வியாழன், 23 ஜூன், 2011

68-பக்தி கொடுத்த பரிசு


.        அக்பர் பாதுஷா டில்லியில் அரசாண்டிருந்த காலம்.அவரது சபையிலே சூர்தாஸ் என்ற மகான் ஒருவர் இருந்தார்.மிகச் சிறந்த அறிவாளியான இவர் கல்வி கேள்வியிலும் அரசியல் அறிவிலும் சிறந்து விளங்கினார்.  அக்பர் பாதுஷா இவர் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டிருந்தார்.இவருடன் அடிக்கடி வேதாந்த விசாரணையும் செய்து வ்ந்தார்.
ஒரு முறை கோகுலம் பிருந்தாவனம் அடங்கிய பகுதிக்கு ஒரு அதிகாரியை நியமிக்க  வேண்டி வந்தது. பக்திமானாகிய சூர்தாசரே அதற்குத் தகுதியானவர் என்றுமுடிவு செய்த அக்பர்பாதுஷா  அவரையே  அதிகாரியாக நியமித்தார். கண்ணன் பிறந்து வளர்ந்த பகுதிக்குத் தாம் அதிகாரியாக நியமிக்கப் பட்டதற்காக  மிகவும் மகிழ்ந்தார் சூர்தாசர்.

மிக்க மகிழ்வுடன் தமது பதவியை ஏற்கப் புறப்பட்டார். வழியெங்கும் கண்ணன் லீலைகள் புரிந்ததை நினைவு கூர்ந்தவாறு சென்றார்.அந்த எண்ணத்துடனே வந்து பதவி ஏற்றுக்கொண்டார்.ஒரு மெய்யன்பர் தமக்கு அதிகாரியாக வந்துள்ளதை அறிந்து மக்களும் பேருவகை எய்தினர்.

 இப்படியே சில ஆண்டுகள் கழிந்தன.சூர்தாசர் அரசாங்கப் பணி தவிரஆண்டவன் பணியும்  செய்து வரலானார்.தமக்கென உள்ள செல்வம் அனைத்தையும் அடியார்களுக்காகச் செலவழித்தார்.தமது செல்வத்தைப் பயனுள்ள வழியில் செலவிட முடிந்ததே என்று மக்களுக்கு வாரி வாரி வழங்கினார்.
காலப் போக்கில் செல்வம் செல்வோம் எனச் சென்றுவிட சூர்தாசர் வறியவரானார். இறைவன் பணி செய்ய இவரிடம் இப்போது செல்வம் இல்லை.

இந்த சமயத்தில் திருவிழாவும் வந்தது. அடியார்களின் திருக் கூட்டமும் வந்தது. செலவு செய்யக் கையிலே பணமில்லாத போது பாதுஷாவுக்குச் சேரவேண்டிய வரிப்பணமும் வந்து சேர்ந்தது.அந்தப் பொருளை எடுத்து கைங்கர்யம் செய்தால் என்ன என்று எண்ணிய சூர்தாசர் மன்னனின் வரிப் பணத்தை எடுத்துச் செலவு செய்து விட்டார்."இது பகவத் கைங்கர்யம். மன்னனே செய்ய வேண்டியது. நான் செய்ததால் மன்னனுக்கும் இறைவன் அருள் கிட்டும்" என தன்னைச் சமாதானம் செய்து கொண்டார்.

இப்படியே சில நாட்கள் சென்றன.ஊரிலுள்ள பொறாமைக்காரன் ஒருவன் நேரில் டில்லி மாநகருக்கே சென்று பாதுஷாவிடம் கோள் மூட்டினான்.
சூர்தாசர் சிறந்த மனிதராயினும் மன்னனின் ஆணை  இன்றி வரிப்பணத்தைச் செலவு செய்தது பெருங்குற்றம்  மதுரா, பிருந்தாவனம், துவாரகா, ஆகிய மாவட்டங்களிலிருந்து வரவேண்டிய  வரிப்பணம் நிலுவையில் உள்ளது. அதை உடனடியாக வசூலித்து வரவேண்டும்.என உத்தரவிட்டான்.

இந்தப் பணத்தைக் கட்டத் தவறினால் சூர்தாசரைக் கைது செய்யவும் அதிகாரம் அளித்துத் தன் முத்திரையையும் 
கொடுத்தனுப்பினான்.
வீரர்கள்  மதுராவை அடைந்து அரசரின் மடலைக் காட்டுமுன்பாகவே சூர்தாசர் செய்தியை யூகித்துத்  தெரிந்து கொண்டார்.வந்த வீரர்களை வரவேற்று உபசரித்து மிகுந்த மரியாதையுடன் அவர்களுடன் பேசினார்.
"அன்பர்களே, நான் அரசரின் வரிப் பணத்தை வீணாகச் செலவு செய்து விட்டேன் என்று தானே உங்களை மன்னர் இங்கு அனுப்பியுள்ளார்.அது வீண் புரளி. நான் மன்னரின் பணத்தை வராகனாக வைக்காமல் சிறந்த நவரத்தினங்களாக வாங்கி வைத்துள்ளேன். அவற்றைக் கொண்டு போக உங்களுக்கு சிரமம் ஏதும் இருக்காதல்லவா? "
சூர்தாஸின் இந்த மொழிகளைக் கேட்ட வீரர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.சூர்தாசர் உள்ளே சென்று ஒரு பெட்டி நிறைய கூழாங்கற்களைப் போட்டு மூடி அதன் மேல் ஒரு கடிதமும் வைத்து அனுப்பினார். 

அந்தக் கடிதத்தின் செய்தி இதுதான்.
"மன்னர் பெருமானே! அரசாங்கப் பணத்தை எடுத்துச் செலவு செய்தது உண்மையே.அது அடியார்களுக்காக செலவிடப் பட்டது.புனித நகரங்களுக்கு வரும் அடியார்களின் நலனுக்காக தங்களின் செல்வம்  செலவிடப் பட்டது.
இந்த மிகச் சிறந்த பணியால் இறைவனின் திருவுள்ளம் குளிரும். அதனால் தங்களின் நாட்டுக்கும் ஆட்சிக்கும் இது பெருமையையும் புண்ணியத்தையும் தரும்.இதனால் நாடும் செழிக்கும் நாமும் தூயராவோம் என்றே இப்படிச் செய்தேன். இது தவறு எனில் என்னை மன்னித்து விடுங்கள்."
.பெட்டியையும் கடிதத்தையும் அனுப்பிவிட்டு சூர்தாசர் அருகே இருந்த காட்டுக்குள் சென்று தியானத்தில் அமர்ந்தார்.
அவரிடம் சொல்லிக் கொண்டு புறப்பட எண்ணித் தேடிய வீரர்கள் சூர்தாசரைப் பாராமலேயே கடிதத்தையும் பெட்டியையும் எடுத்துக் கொண்டு அரண்மனை அடைந்தனர்.

கொண்டு வந்த பெட்டியை அக்பர் பாதுஷாவின் முன் வைத்து வணங்கி நின்றனர் வீரர்கள்.ஒருவன் சூர்தாஸ் அளித்த கடிதத்தை மன்னனிடம் கொடுத்தான்.கடிதத்தைப் படித்த அக்பர் திகைத்தார்.வீரர்களைப் பார்த்துக் கேட்டார்.
"இந்தப் பெட்டியில் என்ன இருக்கிறது?"
"மகாராஜ், இதில் நவரத்தினங்கள் இருப்பதாக சூர்தாஸ் மகாராஜ் கூறினார்."
அந்தப் பெட்டியைத் திறக்கச் சொல்லிப் பார்த்தார் பாதுஷா. உள்ளே கண்களைப் பறிக்கும் பிரகாசத்துடன் நவரத்தினங்கள் ஒளி வீசின.
பாதுஷா குழப்பத்தில் ஆழ்ந்தார்.கடிதத்தில் வரிப்பணத்தை செலவு செய்து விட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அந்தப் பணத்தின் மதிப்புக்கு மேலேயே மதிப்புள்ள நவ ரத்தினங்கள் பெட்டியிலுள்ளன.இதில் எது உண்மை? எது பொய்? ஒன்றும் புரியவில்லை பாதுஷாவுக்கு.
உடனே சூர்தாசரை அழைத்து வர ஆணையிட்டார்.
மதுராவுக்கு விரைந்த வீரர்கள் அவரைக் காட்டில் தியானத்தில் இருக்கும் போது கண்டு வணங்கினர். மன்னரின் 
ஆணையை அறிந்து உடனே புறப்பட்டார். சூர்தாசரின் பெருமையையும் மகிமையையும் அறிந்து கொண்ட அக்பர் அவரை வாயிலிலேயே நின்று வரவேற்று அழைத்துச்  சென்றார்.உண்மையை அனைவரும் அறிந்தனர்.

சூர்தாசரின் பஜனைக்கும் பக்திப் பாடல்களுக்கும் மயங்கிய கண்ணன் அவரது விருப்பத்தை நிறைவேற்றி இருக்கிறான். தன் பக்தனின் வாக்குப்பொய்க்கக் கூடாது என்று பெட்டியில்  நவரத்தினங்களை நிரப்பிக் கொடுத்துள்ளான். ஆண்டவனே கட்டுப் படும் அளவு பக்தியுடைய சூர்தாசரிடம் மேலும் அன்பு பெருகியது அக்பருக்கு.
தான் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்ட அக்பர் மீண்டும் அதே பகுதிக்கு அதிகாரியாக இருக்கும்படி கேட்டுக் கொண்டார்.
ஆனால் இறைபக்தி செய்வதை விட்டு அரசாங்க சேவகம் செய்வதை விரும்பவில்லை என்பதை சூர்தாசர்  விளக்கியும் மன்னர் ஒப்புக் கொள்ளவில்லை.
"தாங்கள் பதவியில்  இருந்துகொண்டே இறைவன் பணியும் செய்யலாமே."
"அரசே, ஒருமுறை சிக்கல் தோன்றிவிட்டால் தொடர்ந்து உமது கட்டளையை நான் கேட்டே எந்தப் பணியும் செய்ய நேரும். அதனால் எனக்கு இந்தப் பதவி வேண்டாம் என்னைச் சுதந்திரமாக இருக்கவிடுங்கள்."
அரசர் சிந்தித்தார்.
"தாசரே! நீர் எனக்கு திறை செலுத்த வேண்டாம்.எனக்கு உட்படவும் வேண்டாம் இந்த மூன்று மாவட்டங்களையும் உமக்கே உரிமையாகக் கொடுத்தேன். இனி நீர் சுதந்திரமாக தொண்டு  செய்யலாம்"

இதக் கேட்ட சூர்தாசர் சற்றே அமைதியாக நின்றார். அக்பர் அவரின் கரங்களைப் பற்றிக் கொண்டு "தயவு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள்" என வேண்டினார்.

அரசரின் மனம் பக்தியில் நிரைந்துள்ளது இதனால் மக்கள் நல்வாழ்வு பெறவும் வழி ஏற்படும் என எண்ணிய சூர்தாசர் 
"அரசே, தாங்கள் இவ்வளவு கூறியபின் மறுக்க இயலவில்லை.தாங்கள் இன்று முதல் சாதுக்களின் சேவையும் ஹரிபக்தியும் செய்து வாருங்கள் என ஆசி கூறிவிட்டு மதுராவிற்குப் புறப்பட்டார்.

பெட்டியிலிருந்த நவரத்தினங்களையும் திருப்பணிக்கே கொடுத்து அவரை மிகுந்த மரியாதையுடன் அனுப்பிவைத்தார் அக்பர்பாதுஷா.
சூர்தாசர் எம்பெருமான் கண்ணனின் திருவருளையும் அவனது திருவிளையாடல்களையும் எண்ணிப் பாடல் இசைத்தவாறே மதுரா வந்து சேர்ந்தார்.ஒரு பக்தனின் வேண்டுகோளுக்காக அவன் சொல்லைக் காக்க கல்லை நவரத்தினமாக்கிய கண்ணனின் பேரன்பை எண்ணி எண்ணி உருகினார். அவரதுஉள்ளத்தில்  பக்திக்காக ஆண்டவன் அளித்த பரிசை எண்ணும்போதெல்லாம் கண்ணன் மீது அன்பு மேலும் பெருகியது. அவனைப் பாடுவதே தன் கடன் என எண்ணி பாடல்களைப் பாடிப் பரவசத்துடன் வாழ்ந்தார். அவரது பாடல்கள் இன்றும் அவர் வாழ்ந்து கொண்டிருப்பதையும் அவரது வாழ்க்கை அவரது பக்திச் சிறப்பையும் எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கின்றன.


--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com