நட்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நட்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 8 நவம்பர், 2009

பிசிராந்தையார் நட்பு

பாண்டிய நாட்டில்  உள்ளது  பிசிர்  என்ற  ஊர்.ஆந்தையார்  என்பது  இவரது  இயற்பெயர்.ஆதலால்  பிசிராந்தையார்  என்று  அழைக்கப்பெற்றார்.  இவர்  சோழ  மன்னன் கோப்பெருஞ்சோழன்  மீது  அன்பு  கொண்டு  அவனைப்  பற்றிய  பாடல்களைப்  பாடியுள்ளார்.சோழனைக்  காணவேண்டும்  என்னும்  பேரவா  கொண்டிருந்தார்.  ஆனால்  பாண்டிய  நாட்டிலுள்ள  பிசிர்  வெகு  தொலைவு  உள்ளதால்  இவரால்  சோழ  நாட்டுக்குச்  செல்ல  இயலவில்லை.

இவரது புகழையும்  தமிழையும்  கேள்விப்பட்ட  சோழனும்  இவரைக்  காணவேண்டும்  என்னும்  அவா  கொண்டிருந்தான்.  எனவே  இருவரும்  உயிர்  ஒன்றாகவும்  உடல்  வேறாகவும்  வாழ்ந்து  வந்தனர். இருவரும்  தாம் ஒருவருக்  கொருவர் சந்திக்கும்  திருநாளை  ஆவலுடன்  எதிர்  பார்த்துக்  கொண்டிருந்தனர்.


கோப்பெருஞ்சோழனின்  தலைநகர்  உறையூர்.  இம்மன்னன்  பிசிராந்தையாரை  நேரில்  காணாமலேயே  அவருடன்  நட்புக் கொண்டவன்.  இவனது  ஆட்சி  நடந்துகொண்டிருக்கும்  போதே  இவனது  இரண்டு  புதல்வர்களும்  சோழ  ஆட்சிக்  கட்டில்  ஏறுவதற்காக  தந்தையுடன்  போரிடத்  துணிந்தனர்.


இதை  அறிந்த  கோப்பெருஞ்சோழன்  ஆட்சியை  விட்டு  வடக்கிருந்து  உயிர்  விடத்  துணிந்தான்.  அப்போது  தன்  மந்திரியிடமும்   மற்றையோரிடமும்   பிசிராந்தையார்  என்னைக்  காண  வருவார்.  என்னுடன்  வடக்கிருப்பார்.  அவருக்கும்  ஓர்  இடத்தைத்  தயார்  செய்யுங்கள்  எனக்  கூறினார்.    அதேபோல்  பிசிராந்தையாருக்கும்  ஒரு  இடம்  அமைக்கப்பட்டது.  நாட்கள்  கடந்தன.  சோழன்    பிசிரந்தையாரைக்  காணாமலேயே  வடக்கிருக்கத்  துணிந்தான்.   எப்படியும்  ஆந்தையார்  வந்து  விடுவார்  எனக்  கூறித்  தன்  தவத்தை  மேற்கொண்டான்.   


இவ்வுலக  வாழ்வைத்  துறக்க  விரும்பும்  மன்னவர்  வடக்கிருந்து  உயிர்  விடுதல்  அக்கால  மரபு.  வடக்கிருத்தல்  என்பது  தன்நாட்டில்  உள்ள  ஆறு  குளம்   போன்ற    நீர்  நிலைக்குச்  சென்று  அதன்  இடையே  மணல்  திட்டு  ஒன்றை    அமைத்து   வடக்கு  திசை  நோக்கி  அமர்ந்து  உண்ணாநோன்பிருந்து  உயிர்  விடுதல்.


தன்  மக்கள்  மீது  இருந்த   மனக்  கசப்பின்  காரணமாக  கோப்பெருஞ்சோழனும்   வடக்கிருந்தான்.
இதனைக்  கேள்விப்பட்டார்  பிசிராந்தையார்.  உடனே   சோழ  நாட்டை  நோக்கி  ஓடி  வந்தார்.
வழியில்  எதிர்ப் பட்டவர்  இவரைப்  பார்த்து  மிகவும்  ஆச்சரியப்  பட்டனர்."புலவரே!  நான்  என்  சிறுவயது  முதலே  தங்களைப்  பற்றி  என்  தந்தையார்   கூறக்  கேட்டிருக்கிறேன்.  தங்கள்  மிகவும்  வயதானவராக  இருப்பீர்கள்  என்று  எண்ணியிருந்தோம்.  தங்களோ  மிகவும்  இளமையாக  இருக்கின்றீர்களே, அது  எப்படி?"என்று  வியந்து  கேட்டனர்.  அதற்கு  மறுமொழியாக  ஆந்தையார்   ஒரு  பாடல்  பாடினார்.  புறநானூற்றில்  உள்ள  இப்பாடல்  நமது  வாழ்வியலுக்கு  மிகவும்  தேவையான  ஒன்று.


         " யாண்டு  பலவாக  நரையில வாகுதல்
          யாங்காகியர்  என வினவுதிராயின், 
           மாண்ட  என்  மனைவியொடு  மக்களும்  நிரம்பினர்
           யான்  கண்டனையர்  என்  இளையரும்   வேந்தனும் 
          அல்லவை  செய்யான்   காக்கும்  அதன்  தலை 
           ஆன்று  அவிந்து  அடங்கிய  கொள்கைச்
           சான்றோர்  பலர்  யான்  வாழும்  ஊரே."    



என்று  பாடிய  பாடல்  மூலம்  " வயோதிகரானாலும்  இளமையோடிருக்கும்  காரணத்தைக்  கேட்பீரானால்   சிறந்த  பண்புள்ள  மனைவி,  மக்கள்  குறிப்பறிந்து  பணி  செய்யும்  பணியாளர்கள்  அறத்தையே  நாடிச்  செய்யும்  மன்னன்  இத்துணை  பேருடன்  நன்கு  கற்று    நல்ல  பண்புகளுடன்  விளங்கும்  சான்றோர்  பலரும்  எம்மைச்  சூழ்ந்து  இருக்க  நான்  வாழ்வதால்  எனக்கு  நரை  தோன்றவில்லை.  மூப்பும்  எம்மை  அணுகவில்லை."   என்று  விளக்கினார்.   

சோழனின்  இறுதி  நேரம்  வந்துற்றபோது  பிசிராந்தையார்  ஓடிவந்தார்.  நண்பனைக்  கண்டார்  தனக்காக த்  தயாராக  அமைக்கப்பட்ட  இடத்தில்  வடக்கிருந்து  சோழனுடன்  தானும்   தன்  இன்னுயிர்  விடுத்தார்.


இச்செய்தியை    இக்காட்சியைக்  கண்ட   பொத்தியார்  என்னும்  புலவர்   தன்  பாடலில்  இதனைக்  கூறுகிறார்.


      "இசைமரபு  ஆக  நட்பு  கந்தாக
       இனியதோர்   காலை  ஈங்கு  வருதல்
       வருவன்  என்ற  கோனது  பெருமையும் 
       அது  பழுதின்றி  வந்தவன்   அறிவும்
       வியத்தொறும்  வியத்தொறும்   வியப்பிறந்தன்றே."


பிசிராந்தையார்  என்ற  புலவரும்  கோப்பெருஞ்சோழன்  என்ற  மன்னனும்  தம்முள்  காணாமலேயே  நட்புக்  கொண்டு  ஒன்றாக  உயிர்  நீத்த  இச்சிறப்பினை  இலக்கியங்கள்  நமக்கு  எடுத்து  இயம்புகின்றன.  இத்தகு  நண்பர்களை  நம்மால்  மறக்க  இயலுமா?

திங்கள், 19 அக்டோபர், 2009

அதியமானின் நட்பு

கடையேழு  வள்ளல்களில்  அதியமானும்  ஒருவன்.  இவனது  இயற்பெயர்   நெடுமான் அஞ்சி  எனப்படும். இவன்  அதியமான் எனவும்  வழங்கப் பட்டான்.  அதிகை  என்ற  ஊரில்  வாழ்ந்திருந்து  பின்னர்  சேர நாட்டில்  குடி ஏறியவனாக இருத்தல்  வேண்டும்.  அதனால்  அதிகமான்  எனவும்  வழங்கப்பட்டான்  எனவும்  கூறுவர்.  இம்மன்னனின்   தலைநகரம்  'தகடூர்'.  இது  தற்போது  தர்மபுரி  என  வழங்கப்படுகின்றது.   ஒளவையார்  இம்மன்னனைப்  பற்றி  பல பாடல்களைப்  பாடியுள்ளார்.  இப்பாடல்கள்  மூலம்  இவனது  கோடை,  வீரம்  வள்ளல்தன்மையினைப்  பற்றித்  தெரிந்து  கொள்ளலாம்.  பல  வரலாற்றுச்  செய்தியினையும்  தெரிந்து  கொள்ளலாம்.

ஒரு  முறை  தொண்டைமான்  என்னும்  மன்னன்  அதியனுடன்  போருக்குத்  தயாரானான்.  அதியன்  அமைதியை  விரும்பினான்.  அதியனுக்காக   ஒளவையார்   தூது  சென்றார்.  ஒளவையாரை  வரவேற்ற  தொண்டைமான்  தனது  படைக்  கலங்களைக்  காட்டிப்  பெருமைப்  பட்டுக்  கொண்டான்   அவனது  கர்வத்தை  ஒடுக்கவும்  அதியனின்  வீரத்தைத்  தெரிவிக்கவும்  பாடல்  ஒன்றைப்  பாடினார்  ஒளவையார்.
'இவ்வே  பீலியணிந்து  மாலை  சூட்டிக்
 கண்திரழ்  நோன்காழ்  திருத்தி  நெய்யணிந்து                                                                                                                     கடியுடை  வியனகரவ்வே,  அவ்வே
பகைவர்க்  குத்திக் கோடுனுதி சிதைந்து
கொல்துறைக்  குற்றிலமாதோ '..............................
.......................'   இப்பாடல்   மூலமாக  தொண்டைமானின்  படைக்  கலங்கள்  போர்க்களத்தைப்  பாராததால்  புதியதாக   நெய்யணிந்து  மாலை  சூட்டிக்  கொண்டிருப்பதாகவும்,      ஆனால்  அதியனின்  படைக்  கலங்களோ  எப்போதும்  போர்க் களத்திலேயே  இருந்து  பகைவரைக்  குத்திக்  கிழிப்பதால்  முனை  முரிந்து
கொல்லன்  உலைக் களத்திலே  கிடக்கின்றன.'  என்று  பாடியதைக்  கேட்ட  தொண்டைமான்  தன்னைப்  புகழ்வது  போலப்  பழித்தும்  அதியனைப்  பழிப்பது  போலப்  புகழ்ந்தும்  பாடியதைப்    புரிந்து  கொண்டு  போரை நிறுத்தி 
சமாதானம்   செய்து  கொண்டான்..


மற்றொருமுறை  அதியனுக்குத்  திரை  செலுத்தாதவரைத்  தேடிச் சென்று  அதியனின்  வாள்  திறம்   வேலின் உறுதி  யானைப்  படையின்  வீரம்  பற்றி  எடுத்துக்  கூறி  அவர்களைத்  திறை  செலுத்தும்படி  செய்தார்.   பின்னர் மலாடர் கோமானுடன்போரிட்டு  வென்ற  செய்தியைப்  புகழ்ந்து  பாடி  மகிழ்ந்தார்.  இவ்வாறு  அதியன்  மீது  கொண்ட  அன்பால்  அவன்  மீது  பலபாடல்களைப்  பாடி  மகிழ்ந்த  ஒளவையார்  ஒரு  முறை  அதியனைக்  காணச்  சென்றார்.  புலவர்களின்  வழக்கப்படி  பரிசிலை  நாடிச்  சென்றார்.  பல  நாட்கள்  அதியனின்  அரண்மனையில்  விருந்தினராய்  இருந்தார்.  



அதியன்  பரிசில்  தராமல்  காலம் தாழ்த்தினான். ஒளவையார்  மீது  கொண்ட  பேரன்பால்  பரிசில்  கொடுத்து  விட்டால்  அவர்  தன்னைப்  பிரிந்து  சென்று  விடுவார்  என்று  எண்ணியே  காலம்  தாழ்த்தினான்.  ஒளவையார்  'ஒரு  நாள்  பழகினாலும்  பலநாள்  பழகினாலும்  முதல்  நாள்  போலவே  என்றும்  அன்பு  செலுத்துபவன்  அதியன்.  அவன்  பரிசில்  தராவிடினும்   யானையின்  கொம்பிடை  வைத்த  உணவு  எப்படி  யானைக்குத்  தப்பாதோ  அதுபோலத்  தப்பாமல்  அவனது  பரிசில்  நமக்குக்  கிட்டும்.  மனமே  வருந்தாதே. அவன்  வாழ்க'  என  வாழ்த்திவிட்டுப்  புறப்பட்டார்.  இதனைக்  கேள்வியுற்ற  அதியன்  ஓடோடி  வந்து  ஒளவையாரிடம் மன்னிப்புக்  கேட்டுக்கொண்டு  பரிசிலைக்  கொடுத்தான்.  இப்பாடல்  மூலமாக  புலவர்கள்  ஒரு இடத்தில்  தங்காதவர்கள்  என்று  தெரிந்து  கொள்ளலாம்.  அத்துடன்  ஒளவையார்  மீது  அதியன்  கொண்டுள்ள  அன்பையும்   இந்நிகழ்ச்சி  காட்டுகிறது.  அதியமான்  ஒளவையாரிடம்  கொண்ட  அன்பினை  எடுத்துக்  காட்டும்  நிகழ்ச்சிகளிலேயே  மிகச்  சிறந்த  நிகழ்ச்சி  ஒன்று  உண்டு.  அதுதான்  நெல்லிக்கனி  அளித்த  செயல்.  அதியன்  மிகவும்  பாடுபட்டுப்  பெற்ற  நெல்லிக்கனி.  அதனை  உண்டவர்  நீண்ட  நாள்  வாழ்வார்கள்  என்னும்  சிறப்பினைப்  பெற்றது  அக்கனி.  அத்தகு  கனியைத்   தான்  உண்ணாது  ஒளவைக்குக் கொடுத்தான்  அதியன்.  


ஆதலால்  அக்கொடையை   நினைத்து  ஒளவையார்  நீ  சிவ பெருமானைப்  போல வாழ்வாயாக  என  வாழ்த்தினார். தன்னைப்  போல  மன்னர்  பலர்  தோன்றுவர்.  ஆனால்  ஒளவையாரைப்  போலப்  புலவர்கள்  சிலரே  தோன்றுவர்  எனவே  அவர்   நீண்ட  நாள்  வாழ்ந்து  தமிழுக்குத்  தொண்டு  செய்ய  வேண்டும்  என்ற  எண்ணத்தினால்  ஒளவையாருக்கு  இக்கனியைக்  கொடுத்தான்  அதியன்.  அத்துடன்  அக்கனியின்  சிறப்புக்களை  மறைத்து  ஒளவையார்  அக்கனியினை  உண்ட  பிறகே  அதன்  சிறப்புக்களை பற்றிக்  கூறினான்   .எனவே  அவனது  அன்புள்ளம்  புலனாகிறது   அதியனின்  வீரத்தை  முதலில்  கூறிப்  பின் வாழ்த்துகிறார்.அப்பாடல்,
'.............................
...........................
பால்புரை  பிறைநுதல்  பொலிந்த  சென்னி
நீல மணிமிடற்று  ஒருவன்  போல
மன்னுக  பெரும  நீயே  தொனனிலைப்
பெருமழை  விடரகத்து  அருமிசை  கொண்ட 
சிறியிலை  நெல்லித்தீங்கனி  குறியாது
ஆதல்  நின்னகத்து  அடக்கிச்
சாதல்  நீங்க  எமக்கு  ஈத்தனையே.'  என்ற  பாடல்  அதியமான்  ஒளவையார்  மீது  கொண்ட  நட்பையும்  அன்பையும்  புலப்படுத்துகிறது.

செவ்வாய், 1 செப்டம்பர், 2009

கபிலரின் நட்பு

பாண்டிய நாட்டின் தலைநகராகத் திகழ்ந்தது மதுரை மாநகர். இந்நகரின் கிழக்குப் பகுதியில் உள்ளது வாதவூர் என்னும் சிற்றூர். இச்சித்ரூரில் பிறந்தவர் தான் கபிலர் என்னும் செவி வழிச் செய்தி நிலவுகின்றது. 'புலனழுக்கற்ற அந்தணாளன் ' எனச் சங்கத்துச் சான்றோரால் பாராட்டப் பெற்றவர்.

வாதவூர் என்பது தென்பறம்பு நாட்டைச் சார்ந்தது. பறம்பு நாட்டை வேள்பாரி என்ற மன்னன் ஆண்டு வந்தான்.வேள்பாரியின் பால் மாறாத அன்பு கொண்ட கபிலர் பாரியின் உயிர் நண்பனாக அவனுடனேயே வாழ்ந்து வந்தார்.அன்பும் பண்பும் கொண்ட அந்தணராகிய கபிலர் பெரும் புலமை பெற்றவர்.பாரியின் அவைக்களப் புலவராகவும் திகழ்ந்தார்.செந்தமிழ்ப் பாக்கள் இயற்றும் சிறப்பு காரணமாக வேந்தர் பலரையும் இவர் சென்று கண்டு பரிசில் பெறுவதும் உண்டு.

ஒருமுறை சேர நாட்டை நாடிச் சென்றார். அப்போது அந்நாட்டை ஆண்டவன் செல்வக்கடுங்கோ வாழியாதன் என்னும் மன்னன்.அவனைச் செந்தமிழால் சிறப்புச் செய்தார் கபிலர்.அவரது பாடலின் சிறப்பைக் கேட்டு வியந்த மன்னன் கபிலருக்கு நூறாயிரம் காணம் பொன் கொடுத்ததுடன் "நன்றா" என்னும் குன்றின் மீது ஏறி நின்று தன் கண்ணிற் கண்ட இடமெல்லாம் புலவருக்குக் கொடுத்தான். பிற்காலத்தில் இவ்விடம் " நணா" என மருவியது. இதனைச் சூழ்ந்த பகுதிகள் கபிலருக்குக் கொடுக்கப் பட்டமைக்குச் சான்றாக அங்கே கபிலக் குறிஞ்சி என்ற ஊர் இன்னும் உள்ளது.

கபிலரது பாடல்களில் குறிஞ்சி நில வர்ணனைகளே மிகுந்து காணப் படுகின்றன. மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி எனப்படும் . மலையும் அருவியும், சுனையும் தேனடையும், பலாவும் இவர் பாடல்களில் அழகு சேர்ப்பன. இவ்வாறு குறிஞ்சி நிலத்தைப் பலபடப் பாடிய திறத்தால் "குறிஞ்சிக்குக் கபிலன்" என்ற பெயரையும் பெற்றார்.

ஆரிய நாட்டு மன்னன் பிரகத்தன் என்பான் சேர மன்னன் செல்வக் கடுங்கோவின் சிறந்த நண்பன். இவனது துணையால் கபிலரின் நட்பைப் பெற்றான். தமிழில் காணப்படும் அகப்பொருள் நலத்தை அறிய விரும்பிய பிரகத்தன் அதனை விளக்கிக் கூறுமாறு கபிலரைக் கேட்டான். அவனுக்காக கபிலர் எழுதிய நூல் "குறிஞ்சிப் பாட்டு" எனப்பட்டது. இந்த நெடும் பாட்டு தமிழகத்தின் ஒழுக்கத்தின் மாண்பினை எடுத்துக் கூறுவதாக அமைந்துள்ளது.

ஒருமுறை காட்டின் வழியே நடந்து செல்லும் கபிலர் வழியில் ஆண் பன்றி நின்று கொண்டிருப்பதைக் காண்கிறார்.அவரது கற்பனை விரிவடைந்து பாடலாக வருகிறது. அப்பாடலின் கருத்து, " தன் குட்டிகளோடு பெண் பன்றி படுத்திருக்கிறது. அவற்றை வேட்டுவரும் அவரது நாய்களும் அணுகாதவாறு வெருட்டி ஓட்டியது ஆண் பன்றி. பின்னர் தனது பெண் பன்றியையும் அதன் குட்டிகளையும் வேறிடத்தில் சேர்த்து விட்டுக் காவலாக வழியிலேயே நின்று கொண்டிருந்தது. அதனைப் பார்த்த வேட்டுவன் " படைமறவரோடு அஞ்சாது போரிடும் தன் தலைவனைப் போல் அதன் செயல் இருப்பது கண்டு அதனைக் கொல்லாது விட்டுச்சென்றான்." என்ற கருத்தமைந்த பாடல் இவரது குறிஞ்சி பாடும் திறமைக்குச் சான்றாகும்.இவரது உயிர் நண்பன் வேள்பாரி மூவேந்தரின் வஞ்சனையால் இறந்து பட்டான். அவன் பிரிவுக்குப் பெரிதும் வருந்திய கபிலர் பாரியுடன் தானும் உயிர் விடத் துணிந்தார்.ஆனால் பாரியின் வேண்டுகோள் காரணமாக அச்செயலைக் கபிலர் செய்யாது விடுத்தார். பாரியின் மக்கள் அங்கவை சங்கவை என்ற இரண்டு பெண்களையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு பல மன்னர்களையும் நாடிச் சென்றார். மூவேந்தரின் பகைக்கு அஞ்சியோ யாது காரணம் பற்ற்யோ எந்த அரசரும் அம மகளிரை மணந்து கொள்ள முன் வரவில்லை. கபிலர் எத்துணை முயன்றும் அவரது முயற்சி பயன் தரவில்லை. முடிவில் மலையமான் நாட்டுத் தலைநகர் திருக்கோவலூரை அடைந்தார்.அங்கே வாழ்ந்த பார்ப்பனர் ஒருவரிடம் பாரியின் மக்களை அடைக்கலப் படுத்தினார்.பார்ப்பனரிடத்திலுள்ள பொருட்கும் உயிர்கட்கும் எவ்விதத் தீங்கும் செய்தலாகாது என்பது அந்நாளைய முறை.அத்துடன் பெண் கேட்டு அதுவே காரணமாகப் போரிடுவதும் இல்லை. இதனை நன்கறிந்திருந்த கபிலர் பாரியின் மக்களை பார்ப்பனரிடம் அடைக்கலப் படுத்தித் தன் பெருஞ்சுமையை விளக்கிக் கொண்டார்.

உயிர் நண்பன் பாரியின்றி இந்நிலவுலகத்தில் வாழ்வதையே பெருஞ்சுமையாகக கருதினார் கபிலர். பாரியின்றி வாழும் கபிலர் உயிரற்ற உடல்போல் உணர்ந்தார்.இம்மையில் பிரிந்து விட்ட பாரியை மறுமையில் இணைந்து வாழ விருப்பம் கொண்டவரானார்.தென் பெண்ணை ஆற்றுக் கரையில் வடக்கு நோக்கி அமர்ந்து உண்ணா நோன்பிருந்து உயிர் விட்டார் கபிலர். அப்போது அவர் பாடிய பாடலில் பாரியின் மறைவுக்கு அவர் வருந்திய வருத்தமும் நண்பனின் பிரிவால் அவர் பட்ட துயரமும் நன்கு புலனாகும்." மாவண் பாரி ! என்னை நீ பலகாலம் பேணிக் காத்தாய். அது போழ்து ஏன் உயிர் நண்பனாக இருந்தாய்.ஆனால் நீ இவ்வுலகை விட்டுப் பிரியுங்கால் என்னை உன்னுடன் வரவிடாது "இங்கேயே இருந்து பின் வருக" என்று கூறிச் சென்று விட்டாய். இனியும் உன்னைப் பிரிந்து என்னால் தனித்து வாழ இயலாது. இப்பிறவியில் நம்மை நட்பால் சேர்ந்து வாழச் செய்த நல்லூழ் மறுமையிலும் உன்னுடன் வாழும் வாழ்வை ஈவதாக!" என்று பாடி மறைந்தார்.இன்றும் கோவலூர் அருகே கபிலக்கல் ஒன்று இருக்கிறது.அது கபிலரின் வடக்கிருந்த செய்தியைக் கூறிக்கொண்டிருக்கிறது. நட்பு என்றதும் வேள்பாரி கபிலரின் நட்பு நமக்கு நினைவுக்கு வரும் அளவிற்கு வாழ்ந்து மறைந்தவர் கபிலர். இவரது குறிஞ்சிப் பாட்டு நூல் தவிர ஐங்குறுநூறு என்னும் நூலில் குறிஞ்சித்திணை பற்றிய நூறு பாடல்கள் பாடியுள்ளார்.

இவையேயன்றி அகம் புறம் பதிற்றுப் பத்து கலித் தொகை குறுந்தொகை நற்றிணை பத்துப்பாட்டு நூல்களிலும் இவரது பாடல்கள் இடம்பெற்றுள்ளன.புலவர் வரிசையில் கபிலருக்குத் தனிச் சிறப்பிடம் உண்டு என்பதில் ஐயமில்லை.