சனி, 14 ஜூலை, 2012

92-நம்பிக்கையின் சிறப்பு.

ஒரு ஊரில் ஒரு பண்டிதர் வாழ்ந்து வ்ந்தாr.அவர்  பெரும்   கல்விமானாக இருந்தார்.சமஸ்கிருத மொழியில் மிகவும் பண்டிதராக விளங்கினார். தினமும் ஊரிலுள்ள மக்களுக்கு   பாகவதக்
கதைகளைச் சொல்லி வ்ந்தார்.
.அவ்வூரிலுள்ள மக்களும் இவர் சொல்லும் கதைகளைப  பிரியமாகக் கேட்டு வந்தனர்.
அக்கம் பக்கத்து ஊர்களிலிருந்தும் மக்கள் இவரைக்  கதை கூறும்படி தங்கள் ஊருக்கு அழைத்துச் சென்றனர்.
ஒரு நாள் இவர் கதை சொல்லிக் கொண்டிருக்கும்போது ஒரு திருடன் திருடுவதற்காக உள்ளே நுழைந்தான். மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கவே கூட்டத்தோடு சேர்ந்து அமர்ந்து கொண்டான்.
அன்று பாகவதம் பத்தாவது சர்க்கம். கிருஷ்ண லீலை பற்றியும் கிருஷ்ணரின் அழகை வர்ணித்தும் கதை கூறினார். அந்தக் கதையில் மெய்மறந்து அமர்ந்திருந்தான் திருடன்.
கதை முடிந்து கூட்டமும் கலைந்தது.
பண்டிதரும் தனக்குக் கிடைத்த தட்சணைப் பணத்தை எடுத்துக் கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டார். சற்றுத  தொலைவு நடந்தவுடன் திருடன் அவரைப் பின் தொடர்ந்தான்.அவரிடம் இருந்த பணத்தைத் திருட எண்ணி அவர் முன் சென்று அவரை வழி மறித்தான். அச்சத்துடன் தன் பணத்தைக்  கெட்டியாகப் பிடித்துக் கொண்ட பண்டிதர் "ஏனப்பா. நான் ஏழை என்னிடம் இருக்கும் சிறு தொகையால் உனக்கு எந்தப் பயனும் இல்லை. பணக்காரராகப் பார்த்துப் போயேன்."என்றார் நடுங்கியபடியே.
திருடன் சிந்தித்தான்."அப்படியானால் நீ கதையில் சொன்னாயே, அந்த ராஜகுமாரன், அவன் எங்கிருக்கிறான் சொல்.அவனிடம் அவன் அணிந்திருப்பதாக நீ சொன்ன நகைகளைக் களவாடிக் கொள்கிறேன்"என்றான்.
பண்டிதர் சிந்தித்தார்.கதையிலே தான் சொன்ன கிருஷ்ணனின் அலங்காரத்தைப் பற்றித்தான் இவன் கேட்கிறான் என்று புரிந்து கொண்டார்.கண்களை மூடி கண்ணனை வேண்டிக்கொண்டார்."கண்ணா, ஆபத்திலிருந்து நான் தப்பிக்க உன் பெயரைக் கூறுகிறேன்.
அருள்செய் கண்ணா"என்று வேண்டிக்கொண்டு.திருடனைப் பார்த்துச் சொன்னார்.
"ஆமப்பா, அந்த ராஜகுமாரன் இந்த ஊருக்கு வடக்கே ஐந்து கல் தொலைவில் உள்ள காட்டுப் பகுதிக்கு மாடுகளை மேய்த்துக் கொண்டு வருவான்.அங்கே ஒரு பாறை இருக்கும் அருகே ஒரு புன்னைமரமும் இருக்கும்.அங்குதான் மாடுகளை மேய விடுவான்."
"சரி அவன் வருகிறான் என்று நான் எப்படித் தெரிந்து கொள்வது?"
"அவன் வரும்போதே சுற்றிலும் மணம் வீசும் புல்லாங்குழலின் ஓசை கேட்கும். அப்போது அவன் வருகிறான் என்று நீ தெரிந்துகொள். சமயம் பார்த்து அவன் நகைகளைக் களவாடிக் கொள்."என்று சொன்னதைக் கேட்டு திருடன் மனம் மாறினான்.
"அப்படியானால் சரி.அவனிடம் நிறைய நகைகள் நீ சொன்னபடி கிடைத்தால் உனக்கும் பங்கு தருகிறேன்.இல்லையேல் மீண்டும் உன்னைத் தேடி நான் வருவேன்.நீ போகலாம் "
பண்டிதர் திருடன் நம்மைத் தேடி மீண்டும் வருவதற்குள் நாம் வேறு ஊருக்குப்போய் விடலாம் என்று என்ணிக் கொண்டே வேகமாக அங்கிருந்து நடந்தார்.
திருடனும் வடதிசையில்  பண்டிதர் சொன்ன இடத்தை அடைந்தான்.அவன் மனம் முழுவதும் அந்தச் சிறுவனின் தோற்றமே நிறைந்திருந்தது.அந்த ராஜகுமாரன் எப்போது வருவான் என்று ஆவலே வடிவாய் புதர் மறைவில் ஒளிந்திருந்தான்.
அதிகாலை நேரம் சற்றும் தளராமல் கண்ணனையே  எண்ணி அவன் எப்போது வருவான் எப்போது வருவான் என திசையெங்கும் சுற்றிப் பார்த்து அமர்ந்திருந்தான் அந்தத் திருடன். பசி தாகம் தூக்கம் எதையும் அவன் லட்சியம் செய்யவில்லை.வெள்ளி முளைத்தது. புள்ளினங்கள் கூவத் தொடங்கின. "என்ன இன்னும் அந்தச் சிறுவனைக் காணோமே" என்று ஏங்க ஆரம்பித்தான் திருடன்.
திடீரென்று அவன் மூக்கு நல்ல மணத்தை நுகர்ந்தது. மெல்லிய குழலோசையும் கேட்கவே அருகே இருந்த மரத்தின் மேல் ஏறி தொலைவில் பார்த்தான். அழகே வடிவாக உடம்பு நிறைய நகைகளுடன் அந்தக் கண்ணன் தெரிந்தான். வேக வேகமாக மரத்தைவிட்டு இறங்கி புதரில் மறைந்து கொண்டான்.
மாடுகளை மேயவிட்டு குழல் ஊதி யபடி புன்னை மரத்தடியில் அமர்ந்தான் அந்த ராஜகுமாரன்.
உடனே அவன் முன் தோன்றிய திருடன் அவன் முன் சென்று "ஏய் சிறுவனே உன் நகைகளைக் கொடுத்துவிடு.இல்லையேல்..."என்று மிரட்டினான்.
"வேண்டுமானால் நீயே கழற்றிக் கொள்"என்றான் கண்ணன் புன்னகையுடன்.
திருடன் வேகமாக நகைகளைக் கழற்றத் தொடங்கினான்.ஆனால்கண்ணனின்  உடலைத் தொட்டவுடன் மின்சாரம் பாய்ந்ததுபோல் உணர்ந்தான். உள்ளமும் உடலும் பரவச நிலையை அடைந்ததை உணர்ந்தான்.
அவன் முன் நின்று கூர்ந்து பார்த்தான்."நீ யாரென்று தெரியவில்லை ஆனால் உன் நகைகளைக் கழற்ற மனம் வரவில்லை. உன்னைப் பார்த்துக் கொண்டே இருக்கவேண்டும் போல் இருக்கிறது. தினமும் இதே  நேரம் வந்து நான் உன்னைப் பார்ப்பேன். நீயும் வரவேண்டும். உன் நகைகளைக் காணவில்லை என்றால்   உன் பெற்றோர் உன்னைக் கோபிப்பார்கள். வேண்டாம் "என்று கண்ணனின் முன்  அமர்ந்து அவனையே பார்க்கத தொடங்கினான் திருடன்.
"பரவாயில்லை எடுத்துக் கொள்.எங்களிடம் இன்னும் நிறைய நகைகள் உள்ளன. நாளைக்கும் தருகிறேன் "என்றபடி நகைகளைக் கொடுத்தான்.
பதில் சொல்லத் தோன்றாமல் தன்னிலை மறந்து அவைகளைப் பெற்றுக் கொண்டு ஊருக்குள் ஓடி வந்தான் அந்தத் திருடன்.
நேராக பண்டிதர் வீட்டை அடைந்தான்.அவரிடம் கண்ணன் நகைகள் கொடுத்ததைக் கூறி நகைகளைக் காட்டினான்.பண்டிதரால் நம்பமுடியவில்லை. ஆனால் நகைகளைப் பார்த்து நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.
"அந்தச் சிறுவன் எங்கே இருக்கிறான் காட்டு" என்றபடி அவனுடன் ஓடினார் பண்டிதர். அதே மரத்தடியில் அமர்ந்து குழலிசைத்துக் கொண்டிருந்தான் கண்ணன்.
"அதோ பாருங்கள்."திருடன் காட்டிய திசையில் அவருக்கு ஒன்றுமே தெரியவில்லை.
"அய்யோ என் கண்ணுக்கு நீ தெரியவில்லையே கண்ணா மணிவண்ணா இந்தப் பாமரன் செய்த புண்ணியம் நான் செய்யவில்லையா. உன்னையே சதாகாலமும் ஜபித்துக் கொண்டிருக்கும் எனக்கு தரிசனம் கொடு." பண்டிதர் அழத் தொடங்கினார். கண்ணன் புன்னகையோடு நின்றிருந்தான்.
திருடனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.கண்ணன் அவன் கையைப் பற்றினான்.திருடனின்
அஞ்ஞானம் விலகியது. உடல் புல்லரிக்க கண்களில் நீர் மல்க கண்ணனின் பாதத்தில் வீழ்ந்தான்.
"ஐயா, பண்டிதரால்தான் உன் தரிசனம் எனக்குக் கிடைத்தது. அவருக்கும் உன் திவ்ய தரிசனத்தைக் காட்டு." என்று வேண்டிக் கொண்டான்.
"அப்படியானால் அவரது கையை நீ பற்றிக் கொள்."என்றான் கண்ணன். பண்டிதரின் கையைப் பற்றிக் கொண்டான் திருடன்.
நீலமேக வண்ணனாக அலங்கார சொரூபனாக அருள் பொங்கும் முகத்துடன் காட்சி கொடுத்தான் கண்ணன்.
அவர் உள்ளத்தில் தோன்றிய சந்தேகத்தைப் புரிந்து கொண்டு பேசினான் கண்ணன்.
"பண்டிதரே. உங்களுக்கு  பாண்டித்தியம் இருக்கிறது ஆனால் பக்தி இல்லை. ஆனால் திருட வந்தாலும் நம்பிக்கையும் என்னைக் காணவேண்டும் என்ற ஆசையும் கொண்டு காத்திருந்த இந்தப் பாமரனே உம்மை விட மேலானவன்.  இந்த நம்பிக்கை உம்மிடம் இல்லாததுதான் என் தரிசனம் உமக்குக் கிட்டத் தாமதமாயிற்று."
என்று கூறி இருவருக்கும் ஆசி கூறி மறைந்தான் கண்ணன்.
திருடனும் தன் திருட்டுத் தொழிலைவிட்டுபண்டிதரையே தனகுருவாகக கொண்டான். இருவரும் இறைவனின் தொண்டு செய்து   இனிதே வாழ்ந்தனர்.
கடவுளை நம்பினோர் கைவிடப் படார்.
























ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com