செவ்வாய், 4 ஜனவரி, 2011

56th story. கண் திறந்த கன்னி.

                                                               
       " பாட்டி சொல்லும் கதைகளைப் படிப்பவருக்கும் அவர்களின் குடும்பத்தார் நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். வளமும் நலமும்பெற்று பல்லாண்டு வாழ்க."
அன்புடன் பாட்டி,
ருக்மணி சேஷசாயி.

                                                                 கண் திறந்த கன்னி.

 மலைநாடு என்று ஒரு நாடு இருந்தது. அந்த நாடு வளம் மிகுந்து காணப் பட்டது. காலம் தவறாது மழை பொழிந்தது. விளைச்சலும் நன்றாக இருந்தது. 
ஆனால் அந்த நாட்டு மன்னனுக்குப் பெண்கள் அறிவாளியாக இருப்பதும்  கல்வி கற்பதும் பிடிப்பதில்லை. 
 அதனால் பெண்கள் பள்ளி சென்று படிப்பதைத் தடை செய்திருந்தான்.
அந்தநாட்டு ஆண்களும் இதை ஏற்றுக் கொண்டு தங்களின் மகன்களை மட்டும் பள்ளிக்கு அனுப்பி விட்டு சிறுமியரை வீட்டு வேலைசெய்யவும் கழனி வேலை செய்யவும் ஏவினர்.

ஆனாலும் நல்லசெழிப்பினால் செல்வ வளத்துடன் எல்லா செல்வங்களும் பெற்றிருந்தனர். அதனால் 
அந்தநாட்டு மக்கள் யாவரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர்.அந்த மலைநாட்டின் பின்னால் பெரிய மலைகள் இருந்தன.

அந்த மலைக்குகையில் ஒரு அரக்கன் வாழ்ந்து வந்தான்.அவனுக்கு அந்தநாட்டு மக்கள் மகிழ்ச்சியாய் வாழ்வது பிடிக்கவில்லை.அதனால் மழை தரும் மேகங்களை ஒரு பையினுள் அடைத்து அதைத் தன் இடுப்பில் செருகிக் கொண்டான். 

அதுமுதல் அந்த நாட்டுக்கு மழை பொழிவது நின்றது. மலைநாடும் தன் வளமிழந்தது. அந்தநாட்டு மன்னன் செய்வதறியாது திகைத்தான்.

ஒரு நாள் அவனது நாட்டுக்கு ஒரு அடியவர் வ்ந்தார்.அவர் பெரும் ஞானி. அவர் மன்னனின் முக வாட்டத்தைப் பார்த்துக் காரணம் கேட்டார்.
மன்னன் நாட்டு வளம் குன்றிய காரணம் யாதெனத் தெரியவில்லை எனக் கவலையுடன் கூறினான்.
அதைக் கேட்ட முனிவர் புன்னகை புரிந்தார். தன் ஞானத்தினால் காரணத்தைக் கண்டார்.அவர் 

மன்னனிடம் "அரசே! கவலை வேண்டாம். மழையைப் பிடித்து மடியில் மறைத்து வைத்துள்ளான் ஒரு அரக்கன். அந்த அரக்கனை வென்றால் மட்டுமே மேகத்தை விடுவிக்க முடியும்.மேகம் மீண்டால்தான் உன் நாட்டில் மழை பொழிந்து நாடு சுபிக்ஷமடையும்." என்றார்.


மன்னன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். "இப்போதே பறையறைவித்து அந்த அரக்கனைக் கொல்லத் தக்க வீரனைக் கண்டு பிடித்து அனுப்புகிறேன் "என்றான்.

முனிவர் தடுத்தார்" நில் மன்னா! அந்த அரக்கனைக் கொல்ல பெரியவர்கள் யாரும் செல்லக் கூடாது.
பன்னிரண்டு வயதுக்குட்பட்ட ஒரு சிறுவன்தான் செல்ல வேண்டும்."

"அப்படியே பறையறைவிக்கிறேன். குழந்தையில்லாத நான் வெற்றிபெறும் அந்தச் சிறுவனை என் மகனாக ஏற்றுக்கொள்கிறேன்."

மன்னனின் கட்டளை  கேட்ட மக்கள் உடனே தங்கள் தங்கள் மகன்களுக்குப்  பல பயிற்சிகளைக் கொடுத்துஅரக்கனை வெல்ல  தயாரானார்கள்  
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறுவன் செல்லத் தொடங்கினான். ஒரு வாரம் காத்திருந்து அவன் 
திரும்பவில்லையானால் அடுத்த சிறுவன் சென்றான். இப்படியே ஆறு மாதங்களாயிற்று.

அந்த ஊரில் சாத்தன் என்று ஒரு விவசாயி வாழ்ந்து வந்தான்.அவனுக்கு இரண்டு மனைவிகள். முதல் 
மனைவிக்கு ஒரு மகனும் இரண்டாவது மனைவிக்கு ஒரு மகளும் இருந்தனர். மகன் பெயர் முருகு.இரண்டாவது மனைவியின் மகளுக்கு காந்தாமணி  என்று பெயர்.

காந்தாவின் தாயார் காந்தா குழந்தையாக இருக்கும் போதே இறந்து விட்டாள். எனவே சிறுமி காந்தாவை ஒரு வேலைக்காரியைப் போல  பல வேலைகள் செய்யச் சொல்லிக் கடுமையாகப் பேசுவாள் அவள் பெரியம்மா.

காந்தா பிறவியிலேயே மிகவும் பொறுமைசாலி. நல்ல அறிவாளியும் கூட. அந்த ஊரில் சிறுவர்கள் மட்டும் பள்ளி செல்வதும் சிறுமியர் வீட்டு வேலை செய்வதும்  கழனி வேலைக்குப் போவதுமாக இருப்பதைப் பார்த்து மனம் வருந்தி இருந்தாள்.

சாத்தனுக்கும்  தன் மகன் மன்னனாகி அந்த நாட்டை ஆளவேண்டும் என்னும் ஆசை இருந்ததால் அரக்கனைக் கொல்ல தன் மகன் முறை எப்பொழுது வரும் எனக் காத்திருந்தான்.

ஒருநாள் காந்தா  வீட்டு வேலை முடித்து தன் தந்தைக்குச் சோறு கொண்டுபோய்க் கொண்டு இருந்தாள்.
வழியில் ஒரு வயதான கிழவர் களைப்புடன் அமர்ந்திருந்தார்.அவரருகே சென்ற காந்தா,"தாத்தா, பசிக்குதா?" என்றாள் அன்புடன்.
'
ஆம்' என்பதுபோல் தலையசைத்தார் அந்த முதியவர்.காந்தா அங்கேயே அமர்ந்து தான் கொண்டு வந்த சோற்றில் கொஞ்சம் எடுத்து ஒரு இலையில் வைத்துக் கொடுத்தாள். வாய்க்காலில் இருந்து நீர் மொண்டு வந்து கொடுத்துச் சாப்பிடச் சொன்னாள்.
தாத்தா புன்னகையுடன் தலையசைத்தார். 

"நான் வரேன் தாத்தா" என்றபடியே நடந்தாள் காந்தா.
மாலையானதும் அதே வழியில் திரும்பி வந்து கொண்டிருந்தாள் காந்தா. அப்போதும் அந்தமுதியவர் அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தார்.

அவரை நெருங்கிய காந்தா புன்னகையுடன்"சாப்பிட்டீர்களா தாத்தா?"என்றாள் அன்புடன்.

"இங்கே வா அம்மா. நீ கொடுத்த உணவு அமிர்தம் போல இருந்தது. இப்போ நான் உனக்கு ஒரு பரிசு தரப் 
போகிறேன்."என்றார். அதைக்கேட்டு காந்தா மிகவும் மகிழ்ந்தாள்.ஆவலுடன் "என்ன பரிசு தாத்தா?" 
என்றாள்.
முதியவர் தனது பையிலிருந்து ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்தார்.அதை காந்தாமணியிடம் 
கொடுத்தார்.அதைப் பெற்றுக் கொண்ட  காந்தா" மிக்க நன்றி தாத்தா" என்றாள் பணிவுடன். 

"இது சாதாரணக் கண்ணாடி இல்லை. உன் கேள்விக்கு விடை காட்டும் கண்ணாடி.இதை உன் கையில் எப்போதும் வைத்துக் கொள்.வெற்றியே கிட்டும்" என்று ஆசி கூறிச் சென்றார்.


மறுநாள் முருகு அரக்கனை வெல்லச் செல்லவேண்டிய தினம். அவனுக்கோ ஒரே பயம். துணைக்கு மலை அடிவாரம் வரை வருவதாகக் கூறி காந்தாமணியும் உடன் சென்றாள்.குறிப்பிட்ட இடம் வந்ததும் 
காந்தாமணி தன் அண்ணனிடம் தானே அரக்கனிடம் செல்வதாகக் கூறினாள். அண்ணன் சம்மதிக்கவே அவனது உடைகளைத் தான் அணிந்து கொண்டு அரக்கனைச் சந்திக்கப் புறப்பட்டாள் காந்தா. 

குகைக்குள் சற்றே துணிவை வரவழைத்துக் கொண்டு நுழைந்தாள். பெரும் சிரிப்போடு அவளை வரவேற்றான் அரக்கன்."என்னை வெல்ல ஒரு சிறுமியா வந்துள்ளாய்?" என வினவியபடியே அவள் முன் வந்து நின்றான்.அவனை நிமிர்ந்து பார்த்து நின்றாள் காந்தா.
"
"என் கேள்விக்கு விடை சொன்னால் நீ வென்றதாக ஒப்புக் கொள்கிறேன்" என்றான் அரக்கன் . 

தைரியத்துடன்" உன் கேள்வியைக் கேள்" என்றாள் காந்தா.

" அக்காள் ஒருத்தி அழுது கொண்டே தம்பி சட்டையைக் கழற்றினாள். கழற்றக் கழற்ற சட்டை வந்தது.கழற்றி முடித்த பின் தம்பியைக் காணோம்.அவன் யார்?" 

ஒரு நிமிடம் திரும்பி நின்றவள் இடுப்பில் இருந்த கண்ணாடியை எடுத்துப் பார்த்தாள்.  உடனே அரக்கன் முன் திரும்பி "வெங்காயம்" என்றாள்.

"சரி அடுத்த கேள்வியைக் கேட்கிறேன். அப்பன் சொறியன் ஆத்தாள் சடைச்சி பிள்ளசக்கரைக்கட்டி.இவன் யார்?"
அப்போதும் பின்னால் திரும்பி கண்ணாடியில் விடை பார்த்தாள். "பலாப்பழம்" என்று விடை சொன்னாள். அடுத்த கேள்வி என்ன?என்பதைப்போல நிமிர்ந்து நின்று அரக்கனைப் பார்த்தாள் காந்தா.

சற்றே தயக்கத்துடன் "ஒருமுகம் கொடுக்கும் திருமுகம். ஓங்கி அடித்தால் ஓராயிரம் தரும் முகம் .அது என்ன?" என்று கேட்டு விட்டு கைகளைக் கட்டிக் கொண்டு நின்றான் அரக்கன்.

 சற்றே திரும்பிய காந்தா கண்ணாடியைப் பார்த்தாள்.அதில் எந்த உருவமும் தெரியவில்லை.சற்று திகைத்தாள். அந்தப் பெரியவரை மனதில் வணங்கினாள். திடீரென கண்ணாடி பல துண்டுகளாகத் தெரிந்தது ஒவ்வொரு துண்டிலும் அவளது முகம் தெரிந்தது.மகிழ்ச்சியுடன் "முகம்பார்க்கும்  கண்ணாடி" என்று விடைகூறினாள். 

அரக்கன் மனம் மகிழ்ந்தான்."குழந்தாய் உன்னால் என் சாபம் நீங்கியது.இதோ உனது நாட்டு மேகங்களை விடுவிக்கிறேன் இனி உன் நாடு மழை பொழிந்து செழிப்பாகும்."

காந்தா மகிழ்ச்சிய்டன்  " ஐயா, எங்கள் நாட்டுச் சிறுவர்கள் எல்லோரையும் விடுவியுங்கள்."என்று கேட்டுக் கொண்டாள். அதுவரை அரக்கனின் சிறையில் அடைபட்டுக் கிடந்த சிறுவர்கள் அத்தனைபேரும் ஆரவாரத்துடன்  ஓடிவந்து காந்தாவைச் சூழ்ந்து நின்றனர். 

அரக்கன் காந்தாவுக்கு நிறைய பரிசுப் பொருட்களைக் கொடுத்து அனுப்பிவைத்தான். பின் தனது இருப்பிடம் சென்றான்.வெற்றியுடன் அனைவரும்வருவதைக் கண்ட முருகு தங்கையை மகிழ்ச்சியுடன் வரவேற்றான் அனைவரும் நாடு திரும்பினர்.

 மழை மேகங்கள் உருவாகி மழைபொழியத்  தொடங்கியதை அனைவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். மன்னரும் மக்களும் வெளியில் நின்று வெற்றியுடன் வரும் சிறுவர்களை வரவேற்றனர்.

ஆணுடையில் இருந்த காந்தாவைப் பெருமை பொங்கப் பார்த்தார் மன்னர்."குழந்தாய், இன்று முதல் நீயே என் மகள் உனக்கு இந்த நாடு மிகவும் கடன் பட்டுள்ளது." என்று காந்தாவின் தலையை தடவிக் கொடுத்தார்.

அவளது பெரியம்மா காந்தாவை வாரி அணைத்துக் கொண்டாள்.காந்தா மன்னரிடம் "அரசே, தயவு செய்து என் அண்ணனைத் தங்கள் மகனாக ஏற்றுக் கொள்ளுங்கள். நான் என் பெற்றோருக்கு உதவி செய்து கொண்டு இருக்கவே விரும்புகின்றேன். அத்துடன் எனது ஆசை ஒன்று உண்டு அதைத் தாங்கள் நிறைவேற்றித் தர வேண்டும் "எனக் கேட்டுக் கொண்டாள். 

மன்னர் மகிழ்வுடன் "எதுவேண்டுமானாலும் கேள்"என்றார்.

"எனது நாட்டில் இருக்கும் பெண்கள் அனைவரும் கல்வி கற்க தாங்கள் அனுமதி தரவேண்டும் சிறுவர்களுடன் சேர்ந்து சிறுமிகளும் பள்ளி செல்ல வேண்டும்." 

மன்னர் மகிழ்ச்சியுடன் "உன் விருப்பப் படியே இனி அனைவரும் படிக்கலாம். பெண்கள் அறிவில் சிறந்தவர்கள் என்பதை உன் மூலமாக நான் அறிந்து கொண்டேன். இனி நீயும் பள்ளி சென்று படிக்கலாம்" என்றபோது அனைவரும் "கல்விக்கண் திறந்த காந்தாமணி வாழ்க" எனக் கோஷமிட்டதை விண்ணில் இருந்த மேகங்களும் ஆமோதிப்பதுபோல இடி இடித்து  அவளை வாழ்த்தியது.அறிவுக்கு ஆண் பெண் என்ற பேதம் இல்லை என்ற உண்மையை நாம்  அனைவரும் உணர்ந்து கொள்வோம்.
.
  .
.




















ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com : email : rukmani68sayee@gmail.com