சனி, 15 அக்டோபர், 2011

75- கணக்கு நேரான கதை


ஒரு முறை தெனாலிராமன் அரசவைக்குள் செல்ல முயன்றான்.அப்போது காவலர் அவனை வழி மறித்தனர்.
"ஏன் என்னை வழி மறிக்கிறீர்கள்?" என்று கேட்டபோது," எங்களைக் கவனித்துவிட்டுச் செல்" என்றனர்  காவலர்.அப்போது ராமன் புரிந்து கொண்டான்.அவர்கள் கையூட்டுக் கேட்கின்றனர் என்பதை.அவர்களுக்கு அவர்கள் வழியிலேயே சென்று அறிவுறுத்தவேண்டும் என முடிவு செய்து கொண்டான்.
"ஐயா, நான் ஒரு புலவன் அரசரிடம் பாடிக் காட்டிப் பரிசில் பெற்றுப் போகவே வந்தேன்.உங்கள் விருப்பப் படியே அரசர் கொடுக்கும் பரிசிலை நான் அப்படியே உங்களிடம் தந்து விடுகிறேன். நீங்கள் பார்த்துக் கொடுப்பதை நான்பெற்றுச் செல்கிறேன்." என குழைந்து பேசினான்.
காவலரும் அவனை எச்சரித்து உள்ளே அனுப்பினர். 
அவைக்குள் நுழைந்த ராமன் மக்களுடன் கலந்து அமர்ந்து கொண்டான்.அந்த அவைக்கு பல வழக்குகள் வந்தன. அவற்றுக்கெல்லாம் அப்பாஜி யின் ஆலோசனையின் படி மன்னர் தீர்ப்பு வழங்கிக் கொண்டிருந்தார்.அப்போது மூன்று சகோதரர்கள் வந்து ராயரை வணங்கி நின்றனர்.
அவர்களின் வழக்கு என்ன என்று மன்னர் கேட்டார். வந்த மூவரில் மூத்தவன் கூறினான்.
"மகாராஜா, எங்கள் தந்தையார் ஒரு யானைப் பாகன். அவரிடம் இருந்த சொத்துக்கள் மொத்தம் பதினேழு யானைகள்தான்.அவற்றை எங்களுக்குப் பாகம் பிரித்து எழுதி வைத்துள்ளார்."
"அப்புறமென்ன? அவரது சொல்படி பாகத்தைப் பிரித்துக் கொள்ள வேண்டியதுதானே? அதிலென்ன சிக்கல்?"
"அதில்தான் சிக்கல் மகாராஜா,"
அமைதியாக நின்றிருந்த அப்பாஜி கேட்டார்."உங்கள் வழக்கை விவரமாகக் கூறுங்கள்.அப்போதுதான் மன்னர் சரியான தீர்ப்பு வழங்க முடியும்."
இப்போது இரண்டாவது மகன் கூறினான்."பிரபு, எங்கள் தந்தையார் மூத்தவனுக்கு சரிபாதி யானையைத் தரச் சொல்லியுள்ளார்.பதினேழில் பாதி எட்டரை அல்லவா?எப்படிக் கொடுப்பது? முதலாவதுதான் சிக்கல் என்றால் அடுத்தது அதற்குமேல் இருக்கிறது."
"அதையும் சொல்லிவிடப்பா."என்றார் அப்பாஜி.
இரண்டாவது மகனான எனக்கு மீதியில் மூன்றில் ஒரு பங்கு.எட்டரையில் மூன்றில் ஒரு பங்கு எப்படிக் கணக்கிடுவது?"
"மூன்றாமவனுக்கு?"என்று  கேட்ட ராயரிடம் "மீதியில் மூன்றில் ஒரு பங்கு என்று எழுதிவிட்டு இறந்துவிட்டார். இந்த உயிலின் படி தாங்கள்தான் எங்களின் பாகத்தைச் சரியாகப் பிரித்துத் தரவேண்டும்."என்று வேண்டுகோள் வைத்தான் மூன்றாவது மகன்.
அப்பாஜியும் கிருஷ்ண தேவராயரும் சிந்தனை வசப்பட்டனர்.எவ்வளவு யோசித்தும் கணக்கைத் தீர்க்கும் வழி தோன்றவில்லை.ஆனால் இதில் ஏதோ ரகசியம் இருக்கும் என்று மட்டும் மன்னருக்குத் தெரிந்தது. ஆனால் என்னவென்று புரியவில்லை.
வெகு நேரம் சபை அமைதியாக இருந்தது.மக்களின் கூட்டத்திலிருந்து தெனாலிராமன் எழுந்து நின்றான்.
"மாமன்னர் என்னை மன்னிக்க வேண்டும். தாங்கள் சம்மதித்தால் இந்த வழக்கை நான் தீர்த்து வைக்கிறேன்" என்றான் வணங்கியபடியே.
ராமகிருஷ்ணனைக் கண்டு மன்னர் புன்னகைத்தார். "வா ராமகிருஷ்ணா, உன் தீர்ப்பை நீ சொல்."
ராமன் உடனே ஓடிச் சென்று சபை நடுவே நின்றான்.
"மகாராஜா, இப்போது பதினேழு யானை பொம்மைகளைக் கொண்டு வரச் சொல்லுங்கள்." என்றான்.அதன்படியே பொம்மைகள் ராமனுக்கு முன்னால் வைக்கப் பட்டன.
"எல்லோரும் பாருங்கள்.இப்போது நானும் ஒரு யானையில் வருகிறேன்.எங்கே இன்னொரு யானைபொம்மை கொண்டு வாருங்கள்."
இன்னொரு யானை பொம்மை கொண்டு வரப்பட்டது.
ராயர் கேள்விக்குறியுடன் ராமனைப் பார்த்தார்.ராமன் "மகாராஜா மன்னிக்க வேண்டும்.நீதி சொல்லும் நான் யானையின் மேல் வரக்கூடாதா?"என்று சொல்லவே சிரித்தபடி அனுமதியளித்தார் ராயர்.
இப்போது ராமன் கணக்கை சீராக்கத் தொடங்கினான்."ஐயா,இப்போது மொத்தம் பதினெட்டு யானைகள் உள்ளன அல்லவா? முதல் மகனான உங்களுக்கு எவ்வளவு யானைகள்?"
"இவற்றில் சரி பாதி."
"அப்படியானால் ஒன்பது.சரிதானே?"
"சரிதான் ஐயா."தன்னிடம் கொடுக்கப்பட்ட ஒன்பது யானைகளுடன் அவன் விலகி நின்றான்.."அடுத்த மகன் வாருங்கள்" அடுத்தவன் வந்து நின்றான்.
"உங்களுக்கு எவ்வளவு யானைகள்?"
"மீதியில் மூன்றில் இரண்டு  பங்கு."
"மீதி எவ்வளவு?" 
"ஐயா,மீதி ஒன்பது அதில் மூன்றில் இரண்டு பங்கு ஆறு."
"இதோ உமக்கு ஆறு யானைகள்."கடைசியாக மீதி மூன்று யானை பொம்மைகள் இருந்தன.மூன்றாமவனை அழைத்த ராமன் "உமக்கு எவ்வளவு யானைகள் ?" என்று கேட்டான்.
அவனும் "எனக்கு மீதியில் மூன்றில் இரண்டு பங்கு" எனக கூற அவனுக்கு மீதியிருந்த மூன்று யானைகளில் இரண்டு யானையைக் கொடுத்தான் ராமன். 
"இப்போது மீதி இருப்பது ஒரு யானை. நான் ஏறி வந்த அந்த  யானையின் மீதே நான் ஏறிச் செல்லலாமா மகாராஜா"?என்று கேட்டுவிட்டு பணிவுடன் நின்றான் ராமன்.
உயிலின்படி முதல் மகனுக்கு ஒன்பது யானைகளும் இரண்டாவது மகனுக்கு ஆறு யானைகளும் மூன்றாவது மகனுக்கு  இரண்டு யானைகளும் உரியன   என தீர்ப்புக்கூறினார் மன்னர்.சிறப்பாக பாகப்பிரிவினை செய்த தெனாலிராமனைப் பாராட்டிய ராயர் அவனுக்கு என்ன பரிசு வேண்டும் எனக் கேட்டார்.
தெனாலி ராமனுக்கு உடனே வாயில்காப்போனின் நினைவு வந்தது.
 "மகாராஜா, நான் கேட்கும் பரிசைத் தாங்கள் தட்டாமல் தரவேண்டும்.மறுக்கக்கூடாது."
"மறுக்கமாட்டேன். கேள் ராமகிருஷ்ணா"
"எனக்குப் பரிசாக நூறு கசையடிகள் வேண்டும்.அதையும் இந்தச் சபையிலேயே தரவேண்டும்."
அனைவரும் திகைத்தனர்.ராமனுக்கு என்ன பைத்தியமா?
ஆனால் ராமன் மீண்டும் அதையே கூறவே வேறு வழியில்லாமல் மன்னரும் காவலனிடம் ராமனுக்கு நூறு கசையடிகள் கொடுக்கும்படி ஆணையிட்டார்.அவனும் கசையைத் தடவியபடி வந்து நின்றான்.அப்போது ராமன் "மகாராஜா, எனக்குக் கிடைக்கும் பரிசில் பாதியை ஒருவருக்கும் மீதியை மற்றொருவருக்கும் தருவதாக வாக்களித்துள்ளேன் அவர்களுக்கு இந்தப் பரிசுகளைத் தரவேண்டும்."என்றான்.
 ராயர் புரிந்து கொண்டார். அவர்  கண்கள் சிவந்தன.உடனே அவர்களை அழைத்து வருமாறு கட்டளையிட்டார்.இரண்டு வாயில் காப்போரும் நடுங்கியபடியே வந்து நின்றனர்.
மன்னர் "என் நாட்டிலே லஞ்சமா கேட்டாய்?அரண்மனையில் பணிபுரியும் நீ லஞ்சம் கேட்டதற்காக உன் தலையைக் கொய்தால் என்ன?"
எனக் கேட்டு அவர்களுக்கு ஐம்பது கசையடிகள் கொடுத்துச சிறையிலும் அடைக்கச் சொல்லி ஆணை பிறப்பித்தார்.
பின்னர் ராமகிருஷ்ணனுக்குப்  பெரும்பொருள் பரிசாகக் கொடுத்துப் பாராட்டினார்.
 சரியானபடி தீர்ப்புக் கூறியதுமல்லாமல் லஞ்சம் கேட்டவனுக்கும் அறிவு வரும்படி செய்த தெனாலிராமனைப் பாராட்டியபடி மக்கள்  கலைந்து சென்றனர்.








ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com