வெள்ளி, 11 மே, 2012

85- மரியாதைராமன் கதைகள்.

.   ஒரு ஊரில்மூன்றுசோம்பேறிகள் இருந்தனர்..அவர்கள் ஊரை ஏமாற்றிப பிழைப்புநடத்திவந்தனர்.
கிடைத்ததை உண்டு கோவில் குட்டிச் சுவரில்  படுத்து உறங்கி காலம் கழித்து வந்தனர். .ஒரு நாள் அவர்கள்யாராவது பெரிய பணக்காரரிடம் பெரும் பணத்தைத் திருடுவது
 என்று முடிவு செய்தனர்..        
அதன்படியே அருகே இருந்த பெரிய நகருக்குச் சென்று ஒரு நகை வியாபாரியின் வீட்டில் நகைகளைத் திருடி விட்டு மீண்டும் தங்கள் ஊருக்கே வந்தனர்.திருடிய நகைகளை ஒரு குடத்தில் போட்டு மூடி வைத்தனர்.அதை யாரிடமாவது கொடுத்து பத்திரப் படுத்த வேண்டும் என நினைத்தனர்.
அந்த ஊரில் ஒரு வயதான பாட்டி இருந்தார்.அவர் ஒரு உணவுக்கடை நடத்தி வ்ந்தார்.
அந்தப் பாட்டியிடம் தாங்கள் திருடிய குடத்தைக் கொடுத்து வைப்போம் என முடிவு செய்தனர் திருடர்கள்.
அனைவரும் பாட்டியின் வீட்டுக் கதவைத் தட்டினர்.தூக்கக் கலக்கத்துடன் வந்து கதவைத் திறந்த பாட்டி,"ஏனப்பா இந்த வெய்யில் நேரம் வந்து கதவைத் தட்டுறீங்க.சாப்பாடெல்லாம் காலியாயிடுச்சே"
என்றார்.
ஒரு திருடன் "ஏய் பாட்டி, எங்களுக்குப் பசிக்குது உடனே சாப்பாடு செஞ்சு போடு. உனக்குப் பணம் தரோம் "என்று ஆசை காட்டினான்."
பாட்டி சிரித்தார்."தம்பி பணத்துக்காக இல்லாட்டாலும் பசியால வாடுற உங்க முகத்துக்காக சமைச்சிப் போடுறேன்"
அனைவரும் மகிழ்ச்சியுடன் "பாட்டி நீ ரொம்ப நல்ல பாட்டி"என்றபடியே அமர்ந்தனர்.
அப்போது மூத்தவனாக இருந்த திருடன் பாட்டியிடம் நகைகள் வைக்கப்பட்டிருந்த அந்தக் குடத்தைக் கொடுத்து"பாட்டி நாங்க மூணு பேரும் வந்து கேட்டாதான் இந்தப் குடத்தைக்  கொடுக்கணும். தனியா யார் வந்து கேட்டாலும் குடுக்கக்கூடாது."என்றான்.அந்தக் குடத்தைப் பெற்றுக் கொண்ட பாட்டி
"சரிப்பா, நீங்கெல்லாம் குளிச்சுட்டு வாங்க .சமையல் முடிஞ்சுடும் "என்றார்.
மூன்று பெரும் மகிழ்ச்சியாகச் சிரித்தபடியே தொலைவில் இருந்த கிணற்றுக்குச் சென்றனர்.
கிணற்றுக்குள் குதித்துக் குளிக்கலாம் என எண்ணி எட்டிப் பார்த்தனர். தண்ணீர் மிக ஆழத்தில்
இருந்தது.நீரை இறைத்துத்தான் குளிக்கவேண்டும் என முடிவு செய்தனர்.
மூத்தவன் மற்றவனைப் பார்த்து "நீ போய் பாட்டியிடம் குடமும் கயிறும் வாங்கி வா.நீரை இறைத்துக் குளிப்போம்."என்றான்.
கிணறு சற்றுத் தொலைவில் இருந்தது.எனவே கட்டளையை ஏற்றுக் கொண்ட திருடன் வேகமாக ஓடினான்.வீட்டு வாயிலில் நின்று யோசித்தான்.அந்தக் குடத்தை நாமே எடுத்துச் சென்றால் நல்லதாயிற்றே.பொருள் முழுவதும் நமக்கே சொந்தமாகிவிடுமே"என சிந்தித்தான்.
பாட்டியை அழைத்து அவளிடம் அந்தக் குடத்தைக் கேட்டான்.
"மூணு பேரும் சேர்ந்து வந்தால்தானே குடுக்கச் சொன்னார். நீ மட்டும் வந்து கேட்கிறாயே?"
"நாங்கள் இங்கேயே பங்கு பிரித்துக் கொள்ளப் போகிறோம் அதனால்தான் கேட்டனுப்பினார்.
வேண்டுமானால் நீயே கேட்டுக் கொள்."
உடனே பாட்டி உரக்க "என்னப்பா குடுக்கட்டுமா?" என்றார்.
கிணற்றடியில் அமர்ந்திருந்த பெரிய திருடன் அங்கிருந்தபடியே, "குடு பாட்டி, குடு."என்று கத்தினான்.பிறகு மற்றவனுடன் சுவாரசியமாகப் பேசத் தொடங்கினான்.
குடத்தைப் பெற்றுக் கொண்டவன் அங்கிருந்து பின்வாசல் வழியாக வேகமாக  ஓடி மறைந்தான்.
வெகு நேரமாகியும் குடத்தை வாங்கி வரச் சென்றவன் வரவில்லையே என்று காத்திருந்த இருவரும்
பாட்டியிடம் வந்தனர்."என்ன பாட்டி எங்க தோஸ்து வந்தானே குடத்தைக் கொடுக்க இத்தனை நேரமா?"
"நான் அப்போதே குடுத்திட்டேனே.அவன் வரலையா?"
"என்ன! அப்போதே குடுததிட்டயா?நீ எந்தக் குடத்தைச் சொல்றே?நாங்க குடுத்த குடத்தையா?"
"ஆமாம். நீதானே கேட்டு அனுப்பினே?நானும் உன்னைக் கேட்டேனே?நீதானே குடுன்னு சொன்னே?"
அந்தத் திருடன் தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டான். இரண்டு பேரும் தங்களிடம் நண்பனாக இருந்தவன் தங்களை ஏமாற்றி விட்டான் எனப் புரிந்து கொண்டனர்.
"ஐயோ ஏமாற்றி விட்டானே! கூட இருந்தே குழி பறித்துவிட்டான்."எனப் புலம்பினர்.அவர்களின் துயரமெல்லாம் பாட்டியின் மீது கோபமாகத் திரும்பியது.
"ஏய் கிழவி, உன்னிடம்தான் குடத்தைக் கொடுத்தேன். நாங்கள் மூணு பேரும் வராமே ஒருத்தன் மட்டும் வந்து கேட்டா நீ ஏன் குடத்தைக் குடுத்தே. இப்போ நீதான் எங்களுக்கு அந்தக் குடத்தைக் குடுக்கணும்.இல்லாட்டா வா எங்களுடன் நியாய சபைக்கு."
பாட்டி எவ்வளவு சமாதானம் செய்தும் அந்தத் திருடர்கள் இருவரும் பாட்டியை மரியாதை ராமனின் நியாய சபைக்கு இழுத்துச் சென்றனர்.
நீதிபதி ஆசனத்தில் ஒரு இளம் பாலகன் அமர்ந்திருந்தான்.அவன்தான் மரியாதை ராமன்
இவர்களின் வழக்கைக் கேட்டான் ராமன்.பாட்டியிடம் அன்புடன் பேசினான். பாட்டியின் வாக்கு உண்மை என்பதைப் புரிந்து கொண்டான்.அந்தத் திருடர்களைப் பார்த்து விசாரித்தான்.
"அந்தக் குடத்தில் என்ன இருக்கிறது.?"
"அத்தனையும் நகைகள் ஐயா, எங்கள் பூர்வீக சொத்துங்க"
"அதை மூன்று பேரும் பங்கிடவேண்டுமானால் நீங்கள் மூவரும் சகோதரர்களா?"
இதைக் கேட்ட இருவரும் திரு திருவென விழித்தனர்.
அதே சமயம் , ஒரு நகை வியாபாரி தன் கடையிலிருந்த நகைகள் திருட்டுப் போய் விட்டன. தயவு செய்து அதை மீட்டுத் தரவேண்டும் என்று ஓவென்று அழுதார்.
ராமனுக்கு இப்போது புரிந்து விட்டது.இந்தத் திருடர் மூவரும் இந்த நகைகளைத்தான் திருடி குடத்தில் போட்டு பாட்டியிடம் கொடுத்திருக்கிறார்கள்.அதை ஒருவன் ஏமாற்றி விட்டான்.
இவர்கள் பாட்டியின் மேல் பழி சுமத்துகிறார்கள்  என்பதைப் புரிந்து கொண்டான்.
"ஐயா நீங்கள் கவலைப் படாதீர்கள் உங்கள் பொருள் என்னும் ஒரு வாரத்தில் உங்களுக்குக் கிடைக்கும் போய்வாருங்கள்" என நகைக் கடைக்காரரை அனுப்பினான்.
பின்னர் அழுது கொண்டிருக்கும் பாட்டியைப் பார்த்து,"பாட்டி அழாதீங்க.உங்கள்மேல் எந்தக் குற்றமும் இல்லை.இப்போது அந்தக் குடம் உங்களிடமே இருக்கிறது என வைத்துக் கொள்ளுங்கள் .இவர்கள் மூவருமாக வந்து கேட்டால் கொடுப்பேன் எனச் சொல்லுங்கள் மூன்றாமவனை இவர்களே தேடிக் கொண்டுவரட்டும்.நீங்கள் அமைதியாகச் செல்லுங்கள் இதுவே நான் வழங்கும் நீதி.."என்று பாட்டியை அனுப்பிவிட்டு
திருடர்களைப் பார்த்து"நீங்கள்தானே நகை வியாபாரி வீட்டில் திருடியது? அந்த நகையைத் தானே குடத்தில் மறைத்து வைத்தது?உண்மையைச் சொல்லுங்கள் இல்லையேல்..."
திருடர்கள் இருவரும் மரியாதை ராமனின் முன் மண்டியிட்டு குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.
அவர்களைச் சிறையில் அடைக்கச் சொன்னான் ராமன்.திருட்டு நகையுடன் ஓடிவிட்ட மூன்றாமவனை ஒரு வாரத்தில் பிடிக்கவேண்டும் என சேவகர்களுக்குக் கட்டளை பிறப்பித்தான்.
தங்களது விதியை நொந்துகொண்டே சிறைக்குச் சென்றனர் இரண்டு திருடர்களும்.ராமனை மனமார வாழ்த்தினார் பாட்டி.
நல்ல நீதி வழங்கிய ராமனை மக்களெல்லாரும் பாராட்டினர்.
இப்படிப்பட்ட சிந்திக்குக் ஆற்றல் நீதி வழங்கும் நீதிபதிகளுக்கு வேண்டும் என்பதை இந்த வரலாறு நமக்குச் சொல்கிறது.


ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com