ஞாயிறு, 2 நவம்பர், 2014

தியாகச்சுடர்--------வரலாற்றுத் தொடர்.

                                   எட்டு --இறுதிப்பகுதி 

                  கையிலிருந்த மலர்க்கொத்துகொத்துகளைப் பணிவுடன் அந்தக்  கல்லறைமீது வைத்துவிட்டு மண்டியிட்டு அமர்ந்தான் ஜஹாங்கீர்.

   "தாய்நாடு காக்க தன இன்னுயிரைத் தியாகம் செய்த வீரத் திருவிளக்கே, உன்னை அல்லாஹ் காக்கட்டும்.அவர் அருள் பெற்றநீ எங்களையும் வாழ்த்துவாயாக. உன்னை உலகம் அறியாவிட்டாலும் நான் என்றும் மறவேன் தாயே."
மனமுருகி கண்களில் நீர் திரையிட வணங்கி எழுந்தான் ஜஹாங்கீர்.

    சிறிது நேரத்தில் கையில் அனார் மலர்களுடன் அங்கு வந்த நூர்ஜஹான் பக்தியுடன் கல்லறைமேல் மலர்களை வைத்துவிட்டுப் பணிவுடன் வெகுநேரம் கண்களை மூடி தியானத்தில் அமர்ந்திருந்தாள்.அவள் உள்ளத்தில் ஏற்பட்ட உணர்ச்சிக் குமுறல்களை யாரால் அறிய இயலும்?கல்லறை மேலிருந்த அனார்மலர்கள் காற்றில் அசைந்து அவளுக்கு ஆசி கூறின.

மாலை நேரம்.ஓவியம்ஒன்று  உயிர் பெற்றது போல் நூர்ஜஹான் அமர்ந்திருந்தாள். அவள் கரங்களைப் பற்றிக் கொண்டு கண்களால் அவள் அழகைப பருகியபடி அமர்ந்திருந்தான் 
ஜஹாங்கீர் 

"பிரபு, . என்னைத் தவறாக எண்ணாதீர்கள். என் தவறு பெரிதுதான்.அதற்காக  என்னை மன்னித்து விடுங்கள் பிரபு."

"நூர்ஜஹான், ஒற்றன் கூறியதாக நீ கூறியதும் தீர விசாரிக்காமல் புறப்பட்டது என் தவறுதானே.அதற்காக ஒரு உயிர் இன்று பலியாகிவிட்டது.பாவம்..."கண்களை மூடி ஒரு கணம் அந்த அடிமையின் நினைவில் அமர்ந்திருந்தான் ஜஹாங்கீர்.

"ஜகாம்பனாஹ்! அந்தப் பெண் மட்டும் இல்லையென்றால் என்னவாகியிருக்கும்?மாற்றான் கையில் சிக்கியிருக்கும் இந்த சாம்ராஜ்யம்.ஷேர்கான் சாமானியமானவறல்ல."

"உண்மைதான்.ஷேர்கான் சுத்த வீரன்தான்.அவனுடன் போரிடுவது அத்தனை எளிதாக இல்ல"

"பழரசம் அருந்துங்கள் பிரபு!இப்போது அந்தப் பேச்சு எதற்கு?

கிண்ணத்துடன் நூர்ஜஹானின் கரம்பற்றித் தன்னருகே அமர்த்திக் கொண்டான் ஜஹாங்கீர்.

 "இந்தக் கன்னி ரசம் அருகிருக்க கனிரசம் எதற்கு கண்ணே?"

அவனது அன்பில் மயங்கிய நூர்ஜஹான் தன்னை மறந்து அவன் மார்பில் சாய்ந்தாள்.அவள் உடல் மட்டுமல்ல உள்ளமும் அவனது அன்பணைப்பில் கட்டுண்டு விட்டது இப்போது. பனித்திரை விலகிய விடிவெள்ளி போல் அவள் மனம் கள ங்கமற்றுத்.திகழ்ந்தது.

வானத்தில் பூரண சந்திரன் என்றுமில்லாத பிரகாசத்துடன் இந்தக்காதலர்களுக்கு ஆசி கூறியவாறே பவனி புறப்பட்டான்.அந்த இரவின் தனிமையில் தியாகச்சுடரின் நினைவிலே தங்களையே மறந்து அமர்ந்திருந்தனர் நூர்ஜஹானும் ஜஹாங்கீரும்.
                                          (முற்றும்)
                   


ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

சனி, 1 நவம்பர், 2014

தியாகச்சுடர்---------வரலாற்றுத் தொடர்.

                                        ஏழு 


    வேதனை மிகுந்த உடலைச் சற்றே அசைத்தாள்  அனார். அவள் சரியாகப் படுக்க உதவிய நூர்ஜஹான் இன்னும் சற்று அருகே வந்து அமர்ந்து கொண்டாள்.
"சொல் அனார்.உன் விருப்பத்தைக் கட்டாயம் நிறைவேற்றுவேன்.தயங்காமல் சொல்வறண்ட தன உதடுகளை நாவால் தடவிக் கொண்ட அனார் தன அருகே வருமாறு செய்கை செய்தாள் 

அவளுக்கு இன்னுமருகே நெருங்கி அமர்ந்தாள்  நூர்ஜஹான்.

"நூர்ஜஹான் இனி எக்காலத்திலும் என் சலீமுக்கு துரோகம் நினைக்கக் கூடாது.இரண்டாவது நான் தான் அனார்க்கலி என்பது அவருக்குத் தெரியக்கூடாது.இந்த ரகசியம் நம்முடனேயே மறைந்து விட வேண்டும்."

நூர்  அனாரின் கரங்களை இன்னும   அழுத்தமாகப் பற்றினாள்.


"அப்படியானால்......அவருக்கு நீதான் அனார் என்பது தெரியாதா...?"

"தெரியாது   நூர். தெரிந்திருந்தால் என்னை சகோதரி என்று அழைப்பாரா? நான் அவ்வளவு உருமாறி விட்டேன்."  விரக்திப்  புன்னகையுடன் கண்ணீரும் வெளிவந்தது.

"அனார்க்கலி, சகோதரி,! சரித்திரத்தில் தீராப் பழிகாரியாக நான் ஆகிவிடாமல் என்னைக் காப்பாற்றி விட்டாய்.உனக்கு என்ன கைம்மாறு செய்வேன்?"

"எனக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்று அது போதும் எனக்கு."

"இனி ஜஹாங்கீர் எனக்கு தெய்வத்துக்கும்  மேலானவர்.அவர் இன்பமாக வாழ்வதையே என் லட்சியமாகக் கொள்வேன் அனார்."

"மிக்க மகிழ்ச்சி நூர்.மிக்க நன்றி. அந்தப் பழரசம் கொடு. என் நா வரள்கிறது."

"அது வேண்டாம் சகோதரி. புதிதாகக் கொண்டு வரச் சொல்கிறேன்."என்றவள் பணிப்பெண்ணை கண்ணால் ஜாடை காட்டி பழரசம் கொண்டுவரப் பணித்தாள்.

"ஏன்? அது அவ்வளவு உயர்ந்ததா? நான் சாப்பிடத் தகுதியில்லாதவளா?"

"ஐயோ அப்படியில்லை அனார்.உன் உடமைகளைத்தான் நான் அனுபவித்து வருகிறேன்....அது...நஞ்சு கலந்தது."

"என்ன?"

"ஆமாம்"  வெறுப்பு நூர்ஜஹானின் அழகிய முகத்தைக் கூட கோரமாக்கியது.
"அது... என்னை வஞ்சிக்க எண்ணியவருக்காகத்   தயாராக உள்ளது.அனார், ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையாகத் திட்டமிட்டுக் காரியங்கள் செய்கின்றனர்.ஆனால் அது சில சமயங்களில் வேறு விதமாக முடிந்து விடுவதும் உண்டு.போரில் ஷேர்கான் வெற்றிபெற்று விட்டால் சாம்ராஜ்ய ஆசையில் எதுவும் செய்வார்.அதைத் தடுக்க அவரை இவ்வுலகினின்றும் விடுதலை செய்துவிட எண்ணியே பழரசத்தில் நஞ்சு கலந்துவைத்துள்ளேன்.ஆனால் உன் தியாகத்தால் அதற்கு இடமில்லாமல் செய்துவிட்டாய்.வெற்றி நிச்சயமாக ஜஹாங் கீருடையதுதான். 

"சொல்... நூர் வெற்றி என் சலீமுடையதுதான்."

"பேகம் சாஹிபா,! ஜகாம்பனாஹ் வெற்றி பெற்றுவிட்டார். இங்குதான் வந்துகொண்டிருக்கிறார்."
பணிப்பெண் தன கடமையை முடித்துச் சென்றாள்.
.
நூர்ஜஹான், நான் இருந்தாலும் இறந்தாலும் நான் தான் அனர்க்கலி  என்று ஜஹாங்கீருக்குத் தெரிவிக்கவே கூடாது."

"கவலைப்படாதே அனார்."என்றபடியே ஜஹாங்கீரை வரவேற்கச் 
சித்தமானாள்  நூர்ஜஹான்.

                                           (அடுத்த பகுதி  தொடரும் )













--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

வெள்ளி, 31 அக்டோபர், 2014

தியாகச்சுடர்-------வரலாற்றுத் தொடர்.

                                            ஆறு.


                "நூர்ஜஹான் இவ்வளவு பெரியதுரோகத்தைச் செய்வாய் என நான் நினைக்கவில்லை." 

"என்ன ஆணவம் உனக்கு? ஒரு பணிப்பெண் என்னைப் பெயரிட்டு அழைப்பதா?ஜஹாம்பனா ஜஹாங்கீரின் ஆணை என்பதால் உன்னை அரண்மனை அந்தப்புரத்திற்குள்  அனுமதித்தேன்.இல்லையேல்..." ஆத்திரத்துடன் பற்களைக் கடித்தாள்  நூர்.

சற்றே பெருமூச்சு விட்ட அனார் மிகுந்த சிரமப்பட்டு மெதுவாகப் பேசினாள். 

"பதறாதே சகோதரி, நீ என்னை விரட்டுமுன் என் உயிர் இந்த உடலைவிட்டுப் பிரிந்து விடும்.அல்லா என்னை அழைத்துவிட்டார். ஆனால் கடைசியாக என் சலீமை இந்தக் கண்களால் மீண்டும் ஒருமுறை காணவேண்டும். அவர் வெற்றி பெற்ற செய்தியைக் கேட்க வேண்டுமென்றே  இந்த உடலில் இன்னும் இந்த உயிர் ஒட்டிக் கொண்டிருக்கிறது நூர்ஜஹான்!"

"அவருக்கு மிகவும் வேண்டியவளாகத் தோன்றுகிறது உன்னைப் பார்த்தால்....நீ...யார் ?"

"ஆம்... ஒரு காலத்தில் அவருக்கு வேண்டியவளாகத்தான் இருந்தேன். ஏன்...நானின்றி இந்த உலகே இல்லையென இருந்தவர்தான் என் சலீம். எங்கள் காதல்கதை உலகறிந்ததாக உள்ளது. காதலுக்கு இலக்கணமாகத் திகழ்ந்த எங்கள் வாழ்க்கை சோகமுடிவை எய்தி ஒரு கல்லறைக்குள் அடங்கி விட்டது."அதிகம் பேசிய ஆயாசம் தாங்காமல் மூர்ச்சையானாள் அனார்.

நூர்ஜஹான் ஓடிச்சென்று அவள் மூர்ச்சை தெளிவித்து சிறிது பாலை அவள் வாயில் புகட்டினாள்.

"கல்லறைக்குள் அடங்கியது என்றால்....."  என்று எண்ணமிட்ட நூர்ஜஹானின் கரங்கள் நடுங்கின. 

"அனார்க்கலியா இவள்..?" சிந்தனைச் சிற்பமாக ஊமையாக அமர்ந்துவிட்டாள்  நூர்ஜஹான்.

"என் நூர் ...பேசாமல் அமர்ந்துவிட்டாய்!...ம்...நீ என்ன நினைக்கிறாய் என்பது தெரியும். உன் சந்தேகம் சரிதான்.நான் தான் 'நாதிரா'.
அக்பர் பாதுஷாவினால் 'அனார்க்கலி' என்று பட்டம் சூட்டப் பட்டவள் "

"நீ,....நீங்கள் கொல்லப்பட்டதாகச் சொல்வது...!"

 வறண்ட அனாரின் உதடுகள் புன்னகையை உதிர்த்தன.குரல் கரகரக்க "நான் உன் சகோதரி நூர் என்னை நீ என்றே அழைக்கலாம்.நான் கல்லறைக்குள் அடக்கப்பட்டது உண்மை.அது உலகத்தின் கண்களுக்கு.ஆனால் கருணையே வடிவான அக்பர் பாதுஷா இப்படிப்பட்ட கொடுமையான காரியத்தைச் செய்வாரா?சுரங்கப் பாதை வழியே தப்பிச் செல்ல வழிகாட்டினார்.சலீமைப் பார்க்கவோ அவருடன் பேசவோ மாட்டேன்  என்று  வாக்குறுதி கொடுத்துவிட்டு இந்த சாம்ராஜ்யத்துக்கு வெளியே ஒரு காட்டில் என் தாயுடன் வாழ்ந்து  வந்தேன்."
என்றாள் ஆயாசத்துடன்.

"அனார்க்கலி, உங்கள் கதை பெரும் காவியமாகவே புனையப்பட்டுள்ளது. உன்னைக்காணவேண்டுமென்று நான் விரும்பியதுண்டு. ஆனால் இறந்துவிட்ட உன்னை எப்படிக் காண இயலும் என்று எண்ணியிருந்தேன்.என் விருப்பம் கைகூடுமென்று கனவிலும் நான் கருதவில்லை.ஆனால்...இந்த நிலைக்கு ....உன் உயிரைப் பணயம் வைக்கும் நிலைக்கு.... இப்படி நீ ஏன் முடிவு செய்தாய் அனார்..?"

"நூர்...அவரின்றி...என் விரகவேதனையை உள்ளடக்கிக் கொண்டு ஒவ்வொரு கணமும் துன்பத்தைத் தாங்கிக் கொண்டு வாழ என்னால் இயலவில்லை.இந்த உயிர் அவருக்கே சொந்தமானது.அவருக்காகவே இதை அர்ப்பணித்தால் அதைவிட வேறு பாக்கியம் என்ன இருக்கிறது எனக்கு?"

"அனார்க்கலி மாதர்களுக்குள்  மாணிக்கம்  நீ. உன்னருகே நிற்கவும் தகுதியற்றவள் நான்.ஒரு பெண்ணிடம் காதல் கொண்டவர் என்னை விரும்புவது எனக்குப் பிடிக்காத காரணத்தால் நான் ஜஹாங்கீரை வெறுத்தேன். ஆனால் காதலின் தன்மையையும் அதன் தெய்வீக சக்தியையும் பெருமையையும் நன்கு உணர்ந்தவர் உன் சலீம்.ஷேர்கானை விட ஆயிரம் மடங்கு உயர்ந்தவர்.அதுவும் உன்னைப்போன்ற ஒரு பெண் அவருக்காகக் காதலையும் உயிரையும் தியாகம் செய்ய வேண்டுமென்றால் அவர் எத்தனை உயர்ந்த புருஷராக இருக்கவேண்டும்?
இந்த உண்மை எனக்கு இப்போதுதான் புலப்படுகிறது.அதன் உயர்வை நான் இப்போதுதான் உணர்கிறேன்."

"நூர்ஜஹான், சகோதரி,..!  உயிரை இழக்கப்போகும் எனக்கு நீ இரண்டு வாக்குக் கொடுக்க வேண்டும்.அதை நீ உன் உயிருள்ளவரை காப்பாற்ற வேண்டும். செய்வாயா?" நூர்ஜஹான் தன இரு கரங்களுக்குள் நடுங்கும் அனாரின் கரங்களைச் சிறை வைத்துக் கொண்டாள் உரிமையோடு.

"சொல் சகோதரி.உன் அன்புக்காகவும் தியாகத்துக்காகவும் நான் எது வேண்டுமாயினும் செய்யக் கடமைப் பட்டுள்ளேன்."குரல் கரகரக்க கண்களில் கண்ணீர் திரையிடக் கூறினாள்  நூர்ஜஹான்.

                                                                                (அடுத்தபகுதி தொடரும்)







--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

புதன், 29 அக்டோபர், 2014

தியாகச்சுடர்---வரலாற்றுத்தொடர்

                                                         ஐந்து       
     
.              
"உன்னிசா! உன் உதவி பயனற்றுப் போய் விட்டதம்மா. ஷேர்கான் இதுவரையில் செய்துவந்த ஏற்பாடுகள் எல்லாம் 
 உன்னை மீட்டு வரத்தான் என்று எண்ணி ஏமாந்து போனேன்.
அவன் எண்ணம் இப்போது சாம்ராஜ்யத்தைக் கைப்பற்றுவதில்தான் தீவிரமாகச் சென்று கொண்டிருக்கிறது."

"மஹமத், அவர் இப்படி மாறுவார் என்று கனவிலும் நான் நினைக்கவில்லை."
துயரத்துடன் கூறிய நூர்ஜஹான் சூன்யத்தில் பார்வையைச் செலுத்தியவாறு அமர்ந்திருந்தாள்.
'இனி எனக்கு யார் துணை?ஜஹாங்கீரின் அன்பை உதறிவிட்டு ஷேர்கானின் அன்புக்கு ஏங்கி நின்றேன்.ஆனால் என்னை வெறுத்து ஒதுக்கும் நிலைக்கு அவர் இப்போது உயர்ந்து விட்டார் போலும். மொகலாய சாம்ராஜ்யம் அவர் கைக்கு மாறுமானால்....அப்போது....நான் அனாதை ஆகவேண்டியதுதானா?'  மனத்தின் ஓட்டத்தில் மௌனமானாள் நூர்ஜஹான்.

"மேஹர், ஜஹாங்கீரைப் பழிவாங்கவேண்டுமென்றுதான் நான் எண்ணினேனே தவிர சாம்ராஜ்யத்தைக் கைப்பற்றும் எண்ணமே எனக்கில்லை.அத்துடன் உன்னை  ஷேர்கானிடம் சேர்க்க வேண்டுமென்றுதான் விரும்பினேன்.ஆனால் ஷேர்கானின் எண்ணம் வேறு விதமாக உள்ளதம்மா."
பெருமூச்சுடன் அங்குமிங்கும் நடை பயின்றான் மஹமத்.

"மஹமத், நேரமாகிவிட்டது நீ புறப்படு. ஜஹாங்கீர் மேற்கு வாயில் வழியே புறப்பட்டிருப்பார்.நம் படைகளும் உள்ளே நுழைந்திருக்கும்.ஷேர்கான் இங்கு வந்தால் அவரை நான் கவனித்துக் கொள்கிறேன்.காலம் என் கைக்குள் அடங்கியது மஹமத்"
ஏதோ திட்டத்துடன் தலையசைத்து அவனுக்கு விடையளித்தாள் மேஹர் உன்னிசா என்ற நூர்ஜஹான்.

மஹமத் வெளியேறுமுன் ஒரு பெண்ணுருவம் அந்த அறையை விட்டு வேகமாக வெளியேறியதை இருவரும் கவனிக்கவில்லை.
                       
காட்டுப்பாதை வழியே கல்லும் முள்ளும் நிறைந்திருந்த இடத்திலும் தன உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடினாள் அனார்க்கலி. குறுக்குபாதை வழியாக வந்தும் மேற்குவாயில் வழியே செல்லும் படைகளைத் தடுத்து நிறுத்த இயலவில்லை.

"பாதுஷா!    ஜகாம்பனாஹ்!..." என்ற குரல் தன்  தொண்டைக்குள்ளிருந்து உரக்க வெளிவந்ததாகத்தான் எண்ணினாள்.ஆனால் பசியினாலும் களைப்பினாலும் சோர்ந்து போன அவள் உடல் இயந்திரமாக இயங்கிக் கொண்டிருந்ததே தவிர அதில் உணர்ச்சிகள் ஒடுங்கி வெகு நேரமாகிவிட்டிருந்தது.
                      தன்  இயலாமையை எண்ணி மனம் நொந்த அனார் மலை உச்சியை நோக்கி ஓடினாள்  கல் இடறி காலில் ரத்தம் கசிந்தது. முட்களால் ஆடைகள் கிழிந்து தொங்கின.எப்படியும் சலீமின் படையை நிறுத்திவிடவேண்டும் என்னும் எண்ணம் ஒன்றே அவள் குறிக்கோளாக இருந்தது. மலைஉச்சியை அடையுமுன்பே அவள் சலீம், சலீம் என்று உரத்துக் கத்தினாள்.உச்சியில் இருந்து சலீம் என்று கூவிய அவள் குரல் குதிரைகளின் குளம்பின் ஒலியில் காற்றோடு கலந்து  மறைந்தே போயிற்று. குதிரைப்படை தன்போக்கில் போய்க் கொண்டிருந்தது.மலை உச்சியில் சலீம் எனக் கத்தியவாறே படையுடன் ஓடிக் கொண்டிருந்தாள்  அனார்க்கலி.
                          படைவீரர்களுக்கு முன்பாக வெள்ளைப்புரவி ஒன்றின்  மேல் போர்க்கவசமணிந்து கம்பீரமாகச் சென்று கொண்டிருந்தான் சலீம்.வெற்றியையே குறிக்கோளாகக் கொண்டு படைநடத்திசெல்லும் சலீமைத் தடுக்க தன குரல் பயன்படாது என உணர்ந்து  கொண்டாள்  அந்தப் பேதை. இனி என்செய்வது? உயிரைப் பணயம் வைக்கவேண்டியதுதான்.அப்போதுதான் என் எண்ணம் நிறைவேறும். என முடிவு செய்தாள்.
மறுகணம் மலை உச்சியிலிருந்து ஒரு உருவம் உருண்டு புரவிப் படைக்குக் குறுக்கே வந்து விழுந்தது.வேகமாகச் சென்று கொண்டிருந்த சலீம் தன் குதிரையின் கடிவாளத்தை எவ்வளவு இழுத்துப் பிடித்தும் அனார்க்கலியின் உடலைத் துவைத்துவிட்டுத்தான் நின்றது அந்தப் புரவி.துள்ளிக் குதித்து ஓடிவந்த ஜஹாங்கீர் ரத்தம் தோய்ந்த அந்த உடலைத் தன மடியில் கிடத்திக் கொண்டான்.
 
"சகோதரி!  யார் நீ? ஏனிந்த தற்கொலை முயற்சி?"
சலீமின் குரல் காதில் விழுந்ததும் கண்களைத் திறந்தாள் அனார்.சிறிது நேரம் மூச்சுவிடத் திணறி விட்டு,
.
"பிரபு, நான் உங்கள் அடிமை.கிழக்குவாசல் வழியே பகைவர் படை நுழைந்து விட்டது.மேற்கு வாசல் என்ற செய்தி தவறானது.மொகல் சாம்ராஜ்யம் கைமாறும் நிலைக்கு வந்து விட்டது. உடனே புறப்படுங்கள் "என்றவள் .ஆயாசத்துடன் கண்களை மூடிக் கொண்டாள்.
ஜஹாங்கீர் அதிர்ச்சியும் கோபமும் கொண்டான்.  "இந்தச் செய்தி ஆதாரமுள்ளதுதானா?உனக்கு நன்றாகத் தெரியுமா?"
.
"என் உயிரின்மேல் ஆணை பிரபு."
.
"இதோ புறப்படுகிறேன்.சிப்பாய் இரண்டுபேர் இந்தப் பெண்ணை அரண்மனை அந்தப்புரத்திற்கு எடுத்துச் செல்லுங்கள் வைத்தியரிடம் நன்கு சிகிச்சையளிக்கச் சொல்லுங்கள்.நமது படை இரு பகுதியாகப் பிரியட்டும் ஒரு பகுதி இங்கேயே நிற்கட்டும் மற்றோடு பகுதி என்னுடன் கிழக்கு வாசலுக்கு வரட்டும்." என்று கூறியவாறு குதிரையின் மேல் தாவி ஏறினான் ஜஹாங்கீர். .
 பாதிப் படை புழுதியைக் கிளப்பியவாறே  அவனைத் தொடர்ந்து சென்று மறைந்தது.

                                                                                            (அடுத்த பகுதி தொடரும்)







               









ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

திங்கள், 27 அக்டோபர், 2014

தியாகச்சுடர் ------வரலாற்றுத் தொடர்.

                                         நான்கு 


                        அன்புள்ளம் அலை மோதியது.ஆத்திரம் ஆட்சி புரிந்தது.இன்பத்தை எதிர்பார்த்த நெஞ்சம் ஏமாற்றத்தைச் சுமந்து சென்றது. காதலில் கனிந்திருந்த இதயம் கல்லாகிக் கனன்றுகொண்டிருந்தது. நடையிலே வேகம்.கண்களிலே கண்ணீர்.சோகச் சித்திரம் ஒன்று உலகையே மறந்து ஏன் தன்னையே வெறுத்து சென்று கொண்டிருந்தது.எங்கே போகிறோம்? ஏன் போகிறோம்? என்ற கேள்விக்கு அங்கு விடையில்லை. அனார்க்கலியின் இதய சாம்ராஜ்யம் சூறாவளியில் சிக்கித் தவித்தது.இன்னும் சற்று நேரத்தில் அங்கு சூன்யமே குடிகொள்ளப் போகிறது.நடையின் வேகம் மறைந்துஅங்கே வெறி பிறந்தது.அந்த வெறிக்குத் தடை போட்டன அங்கே கேட்ட குதிரையின் குளம்பின் ஒலிகள்.

                       அனார்க்கலி திகைத்து நின்றாள். வனத்தின் அடர்ந்த புதர்கள் அவள் மறைந்து கொள்ளப் பெரும் உதவியாக இருந்தன.அகன்று பரந்த மார்புடனும் மெல்லிய தாடியுடனும் உயர்ந்து வளர்ந்த உருவத்துடனும் அந்த இளைஞன் அழகனாகவும் வீரனாகவும் தோற்றமளித்தான்.அவன் கண்கள் ரத்தச் சிவப்பாக இருந்தன. அத்துடன் கொலை செய்யப்போகிரவனின் வெறி அவன் கண்களில் தெரிந்தது.குதிரையை விட்டுக் கீழே இறங்கியவன் யாரையோ பார்த்துப் பேசியவண்ணம் நடந்து வந்தபோதுதான் மற்றொருவன் அங்கே நிற்பதைப் பார்த்தாள்  அனார்க்கலி.


"மகமத்! விசேஷம் ஏதேனும் உண்டா? நாம் நினைத்தபடியே படையெடுப்பை நடத்தலாம்  அல்லவா?"

"வெற்றி நமதே ஷேர்கான்!கவலையே  வேண்டாம்.எல்லா ஏற்பாடுகளையும் கச்சிதமாகச் செய்துள்ளேன்.  நமக்கு அவமானம் இழைத்த அந்த ஜஹாங்கீரை சித்ரவதை செய்ய வேண்டும். மெஹருன்னிசாவை  மீட்டு மீண்டும் உன் மனைவி என்ற அவளின் அந்தஸ்தை பெற்றுத் தரவேண்டும்."

இடைமறித்தான் ஷேர்கான்."அதைப் பற்றிக் கவலைப் படாதே. நமக்கு வெற்றி கிட்டவேண்டும் முதலில்."

"கவலையே வேண்டாம் ஷேர்கான். வெற்றி கிட்டுவதற்குப் படைவலிமையை விட மனவலிமைதான் அவசியம். தற்போது ஜஹாங்கீர் மெஹர் உன்னிசாவின் அழகில் மயங்கி அவள் காலடியே கதியாகக் கிடக்கிறான்.மேலும் அவளுக்கு உலகத்தின்ஜோதி நூர்ஜஹான் என்று பெயர் சூட்டிஇருக்கிறான்.  ஆகவே...."

"என்ன மஹமத்?"

".மெஹரிடம்  நாம் படையெடுக்கும் விவரங்களைச் சொல்லி மேற்குக் கோட்டை வழியாகப் படைசெல்வதாக தவறான செய்தியை ஜஹாங்கீர் 
நம்பும்படி அறிவிக்கச் சொல்லியிருக்கிறேன்.அவன் மேற்குவாயில் வழியே படையெடுத்துச் செல்லும்போது நாம் கிழக்குவாயில்  வழியாகக் கோட்டைக்குள் நுழைவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் மெஹரஉன்னிசாவே செய்து முடித்திருக்கிறாள்.அதனால் வெற்றி  நமதே ஷேர்கான்."


"மஹமத்! பெண்களை நம்பி ஒரு காரியத்தில் இறங்கக் கூடாது.மேலும் மெஹர் நமக்கு உதவுவாள் என்பது என்ன நிச்சயம்?"

"ஏன் செய்யாமல்? அவள் உன் மனைவி ஷேர்கான் !"

"அது கடந்த காலம் மஹமத். இன்று அவள் ஜஹாங்கீரின் காதலி."

"அவளை மீட்டு உன்னுடன் சேர்த்துக் கொள்வது உன் கடமையல்லவா ஷேர்கான் ?"

"ம்.....பார்க்கலாம்.."

"ஷேர்கான் !, பெண்கள் ஏமாற்றத்திற்கு உள்ளானால் பெரும் புலிகளாக மாறுவர். பழிக்குப்பழி வாங்க எதையும் செய்யத் தயங்க மாட்டார்கள மெஹர் தனக்காகவே இந்தப் படையெடுப்பு என்று எண்ணிக் கொண்டிருக்கிறாள்."

"மஹமத்! காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ளவேண்டும் என்பது தெரியாதா?சூழ்நிலை சந்தர்ப்பம் என்ற காற்று நம்பக்கம் வீசிக்கொண்டிருக்கிறது. இதைப் பயன்படுத்தி மொகலாய சாம்ராஜ்யத்தை நம் கைக்கு மாற்றிக் கொள்ளவேண்டும். நான் விரும்புவது மங்கையை அல்ல மஹமத். மாபெரும் மொகலாய சாம்ராஜ்யத்தை."

"ஷேர்கான்!"  அதிர்ச்சியில் திகைத்து  நின்றான் மஹமத்.

சிரிப்பு வெடித்தது ஷேர்கானின் கண்டத்திலிருந்து. குரல் கேட்ட அதிர்ச்சியில் வனத்திலிருந்த  பட்சிகள் எல்லாம் படபடவென சிறகடித்துப்  பறந்தன.

"மஹமத்" என்றவாறே அவன் முதுகைத் தட்டிக் கொடுத்தான் தைரியம் கூறும் வகையில்.

"வா, போகலாம். நாளை மாலை சூரியன் அஸ்தமிக்கும் முன் நமது வெற்றிக்கொடியை மொகலாய சாம்ராஜ்யக்  கோட்டையின் மேல் 
பறக்கவிட வேண்டும்."

சிந்தனை வயப்பட்டவனாக அவனைப் பின் தொடர்ந்தான் மஹமத்கான்.

குதிரையின் மீது தாவி ஏறினர் இரு வீரர்களும்.  குதிரையின் குளம்பொலி வெகு தூரம் சென்று தேய்ந்து மறைந்தது.கொந்தளித்துக் கொண்டிருந்த அனார்க்கலியின் உள்ளம் இப்போது குழம்பித் தவித்தது.
'என்னை மறந்து என் வாழ்வைக் கல்லறைக்குககாணிக்கையாக்கிவிட்டு  மாற்றான் மனைவியுடன் மகிழ்ந்து கொண்டிருக்கிறார் சலீம்.
காதலின் போதையிலே கடும் சூழ்ச்சி தம்மைச் சூழ்ந்து வருவதைக் கூட அறியாமல் இருக்கிறார்.என்னை ஏமாற்றியவருக்கு இந்த தண்டனை வேண்டியதுதான்.'

'சே! என்ன எண்ணம் இது! என் சலீமுக்குத் தீங்கு வருவதை நான் பார்த்துக் கொண்டிருப்பதா?இறந்துபோனவள் எழுந்து வருவாள் என்பதை அவர் எப்படி அறிவார்?அதுவும் அவர் அன்பு செலுத்தும் ஒரு பெண்ணே அவரின் வீழ்ச்சிக்குக் காரணமாக இருப்பதா?அதற்கு மறைமுகமாக 
நானும் துணை போவதா?வருங்கால வரலாற்றில் அக்பரின் மகாசாம்ராஜயம் ஜஹாங்கீரின் காலத்தில் பெண்பித்து காரணமாக அழிந்தது எனஅவப்பெயர் உண்டாகிவிடுமே.அதற்கு நான் இடம் கொடுப்பதா?கூடாது.என் சலீமின் சாம்ராஜ்யம் அழிவதை நான் பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன்.எங்கள் காதல் சாம்ராஜ்யம் அழிந்துவிட்டாலும் கருணையுள்ளம் கொண்ட அக்பரின் மகனான ஜஹாங்கீரின் மொகலாய சாம்ராஜ்யம் அழியக் கூடாது.அதற்கு நான் காரணமாகக் கூடாது.இதைத் தடுத்தே ஆகவேண்டும்.  சலீம் ...சலீம்... இதோவந்துவிட்டேன் உங்களைக் காப்பாற்ற '  

அவள் காலடிகளின் அருகே நெருங்கி வந்து கொண்டிருந்தது மொகல் சாம்ராஜ்யக் கோட்டை.

                                                                         (அடுத்த பகுதி தொடரும்)




ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

வியாழன், 23 அக்டோபர், 2014

தியாகச்சுடர். --- வரலாற்றுத்தொடர்.


                                                                        மூன்று                .
         
 அந்தப்புரம் முழுமையும் செய்யப்பட்டிருந்த அலங்காரம் கண்களைப் பறித்தது.எங்கே பார்த்தாலும் அழகிகளின் நடமாட்டம் அதிகமாக இருந்தது. 

அதைப்பார்த்த அனாரின் ரத்தம் கொதித்தது.சலீம் சரச சல்லாபமாக வாழ்க்கை நடத்துகிறான் .என் காலடியே சொர்க்கம் என்று இருந்தவன்  இன்று 

அந்தப்புரத்தையே சொர்க்கமாக்கிக் கொண்டிருக்கிறான் .என் வாழ்க்கையைக் கல்லறைக்குள் மூடிவிட்டு அதன்மேல் இன்பமாளிகையைக் கட்டிக் கொண்டிருக்கிறான்.


  பற்களைக் கடித்து எச்சிலைக் கூட்டி விழுங்கித் தன ஆத்திரத்தை அடக்கிக் கொண்டாள் அனார்க்கலி. அவள் அங்கு வந்ததையோ மற்றசேடியருடன்  நிற்பதையோ யாரும் கவனித்ததாகவே தெரியவில்லை.ஒரு காலத்தில் தெருவில் சென்றாலே அதோ அக்பரின் அன்புக்குப் பாத்திரமான ராஜநர்த்தகி அனார்க்கலி இசைக்குயில் நடனமயில் என்று சுட்டிக்காட்டி அவளைக் காண்பதற்குப் போட்டியிட்டுக்கொண்டு வந்தவர்கள் கூட அவள் இன்று தம்மிடையே இருப்பது தெரியாமல் கருமமே கண்ணாக இருந்தனர்.
"வா வா ,சீக்கிரம் வா " என்ற பணிப்பெண்ணின் குரல் கேட்டு கனவுலகிலிருந்து விழித்தாள்  அனார்க்கலி. சேடியைத் தொடர்ந்து பிரம்மாண்டமான ஓர் அறைக்குள் நுழைந்தாள்.
அந்த அறை! , அறையா அது? அழகின் பிறப்பிடம் தேவேந்திரன் மாளிகை என்றுகூடச் சொல்லலாம் அத்தனை அழகு மிகுந்ததாக இருந்தது.அந்த அறையைச் சுற்றி ஒரு பார்வை பார்த்தவளின் கண்கள் ஒரு காட்சியைப் பார்த்து இமைக்க மறந்தன.ஆம்.அந்த அறையின் நடுநாயகமாக இருந்த தந்தக் கட்டிலின்மேல் தங்கச் சிலையொன்று சயனித்திருநதது. 
      சத்தம் கேட்டு மெதுவாகத் திரும்பிப் பார்த்த அந்த முகத்தைக் கண்டு திகைத்தாள் அனார்.பெண்களில் இத்தகைய அழகிகள் கூட உண்டா?   இவள் பெண்தானா அல்லது உலகத்தின் ஜோதி அனைத்தும் ஒன்று திரண்டு பெண்ணுருவாய் வந்து அமர்ந்துள்ளதா?திகைத்து நின்றஅனார்க்கலி  அந்தப் பெண் "என்ன வேண்டும்?" என்று கேட்டபிறகே திகைப்பினின்றும் மீண்டாள் .
வாய் மூடியபடியே தான் தொடர்ந்து வந்த சேடியைத் திரும்பிப் பார்த்தாள் ,
"மகாராணி, தங்களுக்கு அலங்காரம் செய்ய வந்துள்ளோம்.தயவு செய்து அனுமதிக்கவேண்டும் " என்று பணிவுடன் கூறி நின்றாள்  அந்த சேடி. 
அலங்காரமா? ..ம்..சீக்கிரம் சித்தப்படுத்துங்கள்.என்றாள் புன்னகையுடன். புன்னகையா அது!அதனுள் எத்தனை எத்தனையோ பொருள் புதைந்து கிடந்தன.அனாரின் கண்கள் அதைக் கவனிக்கத் தவறவில்லை.
"அந்தத் தைலத்தை எடு, இந்த முத்தாரத்தைப் பிடி,அந்த மலர்களைத் தொடுத்து வா."என்ற செடியின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தாள் 
அனார்க்கலி. 
"நன்றி மகாராணி, இன்னும் சற்றுநேரத்தில் பாதுஷா இங்கு விஜயம் செய்யப் போகிறார்."
என்று கூறிவிட்டுப் பணிந்து எழுந்தவாறே நகர்ந்தாள்  சேடி .
               அனார்க்கலி கற்சிலை என நின்றிருந்தாள். அவள் கண்களில் நீர் சொரிவதை நூர்ஜஹான் கவனிக்கவேயில்லை.சாளரத்தின் வழியே பார்த்தவாறு நின்றிருந்தாள் அழகுத் திருவுருவமாகத் திகழ்ந்த நூர்ஜஹான்.அவளைப் பார்த்தவாறே நின்றிருந்தாள்  அனார். எத்தனைநேரம் இருவரும் அப்படியே நின்றிருந்தனரோ.வெளியே ஆரவாரம் கேட்டபோதுதான் தம் நிலைக்கு வந்தனர்.
"பாரா உஷார்! பாதுஷா ஜஹாங்கீர் வந்துகொண்டிருக்கிறார் ."என்ற சிப்பாயின் அறிவிப்பைக் கேட்டு உணர்வு பெற்ற அனார்க்கலி சட்டென்று திரைமறைவில் நின்று தன்னை மறைத்துக் கொண்டாள்.
              நூர்ஜஹான் சாதாரணமாகத் திரும்பிப் பார்த்தாள்.ஜஹாங்கீர் என்று பட்டம் சூட்டிக் கொண்ட சலீம் வேகமாக அந்த அறைக்குள் நுழைந்தான்.தான் வேட்டையாடி ஜெயித்த பொருளைப் பார்க்கும் ஆவல் அவன் கண்களில் தெறித்தது.
அவனைப் பார்த்ததும் மெதுவாக அன்னமென நடந்து வந்து அவன் முன் சலாமிட்டு அவனை வரவேற்றாள் நூர்.   ஜஹாங்கீர் பரவசத்துடன் அவளது இரு கரங்களைப் பற்றிக்கொண்டு மஞ்சத்தில் அமர்ந்தான்.வெகுநேரம் அவளையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.காதலின் சக்தி முழுவதையும் தன கண்களில் தேக்கிக் கொண்டு அவளைப் பார்த்தான் ஜஹாங்கீர்.
நூர்ஜஹானால் அதற்குமேல் மெளனமாக இருக்க இயலவில்லை.
"அன்பே! தங்கள் அன்புக்குப் பாத்திரமான நான் எத்தனை பாக்கியசாலி! தங்களின் அடிமையாக வாழ்வதற்கே கொடுத்து வைத்திருக்க வேண்டும்.  அன்புக்குப் பாத்திரமாக வாழ்வதற்கு ......!"பேசிக்கொண்டே போனாள்  நூர் .
அவளுடைய மாதுளை உதடுகளைத் தன் கரத்தால் மூடினான் ஜஹாங்கீர். 
"இல்லை நூர்! நான் எதிர்பார்த்த இன்பம் என்னைத் தேடி வந்துவிட்டது.நான் எந்தப் பொருளுக்காகப் போராடினேனோ அந்தப் பொருள் எனக்குக் கிடைத்து விட்டது.நான் மிகுந்த அதிர்ஷ்டசாலி நூர் ! உலகத்தின் ஜோதிஎல்லாம் உன் உருவாய் மாறி என் முன் நிற்கிறது.எங்கே உன்னைக் கவர்ந்து வந்ததற்காக என்னை வெறுத்துவிடுவாயோ என்று தவித்துக் கொண்டிருந்தேன்.என்னை நீ ஏற்றுக் கொண்டதனால் நான் தான் பாக்யசாலி நூர்ஜஹான்."
அதற்குமேல் அனார்க்கலியால் பொறுக்க முடியவில்லை.  திரை மறைவிலிருந்து வெளிப்பட்டு அனார்மலர்க் கொத்து ஒன்றை 
அவன் முன் நீட்டினாள். அப்பொழுதேனும் அன்றைய அனாரின் நினைவு அவனுக்கு வருமா என்ற நப்பாசையோ என்னவோ பாவம் 
நினைப்பதேல்லாம்தான் நடப்பதில்லையே.அவள் முகத்தைக்கூட ஏறிட்டுப் பார்க்காமல் மலரைஉ மட்டும் பெற்றுக் கொண்டு 
"இந்த மலர் என் நூர்ஜஹானின் கூந்தலில் அமர்ந்தால் பிறப்பின் பயனை அடைந்து விடும்.இம்மலர் உண்மையில் பாக்கியம் செய்த மலர்."
என்று கூறியவண்ணம் நூரின் தலை முக்காட்டை விலக்கி அவள் தலையில் அந்த மலரைச் செருகினான் ஜஹாங்கீர்.
அனாரின் இதயத்தில் வேல் செருகியது போன்ற வேதனை உண்டாயிற்று. 

           அவள்   கண்களில் நீர் திரையிட்டது.அந்தத் திரையினூடே பழைய காட்சி பளிச்சிட்டது. தோட்டத்தின் நடுவே அனார்க்கலி அழகு பிம்பமாக அமர்ந்திருந்தாள்.அவளை அணைத்துப் பிடித்தவாறே அனார்மலர்க்கொத்தை தலையில் செருகிய சலீம் இதே வார்த்தைகளைக் கூறியது காதுகளில் ஒலித்தது பசுமையாக.
"அனார், என் அன்பே, என் அந்தப்புரத்தில் அமர்ந்து கொண்டு உன் தலையில் உரிமையுடன் மலர் சூடும் நாள் விரைவில்
வந்து சேரும் " என்று கூறிய வாய் இன்று நூர்ஜஹானின் அழகைப் புகழ்ந்து கொண்டிருக்கிறது.அனார்க்கலியின் உள்ளம் தூள்தூளாகச் சிதறியது.அதற்குமேல் அந்த இடத்தில் இருந்து சலீமின் சல்லாபத்தைக் காணப் பிடிக்கவில்லை அனாருக்கு.
துக்கம் தாங்காமல் அரண்மனையை விட்டு வேகமாக வெளியேறினாள்.

                                                                           (அடுத்த பகுதி நாளை)



ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

புதன், 22 அக்டோபர், 2014

தீபாவளி நல்வாழ்த்துகள்.

அன்பு நெஞ்சங்கள் அத்துணை பேருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகளும் நல்லாசிகளும்.

--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

தியாகச்சுடர். வரலாற்றுத் தொடர்.

                              இரண்டு 

   "நாதிரா, மகளே,"என்றவாறு அவள் அருகே ஓடிச்சென்றாள்  அவள் தாய். 

 "உன் விருப்பம்போல் செய். ஆனால் நீ யாரென்பதை சலீம் புரிந்து கொண்டதாகத் தெரிந்த அக்கணமே என் உயிர் பிரிந்து விடும்.அதை நினைவில் வைத்துக் கொள்.பத்திரமாகப் போய்வா மகளே"

"அம்மா" ஆனந்த மேலீட்டால் தாயின் கழுத்தைக் கட்டிக் கொண்டு முத்தமழை பொழிந்தாள் நாதிரா.அவளது மகிழ்ச்சியைக் கண்ட அந்தத் தாயின் முகத்திலும் புன்னகை மலர்ந்தது.

         *  *  *   *   *   *   *   *   *   *   *   *   *   *   *   *   *   *   *   *
                        வழி நீண்டது. புறப்பட்ட வேகத்தில் நாதிராவின் உள்ளம் எப்பொழுதோ ஜஹாங்கீரிடம் சென்று சேர்ந்து விட்டது.காதலனைக் காணப் போகிறோம் என்ற களிப்பில் காரிகை கடுகி நடந்தாள் .மகிழ்ச்சி நெஞ்சை நனைத்திருந்தது.பசி, தாகம் களைப்பு சோர்வு எதுவுமே அந்த நங்கையை அண்டவில்லை.எல்லாவற்றையும் கடந்த நிலையில் இருந்தாள்  நாதிரா.

வழியெங்கும் நிறைந்து மலர்ந்திருந்தன அனார் மலர்கள்.அவள் மகிழ்ச்சியைக்.கண்டு .காற்றில்அசைநது தங்கள் ஆசியைத்
தெரிவித்தன அனார் மலர்கள். நாதிராவின் இதழோரத்தில் புன்னகை அரும்பியது.அனார் மலர்களினூடே சலீமின் உருவம் தோன்றித் தோன்றி மறைந்தது.வா வா என்று அழைப்பது போல் இருந்ததோ என்னவோ கைகளை விரித்துக் கொண்டு வேகமாக ஓடினாள் நாதிரா.

      அக்பர் பாதுஷாவிடம் அனார்மலரைப் பரிசாகப் பெற்றதும் அனார்க்கலி என்ற பெயரையும் ராஜநர்த்தகி என்ற பதவியை ஏற்றதும் அவள் நினைவில் சுழன்றன.மொகலாய சாம்ராஜ்ய எல்லைக்குள் நுழைந்ததும் புதிய பலமும் உற்சாகமும் தோன்றிவிட்டன அனாருக்கு.வெகு நாட்கள் பிரிந்திருந்த தாயைக் கண்டதுபோல் மகிழ்ச்சியில் திளைத்தது அவள் மனம்.உள்ளம் கட்டுக்கு அடங்காமல் துள்ளியது.நாட்கள் ஓடின.

அரண்மனை வாயிலை அடைந்தபோதுதான் என்ன செய்வது என்று தோன்றாமல் நின்றாள்  அந்தப்பேதை. அவள் நிற்பதை யாரும் கவனிக்கவேயில்லை.தன்னை யாரும் தெரிந்துகொள்ளவில்லை என்பதை அறிந்து அவள் உள்ளம் நிம்மதியடைந்தது. அதேசமயம் 'சலீமுக்கும் தன்னை யாரென்று தெரியாமல் போய்விட்டால் ....ஒருவேளை சலீம் என்னை மறந்திருந்தால்......' தலையைக் குலுக்கிவிட்டுக் கொண்டாள்  ஒருமுறை.

"அப்படியெல்லாம் இருக்காது.அரும்பாடுபட்டு அகதிபோல் வந்திருக்கும் என்னை அல்லாஹ் ஒருபோதும் ஏமாற்ற மாட்டார்."என்று தன்னையே சமாதானம் செய்து கொண்டாள் பேதை அனார்க்கலி.

   நேரம் கடந்தது.அன்று அரண்மனையில் ஏதோ விழா போலத் தோன்றியது. உள்ளே நுழையத் தயங்கியவாறு நின்றிருந்தாள்  அவள். 'சலீம் என்னையே நினைத்துக் கொண்டிருக்க வேண்டும்.என் நினைவிலேயே வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும்.சுகமும் இன்பமும் அவர் விரும்பாதவையாக இருக்கவேண்டும்.அவர் இருக்கும் இடமே ஒரு சோகத்திரை போர்த்தது போல இருக்கவேண்டும்.'

என்று அனார்க்கலி யின் உள்மனம் விரும்பியது.
மற்றொரு மனமோ 'சேச்சே, நான் தான் வாழ்விழந்து தவிக்கிறேன். அவராவது சுகமாக வாழட்டும் ' என்று வேண்டியது.ஆனால் உண்மையில் அவள் மனம் அங்கு நடக்கும் கோலாகலத்தைக் கண்டு பொருமியது என்றுதான் சொல்லவேண்டும்.       
 .
       பணிப்பெண் ஒருத்தி அலங்காரப் பொருட்களைச் சுமந்துகொண்டு செல்வதைக் கண்ட அவளின் சிந்தனை தடைப் பட்டது.பணிப்பெண்ணின் கையிலிருந்த தட்டுகளில் ஒன்று நழுவிக் கீழே விழுவது போலத் தோன்றவே மறைவாக நின்றிருந்த அனார்க்கலி தாவிச்சென்று அதைப் பற்றிக் கொண்டாள்."நன்றி"என்று கூறிய பணிப்பெண் அவளையும் உடன் வரும்படி ஜாடை காட்டிவிட்டு முன்னே நடந்தாள்.
புஷ்பத்தட்டை ஏந்தியவண்ணம் எல்லாவற்றையும் திகைப்புடன் பார்த்தவாறே உடன் நடந்தாள் அனார்க்கலி.

.                                    (அடுத்த பகுதி நாளை)



-- 
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

திங்கள், 13 அக்டோபர், 2014

முதல் சரித்திரக் கதை.

                                                        .


எனது முதல் வரலாற்றுச் சிறுகதையை உங்கள் முன் வைக்கிறேன். 1961-ம் ஆண்டு கலைமகளில் வெளிவந்தது.உண்மைச் சம்பவமும் கற்பனையும் கலந்த இந்தக் கதை நான்கு தொடராக வெளிவரும். இது சிறுவர் கதையல்ல.இதுவரை எழுதிவந்த கதைகளிலிருந்து மாறுபட்டது.படித்து தங்களின் மேலான கருத்துகளை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். 
அன்புச் சகோதரி   ருக்மணி சேஷசாயி.
.
                                                                         தியாகச் சுடர்.

                                                                                          1-ஒன்று.
                                எண்ணெய் விளக்கு மங்கலாக எரிந்து கொண்டிருந்தது.இரண்டொரு சுடர்கள் தெரித்துக் கீழே விழுந்தன.சிறிது  சிறிதாக ஒளி  மங்கிக் கொண்டே வந்தது. ஒளி  மங்குவது தெரியாமல் ஆகாயத்தை வெறித்துப்  பார்த்தவண்ணம் அமர்ந்திருந்தாள்  அந்தப் பெண்.அவள் தலைமேல் போட்டிருந்த சல்லாத்துணி இளம் தென்றலைக் கூடத் தாங்காமல் படபடத்தது. நழுவிக் கீழே விழுந்த துணியைக் கூடத் தூக்கி மேலே போட்டுக் கொள்ளாமல் உலகையே மறந்து அமர்ந்திருந்தாள் அவள் .ஒளி ஒடுங்கிக் கொண்டே வந்தது.

   "நாதிரா! உனக்கு என்ன வந்துவிட்டது? பேதைப்பெண்ணே, இடிந்து போய் உட்கார்ந்திருக்கிறாயே. உன்னைப் பெற்ற என் வயிறு என்ன பாடு படுகிறது என்று தெரியுமா உனக்கு?"

     "அம்மா! என்னை ஏனம்மா விடுவித்து அழைத்து வந்தாய்? விரக வேதனைப் பட்டு அணுஅணுவாகச் சாவதைவிட ஒரேயடியாய்க்  கல்லறைக்குள் புதைந்து விடுவது எவ்வளவோ மேல்" 

       "பைத்தியக்காரி, எனக்கு மகளாக நீ இருக்கவேண்டுமென்று அக்பர் பாதுஷாவிடம் மன்றாடி உன்னை மீட்டு வந்துள்ளேன்.அதுமட்டுமல்ல அவர் விதித்த நிபந்தனைகளுக்கெல்லாம் கட்டுப்பட்டுத்தான் உன்னை விடுவித்தேன்."

 மகளின் முகத்தைக் கண்ணில் நீருடன் பார்த்தாள்  அந்தத் தாய். மகளிடம் கெஞ்சுவதுபோல் பேசினாள்.

"இத்தனையும் எதற்காகத் தெரியுமா?...ம் .....நீயும் ஒரு தாயாக இருந்திருந்தால் என் உணர்ச்சிகளின் தன்மை உனக்குப் புரிந்திருக்கும். நாதிரா! என் கண்ணே!  நீ எப்போதும்போல் ஆடிப்பாடி மகிழ்ந்து என்னையும் மகிழ்விக்க வேண்டும்.அதற்குத்தான் இத்தனை பாடுபட்டேன்.மறைந்துவிட்ட உன் அழகு மீண்டும் துளிர்விட வேண்டும், உன் மந்தகாசப் புன்னகை மீண்டும் உலகை மயக்கவேண்டும்.குயிலைப் பழிக்கும் உன் குரல் மீண்டும் கானம் இசைக்க வேண்டும்.உன் பழைய வாழ்க்கை நினைவுகளை விட்டுப் புதிய வாழ்க்கையைப் புத்துணர்ச்சியோடு தொடங்கவேண்டும்.அப்போதுதான் என் ஆத்மா சாந்தியடையும். நாதிரா! இந்த ஏழைத் தாயின் வேண்டுகோளுக்கு செவிசாய்ப்பாயா மகளே!"

வயதான காரணத்தால் கரகரப்பாகிவிட்ட .அவள்  குரல் துக்கத்தினால் மேலும் கரகரப்பானது. தளர்ந்துபோன தன கரங்களினால் தன மகளின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அவள் கன்னத்தில் முத்தமிட்டாள் .தாயின் மனக் கொதிப்பைக் கண்டும்.கற்சிலையாய்  அமர்ந்திருந்தாள் நாதிரா.

     மகளின் நிலையைக் .கண்ட  அந்த மூதாட்டி திகைத்தவாரே அருகே அமர்ந்தாள்.அவளிடமிருந்து ஏதும் பேச்சு வராததைக் கண்ட நாதிரா, "அம்மா," என்றவாறே அவள் மடியில் தலைவைத்துக் கொண்டாள். மகளின் முகத்தை வருடிய தாயின் கரங்களைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டாள் நாதிரா.

"அம்மா என் உள்ளத்தில் உள்ள ஒரே ஒரு ஆசையை மட்டும் பூர்த்தி செய்துவிட்டால் பிறகு நீ என்ன சொன்னாலும் செய்கிறேன் அம்மா!"
  
 "மகளே, நீ கேட்பது எனக்குத் தெரியும்.பல மாதங்களாகப் பிரிந்திருக்கும் சலீமைக் காண உன் மனம் விரும்புவதும் எனக்குத் தெரியும்.பிரிவின் வேதனையை உணராதவளல்ல நான்.ஆனால் அக்பர் பாதுஷாவிற்கு வாக்குக் கொடுத்துள்ளேன் நான்.அந்த வாக்குறுதியை மீற  அனுமதிக்கமாட்டேன் " அவள் குரலில் உறுதி தொனித்தது.

"அம்மா, உன் வாக்குறுதிக்கு ஒரு இடையூறும் நேராது. நான் யாரென்பதை சலீமுக்குத் தெரிவிக்காமலேயே வந்து விடுகிறேன்.எட்டி நின்று அவரை ஒரே ஒருமுறை தரிசித்துவிட்டு வந்துவிடுகிறேன்.அம்மா என்னை நம்பு. அவருக்கு இந்த ஏழையின் நினைவு இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொண்டு வந்து விடுகிறேன்.அப்போதுதான் என் மனம் சாந்தியடையும்."

"உனக்குச் சரியான பைத்தியந்தான் பிடித்திருக்கிறது.அரசபோகத்தில் மிதந்து கொண்டிருக்கும் சலீமுக்கு எத்தனையோ அழகிகள் பணிப்பெண்களாக இருப்பார்கள்.அவர்களையெல்லாம் விட்டு இறந்து விட்டதாக உலகம் நம்பும் உன்னையா அவன் நினைத்துக் கொண்டிருக்கப் போகிறான்? அவனை மறந்துவிட்டு உன் வாழ்க்கையைச் சீர்படுத்திக் கொள் நாதிரா."

"அம்மா, எந்த முடிவையும் சலீமை நான் பார்த்து விட்டு வந்த பிறகுதான் சொல்ல முடியும். என்னைப் போக விடு அம்மா."

"மகளே, அக்பர்பாதுஷா உன்னைக் கல்லறையிலிருந்து மீட்டு அனுப்பியபோது இனி மொகலாய சாம்ராஜ்ய எல்லையை மிதிப்பதில்லை தவறிக்கூட சலீமின் கண்களில் படமாட்டோம். மாறு வேஷத்தையும் கலைக்கமாட்டோம் என்று உறுதி கூறி உன்னை அழைத்துவந்தேன்.
அந்த வாக்குறுதியை மீறி உன்னை எப்படி அனுப்புவேன் மகளே?"

"அம்மா, அக்பருக்கு என்றோ அளித்த வாக்குறுதியை எண்ணி வாடும் என் உள்ளத்தைப் பார்க்க மறுக்கிறாயே அம்மா.ஒருமுறை சலீமை நான் பார்த்தால்தான் என் இந்த உயிர் ஒரு நிலைக்கு வரும். இன்னும் சிலகாலம் நான் உயிரோடிருக்கநீ விரும்பினால் என்னைப் போகவிடு.இல்லையேல் அது இப்போதே பிரிந்துவிடும் அம்மா பிரிந்து விடும்."
                           
தாபம் தாங்காமல் அருகே இருந்த மரத்தில் முட்டிக் கொண்டு கண்ணீர் வடித்தாள் நாதிரா.

                                                               (அடுத்தபகுதி நாளை)











--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

புதன், 13 ஆகஸ்ட், 2014

121. தந்தை சொன்ன சொல்

     ஒரு ஊரில் கோவிந்தன் என்ற குடியானவன் ஒருவன் வாழ்ந்து வந்தான். தினமும் காலையிலேயே எழுந்து இறைவனைத் துதித்துவிட்டு வெகுதொலைவு சென்று மண் அள்ளி வருவான்.வீடு திரும்பி அந்தமன்னைப் பிசைந்து பானைகள் செய்து அவற்றை விற்றுப் பிழைத்து வந்தான். அவனுக்கு ஒரே மகன் மணிவண்ணன்.அவனோ எந்த வேலையோ அப்பாவுக்கு உதவியோ எதுவும் செய்யாது ஊரைச் சுற்றி வந்தான்.அதுமட்டுமல்லாமல் எது சொன்னாலும் அதற்கு எதிர்மறையான சொல்லையே சொல்வான் செய்யவும் செய்வான்.

       இவனைப் பற்றிய கவலையில் எப்போதும் வருத்தத்தோடு இருந்தான் கோவிந்தன்.ஒருநாள் மழைவரும்போல இருந்ததால் தன மகனை அழைத்தான்.
"மணிவண்ணா, இந்த மண்ணைக் காலால் மிதித்து பிசைந்து வைய்யடா."
"என்னால் முடியாது"
"குடியானவக் குடும்பத்திலே பிறந்தவனுக்கு இது கூடவா தெரியாது?"
"இல்லை. தெரியாது"
"எண்டா இப்படி எது சொன்னாலும் தெரியாது என்கிறாய்.தெரியும் என்று சொன்னால்தான் உன் வாழ்ககை சிறப்பாக இருக்குமே!அதையாவது செய்"
மணிவண்ணன் சிந்தித்தான்.அப்பாவுக்குத் திருப்தியைக் கொடுப்போமே என்று தோன்றிற்றோ என்னவோ "சரி அப்பா, இனி எல்லாம் தெரியும் என்றே சொல்கிறேன்"
அப்பாவுடன் சேர்ந்து உணவு உண்டுவிட்டு வழக்கம்போல ஊர்சுற்றக் கிளம்பினான் மணிவண்ணன்.
அவனைப் போல் இன்னும் இரண்டு நண்பர்கள் அவனுடன் காட்டுவெளியில் அமர்ந்தனர்.
                   சற்று நேரத்தில் அரசாங்க காவலர்கள் இரண்டு திருடர்களைத் துரத்திப் பிடித்தனர்.அவர்களோடு மனிவண்ணனையும் சேர்த்துப் பிடித்துச் சென்றனர்.மன்னன் முன் நிறுத்தினர்.
"அரசே, இவர்கள் திருடுவதற்குத் திட்டம் தீட்டிக் கொண்டிருந்தனர். நாங்கள் சந்தேகப் பட்டுத் திருடர்களைப் பிடித்து வந்துள்ளோம்.அவர்களுக்குப் பின்னாலிருந்த புதர்நிழலில் இவர் அமர்ந்திருந்தார் இவர்தான் சரியான சாட்சி " என்று மணிவண்ணனைக் கை காட்டினர் சேவகர்.
அரசர் மந்திரியிடம் விசாரிக்கச் சொன்னார்.
ஏனோ கலவரமடைந்திருந்த மந்திரி "உண்மையைச் சொல் இவர்கள் திட்டமிட்டது உனக்குத் தெரியுமா?"
மணிவண்ணன் தன அப்பாவின் முன் தான் செய்த முடிவு அவனுக்கு நினைவு வந்தது.சட்டென "எல்லாம் தெரியும்" என்றான்.
மந்திரி மேலும் கலவரமடைந்தார்.
"இவர்களின் முழுத் திட்டமும் தெரியுமா?"
"எல்லாம் தெரியும் "
"இவர்களைத் தூண்டியது யாரென  உனக்குத் தெரியுமா?"
"எல்லாம் தெரியும்"
உடனே அந்தத் திருடர்கள் தங்களின் ரகசியமெல்லாம் தெரிந்தவர் மன்னனிடம் உண்மையை கூறினால் தலை போய்  விடும் எனத் தெரிந்துகொண்டு தாங்களாகவே உண்மையை  ஒப்புக் கொண்டு மன்னிப்பும் கேட்டுவிட முடிவு செய்தனர்.
"மகாராஜா, அரண்மனை பொக்கிஷ அறையில் உள்ள பொக்கிஷத்தைக் கொள்ளையடித்து வரும்படி மந்திரி அவர்கள்தான் திட்டம் தீட்டி எங்களுக்குக் கட்டளையும் இட்டார். மந்திரியே துணை யிருக்கிறாரே எங்களுக்கு எந்த அச்சமும் இல்லையென்றுதான் நாங்களும் அரண்மனையில் திருட சம்மதித்தோம். நாங்கள் பேசிக் கொண்டதை மறைவில் இருந்து இவர் கேட்பார் என்று நாங்கள் நினைக்கவில்லை. எங்களை மன்னித்து விடுங்கள் மகாராஜா"
மன்னர் கோபத்தின் உச்சத்தில் இருந்தார்.
"யாரங்கே? இந்த மந்திரியைப் பிடித்து விலங்கிடுங்கள்."என்று கட்டளையிட்டவர் மணிவண்ணனைப் பார்த்து "இளைஞனே! இன்னும் இவர்களின் சதியைப் பற்றிய உண்மைகள் தெரியுமா ?' என்று கேட்டார்.
அப்போதும் எதுவும் புரியாத நிலையிலும் புன்னகையுடன் "எல்லாம் தெரியும்" என்று பதில் அளித்தான் மணிவண்ணன்.
உடனே கையில் விலங்குடன் நின்றிருந்த மந்திரி மன்னனின் காலில் விழுந்தார்.
"அரசே, என்னை மன்னித்துவிடுங்கள் அயல்நாட்டானின் ஆசை வார்த்தைகளுக்கு அடிமையாகி அவன் சொற்படி தங்களைக் கொலை செய்யவும் திட்டமிட்டேன்.என்னை மன்னியுங்கள் என்று கதறினார்."
மன்னர் அந்தத் திருடர்களையும் மந்திரியையும் சிறையில் அடைத்தார். மணிவண்ணனை நோக்கி
"இப்போதாவது உன் பெயர் என்ன, நீ யார்? என்பதை கூறு"என்றார்.
மணிவண்ணன் அப்போதுதான் தன்னைப் பற்றிய உணர்வு பெற்றான். திகைத்து நின்றிருந்த தன நண்பர்களிடம் என்ன ஆயிற்று என்றான் மெதுவாக.
"நன்றாக மாட்டிக் கொண்டோம்"என்றான் அந்த நண்பன் நடுங்கியபடியே
மணிவண்ணனோ சமாளித்து மன்னர் கேட்ட கேள்விக்கு பதில் கூறி பணிவுடன் நின்றான்.
"மணிவண்ணா, சரியான சமயத்தில் எனக்கு உதவி செய்தாய்.சூழ்ச்சியைத் தெரிந்துகொண்டு எம்மைக் காப்பாற்றி இந்த நாட்டுக்குப் பெரிதும் உதவி செய்துள்ளாய்.அதற்காக உனக்கு பதவி தரப் போகிறேன்.உனக்கு அரசியல் சட்டங்கள் போர்முறை முதலியன தெரியுமல்லவா?"
வழக்கம்போல தெரியுமா என்றால் தெரியும் என்று சொல்வதாய் முடிவு செய்து கொண்டவனல்லவா?எனவே எல்லாம் தெரியும் என்று வழக்கமான பதிலையே கூறினான்.
 மன்னர் மனம் மகிழ்ந்து "மணிவண்ணா, இனி இந்த நாட்டின் மந்திரி நீதான். எனக்கும் இந்த நாட்டுக்கும் நீதான் இனி துணையாக இருக்க வேண்டும்."என்றவர் மந்திரிக்கான தலைப்பாகையைத் தலையில் சூட்டினார்.
சபை கலைந்தது.
மணிவண்ணன் ஓடிவந்தான் குடிசைக்கு.தந்தையின் காலில் பணிந்தான் அனைத்தையும் அறிந்த கோவிந்தன் மிகவும் மகிழ்ந்தான்.இனி மகன் பொறுப்பானவனாகிவிடுவான் என்பதே அந்த மகிழ்ச்சிக்குக் காரணம். மணிவண்ணன் தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதை உணர்ந்து கொண்டான்.
       அன்று முதலே தன பதவிக்கேற்ற்படி தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ள அனைத்தையும் கற்கத் தொடங்கினான்.சிறந்த மந்திரி எனவும் சிறந்த மகன் எனவும் புகழோடு வாழ்ந்தான்.



ருக்மணி சேஷசாயி 


--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

புதன், 30 ஜூலை, 2014

பழமொழிக் கதைகள்.-கெடுவான் கேடு நினைப்பான்.

                                                ஆத்தூர் என்ற ஊரில் ஒரு பள்ளி இருந்தது. சிறு 

கிராமமாக இருப்பதால் அங்கு உள்ள பள்ளியில் எட்டாவது வரை 

மட்டுமே இருந்தது.அந்தப் பள்ளியில்தான் சேதுவும் தமிழும் படித்து 

வந்தனர்.தமிழ் மிகவும் பணிவும் நல்ல பண்பும் மிக்கவனாகத் 

திகழ்ந்தான்.ஆனால் சேதுவோ அவனுக்கு நேர் எதிர்  பண்புகள் 

உள்ளவனாக இருந்தான்.
                                     எப்போதும் ஆத்திரம் அவசரம் கொண்டவனாகவும் சுயநலமிக்கவனாகவும் திகழ்ந்தான்.தன சுய நலத்திற்காகயாரையும் அவன் எதிர்க்கத் தயங்கமாட்டான்.அவனைக்   கண்டால் தமிழுக்கு மட்டுமல்ல பல மாணவர்களுக்குப் பயம்.ஆனால்  தமிழைக் கண்டால் இளக்காரமாக நடத்துவார்கள். அவன் யாரையும்  கடிந்து கூடப் பேசமாட்டான். மிகவும் அன்பாகப் பேசுவான்.

                                    ஒருமுறை நாட்டின் குடியரசு தினம் வந்தது.
அந்த விழாவை மிகவும் சிறப்பாகக் கொண்டாடவேண்டும் என்று அவ்வூர் பெரிய மனிதர்கள் முடிவெடுத்தார்கள்.அவ்வூரின் பெரிய தனவந்தர் குடியரசு தினத்தன்று பிள்ளைகளுக்குப் பரிசு கொடுப்பதாய் அறிவித்தார்.எல்லோரும் ஒரே ஆவலாக இருந்தனர்.என்ன பரிசு கொடுப்பார்? இத்தனை பேருக்கும் அவர் என்ன  பரிசு கொடுக்க முடியும்?என்ற சந்தேகத்தோடு இதுவாக இருக்குமா,அதுவாக இருக்குமா என்றெல்லாம் பேசிக்கொண்டே ஒரு வாரத்தை ஓட்டினர்.
                                     கடைசியாக அந்தநாளும வந்தது        அதிகாலையிலேயே எழுந்து குளித்து முதல்நாள் துவைத்து வைத்த சீருடையைப் போட்டுக் கொண்டு பள்ளிக்கு வந்து முதலாவதாக நின்றுகொண்டான் தமிழ்.அவனுக்குப் பின்னால் ஒவ்வொருவராக வரத் தொடங்கினர்.ஒருவர்பின் ஒருவராக நிற்கத் தொடங்கினர்.
                                      தலைவர் வந்து கொடியேற்றியபின் அனைவரையும் வரிசையாக நிற்கச் சொன்னார் தலைமை ஆசிரியர்.
அனைவரும் வரிசையாக நிற்க பணியாள்  பெரிய மூட்டையைக் கொண்டுவந்து தலைவர் அருகே வைத்தான்.அப்போது எங்கிருந்தோ உள்ளேபுகுந்த சேது அதிகாரமாக முதலாவதாக நின்று கொண்டிருந்த தமிழை வரிசையை விட்டுத் தள்ளிவிட்டு தான் போய்  நின்று கொண்டான்.அடுத்தடுத்து அவனை நிற்க விடாமல் எல்லோரும் அவனைத் தள்ளி விட்டனர்.தமிழுக்கு இப்போது வரிசையின் கடைசியில்தான் இடம் கிடைத்தது.
                                                  தலைவர் இதைக் கவனித்துக் கொண்டிருந்தார்.இவர்களுக்குப் புத்தி புகட்ட ஒரு வழியைக் கண்டார்.
அவர் பேசிவிட்டு பரிசு கொடுக்க எண்ணினார்."மாணவ மணிகளே 
உங்களுக்கெல்லாம் பரிசு தரவந்துள்ளேன் எப்போதும் எல்லோரும் வரிசையாகத்தான் பரிசு கொடுப்பார்கள் நானும் வரிசையாகத்தான் பரிசளிக்கப் போகிறேன்."என்றவுடன் சேது தனக்குத் தான் முதலில் பரிசு கிடைக்கும் என்று பெருமையாக நின்றான்.தலைவர் தொடர்ந்து பேசினார்."ஆனால் நன் முதலிலிருந்து தரமாட்டேன் கடைசியிலிருந்து பரிசு தரப் போகிறேன்.கடைசிப் பையன் யாரோ வரட்டும்."
தமிழ் எதிர்பாராத அழைப்பால் திகைத்தவன் பின் அவரிடம் சென்று நன்றி ஐயா என்று சொல்லிவிட்டுப் பரிசுடன் சென்றான்.
                                    கடைசியில் கூடை காலியாகிக் கொண்டே வந்தது.சேதுவின் முறை வந்தபோது பெட்டி காலியாகிவிட்டது என்று சொல்லி பரிசு வரும் வரை சற்று நேரம் காத்திரு என்று சொல்லிச் சென்று விட்டார் தலைவர்.தன பரிசுக்காகத் தனிமையில் வெகுநேரம் காத்திருந்தான் சேது. ஒருவழியாக அந்தப் பணியாள்  ஒரு பரிசுப் பொட்டனத்தைத் தந்தான். தலைவர் கையால் வாங்காமல் பணியாள்  கையால் வாங்குகிறோமே என்று எண்ணி நொந்தபடியே சென்றான் சேது.அப்போது அவன் மனம் இடித்தது. "தமிழுக்கு நீ கெட்டது  நினைத்தாய். உனக்கே அந்தக் கேடு வந்தது.இதைத்தான் அந்தக் காலத்தில் "கெடுவான் கேடு நினைப்பான்"என்று சொல்லிவைத்தார்கள் போலும். இனியேனும் யாருக்கும் கெடுதல் செய்யாமல் இருக்கப் பழகு "என்றதை மனவருத்தத்துடன் கேட்டுக் கொண்டான் மனம் திருந்திய  சேது.

















ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

திங்கள், 12 மே, 2014

ஒரு அன்னையின் உள்ளம்.

இன்று அன்னையர் தினம். இந்த நாளில் ஒரு அன்னையின் மனம் எத்தகையது என்பதை  இதிகாச நிகழ்ச்சியின் மூலம் காணலாம்.
               
பாரதப் போரின்  முடிவுநாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது.துரியோதனன் தான் தோற்பது உறுதி என முடிவு செய்து விட்டான். வருத்தமும் அவமானமும் கொண்டு கவலையே உருவாகக் காட்சியளிக்கிறான்.அப்போது துரோணரின் மகன் அஸ்வத்தாமன் அங்கு வருகிறான்.கவலையோடிருக்கும் தன மன்னனைப் பார்க்கிறான். கனிவோடு அருகே வந்து பேசுகிறான்.
"மன்னா,  கலங்கவேண்டாம். அந்தப் பாண்டவப் பதர்கள் வெற்றிக் களிப்போடு இருப்பார்கள். அவர்களைக் கண்டதுண்டமாக என் வாளுக்கு இரையாக்கிவிட்டு வருகிறேன்." என்றான்.

"உன்னால் முடியுமா?"

"முடித்துவிட்டு வந்து  பேசுகிறேன்."

நள்ளிரவு நேரம். கையில் வாளுடன் அஸ்வத்தாமன் அந்தக் கூடாரத்துள் நுழைந்தான் பாண்டவர்களைத் தேடிக் கொண்டே வந்தான்.பஞ்சபாண்டவருடன் ஆறாவதாக அங்கு சயனித்திருந்த கிருஷ்ணனுக்கு திடீரென வியர்த்தது.அவன் தருமனை எழுப்பினான். 

"தர்மா, உன் சகோதரரை எழுப்பு. நாம்  சற்று வெளியே சென்று படுப்போம். இந்த இடம் காற்றே இல்லாமல் மிகவும் அசௌகரியமாக இருக்கிறது.
வா, சீக்கிரம்." அவன் பதிலுக்கு காத்திருக்காமல் வேகமாக பின்பக்கம் நோக்கி நடக்கத் தொடங்கினான் கண்ணன். தம்பிமாரை எழுப்பிய தருமன் அவர்களை அழைத்துக் கொண்டு கிருஷ்ணனைப் பின் தொடர்ந்தான்.வேறு வழியாக அவர்களை வெகு தூரம் அழைத்துச் சென்ற கண்ணன், இங்கேயே இரவினைக் கழிப்போம். இது சற்று சுகமான தூக்கத்தைத் தரும் இடமாக இருக்கிறது. என்று சொன்னவாறே கொட்டாவி விட்டபடி அமர்ந்தான். அவனைத் தொடர்ந்து அனைவரும் அங்கேயே படுத்துக் கொண்டனர்.

பொழுது புலர்ந்தது.அஸ்வத்தாமன் குருதி படிந்த கத்தியுடன் துரியோதனன் முன் வெற்றிக்  களிப்போடு நின்றான்.
மகிழ்ச்சியுடன் அவனை வரவேற்ற துரியோதனன் பாண்டவர் மடிந்தார்கள் என அட்டகாசமாகச் சிரித்தான்.
"அஸ்வத்தாமா, இது எப்படி நடந்தது சொல்.அனைவரையும் எப்படிக் கொன்றாய்?அந்த உன் வீரக் கதையைச் சொல் என் காது குளிரக் கேட்கிறேன்."
 
"மன்னா, நான் அவர்களின் கூடாரத்துள் புகுந்தபோது அறையில் யாருமில்லை ஆனால் அடுத்த அறையில் படுத்திருந்த இளம் பாண்டவர்கள் அனைவரையும் கொன்றுவிட்டேன்.  உபபாண்டவர்களைக் கொன்று பாண்டவ வம்சமே இல்லாமல் செய்து விட்டேன்." என மகிழ்வுடன் வாளைத் தூக்கிக் காட்டினான்.

துரியோதனனுக்கு தூக்கிவாரிப் போட்டது."என்ன, இளம் பாண்டவர்களைக் கொன்று விட்டாயா?அவர்கள் என்ன பாவம் செய்தார்கள் அவசரப்பட்டு இப்படி ஒரு காரியத்தைச் செய்து விட்டாயே ! என் கண் முன் நில்லாதே போ "என்று வெறுப்புடனும் வருத்தத்துடனும் கூறிவிட்டு அகன்றான்.

அதேசமயம் குழந்தைகளைப் பார்க்க வந்த பாஞ்சாலி கை வேறு கால் வேறாகக் கிடக்கும் தன ஐந்து புத்திரர்களையும் பார்த்துக் கதறினாள்.அவளைத் தேற்ற வகை தெரியாது அனைவரும் துயரமே வடிவாக நின்றனர்.அப்போது கண்ணன், அவளுக்கு சமாதானம் கூறினான். 
"அம்மா திரௌபதி, இந்தக் காரியத்தைச் செய்தவன் அஸ்வத்தாமன்.அவனை உன் முன்னே நிறுத்தி உன் கண் முன்னாலேயே அவன் தலையை வெட்டும் வீரன் அர்ச்சுனன் இருக்க நீ கலங்காதே."

 இந்தச் சொல்லைக் கேட்டு அர்ச்சுனன் கோபாவேசத்தோடு,"கண்ணா, அந்த பேடியைக்  கொன்று அவன் தலையைக் கொண்டு வந்து திரௌபதியின்  காலடியில் வீசுவேன் ஆனால் உன் சொல்லுக்காக அவனை உயிருடன் பிடித்து வந்து இங்கு நிறுத்துவேன்.அனைவரின் முன்னும் அவனுக்குத் தண்டனை தருவேன்." என்று கூறியவன் தன் காண்டீபத்துடன் புறப்பட்டான்.

அர்ச்சுனனின் வீரத்திற்கு முன் அஸ்வத்தாமன் ஒரு பொருட்டா! விரைவிலேயே அர்ச்சுனனுக்கு அஸ்வத்தாமன் அடிமையானான். குருதி கொப்பளிக்கும் உடலுடன்  அவனை திரௌபதியின் முன் நிறுத்தினான் அர்ச்சுனன்.
"இப்போது சொல் பாஞ்சாலி. இவனையும் உன் புத்திரர்களைப் போலவே கண்ட துண்டமாக வெட்டட்டுமா, அல்லது தலையைத் தனியே எடுத்து வீசட்டுமா?"
பாதி உயிர் போன நிலையில் நின்றிருந்த அஸ்வத்தாமனைப் பார்த்தாள்  திரௌபதி. அப்போது அவளுக்கு அஸ்வத்தாமனின் உருவம் தெரியவில்லை.அவனைப் பெற்ற  தாயின் உருவம்தான் கண்ணுக்குத் தெரிந்தது. தன துயரத்தை அடக்கிக் கொண்டு கூறினாள் 
"இவனைக் கொல்வதால் மாண்டுபோன என் மக்கள் மீண்டும் வருவார்களா?பெற்ற பிள்ளையை இழந்த ஒரு தாயின் உள்ளமும் வயிறும் எப்படித் துடிக்கும் என்பதை நானறிந்தபின்னும் இன்னொரு தாய்க்கு அத்தகைய நிலையைத் தர நான் விரும்பவில்லை. இவனை விட்டு விடுங்கள் இவன் செய்த பிழைக்கு இவன் தாய்க்கு  ஏன் தண்டனை தரவேண்டும்? 

அவள் சொல்லுக்குக் கட்டுப்பட்ட அர்ச்சுனன் அச்வத்தாமனின் தலையில் இருந்த மணியைப் பிடித்து அறுத்தான் தலைமுடியை அலங்கோலப் படுத்தி விரட்டிவிட்டான்.ஒரு தாயின் அன்பு உள்ளத்தால் அஸ்வத்தாமனின் உயிர் அன்று பிழைத்தது.

ஒரு அன்புத்தாயின் உயர்ந்த உள்ளத்தை இதிகாசம் நமக்குப்  படம் பிடித்துக்  காட்டுகிறது.









































-- 
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

வெள்ளி, 14 மார்ச், 2014

118.ஸ்ரீ சேனா நாவிதர்.

ஸ்ரீ சேனா நாவிதர்.
 
         இறை பக்தி செய்வதற்கு குலம் ஒரு தடையல்ல என்பதற்கு சேனா என்பவரது வாழ்க்கையே ஒரு எடுத்துக் காட்டு. தாழ்ந்த குலத்தில் பிறந்தவராக இருந்தபோதும் பாண்டுரங்கன் மீது கொண்ட மிகுந்த அன்பினால் உயர்ந்த நிலையை அடைந்த சேனாவின்  வரலாறு நமக்கெல்லாம் ஒரு பாடமாகவே அமைந்துள்ளது.
             வடநாட்டில் அவந்தி என்று ஒரு நகரம் இருந்தது.அந்த நகரத்தில் சேனா என்ற பெயருடைய நாவிதர் ஒருவர் வாழ்ந்து வந்தார்.இவர் தெய்வ பக்தியும் ஒழுக்கமும் நிறைந்தவர். குலத்தொழிலை நேர்மையாகச் செய்து வந்ததால் அரண்மனையில் பணிபுரியும் வாய்ப்பினைப்  பெற்றார்.
            ஒரு நாள் அதிகாலை நேரம் காலைக்கடன் முடித்த சேனா இறைவழிபாட்டில் தன்னை மறந்து லயித்திருந்தார்.தியானத்திலிருந்த சேனா இவ்வுலகையே மறந்து பாண்டுரங்கனோடு  இணைந்திருந்தார். அதேசமயம் அரண்மனையிலிருந்து  அவசரமாய் மன்னர் அழைப்பதாக காவலர் வந்து அழைத்தனர்.சேனாவை  எழுப்புவது கடினம் என அறிந்திருந்த அவர் மனைவி அவர் வீட்டிலில்லை வெளியே சென்றுள்ளார் எனத் தெரிவித்தாள்.
              ஆனால் அவர்மீது பொறாமை கொண்ட சிலர் அவன் வேண்டுமென்றே மன்னரை அலட்சியப் படுத்துகிறான். வீட்டில் இருந்துகொண்டே இல்லையென்று பொய் சொல்கிறான் என்று சொல்லவே மன்னர் கடுங்கோபம் கொண்டார்.
"அவன் வீட்டிலிருந்தால் அவன் கைகாலைக் கட்டிக் கடலிலே போடுங்கள்"
என்று உத்தரவிட்டான். அதே சமயம் சேனா தன்  கையில் அடைப்பையோடு வந்து நின்றான். அவனது பணிவையும் அமைதியான முகத்தையும் பார்த்த மன்னர் கோபம் குறைந்து தனக்கு முடிதிருத்தம்   செய்யுமாறு கட்டளையிட்டார்.
                 சேனாவும் அவர் முன் பணிவுடன் அமர்ந்து தன முன் வைக்கப்பட்ட தங்கக் கிண்ணத்திலிருந்த தைலத்தைத் தொட்டு மன்னரின் தலையில் தடவினான்.சேனாவின் கை தன்தலையில் பட்ட மாத்திரத்தில் ஏதோ சுகம் தன்னை மறந்த சுகானுபவம் ஏற்பட்டது மன்னனுக்கு.
 சேனாவின் முன்னே குனிந்து அமர்ந்திருந்த மன்னன் தன்  முன் வைக்கப் பட்டிருந்த பொற்கிண்ணத்தினுள் பார்த்தான். 
என்னே அதிசயம். ஆச்சரிய ஆனந்தம் உள்ளமெங்கும் பரவியது மன்னனுக்கு. பேச நா  எழவில்லை. தன்னை மறந்தான் தன்னிலையும் மறந்தான்.
கிண்ணத்திலிருந்த தைலத்தில்  அந்த பாண்டுரங்கன் திவ்யமங்கள ஸ்வரூபனாக சர்வாபரண  பூஷிதனாக  தரிசனம் தந்தான். தன்னிலை மறந்த 
மன்னன் மயக்கத்துடனேயே எழுந்து கைநிறைய பொற்காசுகளை அள்ளி சேனாவின் கையில் கொடுத்துவிட்டு உள்ளே சென்றான்.
"இங்கேயே இரு இதோ வருகிறேன் "என்று கூறிச் சென்ற மன்னன்ஸ்நானம் செய்தபின்  வந்து பார்த்தபோது அங்கே சேனாவைக் காணவில்லை.ஆனால்  மீண்டும் சேனாவைப் பார்க்கவேண்டும் தைலத்தில் பார்த்த உருவத்தைக் காணவேண்டும் என்னும் ஆவல் அதிகரித்தது.
சேவகரை அழைத்து "சேனாவை அழைத்து வாருங்கள்."என்று கட்டளையிட்டான்.என்றுமில்லாமல் இன்று ஒரு நாவிதனுக்காக மன்னன் தவிப்பது அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது. 
       போலிச் சேனா நாவிதராக வந்த பாண்டுரங்கன் பொற்காசுகளை சேனாவின் இல்லத்தில் போட்டுவிட்டு மறைந்தான்.               
மூன்றாம் முறையாக சேவகர் தன்னைத் தேடிவந்ததை அறிந்து சேனா மிகவும் அச்சத்துடன் தன அடைப்பையை எடுத்துக் கொண்டு அரண்மனையை அடைந்தான்.
அவரைக் கண்டவுடன் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த மன்னன் ஓடிவந்து  
அவன் திருவடிகளில் விழுந்தான்."மகாப்பிரபுவே தங்களைக் கேவலம் நாவிதராக மதித்து  அபசாரம் செய்து விட்டேன்.தயவு செய்து இன்று காலை பொற்கிண்ணத்தில் எனக்கு  அளித்த காட்சியை மீண்டும் காட்டி அருள் செய்யுங்கள்."என்று வேண்டி நின்றான்.
விஷயம் என்னவென்று அறியாத சேனா தவித்தான். பின்னர் மன்னன் காலையில் நிகழ்ந்தவற்றைக் கூறவே சேனாவுக்கு விஷயம் விளங்கிவிட்டது.
துக்கத்தால் அவர் உள்ளம் துடித்தது."என்மேலுள்ள அன்பினால் நீயே அடைப்பத்தைத் தூக்கிவந்து முடிதிருத்தும் இழிதொழிலைச் செய்தாயா?பாண்டுரங்கா ,"எனக்கூறி மூர்ச்சித்து விழுந்தான்.அவனது புலம்பலைக் கேட்டு காலையில் வந்தவன் பாண்டுரங்கனே என்று அறிந்து மன்னன் புளகாங்கிதமடைந்தான்.
 சேனாவின் மூர்ச்சையைத் தெளிவித்து அவனை அமரவைத்து அவனிடம்,
"சுவாமி,தங்களின் கிருபா கடாக்ஷத்தினால்தான் பகவானுடைய திவ்யதரிசனம் இந்த எளியேனுக்குக் கிடைத்தது.அவர் திருக்கரங்களால் தீண்டப் பெரும் பாக்யமும் கிடைத்தது.இனி தாங்களே என் குரு."
என்று சேனாவை வணங்கினான் மன்னன்.
அதுவரை அரசனையும் சேனாவையும் ஏளனமாகப் பார்த்திருந்த மக்களும் மந்திரி பிரதானிகளும் சேனாவின் பெருமையை உணர்ந்தனர்.
மன்னரோடு மற்றையோரும்சேனாவின் சீடர்களாயினர்.அனைவரும்  இறைப்பணி செய்து இறைபக்தியில் மூழ்கினர்.
எளியேனாயினும் அன்புக்குக் கட்டுப் பட்டு இறைவனே இறங்கிவருமளவு சேனா இறைவனது பக்தியில் மூழ்கியுள்ளதை அறியும்போது இறைவனுக்கு அன்புதான் முக்கியமே தவிர உயர்ந்தவன்  தாழ்ந்தவன்  என்பது பக்திக்கு  இல்லை என்பதைப் புரிந்து கொள்வோம்.
இறைவன் என்ற சொல்லுக்கு  அன்பு பக்தி என்பதுதான் பொருள்.











திங்கள், 17 பிப்ரவரி, 2014

மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்.

117. மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்.
                             
                                              மங்களபுரி மன்னன் சூரசேனன் நாட்டு மக்கள் மீது மிகுந்த அன்பு காட்டி நாட்டை சிறப்பாக ஆண்டு வந்தான்.மக்களும்  தங்கள் மன்னனை உயிருக்கும் மேலாக  எண்ணி வாழ்ந்து  வந்தனர். செண்பகபுரி மன்னன் சிவபாலன் சூரசேனன் மீது பொறாமை கொண்டு அவன்மீது படையெடுத்தான்.ஆனால் சூரசேனனை வெல்ல முடியாததால் தோற்று ஓடினான்.
அடிக்கடி படையெடுத்து தொல்லை கொடுத்துவந்த சிவபாலனை அடக்க எண்ணிய சூரசேனன் அவன் மீது படையெடுத்தான்.ஆனால்சரியான  பயிற்சியும்  படைபலமும் இல்லாததால் தோற்று நாட்டை விட்டு காட்டுக்குள் ஓடி மறைந்து வாழ்ந்தான்.ஆனாலும் அடிக்கடி வீரர்களைத் திரட்டி
செண்பகபுரியுடன் போரிட்டு வந்தான்.எப்படியாவது   தன தாய்நாட்டை மீட்டுவிடவேண்டும் என்ற எண்ணத்துடன் படைதிரட்டிவந்தான் சூரசேனன்.
ஆனால் ஒவ்வொரு முறையும் தோல்வியைத் தழுவி ஓடினான்.                                                   ஒருநாள்  களைப்புடன் காட்டுக்குள் நடந்து கொண்டிருந்தான் சூரசேனன்.தனக்குள் எண்ணிக் கொண்டே நடந்தான்.
" பல  முறை போராடியும் சிவபாலனை வெல்ல இயலவில்லையே.என் படையும் பெரிதாகத்தானே இருக்கிறது. என்ன காரணம் புரியவில்லையே."
               என்று    நடந்தபடி சிந்தித்தவனுக்கு  காட்டுக்குள் வெகு தொலைவு வந்தது கூடத் தெரியவில்லை. களைப்புடன் ஒரு பாறையில் அமர்ந்தான்.பசிவேறு வயிற்றைக் கிள்ளியது.சற்றுத் தொலைவில் ஒரு குடிசை வீடு தென்பட்டது.
                 ஆவலோடு அந்த வீட்டுக்கு சென்று சற்றுத் தொலைவில் நின்றபடி "அம்மா" என அழைத்தான்.அந்த வீட்டுக்குள்ளிருந்து  எழுபது வயதுள்ள ஒரு மாது வெளியே வந்தார்.அவரிடம்
"அம்மா.மிகுந்த களைப்பாக இருக்கிறேன். எனக்குப் பசிக்கிறது ஏதேனும் கொடுத்து உதவினால்  மிகுந்த நன்றியுள்ளவனாக இருப்பேன்."
என்று சொல்லி அங்கேயே ஒரு மரத்தடியில் அமர்ந்து கொண்டான்.
"ஐயோ பாவம்! இரப்பா வருகிறேன்.ஏழையின் வீட்டில் களிதான் இருக்கிறது.
அதையே தருகிறேன்.தின்று பசியாறு."என்றவள் உள்ளே சென்று ஒரு தட்டில்  சூடானகளியை வைத்து அதில் சூடான குழம்பையும் ஊற்றிக் கொண்டு வந்து கொடுத்தாள்.
              நல்ல பசியோடிருந்த சூரசேனன் அதை வாங்கி தன ஐந்து விரல்களாலும் களி உருண்டையை அழுத்தினான். நல்ல சூடாக இருந்த களி  அவன் கையை நன்கு சுட்டு விட்டது "ஹா! ஹா!" வெனத் தன கையை உதறியபடி விரல்களை வாயிலும் வைத்துக் கொண்டான்.

              இதைப் பார்த்து அந்தப் பாட்டி சிரித்தாள். அத்துடன்
"ஏனப்பா நீ களி  தின்பது எங்கள் மன்னன் சூரசேனர் படையெடுப்பது போல் இருக்கிறது."
இதைக் கேட்டு சூரசேனன் ,"என்னம்மா சொல்கிறீர்கள்?நீங்கள் சொல்வது புரியவில்லையே." என்றான் ஆவலாக.
" பின்னே என்னப்பா, களியை அதைச் சுற்றிலும் ஓரமாகவே தின்று வந்தால் குறைந்து கொண்டே வரும் முழுவதும் ஆறிக்கொண்டே வரும்.சீக்கிரம் சாப்பிட்டு முடிக்கலாம்,அதைவிட்டு நடுவில் கைவைத்தால் சுடாதா?"
என்றாள்  சிரித்தவாறே.
               
"இதற்கும் மன்னரின் படையெடுப்பிற்கும் என்ன சம்பந்தம்?"
          
  "புரியவில்லையா, படையெடுத்து எல்லையில் இருக்கும் நாடுகளைப் பிடித்தபின்னரே தலைநகரில் நுழையவேண்டும் அப்போதுதான் பகைவரின் படைபலம் குறையும் நமக்கும் வெற்றி கிடைக்கும்." என்றாள்  புன்னகையுடன்.

             பாதி தின்றவுடன் களியை அப்படியே வைத்த சூரசேனன் உடனே புறப்பட்டான்.         
"தாயே, தங்கள் அறிவுரைக்கு நன்றி. இப்போதே செல்கிறேன் நீங்கள் சொல்லியபடியே போராடி வெற்றி வாகை சூடி உங்களை சந்திக்கிறேன்
.வருகிறேன்."
அவளை வணங்கி விடைபெற்றுப் புறப்பட்டான்.

ஒரு சிறு படையுடனேயே தலைநகரின் சுற்றியிருந்த கிராமங்களைப் பிடித்த சூரசேனன் விரைவில் சிவபாலனின் தலைநகரையும் கைப்பற்றினான்.தனக்குக் கப்பம் கட்டச் செய்து தன நாட்டில் மீண்டும் ஆட்சியில் அமர்ந்தான்.
உடனே காட்டுக்குச் சென்று அந்த மாதரசியை அழைத்து வரச்சொல்லி ஆணையிட்டான்.அவளுக்குப் பொன்னும் பொருளும் தந்து தன மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டான்.

மூத்தோர் சொன்ன சொல் என்றும் பயன்படக்கூடியது என்பதை நாம் என்றும் மறவாதிருக்க வேண்டும்.


















 

செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

மீண்டும் ஆரம்பம்.

அன்பு வாசகர்களுக்கு, வணக்கம்.இடமாற்றம், கண்களின் அறுவை சிகிச்சை போன்ற காரணங்களால் கடந்த ஒரு மாதமாக கணினியைப் பயன்படுத்த இயலவில்லை.இனி மீண்டும் ஆரம்பமாகிவிட்டது சுட்டிக்களுக்கான கதைகள்.தொடர்ந்து படித்து தங்களின் மேலான பின்னூட்டத்தை இட வேண்டுகிறேன்.தங்கள் இல்லத்திலுள்ள சுட்டிகளுக்கு இந்தக் கதைகளை நீங்கள்  சொல்ல வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்.

--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayeerruk
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

116-திருக்குறள் கதைகள்.இன்னா செய்தாரை...

குமாரபுரி மன்னனுக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தனர்.மூத்தவன்குமாரசிம்மன்.இளையவன் அமரசிம்மன்.
இருவருமே வீரத்திலும் கல்வி கேள்விகளிலும் சிறந்து விளங்கினர்.அத்துடன் இருவருமே மிகவும் ஒற்றுமையுடனும் பாசத்துடனும் ஒருவருக்கொருவர் அன்புடனும்  வாழ்ந்து வந்தனர்.
இளவரசர்கள் இருவரும் காளையர்களாக வளர்ந்து நின்றனர்.மன்னனும் வயது முதிர்ச்சியால் தளர்ச்சியடைந்தான்.சீக்கிரமே தன மூத்த மகனுக்கு முடிசூட்டிவிட முடிவு செய்தான்.
அந்த நாட்டுமந்திரியின் மகன் மகேந்திரன் சகோதரர்கள் ஒற்றுமையாக இருப்பதை விரும்பாமல் எப்படியாவது இவர்களுக்குள் பகையை மூட்டிவிட வேண்டும் என்று முடிவு செய்தான்.
சொல்வார் பேச்சைக் கேட்கும் எண்ணம் அமரசிம்மனுக்கு இருக்கிறது எனத் தெரிந்து கொண்டு அவனிடம் பேச்சுக் கொடுத்தான்.
மூத்தவனுக்கு முடிசூட்டிவிட்டால் இளையவன் அடிமைதான் என்பது போன்ற அச்சத்தையும்உண்டாக்கி  அவனை ஒழிக்க குமாரசிம்மன் திட்டமிடுவதாகவும் பலப்பல சொல்லி மனத்தைக் கலைத்தான்.எடுப்பார் கைப் பிள்ளையாக இருந்தஅமரசிம்மன் இதை நம்பி  தன் அண்ணனை சந்தேகத்துடனேயே பார்க்க ஆரம்பித்தான்.
     மகேந்திரனின் இந்த சூழ்ச்சியை அறியாத குமாரசிம்மனும் தம்பியிடம் பாசத்துடனேயே பழகி வந்தான். நாட்கள் செல்லச் செல்ல மகேந்திரனின் சூழ்ச்சிக்கு முற்றிலுமாக அடிமையாகிவிட்டான் அமரசிம்மன்.தன்  அண்ணன் தன்னை எப்போது கொல்ல முயற்சிப்பானோ  என்று அச்சப்பட ஆரம்பித்தான். ஆனால் உள்ளத்தில் கள்ளமில்லாத குமாரசிம்மனோ  அவனிடம் அன்போடு பழகிவந்தான்.
                 மன்னரின் குலவழக்கப்படி சகோதரர் இருவரையும்  காட்டில் வாழும் கொடிய விலங்குகளை வேட்டையாடி வரும்படி மன்னன் ஆணை பிறப்பித்தான். 
அந்த ஆணையை ஏற்ற குமாரசிம்மனும் அமரசிம்மனும் காட்டுக்கு வேட்டையாட புறப்பட்டனர்.
                 அமரசிம்மன்  மகேந்திரனின் வஞ்சகச் சொற்களை எண்ணிக் கொண்டே வந்தான். அண்ணன் தன்னை எப்போது கொல்வானோ என்று சற்று கவனத்துடனேயே நடந்தான்.
மகேந்திரன் அந்த அளவுக்கு அவன் மனதில்வஞ்சகத்தை          ஆழமாக விதைத்திருந்தான்.
                                                                                                                இருவரும் மாலைவரை வேட்டையாடிக் களைத்தனர்.             பசியுடனும்  களைப்புடனும்   தங்கள்  கூடாரத்தை  நோக்கித் திரும்பினர்.

                   லேசாக இருள் கவியும் நேரமும் வந்தது அமரசிம்மன் எதுவும் பேசாமலேயே நடந்தான்.தம்பியை அன்புடன் திரும்பிப் பார்த்தவண்ணம் நடந்த குமாரசிம்மன் அருகே இருந்த நீரிருக்கும் புதைகுழியில் விழுந்தான்.சற்றே அதிர்ந்த அமரசிம்மன் அவனது அபயக் குரலைக் கவனியாதவன் போல தனது இருப்பிடத்தை நாடி வேகமாக நடந்தான் அமரசிம்மன்.அண்ணன்  இறந்திருப்பான் என முடிவு செய்தான்.அதே சமயம் காற்று பலமாக அடித்தது
வலுவற்ற மரங்கள்  முறிந்துவிழுந்தன.அதிர்ஷ்டவசமாக ஒரு மரம் முறிந்து புதைகுழியில் அகப்பட்டிருந்த குமாரசிம்மனின் அருகில் விழுந்தது. அதைப் பிடித்துக் கொண்டு கரையேறினான்.
                     அண்ணன் மூழ்கியிருப்பான் இனி வரமாட்டான் என முடிவு செய்துகொண்டு நடந்து கொண்டிருந்தான் அமரசிம்மன்.சட்டென அவன் உணர்வு பெற்று நின்று கவனித்தபோது தன முன் பசியோடு உறுமியபடி ஒரு புலி இவன் வருகையை எதிர்பார்த்து நிற்பதுபோல் நின்றிருந்தது. வேட்டையாடிக் களைத்திருந்த அமரசிம்மன் புலியுடன் சண்டை போட சக்தியற்றிருந்தான்.பயத்தால் நடுங்கியபடி நின்றிருந்தவன் தான் புலிக்கு இரையாவது உறுதி என முடிவு செய்தான்.அப்போதுதான் செய்துவிட்டு வந்த தவறு புரிந்தது. தான் செய்த பாவத்திற்கு இறைவனிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டான்.
பசியோடு உறுமியபடி பாய்ந்த புலியைப் பார்த்துக் கண்களை மூடிக்கொண்டான்.ஆனால் என்ன ஆச்சரியம்! புலி தன மீது இன்னும் பாயவில்லையே ஏன்?தன கண்களைத் திறந்து பார்த்த அமரசிம்மன் தன முன் நடந்த காட்சியைக் கண்டு வாயடைத்து நின்றான். உடல்முழுதும் சேறாகியிருந்த உடலோடு குமாரசிம்மன் புலியின் வாயைப் பிடித்துக் கொண்டு நின்றான். அரைமணி நேரப் போராட்டத்திற்குப் பின் புலியைத் தன குத்துவாளுக்கு இரையாக்கி விட்டு அருகே சோர்ந்து விழுந்தான்.
                       ஆனாலும் தம்பியைக் காப்பாற்றி விட்டோம் என்ற திருப்தி அவன் முகத்தில் புன்னகையாகத் தெரிந்தது.
அவன் கரங்களைப் பிடித்துக் கொண்டு கதறி அழுதான் அமரசிம்மன்.
"அண்ணா என்னை மன்னித்து விடுங்கள்.மகேந்திரனின் மதி கெட்ட சொற்களால் என் மதியை நான் இழந்து விட்டேன்.தங்களைத் தவறாக நினைத்துவிட்டேன்.என்னை மன்னித்துவிடுங்கள்."கதறி அழுத தம்பியை அணைத்துக் கொண்ட குமாரசிம்மன்
"தம்பி,   நீ    எனஉயிரினும்மேலானவன்.உன்னைஒருகாலும் தவறாக       எண்ண   மாட்டேன்." என்று சமாதானம் செய்தபோதும் அமரசிம்மன் ,"ஐயோ, அண்ணா, உன்னை இழந்திருந்தால் நான் எத்தகைய பாவியாகியிருப்பேன்.என் உயிரைக் காப்பாற்றவே இறைவன் உங்களை அனுப்பியிருக்கிறார். அண்ணா, இந்த உயிர் இனி உங்களுக்குச் சொந்தம் இனி என்னை உங்கள் அன்புப் பிடியிலிருந்து யாராலும் பிரிக்க இயலாது."கதறியபடியே கூறினான்.
 இன்னா செய்த தம்பிக்கு இனியதே செய்துவிட்ட அண்ணனின் அடியொற்றி அவனைத் தாங்கிப் பிடித்தவாறே நடந்தான் அமரசிம்மன். உயிர் போகும் நிலைவரை சென்று திரும்பிய அந்த இரண்டு சகோதரர்களையும் இனி எந்த தீய சக்தியாலும் பிரிக்க இயலாதல்லவா?
குமாரசிம்மனின் தீமை செய்தவனுக்கும் நன்மை செய்த பண்பு  நமக்கு வள்ளுவரின் 
"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண 
 நன்னயம் செய்து விடல்" என்ற குறட்பாவை நினைவு படுத்துகிறதல்லவா?
 







ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 








வியாழன், 2 ஜனவரி, 2014

115.நாய் வாலை ....

குமாரபுரம் என்று ஒரு சிறு கிராமம் இருந்தது.அது மிகவும் அழகான கிராமம்.அந்த ஊரின் புறத்தே அழகிய காடு ஒன்று இருந்தது. அழகு மிகுந்த அந்தக்  காடு குமாரபுரிக்கே ஒரு அரணாகவும் அழகு தருவதாகவும் இருந்தது.
                        ஆனால் அந்தக் காட்டுக்குச் செல்லவோ அதன் அழகை அனுபவிக்கவோ முடியாதபடி அந்தக் காட்டில் ஒரு  பிரம்ம ராக்ஷசன்இருந்து கொண்டு  தடுத்து வந்தான்.யாராவது தெரியாதவர்கள் அங்கு போய்விட்டால் அவர்களை விழுங்கிவிடுவான் அந்த அரக்கன். இதனால் மக்கள் மிகவும் பயத்துடனும் கவலையுடனும் வாழ்ந்து வந்தனர்.
                           அந்த அரக்கனை எப்படியாவது அழித்துவிடவேண்டும் என்று பலரும் முயற்சி செய்தும் பயனேதும் உண்டாகவில்லை.
"அப்படி ஒன்றும் அந்த அரக்கன் நியாயமில்லாமல் மனிதர்களைக் கொல்ல வில்லை அவன் என்ன கேட்கிறான், எனக்கு ஏதேனும் வேலை கொடுங்கள் வேலையில்லாமல் நான் இருக்கமாட்டேன் என்றுதானே கேட்கிறான். இதைச் செய்ய நமக்கு என்ன கஷ்டம்?"என்று கிராமத் தலைவரும் கூறி வந்தார்.
                       அழகிய இயற்கைச் சூழ்நிலை இருந்தாலும்  அங்கு சென்று அதை  அனுபவிக்க யாரும் துணியவில்லை. அதற்கு அந்த அரக்கன்தான் காரணம்.அவன் அந்தக் காட்டில் அட்டகாசம் செய்து கொண்டிருந்தான்.அவனை வென்று வருவதாகச் சொல்லிச் சென்றவர்கள் யாரும் உயிருடன் திரும்பவில்லை.அந்த அரக்கனுக்கு உணவாகிப் போனதுதான் மிச்சம்.இந்த நிலையில் அந்த ஊருக்கு ஒரு நாள் ஒரு ஏழை அந்தணன் பிழைப்பைத் தேடி வந்தான்.ராமசர்மா என்பது அவனது பெயர்.
வறுமையால் வாடிய அவனை  ஒருநாள் அந்த ஊர் தலைவர் அழைத்தார்."இதோபார் ராமசர்மா, உன் வறுமை நீங்க ஒரு வழி சொல்கிறேன்.ஊர் எல்லையில் உள்ள காட்டில் ஒரு அரக்கன் இருந்துகொண்டு இந்த ஊரை அச்சப் படுத்திக் கொண்டிருக்கிறான் 
அவனை நீ வென்றுவிட்டால் உனக்கு வேண்டிய பணம் கொடுப்போம்.' என்று ஆசை காட்டினார்.ராமசர்மாவும் உடனே சம்மதித்தான்.
ஒருநாள் கிராமமக்கள் வழியனுப்பிவைக்க ராமன் காட்டை நோக்கிப் புறப்பட்டான்.நடுக்காட்டை  அடைந்தான்.சற்று சிந்தித்தான். சற்று நேரம் அந்தக் காட்டின் அழகை ரசித்துக் கொண்டு நின்றான்.காட்டின் நடு நடுவே அழகிய மரங்கள் முறிந்தும் நசுங்கியும் இருப்பதைப் பார்த்தான்.அதெல்லாம் அந்த அரக்கனின் வேலை என்பதைப் புரிந்து கொண்டான்.
                திடீரென்று பெருங்குரல் கேட்டது. இடியிடிப்பது போன்ற குரல் கேட்டு ராமன் சற்று நடுங்கியபடி மரத்தின் மறைவில் சென்று மறைந்து நின்று கொண்டான்.பெரும் உறுமலுடன் சத்தத்துடன் அட்டகாசமாக அந்த அரக்கன் வந்து கொண்டிருந்தான்.
இங்குமங்கும் பார்த்தான். "யாரது என்னிருப்பிடம் வந்துள்ளது?"
என்று உறுமினான்.சற்று நேரத்தில் சற்றே நடுங்கிய உடலுடன் ராமசர்மா அவன் முன் நின்றான்.
"யார்நீ?எனக்கு வேலை கொடுக்க உன்னால் முடியுமா?சீக்கிரம் வேலை கொடு. இல்லையேல் உன்னை விழுங்கிவிடுவேன்"என்றபடியே ராமசர்மாவைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான் அரக்கன்.
ராமசர்மாவின் அறிவு விழித்துக் கொண்டது.தன குரலைக் கனைத்துக் கொண்டான்."உடனே இங்கே ஒரு அழகிய அரண்மனை கட்டு" என்றான்.உடனே ஒரு எஜமானிடம் காட்டும் மரியாதையைக் காட்டி நின்ற அரக்கன் உடனே அங்கே ஒரு அழகிய அரண்மனையைக் கட்டிமுடித்தான்.அடுத்தநொடி எனக்கு அடுத்த வேலை கொடு என்று நின்றான்.
"இங்கு ஒரு அழகிய தோட்டம் அமைத்துக் கொடு" என்றான்.அதுவும் அடுத்த நொடியில் நடந்து முடிந்தது.செல்வமும் பணியாட்களும் நிறைந்தனர். அந்தக் காடே ஒரு நகரமாயிற்று.ஆனாலும் வேலையில் அரக்கன் சலிப்புக் காட்டவில்லை. ராமசர்மா சிந்தித்தான் இனியும் என்ன வேலை கொடுப்பது என்று தெரியவில்ல. திடீரென்று அவன் முன் ஒரு நாய் ஓடிற்று.அதைப் பார்த்ததும் ராமசர்மா, 
"ஏ அரக்கனே, இந்த நாயின் வால்  வளைந்துள்ளது அதை நிமிர்த்திவிட்டு வா."
என்று சொல்ல அந்த அரக்கனும் நாயின் பின்னே ஓடினான்.நாயின் வாலை  நிமிர்த்தவே முடியவில்லை.அரக்கன்  ஓடியே சென்று விட்டான். அந்த இடத்துக்குவந்த கிராம மக்கள் அவனை அந்த இடத்துக்கே  அரசனாக முடிசூட்டினர்.ராமசர்மா வெகுகாலம் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தான்.
எவ்வளவோ செயல்களைச் செய்து முடித்த அரக்கனாலேயே நாயின்வாலை நிமிர்த்த முடியாமல்போனது.இதுபோல சிலரை நம்மால் மாற்றவே முடியாது. இதைப் புரிந்து கொண்டு வாழவேண்டும்.









ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com