சனி, 3 டிசம்பர், 2016

குறள் நெறிக்கதைகள் ; பொறாமை கொள்ளாதே.

தருமன்  என்ற ஒரு வியாபாரி இருந்தார்.அவர் பெயர்தான் தருமன். ஆனால் அவர் யாருக்கும் மறந்தும் கூட உதவியேதும் செய்து விட மாட்டார்.  இத்தனைக்கும் அவர் செல்வமமற்ற ஏழையல்ல..தங்கம் வெள்ளி  வியாபாரம் செய்பவர்தான்.அடிக்கடி அவர் வெளி ஊர்களுக்கும் சென்று வியாபாரம் செயது வருவார்.வெளி ஊர்களுக்குச் செல்லும்போது தன மகன் தேவராஜை விட்டு வியாபாரத்தைக் கவனித்துக் கொள்ளச் சொல்லிவிட்டுப் போவார்.அவனும் அவரது வியாபாரத்தைக் கவனித்து வந்தான்.
         ஒருமுறை அவர் கடையில் அமர்ந்திருக்கும் பொது ஒரு ஏழை அவரது  கடைக்கு வந்தார்.மிகவும் பரிதாபமான நிலையில் இருந்தார்.வற்றிய உடலும் களைத்த முகமுமாகத் தெரிந்தார்.பரிதாபமாகதளர்ந்தவராக அவரது கடையின் அருகில் வந்து நின்றார்.அவரை சற்றும் சட்டை செய்யாமல் தன வியாபாரமே குறியாக இருந்தார் தருமன்.

"ஐயா "இரண்டு முறைஅழைத்தும் அவரைத் திரும்பிப் பார்க்காது அமர்ந்திருந்தார் தருமன்.
அப்போது அங்கு வந்த அவர் மகன் தேவராஜன் "அப்பா"என அழைத்தான்.
என்ன என்பது போல் அவனைப் பார்த்தார் தந்தை."அப்பா, இந்தப் பெரியவர் வெகு நேரமாக அழைத்துக் கொண்டு இருக்கிறார்.ஏனென்று கேளுங்கள்."
"எல்லாம் யாசகமாகத்தான் இருக்கும் நீ பேசாமல் உள்ளே வந்து வியாபாரத்தைக்கவனி."
"சரியப்பா"என்றபட உள்ளே வந்து அமர்ந்தான் தேவராஜ்.
அப்போது கடைக்கு ஒரு வாடிக்கையாளர் வந்தார். உள்ளே வந்து தனக்கு வேண்டியதை வாங்கிக்கொண்டு வெளியே வந்தார். அப்போதும் யாசகம் கேட்டு வந்த முதியவர் அங்கே நிற்பதைக் கண்டு "யார் நீங்கள்? உங்களுக்கு என்ன வேண்டும்?வெகுநேரமாக நிற்கிறீர்கள் போல் தெரிகிறதே"என்றார் மென்மையாக.
"ஐயா, நான் ஒரு ஏழை. என்மகளுக்கு பல ஆண்டுகள் மாப்பிள்ளை தேடி இப்போதுதான் அமைந்திருக்கிறது.திருமாங்கல்யமும் புது ஆடை மட்டுமாவது வாங்க வேண்டும் மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும்.உங்களைப்போன்ற நல்லவர்கள் தருமங்களால்தான் அது நடக்கவேண்டும் அதனால்தான் ஐயாவைப் பார்க்க வந்தேன்."என்றார் பணிவோடு.
அப்போது கடையிலிருந்து வெளியே வந்த தருமன்,"இவர்களையெல்லாம் நம்பாதீர்கள்.பல பேர் இப்படித்தான் வருகிறார்கள் நீங்கள் ஒன்றும் கொடுத்து ஏமாந்து விடாதீர்கள்."என்று நண்பரை வெளியே அனுப்பினார்.கூடவே" இங்கெல்லாம் நிற்காதீர். வேறு எவனாவது ஏமாளி இருக்கிறானா என்று பாருமய்யா."என்று அவரைத் துரத்தாத குறையாக விரட்டினார்.தளர்ந்த நடையுடன் அவர் அவ்விடம் விட்டகன்றார்.

அவர்நடந்த களைப்பால் ஒரு மரத்தடியில் அமர்ந்தார். அப்போது அங்கே வந்த தருமனின் நண்பர் "ஐயா உங்களை பார்த்தால் ஏமாற்றுபவராகத் தெரியவில்லை.ஏதோ என்னால் முடிந்தது பெற்றுக்கொள்ளுங்கள் என்று ஒரு சிறிய பொட்டலத்தைக் கொடுத்தார்.அதைத் தன் கண்களில்  ஒற்றிக் கொண்டவர் நீங்க மஹாராஜனாய் இருக்கணும் என்றார் கண்கள் கலங்க.
இதைத் தொலைவிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த தருமன் தனக்குள் சினம் கொண்டார். "பிழைக்காத தெரியாத மனிதர். சரியாக ஏமாந்து விட்டார்.எவ்வளவு சொல்லியும் அவனுக்கு உதவி செயகிறாரே. என்ன கொடுத்தாரோ என்று தனக்குள் சொல்லிக் கொண்டார்.மிக சுலபமாக சம்பாதித்துக் கொண்டாரே இந்தக்  கிழவர் என்று அவர் மனதுக்குள் பொறாமையும் எழுந்தது.                  
                              நாட்கள் நகர்ந்தன.தருமனுக்கு பொன் வெள்ளியை விட வைர வியாபாரம் செய்ய வேண்டுமென்ற ஆசை ஏற்பட்டது.அதனால் ஒரு பெருந்தொகைக்காகத் தன வீட்டை அடமானமாக வைத்து பொருளை பெற்றுக் கொண்டு புறப்பட்டார் விலை குறைவாக நிறைய வைரம் வாங்க விரும்பி கப்பலில் வெளிநாடு சென்றார்.பதினைந்துநாட்கள் ஆகியும் திரும்பி வரவில்லை.இதற்கிடையில் கடையில் இருந்த பொன்வெள்ளிப் பொருட்கள் எல்லாம் களவு போய் விட்டன. இப்போது பொருளை இழந்த மகன் தந்தைக்கு தகவல் சொல்லவும் வழியின்றித் தவித்தவாறு இருந்தான்.தருமன் சென்ற கப்பல் புயலில் எங்கோ அடித்துச் செல்லப்பட்டதாகவும் அவர்களைபபற்றிய தகவல் ஏதும் தெரியவில்லை எனும் செய்தி வந்தது.
                   இதையறிந்த கடன்காரர்கள் அவர்களின் வீட்டைப் பறித்துக் கொண்டு தருமன் மனைவியையும் மகனையும் வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டனர்.தேவராஜ் தன தாயுடன் எங்கே செல்வது எனது தெரியாமல் நண்பர் ஒருவரின் இல்லத்தை அடைந்தனர்.நல்ல நண்பர் அடைக்கலம் கொடுத்தார்.
                  கப்பலேறிக் கடற்பயணம் சென்ற தருமன் முதலானோர் புயலால் அலைக்கழிக்கப்பட்டு எங்கெங்கோ சென்று கரையருகே ஒரு கட்டுமரத்தைப் பிடித்துக் கரையேறினர். உயிர்பிழைத்ததே பெரும் புண்ணியம் என்று சொல்லுமளவுக்குத் துன்பத்தை அடைந்தனர். 

ஒரு வழியாகத் தன வீட்டை அடைந்த தருமன் தன மனைவி மகன் இருக்கும் இடம் அடைந்து நடந்ததை எல்லாம் அறிந்து மிகுந்த துன்பமும் 
துயரமும் அடைந்தான்.தன மனைவி மகனுக்கு அடைக்கலமளித்த நண்பருக்கு நன்றி சொல்லி இன்று நிற்கவும் நிழலின்றி இருக்கும் தன நிலையைச் சொல்லி அழுதான்.அப்போது அந்த நண்பர், அன்றொருநாள் ஒரு ஏழை உன்னிடம் எவ்வளவு கெஞ்சினான். நீ கூட என்னை எதுவும் உதவி செய்யாதே என்றாயே, இப்போது பார். உன் நிலையும் அதேபோல ஆயிற்று. இனியாவது யாருக்குமில்லையென்று சொல்லாதே அதுமட்டுமல்ல. கொடுப்பதையும் தடுக்காதே. உன்னால் முடிந்தால் கொடுப்பவர் இருக்குமிடத்தையாவது காட்டு.
 ஒரு ஏழைக்கு சாப்பாடு கிடைக்கும் என்றுவிதுரன் வீட்டைக் காட்டிக் கொடுத்ததனால் தன்  விரலை வாயில் வைத்ததும் கர்ணனின் பசி அடங்கியது என்று மஹாபாரதக் கதை கேட்டதில்லையா?"என்று கூறக்கேட்ட தருமன் கண்ணீருடன் தலையசைத்து ஒப்புக் கொண்டான்.
அதன் பின் மனைவி மகனுடன் மீண்டும் வியாபாரத்தைத் தொடங்கினான் .ஆனால் எந்த ஏழைக்கும் இல்லையென்று சொல்வதுமில்லை, யாருக்கேனும் யாரேனும் தானம் செய்தால்  அதைப் பார்த்து இனி பொறாமைப் படுவதும் இல்லை என முடிவு செயது  கொண்டான் தருமன்.
அவன் மனம் அடிக்கடி வள்ளுவரின் திருக்குறளை  நினைத்துக் கொண்டு அவனை எச்சரித்துக் கொண்டே இருந்தது.
             "கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்                   உண்பதூஉம்  இன்றிக்  கெடும்."           
 நமக்கும் இது ஒரு பாடம்தான் 

ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee

ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

திங்கள், 31 அக்டோபர், 2016

குறள் வழிக் கதைகள்.; பொறுமையின் சிறப்பு .

            
            

        கந்தசாமி ஒரு கடையில் கணக்கெழுதும் ஒரு கணக்கராகப் பணிபுரிபவர்.அவருக்கு மூன்று பிள்ளைகள் இருந்தனர். மூவரில் 
காந்தாமணி என்ற சிறுமி தன பெற்றோருக்கு மூன்றாவதாகப் பிறந்த பெண்.அவளுக்கு முன்னால்  ஒரு அண்ணனும் அக்காவும் இருந்தனர்.அக்காவின் பெயர்  ரமாமணி அண்ணனின் பெயர் சுப்பிரமணி.ராமாவும் சுப்பிரமணியும் எப்போதும் சண்டையிட்டுக் கொண்டும் பெற்றோர் சொல்லக் கேளாமலும் இருப்பார்கள் அத்துடன் எல்லாவற்றுக்கும் அவசரப்படுவதும் போட்டி போடுவதுமாகஇருப்பார்கள்.ஆனால் காந்தாமணியோ இவர்களிடமிருந்து சற்று  ஒதுங்கியே நிற்பாள்.எப்போதும் அம்மாவுக்கு உதவியாக அவளுடனேயே இருப்பாள்.அப்பாவும் எந்த  வேலையாக இருந்தாலும் காந்தாமணியைத்தான் உதவிக்கு அழைப்பார். மற்ற இருவரையும் எந்த வேலைக்கும் கூப்பிட மாட்டார். ஒரே பையனாயிற்றே என்று எந்த சலுகையும் சுப்பிரமணிக்குக்  காட்டவும் மாட்டார்.இதனால் மூத்தவர்கள் இருவருக்கும் ரமாமணியின் மீது அளவற்ற பொறாமை உண்டாயிற்று.

        இவர்கள் மூவரும் ஒரே மாதிரிதான் பள்ளிக்குப் புறப்படுவார்கள்.  வழியிலேயே ரமாவும் சுப்பிரமணியும் சண்டையிட்டுக் கொள்வார்கள். அதனால் காந்தாமணி இவர்களை விட்டு விலகிப் போய்விடுவாள்.அவளுக்கு சண்டையென்றாலே பிடிக்காது. அதனால் அடிக்கடி சண்டையிட்டுக் கொள்ளும் தன அண்ணனையும் அக்காவையும் பார்த்துப் பயந்து எப்போதும் விலகியே இருப்பாள்.அவள் அவ்வாறு இருப்பதைப்  பொறுக்காத ரமாமணி அவளை வேண்டுமென்றே வம்புக்கிழுத்து அழவைப்பாள்.

         அவள் அழும்போதெல்லாம் அவள் அப்பா அவளுக்குத் துணையாக வந்து சமாதானப் படுத்துவதுடன் தின்பதற்கு ஏதேனும் வாங்கிக் கொடுப்பார்.ஆனால் அதைப்  பத்திரமாக வைத்திருந்து தன அக்காவுடனும் அண்ணனுடனும் பங்கு போட்டுத் தான் தின்பாள்  காந்தாமணி. இந்த இவளது  நல்ல உள்ளத்தைக் கூடப் புரிந்து கொள்ளவில்லை அவ்விருவரும்.அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட  மாட்டாள் காந்தாமணி.

          மூவரும் அடுத்தடுத்த வகுப்பில் படித்து வந்தனர்.காந்தாமணி ஆறாம் வகுப்பிலும் ரமாமணி ஏழாம் வகுப்பிலும் சுப்பிரமணி எட்டாம் வகுப்பிலும் படித்து வந்தனர்.அதனால் ஒவ்வொரு ஆண்டும் புத்தகத்தைப் பத்திரமாகப்  பாது காத்து அடுத்த ஆண்டு அடுத்தவருக்கு அதை உபயோகப் படுத்தச் சொல்வார் அவர்களின் அப்பா.ஆனால் அண்ணனின் புத்தகத்தைக் கிழிக்கவும் கிறுக்கவும் சொல்லி  தனக்கு மட்டும் புதுப் புத்தகம் வாங்கிவிடுவாள் ரமாமணி.

           தந்தையார் திட்டுவதையெல்லாம் பொருட்படுத்தாமலேயே தங்களின் விருப்பத்தை  மட்டும் நிறைவேற்றிக் கொள்வார்கள் இருவரும் ஆனால் காந்தாமணி கேளாமலேயே  தேவையானதை வாங்கித் தருவார் அவர்களின் தந்தையார். இளம் வயதிலேயே பொறுமையும் அன்பும் கொண்ட காந்தாமணியைப பலரும் விரும்பியதில் ஆச்சரியமில்லை. தன சகோதர சகோதரியும் எவ்வளவு தொந்தரவு துன்பம் கொடுத்தாலும் அதைப் பாராட்டாது அவர்களிடம் பிரியமாகவே நடந்து கொண்டாள்  காந்தாமணி.

          ஒருமுறை பள்ளியில் திருக்குறள் விழா நடைபெறுவதாக ஏற்பாடுகள்  நடந்தன. பெரிய அறிஞர் திருக்குறள் மேதை ஒருவர் வருவதாக அறிவித்திருந்தனர்.அங்கு பெற்றோரும் வரவேண்டும் என அழைப்பு விடுத்திருந்தனர். அந்த விழாவிற்கு காந்தாமணியின் தந்தையாரும் வரவிரும்பினார். அதனால் அவர் தன்  பணிகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு விழாவுக்கு வர முடிவு செய்திருந்தார்.

          விழா நாளும் தொடங்கியது. வந்திருந்த பெரியவர்கள் மேடைமீது அமர்ந்திருந்தனர். மாணவ மாணவிகளெல்லாம் வகுப்பு வாரியாக அமர்ந்திருந்தனர். அந்தக் கூட்டத்தில் தன பிள்ளைகளைத் தேடினார் கந்தசாமி.அவர் கூட்டத்தில் அமர்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு காந்தாமணி தன ஆசிரியையிடம் அனுமதி பெற்று அவரிடம் ஓடிவந்தாள்.
"அப்பா, எப்போ வந்தீங்க?" என்று கேட்டு மகிழ்ச்சியுடன் கையைப் பற்றிக் கொண்டாள்.
சற்று நேரம் பேசிவிட்டு போகும்போது காத்திருந்து அழைத்துப் போவதாகச் சொன்ன அப்பாவை மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டே தன இடத்தில் அமர்ந்து கொண்டிருந்தாள் காந்தாமணி.

ஆனால் ராமாவும் சுப்பிரமணியும் அப்பாவைக் கண்டு கொள்ளவே இல்லை.அன்றைய குறளை பொருள் கூறி விளக்கினார் அறிஞர்.
அருமையான அந்தப் பேச்சில் உருகி அமர்ந்திருந்தார் கந்தசாமி.பொறுமையின் சிறப்பைப் பற்றி அவர் பேசப்பேச தன மகள் காந்தாமணியின் பண்புகளே அவரின் நினைவுக்கு வந்தது.
                     "அகழ்வாரைத்  தாங்கும் நிலம்போலத் தன்னை
                       இகழ்வார்ப் பொறுத்தல் தலை."
எத்தனை அருமையான குறள்      தன கடைக் குட்டி மகளுக்கேற்ற குறள்.கூட்டம் முடிந்து மகளுடன் மகிழ்ச்சியாக வீட்டுக்கு வந்தார் அவர் மனம் மற்ற இரு பிள்ளைகளை பற்றிய சிந்தனையில் ஆழ்ந்தது.அவர்களுக்கு காந்தாமணியின்   நல்ல குணத்தை எப்படிப்புரிய  வைப்பது என்ற சிந்தனையில் மூழ்கினார் கந்தசாமி.                    

ஒருவாரம்  சென்றது. அன்று ஒரு விசேஷத்திற்குப் போய்விட்டு வீட்டுக்கு வந்தனர் அனைவரும்.அவர்களுடன் காந்தாமணியின் பெரியப்பாவும் அத்தையும் வீட்டுக்கு வந்தனர்.அவர்களிடம் தன பிள்ளைகள் ரமாவும் சுப்பிரமணியம்  இருவரும் மிகவும் அடங்காதவர்களாக இருப்பதாகச் சொல்லி இருவரையும் அழைத்துச் செல்லுமாறு கூறிக் கொண்டிருந்தார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த ரமாமணியும் சுப்பிரமணியம் சற்றே பயந்தனர்.அத்தை கிராமத்தில் இருப்பவர். பெரியப்பா பட்டணத்தில் இருப்பவர்.கிராமத்திற்குச் சென்றால் மாடுகளையும் கோழிகளையும் பார்த்துக் கொள்ளும் வேலை வந்துவிடும்.பட்டணம் என்றால் பெரியப்பாவின் கண்டிப்பின் முன்னால் யாருடைய பிடிவாதமா கோபமோ பலிக்காது.எனவே எங்கு சென்றாலும் கஷ்டம்தான்.நம் வீடுபோல அங்கெல்லாம் இருக்க முடியாது என்பது தெரிந்தே இருவரும் பயந்தார்கள்.ஆனால் அத்தையும் பெரியப்பாவும் காந்தாமணி வந்தால் அழைத்துப் போவதாகச் சொல்லவே இருவரும் மகிழ்ந்தனர்.
            ஆனால் அப்பா காந்தாமணி தனக்கு உதவியாக இருப்பதாகச் சொல்லி மற்ற இருவரையும் அனுப்புவதாகச் சொன்னபோது ரமாவும் சுப்பிரமணியம் சற்றே வருத்தத்தோடு அவமானமும் பட்டனர். அவள் பொறுமையாக எல்லோரையும் பொறுத்துப் போகும் அவளது குணத்தால்தான் எல்லோரும் அவளை விரும்புகிறார்கள் என எண்ணி  சற்றே பொறாமையுடன் அவளை பார்த்தனர்.
மெதுவாக சுப்பிரமணி அப்பாவிடம் வந்தான்."அப்பா, நாங்கள் இனி நீங்கள் சொன்னபடி கேட்டு நடக்கிறோம். எங்களை எங்கும் அனுப்பாதீர்கள் அப்பா."என்றான். அவனுடன் ரமாவும் அருகே வந்து நின்று "ஆமாம்பா.எங்களுக்கு யார்வீட்டுக்கும் போகப் பிடிக்கலைப்பா இங்கேயே இருக்கோம்."என்று கெஞ்சுவதுபோல் சொன்னாள்.

ஆனால் கந்தசாமியோ"அதெல்லாம் முடியாது. அந்தச் சின்னப்பெண்ணை நீங்கள் இருவரும் தினமும் என்ன பாடு படுத்துகிறீர்கள் போய்த் தனியாகவே இருங்கள்."என்றார் கண்டிப்பாக.இருவரும் தங்களின் சுதந்திரம் பறிபோகப் போகிறதே எனக் கண்ணில் நீர் பெருக நின்றிருந்தனர்.
அதைப் பார்த்த பெரியப்பா," சரி உங்களை காந்தமணி அனுப்பவேண்டாம் எனச் சொல்லிவிட்டால் நாங்கள் அழைத்துப்போகாமல் இங்கேயே விட்டு விடுகிறோம்.அவள் அழைத்துப் போகச் சொன்னால் அழைத்துப் போகிறோம்."என்றார் முடிவாக.
அதைக் கேட்டு கந்தசாமியும் சிரித்தபடியே"சரியான யோசனை அண்ணே அப்படியே செய்வோம்"என்றபோது ரமா வுக்கும் சுப்பிரமணிக்கும் அழுகையே வந்து விட்டது. ஏனென்றால் ரமாவை நாம் படுத்திய பாட்டுக்கு அவள் நம்மை விரட்டிவிடத்தான் செய்வாள்.
என்ற எண்ணம்தான் அவர்கள் மனதில் தோன்றியது.சுப்பிரமணி பயத்துடனும் அதேசமயம் மன்னிப்புக் கேட்பது போலவும் பரிதாபமாகப் பார்த்தான் காந்தாமணியை.
காந்தாமணி விக்கி விக்கி அழுது கொண்டே தன சகோதரனின் அருகே சென்று நின்றாள்."அப்பா, அண்ணனையும் அக்காவையும் எங்கேயும் அனுப்பாதீங்கப்பா. அவங்க இல்லேன்னா வீடே நல்லாருக்காதுப்பா."என்றபடியே ரமா சுப்பிரமணி இருவரின் கைகளையும் பிடித்துக் கொண்டாள் .அந்தக் கரங்களை இருவரும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டனர். அதில் தெரிந்த பாசத்தைக் கண்டு காந்தா சிரித்தாள்.பெரியப்பாவும் புன்னகையுடன் "சரி அப்போ  காந்தாமணி சொல்லிட்டா நாங்க உங்களை விட்டுட்டுப் போறோம். நல்லா படிங்க" என்றபடியே புறப்பட்டனர்.அவர்களை வழியனுப்ப வெளியே சென்றார் கந்தசாமி.
தங்களின் கெட்ட குணங்களையெல்லாம் மறந்து தாங்கள் இழைத்த துன்பங்களையெல்லாம் பொறுத்துக் கொண்டு தங்களிடம் அன்பு காட்டிய அன்புத் தங்கையை எண்ணி மிகவும் ஆச்சரியமும் பெருமிதமும் பட்டார்கள் ரமாவும் சுப்பிரமணியும். இனி இவர்கள் திருந்திவிடுவார்கள் என்ற நம்பிக்கையோடு அவர்களைப் பார்த்தவாறு உள்ளே வந்தார் கந்தசாமி.
பொறுத்துக் கொள்வதில் பூமித்தாயைப் போல இருக்கும் காந்தாமணியின் பண்பை நாமெல்லாம் கற்றுக் கொள்வோம்.





ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee 
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

திங்கள், 26 செப்டம்பர், 2016

குறள் வழிக் கதைகள் -- அன்பில்லார் நிலை.

          "என்பிலதனை வெயில் போல காணுமே 
          அன்பிலதனை அறம்."

                            ஐந்தாம்  வகுப்பில் படிக்கும் சதிஷ் மிகவும் கெட்டிக்காரன். வகுப்பில் முதல் மாணவனாகவும் இருந்தான்.அத்துடன் எந்த பிராணியைக் கண்டாலும் அதனுடன் கொஞ்சி விளையாடுவான். அத்தனை பிரியம்.
அவன் தினமும் பள்ளிக்கு வருவான்.மாலையில் தாத்தாவின் கையைப்பற்றிக் கொண்டே கதை பேசியபடி வீட்டுக்கு வருவான்.
             ஒருநாள் தாத்தாவுக்கு முடியவில்லையென்று வேலைக்காரி மாரி அவனைப் பள்ளியிலிருந்து  அழைத்து வந்தாள்.அவளுடன் வரும்போது வழியில் ஒரு குட்டிப் பூனை  கருப்பும் வெளுப்பும் கலந்த நிறத்தில் அழகாக இருந்தது. ஒரு மரத்தடியில் பயந்தவாறு ஒடுங்கி கொண்டு அமர்ந்திருந்தது. அத்துடன் மியாவ் மியாவ் என்று குரல் கொடுத்தபடி இருந்தது. அதைக் கண்ட சதீஷ் தன கையைப் பற்றியிருந்த மாரியின் கையை விடுவித்துக் கொண்டு ஓடி அந்தப் பூனைக் குட்டியை எடுத்து அணைத்துக் கொண்டான்.

         உடனே மாரி "வேண்டாங்க சாமி அதை விடுங்க சாமி. தாத்தாவுக்குப் புடிக்காதுங்க.என்னையைத்தான் திட்டுவாரு."என்றாள்  அன்போடு. 
"ஆன்டி, பாவம் ஆன்டி எப்படி நடுங்கிக்கிட்டு இருக்கு பாருங்க பசிபோல இருக்கு. பாவம் அம்மாவத் தேடி அலையுது போல இருக்கு."
"சரிதான் கண்ணு. தாத்தாவுக்குப் புடிக்காதே. திட்டினா என்ன செய்யறது?"
"தாத்தா கண்ணுல படாம நான் பாத்துக்கறேன்.நீங்க பயப்படாதீங்க."
என்று சொன்னபடியே அந்த  அழகிய குட்டியைத்  தன மார்போடு அணைத்துக்கொண்டு வீட்டின் பின்புறமாகச் சென்று அங்கிருந்த பூத்தொட்டிகளின் இடையே  வைத்தான். பின் வேகமாக உள்ளே ஓடி ஒரு பிளாஸ்டிக் கிண்ணத்தில்  பாலைக்  கொண்டு வந்து பூனை முன் வைத்து அது ஆவலோடு குடிப்பதை ஆசையோடு பார்த்தான்.அதற்குள் வீட்டின் உள்ளிருந்து தாத்தா" கண்ணா, சதீஷ், வந்துட்டியா?"என்று அழைக்கும் குரல் கேட்கவே உள்ளே வேகமாக ஓடினான்.
அன்புடன் தாத்தாவின் அருகே அமர்ந்து வழக்கம்போல பள்ளிக் கதைகளை சொல்லத தொடங்கினான்.தாத்தாவும் மிகவும் ஆசையோடு கேட்டுக் கொண்டிருந்தார்.சற்று நேரத்தில் சதீஷின் அம்மா அழைக்கும் குரல் கேட்கவே, " நீ இன்னும் பால்  குடிக்கலையா?அம்மா குரல் கேக்குதே.போ, போய் பால்  குடிச்சுட்டு வா."என்றார். 
 இப்போது சதீஷுக்கு தாத்தாவை விட  தன பூனைக்குட்டிதான் மிகவும் முக்கியமாகத்  தெரிந்தது. எனவே வேகமாக பாலை வாங்கிக் கொண்டு  பின் புறம்   ஓடினான்.
எப்படியோ இரவு வரை பூனையை யாருக்கும் தெரியாமல் காப்பாற்றி விட்டான்.படுக்கையில் படுத்ததும் அந்தப் பூனையின் மியாவ் குரல் அனைவரையும் எழுப்பிவிட்டது.எப்படியோ ஒரு இடுக்கு வழியாக உள்ளே புகுந்த பூனை சதீஷின் அருகே வந்து ஒண்டிக் கொண்டது.
இரவு முழுவதும் சதீஷும் தூங்க முடியாமல் வெகுநேரம் கழித்துத் தூங்கினான் காலையில் எழுந்தபோது அருகே பூனைக்குட்டியைக் காணாமல் பின்புறம் ஓடினான்.அங்கே அருகம் புல்லை மேய்ந்தவாறு விளையாடிக் கொண்டு இருந்தது.அது.உள்ளே ஓடிய சதீஷ் தன பாலக் கையில் எடுத்துக் கொண்டு பூனைக்குத் தேவையான பாலை அதன் பிளாஸ்டிக் கிண்ணத்தில் ஊற்றினான் அதனுடன் சேர்ந்தே தானும் பாலைக் குடித்தான். 
அன்று தாத்தாவுடன் மனமில்லாமல் பள்ளிக்குச்  சென்றான்..
                                     மாலை வந்தவுடன் தாத்தாவுடன் வீடு திரும்பும் போதே அவரிடம் பூனையைப் பற்றி எப்படிக் கேட்பது என்று தவித்தவாறே வேகமாக நடந்தான்.அவன் மனம் என்ன நினைக்கிறது என்பதைப் புரிந்து  கொண்டார்  தாத்தா. அவனிடம் மெதுவாக "சதீஷ் கண்ணா, நம்ம வீட்டுக்குப் பூனையெல்லாம் சரிப்படாதுடா.அதனுடைய தொந்தரவு தாங்க முடியாது.அதனால "அதனால என்ன பண்ணினீங்க பூனையை?"என்று இடைமறித்துக் கேட்டான் அழுகையுடன்.
"ஒண்ணும்  பண்ணலை. நீயே வந்து உன் கையாலேயே அதைக் கொண்டு போய் விட்டுவா.இப்போ அழாம நட "என்று சற்று கண்டிப்புடன் சொன்னார் தாத்தா.வீட்டுக்குவந்தவன் அழுகையுடன் பூனையை மடியில் வைத்துக் கொண்டு அமர்ந்து விட்டான்.அம்மா என்ன சொல்லியும் பால் குடிக்கவோ டிபன் சாப்பிடவோ வரவில்லை.அவன் அழுகையைப் பார்த்து அம்மா தாத்தாவுக்குத் தெரியாமல் பூனைக்குப் பால் ஊற்றினாள் அதைப் பார்த்து மகிழ்ந்த சதீஷ் தானும் சாப்பிட்டான்.அதன் பின் தாத்தாவின்  முன் பூனை வராமல் அம்மாவும் சதீஷும் பார்த்துக் கொண்டார்கள்.

              ஒருநாள்மாலை . நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. விரைவிலேயே தாத்தா சாப்பிட்டுவிட்டுப் படுக்கஆயத்தமாகிக்   கொண்டிருந்தார்.சதீஷும் வீட்டுப் பாடங்களை முடித்துவிட்டு சாப்பிடப் போனான்.திடீரென்று விளக்குகள் எல்லாம் அணைந்து போக ஒரே இருள் சூழ்ந்தது.அம்மா இரண்டு மூன்று கைவிளக்குகளை ஏற்றி அங்கங்கே வைத்தார்.அதே சமயம் சதீஷின் அணைப்பிலிருந்து பூனை தாவி தாத்தாவிடம் சென்று நின்றது.அவரைச் சுற்றி மியாவ் மியாவ் என்று கத்திக் கொண்டுசுற்றி வந்தது.இதனால் கோபமடைந்த தாத்தா
 "டேய் சதீஷ் இந்தச் சனியன்என் பிராணனை   வாங்குகிறது பார். வந்து தூக்கிப்போ" என்று கத்தினார். அவர் கையில் தலையணையை வைத்துக் கொண்டு கட்டிலருகே நின்று கொண்டு பூனையைத் துரத்திக் கொண்டிருந்தார். பூனையோ அவரது காலைச்  சுற்றிக்  கொண்டு நகர மறுத்தது. பயந்துபோன சதீஷ் ஓடிவந்து பூனையைத் தூக்கிக் கொண்டான். தாத்தா த்லையணையைக் கட்டிலில் போட்டவுடன் சதீஷின் கையிலிருந்த பூனை திமிரிக் கொண்டு பாய்ந்து கட்டில் மீது தாவியது அதைத் தடுத்த தாத்தா தன அருகே இருந்த வாக்கிங்  ஸ்டிக்கை எடுத்து அதன் காலில் போட்டார்.காலில் அடிபட்ட பூனை மியாவ் என்று கத்தியபடியே மீண்டும் தாத்தாவைப் படுக்க விடாமல் படுத்தியது.அதேநேரம் மின்சாரம் வந்துவிடவே தாத்தா தலையணையைச் சரியாக உதறிப் போட்டவுடன் உள்ளிருந்து ஒரு கருந்தேள் மெதுவாக நகர்ந்து தலையணை உறைக்குள்ளிருந்து வெளியே வந்தது.அதைப் பார்த்துத் தாத்தா பயந்து போய் அலறினார்.
               எல்லோரும் ஓடிவருவதற்குள் பூனை பாய்ந்து அதைக் கடித்துத் துண்டாக்கி விட்டு சாதுவாய் அமர்ந்து கொண்டது.    
"டேய் சதீஷ், இதற்காகத்தானடா  இந்தப் பூனை என்னைப்  படுக்க விடாமல் தடுத்திருக்கிறது. இது தெரியாமல் அதை அடித்து நொண்டியாக்கிவிட்டேன்  பாவம் காலுக்கு மருந்து போடு சதீஷ்."என்று சொன்ன தாத்தாவை அதிசயத்துடனும் மகிழ்ச்சியுடனும் பார்த்தான் சதீஷ்.
தன பூனையை அணைத்துக் கொண்டு உள்ளே சென்றான். 

இரவு முழுவதும் அந்த வாயில்லா ஜீவனை அடித்து விட்டோமே.என்று மிகுந்த வருத்தத்துடன் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தார் தாத்தா. பொழுது விடிந்ததும் அந்தப் பூனையை எடுத்துத் தடவிக் கொடுத்து அதன் கால் நொண்டுவதைப் பார்த்து மிகவும் வருந்தினார்.அறமற்ற காரியத்தைச் செய்தோமே  என்று மனம் வருந்தினார்.
காலையில் சதீஷும் பாடம் படிக்கையில் "என்பிலதனை வெயில் போல காயுமே 
                                                                                         அன்பி லதனை அறம்"    என்று படிக்கும்போது தாத்தா வள்ளுவர் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்.அன்பில்லாமல் தான் நடந்து கொண்ட செய்கையால் இரவு முழுவதும் எப்படிப் பாடுபட்டோம்.எவ்வளவு மனம் வருந்தினோம். இனி அவசர பட்டு எந்த உயிருக்கும் தீங்கு செய்யக் கூடாது என முடிவு செய்து கொண்டார்.அவர் முடிவு சரிதானே? 









ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

ஞாயிறு, 24 ஜூலை, 2016

குறள் வழிக் கதைகள் --மனதாலும் நினைக்கக் கூடாதது..

                 மனதாலும் நினைக்கக் கூடாதது. 

        ரங்கசாமி ஒரு மளிகைக் கடை வைத்திருந்தார்.அந்த ஊர் சற்றுப் பெரிய ஊரானதால் வியாபாரம் நல்ல முறையில் நடந்து வந்தது.அவருக்கு மாதேஷ் என்று ஒரே மகன் இருந்தான்.பள்ளிக்கு கூடத்தில் பத்தாம் வகுப்பில் படித்து வந்தான்.தன் மகனை வியாபாரத்தில் பழக்குவதற்காக ரங்கசாமி விடுமுறையின் போது கடையில் வந்து அமரச்  சொல்வார்.

         சில நாட்கள் யாரேனும் மாளிகைப் பொருட்களை வீட்டுக்கு கொண்டு வந்து தரும்படி சொன்னால் ஒரு வேலையாள் மூலம் பொருட்களைக் கொடுத்தனுப்புவார்.உடன் தன் மகனையும் வேலையாளுக்குக் காவலாக அனுப்புவார்.அத்துடன் பணத்தையும் வசூல் செய்து கொண்டு வரச்  சொல்வார்.அப்போது தான் அவனுக்குப் பணத்தின்  அருமை தெரியும் என்பது அவரின் கருத்து.

ஒருநாள் அவ்வூரிலுள்ள பள்ளிஆசிரியர் அவரது கடைக்கு வந்தார்.ஆயிரம் ரூபாய்க்கான பொருட்களை வீட்டில் தரும்படியும் தான் வெளியே செல்வதால் ரூபாயை வீட்டு அம்மாவிடம் வாங்கி கொள்ளும்படியும் சொல்லிவிட்டுச் சென்றார்.
            அதேபோல வீட்டுக்குப் பொருட்களை அனுப்பினார் ரங்கசாமி.பணத்தை வசூல் செய்யும் பொருட்டு தன்மகனையும் உடன் அனுப்பினார்.ஆசிரியரின் வீட்டுக்குள் நுழைந்த  மாதேஷும் 
அம்மா என அழைத்தான். சமையலறையில் வேலையாக இருந்த அம்மாள் இதோ வரேன் என்றபடியே புடவைத் தலைப்பில் கையைத் துடைத்தவாறே வந்தார்.
"சாமானெல்லாம் சரியாகக் கொண்டு வந்தாயா ?எதுவும் விட்டுப் போகலியே "என்றவாறே அங்கிருந்த ஒரு மேசையிலிருந்த இழுப்பறையைத் திறந்து எவ்வளவு என்று கேட்டு பணத்தைக் கொடுத்தார்.மீதிப் பணத்தை அதே இடத்தில் வைத்துவிட்டு சில சாமான்களைக் கையில் எடுத்துக் கொண்டு உள்ளே வைக்கச் சென்றார்.
              அப்போது மாதேஷ் தன் வேலையாளிடம் "வேலு, , அந்தப் பணத்திலேயிருந்து ஒரு நூறு ரூபாயை எடுத்துக்கலாமா?"என்றான் மெதுவாக."
"வேண்டாம் தம்பி அது தப்பு வந்திடுங்க" என்று சொல்லி அவனை வேகமாக வெளியே அழைத்து வந்தான்.
இரண்டு நாட்கள்  கழிந்தன.அதே ஆசிரியர் கடைக்கு வந்தார்."கடைக்காரரே, இரண்டு நாட்களுக்கு முன்னால்  வீட்டுக்கு மளிகை சாமான் போடவந்தது யார்?"என்றார்.
"ஏன் நான்தான்."என்றான் மாதேஷ்.ஏன் பொருள் ஏதும் குறைந்திருக்கிறதா என்று கேட்டார்.அதற்கு ஆசிரியர்.கோபமாகப் பேசினார்.
"பொருள் குறையவில்லை. பணம்தான் காணாமல் போயிருக்கிறது."என்ற போது வேலைக்காரன் வேலு மாதேஷைத் பார்த்தான்.அவன் பார்ப்பதைக் கவனித்த ஆசிரியர்,
"உண்மையாக எடுத்த பணத்தைக் கொடுத்து விடுங்கள். இல்லையேல் ...."என்று கடுமையாகப் பேசினார். அதற்குள் பொருள் வாங்கவந்த சிலர்  அங்கு கூடிவிட்டனர்.
"என்னவாயிற்று?"என்று கேட்டவர்களுக்கு ,"என்வீட்டு மேசையில் இரண்டாயிரம் ரூபாய் வைத்திருந்தேன்.   இந்தப் பைய்யனும் அவர் வேலைக்காரனும் தான் வீட்டுக்கு வந்தனர்.
மாளிகைக்குண்டான பணத்தைக் கொடுத்து மீதி அறுநூறு ரூபாயை என் மனைவி இவர்கள் கண்ணெதிரிலேயேதான் அங்கே வைத்தாள்.அந்தப் பணத்தைத் தான் காணோம் எங்கெங்கே தேடியும் கிடைக்கவில்லை.இவர்கள்தான் வந்தார்கள்.வீட்டுக்கு வேறு யாரும் வரவில்லை.
 என்றார் கோபமாக.
வந்தவர்களும் "எடுத்திருந்தால் கொடுத்து விடுங்கள் சின்னப்ப பையன்தான் என்று விட்டு விடுவோம்."என்றனர்.குற்றம் புரியாத வேலுவும் மாதேஷும் திகைத்தனர்.அவர் சற்றுநேரம் கோபமாக பேசியபின் எப்படியாவது அந்தப் பணத்தைக் கொடுக்கவேண்டும் என்று சொல்லிச் 
சென்றபின் வேலு,"ஐயா தம்பிதான் அந்தப் பணத்தை எடுக்கலாமா அப்படின்னு கேட்டுதுங்க.அது  பாவம்னு சொன்னேனுங்க "என்றான். அதைக் கேட்டு மிகவும் கோபத்துடன் மாதேஷை அடிக்கக்  கையை ஓங்கினார். அதைத் தடுத்த வேலு "தம்பி  சொன்னாரே தவிர எடுக்கலீங்க."என்று கூறவே சற்றே கோபம் தவிர்த்து "ஏண்டா உனக்கு ஒரு திருக்குறள் தெரியுமில்லே.மனசால கூட மற்றவர் பொருளை எடுக்கணும் அப்படிங்கற எண்ணம் இருக்கறது தீயது."அப்படீன்னு படிச்சியே.நினைவில் இருக்கா? அதைச்சொல்லுஇப்ப."என்றார். 
 மெதுவாகவேலு 
          "உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறர் பொருளை 
           கள்ளத்தால் கள்வேம் எனல்"
என்று  சொல்லவே ரங்கசாமி, "தெரியுதில்லே.  இதை நீ உன்  வாழ்க்கையிலும்கடைபிடிக்கணும்.தெரியுதா "என்றார் அன்போடு.அப்போது ஆசிரியர் அங்கு வந்து ரங்கசாமியின் கைகளை பிடித்துக் கொண்டார்."ஐயா மன்னிச்சுடுங்க.என்மனைவி பால்காரனுக்குப் பணத்தைக் கொடுத்திட்டு மறந்திட்டாங்க.பையனைத் தப்பா நினைச்சுப் பேசிட்டேன்." என்றார் குற்ற உணர்வோடு.ரெங்கசாமிதான் குறளின் வழி நடப்பவராயிற்றே அதனால் புன்னகையையே பதிலாகக் கொடுத்தார் ஆசிரியருக்கு.
,




ருக்மண சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspo""t.com "

வியாழன், 21 ஜூலை, 2016

வேடிக்கைக் கதைகள்.-ஏழைக்குதவிய பீர்பால்.

            டில்லிக்கு பாதுஷாவாக இருந்த  அக்பர் மிகவும் புகழ் மிக்க மன்னனாக விளங்கினார்.
அவரது சபையில் ராஜபுத்திர வீரர்களும் பெரிய பதவிகளில் அமர்த்தப் பட்டிருந்தனர்.அக்பரது ஜாதிபேதமற்ற பண்பினால் மக்கள் அவரை மிகவும் நேசித்தனர்.பரந்த சாம்ராஜ்யத்தை ஆண்டுவந்த அக்பர் மஹா அக்பர் என வரலாற்றில் புகழைப் பட்டார்.அத்தகைய சிறந்த மன்னனாக இருந்தபோதும் சில சமயங்களில் அவரும் சில தவறுகளைச் செய்து  விடுவதுண்டு.அத்தகு ஒரு நிகழ்ச்சியைத் தான் இங்கு காணப் போகிறோம்.
                ஒருநாள் முழுநிலவு நேரம்.அக்பர் உப்பரிகையில் நின்று வெண்ணிலாவின் ஒளியில் யமுனைநதியின் அழகை ரசித்துக் கொண்டிருந்தார்.அப்போது நல்ல குளிர் காலமாகையால் வெகுநேரம் உப்பரிகையில் நிற்க முடியாமல் உள்ளே சென்று விட்டார்.அவர் மனதில் ஒரு சந்தேகம் துளிர்விட்டது.
                மறுநாள் அரசவையில் அந்த சந்தேகத்தை வெளியிட்டார்.
 "கடும் குளிரில் இரவு முழுவதும் யமுனைநதியில் இடுப்பளவு நீரில் நிற்க முடியுமா?யாராலும் முடியாது என்பதுதான் என் அபிப்ராயம்.யாருக்காவது இதில் மாற்றக் கருத்துண்டா?"
சற்று நேரம் சபையில் அமைதி நிலவியது.ஆனால் பீர்பால் மட்டும் மெதுவாக எழுந்தார்.
"ஜஹாம்பனா, அவசியம் ஏற்பட்டால் நிற்க முடியும்."
"அப்படியானால் அத்தகையவர் யாரெனக் கண்டு இங்கு அழைத்து வாருங்கள் இரவு முழுதும் நின்றால் அவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு என அறிவித்து விடுங்கள்."
             பறையறையப்பட்ட செய்தி கேட்டு அவ்வூரில் வாழ்ந்த ஒரு பரம ஏழை தன் மகளின் திருமணத்தை முடிக்க பொருள் தேடும் நிலையில் இருந்தவன் சபைக்கு வந்து தான் அவ்வாறு நிற்பதாகக் கூறவே அக்பரும் சம்மதித்தார்.அன்று இரவு சாளரத்தின் எதிரே தெரிந்த யமுனை நதியில் மேலாடையின்றி இடுப்பளவு நீரில் நடுங்கியபடி நின்றிருந்தான் அந்த ஏழை.அதை சாளரத்திலிருந்தும் பார்த்தார் அக்பர்.இரண்டு காவலர்கள் உடலைப் போர்த்திக் கொண்டு அவனுக்கு காவலாக நின்றிருந்தனர்.
 பொழுது விடிந்தது.ஈர ஆடையுடனேயே அக்பரைப் பார்க்க வந்தான் அந்த ஏழை.காவலரிடம் அக்பர் விசாரித்தார்."இவன் நிற்கும்பொழுது எங்கிருந்தேனும் வெளிச்சம் வந்ததா?"
"ஆம் பிரபு.தங்கள் உப்பரிகையின்  வெளிச்சம் இவர்மீது விழுந்து கொண்டிருந்தது.வேறு வெளிச்சம் அங்கில்லை."
"அப்படியானால் அந்த வெளிச்சத்தில் இவன் குளிர் காய்ந்துகொண்டு நின்றிருக்கிறான்.ஏமாற்றியவனுக்குப் பரிசு கிடையாது "
இந்த வார்த்தையைக் கேட்ட அந்த ஏழை குளிரில் நடுங்கியதையும் துன்பப்  பட்டதையும் விட மன்னரின் இந்த வார்த்தையைக் கேட்டு அதிக துயரப்பட்டான். தான் விதியை நொந்து கொண்டே தலைகுனிந்து திரும்பினான்.ஆனாலும் மன்னர் செய்தது அநியாயம் என்று பட்டது. இதற்கு தீர்வு சொல்பவர் அரசரின் நெருங்கிய நண்பராக விளங்கும் பீர்பால்தான் என்று எண்ணி அவரிடம் தன் துன்பக் கதையைக் கூறினார்.
             அவரை சமாதானப் படுத்திய பீர்பால் கவலையின்றி இருக்குமாறு கூறி அனுப்பினார்.
இரண்டு நாட்களில் அக்பரை அழைத்துக் கொண்டு வேட்டைக்குச் சென்றார் பீர்பால். இருவரும் வெகு தொலைவு சென்றபின் களைப்படைத்த அக்பர் ஒரு மரத்தடியில் அமர்ந்து விட்டார்.
"பீர்பால் எனக்கு பசி அதிகமாகிவிட்டது. ஆகாரம் உண்டபின்தான் நகர முடியும்.ஏற்பாடு செய் "

"இதோ ஐந்து நிமிடத்தில் உணவு தயாராகிவிடும்."என்றபீர்பால் தானியத்தை ஒரு பாத்திரத்திலிட்டு நீர் ஊற்றியபின் அதை ஒரு மரக்கிளையில் கட்டினார்.அதன் கீழே நேராக நெருப்பை மூட்டி விட்டு அமர்ந்தார்.சற்று நேரம் இதைக் கவனித்த அக்பர் "பீர்பால் என்ன செய்கிறாய்?இவ்வளவு உயரத்தில் பாத்திரம் இருந்தால் எப்படி வேகும்?நெருப்புப் படவேண்டாமா?"என்றார் கோபமாக.
பீர்பால் பணிவாக நிதானமாகக் கூறினார்." ஆலம்பனா அவர்கள் மன்னிக்க வேண்டுகிறேன்.
தங்கள் ஆட்சியில் சாளரத்தின் வெளிச்சத்தில் குளிர் காய முடியுமென்றால் அந்த வெளிச்சத்தில் இரவு முழுதும் நதியில் குளிரில்லாமல் நிற்க முடியுமென்றால் இந்த சூட்டில் தானியம் வேகாதா? சற்றுப் பொறுமையாக இருங்கள்."
அக்பருக்கு அப்போதுதான் தன்னைப் பழி வாங்குகிறார் பீர்பால் என்று புரிந்தது.அத்துடன் அவரது புத்திசாலித்தனமும் தெரிகிறது  என்று புன்னகை புரிந்து, "பீர்பால், உங்கள் எண்ணம் புரிந்து விட்டது நாளையே அந்த ஏழைக்கு ஆயிரம் பொற்காசுகள் கொடுக்க ஏற்பாடு செய்கிறேன் மகிழ்ச்சியா.இப்போதேனும் எனக்கு உணவு சீக்கிரம் தாருங்கள்" என்றவருக்கு தலை சாய்த்து நன்றி கூறிய பீர்பால் தனியாக வைத்திருந்த பழங்களைக் கொடுத்து அவரின் பசியாற்றினார்.
இருவரும் அரண்மனை திரும்பியதும் அந்த ஏழையை அழைத்து அவருக்கு ஆயிரம் பொற்காசுகளைக் கொடுத்தார் அக்பர்.பீர்பாலுக்கு நன்றி தெரிவித்தான் மன்னருக்கு வணக்கம் தெரிவித்தான் அந்த ஏழை மனிதன்.






































--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

வெள்ளி, 15 ஜூலை, 2016

குறள் நெறிக் கதைகள் - பொய்யும் மெய்யாகும்.

          தாயம்மா எழுபது வயதான பாட்டி.சென்னையில் நடுநாயகமாக உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் குடியிருந்தார்.அவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். இரண்டு பேரும் வெளிநாடுகளில் இருந்தனர். அதனால் தங்கள் சொந்த கிராமத்திலிருந்து ஒரு சிறுமியை அந்தத் தாய்க்குத் துணையாக அமர்த்தினர். வாரம் தவறாமல் இருவரும் தாயின் நலம் பற்றி விசாரித்து அரைமணிக்கு மேல் பேசுவார்கள். அதனால் அந்தப் பாட்டியின் மனமும் உடலும் மிகவும் ஆரோக்யமாக இருந்தது என்றே சொல்லலாம்.
         அவருடன்  வசித்த  அஞ்சலை என்ற பெண் அவருக்குப் பெருந்  துணையாக இருந்தது         மகிழ்ச்சியாக அவர் இருக்க முக்கிய  காரணம் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அஞ்சலை அவருக்கு  உதவியாக இருந்தாள்  என்றே சொல்ல வேண்டும்.வீட்டு வேலைகளை அஞ்சலை சரியாகச் செய்யாவிட்டாலும் கவலைப்பட மாட்டார்  தாயம்மா.அடிக்கடி அவருடன் அமர்ந்து வம்பு பேசவேண்டும் அதுதான் அவருக்கு ஒரே பொழுது போக்கு.அத்துடன் அஞ்சலையும் சரியான வாயாடி. ஊர்வம்புகளை சிரிக்கச் சிரிக்கச் சொல்வாள்.அத்துடன் அஞ்சலை மிகவும் ஆசையுடன் தாயம்மாவிடம் கதை கேட்பாள்.அதுவும் அரிச்சந்திரன் கதையை மீண்டும் மீண்டும் கேட்பதில் மிகவும் பிரியம்.அடிக்கடி அந்தக் கதையைக் கூறும்படி தாயம்மாவைக் கேட்டு நச்சரிப்பாள் அஞ்சலை.அவள் விருப்பத்துடன்  கேட்பதால் தாயம்மாவும் சலிக்காமல் கதை சொல்வாள்.
               ஒருநாள் அஞ்சலையைக் கூப்பிட்ட தாயம்மா "பக்கத்துவீட்டுக்குப் போய் ராமாயண புத்தகம் இருக்கும். வாங்கிட்டு வா. அந்த கதையைப் படிச்சு உனக்கு இன்னிக்கு கதை சொல்றேன்."என்றதும் துள்ளி அருகே ஓடிவந்தாள் அஞ்சலை.
       "ஏம்மா, அந்தப் புஸ்தகத்துல அரிச்சந்திரன் கதையும் இருக்குமில்லே.''
புன்னகை புரிந்த தாயம்மா "உனக்குச் சரியான அரிச்சந்திரன் பயித்தியமடி.அதைப் போல இன்னும் சூப்ப ரான விஷயமெல்லாம் இந்தக் கதையிலேயும் இருக்கும். "என்றபோது மிகவும் மகிழ்ச்சியாக ஓடினாள் அஞ்சலை.
அவள் புத்தகத்தோடு வந்ததும் அவளையும் உட்காரச் சொல்லி புத்தகத்தைப் பிரித்துப் படிக்கத்  தொடங்கினார். மிகவும் சுவாரசியமாக அமர்ந்து கதையைக் கேட்டுக் கொண்டிருந்தாள் அஞ்சலை.அப்போது மிக வேகமாக அங்கே வந்த பக்கத்து வீட்டு அம்மாள் கோபமாக முன்னால் நின்றாள்.
         அவளைப்  பார்த்த தாயம்மா "வாம்மா கோமதி நீ குடுத்த பொஸ்தகத்தைத்தான் படிச்சுக்கிட்டு இருக்கேன்"என்றார் புன்சிரிப்புடன்.
"என்ன படிச்சு என்ன பிரயோசனம்?யாருமில்லையின்னா பொருளைத்  திருடச் சொல்லுதோ உன் படிப்பு" என்று அஞ்சலையைப் பார்த்துக் கத்தினாள் கோமதி.
அஞ்சலை ஒன்றும் புரியாதவள் போல்  விழித்தாள்.
அவள் தலையில் இடித்த கோமதி"எங்கவீட்டு மேசையிலதான அந்தப் புஸ்தகம் இருந்துது. அதை எடுக்கும்போது பக்கத்துல இருந்த என் கைக்கடிகாரத்தையும் திருடிக்கிட்டு வந்துட்டியா?"என்றாள் கோபமாக.
தாயம்மாவால் தங்க முடியவில்லை.எவ்வளவு உத்தமமான பெண் இந்த அஞ்சலை.இவள் அருமை தெரியாமல் வீண் பழி போடுகிறாள் என்று கோபமாக எழுந்தார்.
"அவசரப்பட்டுப் பேசாதே கோமதி.அப்படி செய்ற பொண்ணு இல்லை இவள்.நான் தீர விசாரித்துச் சொல்றேன்.அவள் எடுத்திருக்க மாட்டாள்."
 "இவள் எடுக்காமல் வேறே யாரு?வேறே யாருமே அங்கே வரலையே.இவை வந்து போனப்புறம்தான் கடியாரத்தைக் காணோம்.சொல்லுடி வேறே யாராச்சும் வந்தார்களா?"
சற்றே யோசித்த அஞ்சலை யாரும் வரவில்லையெனத் தலையசைத்தாள்.                                     "இருக்கட்டும். உன்கிட்டே இருந்து எப்படி வாங்கணுங்கறது எனக்குத் தெரியும்."என்று கத்திவிட்டுப் போனாள்  கோமதி. 
தலை குனிந்து அமர்ந்திருந்த அஞ்சலையை "ஏய், நீயேண்டி தலை குனியணும் அவ எங்கயாச்சும் மறந்து வச்சிருப்பா.நீ கவலைப் படாதே.வந்து உட்காரு."என்றபடியே படிக்கத்  தொடங்கினார்.
அஞ்சலையின் கவனம் கதையில் இல்லை என்பதை அவளை பார்த்த தாயம்மாவிற்குப் புரிந்தது."அஞ்சலை, என்ன விஷயம் ?உன் மனசு இங்கே இல்லை போலிருக்கே."
கண்களில் நீருடன் "ஆமாம்மா, நான் பொய் சொல்லிட்டேன்.அரிச்சந்திரனை மனசுல  என் குருவா நெனச்சிருந்த நான் பொய் சொல்லிட்டேன்.''என்றபோது திடுக்கிட்டார் தாயம்மா."என்னம்மா சொல்றே நீ. ஒரு வாச்சுக்கு ஆசைப்படற பொண்ணா நீ? நான் நம்பமாட்டேன்."
"உண்மதாம்மா.நா ஆசைப்படல.கோமதியக்கா வீட்டுல வேலை செய்யுற பட்டக்காவோட மவன்தான் உள்ளேருந்து வந்தான் எதையோ மறைச்சுகிட்டுப் போரதப் பார்த்தேன்.புஸ்தகத்தை எடுத்துக்கிட்டு அவன் பின்னால போயி அதட்டுனேன். அழுதுகிட்டே குடுத்துட்டு இனிமே இப்படி செய்ய மாட்டேன்.இதை அந்த அக்கா கிட்டே குடுத்துடுன்னு சொல்லிட்டு என் கையில வச்சுட்டு ஓடிட்டான்.நான் மறுபடி அந்த அக்காவீட்டுக்குள்ளே போயி இருந்த எடத்துல வேக்கப் போனேன் ஆனா அந்த கோமதியக்கா வந்துட்டாங்க.அதால அப்புறமா வச்சிடலாம்னு வந்துட்டேம்மா."
"சரி இப்போ வந்தாளே  உண்மையைச் சொல்லி வாட்சைக் குடுத்துடறதுதானே?"
"அய்யோ பாவம்மா அந்தப் பட்டக்கா.தெரியாம சின்னப்பய செஞ்சதுக்கு அந்தக்காவுக்கு வேலை போயிட்டா என்ன பண்ணுவாங்க.அதால சும்மா கம்முனு இருந்திட்டேன்."
"சரி வாட்சை குடுக்கறதுதானே?"
"அது எப்படிம்மா ?நான்தான் திருடிட்டேன்னு நெனைக்க மாட்டாங்களா.அதனாலதான் மனசு கொஞ்சம் கஷ்டமா இருக்கும்மா."
"சரி,அதைக் குடு எங்க வீட்டிலே நேத்தே வச்சுட்டுப் போயிட்டேன்னு நானே சொல்லி குடுத்திடறேன்."
"ஆனாலும் பொய் சொல்லிட்டமேன்னு ரொம்பக் கஷ்டமாயிருக்கம்மா "
அவளை புன்னகையுடன் பார்த்த தாயம்மா,
"அஞ்சலை ஒரு நல்ல காரியம் செய்யறதா இருந்தா பொய் சொல்லலாம்னு பெரியவர் ஒருத்தர் திருவள்ளுவர்னு பேரு அவரு சொல்லியிருக்காரு."
சற்றே நிம்மதியுடனும் ஆர்வத்துடனும் "அதாரும்மா, பொய் சொல்லலாம்னு சொல்ற பெரியவரு அப்படிச்சொன்னா அது பாவமில்லையா?""என்றாள்  அஞ்சலை.
"இல்லவேயில்லை. குத்தமில்லாத ஒரு நல்லது நடக்குமுன்னா அப்போ அங்க பொய் சொல்றதும் உண்மை சொன்ன மாதிரிதான்னு சொல்றாரு."
"இந்த ராமாயண பொஸ்தகத்தில போட்டிருக்குதாம்மா?"
"இது திருக்குறள் அப்படிங்கற புஸ்தகம். அதை அப்புறமாய் படிக்கலாம். அவரு என்ன சொல்றாரு கேளு 
"பொய்ம்மையும்  வாய்மை  யிடத்த  புரைதீர்ந்த 
நன்மை  பயக்கும் எனின் "அப்படீங்கறாரு.
"அப்போ நான் சொன்னது நன்மையைத் தானே செய்யும். இதுவும் உண்மை மாதிரிதானாம்மா?"
"ஆமாம்.நீ செஞ்சது தப்புமில்லே பொய்யும் இல்லே.சந்தோஷமா கதையைக் கேளு. என்று ராமாயணத்தை விட்ட இடத்திலிருந்து படிக்க ஆரம்பித்தார் தாயம்மா.மகிழ்ச்சியுடன் கேட்கத்  தொடங்கினாள் அஞ்சலை.




























ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

வியாழன், 30 ஜூன், 2016

குறள்நெறிக் கதைகள்.--கேட்டலின் பயன்.

       மருதூர் ஒரு சிற்றூர். அவ்வூரின் முக்கிய தொழிலே விவசாயம்தான்.ஊரிலிருக்கும் சுமார் முந்நூறு வீட்டு மக்களும் சொந்த விவசாயம் செய்பவர்கள்.விவசாயத் தொழிலையே தெய்வமாக எண்ணி வாழ்ந்து வந்தனர்.அந்த ஊரில் ஒரே ஒரு பள்ளிக்கூடம் இருந்தது.அதுவும் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளி. அந்தப் பள்ளியில் முதல் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை  இணைந்து படித்தவர்கள்  நடராஜனும் காசிராஜனும்.இருவரும் உயிர்நண்பர்களாகவும் இருந்தனர்.
      அவ்வூரின் அனைத்துச் சிறுவர் சிறுமியரும் அங்குதான் படித்து வந்தனர். மேலே படிக்க வெகுசிலரே அருகே உள்ள நகரத்துக்குச் சென்றனர்.அப்படி சென்றவர்களில் நடராஜனும் ஒருவன்.அவன் தந்தை சற்று வசதியானவரானதால் தன் மகனை மேலே படிக்க அனுப்பினார். 
       படிப்பை அந்த ஊர்ப் பள்ளியோடு நிறுத்தியவர்களில் காசியும் ஒருவன்.காசி மேலே படிக்க வராததால் நடராஜன் மிகுந்த வருத்தமடைந்தான். தன் உயிர்நண்பன் தன்னுடனேயே படிக்கவேண்டும் என்று விரும்பினான்.ஆனால் குடும்பத்தில் காசிதான் அவன் அப்பாவுக்குத்  துணையாக இருக்க வேண்டியிருந்தது.அதனால் நடராஜன் மட்டுமே மேல்படிப்புக்குப் பட்டணம் போய்வந்தான். ஆனால் ஒவ்வொருநாள் இரவு எந்நேரமானாலும் தன் நண்பனைப் பார்க்க காசியோ அல்லது காசியைத் தேடி நடராஜனோ சென்றுவிடுவர்.
      இருவருமே சிறந்த குணங்கள் உடையவராக இருந்ததால் இவர்களின் சந்திப்பை யாரும் எதிர்க்கவில்லை. அத்துடன் நண்பர்கள் இருவரும் வெட்டிப்பேச்சு பேசாமல் உபயோகமானவற்றையே பேசிவந்தனர். நேரத்தை நல்லவிதமாக பயன்படும் விதத்தில் கழித்தனர்.நடராஜனுடன் பேசுவதாலேயே பல நல்ல விஷயங்களையும் பட்டணத்து நாகரீக வாழ்வையும் பற்றி அறிந்து கொண்டான் காசிராஜன்.அத்துடன் அன்று அவன் கற்ற பல பாடங்களை பற்றியும் அறிந்துகொண்டான்.
 அதனால் அவன் அறிவும் நடராஜனின் அறிவுக்கு இணையாக வளர்ந்தது.
                 இப்போது நடராஜன் பத்தாம் வகுப்புக்கு வந்து விட்டான்.அவனுக்கு இணையாகவே காசியும் அறிவு வளர்ச்சியும் உடல்வளர்ச்சியும் பெற்றிருந்தான்.அவர்களின் நட்பும் நாளுக்குநாள் வளர்ந்தது.அவன் படிப்பதையும் அவன் கூறும் செய்திகளையும் காசி கவனமாகக் கேட்டு வந்தான்.
            ஒரு பண்டிகைநாள்.அவ்வூருக்கு கோவிலில் உபன்யாசம் செய்ய ஒரு பெரியவர் வந்திருந்தார்.அவரது கதையைக் கேட்க ஊர்மக்கள் கூடினர்.அறிவு தாகம்  மிகுந்த காசியும் அங்கு செல்ல விரும்பினான்.நடராஜனை உடன் அழைத்துக் கொண்டு முன் பகுதியில் அமர்ந்து கொண்டான்.கதையைச் சொல்லிக் கொண்டே வந்த அந்தப் பெரியவர் இடையிடையே சில கேள்விகளையும் கேட்டுக் கொண்டே வந்தார்.
அவர் கேட்கும் கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில் சொன்னான் காசி. கதையின் இடையிடையே காசியின் அறிவைப் புகழ்ந்து பேசினார் அந்தப் பெரியவர்.
            முடிவில் நன்றி கூறும் போதும் காசியை அருகே அழைத்து அவன் படிக்கும் பள்ளியையும் வகுப்பையும் கேட்டார். ஆனால் அவனோ "ஐயா நான் வயலில் விவசாயம் பார்க்கிறேன். ஆனால் என் உயிர்நண்பன் நடராஜன் பத்தாம்  வகுப்புப் படிக்கிறான் அவன் கூறும் செய்திகளை நான் நினைவில் வைத்துத்தான் உங்கள் கேள்விகளுக்கு  விடை சொன்னேன்.'' என்றபோது அவனைத் தட்டிக் கொடுத்த அந்தப் பெரியவர் மக்களை பார்த்துக் கூறினார்.
"அன்புடையோரே, இந்தச் சிறுவன் தான் படிக்காமலேயே கேள்விஞானத்தால் தன் அறிவை 
வளர்த்துக் கொண்டு சிறந்த கல்விமானுக்குரிய அறிவாளியாகத் திகழ்கிறான்.காரணம் என்ன என யோசித்தீர்களா? இவனது கேள்வி அறிவே. கற்றலிற் கேட்டல் நன்று என்பதை மெய்யாக்கியுள்ளான்.இப்படிப்பட்ட பிள்ளைகளை பெற்றுள்ள இந்தக் கிராமம் மிகச் சிறந்து விளங்கும்.
        "செல்வத்துட்  செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் 
          செல்வத்துள் எல்லாம்  தலை"
இது நமது திருவள்ளுவர் வாக்கு.இதன் பொருள் என்ன தெரியுமா?எல்லாச் செல்வங்களுக்கும் தலையான செல்வம் கேள்விச் செல்வமே அதாவது கேட்டு அறியும் அறிவே  செல்வம். என்பதுதான்.இதன்படி நடந்து காசிராஜன் மிகுந்த அறிவுடன் திகழ்கிறான். 
இவனைப்போல் மற்ற சிறுவர்களும் வள்ளுவர் வாய்  மொழியின்படி நடந்து கொள்ள வேண்டும்."
என்றபோது அவ்வூர் தலைவர் எழுந்தார். "ஐயா நீங்கள் சொன்னபிறகுதான் இந்த சிறுவன் எத்தனை சிறந்தவன் என்பது புரிகிறது.இனி இவனைப் படிக்கவைத்து கல்விமானாக்கி பெருமையடைய விரும்புகிறேன்.இந்த ஊரும் பெருமைப் படும்"
என்றபோது காசிராஜனை விட அதிகமாக மகிழ்ந்தவன் நடராஜனே.
கற்பதைவிட கேள்வி ஞானம் எத்தனை சிறந்தது என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.இனி நல்லவற்றைக் கேட்போம் என நினைப்போம்.





















  
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

புதன், 22 ஜூன், 2016

குறள் நெறிக்க கதைகள்.- நல்லதே பேசு.

தொடர்ச்சி ;
அவன் அழுவதைக் கண்டு இன்ஸ்பெக்டர் மனம் இளக வில்லை. 
"அந்தப் பையனுக்கு ஏதேனும் ஆச்சுன்னா இவனை சிறையில்தான் தள்ளவேண்டியிருக்கும். தெரியுமா?இவன்தான் பெரிய கல்லை வைத்துக் கொண்டு இந்தக் கல்லாலேயே நீ அடிபட்டுச் சாகப் போறேன்னு சொல்லியிருக்கான்."
"சொன்னேம்பா ஆனா அடிக்கல்லேப்பா. வீட்டுக்கு அண்ணன் பின்னாலேயே வந்திட்டேம்பா."
அவன் எவ்வளவு சொல்லியும் கேட்காத இன்ஸ்பெக்டர் அவனை அங்கேயே உட்கார்த்திவிட்டார்.அவன் அருகே நின்ற கேசு "சொன்னேனே கேட்டியா. வாயிலே தகாத வார்த்தையைச் சொல்லாதேன்னு எத்தனை தடவை சொன்னேன்."என்றவன் தம்பிக்காகப் பரிதாபப் பட்டான்.
பயத்தில் அழுது அழுது மாதுவின் முகமே வீங்கிவிட்டது."இவனைப் பற்றி நன்றாக விசாரித்துவிட்டோம்.மிகவும் கோபக்காரன் சண்டைக்காரன் மட்டுமில்லாமல் கண்டபடி பேசுவானாமே.கோபத்தில் கல்லை அந்தப் பையன்மேல் எரிஞ்சிருக்கலாமில்லையா/"
எதுவும் பேச வாயின்றி நல்லசாமி மகனுக்குத் துணையாக அங்கேயே அமர்ந்து விட்டார்.
அப்போது அங்கே ஒரு பெரியவர் வந்தார். இன்ஸ்பெக்டரைப் பார்த்து "ஐயா கும்பிடுறேனுங்க"என்றவரை யார் நீ என்பதுபோல் பார்த்தார் இன்ஸ்பெக்டர்.
"ஐயா நான் மாந்தோப்புக்கு காவல்காரனுங்க.ஒரு பையன் நம்ம தோட்டத்துல மரத்துமேல இருந்து கீழ விழுந்திட்டானுங்க அதைச் சொல்லத்தானுங்க வந்தேன்" 
"நம்ம பையன் அதைப் பார்த்திட்டு என்கிட்ட சொன்னானுங்க நான் வரதுக்குள்ள அவனை  ஆசுபத்திரிக்கி தூக்கிட்டுப் போயிட்டாங்கன்னு தெரிஞ்சுதுங்க."
"அப்போ இந்தப் பையன் கல்லால் அவனை எறியல்லியா?"
"இல்லீங்கய்யா அந்தப் பையன் எம்மவன் வாரதைப் பார்த்து பயத்துல கீழ விழுந்திட்டாங்கய்யா.கீழ இருந்த கல்லுல அவன் தலை பட்டு மயங்கிட்டாங்கய்யா."
"ஏண்டா, கல்லாலேயே அடிபட்டு சாகப் போறேன்னு சொன்னியாமே.ஏன் சொன்னே?"
அழுதுகொண்டே இருந்த மாதுவை அணைத்துக் கொண்ட கேசு "அவன் அப்படித்தான் வாயில வந்ததைப் பேசுவான் சார் நாவை அடக்கி நல்லதே பேசுன்னு எத்தனையோ தடவை சொல்லியும் இவன் திருந்தல. அதான் இத்தனை கஷ்டத்துக்கு காரணம். செய்யாத தப்புக்கு வாயால தகாத வார்த்தை சொன்னதால இப்படி மாட்டிக்கிட்டான்."என்றான் அவசரமாக.
"நல்ல வேளை . அந்தப் பையன் பார்த்ததால் நீ குற்றவாளியில்லைன்னு  தெரிஞ்சு போச்சு.
இனிமேலாவது நாவை அடக்கி நல்லதைப் பேசக்  கத்துக்க.இல்லாட்டி இப்படித்தான் ஏடாகூடமா மாட்டிக் கொள்வாய்.நீங்க பையனைக் கூட்டிப் போங்க சார்."என்றபோது பெரிய பெருமூச்சு விட்ட மாது  தன் அண்ணனைக் கட்டிக்க கொண்டான் தம்பி.
" இனிமே உன்னைப் போலவே நானும் நல்ல படியா நடந்து நல்ல பேர் எடுப்பேன் அண்ணே "
அவன் தோள்மீது கை போட்ட கேசவன், "நம்ப தமிழ்ப்பாடத்தில்   வந்திருக்கற முதல் குறளே  
 நாவைக் கட்டுப்படுத்தாட்டா சொல்குற்றத்தில அகப்பட்டுத் துன்பப்படுவாய்   அப்படீங்கறதுதானே. எதைக் காக்காவிட்டாலும் நாவைக் காக்கணும்னு சொல்லியிருக்கே."
      "  யாகாவா  ராயினும்  நாகாக்க  காவாக்கால் 
         சோகாப்பர்  சொல்லிழுக்குப்  பட்டு "  என்று குறளைச் சொல்லி முடித்தபோது நல்லசாமி அவனை அணைத்துக் கொண்டார். அதைப் பெருமையோடு பார்த்துச் சிரித்தான் கேசவன்.
                                            (நிறைவடைந்தது.)
















--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

குறள் நெறிக்க கதைகள்.--நல்லதே பேசு

            நல்லசாமிக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்.கேசவன் மாதவன் என்ற தன் இரண்டு பையன்களிடமும் மிகுந்த பிரியமுடன் இருந்தார்.அவரிடம் இரண்டு பிள்ளைகளும்  மிகுந்த பாசத்துடன் இருந்தனர்.இரண்டு பேரும் ஒரே வகுப்பில் படித்து வந்தனர்.அண்ணன் தம்பியாக இருந்தாலும் அவர்களின் குணங்களில் மிகுந்த வேறுபாடு இருந்தது.அண்ணன் கேசவன் வகுப்பில் மிகவும் கெட்டிக்காரனாக இருந்தான்.அத்துடன் அனைவரிடமும் அன்பாகப் பழகுபவனாகவும் இருந்தான்.
          ஆனால் மாதவன் மிகுந்த துடுக்குக்காரனாகவும் கோபக்காரனாகவும் இருந்தான்.இதற்காகத் தன் தம்பியை  அடிக்கடி கண்டித்து வந்தான் கேசவன்.அவன் கோபத்தையும் துடுக்கையும் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் அவன்  வாயில் வரும் சொற்களைப் பொறுக்கமுடியவில்லை கேசவனால். தான் அப்பாவிடமும் சொல்லிப் பார்த்தான்.அவரும் கண்டித்தார்.  "கேசவனைப் பார் எவ்வளவு  நல்ல பெயர் எடுத்திருக்கிறான்   அவன்  தம்பிதானே  நீ? உனக்கேன் அந்த நல்ல புத்தியில்லை "அவரது பேச்சையும் காதில் போட்டுக் கொள்ளவில்லை மாது.எப்போதும் நீ சாவுடா, நாசமாய் போ என்பது போன்ற 
அச்சானியமான சொற்களை அடிக்கடி உபயோகிப்பான்.      
          ஒருநாள் ஒரு சிறுவனிடம் சுடுசொற்களை சொல்வதை ஆசிரியர் கேட்டுவிட்டு அவனை அழைத்தார்."டேய் மாதவா, உன் வயசுக்குத் தகுந்த மாதிரியா பேசறே?ஏண்டா அப்படி ஒரு சாபம் விடுகிறாய்?சின்ன தப்புக்கு  இப்படி பேசுவாயா?நீ தவறே செய்யாதவனா?இனிமேல் உன் வாயிலிருந்து இந்தமாதிரி வார்த்தை வந்ததென்றால் கடுமையான தண்டனை கொடுப்பேன்."என்று மிரட்டியபோதுசில நாட்கள் அமைதியாக இருந்தான்மாது.
        அன்று ஒரு சனிக்கிழமை.பிற்பகலில் பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர் கேசுவும் மாதுவும்.வழியில் ஒரு மாந்தோப்பில் அவன் வகுப்பு மாணவன் ஒருவன் மரத்தின் 
மேலேறி மாங்காய் பறிக்க முயற்சித்துக் கொண்டிருந்தான்.அவனைப் பார்த்த மாது "டேய் எனக்கு ரெண்டு மாங்காய் பறிச்சுக் கொடுடா." என்றான் கீழே  நின்றவாறே.
ஏற்கெனவே அவன் மீது வெறுப்பில் இருந்தவன் " போடா உனக்கேன் தரணும்?"என்றவாறே மாங்காய்கள் அதிகமாக உள்ள கிளையை நோக்கி ஏறினான்.உடனிருந்த கேசவன் "வா மாது  போயிடலாம்.காவல்காரர் வந்தால் கோவிப்பார்."என்றான் கனிவோடு.
              ஆனால் கோபம் கொண்ட மாதவன் அவனை வழக்கம்போல திட்டத் தொடங்கினான்.
அதிலும் கீழே கிடந்த கல்லை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டு "இந்தக் கல்லாலேயே நீ அடிபட்டு சாகப் போறே பாரு."என்றபோது பயந்துபோன கேசவன் வீட்டை நோக்கி ஓடிவிட்டான்.தம்பியின் முரட்டுத் தனமான பேச்சு அவனை மிகவும் பயமுறுத்திவிட்டது.
             சற்று நேரம் கழித்து வீடு வந்து சேர்ந்தான் மாது. அவன் கோபத்தில் அந்தப் பையனை அடித்திருப்பானோ என்று சந்தேகத்துடன் தம்பியைப் பார்த்தான் கேசு.எதையும்  கவனிக்காத மாது சாப்பிட உட்கார்ந்தான். அவன் குணம் அறிந்த அம்மாவும் எதுவும் பேசாமல் சாப்பாடு போட வேக வேக மாக சாப்பிட்டான் மாது.
            அரைமணி நேரம் ஆகியிருக்காது. வாசலில் இரண்டு போலீஸ்காரர்கள் வந்து நின்றனர்.
 அவர்களைப் பார்த்து அம்மா பயந்து விடவே கேசு பேசினான்."ஐயா எங்க வீட்டுக்கு என்ன விஷயமா வந்திருக்கீங்க?'
"தம்பி இங்கே மாதவன்ற பையன் யாரு?"
"என் தம்பிதான் ஐயா.இதோ சாப்பிடுறதுதான் மாதவன் என் தம்பி."
"டேய், ஸ்டேஷனுக்கு வா. உன்னை விசாரிக்கணும்னு இன்ஸ்பெக்டர் கூட்டிவரச் சொன்னார்."
அதே சமயம் மாதவனின் அப்பா நல்லசாமியும் உள்ளே நுழைந்தார்.
செயதி அறிந்தவர் தானும் மாதவனுடன் காவல் நிலையம் நோக்கிச் சென்றார்.
அங்கு சென்றபின்புதான் மாது  ஒரு சிறுவனைக் கல்லால் அடித்துவிட்ட செய்தியும் அந்தச் சிறுவன் ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் இருப்பதாகவும் தெரிந்தது.
இந்தக் குற்றச்  சாட்டைக் கேட்ட மாது நடுங்கியபடியே "நான் அடிக்கல்லேப்பா.எப்படி அவனுக்கு அடிபட்டுதுன்னு எனக்குத் தெரியாதுப்பா"என்றான் அழுதபடியே.
             





















--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

செவ்வாய், 14 ஜூன், 2016

குறள்நெறிக் கதைகள். மனமே மருந்து.

                    மனமே மருந்து 

"இலக்கம் உடம்பிடும்பைக்  கென்று கலக்கத்தைக் 
 கையாறாக் கொள்ளாதாம் மேல்."

         பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் நல்ல பையனாக வீட்டுப் பாடங்களை எழுதி முடித்துவிட்டு அப்பாவின் வருகைக்காகக்  காத்திருந்தான் சுந்தரம். சுமார் அரைமணி நேரம் கழித்து சுந்தரத்தின் அப்பா கதிரேசன் உள்ளே நுழைந்தார். அவர் உள்ளே வரும்போதே உஸ்... அப்பாடா என்று சொல்லிக் கொண்டே வந்தவர் மின்விசிறியைப் போட்டுவிட்டு அதன் அடியில் நாற்காலியைப் போட்டுக் கொண்டு  உட்கார்ந்தார்.
           அப்போதுதான் வந்திருக்கும் அப்பாவைத் தொந்தரவு செய்யக்கூடாது என்று அம்மாவின் எச்சரிக்கையை நினைத்தவனாய் அவர் சற்று சிரம பரிஹாரம் செய்து கொள்ளும் வரை 
காத்திருந்தான்.அரைமணி நேரம் கழிந்ததும் மெதுவாக அவர் அருகில் வந்தான்.
"அப்பா"
"என்னடா?"
எரிச்சலுடன் கேட்கவே மேலே பேச முடியாமல் தயங்கிநின்றான் சுந்தரம்.சற்று நேரம் அவன் அமைதியாக நின்றான்

அதைப் பார்த்த கதிர்வேலுவுக்கு தன மகன் மேல் சற்றே அன்பு தோன்றவே புன்னகையுடன் சுந்தரத்தை அருகே அழைத்தார் . அவன் இடுப்பைப் பற்றி அணைத்தவாறே "என்ன விஷயம் சொல்லு."என்றார்.  

சுந்தரம் மிகவும் குஷியாகிவிட்டான்."அப்பா எங்க பள்ளிக்கூடத்தில் ஒரு கட்டுரைப் போட்டி நடக்குது. எந்த  இ.டத்திக்கேனும் நேரிலே போய் அதைப் பற்றி விமரிசித்து ஒரு கட்டுரை எழுதணும். நான் போட்டியிலே சேர்ந்திருக்கேன் அதனாலே ஏதாவது ஒரு எடத்துக்கு என்னை ஒரு ரெண்டு நாள் அழைச்சுக்கிட்டுப் போங்கப்பா"

அவனைப் புன்னகையுடன் பார்த்த கதிர்" சரி யோசிச்சு வை.பார்ப்போம்"என்றபடியே உடைமாற்ற உள்ளே சென்றார். சுந்தரமும் மகிழ்ச்சியுடன் தன நண்பனிடம் ஆலோசனை கேட்க வெளியே ஓடினான்.

          மறுநாள் வரை எதையும் பேசாத சுந்தரம் மீண்டும் மாலையில் அப்பாவின் முன் வந்து நின்றான்.அவனை நிமிர்ந்து பார்த்த கதிர்
"என்ன சுந்தரம், எங்க போகணும்னு முடிவு பண்ணிட்டியா?" என்றார் அன்போடு.
"அப்பா, என் நண்பன் அவங்க சொந்த ஊர் கோவிலுக்குப் போகிறார்களாம்.நான் ஊட்டியைப்பார்த்ததில்லையப்பா.அங்கே போகலாம்னு நினைக்கிறேன்.கூட்டிட்டுப் போகிறீர்களாப்பா?"என்றான் ஆவலோடு.

   "நீ கட்டுரை எழுத எனக்கு செலவு வைக்கிறியா?எனக்கு லீவெல்லாம் கிடைக்காதுடா, ஏதேனும் கிட்ட இருக்கிற இடமா சொல்லு."
கொஞ்சம் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டவன் மெதுவாக" எங்கேயானும் கூட்டிட்டுப் போங்கப்பா."என்றான்.
"சரி சரி செலவில்லாத இடமா கூட்டிட்டுப் போறேன்.இப்போ என்னை விடு. போய்  வீட்டுப் பாடம் செய்."
சற்றே கோபமாக முணுமுணுத்தவாறே உள்ளே சென்றான் சுந்தரம்.

         அன்று சனிக்கிழமை.மாலை நான்கு மணிக்கு அப்பாவை அழைத்தான் சுந்தரம்.'"அப்பா, எங்கேயாவது போகணுமேப்பா? கட்டுரை எழுதணுமே?" நாற்காலியில் அமர்ந்து புத்தகம் படித்துக்கொண்டிருந்தவர் நினைவு வந்தவராய் எழுந்தார்.சட்டையை மாட்டிக் கொண்டு "வாடா போகலாம்"என்றவாறு புறப்பட்டவுடன் மகிழ்ச்சியானான்.அப்பாவுடன் குஷியுடன் கிளம்பினான்

இரண்டு பேரும் ஆட்டோ பிடித்து மெரீனா கடற்கரையை அடைந்தனர்.கடலைப் பார்த்ததும் சுந்தரம் குஷியாகிவிட்டான். மகிழ்ச்சியுடன் அங்கு ஓடி கடல் ஓரமாக நின்று அலையுடன் விளையாட ஆரம்பித்தான்.அவனை விளையாடவிட்டு விட்டு மணலில் அமர்ந்து கொண்டார்.
                 அதே சமயம் "ஐயா, சுண்டல் வேணுங்களா? வீட்டிலே பக்குவமா செஞ்சதுங்க" என்றபடி பரிதாபமாகப் பார்த்தபடி நின்றிருந்தார் ஒரு பெரியவர்.

அவரைப் பார்த்த கதிருக்கு மிகவும் பரிதாபமாக இருந்தது".சரி இரண்டு பொட்டலம் கொடு'' என்றபடியே காசை எடுத்தார்.அந்தக் காசைப் பெற்றுக் கொண்டவர் உற்சாகமாகப் புறப்பட்டார்.அவரிடம் சற்றுநேரம் பேசிக் கொண்டு இருந்தால் பொழுது போகும் என்று  கதிரேசன்   நினைத்தார்.அதனால் அவரிடம் "ஐயா, சற்றுநேரம் இங்கு அமர்ந்து பேசிக் கொண்டிருக்கலாமே. உட்கார்ந்தபடியே வியாபாரம் செய்யலாமே."என்றார்.
அவரும் மகிழ்ச்சியுடன் அமர்ந்தார்.தன சுண்டல் கூடையை நான்கு பேருக்குத் தெரியுமாறு முன்னால் வைத்துக் கொண்டு சௌகரியமாகக் கால்களை சப்பளமிட்டு அமர்ந்தார்.
ஒருமுறை தன் மகன் சுந்தரம் எங்கே விளையாடுகிறான் என்று பார்த்துக் கொண்ட கதிர் 
சுண்டல்காரரைப் புன்னகையுடன் பார்த்தார். 
"ஐயா, இந்த சுண்டல் வித்தா உங்களுக்கு எவ்வளவு ரூபாய் லாபம் கிடைக்கும்?"
"என்னங்க கிடைக்கும்? செலவு போக ஒரு ஏழெட்டு ரூபா தேறும். அன்னாடம் சாப்பாட்டுக்கு அதுதாங்க கைகொடுக்குது."
"ரெண்டு பேருக்கு இதுபோதும்னுதான் நீங்க சந்தோஷமாக இருக்கிறீங்க அப்படித்தானே?"
"என்னது? ரெண்டு பேரா?நல்லாச் சொன்னீங்க.எனக்கு மூணு குழந்தைங்க ஒருத்தனுக்கு கால் விளங்காது.ரெண்டு பேர் ஸ்கூல்ல படிக்கிறாங்க.எங்கம்மா இருக்காங்க. அவங்களுக்கும் கண்ணு தெரியாது.என்பெண்ஜாதிக்கு ரத்தக் கொதிப்புன்னு சொல்லி என்னென்ன மாத்திரையோ  குடுத்திருக்காங்க. அதுவே அவளுக்கு சாப்பாடா இருக்கு." 
"அத்தோட போச்சா? என் தம்பி ஒருத்தன் குடிகாரப்பய. எப்பவும் குடிச்சுட்டு ஊரைச் சுத்திட்டு நேரத்துக்கு தவறாம சாப்பாட்டுக்கு வந்திடுவான். சாப்பாடு இல்லையின்னா ஒரே ரகளைதான்.அவ்வளவு பேருக்கும் நான் சம்பாரிச்சு சோறு போட்டாகணுமே.நான் செய்யற வாட்ச்மேன் உத்தியோகம் பத்தாது . அதனால சாயங்காலமா பீச்சுல சுண்டல் வித்து என் தேவையை சமாளிக்கிறேன்."
இயந்திரமாக சொல்லி முடித்தார் அந்தப் பெரியவர். 
அப்படியே  திகைத்துப் போய் அமர்ந்துவிட்டார் கதிரேசன்.
"ஐயா, என்ன சோல்றீங்க ? இத்தனை கஷ்டத்திலையும் நீங்க சந்தோஷமா இருக்குறீங்களே?அதாலதான் கேட்டேன்.நீங்க ரெண்டே பேர்தானான்னு."
அப்போது இரண்டு பேர் பெரியவரிடம் வந்து சுண்டல்  வாங்கிக் கொண்டு சென்றனர்.தன் வியாபாரத்தைக் கவனித்து விட்டு அவருக்குப் பதில் சொல்லத் தயாரானார் சுண்டல்காரர். அப்போது "அப்பா, ரொம்ப குஷியா இருந்துச்சுப்பா தண்ணீல நின்னது என்றபடி ஓடிவந்த சுந்தரம் அவர் அருகே வந்து அமர்ந்தான். தன கால்களில் உள்ள மண்ணைத் தட்டியவாறே அப்பாவின் கையிலிருந்த சுண்டல் பொட்டலத்தை வாங்கிக் கொண்டு சுவைக்க ஆரம்பித்தான்.
"ஆமாங்கைய்யா. வாழ்கைன்னு இருந்தா கஷ்டமில்லாம இருக்குமா. அதானுங்க வாழ்க்கை.அது என்னங்க  அதுபாட்டுக்கு வந்துட்டுப் போகட்டுங்க.நம்ம மனசையும் உடம்பையும் நல்லா வச்சுக்கிட்டு சந்தோஷமா வாழ்ந்துட்டா அதுதானுங்க மனுஷனுக்கு அழகு.சரிங்கய்யா. நானு வரேனுங்க. என் பெண்டாட்டிக்கு மருந்து குடுக்கணும் அதுக்கு ஒண்ணுமே தெரியாதுங்க.நல்லா சமைக்கத்தான் தெரியும்."என்றபடியே ஒரு நிறைந்த புன்னகையை வீசிவிட்டு நடந்தார் அந்தப் பெரியவர்.
அவர் சென்ற திசையை நோக்கி வணங்கினார் கதிரேசன்.
"என்னப்பா?"
"ஒண்ணுமில்லே சுந்தரம்.நீ சாயங்காலம் படிச்சியே ஒரு குறள்  ஞாபகம் இருக்கா?"
"ஓ ..இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக் 
         கையாறாக் கொள்ளாதாம் மேல்." இதுதானப்பா நான் சாயந்திரம் படிச்சது."
"சுந்தரம் அதுக்குப் பொருள்தான் அந்தப் பெரியவர்."
"என்னப்பா சொல்றீங்க? ஒண்ணும் புரியலையேப்பா."
"சரி ,அந்தக் குறளுக்கு ம். என்ன பொருள்?சொல்லு ."
"ம் ..ம்  வந்து..என்று சிந்தித்தவன்'உடனே சொல்லத் தொடங்கினான்.
 "துன்பம் என்பது உடலுக்கு இயல்பானதே என்று உணர்ந்து கொண்ட பெரியோர் அந்தத் துன்பத்தைப் பெரிதாகப் பாராட்டமாட்டார்கள்."
"சரியாச் சொன்னே. அப்படிப்பட்ட பெரியவர்தான் அந்தசுண்டல் விற்றுக் கொண்டிருப்பவர்."
எப்படிப்பா என்று புரியாமல் விழித்த மகனை அருகே அமர்த்திக் கொண்டார் தந்தை.
"அந்தப் பெரியவருக்கு இரவுக் காவலாளி வேலை. சொற்ப சம்பளம்.வீட்டில் நோயாளி மனைவி, கண்ணில்லாத அம்மா, கால் முடமான ஒரு மகன் பள்ளி செல்லும் இரண்டு பிள்ளைகள் ஊதாரியான உருப்படாத தம்பி.இத்தனை பேரையும்  இவர்தான்  காப்பாத்தணும். அதனால மாலை நேரத்தில் சுண்டல் வியாபாரம்  செய்கிறார். ஆனாலும் ரொம்ப மகிழ்ச்சியாக சிரித்துக் கொண்டே மன நிறைவாக வாழ்கிறார்.நீ இப்போ சொன்னியே திருக்குறள் அந்தக் குறளுக்கு ஒப்பானவராகவே இருக்கிறார்.எந்தத் துன்பத்தையும் பாராட்டாமல் பேசினார்."
"அப்படியாப்பா"
"ஏன் சுந்தரம் இதையே நீ உன் கட்டுரைத் தலைப்பா வச்சு எழுதேன்.மனமே மருந்து அப்படீன்னு தலைப்புக் கொடுத்து எழுது.அதோடு இதை உன் வாழ்க்கைப் பாடமாகவும் எடுத்துக் கொண்டு வாழவும் பழகணும்."
கட்டுரைக்கு நல்ல தலைப்பும் செய்தியும் கிடைத்த மகிழ்ச்சியுடன் சுந்தரம் தூங்கப் போனான்.
நாமேல்லாருமே அந்தப் பெரியவரைப் போல துன்பத்தைக்  கண்டு துவண்டு விடாமல் வாழப் பழகவேண்டும்.வள்ளுவர் வாய்மொழியும் அதுதானே?

























 



















































ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

புதன், 27 ஏப்ரல், 2016

குறள் வழிக் கதைகள் ; தெய்வமே துணை

                 (தொடர்ச்சி)
சில நாட்கள் கழிந்தன. ஆற்றங்கரையில் குளித்துவிட்டு துணியைப் பிழிந்து உலர்த்திக் கொண்டிருந்தார் மணிவண்ணர்  அப்போது அங்கே வந்த கோவிந்தனுக்கு அவரைப் பார்த்ததும் அவரிடம் ஏதேனும் வம்பிழுக்க வேண்டும் என்று தோன்றியது.மெதுவே அவர் அருகே வந்து ஒரு கல்லின் மீது அமர்ந்து கொண்டான்.அவனைப் பார்த்துப் புன்னகை புரிந்தவாறே தன வேலையில் கவனமாக இருந்தார் மணிவண்ணர்.
"அய்யா, எப்போதும் கடவுளை நினைத்துக் கொண்டே இருக்கிறீர்களே உங்களுக்கு ஏதேனும் துன்பம் வந்தால் அவர் வந்து காப்பாற்றுவாரா?
ஒரு மனிதன் என்னைப்போல் ஒருவன்தானே காப்பாற்ற வருவான்? அப்படியிருக்க நீங்கள் எப்போதும் இறைவன் என்றே சொல்கிறீர்களே?"

அவனை அன்போடு பார்த்த மணிவண்ணர் "கோவிந்தா, தெய்வம் மனுஷ்ய ரூபேண என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.அதனால் எந்த ரூபத்திலும் இறைவன் உதவிக்கு வருவான்.அவனை நம்பு.அவன் ஒருபோதும் கைவிடமாட்டான்."என்றார் கனிவோடு.

அப்போது திடீரென அவரது பிழிந்து வைத்த வேஷ்டியை நீருக்குள் தள்ளிவிட்டான் கோவிந்தன்.ஆற்றுவெள்ளத்தில் அது அடித்துச் செல்வதைப் பார்த்தபோது முருகா என்றவாறே அமைதியாக கரையேறினார்.
அப்போது ,"அய்யா தங்கள் வேட்டியை வெள்ளம் அடித்துக் கொண்டு போய்விட்டதே. நான் போய் மூழ்கி எடுத்துவரவா?"என்றான் பொய்யான கனிவோடு.
"வேண்டாம் அப்பா.எனக்கென்று விதித்திருந்தால் என் கைக்கு வரும் இல்லையேல் யாரோ ஒருவருக்குப் பயன்படும்."என்றவாறே இடையில் உடுத்திய துண்டுடன் நடக்கத் தொடங்கினார் மணிவண்ணர்

 அவரை அரை ஆடையுடன் தெருவில் நடக்க விட்ட மகிழ்ச்சியுடன் அவருடன் நடந்தான் கோவிந்தன்.இன்னும் நண்பர்களோ மற்ற ஊரார் யாரும் வரக் காணோமே இவரது இந்த நிலையைக் காண என்று எண்ணிக் கொண்டே வந்தான்
"ஐயா "
பின்னால் கேட்ட குரலால் திரும்பிப் பார்த்தனர் இருவரும்.
கையில் பாதி உலர்ந்த வேட்டியுடன் கந்தன் நின்றிருந்தான்.கோவிந்தன் வீட்டில் மாடு மேய்க்கும் சிறுவன் `அவன்.மணிவண்ண ரிடம் மிகுந்த மரியாதை வைத்திருப்பவன்.

"உங்க வேட்டி தண்ணீல மெதந்து வந்துதுங்க.அதை எடுத்து பிழிஞ்சி உலர்த்திகிட்டே வந்தேனுங்க. இந்தாங்கய்யா."என்றவாறே நீட்டினான்.அதை எடுத்து உடுத்துக் கொண்ட மணிவண்ணர் மகிழ்ச்சியுடன்
"கந்தா, என் மானம் காக்க அந்தக் கந்தனே வந்ததுபோல் வந்தாயப்பா.அப்புறமா வீட்டுக்கு வந்து புது வேட்டி ஒன்று பெற்றுக் கொள்.உனக்கு ரொம்ப நன்றி கந்தா."இவரை அரை ஆடையில் நடக்க வைத்து அவமானப் படுத்த எண்ணினால் முடியாமல் இந்த கந்தன் வந்து கெடுத்து விட்டானே அத்தோடு
ஒரு ஏழைச் சிறுவனிடமும் இவர் இந்த பிரியமும் நன்றியும் பாராட்டுகிறாரே.என்ன வேஷம்?

என்று எண்ணிக் கொண்டே அங்கிருந்து வேகமாக அகன்றான் கோவிந்தன்.
தோல்வியடைந்து விட்ட அவமானத்தில் அவன் முகம் சிவக்க நடந்தான்.

சிறிது நாட்கள் கழிந்தன.அறுவடை முடிந்து எல்லோரும் சற்று ஓய்வாக ஊர்க்கதை பேசுவதும் கோயில் திருவிழா எடுப்பது பற்றியும் பேசிக்கொண்டிருந்தனர். ஆனால் கோவிந்தனோ இந்த ஊர் மக்களுக்கு இந்த மணிவண்ணன் ஒரு வேஷதாரி என்று காட்ட என்ன வழி என்றே தன நண்பர்களுடன் ஆலோசித்துக் கொண்டிருந்தான்.அவரது தெய்வபக்தியை அறிந்திருந்த அந்த ஊர்மக்கள் அவருக்கு தனி மதிப்புக் கொடுத்துப் பேசுவதும் அவர் வார்த்தைக்கு எதிர்பேசாமல் ஏற்றுக் கொள்வதும் பொறாமை உள்ளம் கொண்ட கோவிந்தனுக்குப் பொறுக்கவில்லை.எப்படியாவது இவரும் மிகச் சாதாரணமானவரே. பெரிய பக்திமான் ஒன்றும் அல்ல என காட்டிவிடத் துடித்துக் கொண்டிருந்தான்.
அவ்வூரில்  திருவிழாவுக்காக ஊர்த்தலைவர் பணம் வசூல் செய்திருந்தார். அதைப் பொதுவான மனிதரான மணிவண்ணனிடம் கொடுத்து வைப்பது என்று எல்லோருமாகச் சேர்ந்து முடிவு செய்தனர்.அதன்படி ஒரு பெரிய பெட்டியில் அந்தப் பணத்தைப் போட்டு மணிவண்ணனிடம் கொடுத்தனர். ஒவ்வொரு ஆண்டும் இப்படியே நடப்பதால் மணிவண்ணனும் மறுப்புக் கூறாமல் பெற்றுக் கொண்டார்.கோவிந்தனின் உள்ளத்திலும் ஒரு திட்டம் உருவாயிற்று.
ஒரு வாரம் சென்றது.மீண்டும் ஊர்ப்பெரியவர்கள் ஒன்று கூடி யார் யாருக்கு என்ன பொறுப்பு என்ன செலவு செய்யவேண்டும் என்பதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர்.கோவிந்தன் மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.அவன் நினைத்தது போலவே மணிவண்ணனிடம் பணப்பெட்டியைக் கொண்டுவருமாறு கூறினார் தலைவர்.வீடு சென்று திரும்பியவரைப் பார்த்துத் திடுக்கிட்டான் கோவிந்தன்.ஆம். அவர் கையில் பணப்பெட்டி இருந்தது.
கோவிந்தன் தான் இரு தினங்களுக்கு முன் திருடிக் கொண்டு வந்து மறைத்து வைத்த பணம் எப்படி மீண்டும் இவரிடம் வந்திருக்கும் எனத் திகைத்து நின்றிருந்தான்.இவர் ஒரு திருடன் என்று ஊருக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட எண்ணியிருந்த கோவிந்தன் இப்போது வாயடைத்து நின்றிருந்தான்.
அவனால் மர்மத்தைத் தாங்க முடியவில்லை. மெதுவாக தன வீட்டுக்குச் சென்றான் தான் மறைத்து வைத்திருந்த இடத்தில் மணிவண்ணரிடம் ஊரார் கொடுத்த பணம் அப்படியே இருந்தது.
பின் எப்படி?மீண்டும் கூட்டத்தோடு வந்து நின்று கொண்டான் கோவிந்தன்.பணப்பட்டுவாடா முடிந்ததும் அவரவர் தம் பணியைச் செய்யப் புறப்பட்டனர்.கூட்டம் கலைந்தது.
அன்று இரவு .கோவிந்தன் தூங்காமல் புரண்டு கொண்டிருந்தான்.திடீரென்று அவன் வீட்டு வைக்கோல் போர் தீப்பற்றி எரிந்தது. ஓடிவந்த கோவிந்தன் போர் பாதி எரிந்துவிட்டதைக் கண்டு அலறினான்.சில இளைஞர்கள் தீயை அணைக்கப் பாடுபட்டுக் கொண்டிருந்தனர்.அவர்களில் மணிவண்ண ரும்  ஒருவர்.ஆனால் அந்த எரிந்து கொண்டிருக்கும் போருக்குள் எதையோ எடுக்கப் போனான் கோவிந்தன்.அங்குதான்  மணிவண்ணனின் பணத்தை ஒளித்து வைத்திருந்தான் கோவிந்தன்.ஆனால் அந்தப் பணம் எரிந்து சாம்பலாகிவிட்டது.மனம் உடைந்த கோவிந்தன் மணிவண்ணனின் அருகே தேம்பியவாறு நின்றான்.
அவனை அணைத்தவாறே உள்ளே அழைத்து வந்து தண்ணீர் குடிக்கக் கொடுத்து சமாதானப் படுத்தினார்.
"கோவிந்தா, வருந்தாதே.தெய்வத்தின் துணை இருந்தால் உன் பணம் மீண்டும் கிடைக்கும் நம்பு.'

கோவிந்தனுக்கோ திருடனுக்குத் தேள் கொட்டியது போல இருந்தது ஒளித்து வைத்து இப்போது எரிந்து போனது ஊரார் மணிவண்ணனிடம் கொடுத்து வைத்திருந்த பணம் அல்லவா?இதை எப்படி வெளியே சொல்வான்?
முருகா, எனக்கேன் இந்த சோதனை. உன் பக்தனை சோதித்ததற்கு எனக்குத் தண்டனையா முருகா. மணிவண்ணன் மிகவும் நல்லவர் பக்திமான் என்பதை ஒப்புக் கொள்கிறேன். இந்தப் புதிரை விடுவித்து என் மனம் அமைதியுறச் செய். என மனமுருக கண்களை மூடி வேண்டிக்கொண்டான்.புன்னகையுடன் மணிவண்ணன் கூறினார்.
"கோவிந்தா, என் கையில் பணப்பெட்டியைப் பார்த்தவுடன் நீ திகைத்து உன் வீட்டுக்கு வந்ததைப் பார்த்தேன்.என் கையில் நான் வைத்திருந்தது ஊராரின் பணமல்ல என் சொந்தப் பணம்.அந்த முருகன் எனக்குப் படியளந்த பணம் அதை அவனுக்கே செலவு செய்வதில் எனக்கு மிக மகிழ்ச்சி.அதனால்தான் பணம் திருடு போனதையோ உன்மீதுதான் சந்தேகம் என்பதையோ நான் யாரிடமும் சொல்லவில்லை.இப்போது பார். அந்தப் பணம் அந்தக் கந்தனின் பணமாக இருந்தால் அது எப்படியும் உன்னை வந்து சேரும்.அப்போது அதை கோயிலை ப் புதுப்பிக்கப் பயன்படுத்த வேண்டும்.மக்களும் உன்னைப் பாராட்டுவார்கள். என்றபோது அங்கே வந்தான் கந்தன் "ஐயா,என்னை மன்னிச்சுடுங்க. இவரு வைக்கோல் போரிலேயிருந்து பொட்டிய எடுத்துப் பார்க்கறத நான் பார்த்தேனுங்க. அவரு போன பெறகு அந்தப்
பொ ட்டியில இருந்த பணத்த எடுத்துக்கிட்டு வைக்கோல் போருக்குத் தீ வச்சிட்டனுங்க.ஐயா, பணத்தோட  வீட்டுக்குப் போனவுடனே என் வீடு இடிஞ்சு விழுந்துடுச்சுங்கோ.நான் பாவி. ஊர்பணம் அதுவும் அந்த முருகனோட பணம் அதை எடுத்ததுக்கு நல்ல பலன அந்த முருகன் குடுத்திட்டாங்க."என்று அழுதபடியே மடியிலிருந்த பணத்தை மணிவண்ணனின் முன் கொட்டினான் கந்தன்.

உணர்ச்சி வசப்பட்ட கோவிந்தன் மணிவண்ணனின் காலில்விழுந்தான். ஐயா, நீங்க பக்திமான் ஒழுக்கசீலர். உங்க நல்ல மனசு தெரியாம நான் தவறா இத்தனை நாள் நடந்திட்டேன் இந்தப் பாவியையும் மன்னிச்ச நீங்க ஒரு மகான்."
"அப்படியெல்லாம் சொல்லாதே. உன் மனம் திருந்திட்டதே எனக்குப் பெரிய மகிழ்ச்சி. தெய்வம் உண்டு. அதை நம்பினால் எப்போதும் கைவிடாது அப்படீங்கற  உண்மையை புரிஞ்சிகிட்டதே போதும்.நிம்மதியாப் போய்த் தூங்கு. நாளைக்கு ஊர்ப் பெரியவங்க முன்னால கோவிலைப் புதுப்பிக்கறதா சொல்லி இந்தப் பணத்தக் குடு. இந்த சங்கதி யாருக்கும் தெரியவேண்டாம். கந்தா, உனக்கும் புது வீடு கட்டித் தரச் சொல்றேன் இந்த சங்கதி யாருக்கும் தெரியக்கூடாது "என்றபோது மகிழ்ச்சியுடன் கண்களைத் துடைத்துக் கொண்டு சிரித்தான் கந்தன்.இதுநாள் வரை தீமையே செய்துவந்த தனக்கு நற்பெயரையும் புகழையும் ஈட்டித்தர வழிசெய்த அந்தப் பெரியவர் மணிவண்ணனின் குணத்தை வியந்ததோடு இறைவன் எப்படியெல்லாம் திருவிளையாடல் நிகழ்த்திவிட்டான் என வியந்தான். எல்லாம் அந்தப் பெரியவரின் இறைநம்பிக்கையே காரணம் .தெய்வம் உண்டென்று தானறிதல் வேண்டும் அப்படீன்னும் தெய்வம் நமக்குத்துணை அப்படீன்னும் பாரதியார் சொல்லியிருக்கிறாரே. அத்துடன் வள்ளுவரின்
"பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடு வாழ்வார் "என்ற
குறளையும் மறந்தோமே.அதன்படியே வாழ்ந்து வரும் பெரியவர் மணிவண்ணன் இனி அவர வழி நடப்பதே என் கடமை. என்று எண்ணியவாறே அமைதியாக உறங்கினான் கோவிந்தன்.
                                        
                                                      ( நிறைவடைந்தது.)


          































































சனி, 9 ஏப்ரல், 2016

குறள் வழிக்கதைகள்---தெய்வமே துணை.

 பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
 நெறி நின்றார் நீடு வாழ்வார் 

                     ஒரு கிராமத்தில் மணிவண்ணன் என்று ஒருவர் இருந்தார்.அவர் எப்போதும் இறைவனைப் பற்றியே எண்ணிக் கொண்டும் பேசிக்கொண்டும் இருப்பார்.எப்போதும் இறைவன் நாமத்தை உச்சரித்துக் கொண்டும் கோவில்களுக்குப்  போய்க் கொண்டுமஇருப்பார்.யாரிடமும் இறைவனைப் பற்றியே பேசிக்கொண்டும் இருப்பார். 
              இவரது பக்தியைக் கண்டு புகழ்பவர்களும் உண்டு. பரிகசிப்பவர்களும் உண்டு.சிலர் இவரை வேஷதாரி என்றும் சொல்வதுண்டு. .மணிவண்ணரோ இது எதையும் காதில் போட்டுக் கொள்ளாது தன்  கடன் பணி  செய்து  கிடப்பதே என்று வாழ்ந்து வந்தார். ஒருநாள்  மணிவண்ணர் வழக்கம்போல் ஊர் எல்லையில் இருந்த பிள்ளையார் கோவிலுக்குப் போய்விட்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அவருக்குப் முன்னால் கோவிந்தன் சென்று கொண்டிருந்தான்.  .மணிவண்ணரும் கோவிலுக்குப் போய்விட்டு இறைவன் நினைவாகவே வந்து கொண்டிருந்தார்.
 கோவிந்தனுக்கு மணிவண்ணர்  ஒரு வேஷதாரி என்று எண்ணம்.இவருக்கு ஏதேனும்   துன்பம் நேர்ந்தால் அப்போதும் ஆண்டவனை நினைக்கிறாரா பார்ப்போம் என எண்ணி அவரை எப்படி சோதிப்பது என்று யோசித்தான்.அவன் அதிர்ஷ்டம் ஒரு சிறுவன் வாழைப் பழம் சாப்பிட்டுக் கொண்டு நின்றிருந்தான் அவன் கையிலிருந்த வாழைப்பழத் தோலை  தம்பி அந்தத் தோலை  பசுவுக்குப் போடுகிறேன் கொடு என்று கேட்டு வாங்கிக் கொண்டான்.பின்னர் சற்றுத் தொலைவு சென்று மணிவண்ணர் வரும் வழியில் அதைப் போட்டுவிட்டு மறைந்து நின்று கொண்டான்.அதே வழியில் நடந்து வந்துகொண்டிருந்த மணிவண்ணர்  கண்களில்  வாழைப்பழத் தோல் பட்டுவிட்டது. கண்ணில் பட்ட அந்தத் தோலை த் தாண்டிச் செல்லாமல் அங்கேயே நின்று' யாராவது வழுக்கிவிழுந்துவிடப் போகிறார்களே முருகா' என்றவாறே எடுத்து கொண்டு நடந்தார்.சற்றுத் தொலைவு சென்றபின் பசுமாடுகள் மேய்ச்சலுக்குப் போய்விட்டு வந்து கொண்டிருந்தன.ஒரு பசுவின் வாயில் அந்தத் தோலை கொடுத்துவிட்டு அதை வணங்கிவிட்டு நடந்தார்.
இதைப் பார்த்தபோதும் கோவிந்தனுக்குப் பொறாமை அடங்கவில்லை. என்ன நல்ல பக்திமான் வேஷம் என்று எண்ணிக் கொண்டான். ம்ம்.. அடுத்தமுறை எப்படியும் மாட்டிவைக்கிறேன் என்றுசொல்லிக்கொண்டான்.
சில நாட்கள் சென்றன.அன்றும் வழக்கம்போல் கோவிலுக்குப் போய்விட்டு வந்துகொண்டிருந்தார் மணிவண்ணர். தன்னையொத்த இளைஞர்களுடன் உரையாடிக்கொண்டிருந்த கோவிந்தனுக்கு மணிவண்ணர வருவதைப் பார்த்ததும் மூளை சுறுசுறுப் படைந்தது நண்பர்களிடம் ஆலோசித்தான்.அவனைப் போன்ற சிலர் கோவிந்தனை ஆமோதித்தனர்.ஆனால் சிவகுரு மட்டும் இதைத் தவறு என்று வாதாடினான்.
அவனிடம் இதெல்லாம் ஒரு விளையாட்டுக்குத் தானே என்று சமாதானம் செய்தான் கோவிந்தன்.ஆனாலும் சிவகுரு இந்த விஷப் பரீட்சைக்கு ஒப்புக் கொள்ளாமல் சென்று விட்டான். மற்றவர்கள் அங்கேயே நின்று அடுத்த சோதனைக்குத் திட்டம் தீட்டினர்.அந்தத் திட்டத்தை நிறைவேற்ற ஒரு நாள் குறித்தனர்.
அந்த குறிப்பிட்ட நாளும் வந்தது.அன்று அமாவாசை தினம்.நல்ல இருட்டு.நடுஇரவு. ஒரு பயங்கரமான பேய் உருவம் மணிவண்ணரின் முன் வந்து நின்றது.அத்துடன் பயங்கர சத்தமும் கொடுத்தது.பெரும் பயங்கர சத்தம் கேட்டுக் கண் முழித்தவர் தன முன்னே பயங்கரப் பேய் நிற்பதைக் கண்டார்.ஒரு நிமிடம் கண்களை மூடிக்கொண்டார்..முருகா முருகா எனக் கூவியவர் கந்த சஷ்டிக் கவசத்தைச் சொல்ல ஆரம்பித்தார்.சற்று நேரம் பேயாட்டமாடிக் கொண்டிருந்த பேயே களை,த்துவிட்டது. சற்றுநேரம் அமைதியாக நின்றது.
அப்போது இறைவன் அருளால் பயம் தெளிந்த மணிவண்ணர் பேயைப் பார்த்து "என்ன பாவத்தாலோ உனக்குப் பேயுருவம் வந்துவிட்டது போ போய் கோவிலின் முன்னே   நின்று வரும் பக்தர்களை தரிசித்துக் கொண்டிரு உனக்கு நல்ல மோட்சம் கிட்டும் போ. என்னிடம் வந்து என்ன பிரயோசனம்?"என்றார் கனிவோடு.
பேயுருக் கொண்ட கோவிந்தனுக்குத் தலை சுற்றியது. சற்று நேரத்தில் மணிவண்ணர் கோவிந்தா, கோவிந்தா என்று ஜபிக்கத் தொடங்கவே கோவிந்தன் அவரை ஒன்றும் செய்ய இயலாமல் அங்கிருந்து மறைந்தான்.வெளியே வந்து தன நண்பனிடம் ச்சே, இந்தமுறையும் இவரை  எதுவும் செய்ய முடியவில்லையே என்று வருந்தினான்.
அவர்கள் வேறு திட்டம் தீட்டியவாறே அங்கிருந்து அகன்றனர்.
மறுநாள் காலை கோவில் வாசலில் நண்பர்களுடன் நின்றிருந்த கோவிந்தனைக் கண்ட மணிவண்ணர் அருகே வந்தார். இவர் என் நம்மிடம் வருகிறார் எனப் புரியாமல் அவரைப் பார்த்தான் கோவிந்தன்.அருகே வந்தவர் புன்னகை புரிந்தவாறே "நான் சொன்னவாறே கோயில் முன்னின்று வரும் பக்தர்களைத் தரிசிக்கத் தொடங்கிவிட்டாயா ரொம்ப நல்லது."என்றதும் கோவிந்தனுடன் சேர்ந்து அவன் நண்பர்களும் திடுக்கிட்டனர். "கோவிந்தா, நேற்று இரவே நீதான் என்று கண்டு பிடித்துவிட்டேன்.அதனால்தான் முருகா முருகா என்று எப்போதும் கூப்பிடும் நான் கோவிந்தா கோவிந்தா என்று கூவினேன்." என்றபடி சிரித்தார்.
அவமானத்தில் தலை குனிந்தபடியே வேகமாக அங்கிருந்து அகன்றான் கோவிந்தன்.
ஆனாலும் அவன் மனதுள் மணிவண்ணரைப் பற்றிய எண்ணம் மாறவேயில்லை. எப்படியும் இவர் முகத்திரையைக் கிழித்தே தீருவேன் என மனதுக்குள் முடிவு செய்து கொண்டான்.

                                                                      (தொடரும்)







ருக்மணி சேஷசாயி
.Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

மந்த்ராலய மகான் --- 14

             எந்த எல்லையும் இல்லாதவரான ஸ்ரீ ராகவேந்திரர் புன்னகையோடு நவாபுக்கு பதிலளித்தார்.
"என் பிருந்தாவனத்தின் கர்ப்பகிரகத்தின் மேல் ஒரு சிறிய கோபுரம் அமைக்கச் சொல்லியிருக்கிறேன்.
அதிலும் நான் பிரசன்னமாகியிருப்பேன்.அதைத் தரிசித்தாலே என்னைத் தரிசித்தது போலத்தான்."என்ற போது 
நவாப் மகிழ்ச்சியுடன் நன்றி கூறி பிரசாதம் பெற்றுக் கொண்டு வணங்கிச் சென்றார்.
இப்போது அனைத்துப் பணிகளும் முடிவுற்று பிரவேசம் செய்ய வேண்டியது தான் பாக்கி.
                  ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனப் பிரவேசம் செய்யப் போகிறார் என்ற செய்தி காட்டுத் தீ போல எல்லா இடங்களுக்கும் பரவ பல பாகங்களிலிருந்தும் மக்கள் மாஞ்சால கிராமம் நோக்கி திரள் திரளாக வர ஆரம்பித்தனர்.
கி.பி.1671 விரோதிகிருது வருஷம் சிராவண மாதம் கிருஷ்ண பக்ஷம் துவிதீயை திதி வியாழக்கிழமை. அதிகாலை நேரம் அந்த அதிகாலை நேரத்தில் துங்கபத்திரையில் வெள்ளமா மக்கள் வெள்ளமா என திகைக்கும் அளவிற்கு மக்கள் நிறைந்திருந்தனர்.
          எல்லார் மனத்திலும் துக்கம்.யார் முகத்திலும் மகிழ்ச்சியில்லை.நம் கண்முன் நடமாடிக்கொண்டிருக்கும் கலியுகத் தெய்வம் காமதேனு கற்பகவிருட்சம் குணக்குன்று வைதீக சிரோன்மணி நம் கண்களை விட்டு மறையப் போகிறார்.நம்மை விட்டுப் பிரியப் போகிறார் என்ற செய்தி அனைவர் கண்களிலும் நீரை நிரப்பியிருந்தது.ஸ்ரீ ராகவேந்திரரையே மக்கள் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.திவ்யமான ஸ்ரீ மூலராமரின் பூஜையை முடித்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கினார் ராகவேந்திரர்.பின்னர் எழுந்து நடந்தார் பிருந்த மந்திரம் நோக்கி.மக்களெல்லாம் ராகவேந்திரா, குருவே எனக் கூவிய வண்ணம் அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
           சுவாமிகள் பிருந்தாவனத்தின் முன் அமர்ந்து கொண்டார்.அவர் எதிரே கமண்டலம் துளசிமாலை பிரம்மதண்டம் வைக்கப் பட்டிருந்தன.மக்களை நோக்கித் திரும்பி அனைவரையும் அன்புடன் பார்த்தார்.
"நான் 700 ஆண்டுகள் இந்த இருந்தாவனத்தில் ஜீவனோடு வாழப் போகிறேன்.என்னை நாடி வருவோருக்கு அவர்கள் துன்பத்தைப் போக்குவேன்.நீங்கள் அன்பும் பக்தியும் நல்ல பண்புகளும்  கொண்டு வாழ வேண்டும்.
 ஸ்ரீஹரி உங்களுக்கு நன்மையே செய்வார்.என்று கூறியவர் இறைவனைப் பார்த்து தன குற்றங்களை மன்னித்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என வேண்டிக்கொண்டார்.
பின்னர் மக்களிடம் யாரும் சோகமாக இருக்கக் கூடாது. தான் பிருந்தாவனப் பிரவேசமான இந்த நாளை சந்தோஷமாக சமாராதனை போல் வயிறார போஜனம் செய்து கொண்டாட வேண்டும் என்று கூறினார்.பின்னர் வெங்கண்ணா வை அழைத்து தனது பிரவேசம் முடிந்தபிறகு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கமாகக் கூற கண்ணீரோடு அதைக் கேட்டுக் கொண்டார் வெங்கண்ணா.பின் அருகிருந்த சீடரைத் தம் வீணையைக் கொணருமாறு பணித்தார்.அந்த வாத்தியத்தை சுருதி மீட்டிப் பாடத் தொடங்கினார்.            

அவர் பாடிய ஒரே பாடல்
 "இந்து எனகே கோவிந்தா நின்ன பாதாரவிந்தவ தோரோமுகுந்தா "என்பதுதான்.இறைவனிடம் உன்பாத தரிசனத்தைக் கொடு.  நந்தகோபன் மகனே திருமகளின் மணாளனே கோவிந்தா கோகுலத்தின் ஆனந்தமாய்த் திகழ்ந்தவனே.
 
உலகப் பற்றுகளில்  மூழ்கி நல்வழி அறியாமல் இவ்வுலகில் வாழ்ந்துவிட்டேன்.பாலகன் இவன் என்று என் குற்றங்களை எண்ணாமல் என் தந்தையே என்னைக் காப்பாய் 
மூடனாக இருந்து அற்ப ஜீவனான நான்  ஆழ்ந்த பக்தி செய்யவில்லை உன்னைக் காண எங்கும் வரவில்லை.உன்னைப் பற்றிப் புகழ்ந்து பாடவுமில்லை.அருள்புரியும் கண்ணா உன்னை வேண்டிக் கொள்கிறேன். காப்பாயாக.
இந்தத் தரணியில் பூவுலகிற்குப் பாரமாக வாழ்ந்ததோடு சரியில்லாத வழிகளில் நடந்தேன் யாரும் என்னைக் காப்பவரில்என்று பொருள் படும் கன்னடப் பாடலைப் லை.உன்னையே நம்பிச் சேர்ந்துவிட்டேன். அய்யனே வேணு கோபாலா கைகொடுத்துக் காப்பாய் ஸ்ரீ ஹரியே "என்னும் பொருள் பொதிந்த கன்னடத்தில் அமைந்த 
இந்தப் பாடலை மனமுருகப் பாட அனைவர் கண்களிலும் நீர். இறைவனிடம் நாம் எப்படி வேண்டிக் கொள்ளவேண்டும் என்பதையே பாடிக் காட்டிவிட்டார் சுவாமிகள்.அதே சமயம் பூஜையில் இருந்த சந்தான கோபாலன் நர்த்தனமாடியதை அனைவரும் கண்டு ஆச்சரியத்தில் மூழ்கினர்.
                       வேதபாராயணம் பிராம்மணோத்தமர்களால் நடைபெற்றுக் கொண்டிருக்க ஸ்ரீஸ்வாமிகள் ஸ்தோத்திரம் சொல்லியவாறே நடந்தார்.மேள  தாள வாத்தியங்கள் முழங்க பிருந்தாவனத்தின் அருகில் சென்று நின்றார். மக்களை அன்புடன் நோக்கி ஆசீர்வதித்தார்.
சிஷ்யர்களை பிருந்தாவனத்திற்கு பூஜை செய்யச் சொன்னார்.பின்னர் பிரம்மதண்டத்தையும்  துளசி மாலையையும் வலது கையிலும் கமண்டலத்தை இடது கையிலும் எடுத்துக் கொண்டு நடந்தார்.
ஓம் நமோ நாராயணாய என்று எங்கும் குரல்கள் ஒலித்தன.மீண்டும் மக்களை நோக்கி ஆசீர்வதித்துவிட்டு பிருந்தாவனத்தை நோக்கி நடந்தார். அருகே நின்ற யோகீந்திரரின் உதவியுடன் ப்ருந்தாவனத்துள் பிரவேசித்து யோகமுத்திரையுடன் பத்மாசனமிட்டு அமர்ந்தார்.அவரது வலது கையில் துளசி மாலை ஜபம் செய்தபடி உருட்டிக் கொண்டிருதார்.பக்தர்கள் அனைவரும் அந்தத் துளசிமாலையைப் பார்த்தபடி ஓம் நமோ நாராயணாயா  என்று உரத்த குரலில் கூறியபடியே கண்களில் நீர் சொரிய நின்றிருந்தனர்.

சற்று நேரத்தில் சுவாமிகள் கையிலிருந்த துளசிமாலை அசைவற்று நின்று விட்டது. அதைக் கண்ட வெங்கண்ணா சுறுசுறுப்பானார்.
ஸ்ரீராகவேந்திரர் கூறியிருந்தபடி 1200 சாலிக்ராம கற்களால் பிருந்தாவனம் நிரப்பப்பட்டு மாதாவரத்திலிருந்து கொண்டு வரப்பட்ட  விசேஷமான கல்லினால் பிருந்தாவனம் மூடப்பட்டது.வெங்கண்ணா   விக்கி விக்கி அழுதார்.சீடர்களும் அழுதார்கள்.ம்ரித்திகை என்று சொல்லப்படும் மண்ணை பிருந்தாவனத்தின் மேல் பரப்பினார்கள்.ஸ்ரீயோகீந்திரர் தீபாராதனை காட்டினார். அனைவரும் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினர்.

ஸ்ரீயோகீந்திரர்  ஸ்ரீகுருகளின் விருப்பப் படியே பிருந்தாவனத்துக்கு எதிரே ஆஞ்சநேயரைப் பிரதிஷ்டை செய்தார்.
ஸ்ரீராகவேந்திரரின் முக்கிய சீடர்களில் ஒருவர் அப்பண்ணாச்சார் இவரைப் பற்றிச் சொல்லாமல் ராகவேந்திர சரிதம் முற்றுப் பெறாது.ஏனெனில் இன்று நாம் சொல்லிக் கொண்டிருக்கும் ராகவேந்திர ஸ்தோத்திரத்தை இயற்றியவரே இவர்தான்.
துங்கபத்திரா நதியின் மறுகரையில் இருக்கும் பிக்ஷாலையா என்னும் கிராமத்திற்கு மடத்து வேலையாக இவரை அனுப்பியிருந்தார் சுவாமிகள்.பிருந்தாவனப் பிரவேசத்திற்குள் வந்துவிடலாமென எண்ணியிருந்தார் அப்பண்ணா.ஆனால் வேலை முடிய சற்று காலதாமதமாகிவிட்டது. அன்று காலை வேகவேகமாக ஓடிவந்தார் மாஞ்சாலம்  நோக்கி.துங்கபத்திரையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது அதைக் கடக்க இயலாமல் கலக்கத்துடன் நின்றார்."ஹே ராகவேந்திரா, கடைசியாக உம்மைக் கண்ணாரக் காணும் பாக்கியம் இந்த அடியேனுக்குக் கிடைக்காதா " என்று தேம்பித் தேம்பி அழுதபடி நின்றார்.பின்னர் துணிந்து ஆற்றில் இறங்கினார்.அவரின் வாய் ராகவேந்திரரின் மகிமையை "ஸ்ரீபூர்ண போத குருதீர்த்த "என்று பாடிக்கொண்டே இருக்க துங்கபத்திரையைக் கடந்து விட்டார்.இவரது பக்தியிலும் பாடல் சிறப்பிலும் கட்டுண்ட துங்கபத்திரையே இவருக்கு வழிவிட்டாள்  எனலாம் 

மாஞ்சாலத்தை அடைந்து ராகவேந்திரர் ஜீவசமாதியாகிவிட்ட பிருந்தாவனத்தின் முன் வீழ்ந்து கதறினார்.
அதனால் இவரது ராகவேந்திர  ஸ்தோத்திரத்தின் கடைசி அடிகள் முடிக்கப்படாமல் அப்படியே நின்றிருந்தது.
அதை பிருந்தாவனத்தின் உள்ளிருந்து "சாக்ஷி ஹயா ஸ்தோத்ரஹி" என்ற ஸ்ரீராகவேந்திரரின் குரல் முடித்து வைத்தது.
அப்பண்ணா ச்சாரியார் இயற்றிய ராகவேந்திர   ஸ் தோத்திரத்தின் 31வது ஸ்லோகத்தின் கடைசி வரிகள்  ராகவேந்திரரின் வாய்மொழியாக பிருந்தாவனத்தின் உள்ளிருந்து வந்தவையே.பின்னர் 
                               பூஜ்யாய ராகவேந்திராய சத்யா தர்ம ரதாயச    
                                பஜதாம் கல்ப விருக்ஷாய நமதாம் காமதேனவே."
என்ற ஸ்லோகத்தையும் இயற்றினார் அப்பண்ணா. இவ்விரு வரிகளைக் கூறி ஸ்ரீராகவேந்திரரை எங்கிருந்து நினைத்தாலும் அருள் புரியும் கலியுக கற்பகவிருக்ஷம் நம் ராகவேந்திரர்.அவரை வணங்கி என்றும் நன்மைகளை அடைவோமாக.

                        "ஓம் ஸ்ரீ ராகவேந்த்ராய நமஹ."  



--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

சனி, 20 பிப்ரவரி, 2016

மந்த்ராலய மகான் --13

         சுவாமிகள் பிருந்தாவனப் பிரவேசம் செய்யத் தக்க இடத்தில் ஒரு பள்ளம்  தோண்டிப் பார்க்கச் சொன்னதும் வெங்கண்ணா திகைத்து நின்றார்.அவரைப் புன்னகையுடன் பார்த்த சுவாமிகள் "வெங்கண்ணா இந்த இடத்தை நான் ஏன்  தேர்ந்தெடுத்தேன் என நினைக்கிறாயா?இதுதான் நான் சென்ற பிறவியில் பிரஹ்லாத ராஜராக இருந்த போது யாகம் செய்த இடம்.இங்குதான் எனக்கான பிருந்தாவனம் அமையவேண்டும்" என்றார். 

      சுவாமிகள் சொன்ன இடத்தைத் தோண்டியபோது ஆறடி ஆழத்தில் ஒரு பீடம் இருக்கக்கண்டார்.கண்டு திகைத்தார் "வெங்கண்ணா.இதேஇடத்தில் எனக்கு பிருந்தாவனம் தயாராக வேண்டும்" என கட்டளை பிறப்பித்தார் சுவாமிகள்.
"அருகே மாதாவரம் எனும் கிராமத்திலிருந்து நான் குறிப்பிட்டபடி இருக்கும் கல்லையே  பயன்படுத்த வேண்டும்"என்றபோது சற்றே சிந்தனை வடிவானார் வெங்கண்ணா.
"எந்தக் கல்லின்மீது அமர்ந்து ஸ்ரீராமன் விஸ்ராந்தி செய்து கொண்டானோ அந்தக் கல்லா"ல்தான் எனக்கு பிருந்தாவனம் அமையவேண்டும்"குருகளின் இந்த வார்த்தையைக் கேட்ட வெங்கண்ணா அவர் விருப்பப்படி குறிப்பிட்ட கல்லைக் கொண்டுவந்து சேர்த்தார். ஸ்ரீ ராகவேந்திரர்  கூறிய படியே எங்கெங்கு என்னென்ன உருவங்கள் இருக்கவேண்டும் என்பதைக்  கவனமாக கேட்டுக் கொண்டு அதேபோல் செய்தி முடித்தார் வெங்கண்ணா. 
 மாஞ்சாலம்மனின்  விருப்பத்திற்காக பிருந்தாவனத்துக்கு எதிரில் ஆட்டுத்தலை உருவங்களையும் ஆஞ்சநேயர் விக்ரகம் பிருந்தாவனத்துக்கு  எதிரிலும் இருக்கும்படி அமைத்தார். பின பிருந்தாவனத்தை நிரப்ப 1200 லக்ஷ்மி நாராயண சாலிக்ராமங்களையும்  கொண்டு வந்து சேர்த்தார்.
               அன்று பிருந்தாவன வேலைகளைப் பார்க்க திவான் வெங்கண்ணா வுடன்  நவாப் சித்தி மசூத்கானும் மாஞ்சால கிராமத்துக்கு வருகை தந்தார். துங்கபத்திரையின் அழகையும் அங்கு  நடைபெறும் கட்டிட வேலைகளையும் பார்த்தார். ஸ்ரீ ராகவேந்திரரைப் பார்த்து மண்டியிட்டு வணங்கினார்.அவரை அன்புடன் பார்த்த சுவாமிகள் நலம் விசாரித்தார்.
"நீயும் உன் நாட்டு மக்களும் நலமா?"
"நலமே சுவாமி. தாங்கள் இங்கு வந்தபின் என் நாடு மிகுந்த சுபிட்சமாக இருக்கிறது சுவாமி."
"எல்லாம் அந்த மூலராமரின் அருள்தான்"

"சுவாமி, தாங்கள் பிருந்தாவனப் பிரவேசம் செய்தபின் தங்களைப் பார்க்க இயலாதேஎன கலங்கி நிற்கிறேன்."
நாங்கள் எப்படி ஒரு ஹிந்து கோவிலுக்குள் வர இயலும் ?"மிகுந்த விசனத்தோடு கேட்டார் நவாப்.

"நவாப் என்னை எப்போது நினைத்தாலும் நான் அருள்புரிவேன்.அன்பும் பக்தியும் போதும்.நமக்குள் பேதமில்லை.எனக்கு இந்த கிராமத்தை ஒரு நவாபான நீகொடுத்துதுள்ளாய்.ஜகத்குரு என்ற பட்டத்தையும் அரச 

சின்னமான வெண்கொற்றக் குடையையும் அடில்ஷா தானே கொடுத்துள்ளார். மேலும் ஏராளமான நிலங்களையும் முகமதியர்கள் தானே எனக்குத் தானமாக வழங்கியுள்ளனர்.எனவே  நான் அனைவ்ருக்கும் பொதுவானவன. எந்த எல்லையும் எனக்கு இல்லை.








ருக்மணி சேஷசாயி 




Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

திங்கள், 8 பிப்ரவரி, 2016

மந்த்ராலய மகான் --12

                 வெங்கண்ணா கூறக்கேட்ட சுவாமிகள் ஒரு கணம் கண்களை மூடி ஸ்ரீ மூலராமரை மனதுக்குள் தியானித்தார்.
"ஹே மூலராமா, இதுவும் உன் விளையாட்டா? நான் பிருந்தாவனப் பிரவேசம் செய்யும் நாள் நெருங்கிக் கொண்டிருப்பதால் இப்படியெல்லாம் நிகழ்த்துகிறாயா?"

அருகே பணிவுடன் நின்றிருக்கும் திவானை சிந்தனையுடன்  பார்த்தார்.

"எனக்கு என்ன தானமாகக் கொடுப்பதாக எண்ணியுள்ளார் உங்கள் நவாப்?"

"சுவாமி, செய்த பாவத்துக்குப் பிராயச்சித்தமாக ஒருசில கிராமங்களைத் தரச் சித்தமாக உள்ளார். . அதைத் தாங்கள் ஏற்கவேண்டும்" 
"சரி எந்த கிராமத்தைத் தருவதாக இருக்கிறார் ?"
"சுவாமி, வளம் கொழிக்கும் எந்த கிராமமாக இருந்தாலும் தர  ஆணையிட்டிருக்கிறார்."
"நான் கேட்கும் கிராமத்தைத் தருவாயா?""
"அது என் பாக்கியம் சுவாமி."
"நல்லது. துங்கபத்திரா  நதிக் கரையிலுள்ள மாஞ்சால கிராமத்தையே நான் பெற
விரும்புகிறேன்."
"சுவாமி, அது பீடபூமிப் பிரதேசம்.வளமற்ற பூமி."
"எனக்கு அந்த மாஞ்சால கிராமம்தான் வேண்டும். சமயம் வரும்போது அதைப் பற்றிக் கூறுகிறேன்."
"சுவாமி, மாஞ்சால கிராமத்தையே  உங்களுக்கு  தானமாக வழங்குகிறேன்."
                            செய்தியைக் கேள்வியுற்ற நவாபும் மனம் மகிழ்ந்தார்.நவாப் உரிமைச் சாசனத்தை எடுத்துக் கொண்டு சுவாமிகளைப் பார்த்து வணங்கி நின்றார்.
"சுவாமி, என் மனம் இன்றுதான் சந்தோஷத்தையும் நிம்மதியையும் அடைந்தது." என்றுகூறி  கண்ணீருடன் உணர்ச்சி வயப்பட்டு நின்றார்.
"மிக்க நன்றி நவாப். தாங்களும் தங்கள் ராஜ்யமும் வளத்துடன் வாழ என் மூலராமன் அருள்புரிவான்."என்று கூறி மந்திராக்ஷதை கொடுத்து ஆசி வழங்கினார்.
இனி மந்த்ராலயத்தில் பிருந்தாவனப் பிரவேசத்திற்குத தயாராகவேண்டும் என்ற நினைவுடன் மாஞ்சால கிராமத்தில் அடியெடுத்து வைத்தார் ஸ்ரீராகவேந்திரர்.
                              அந்த கிராமத்தில் நுழைந்தவுடன் தன்  குலதெய்வமான வெங்கடாசலபதிக்கு ஒரு கோவில் 
அமைத்து பூஜைக்கு ஏற்பாடுகள் செய்தார்.பின்னர் அந்த கிராம தேவதையான மாஞ்சாலம்மனின் அனுமதி 
 பெற .எண்ணினார்.எனவே மாஞ்சாலம்மனை வேண்டினார். அம்பிகையின் அருள் பெற்று அவள் சன்னிதானத்திற்கு அருகிலேயே தன்  பிருந்தாவனம் அமையவேண்டும் என வேண்டிக் கொண்டார்.அத்துடன்  மாஞ்சாலம்மனை தரிசித்த பின்னரே தன்னை தரிசிக்கவேண்டும் என்னும் வழக்கத்தையும் ஏற்படுத்தினார்.
                       தான் பிருந்தாவனஸ்தராவதற்கு முன்னால்  தனது  பூர்வாசிரம அண்ணனான குருராஜாச்சார் என்பவரின் பேரனான வெங்கண்ணாச்சார் என்பவருக்கு அடுத்த பீடாதிபதியாக பட்டாபிஷேகம் செய்வித்து மடத்தின் அதிகாரத்தையும் அளித்தார். அவருக்கு 'யோகீந்திரர்' என்ற சந்நியாச நாமகரணம் செய்தார்.பின்னர் வெங்கண்ணா விடம் தாம் பிருந்தாவனப் பிரவேசம் செய்ய பிருந்தாவனம் ஸ்தாபிக்க  
ஒரு இடத்தைக் காட்டி அங்கு தோண்டச் சொன்னார் சுவாமிகள்.
அங்கு இருந்தது என்ன? அந்த இடத்தை ஏன் சுவாமிகள் தோண்டச் சொன்னார் என்ற விவரத்தை அடுத்த தொடரில் பார்ப்போம்.
             
                                                                 (தொடரும்)






ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com