புதன், 26 ஆகஸ்ட், 2009

நல்ல தீர்ப்பு - இரண்டாம் பகுதி

நேரமாகிவிடவே சந்திரன் தானே தனக்கு வேண்டிய பொருட்களைச் சேகரித்துக் கொண்டு தன்னையும் தயாரித்துக் கொண்டான். குறிப்பிட்ட நேரம் வந்தது.மேடையில் பல மாணவர்கள் தங்கள் தங்கள் திறமையைக் காட்டிக் கொண்டிருந்தனர். இதோ ஆசிரியர் சந்திரனின் பெயரை அறிவித்துவிட்டார். பேனா ரிப்பேர் செய்பவன்போல வேடம் புனைந்திருந்த சந்திரன் மேடையில் ஏறித் தன் திறமையை வெளிப் படுத்தி நடித்தான்.அடுத்தவன் சரவணன்.

அழகாக உடையணிந்து ரோஜா மலர் ஒன்றைத் தன் சட்டைப் பையில் குத்திக் கொண்டு நேருவாக வேடம் புனைந்தவன் மேடையேறினான். பொறாமையே உருவான சந்திரன் சரவணன் வருவது தெரியாதவன் போல் சட்டெனத் திரும்புவது போல் பாசாங்கு செய்து தயாராகத் திறந்து வைத்திருந்த இங்கி புட்டியை அவன் மீது சாய்த்து விட்டான். ஒரு கணம் திகைத்து நின்றான் சரவணன். தன் மீது சிந்தியிருந்த மையைக் கூர்ந்து நோக்கினான். அதற்குள் ஆசிரியர் அவன் பெயரை இரண்டு முறை அழைத்து விட்டார்.சந்திரன் "சாரி, சரவணா!, தெரியாமல் கொட்டிவிட்டது."என்று மெதுவாகக் கூறிவிட்டு நகர்ந்தான். அவன் உள்ளம் இனி எப்படி சரவணன் மேடை ஏறுவான்? என்று மகிழ்ச்சி கொண்டது. சரவணன் அருகில் நின்ற ராமுவின் காதில் ஏதோ கூறவே அவன் நீதிபதியாக வந்தவரிடம் ஓடிப் போய்ப் பேசிவிட்டு வந்தான்.

உடனே ஆசிரியர் தலையசைத்து அனுமதித்ததும் சரவணன் மேடை மீது ஏறினான்.பாரத மாதாவாக வேடமணிந்து வந்திருந்த மாணவன் கையிலிருந்த மூவர்ணக் கொடியைத் தன் கையில் ஏந்திக் கொண்ட சரவணன்,மேடை மீது நின்று திருப்பூர் குமாரனாக வீர வசனம் பேசி தடியடி பட்டவனாகக் கையில் கொடியுடன் தள்ளாடித் தள்ளாடி நடந்தான். கடைசியில் கொடியைக் கீழே விடாமல் பிடித்துக் கொண்டே மேடையில் சாய்ந்தான். அவன் திறமையைக் கண்ட மாணவர் கூட்டம் முழுவதும் பலத்த கரவொலி எழுப்பித் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டது.சற்று நேரத்தில் நீதிபதி எழுந்து நின்று அறிவிக்கத் தொடங்கினார்."மாணவர்களே!உங்கள் திறமையைக் கண்டு நாங்கள் மிகவும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைந்தோம். யாருக்கு முதல் பரிசு கொடுப்பது என்று திகைக்கும் அளவிற்கு நன்றாக நடித்தீர்கள். பேனா வியாபாரியாக வந்த மாணவனுக்குத்தான் முதல் பரிசு தரவேண்டுமென நாங்கள் முடிவு செய்திருந்தோம்.ஆனால் கடைசியாக வந்த மாணவன் சரவணன் நேருவாக நடிக்க வந்தவன் தன் மீது தவறுதலாக சிகப்பு மை கொட்டிவிட்டதால் திருப்பூர் குமாரனாக நடிக்கப் போவதாகச் சொல்லியனுப்பினான்.

தவறு நேர்ந்து விட்ட போதும் அதற்காகக் கலங்காமல் அதையே மாற்றித் தன் திறமையை வேறு வழியில் வெளியிட்ட அச் சிறுவனின் சமயோசித அறிவைப் பாராட்டுவதோடு முதல் பரிசையும் அவனுக்கே அளிக்க முடிவு செய்துள்ளோம். சரவணனுக்கு முதல் பரிசும் சந்திரனுக்கு இரண்டாம் பரிசும் அளிக்கிறோம்."என்று கூறிய போது அனைவரும் சரியான தீர்ப்பு எனப் பாராட்டி மகிழ்ந்தனர்.தன் தவறுக்கு தண்டனை கிடைத்ததை உணர்ந்து கொண்ட சந்திரன் சரவணனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான்.அன்று முதல் பொறாமையைத் தன் மனத்திலிருந்து ஓட்டி விட்டு நல்ல நண்பனாகத் திகழ்ந்தான்.

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2009

நல்ல தீர்ப்பு - முதல் பகுதி

சரவணன் மிகவும் கெட்டிக்காரன். நன்றாகப் படிப்பவன். படிப்பில் மட்டுமல்லாமல் நாடகம் இசைப் போட்டி, பேச்சுப் போட்டி,போன்ற பிற நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு நிறையப் பரிசுகளைப் பெற்றிருக்கிறான். அந்த ஆண்டும் எல்லாப் போட்டிகளையும் வைப்பதற்காக தமிழாசிரியரும் பிற ஆசிரியர்களும் ஈடுபட்டிருந்தனர் . சரவணனின் வகுப்பில் சந்திரன் என்று ஒரு மாணவன் படித்து வந்தான்.அவன் எப்போதும் பெருமை பேசிக்கொண்டே இருப்பான். அதனால் அவனை அனைவரும் சவடால் சந்திரன் என்றே அழைப்பார்கள்.வழக்கம்போல் தன் சவடால் வார்த்தைகளை அள்ளிவிட்டுக் கொண்டிருந்தான் சந்திரன்." இந்த ஆண்டு மாறு வேடப் போட்டியில் எனக்குத்தான் முதல் பரிசு கிடைக்கும். வேறு யாராலும் ஜெயிக்க முடியாது.

" என்று கர்வமாகப் பெசிவந்தான். அவன் நண்பர்கள் அதை வாய் பிளந்து கேட்டுக்கொண்டிருந்தனர் .ராமுவுக்கு மட்டும் சந்திரனின் பேச்சு வெறும் சவடாலாகப் பட்டது. "டேய் சந்தர்! வெறும் சவடால் விடாதே! சரவண னை மாறு வேடப் போட்டியிலே யாராலும் ஜெயிக்க முடியாது.""சரவணன் என்னடா! அவனுக்கும் மேலே யார் வந்தாலும் அய்யாதான் ஜெயிப்பாரு. தெரியுமா!" " டேய், டேய்! எப்படிடா ஜெயிப்பே?"பலரது குரல்கள் அவனைச் சூழ்ந்து கொள்ள அவன் அந்த இடத்துக் கதாநாயகனானான்."அதெல்லாம் சொல்ல மாட்டேன். ஜெயிச்ச பிறகு சொல்றேன்." ஏமாற்றமடைந்த மாணவர்கள் கசமுசவென்று பேசியவாறே கலைந்து சென்றனர்.போட்டிகளுக்கான நாளும் வந்தது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போட்டியாக நடந்து கொண்டிருந்தது. வழக்கம்போல சரவணன் பலபோட்டிகளில் முதல் பரிசு பெற்றான். மறு நாள் மாறுவேடப்போட்டி என அறிவித்தாய் விட்டது. சவடால் சந்திரன் நிலை கொள்ளாமல் தவித்தான். ஆனால் எப்போதும் முதல் பரிசு வாங்கும் சரவணனோ மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் இருந்தான். சரவணனைப் பார்க்கும் போதெல்லாம் சந்திரன் பற்களைக் கடித்தான்."இரு, இரு, மாறு வேடப் போட்டியிலே உன்னை மண்ணைக் கவ்வ வைக்கிறேன்." என்று மனதுக்குள் கருவினான். ஆனால் சரவணன் என்ன வேடம் போடப் போகிறான் என்பதை அறிய மிகவும் ஆவலாக இருந்தான். அதனால் அவனிடம் மெதுவாகப் பேச்சுக் கொடுத்தான்." சரவணா! நாளைக்கு மாறுவேடப் போட்டியிலே நீயும் கலந்து கொள்கிராயல்லவா?""ஆமாம், நீயும்தானே கலந்து கொள்கிறாய்?""ஆமாம் சரவணா! ஆனால் என்ன வேடம் போடறது அப்பிடின்னுதான் யோசிக்கிறேன். நீ என்ன வேடம் போடப் போகிறாய்?" அப்போது ராமு குறுக்கே வந்தான்."டேய் சந்திரா! யாரு கிட்டேயும் என்ன வேடம்னு கேக்கக் கூடாது. நீயா வேடம் போட வேண்டியதுதான்."சரவணன் மென்மையாகச் சிரித்தான்."ராமு! பரவாயில்லை. நமக்குள்ளே என்ன இருக்கு! நான் போடப்போற வேடம் நம் மாந்தருள் மாணிக்கம் நேரு மாமாவின் வேடம். சந்திரா! நீயும் நல்ல வேடமாகத் தேர்ந்தெடுத்துக் கொள். பரிசு உனக்கே கிடைக்க நான் வாழ்த்தறேன்." என்றான் சரவணன்.சவடால் சந்திரனின் மனதில் மெதுவாக ஒரு திட்டம் உருவானது. இப்போது அவன் மனதில் " நான் ஜெயிக்காவிட்டாலும் பரவாயில்லை.

இந்த சரவணன் ஜெயிக்கக் கூடாது" என்ற எண்ணமே நிறைந்திருந்தது.பொழுது புலர்ந்தது. அன்று மாலைதான் மாறுவேடப் போட்டி நடை பெறப் போகிறது. இதுவரை தனக்கு உதவி செய்வதாகச் சொல்லியிருந்த மேக் அப் மேனாகப் பணியாற்றும் சந்திரனின் மாமா வரவில்லை. அவர் வந்து தனக்கு ஒப்பனை செய்வார் என்ற எண்ணத்தில் தான் தன் நண்பர்களிடம் பெருமை அடித்துக் கொண்டிருந்தான். இது வரை அவர் வராதது அவனுக்குப் பெரும் ஏமாற்றமாக இருந்தது.