வியாழன், 8 அக்டோபர், 2009

நல்லோர் சேர்க்கை நலம் தரும்

மாலை நேரம் இருட்டிவிட்டது.மழைக்காலம் வேறு. குளிர் காற்று அடிக்கத் தொடங்கிவிட்டது. சோமுவின் பாட்டி சோமுவின் வரவிற்காகக் காத்திருந்தார்.நன்றாக இருட்டிய பின்பே சோமு வீடு திரும்பினான். பாட்டி வருத்தத்துடன் பேசியதைக் கூட அவன் காதில் போட்டுக் கொள்ளவில்லை. இரவு நேரம் வழக்கம்போல் பாட்டியின் அருகே படுத்துக் கொண்ட சோமு "பாட்டி, கதை சொல் பாட்டி."என்றான்."என் கேள்விக்குப் பதில் சொல். பிறகு நல்ல கதை சொல்கிறேன் " என்றார் பாட்டி. "ம்" என்றான் மெதுவாக."ஏன் இன்று இருட்டிய பிறகு வீட்டிற்கு வந்தாய்?' என்னிடம் அதற்காக எந்த காரணத்தையும் சொல்லவில்லையே! ஏன் "என்றார். சோமு தயங்கியவாறே "பாட்டி, என்வகுப்புப் பையன் புதிதாகச் சேர்ந்தவன் என்னை விளையாட வெகு தூரம் அழைத்துப் போய் விட்டான். நான் வேண்டாமென்றுதான் சொன்னேன். 




அவன் கேட்கவில்லை அதோடு யாரிடமும் சொல்லாதே என்று சொல்லிவிட்டான் பாட்டி" என்றான் மெதுவாக. பாட்டி அவனைத் தடவிக் கொடுத்தார். "சோமு நண்பர்கள் இருப்பது நல்லதுதான். ஆனால் அவர்கள் நல்ல பண்பு உடையவர்களா என்று ஆராய்ந்து பார்த்த பிறகு தான் நட்புக் கொள்ளவேண்டும்.""அதனால் மட்டும் என்ன பயன் பாட்டி?" " உனக்கு ஒரு கதை சொல்கிறேன். நல்லோர் சேர்க்கை எத்தனை நல்லது என்று உனக்கே புரியும்." சோமு ஆவலுடன் கதை கேட்கத் தயாரானான். பாட்டி குரலைச் சீர்படுத்திக் கொண்டு சொல்லத் தொடங்கினார்.-- 'ஒருமுறை நாரதர் நாராயணனிடம் ஒரு கேள்வி கேட்டார். நல்ல சான்றோருடன் சேர்வதனால் என்ன பயன் ஏற்படும்? நாராயணன் பதில் சொன்னார். நாரதா! பூவுலகில் அதோ தெரியும் மரத்தடியில் ஒரு பசு சாணமிட்டுள்ளது. 

அதில் ஒரு புழு நெளிந்து கொண்டிருக்கிறது. அதனிடம் சென்று இக்கேள்வியைக் கேள். என்று சொல்லி அனுப்பி விட்டார். நாரதனுக்கு சந்தேகம் இருந்தாலும் நாராயணன் சொல்வதால் பூவுலகிற்கு வந்து அந்தப் புழுவைச் சந்தித்தார். ஏ புழுவே! நல்ல சான்றோருடன் சேர்வதனால் என்ன பயன்? புழு நாரதரைத் தன் தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு தன் உயிரை விட்டுவிட்டது. பதறியபடியே மீண்டும் நாரதர் நாராயணனிடம் வந்தார். இறைவ! அந்தப புழு தன் உயிரை விட்டு விட்டதே! என்றார். புன்னகை புரிந்த நாரணன், சரி, அதோ அந்த மரத்தில் ஒரு கிளி குஞ்சு பொரித்துள்ளது. அந்தக் குஞ்சினிடம் சென்று கேள். என்று நாரதரை அனுப்பி வைத்தார். நாரதர் மீண்டும் பூவுலகம் வந்து கிளியிடம் வந்து நின்றார். கிளியிடம் தன் கேள்வியைக் கேட்டார்.



புழுவைப் போலவே கிளியும் நாரதரைப் பார்த்து விட்டு தன் உயிரை விட்டு விட்டது. அதைப் பார்த்த நாரதர் நாராயணா! என்று பதறியபடியே வைகுண்டத்தை அடைந்தார். அதே எழில் கொஞ்சும் புன்னகையுடன் பள்ளி கொண்டிருந்த நாராயணன் ஒன்றுமே அறியாதவர் போல் பேசினார். உன் கேள்விக்கு விடை கிடைத்ததா நாரதா? என்றார். சுவாமி நாராயணா! இது என்ன சோதனை! அந்தக் கிளியும் தன் ஜீவனை விட்டு விட்டதே! சரி இப்போது அந்நாட்டு மந்திரியின் வீட்டில் ஒரு பசு கன்று ஒன்றை ஈன்றிருக்கிறது. அதனிடம் சென்று கேள். உன் கேள்விக்கு இப்போதாவது விடை கிடைக்கிறதா பார்ப்போம். என்றார். நாரதரும் தயங்கியவாறே அந்தப் பசு இருக்குமிடம் தேடி வந்து சேர்ந்தார். புதிதாகப் பிறந்திருந்த அந்தக் கன்று மெதுவாக எழுந்து ஓடத் தொடங்கியிருந்தது. அங்குமிங்கும் ஓடியாடும் அழகிய கன்றினிடம் தன் கேள்வியைத் தயக்கத்துடனே கேட்டார் நாரதர். தன் ஓட்டத்தை நிறுத்தி விட்டு நாரதரைப் பார்த்தது அந்தக் கன்று. உடனே அதன் உயிர் பிரிந்தது. நாரதருக்கு ஒன்றும் புரியவில்லை. இந்தக் கேள்வியில் ஏதோ பொருள் உள்ளது. 


இறைவன் நம்மையும் சோதிக்கிறார் என எண்ணியபடியே மீண்டும் வைகுண்டம் வந்தார். நாராயணனை வணங்கி நின்றார். நாராயணா! இது என்ன சோதனை! இந்தக் கன்றும் உயிர் விட்டுவிட்டதே! என் கேள்விக்கு விடையே கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. இனி நான் யாரிடமும் சென்று இந்தக் கேள்வியைக் கேட்க மாட்டேன். என்றார் தலை குனிந்தவாறே. இந்தமுறை உன் கேள்விக்கு விடை கிடைத்து விடும். காசி ராஜனுக்கு ஒரு மகன் பிறந்துள்ளான். அவனிடம் சென்று இக் கேள்வியைக் கேள். என்றவுடன் நாரதர் அலறி விட்டார். நாராயணா! என்ன சோதனை. காசிராஜன் மகனுக்கு ஏதேனும் ஊரு விளைந்துவிட்டால் அந்த மன்னன் என்னை விட்டு விடுவானா ? என்ன பரீக்ஷை இது சுவாமி? என்று அச்சப்பட்டார். ஆனாலும் இறைவனின் வார்த்தைகளைத் தட்ட முடியாமல் காசி நகர் நோக்கிச் சென்றார். அங்கு நகரமே கோலாகலமாக இருந்தது.


பல ஆண்டுகளுக்குப் பிறகு மன்னனுக்கு மகன் பிறந்ததில் மன்னன் மிகவும் மகிழ்ந்திருந்தான். நாரதர் யார் கண்ணுக்கும் படாதவாறு தன் உருவத்தை மறைத்துக் கொண்டார். நேரே பாலகன் படுத்திருந்த தொட்டில் அருகில் சென்று நின்றார். அவரைக் கண்டவுடன் பிறந்த குழந்தை சிரித்தது. அதன் அருகில் சென்று நின்றார் நாரதர். உங்கள் சந்தேகம் என்ன கேளுங்கள் நாரதரே என்றது குழந்தை. நற்பண்புகளுடன் கூடிய நல்லோரைக் காண்பதனால் என்ன பயன்,சான்றோர் சேர்க்கையால் நாம் அடையும் பயன் யாது? நாரதரே! முதலில் நான் ஒரு புழுவாகப் பிறவி எடுத்திருந்தேன். உங்கள் தரிசனம் கிடைத்தது. உடனே அந்தப் பிறவி எனக்கு நீங்கியது.அடுத்து கிளியாகவும் அதன் பின் பசுங்கன்றாகவும் பிறந்தேன். அப்போதும் தங்களின் தரிசனத்தால் அந்தப் பிறவிகளும் நீங்கப்பெற்றேன். இப்போது அரசன் மகனாகப் பிறக்கும் பாக்கியம் பெற்றேன். இப்போதும் தங்களின் தரிசனம் கிடைக்கப் பெற்றுள்ளேன்.ஒவ்வொரு முறையும் சான்றோராகிய தங்களின் தரிசனத்தால் எனது பிறவி உயர்ந்து கொண்டே சென்று இன்று மன்னன் மகனாகப் பிறக்கும் தகுதியை அடைந்துள்ளேன். இப்பிறவியும் நீங்கி இறைவனடி சேரும் பெரும் பேறு கிட்டிவிட்டது. தங்களுக்கு என் நன்றி. வருகிறேன் நாரதரே! என்றபடியே அக்குழந்தையும் கண்களை மூடிக்கொண்டது. நாரதர் நேரே நாராயணனிடம் வந்து சேர்ந்தார்.நாராயணா! சான்றோர் சேர்க்கை நன்மையையும் உயர்வையும் தரும் என்ற உண்மையைப் புரிந்து கொண்டேன். என்றார்.'" அதனால்தான் நல்லவர்களோடு சேர்ந்தால் நமக்கு நன்மை கிட்டும் என்று சொன்னேன்.என்றார் பாட்டி.


சோமுவும் இன்று எங்கள் ஆசிரியர் கூட செய்யுளில் இதைத்தான் சொன்னார்கள் பாட்டி.என்றான். அப்படியா? என்ன அது? சொல் பார்ப்போம்.

"நல்லாரைக் காண்பதுவும் நன்றே 
நலமிக்க நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே
நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே
அவரோடு இணங்கி இருப்பதுவும் நன்று."

அழகாக சோமு சொல்லிய பாடலைக்கேட்டு பாட்டி மகிழ்ந்தாள்.சோமு எப்போதும் ஒருவரை நல்லவன் என்று தெரிந்து கொண்ட பிறகு நட்புக்கொள். தெரிந்ததா?சோமுவும் மகிழ்ச்சியுடன் படுத்துக் கொண்டான்.