சனி, 5 பிப்ரவரி, 2011

59th story. வீர மகளிர்--2

வீர மகளிர்--2
காக்கை பாடினியார் நச்செள்ளையார் என்ற புலவர் ஒருவர் தமிழகத்தில் வாழ்ந்து வ்ந்தார். செள்ளை என்பது இவரது இயற்பெயர். நற்செள்ளை என்பது திரிந்து நச்செள்ளை என்றாயிற்று என்பர் ஆராய்ச்சியாளர்.

"விருந்து வருமாயின் கரைந்து காட்டுக. வாராதாயின் நடந்து காட்டுக"என்று காக்கையைப் பார்த்துக் கூறும் பழக்கம் தமிழகத்தில் இருந்தது. இக்கருத்தை வைத்துப் பாடல் இசைத்தமையால் இப்புலவர் காக்கைபாடினியார் என்ற சிறப்புப் பெயர் பெற்றார்.

இப்புலவர் சேரலாதன் என்ற மன்னனைப் பாடிப் பரிசில் பெற்றவர்.அவ்வையாரும்  அதியமானும் போல சேரலாதனுடன்  நட்புக் கொண்டு வாழ்ந்தவர். இவரது பாடல் மூலம் அக்கால மங்கையரின் வீரம் அறியக் கிடைக்கின்றது.

"நரம்பெழுந்துலறிய நிரம்பா மென்றோள்....." எனத் தொடங்கும் பாடலில் மறக்குல மங்கையொருத்தியின் வீரத்தினைப் பாடுகிறார்.

ஒருமுறை ஒரு போரில் வீரன் ஒருவன் பகைவனின் வாளால் வெட்டுண்டு இறந்தான். மிகுந்த வீரத்துடன் போர் புரிந்த அவ்வீரன் பல பகைவர்களைக் கொன்றான். இறுதியில் பகைவரின் வாளால் அவன் உடல்  துணிபட்டுச் சிதைந்து வேறு வேறாய்க் கிடந்தது.கையில் பிடித்த வாளுடன் கிடந்தான் அம்மாவீரன்.

போர்வீரர் போர் முடிந்து வீடு திரும்பினர். இறந்து பட்ட அவ்வீரனின் தாய் முதியவள்.மெலிந்த தோள்களை உடையவள். தன் மகன் வருகிறானா என எதிர்பார்த்துக் காத்திருந்தாள்.அவன் வாராமையால் வீரர்களை விசாரித்தாள்.

அவள் மகனின் நிலையை அறியாத சிலர் "உன் மகன் பகைவர்க்குப் புறமுதுகு காட்டி ஓடினான். போர்க்களத்தில் இறந்து விட்டான்." எனக் கூறினர்.
இதைக் கேட்ட முதியவள் பதறித் துடித்தாள்.

முதுமை எய்திய நிலையில் இருந்தாலும் அச்சொல்லைத் தாங்காது துடித்தாள்.தன் மறக்குடியின் பெருமைக்கு இழுக்கு நேர்ந்ததே என எண்ணினாள்.கோபத்தில் அவள் கண்கள் தீப்பிழம்பென ஒளிர்ந்தன.அவ்வீரர்களை நோக்கிக் கூறினாள்.

"எனது மகன் நீங்கள் கூறியது போலப் போரில் புறமுதுகிட்டு மாண்டிருப்பான் எனில் அவன் வாய் வைத்துப் பாலுண்ட என் மார்பை  அறுத்தெறிவேன்.
இது என் மறக்குடியின் மீது ஆணை."

இவ்வாறு வஞ்சினம் கூறிய அம்மூதாட்டி தன் கையில் வாளொன்றை ஏந்திக்கொண்டு போர்க்களத்திற்குச் சென்றாள்.அங்கே போர்வீரர்களின் உடல்கள் சிதறிக் கிடந்தன.
தன் மகனின் உடலை அவளால் காண இயலவில்லை. ஒவ்வொரு உடலாகப் புரட்டிப் புரட்டிப் பார்த்தாள். முடிவில் தன் மகனின் உடலைக் கண்டாள்.

வேறு வேறாகக் கிடந்த தன் மகனின் உடலை ஒன்றாகச்  சேர்த்தாள்.ஒழுங்கான தன் மகனின் உடல் கண்டு பூரித்தாள். ஆம். அவள் மகன் ஒரு வீரன். தன் கையில் பிடித்த
வாளைக் கீழே போடாமல் விழுப்புண் பட்டு இறந்து கிடந்தான்.

"என் மகன் வீரன்.அவன் புறமுதுகு காட்டி ஓடவில்லை.மார்பிலும் முகத்திலும் புண் பட்டு வீழ்ந்துள்ளான்." என அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி கொண்டாள்.
அவனைப் பெற்ற பொழுது அடைந்த மகிழ்ச்சியினும் பெரு மகிழ்வு கொண்டாள். அவள் மனத்துயர் நீங்கிற்று.தன் மகன் தான் பிறந்த குடிக்கு இழுக்கு சேர்க்கவில்லை பெருமைதான் சேர்த்துள்ளான். என மகிழ்ச்சி கொண்டாள்.

இதைப் பார்த்த நச்செள்ளையாருக்குப் பெரு வியப்பு ஏற்பட்டது. "என்னே இந்த மறக்குலப் பெண்ணின் வீர உணர்வு!" என எண்ணிய போழ்து அவரது உள்ளத்தில் தோன்றிய
பாடலே புறநானூற்றில் உள்ள இப்பாடல்.

"நரம்பெழுந  துலறிய  நிரம்பா மென்றோள்
முளரி மருங்கின் முதியோள் சிறுவன்
படையழிந்து மாறினான் என்று  பலர்கூற
கொண்ட வாளொடு படுபிணம் பெயராச்
செங்களம் துழவுவோள் சிதைந்து வேறாகிய
படுமகன் கிடக்கை காணூஉ
ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே."

இப்பாடல் மூலம் தமிழ் மகளிரின் வீரம்  கண்டு நாம் பெருமிதம் அடையலாம்.  இதுபோன்ற பல செய்திகளை நமது சங்க இலக்கியங்கள் நமக்கு எடுத்து இயம்புகின்றன.
இவற்றின் மூலம் நமது பழநதமிழர்களின் வாழ்க்கையைப் பற்றி நாம் அறியலாம்.









ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com : email : rukmani68sayee@gmail.com