நம்பிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நம்பிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 22 ஜூலை, 2009

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் - இரண்டாம் பகுதி

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் - முதல் பகுதி

தன் கலயத்தைக் குழாயடியில் கழுவிக்கொண்ட முருகன் நீரைப் பிடித்துக் குடித்தான். மீண்டும் பசிக்கும் போது குடிக்கலாமே என்று கலயத்தில் நீரை நிரப்பிக் கொண்டான். அதனைச் சுமந்து கொண்டு அடுத்த ஊர் நோக்கி நடந்தான். அந்த ஊரிலாவது வேலை கிடைக்க வேண்டுமென்று வேண்டிக்கொண்டே நடந்தான். உச்சி வேளை நல்ல வெய்யில் நேரம். உச்சி வெய்யில் தலையைப் பிளந்தது. வயல் வெளியைத்தாண்டி நடந்தான். பசுமையான மரங்கள் தெரிந்தன. அதனிடையே பெரிய கட்டடம் ஒன்று தெரிந்தது. நிறைய மக்கள் அங்கும் இங்குமாகச் செல்வதை கேசவன் பார்த்தான். சற்று இளைப்பாறுவதற்காக அங்கே ஒரு மரத்தடியில் அமர்ந்தான். களைப்பால் கண்கள் மூடியிருந்தன.

"தம்பி!" யாரோ அழைக்கவே கண்களைத் திறந்து பார்த்தான்.
" தம்பி, ரொம்ப தாகமாயிருக்கு. கொண்டாந்த தண்ணி காலியாயிடுச்சு . இந்தத் தண்ணி நல்ல தண்ணிதானே! கொஞ்சம் தரியா?"
வயதான கிழவர் பரிதாபமாகக் கேட்டார். கொஞ்ச நேரம் யோசித்தவன், சரியென்று அவரிடம் கலயத்தை நீட்டினான்.அதை வாங்கி மடமடவெனக் குடித்தவர் " அப்பாடா! அமிர்தமா ஜில்லுனு இருக்கு" என்றவாறு கேசவனைப் பார்த்துப் புன்னகைத்தார். கேசவன் கலயத்தைப் பார்த்தான். நீர் முழுவதும் காலியாகி இருந்தது. அவன் முகம் ஏமாற்றத்தால் வாடியதைக் கண்டார் பெரியவர்.

"தம்பி! இந்தச் சுற்று வட்டாரத்திலே கொஞ்சம் தண்ணி கஷ்டம். உப்புத் தண்ணிதான் கிடைக்கும். நல்ல தண்ணிக்கு கொஞ்ச தூரம் போகணும். இங்கே தாசில்தார் ஆபீசுக்கு வாரவங்க எல்லோரும் தாகத்திலே தவிக்கிறோம். நல்லவேளையா நீ தண்ணி கொண்டாந்தே. இந்தா இதை வாங்கிக்க ஏதாவது வாங்கிச் சாப்பிடு." என்றவாறே ஒரு இரண்டு ரூபாய்த் தாளை அவனிடம் கொடுத்தார். ஏதும் பதில் சொல்லத் தோன்றாமல் அந்த ரூபாயைப் பெற்றுக்கொண்டான் கேசவன். அவன் உள்ளம் ' குடிதண்ணீருக்கு இவ்வளவு கஷ்டமா இங்கு...' என்று எண்ணிப்பார்த்தது.

மறுநாள் காலை பத்து மணி. வெய்யில் தொடங்கி விட்டது. தலையில் பானையில் நல்ல நீரும் கையில் அலுமினிய தம்ளரும் வைத்துக் கொண்டு அதே இடத்துக்கு வந்தான். அவனைப் பார்த்தவர்கள் நாலைந்து பேர் அவனிடம் வந்து "என்ன அது?" என்றனர். " குடிதண்ணீர் " என்றபோது "எனக்கு, எனக்கு" எனக் கை நீட்டினர். ஒவ்வொருவருக்கும் நீர் கொடுத்தவன் "அய்யா! உங்களுக்கு விருப்பமானதைக் கொடுங்கள் " என்று கேட்டுப்பெற்றான். ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறை வெகு தொலைவு நடந்து சென்று நீர் கொண்டு வந்து பலரின் தாகத்தைத் தணித்தான். மாலையில் காசுகளை எண்ணிப்பார்த்த பொழுது அவனால் நம்பமுடியாத அளவுக்குக் காசு சேர்ந்திருந்தது. வயிறு நிறைய சாப்பிட்டான்.

கேசவனது இந்தத் தொழில் தொடர்ந்தது. சில நாட்கள் சென்ற பின்னர் ஒரு பானை இரண்டு பானை ஆனது. நீர் நீர்மோரானது. அத்துடன் கடலை பிஸ்கட் மிட்டாய் வெற்றிலை பாக்கு என்று வாங்கிச் சென்று விற்று வர நல்ல காசு கிடைத்தது.

ஓராண்டு கழிந்தது. நகரத்தார் பலரது பழக்கம் ஏற்பட சிறியதாக ஒரு பெட்டிக்கடை போட்டு அங்கேயே தங்கிக் கொண்டான். முதல் நாள் மாலையே ஊருக்குள் சென்று பால் தயிர் நீர் தின்பண்டங்கள் என்று வாங்கி வந்து விடுவான். மறுநாள் காலை முதல் வியாபாரம் நடக்கும்.

இப்படியே வருடங்கள் உருண்டோட அங்கேயே சிற்றுண்டிச் சாலை வைத்தான். பல ஆண்டுகளாக கேசவனை அறிந்தவர்கள் அவனுக்கு உதவி புரிந்தனர். கடையில் நல்ல வருமானம் வந்தது. கையில் கொஞ்சம் காசு சேர்ந்தவுடன் தன் தந்தையைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. தம்பி தங்கையர் நினைவு வந்தது. ஒரு விடுமுறை நாளாகப் பார்த்துப புறப்பட்டான். அனைவருக்கும் புதுத் துணி மணிகள் இனிப்புகள் பலகாரங்கள் பழங்கள் என வாங்கிக் கொண்டு ஊருக்குச் சென்றான்.

வயதாகிவிட்ட தன் தந்தை இன்னமும் வயலில் வேலை செய்வதையும் தன் பெரிய தம்பி அவருடன் நடவு செய்து கொண்டிருப்பதையும் பார்த்தான். அவர் முன் சென்று வணங்கி நின்றான். அடையாளம் தெரிந்து கொள்ளாத முருகன் திகைத்தார். தன் மகன் கேசவன் என்பதைத் தெரிந்து கொண்டபின் அவனைக் கட்டித் தழுவிக் கொண்டார். மகிழ்ச்சியில் அவர் கண்கள் நீரைச் சொரிந்தன.

"அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர்
புண்கணீர் பூசல் தரும்" அன்றோ?

அனைவரும் அவனைத் தழுவி மகிழ்ந்தனர். அவர்களுக் கெல்லாம் கேசவன் வளமுடன் வந்ததில் மிக்க மகிழ்சசி.

" அப்பா! எல்லாரும் என்கூட வந்திடுங்க. உங்களை உக்கார வச்சு சோறு போடறேன். தம்பி தங்கச்சியைப் படிக்க வைக்கிறேன். இன்னும் ஏனப்பா கஷ்டப் படுறீங்க?" என்ற கேசவனைப் புன்னகையுடன் பார்த்தார் முருகன்.

" இந்த உடம்பு உழைச்சுச் சாப்பிடற உடம்புப்பா .உக்கார இன்னும் காலம் வரலே. அந்தக் காலம் வரும்போதும் நீ என்னைக் காப்பாத்து. நாங்க சேத்திலே காலை வச்சாத்தாம்பா பட்டணத்துக்காரங்க

சோத்திலே கையை வைக்க முடியும். நீ நல்லா இருக்கே அதுபோதும் எனக்கு. உன் பெரிய தம்பியைக் கூட்டிக் கிட்டுப்போ . நல்லா வளமா இருங்கப்பா." என்றபடியே பேச்சை முடித்துக்கொண்டார்.

இரண்டு நாட்கள் மகிழ்ச்சியுடன் தீபாவளிப் பண்டிகை கொண்டாடி விட்டுத் தன் தம்பியுடன் ஊர் திரும்பினான் கேசவன். மறக்காமல் அடுத்த தம்பி தங்கைகளைப் பள்ளியில் சேர்த்து விட்டுத்தான் வந்தான்.

வீட்டுக்குள் வந்தவுடன் சாமி படத்தின் முன் ஒரு கலயம் இருப்பதைப் பார்த்து "என்ன அண்ணே இது?" என்று ஆச்சரியத்துடன் கேட்டான் தம்பி.

" இதுவா? வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பதை நினைவு படுத்தத்தான் இந்தக் கலயத்தை வைத்திருக்கிறேன். என் ஆரம்ப நாட்களின் நினைவுச் சின்னம் இது " என்று சொன்ன அண்ணனைப் புரியாத புன்னகையுடன் பார்த்தான் தம்பி.

செவ்வாய், 21 ஜூலை, 2009

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் - முதல் பகுதி

பொன்வயல் ஒரு கிராமம். அந்தக் கிராமத்தில் முருகன் வயலில் நாற்று நாடும் வேலை செய்து பிழைத்து வந்தான். அவனுக்கு கேசவன் என்ற ஒரு மகன் இருந்தான். அவன் ஒரு வயதாக இருக்கும்போதே அவனது தாயார் இறந்து விட்டார். குழந்தை கேசவனை வளர்க்க இயலாமல் முருகன் இரண்டாம் முறை மணந்து கொண்டார். கேசவன் ஐந்து வயது முதலே தந்தையுடன் வயலுக்குச் சென்று நாற்று நடும் வேலை செய்து வந்தான்.

அவனுக்குப் பின்னால் தம்பி தங்கை என்று நான்கு பேர் பிறந்தனர். அதனால் கேசவனுக்கு வீட்டில் வேலை அதிகமானது. சுதந்திரமாக சுவாசிக்க முடியாமல் அந்தச் சின்ன குடிசைக் குள்ளே அவன் வாழ்வு முடங்கிப் போனது. அத்துடன் அவன் சின்னம்மாவின் கடுஞ் சொற்கள் வேறு. சிறுவனான அவனுக்கு வாழ்வே வெறுத்து விட்டது.

ஒரு நாள் நல்ல வெய்யில் நேரம். கஞ்சி எடுத்துக் கொண்டு தந்தையைத் தேடி வயலுக்குச் சென்றான் கேசவன். அவன் தந்தைக்குக் கஞ்சியைக் கொடுத்து விட்டு அந்த கலயத்தைக் கழுவி கையில் எடுத்துக் கொண்டு நடந்தான். தன் தந்தையை ஒரு முறை திரும்பிப் பார்த்தான். பின்னர் வேகமாக நடந்தான். அருகே உள்ள நகரத்தை நோக்கி அவன் கால்கள் நடந்தன. அவன் கண்கள் பாதை நோக்கி இருந்தன. உள்ளமோ சுதந்திரத்தை நாடித் துடித்துக் கொண்டிருந்தது. எப்படியேனும் வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற துடிப்பு அவன் முகத்தில் தெரிந்தது.

இருள் சேரும் நேரம். ஏதோ ஒரு வீட்டுத் திண்ணையில் படுத்து உறங்கினான். விடியும் முன்னரே எழுந்து நடக்கத் தொடங்கினான். பட்டணம் சென்று விட வேண்டும். ஏதேனும் வேலை செய்து பணம் சம்பாதித்துக் கொண்டு வந்து கஷ்டப்படும் தந்தைக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணமே அவன் உள்ளம் முழுவதும் நிறைந்திருந்தது. பன்னிரண்டு வயது பாலகன் அழுக்குப் பனியன் மட்டுமே அணிந்து கையில் சிறு கலயத்துடன் நகரை அடைந்தான்.

அவன் நகரத்துள் நுழைந்து ஏதோ ஒரு தெருவை அடைந்து பசியுடன் ஒரு வீட்டின் முன் நின்றான். பிச்சை எடுக்க மனமில்லை.பசியோ வயிற்றைப் புரட்டியது. அப்படியே சாய்ந்து அமர்ந்தான். அந்த வீட்டிலிருந்த ஒரு அம்மாள் கையில் பாத்திரத்துடன் வெளியே வந்தாள்.

"இந்தாப்பா தம்பி இந்த மோரைக் குடிக்கிறயா?" என்றபடியே மோரை அவன் கலயத்தில் இட்டாள். அந்த மோர் அவனின் சிறிய வயிற்றுக்குப் போதுமானதாக இருந்தது. மடமடவெனக் குடித்தான். புளித்த மோராக இருந்தாலும் வயிற்றின் பசி எரிச்சலுக்கு அந்தப் புளித்த மோர் உகந்த மருந்தாக இருந்தது. மோரைக் குடித்தவன் " அம்மா! ஏதாவது வேலை இருந்தாக் குடுங்கம்மா! " என்றான். அதற்கு அந்த அம்மாள், "வேலையெல்லாம் ஒன்றுமில்லையப்பா. ஏற்கெனவே வேலையில்லாமே ரெண்டு பசங்க உட்கர்ந்திருக்குங்க " என்று முணுமுணுத்து விட்டுச் சென்றாள்.

புதன், 15 ஜூலை, 2009

நம்பினோர் கெடுவதில்லை

ஓர் ஊரில் ஓர் ஏழைச்சிறுவன் தன தாயுடன் வசித்து வந்தான். அவன் பெயர் கோபால். தந்தை இறந்து விட்டதால் இருவரும் மாடுகளை மேய்த்து வாழ்ந்து வந்தனர். மிகவும் ஏழையானாலும் தன மகனைக்கல்வி அறிவுள்ளவனாக்க அவன் தாய் விரும்பினாள். எனவே அடுத்த ஊரில் உள்ள ஒரு குருவிடம் கல்வி கற்க அனுப்ப எண்ணினாள்.

ஒரு நாள் தன மகனை அழைத்தாள். " கோபால்! நீ ஒரு குருவிடம் சென்று கல்வி பயின்றால் தான் உன் வாழ்வு வளமாக இருக்கும். எனவே நீ அடுத்த ஊரில் உள்ள குருவிடம் கல்வி கற்க சென்று வா." என்று கூறினாள் கோபாலுக்கு வெகு தொலைவு சென்று படிக்க தயக்கமாக இருந்தது. அத்துடன்வழியில் ஒரு காடு இருந்தது. தனியே அந்தக்காட்டை கடந்து செல்ல வேண்டுமே என்ற அச்சமும் இருந்தது.எனவே தன தாயிடம் தயக்கத்துடன் கூறினான்."அம்மா! அடர்ந்த காட்டினூடே தனியாக நடந்து செல்ல பயமாக உள்ளதம்மா "

"கோபாலா! பயப்படாதே. நாம் வணங்கும் கிருஷ்ணர் உனக்குத்துணையாக இருப்பார்."

"எனக்குத்துணையாக அவர் வருவாரா அம்மா ?"

"கட்டாயம் வருவாரப்பா. உனக்குப்பயமாக இருந்தால் நீ கண்ணா கண்ணா என்று உரக்கக் கூப்பிடு. உனக்குத்துணையாக அந்தக்கண்ணன் கட்டாயம் வருவார்."

தாயின் வார்த்தைகளால் மன நிம்மதி யடைந்தான் கோபால் .மறுநாள் குருவின் வீட்டை நோக்கி நடந்தான். அவன்தாய் அவனை மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தாள். விரைவாக நடந்த கோபால் நடுக்காட்டை அடைந்தான்.காட்டின் அமைதியும் காற்றின் ஒலியும் அவனுக்கு அச்சத்தை ஊட்டின அவனுக்குத் தன தாயின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தன. உடனே உரக்க " கண்ணா! கண்ணா! நீ எங்கிருக்கிறாய் ? எனக்குத்துணையாக வா கண்ணா!" எனக்கூவி அழைத்தான். உரக்கக்குரல் எழுப்பியவாறே காட்டில் நடந்து சென்றான் கோபால்.

திடீரென்று அவன் எதிரே ஒரு சிறுவன் கையில் கோலுடனும் குழலுடனும் வந்து நின்றான். கோபலனைப்பர்த்து ச சிரித்தான். அவனைப்பார்த்த
கோபால் " நீதான் கண்ணனா? நீதான் எனக்குத்துணையாக வருவாய் என என் அம்மா சொன்னார்களா?" என்றான் மெதுவாக.
புன்னகை புரிந்த கண்ணன் கோபாலின் கரங்களைப் பற்றிக்கொண்டான்.
"ஆமாம் நாந்தான் கண்ணன். இந்தக்காட்டிலே மாடு மேய்ப்பவன். என்னைப்பற்றி உன் அம்மா சொன்னார்களல்லவா? "
" ஆமாம் சொன்னார்கள். நீ தினமும் எனக்குத்துணையாக வருவாயா? "
" தினமும் நீ என்னை அழைத்தால் கண்டிப்பாகவருவேன்." என்று பேசியபடியே இருவரும் கை கோர்த்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் நடந்தனர்.

நாட்கள் கடந்தன. கோபால் தினமும் குருவிடம் சென்று கல்வி பயின்று வந்தான். ஒரு நாள் குருவிற்குப் பிறந்தநாள் வந்தது. அன்றைய தினம் மாணவர்கள் அனைவரும் குருவிற்கு ஏதேனும் பரிசளிக்க முடிவு செய்தனர். ஒவ்வொருவரும் தான் கொண்டுவரும் பரிசு பற்றிப்பெருமையோடு பேசினர். ஒருவன் " நான் வெள்ளித்தட்டு தருவேன்" என்றான். மற்றொருவன் நான் பட்டாடை பரிசளிப்பேன்" என்றான்.

பாவம் கோபால் என்ன செய்வான். ஏழையான அவன் தாய் எதைக் கொடுப்பாள்? தன்னால் குருவிற்கு ஒன்றும் கொடுக்க இயலவில்லையே என கோபால் மனம் வருந்தினான். இதைக்கண்ட அவன் தாய் மகனை அருகே அழைத்து "கோபாலா! உன் நண்பனை நீ தினமும் பார்க்கிறாயே அவனிடம் கேளேன்." என்றாள்.

கோபாலும் தன நண்பன் கண்ணனிடம் தன அசிரியருக்குத்தர பரிசொன்றைக் கேட்டான். கண்ணன் ஒரு தயிர் நிறைந்த பானையைக் கொடுத்தான். "இதையே உன் பரிசாகக்கொடு " என்றான். கோபாலும் அதை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டு ஆசிரியர் வீட்டை அடைந்தான். அங்கு மற்ற மாணவர்கள் அளித்த உயர்ந்த பரிசுப்பொருள்களைப் பார்த்து தன தயிர்ப்பானையை அவைகள் முன் தரத்தயங்கினான். யாருக்கும் தெரியாமல் அதை அனைவரும் சாப்பிடும் இடத்தில் வைத்துவிட்டான். விழா முடிந்தபின் அனைவரும் சாப்பிட அமர்ந்தனர். பரிமாறுவதற்குத் தயிர் இல்லை என்பதை அப்போதுதான் பார்த்தனர். ஒரே ஒரு பானை தயிர் மட்டும் உள்ளது இதை வைத்து பரிமாறுவோம் என நினைத்தார் ஆசிரியர். எனவே அந்தத்தயிரை வேறு பாத்திரத்தில் ஊற்றினர். பானையில் மீண்டும் தயிர் நிறைந்தது. மீண்டும் ஊற்ற மீண்டும் தயிர் நிறைந்தது. செய்தி அறிந்த அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.

" யார் இந்தத்தயிர்ப்பானையைக் கொண்டு வந்தது?" என விசாரித்தனர். அப்போது கோபால் தனக்குக்காட்டில் தன நண்பன் கொடுத்ததாகச்
சொன்னான்.

ஆசிரியர் நண்பனாக வந்தது இறைவனே எனப்புரிந்து கொண்டார். "கோபாலா! அந்த உன் நண்பனை எனக்குக்காட்டு " என்று அவனுடன் காட்டுக்கு விரைந்தார். அவருடன் மற்ற மாணவர்கள் அனைவரும் காட்டை நோக்கி நடந்தனர். காட்டுக்குள் நுழைந்த கோபாலன்," கண்ணா! கண்ணா! உன்னைக்காண என் ஆசிரியரும் நண்பர்களும் வந்துள்ளனர். வா கண்ணா!"
எனப்பலமுறை அழைத்தும் கண்ணன் வரவில்லை.

கோபாலனுக்கு அழுகை வந்தது. அழத்தொடங்கினான். அப்போது ஒரு குரல் கேட்டது. " கோபாலா! உண்மையான அன்புடனும் நான் வருவேன் என்ற நம்பிக்கையோடும் என்னை அழைத்தால் நான் வருவேன்.உன்னிடம் நான் வருவேன் எனக்கூறிய உன் தாயின் நம்பிக்கையை ப பொய்யாக்க விரும்பாமல்தான் நான் உன் முன் வந்தேன்.என் மீது உண்மையான பக்தியும் நம்பிக்கையும் கொண்டவர் முன்னால் மட்டுமே நான் வருவேன்.உன்னைப்பார்த்து மற்றவர்கள் நம்பிக்கையின் பெருமையைப் புரிந்துகொள்ளட்டும். வாழ்க! "என்று கூறிய கண்ணனின் குரல் மறைந்தது.
இத்தனை நாட்களாக கண்ணனுடன் பழகிவந்த கோபாலனை அனைவரும் பக்தியுடனும் அன்புடனும் வணங்கினர்.

பேரக்குழந்தைகளே! நாம் எந்த ஒரு சொல்லிலும் செயலிலும் நம்பிக்கை வைத்தால் அது கட்டாயம் நிறைவேறும் என்பதைப்புரிந்து கொண்டீர்களா?
நம்பினோர் கெடுவதில்லை என்ற மூத்தோர் சொல் எத்தனை உண்மையானது!