளைக் காட்டினர்."மன்ன! உன் அண்ணன் வாரிக் கொடுக்கும் வள்ளல். புலவர் போற்றும் புகழுடையோன்.இல்லையென்று நான் சென்ற போது தன தலையைக் கொண்டு சென்று தம்பியிடம் கொடுத்துப் பொருள் பெறுமாறு கூறிய பெருங் குணத்தான். இத்தகைய நற்பண்பு கொண்ட நல்லவனை சகோதரனாகப் பெற்ற நீயும் நற்பண்பு கொண்டவனாகவே இருப்பாய் என நம்புகிறேன்.உன் அண்ணனாகிய குமணவள்ளல் நாட்டில் வாழ்வதா காட்டில் மறைந்து வாழ்வதா?" என்று கோபமாகக் கேட்டார்.

அண்ணனைப் பிரிந்து துயரால் வாடிக்கொண்டிருந்த இளங்குமணன் உடனே அண்ணனைக் காணத் துடித்தான். அவரிடம் மீண்டும் அரசுரிமையைத் தரத் தயாராக இருந்தான். அவன் மன மாற்றத்தை அறிந்த பெருந்தலைச் சாத்தனார் அவனையும் அழைத்துக் கொண்டு காட்டை அடைந்தார். சகோதரர் இருவரும் அணைத்து மகிழ்ந்த காட்சியைக் கண்டு மகிழ்ந்தார் புலவர். மீண்டும் அரியணை எரிய குமணன் புலவருக்குப் பெருஞ்செல்வத்தை வழங்கினான். குமணனையும் இலங்குமனனையும் வாழ்த்திய பெருந்தலைச்சாத்தனார் தன நாட்டை அடைந்தார். மனைவி மக்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்.

நாட்கள் கழிந்தன. மீண்டும் புலவர் பெருந்தலைச்சாத்தனார் வள்ளல்களை நாடிச் சென்றார். கோடைமலைத் தலைவன் கடிய நெடு வேட்டுவன் என்பவன். புலவர் அவனது மலையை நாடிச் சென்றார். இயற்கை அழகைக் கண்டு ரசித்த புலவர் அவன் மாளிகையை நாடிச் சென்றார். கடிய நெடு வேட்டுவன் புலவரை உபசரித்தான்.ஆனால் பல நாட்களாகியும் அவன் புலவருக்குப் பரிசளிக்காமல் காலங்கடத்தி வந்தான். புலவர் ஒவ்வொரு நாளும் பரிசிலை எதிர் பார்த்து ஏமாந்தார்.

ஏமாற்றமே பாடலாயிற்று."மன்னா! நீ வளமான வாழ்கையை உடையவன்.ஆயினும் எமக்குப் பரிசில் தரவில்லை.மூவேந்தரும் உள்ளன்போடு பரிசில் தராததால் அதை நாங்கள் ஏற்கவில்லை. ஏழையாயினும் நாங்கள் மானமுள்ளவர்கள். நாங்கள் யாரிடமும் பரிசில் பெறாது வெறுங்கையுடன் செல்வதில்லை.ஆனாலும் உன்னைப் பாடிய நான் வெறுங் கையனாய்ச் செல்கிறேன். புலவனாகிய எம்மை அவமதித்த நீ நோயின்றி வாழ்வாயாக!" எனப்பாடியதைக் கேட்ட மன்னன் புலவரின் கோபம் தனக்குத் தீங்கு விளைவிக்கும் என உணர்ந்தான். புலவரைப் பணிந்து பரிசில் அளித்து மன்னிக்க வேண்டினான். புலவரும் அவனை வாழ்த்திப் பாடினார்.

பின்னர் மூவன் என்ற சிற்றரசரை நாடிச் சென்றார். சிலநாள் தங்கியிருந்தும் பரிசில் தராமல் அலட்சியம் செய்தான் மூவன். அவனைப் பார்த்து "மூவா! உன்னைப் பாடிய நான் வேறுண் கையனாய்ச் செல்கிறேன். நீ கொடாமையால் நான் வருந்தவில்லை. நீ நோயின்றி நீண்ட நாள் வாழ வேண்டுமேயென்று தான் வருந்துகிறேன்." என்று பாடிச் சென்று புலவரின் மனம் வருந்தினால் அந்த வருத்தம் வீண் போகாது. சிறிது நாட்களிலேயே அந்த அரசன் சேர வேந்தனால் கொல்லப்பட்டு அவன் பற்கள் சேரத் தலைநகர் தொண்டியின் அரண்மனைக் கதவுகளில் பதிக்கப் பட்டது என்ற செய்தியை புறநானூற்றுப் பாடல் வாயிலாக அறிகிறோம்.

இதிலிருந்து கல்விமான்களை மதிக்கவேண்டும் என்னும் அறிவுரையைப் பெருகிறோமல்லவா?

செவ்வாய், 28 ஜூலை, 2009

இன்சொல் தந்த பரிசு

பள்ளிக்கூட மணி அடித்ததும் ஆசிரியர் வகுப்பறையை விட்டு வெளியேறினார். மாணவர்களும் வரிசையாக எழுந்து வெளியே சென்றனர்.பாஸ்கரனும் தன புத்தகப் பையை எடுத்துக்கொண்டு வரிசையில் நின்று வெளியே வந்தான்.அவனைத் தள்ளிக்கொண்டும் மற்ற மாணவர்களைத் திட்டிக்கொண்டும் ஓடினான் முருகன்.அவனுக்குப் பயந்து கொண்டு அனைவரும் வழி விட்டு ஒதுங்கி நின்றனர்.

அவ்வளவு வேகமாக ஓடி வந்தவன் வெளியே மரத் தடியில் நின்று நண்பர்களுடன் பேசிக்கொண்டு நின்று கொண்டான்.இரண்டு நிமிடங்கள் பேசுவதற்குள் சண்டை வந்து விட்டது."டேய் முருகா! நீ எப்பவும் நீ சொன்னபடியேதான் செய்யணும்னு சொல்றே " "ஆமாண்டா அப்படித்தான் சொல்வேன். நீங்கள்ளாம் என்கிட்டே வாங்கித்தின்கிற பயலுகதானே அப்புறம் என்னடா? ""டேய் நீ குடுத்தே நாங்க வாங்கிக்கிட்டோம். இனிமே அப்படிப் பேசாதே.""பேசுவேன் அப்படித்தான் பேசுவேன்.வெட்கங்கெட்ட பயலுக நீங்க. உங்களுக்கு ரோஷம் வேற வருதா?""டேய் வாங்கடா போகலாம்.இவன்கூட பழகறதே தப்புடா.""அட போங்கடா" என்றபடியே அவர்களைத் தள்ளி விட்டுவிட்டு அங்கேயே அமர்ந்து கொண்டு எதையோ வாயில் போட்டு மென்று கொண்டு இருந்தான்.

இதைப்பர்த்துக்கொண்டே மெதுவாக நடந்து வந்தான் பாஸ்கரன். முருகனின் அருகே வந்து அவன் தோளில் தன கையை வைத்தான்.முருகனின் அருகே அமர்ந்து கொண்டான்.அவனை அல்க்ஷியமாகப் பார்த்த முருகன் தன வேலையிலேயே கவனமாக இருந்தான்."முருகா! ஏன் எப்பவும் சிடு சிடுன்னே இருக்கே? ஏன் கடும் சொல்லே பேசறே?""என் இஷ்டம்""என் வகுப்புத் தோழன் நீ.எப்பவும் நல்ல சொற்களும் இனிய வார்த்தைகளும் பேசணும்னு ஆசைப்படறேன்.""நீதான் இனிமையான சொல் பேசுகிறாயே எனக்கு நான் பேசறதுதான் இனிமையான சொல். இதுக்குமேலே இனிமையாகப் பேச எனக்குத் தெரியாது.நீ உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ."

பையைத் தூக்கிக் கொண்டு விறுவிறுவென்று நடந்து மறைந்தான் முருகன். பாஸ்கரன் பெருமூச்சு விட்டவாறே தன இல்லம் நோக்கி நடந்தான். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. சாப்பிட்டானபின் பிற்பகல் நேரம்.வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. வெய்யில் இல்லாததால் சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் தெருவில் விளையாடிக்கொண்டிருந்தனர். பாஸ்கரனும் தன நண்பர்கள் சிலருடன் பந்து விளையாடிக்கொண்டிருந்தான். அங்கே வந்த முருகனும் அவர்களுடன் விளையாட சேர்ந்து கொண்டான்.

இவனைப் பார்த்த ராமுவும் கமாலும் "நாங்க வரலேடா " என்றபடியே நகர்ந்தனர். "டேய் முருகன் வரதுனாலே உங்களுக்கேன்னடா கஷ்டம்?" "கொஞ்ச நேரத்துலே சண்டை போடுவான். எப்பவும் திட்டுவான். அவன் கூட நாங்க விளையாட மாட்டோம்.""டேய் ராமு! முருகன் எப்பவாச்சும்தான் கோபப்படுவான். விளையட்டிலேஎல்லாம் கோபப்பட மாட்டான் . வாங்கடா" என்று அவர்களை நிற்க வைத்தான் பாஸ்கரன்.விளையாட்டை விட மனமில்லாததால் இருவரும் மீண்டும் வந்து இணைந்து கொண்டனர்.சற்றே முறுவலுடன் தன நன்றியைத் தெரிவித்துக்கொண்ட முருகன் மகிழ்ச்சியுடன் விளையாடத் தொடங்கினான்.பத்து நிமிட நேரம் மகிழ்ச்சியாக விளையாடினர். சற்றைக்கெல்லாம் தனக்குப்பந்து போடவில்லை என ராமுவைக் கடுஞ்சொல்லால் திட்டினான் முருகன்."டேய் அழுகுணி! ஏண்டா எனக்குப் போடாமே பாஸ்கருக்கே போடறே?"" இதோ நான் உனக்குப் போடறேன் நீ அடி""ஒண்ணும் வேண்டாம். இந்தத் தடிப்பயல் ராமுவுக்கும் கமாலுக்குமே பந்து வீசறான். இந்தக் குரங்கு மூஞ்சியும் இளிச்சுக்கிட்டே அடிக்கிறான். நான் நிற்கிறது இவனுகளுக்குக் கண் தெரியலை.

குருட்டுப்பசங்க..." கமாலுக்குக் கோபம் வந்தது. கையை ஓங்கினான். "டேய்..!" பாஸ்கரன் குறுக்கிடாவிட்டால் குத்து முருகன் முகத்தில் விழுந்திருக்கும். பெரிய சண்டையே நடந்திருக்கும். நல்லவேளையாக பாஸ்கரன் இடையிட்டு விளையாட்டை முடித்து வைத்தான். அனைவரையும் சமாதானமாக வீட்டுக்கு அனுப்பி வைத்தான். பின்னர் தன வீட்டுத்திண்ணையில் வந்து அமர்ந்து கொண்டான் பாஸ்கரன்.முனகியவாறே மெதுவாக நடந்து சென்றான் முருகன்.அவன் எதிரே ஒரு மோட்டார் சைக்கிள் வந்து நின்றது."டேய் தம்பி! இங்கே வா."" நான் ஒண்ணும் டேய் தம்பி இல்லே. எல் முருகன்." அவன் கோபத்தை ரசித்தார் வந்தவர்."அட..ரொம்ப கோபமா இருக்காப்பல இருக்கு. சரி.. எல். முருகா! இங்கே சன்னதி தெரு எங்கே இருக்கு?"புன்னகையுடன் கேட்டார் வந்தவர்." அதெல்லாம் எனக்குத்தெரியாது.

வேற யார் கிட்டவாவது கேட்டுக்குங்க. நீங்க வச்ச ஆளா நான்?""என் தம்பி! ஒரு சின்ன உதவி. அதைச்செய்யா விட்டாலும் பரவாயில்லை. பேச்சிலேயாவது மரியாதை இருக்கலாமே ...படிக்கிற பையன் தானே நீ?""அதப்பத்தி உங்களுக்கென்ன? சன்னதித்தெருவைத் தேடுங்க ..." என்றபடியே ஓடிவிட்டான்.சற்றுத் தொலைவில் திண்ணையில் அமர்ந்தவாறே முருகனுடன் யாரோ ஒரு பெரியவர் பேசுவதைக் கண்ட பாஸ்கரன் வேகமாக அவர் அருகே வந்தான்."அய்யா! வணக்கம்...வாங்க உங்களுக்கு என்ன வேணும்?"முருகனால் மனதில் மூண்ட கோபம் பாஸ்கரனால் தணிந்தது. " தம்பி! சன்னதித் தெரு எதுப்பா?""இந்தத் தெருவோட போயி வலது புறம் திரும்பினால் சன்னதித் தெரு....நீங்க யார் வீட்டுக்கு வந்திருக்கீங்க?""அங்கே நாலாம் நம்பர் வீட்டிலே பள்ளித் தலைமை ஆசிரியர் இருக்காரில்லையா...அவரைத் தான் பார்க்கணும்.""அப்படியா? வாங்க...நான் கூட்டிக்கிட்டுப் போறேன்." என்றவன் அவருடன் பேசிய படியே நடந்தான்.அவனது பண்பான நடத்தையைக்கண்டு மகிழ்ந்தவர் அவனைப்பற்றியும் விசாரித்தார்."தம்பி, உன் பேரென்ன? "" என் பெயர் பாஸ்கரன்.

இந்த ஊர் பள்ளியில் எட்டாம் வகுப்புப் படிக்கிறேன்.""பாஸ்கரா! நீ வருவதற்கு முன்பாக ஒரு பையன் பேசிக்கொண்டு இருந்தானே, அவன் பெயர் கூட....ஆ.,எல்.முருகன்...அவனும் உங்கள் பள்ளியில் தான் படிக்கிறானா?ரொம்ப கோபக்காரனோ ?""அவன் பெயர் முருகன்தான்.என் வகுப்பில் தான் படிக்கிறான். கொஞ்சம் முன்கோபி.ஆனால் நல்லவன். விளையாட்டிலே தோத்திட்டதால் அவன் உங்ககிட்டே கொஞ்சம் கோபமாகப் பேசியிருப்பான். அவனுக்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கறேன்.""பரவயில்லையே! நண்பனை விட்டுக்கொடுக்காமல் பேசறியே....வெரிகுட்! "என்றவாறே தலைமை ஆசிரியர் வீட்டின் முன் வந்து நின்றார்.வெளியே வந்து பார்த்த தலைமை ஆசிரியர் அவரைப்பார்த்த உடன் மிகவும் பணிவுடன் வரவேற்றார்.அப்போதுதான் தெரிந்தது வந்திருப்பவர் பள்ளியைத் தணிக்கை செய்ய வந்துள்ள மேலதிகாரி என்பது.

மறுநாள் காலையில்தான் வருவதாக இருந்தது, முதல்நாளே வந்து விட்டார். தனது உதவியாளர் இருவரும் மறுநாள் காலையில் வருவார்கள் என்று சொன்னார். அந்த ஊர் கோவிலைப் பார்ப்பதற்காகவும் தான் விரைவிலேயே ஊர் திரும்பவேண்டியிருப்பதாலும் முதல் நாளே வந்ததாகக் கூறினார். அவருடன் அவரது தனியறைக்குச் சென்று அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்ய பாஸ்கரனுக்குக் கட்டளையிட்டார். தானும் அவர்களுடன் சென்றார்.

மறுநாளும் அதற்கு மறுநாளும் பள்ளி கல்யாணவீடு போல அமர்க்களப்பட்டது. மேலதிகாரிகள் திடீரென வந்து விட்டதால் எல்லா ஆசிரியர்களும் மிகவும் பரபரப்புடன் காணப்பட்டனர்.அதிகாரி இருக்கும் இடத்திற்கு பாஸ்கரன் அடிக்கடி சென்று ஏதாவது தேவையா? என்று விசாரித்தான் .அவனைப்பார்க்கும் போதெல்லாம் அதிகாரி புன்னகைத்தார்.அந்தப் புன்னகையே தலைமை ஆசிரியருக்குப் புத்துணர்ச்சி ஊட்டியது. அதிகாரி அன்றுடன் தன தணிக்கை முடித்து ஊர் திரும்பப் போகிறார். மாலையில் ஒரு கூட்டம் கூட்டி மாணவர்களிடையே ஒரு சில சொற்கள் பேச ஏற்பாடு செய்திருந்தார். கூட்டம் கூடியிருந்தது. அனைத்து மாணவரும் ஆசிரியர்களும் கூடியிருந்தனர். தலைமையாசிரியர் பேசியபின் அதிகாரி எழுந்து பேசத் தொடங்கினார்.

" மாணவ மணிகளே! வணக்கம். உங்கள் அனைவரையும் ஒன்றாகப் பார்ப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். அதுபோல் இந்தப்பள்ளி மாணவன் பாஸ்கரனைப் பார்த்த பிறகு இந்தப் பள்ளியைப்பற்றி உயர்ந்த எண்ணம்தான் தோன்றுகிறது. பணிவு, இன்சொல், அன்பு கொண்ட பாஸ்கரன் இந்தப் பள்ளிக்கே பெருமை சேர்த்து விட்டான். அவனைப் போலவே இங்கு பயிலும் ஒவ்வொரு மாணவனும் இருப்பான் என நம்புகிறேன். கடந்த இரண்டு நாட்களாக என்னுடனேயே இருந்து எனக்கு வேண்டிய உதவிகளைச் செய்து வந்த பாக்கறான் என்ற மாணவன் தன நல்ல பண்பால் எங்களின் உள்ளங்களை மகிழச் செய்து விட்டான்.அவனுக்கு அடுத்த ஆண்டிற்கான புத்தகச் செலவு சீருடைக்கான செலவு இவற்றை நானே ஏற்கிறேன்.இந்தத் திருவள்ளுவரின் திருக்குறள் நூலை அவனுக்குப் பரிசாக அளிக்கிறேன். " என்றபோது அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.பாஸ்கரன் நாணத்துடன் மேடையேறி நின்றான். அதிகாரி அவனைத் தட்டிக்கொடுத்தவாறு பேசினார். " இந்தப் பரிசை என் கையால் கொடுப்பதை விட அவன் வகுப்பு மாணவன் கையால் கொடுப்பதே சிறந்தது என நான் நினைக்கிறேன். ..."என்றபடியே சுற்றிலும் பார்த்தார். அவர் கண்ணில் படாமல் ராமுவின் முதுகுக்குப்பின்னால் மறைந்து அமர்ந்திருந்த முருகன் அவர் கண்ணில் படவே புன்னகையுடன் அழைத்தார்.

" எல். முருகன் இப்படி மேடைக்கு வா!." அனைவரும் திகைத்தனர். இவன் பெயர் அதிகாரிக்கு எப்படித்தெரியும்? என்று ஆச்சரியப்பட்டனர். அந்த ரகசியம் முருகனுக்கும் அதிகாரிக்கும் மட்டும்தானே தெரியும்!மெதுவாக நடந்து வந்த முருகன் தலை குனிந்து நின்றான். அவன் கையில் நூலைக்கொடுத்தவர்," எல். முருகா! உன் கையால் இந்தப்பரிசைக் கொடு . அடுத்த ஆண்டு இதேபோல நீ பரிசு வாங்க வேண்டும்..." என்றபடியே அவன் முதுகைத்தட்டினார். அழகான அந்த நூலைத் தடவியவாறே அதைப் பாஸ்கரனின் கையில் கொடுத்தான் முருகன். தனக்கு வரவேண்டிய பரிசு தன துடுக்குத் தனத்தால் பாச்கரனுக்குச் சென்ன்று விட்டதே....தான் மட்டும் அதிகாரியிடம் மரியாதையுடன் இன்சொல் பேசியிருந்தால் இந்தப்பரிசு தனக்கு வந்திருக்குமே. எத்தனை பெருமையாக இருந்திருக்கும்! "அவன் மனம் அன்றே முடிவு செய்து கொண்டது. ' இனி எந்த சமயத்திலும் இனிய சொல் தவிர கடுஞ்சொல் பேசுவதேயில்லை .'

விளையாட்டை விட மனமில்லாத இருவரும் மீண்டும் வந்து சேர்ந்து கொண்டனர்.