ஞாயிறு, 6 மார்ச், 2011

61st story - மானம் காத்த மாவீரன்

                                                                        மானம் காத்த மாவீரன்.

தமிழக வரலாற்றில் தனிச் சிறப்புப் பெற்றவன் சேரமான் கணைக்கால் இரும்பொறை. மானம் காத்த மாவீரன் என்று வரலாறு இவனைப் போற்றுகிறது. இம்மன்னன் தொண்டி என்ற ஊரைத்  தலைநகராகக் கொண்டு ஆண்ட சேர மன்னரின் மரபிலே வந்தவன்.ஒருமுறை சோழ மன்னன் கோ செங்கனானுக்கும் இரும்பொறைக்கும் போர் நடந்தது. திருப்போர்ப்புறம் என்ற இடத்தில் நடந்த அந்தப் போரில் இரும்பொறை தோல்வியடைந்தான்.

தோல்வியடைந்த கணைக்கால் இரும்பொறையை குணவாயில் கோட்டம் என்னும் இடத்தில் சோழன் சிறை வைத்தான். நாட்கள் கடந்தன. தோல்வியால் மனம் வருந்தி அவமானத்தால் மிகவும் நொந்து போயிருந்தான் இரும்பொறை.

இரும்பொறையின் உயிர்நண்பர் பொய்கையார் என்ற புலவர். தன் நண்பனான இரும்பொறையின் விடுதலையை வேண்டி சோழனைக் காணச் சென்றார். அவனது அவையில் நின்று செங்கனானைப் பாட்டுடைத் தலைவனாக்கி களவழி நாற்பது என்ற நூலை இயற்றினார். மனம் மகிழ்ந்த சோழன் கோச் செங்கணான் பொய்கையாருக்குப் பரிசில் தர விழைந்தான்.

ஆனால் தான் விரும்பும் பரிசிலையே தரவேண்டுமெனக் கேட்டார் புலவர். அதற்கு இசைந்த சோழன் அவரது விருப்பத்தைக் கேட்டான். சேர மன்னனும் தன் உயிர்நண்பனுமான இரும்பொறையை விடுவிக்கக்  கேட்டார் பொய்கையார். அவரது நட்பின் ஆழத்தைப் புரிந்து கொண்ட சோழன் அவரது விருப்பப் படியே சேரனை விடுவிக்க சம்மதித்தான்.

மனமகிழ்ச்சியுடன் மன்னன் பின்தொடர சிறைச் சாலை நோக்கி வ்ந்தார் பொய்கையார். ஆனால் அந்தோ அங்கே உயிரற்றவனாகக் கிடந்தான் சேரமான் கணைக்கால் இரும்பொறை.
துயருற்றவராகப புலவர் அவனருகே சென்று பார்த்தார். அருகே ஒரு கலயம் உருண்டு கிடந்தது.உள்ளே இருந்த நீர் சிந்திக் கிடந்தது.

சேரமான்கணைக்கால் இரும்பொறை  தமிழ்ப் புலமை மிக்கவன். எனவே தன் அப்போதைய நிலையை ஒரு பாடலாக எழுதி வைத்துவிட்டு தன் இன்னுயிரை விட்டு விட்டான்.
தன் நண்பன் எழுதிய அப்பாடலை எடுத்துப் படித்தபோதுதான்  மானம் காத்துக் கொள்ள உயிரை விட்டு விட்டான் என்பது புரிந்தது சோழனுக்கும் புலவருக்கும்.

                                     " குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
                                     ஆளன்று என்று வாளின் தப்பார்
                                     தொடர்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய  
                                     கேளல் கேளிர் வேளாண் சிறுபதம் 
                                     மதுகை இன்றி வயிற்றுத் தீத் தணியத 
                                     தாம் இரந்து உண்ணும் அளவை 
                                     ஈன்மரோ இவ்வுலகத் தானே?" 
இப்பாடலைப் பார்த்துக் கண்ணீர் வடித்தார் புலவர்.
என்ன நடந்திருக்கும் என்பதைப் புரிந்து கொண்டார் .நீர்வேட்கையால் நீர் வேண்டுமென்று கேட்ட மன்னன் அந்நீரைக் காவலர் காலம் தாழ்த்திக் கொடுத்ததால் அதனை உண்ண மனமின்றி அவமானத்தால் குன்றி அந்நீரைக் கொட்டிவிட்டு நீர்பருகாது உயிர் விட்டுள்ளான்.

அதற்குமுன் தன் உள்ளுணர்வுகளை ஒரு பாடலாக வடித்துவிட்டுப் போய்விட்டான். மன்னர்தம் மானம் காக்கும் திறம் இப்பாடலிலே கூறப்பட்டுள்ளது.

மன்னர் மரபில் ஒரு குழந்தை இறந்து பிறந்தாலும் ஒரு தசைப் பிண்டம் பிறந்தாலும் அவற்றையும் ஒரு ஆளாகக் கொண்டு வாளால் வெட்டிப் பின்னரே அடக்கம் செய்வர்.போரில் வாளால் வெட்டுப் பட்டு மடியாது இப்படி நாய் போல சங்கிலியால் கட்டப்பட்டு சிறையிலே இடப்பட்டு அந்தப் பகைவரின் கையால் தரப்படும் நீரை உண்டு வாழும் இந்த இழிநிலையை அடைந்தவனை இவ்வுலகத்தார் பெற்றேடுப்பாரோ?

இப்பாடலைக் கேட்ட செங்கனானும் மனம் வருந்தினான். இத்தகு மானம் காத்த மாவீரனது வரலாற்றைப்  புறநானூறு என்ற சங்க நூல் நமக்கு எடுத்து இயம்புகின்றது.

போர்க்களத்தில் வீர மரணம் அடைவதையே வீரர்கள் விரும்பினர் என்பதும் அப்போதுதான் அவர்கள் வீர சுவர்க்கம் அடைவர் என்பதும் அனைவரின் நம்பிக்கையாகவும் விருப்பமாகவும் இருந்தது. அந்தநிலையை எய்தாத மன்னன் நீர்வேட்கை மிகுந்த காலத்துப் பகைவரின் கையால் நீர் பருக மனமின்றி மானத்தோடு உயிர் விட்ட வரலாறு நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது அல்லவா?.
அத்துடன் அக்காலமக்களின் வீரமும் நமக்குத் தெரிகிறதல்லவா?














Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com : email : rukmani68sayee@gmail.com