வியாழன், 14 ஜூலை, 2011

69- சோதிடம் பலித்தது


இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பரத கண்டத்தில் ஆட்சி புரிந்த மன்னர்களுள் விக்கிரமாதித்யன் என்ற மன்னன் மிகவும் பெருமை வாய்ந்தவன்.இவனது  சபையில்  மிகவும்  திறமை  வாய்ந்தஅறிஞர்கள்  இருந்தனர். வானசாஸ்திரம் கணிதம் மருத்துவம் சோதிடம் போன்ற பலதுறைகளில் இவர்கள் திறமை வாய்ந்தவர்களாக விளங்கினர்.
 மன்னன் விக்கிரமாதித்யனும் இவர்களை மிகவும் பெருமையுடன் போற்றி வந்தான்.

பல ஆண்டுகளுக்குப் பின்னர் மன்னனுக்கு ஒரு மகன் பிறந்தான். மன்னனுக்கும் மக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி. நாடே கோலாகலமாகக் கொண்டாடியது.குழந்தையின்  பெயர்  சூட்டு  விழாவன்று குழந்தையின் ஜாதகத்தையும் கணித்துத் தருமாறு மன்னன் சோதிட திலகமான மிஹிரர் என்பவரிடம் வேண்டுகோள் விடுத்தான்.மிஹிரர் அந்தக் குழந்தையின் பிறந்த நேரம் சரியில்லை என்பதை அறிந்துகொண்டதால் ஜாதகம் கணிப்பதில் தாமதம் காட்டினார்.

மன்னன் அவரிடம் பலமுறை  வற்புறுத்திக் கேட்டபின்னர் மிஹிரர் மன்னனிடம் கூறினார்."மன்னா, உன் மகனுக்கு ஆயுள் பலம் கிடையாது.ஏழாவது வயதில் இவனுக்கு மரணம் ஏற்படும்."

மன்னன் திகைத்தான். "இதை மாற்ற வழியே இல்லையா? ஏதேனும் பரிஹாரம் அல்லது பிராயச்சித்தம் செய்தால் என் மகனது உயிர் நிலைக்குமா? சொல்லுங்கள்" என்று தவித்தான்.

எந்த பரிஹாரத்தாலும் இவனது உயிரைக் காப்பாற்ற இயலாது" என்றபோது விக்ரமாதித்யன் உள்ளத்தில் ஒரு பிடிவாதம் தோன்றியது. எப்படியும் தன் மகனைக் காப்பாற்றியே தீருவது என்று தீர்மானம் செய்தான்.

மிஹிரரோ அவன் விதியை மாற்ற இயலாது. அவன் ஒரு மிருகத்தால் உயிர் இழப்பது உறுதி என்றார்.

விக்கிரமாதித்யன் என் மகனை எந்த மிருகமும் நெருங்காது பாதுகாப்பேன் என்று முடிவு செய்தான்.

அதற்காக எழுநிலை மாடம் ஒன்று கட்டினான். ஏழாவது மாடத்தில் சகல வசதிகளுடன் தன் மகனைத் தங்க வைத்தான்.கீழ்ப் பகுதியில் மன்னன் தன் இருப்பிடத்தை வைத்துக் கொண்டு கண்ணும் கருத்துமாகத் தன் மகனைப் பாது காத்தான். 

கடைசியில் இளவரசனின் ஏழாவது வயதும் பிறந்தது. ஒவ்வொரு நாளும் மன்னன் தன் மகனை மேல் மாடியில் சென்று பார்த்து வந்தான். ஒரு நாள் மன்னன் தன் மகனைப் பார்த்துவிட்டு மகிழ்ச்சியோடு வந்தான். அப்போது மிஹிரரும் மன்னனுடன் இருந்தார்.
"என்ன மிஹிரரே! என் மகன் உயிருக்கு இனி ஒன்றும் பயமில்லையே? அவன் மகிழ்ச்சியுடன் விளையாடிக் கொண்டிருக்கிறானல்லவா? "
"ஆம் மன்னா. இன்னும் ஒரு நாழிகைப் பொழுதில் அவன் உயிர் பிரிந்து விடும்."
"என்ன! எந்த மிருகமும் இங்கு வராதபோது எப்படி அவனுக்கு மரணம் சம்பவிக்கும்.?"
"மன்னா, என் சோதிடம் பொய்க்காது.ஒரு மிருகத்தால் அவன் உயிர் பிரிவது என்னும் அரைநாழிகை பொழுதில் நடக்கும்."
மன்னன் ஒரு சேவகனை அழைத்தான்." நீ உடனே மேல் மாடிக்குச் சென்று இளவரசனைப் பார்த்து விட்டு வா."
எனக் கூறி அனுப்பினான்.
அந்த சேவகனும் சென்று பார்த்துவிட்டு "மகாராஜா, நமது இளவரசர் பந்து விளையாடிக்கொண்டு இருக்கிறார்."என்று பணிவுடன் கூறினான்.
மன்னன் மிஹிரரைப் பார்த்துப் புன்னகைத்தான்.
"மன்னா,இந்த சேவகன் பாதிவழியில் இறங்கிக் கொண்டிருக்கும் போதே இளவரசர் உயிர் பிரிந்து விட்டது."
அமைதியாக மிஹிரர் கூற மன்னன் மேல் மாடத்திற்கு ஓடினான். அங்கே ரத்த வெள்ளத்தில் மகன் இறந்து கிடப்பதைக் கண்டு அலறினான்.அள்ளி எடுத்து  அணைத்துக் கொண்டான்.

"இத்தனை பாதுகாப்பிருந்தும் இது எப்படி நடந்தது?"

"மன்னா, கலங்காதே.நீ கட்டிய இந்த ஏழாவது மாடியில் அழகான தூண்களில் யாளியின் உருவம் செதுக்கப் பட்டுள்ளது. அந்த யாளிகள் வாயைத் திறந்து கொண்டு இருப்பதைப் பார். அதன்  வாய்க்குள் உன் மகன் போட்ட பந்து விழ அதனை எடுக்கச் சென்றபோது யாளியின் கூர்மையான பற்கள் இளவரசனின் பிடரியில் குத்தி அவன் உயிர் பிரிந்துள்ளது." 

"மிஹிரரே உமது சோதிடத்தை நான்எளிதாக  நினைத்துவிட்டேன். தாங்கள் சாதாரண மிஹிரர் அல்ல. வராகமிஹிரர். வராகத்தினால் என் மகன் உயிர் பிரியும் என்று சோதிடம் சொன்ன தங்களின் அறிவை நான் பாராட்டுகிறேன். இனி வருங்கால சரித்திரம் தங்களை வராஹமிஹிரர் என்று பாராட்டும்."

விக்கிரமாதித்யன் சபையிலிருந்த நவரத்தினங்கள் எனப்பட்ட ஒன்பது அறிஞர்களுள் வராஹமிஹிரரும் ஒருவராக இடம்  பெற்றார்.






-- ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com