புதன், 4 நவம்பர், 2009

முயற்சி திருவினை ஆக்கும்

ஒரு  கிராமத்தில்  ஒரு  பாட்டி  இருந்தாள். அவளுக்கு  ஒரு  பேரன் இருந்தான்.  அவன்  பெயர்  நம்பி.  நம்பிக்குப்  பெற்றோர்  கிடையாது. அவன்  உறவெல்லாம்  பாட்டி  மட்டுமே.  மிகவும்  ஏழையான  இவர்கள்  வயிற்றுப்  பிழைப்புக்காக  தினமும்  வயலில்  கூலி  வேலை  செய்து  வந்தனர்.  பாட்டி  வயலில்  வேலை  செய்யும்  பொழுது  நம்பி  மாடுகளை  மேய்த்து  விட்டு  வருவான்.  சூரியன்  மறைந்த  பிறகே  இருவரும்  வீடு  திரும்புவார்கள்.
 
இந்த  நிலையில்   நம்பிக்குப்  படிக்கவேண்டும்  என்று  மிகவும்  ஆசை.  அவன்  மாடு  மேய்க்கும்  பொழுது  தன்னைப் போன்ற  சிறுவர்கள்  பள்ளிக்குப்  போவதைப்  பார்த்து  தானும்  பள்ளிக்குப்  போக  விரும்பினான்.  பாட்டியிடம் ஒருநாள்,   " பாட்டி ,  நானும்  படிக்க  வேண்டும்  பாட்டி"  என்றான்.

பாட்டி  பெருமூச்சு  விட்டாள். " நாமெல்லாம்  படிக்க  முடியாதுப்பா.  அது  பணக்காரங்களுக்குதான்   முடியும்."

"ஏன்  பாட்டி,  நாம  ஏன்  படிக்கக்கூடாது?"

"நாம  வேலை  செய்துதான்  சாப்பிட  முடியும்.  படிக்கப்  போயிட்டா  யாரு  சோறு  போடுவாங்க?  அதனால  ஒழைக்கறதுதான்  நம்மளாலே  முடியும்."
 
இதை  நம்பியின்  மனம்  ஏற்கவில்லை.  எப்படியாவது  படித்தே  தீருவது  என்று  முடிவு  செய்தான்.  அந்த  ஊரில்  இருந்தது  ஒரே  பள்ளிக்கூடம்.  அதுவும்  ஐந்தாம்  வகுப்பு  வரை  மட்டுமே  உள்ளது.  ஒரு  கூரைக்  கட்டடத்தில்  பள்ளி  நடந்து  வந்தது.  நம்பி  மாடுகளை  மேய்ச்சலுக்கு  ஓட்டிவிட்டு  பள்ளிக்கூடத்தின்  வாசலில்  அல்லது  ஜன்னலின்  ஓரத்தில்  வந்து  நின்று  கொள்வான்.  மூன்று  மாதங்கள்  வரை  முதல்  வகுப்பிலும்  அதன்  பின்  இரண்டாம்  வகுப்பிலும்  என   இரண்டு  வருடங்களுக்குள்  ஐந்து  வகுப்பின்  பாடங்களையும்  கற்றுக்கொண்டான்.

இப்போது  நம்பி  யார்  துணையும்  இல்லாமல்  எல்லா   புத்தகங்களையும்  படிக்கத்  தொடங்கினான்.  கண்ணில்   கண்ட  தாள்களில்  உள்ள  செய்திகளையெல்லாம்  படித்துத்  தெரிந்துகொண்டான்.  தான் படிப்பதை  யாரும்  அறியாமல்  ரகசியமாகவே  வைத்திருந்தான்.ஏனெனில்  மாடு  மேய்க்கும்  சிறுவன்  படிப்பதைப்  பார்த்தால்  ஊர்  பெரியவர்கள்  தவறாக  நினைப்பார்கள்.  அவன்  சரியாக  மாடுகளை  மேய்க்கவில்லை  எனக்  கூறி   கூலி  தரமாட்டார்கள்  எனப்  பயந்திருந்தான். 

அந்த கிராமத்தில்   வாரம்  ஒருமுறைதான்  தபால்காரர்  வருவார்.  அவரும்  ஊருக்கு  வெளியே  நம்பியைப்  பார்த்தால்  அவனிடம்  இரண்டு  அல்லது  மூன்று  கடிதங்களைக்  கொடுத்துவிட்டு  ஊருக்குள்  வராமலேயே  போய்  விடுவார்.  அந்தக்  கடிதங்களை  நம்பி  மாலையில்  மாடுகளைக்  கட்ட  வரும்போது  உரியவர்களிடம்  சேர்த்து  விடுவான்.

அன்றும்  அதேபோல  தபால்காரர்  வந்தார்.  இரண்டு கடிதம்தான்  இருக்கிறது.  இதைத்  தருவதற்காக  ஊருக்குள்  வரவேண்டுமா  என  எண்ணி  அதை  வழக்கம்போல  நம்பியிடம்  கொடுத்துச்  சென்றார்.   வெகு  நேரம்  கழித்து  அந்தக்  கடிதங்களைப்  பார்த்தான்  நம்பி.  இப்போது  நம்பிக்குத்தான்  படிக்கத்  தெரியுமே. அதனால்  ஆர்வம்  அவனை  அந்தக்  கடிதங்களைப்  படிக்கத்  தூண்டியது.  மெதுவாகப்  படிக்கத்  தொடங்கினான்.

அந்த  கிராமத்தின்  தலைவர்  பெரியசாமி.  அவரது  நண்பர்  சுந்தரம்  பட்டணத்தில்  அரசாங்கத்தில்  வேலை  பார்ப்பவர்.  அவர்தான்  பெரியசாமிக்குக்  கடிதம்  எழுதியிருந்தார்.  வெள்ளிக்கிழமை  மாலை  ஐந்து மணிக்கு
அந்த  ஊருக்கு  அரசாங்க  அதிகாரி  வரப்போவதாக   எழுதியிருந்தார்.  கடிதம்  வந்து  சேர்ந்ததும்  வெள்ளிக்கிழமை.

அந்தக் கடிதம்  உடனே  கிராம  அதிகாரியின்  கைக்குப்  போய்ச்  சேரவேண்டுமே  என  முடிவு  செய்தான் நம்பி.
உடனே  தான்  பாட்டி  வேலை  செய்யும்  இடத்திற்குப்  போனான். "பாட்டி,  மாடுகளைக்  கொஞ்ச  நேரம்  பார்த்துக்கொள்.  நான்  இந்தக்கடிதாசியை  நம்ம  தலைவரய்யா கிட்டே   குடுத்துட்டு  வரேன்."என்றபடியே  ஓடினான்.

கடிதத்தைப்  படித்த  பெரியசாமி  உடனே  அதிகாரியை  வரவேற்க  ஆவன  செய்ய  உத்திரவு  பிறப்பித்தார்.  அன்று  மாலை  தலைவரை  நல்ல  முறையில்  வரவேற்று   உபசரித்தார்   அதிகாரி  மிகவும்  மகிழ்ந்து  அந்த  கிராமத்திற்கு என்ன  வசதிகள்  தேவை    என்பதைக்  கேட்டுத்  தெரிந்து கொண்டு  அதை  நிறைவேற்றக்  கட்டளையிட்டார்.

இரவு  நம்பியும்  பாட்டியும்  சாப்பிட்டுக்  கொண்டிருந்தனர்.  அப்போது  வீட்டு  வாயிலில்  யாரோ  அழைக்கும்  குரல்  கேட்டது. "யாரது?"  எனக்கேட்டவாறே  வெளியே  வந்தனர்  பாட்டியும்  பேரனும்.அங்கே  கிராமத் தலைவர்  பெரியசாமியும்  சில  பெரியவர்களும்  நின்றிருந்தனர். அவர்கள்  வேலைக்காரன்  ஒரு  தட்டில்  நல்ல  புதிய  உடை
களும்  இனிப்புகளும்  பழங்களுடன்  ஐந்நூறு  ரூபாய்  பணமும்  வைத்து  பாட்டியிடம்  கொடுத்தனர்.

பாட்டி  திகைத்தாள். எனக்கு  என்ன  மரியாதை  ஏன்  இந்த  மரியாதை?   அவளது  திகைப்பைப்  பார்த்து  புன்னகை  புரிந்த  பெரியசாமி  கூறினார்."பாட்டிம்மா!  உங்க  பேரன்  காலையிலேயே  கடிதத்தைக்  கொண்டு  வந்து  கொடுத்ததாலேதான்   அதிகாரியை  நன்கு  உபசரிக்க  முடிந்தது.  நானும்  வெளியூருக்குப்  போவதைத்   தள்ளிப்  போட  முடிஞ்சது.நம்ம  ஊருக்கும்  நல்லது  நடந்திருக்கு.  இத்தனைக்கும்  காரணம்  நம்பி  கடிதத்தை  சரியான  நேரத்தில்  கொண்டு  வந்து  கொடுத்தது  தானே.  அதனாலே  இந்தப்பரிசை    நாங்க  எல்லாருமா  சேர்ந்து  அவனுக்குக்  கொடுக்கிறோம்."

"இது  ஒரு  பெரிய  விஷயமாங்கய்யா?  அவன்  எப்பவும்  போல  கடிதாசி  கொடுத்திருக்கிறான்.  இதுக்குப்போயி...."
என்று  நீட்டினாள்.
பெரியசாமி  நம்பியைப்  பார்த்துக்  கேட்டார்."நம்பி!,இந்தக்  கடிதம்  மிக  முக்கியமானது  அப்பிடின்னு  உனக்கு  எப்படித்  தெரிஞ்சுது?"
"அய்யா!  என்னை  மன்னிச்சுடுங்க.  நாந்தான்  உங்களுக்கு  வந்த  அந்தக்  கடிதத்தைப்  படித்தேன்.  அதன்  அவசரத்தைப்  புரிந்து  கொண்டு  ஓடிவந்து  கொடுத்துவிட்டு  மாடுகளைப் பார்த்துக்கொள்ள மீண்டும் வயலுக்கு  வந்துவிட்டேன்"

"உனக்குத்தான்  படிக்கத்தேரியாதே?  எப்படிப்  படித்தாய்?"

நம்பி  கடந்த  இரண்டு  ஆண்டுகளாகத்  தான்  கல்வி  கற்ற  முறையைச்  சொன்னபோது  பெரியசாமி  கண்  கலங்கினார்.  இவ்வளவு  ஆர்வமுள்ள  சிறுவனை   முறையாகப்  படிக்கவைக்க  முடிவு  செய்தார்.  அதை  பாட்டியிடம்  சொல்ல  அவள்  மிகவும்  மகிழ்ச்சி  அடைந்தாள்.  அதைவிட  நம்பி  மிகவும்  மகிழ்ந்தான்.
மறுநாள்  முதல்  நம்பி  மாடு  மேய்க்கப்  போகவேண்டாம்.   இனி  அவன்  பள்ளிக்குச்  செல்லட்டும்  என  பெரியசாமி  கூறிவிட்டுச்  சென்றார்.

பாட்டி  தான்  பேரனின்  ஆசை  நிறைவேறிற்று  என  மகிழ்ந்ததோடு  நம்பியிடம்  "உன்  முயற்சி  உன்னை  உயர்த்திவிட்டது." என்றாள்.

இதைத்தான்  பாட்டி    "முயற்சி  திருவினை  ஆக்கும் " அப்படின்னு  வாத்தியார்  ஒருநாள்  சொன்னார்.  என்று  சொல்லிச்  சிரித்தான்.
பாட்டியும் தன் பேரன்  அப்போதே  பெரிய  படிப்புப்  படித்து  விட்டதுபோல  மகிழ்ந்தாள்.  முயற்சி  நமக்கு  எல்லா  வெற்றிகளையும்  தரும்  என்பதை  நாம்  ஒருபோதும்  மறக்கலாகாது.