ஞாயிறு, 27 ஜூன், 2010

35th story. uyir katha thamizh.

                                                  உயிர் காத்த தமிழ்.

சேர நாட்டை பெருஞ்சேரல் இரும்பொறை என்னும் மன்னன் ஆண்டுவந்தான். இவன் அதியமானின் தகடூரை வென்றதால் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை என்று அழைக்கப்பட்டான். இவன் தன் தாய்நாட்டையும் தாய்மொழியான தமிழையும் தன் உயிரினும் மேலாக மதித்து வாழ்ந்து வந்தான். அதனால் ஊரின் நடுவே ஒரு முரசு கட்டில் அமைத்து அதன்மீது தன் வெற்றி முரசை வைத்து மரியாதை செலுத்திவந்தான். அந்த முரசுக்கு யாரேனும் அவமதிப்பு செய்தால் அவருக்கு மரணதண்டனை விதிக்கப்படும் என அறிவிப்புச் செய்திருந்ததால் அந்தவேற்றி முரசுக்கு மக்கள் அனைவரும் மரியாதை செய்து வந்தனர்.
 அந்தநகருக்கு மோசிகீரனார் என்ற புலவர் வந்து சேர்ந்தார். பல நாட்களாக நடந்து வந்ததால் மிகவும் களைத்துக் காணப்பட்டார். பெருஞ்சேரல் இரும்பொறையின் தமிழ்ப் பற்றைப் பற்றிக் கேள்விப்பட்டு மன்னனிடம் பரிசில் பெற்றுச் செல்லவே அவ்வூருக்கு வந்தார் புலவர் மோசிகீரனார். அவர் வந்த சமயம் முரசு கட்டிலின் மேல் இருந்த முரசத்தை நீராட்டுவதற்காக காவலர் எடுத்துச் சென்றிருந்தனர். கட்டில் மட்டுமே அங்கு வீற்றிருந்தது. அதன் பெருமையை அறியாத புலவர் அக்கட்டிலின் மீது ஏறிப் படுத்துவிட்டார். களைப்பின் மிகுதியால் உறங்கிவிட்டார்
இதைக் கண்ட மக்கள் அஞ்சி நடுங்கினர்.இப்புலவரின்  நிலை என்னவாகுமோ எனத் திகைத்தனர்.
நீராட்டுக்குச் சென்றிருந்த காவலர் முரசத்தை ஏந்தி வந்தனர். முரசு கட்டிலின் மீது ஒரு மனிதன் படுத்து உறங்குவதப் பார்த்துத் திகைத்தனர். இச்சய்தியை மன்னரிடம் சொல்ல ஓடினான் ஒரு காவலன். முரசு கட்டிலின் மீது ஒரு மனிதன் படுத்து உறங்குகிறான் எனக் கேள்விப்பட்ட மன்னன் இரும்பொறை கொண்ட கோபத்திற்கு அளவே இல்லை. கையில் தன் வாளைப் பிடித்தபடி கோபத்துடன் அவ்விடத்திற்கு வந்தான். அம்மனிதனை இரு கூராக்க விழைந்து வாளை ஓங்கினான். சட்டென உறங்கும் மனிதனின் கையில் இருந்த ஓலைச் சுவடிகளைக் கண்டான். இவர் ஒரு புலவர் போலும் எனத் தெளிந்தான். தன் கையிலிருந்த வாளை வீசிவிட்டுத் தன் சேவகரிடம் கவரி கொணருமாறு பணித்தான். சேவகர் கவரி கொண்டுவர அதனால் புலவருக்குக் களைப்பு நீங்குமாறு  விசிறியபடியே அருகே  நின்றான் மன்னன்.
சற்று நேரம்கழித்துக் கண்விழித்த புலவர் மோசிகீரனார் மன்னன் தனக்குக் கவரி வீசி நிற்பதைக் கண்டார். பதறித் துடித்து கட்டிலினின்றும் இறங்கி மன்னன் முன் நின்றார். முரசுடன் சேவகர் நிற்பதைக் கண்டார். தான்செய்த தவறு அவருக்குப் புரிந்தது. முரசு கட்டிலில் படுத்து அதன் பெருமையைக் குலைத்த தன்னைத் தண்டிக்காமல் தனக்குக் கவரி வீசி நின்ற அவனது அன்புள்ளத்தை எண்ணி எண்ணி மகிழ்ந்தார். அவனையும் அவனது தமிழ்ப் பற்றையும் போற்றிப் பாடல் இசைத்தார் புலவர்.
அப்பாடல் புறநானூறு என்னும் நூலில் உள்ளது. அக்கால மன்னர்கள் தாய்நாட்டின் மீதும் தாய்மொழியாம் தமிழ் மொழியின் மீதும் கொண்டிருந்த பற்றின் காரணமாகவே இன்றும் தமிழ்வாழ்கிறது. உலகில்  ஒரு சிறந்த
 இடத்தைப் பெற்றுள்ளது. தவறு செய்தவர் புலவர் எனத் தெரிந்து அவர் கற்ற தமிழின் காரணமாகவே அவருக்குப் பணிவிடை செய்ய முற்ப்பட்ட மன்னனின் பெருமையை தமிழ் உலகம் என்றும் மறவாது.
 



1 கருத்து: