வெள்ளி, 9 செப்டம்பர், 2011

72- தெய்வத்தின் குரல்.

ஒரு காட்டில் மரப் பொந்தில் கழுகு ஒன்று வாழ்ந்து வந்தது.அந்தக் கழுகுக்கு இறைவனிடம் கண்மூடித்தனமான நம்பிக்கை.அதனால் அது அடிக்கடி ஒரு பாறை மீது அமர்ந்து தியானம் செய்து கொண்டு இருக்கும்.ஒருநாள் திடீரென்று 
இறைவனுக்கு நாம் தியானம் செய்வது தெரியுமா?என்று சந்தேகம் வந்தது.பின்னர் தானாகவே இறைவனுக்கு எல்லாம் தெரியும்.என்று சமாதானம் செய்து கொண்டது.
ஒருநாள் அந்தக் கழுகுக்கு இன்று எனக்கு உணவு கிடைக்குமா? இறைவன்தான் எல்லாருக்கும் படியளப்பவன் ஆயிற்றே.
இன்று எனக்கு உணவு கிடைக்குமா?என்ற  சந்தேகம்  வந்ததும் அந்த கழுகு தான் அமர்ந்து தியானம் செய்யும் பாறைமீது நின்று
" இறைவா, இன்று எனக்கு உணவு கிடைக்குமா?"என்று பெரிய குரலெடுத்துக் கூவியது.
உடனே விண்ணிலிருந்து ஒரு குரல் "உனக்கு இன்று உணவு உண்டு."என்ற பதில் கிடைத்தது.
மிக்க மகிழ்ச்சியுடன் இன்று இரை தேடும் வேலை இல்லை எப்படியும் உணவு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையுடன் அந்தக் கழுகு பேசாமல் தியானம் செய்து கொண்டு அந்தப் பாறைமீது அமர்ந்து இருந்தது.
நேரம் செல்லச் செல்ல கழுகுக்குப் பசி வரத்தொடங்கியது.ஆனாலும் கண்களைத் திறக்காமல் இறைதியானத்திலேயே அமர்ந்திருந்தது.
மதியம் ஆயிற்று மாலையும் போயிற்று.இரவு வந்துவிட்டது."இனி நம்  இருப்பிடம் செல்ல வேண்டியதுதான்.நம்மை இறைவனே ஏமாற்றி விட்டாரே" என்று மனம் வருந்தியபடி பாறையிலிருந்து புறப்படத் தயாரானது கழுகு.
அப்போது ஒரு குரல் கேட்டது
 "என்ன குழந்தாய், சாப்பிட்டாயா?"என்றதைக் கேட்டதும் கழுகுக்கு அழுகை வந்துவிட்டது.

"இறைவா, நீ எனக்கு  இன்றுஉணவு உண்டு என்று கூறிய பிறகுதானே நம்பிக்கையோடு நான் தியானத்தில் அமர்ந்தேன்.
ஆனால் இன்று என்னைப் பட்டினி போட்டு விட்டாயே! உன் கணக்கு தப்பா, என் நம்பிக்கை தப்பா?"
 என்று அழுது கொண்டே கேட்டது.
இறைவன் சிரித்தார். 
"குழந்தாய், சற்று திரும்பிப் பார். உன் பின்னாலேயே உனக்கான உணவு இருக்கிறது."
கழுகு பின்னால் சென்று பார்த்தது.அங்கே ஒரு பெரிய எலி இறந்து கிடந்தது. கழுகு புன்னகை புரிந்தது. 
இறைவனிடம் "இதனைக் காலம் தாழ்த்திக் கொடுத்தாயே இறைவா?"என்றபோது இறைவன் பதிலளித்தார். 
"குழந்தாய், உனக்குரிய நேரத்தில் உணவு வந்து விட்டது நீதான் அதைத் தேடி எடுக்காமல் காலம் தாழ்த்திவிட்டாய்.திரும்பிப் பார்க்கும் முயற்சி கூடச் செய்யாமல் உணவு எப்படிக்கிட்டும்?.
அவரவர் உணவுக்குத் தகக உழைப்பை அவரவரே செய்ய வேண்டும் அப்போதுதான் உணவு இருப்பதும் தெரியும் கிடைப்பதும் நடக்கும். கடுகளவேனும் முயற்சி வேண்டும்.ஒருவேளை உணவு கூட உழைக்காமல் உண்ணக் கூடாது.
இதை நீமட்டுமல்ல அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.அப்போதுதான் இறைவனின் அருளையும் பெற முடியும்.
இனியாவது புரிந்து கொள்." என்று கூறிய இறைவன் கழுகுக்கு ஆசி வழங்கி மறைந்தார்.
அன்று முதல் கழுகு உழைப்பையே தியானமாக எண்ணிக் கடமையைச் செய்யத் தொடங்கிற்று.






ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

திங்கள், 5 செப்டம்பர், 2011

71..யானையின் எடை.

வெகு நாட்களாக வெளியூர் சென்றிருந்த தெனாலிராமன் தலைநகர் ஹம்பிக்குத் திரும்பினான்.அவன் ஊருக்குள் நுழையும்போதே மக்கள் ஆங்காங்கே கூடிக் கூடிப் பேசுவதைக் கண்டான்.காரணம் அறியாமல் திகைத்தபடியே தன் இல்லத்துக்குள் நுழைந்தான்.தெனாலிராமன் வீட்டு வேலைக்காரர்கள் இருவரும் அடிக்கடிக் கூடி நின்று எதைப் பற்றியோ ஆலோசனை செய்தபடி இருந்தனர்.
தெனாலி ராமனுக்கு பெரும் ஆச்சரியம். ஊருக்குள் வரும்பொழுதுதான் மக்கள் கூடிநின்று பேசினார்கள் என்றால் நம் வீட்டு வேலைக்காரர்களும் அதேபோல் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்களே என்று யோசித்தான்.அவனால் காரணம் கண்டு பிடிக்க முடியாததால் தன் வேலைக்காரர்களுள் ஒருவனை அழைத்தான்.
"டேய், உண்மையைச்சொல். என்னகாரணமாகக் கூடிக் கூடிப் பேசுகின்றீர்கள். ஏதேனும்  திட்டம் தீட்டுகிறீர்களா?"
வேலைக்காரன் பயந்தான்."ஐயா, சாமி நாங்க நம்ம ஊருக்கு வந்திருக்குற வடநாட்டு வியாபாரியைப் பற்றிப்  பேசுறோமுங்க"
"அவரைப் பற்றி அப்படி என்ன பேச்சு?"
"அதுங்களா? அவரு ஒரு பொருள் வச்சிருக்கிறாராம் அதன் எடை என்னன்னு கண்டு பிடிச்சிட்டா எடைக்கு எடை பொன் தருவதாகச் சொல்லியிருக்கிறாராம்.அப்படி கண்டு பிடிக்க முடியலைனா காலம் பூராவும் அவருக்கு அடிமையா அவருக்குப் பணிவிடை செய்து வாழணுமாம்."
தெனாலிராமன் சிந்தித்தான்.அரசபைக்குச் சென்று அந்த வியாபாரியைச் சந்தித்தான்.
மன்னர் கிருஷ்ணதேவ ராயரும் வியாபாரியின் இந்த சவாலை ஏற்கவும் முடியாமல் 
விடவும் முடியாமல் பெரும் குழப்பத்தில் இருந்தார்.
தெனாலிராமன் சபைக்கு வந்ததும் மன்னர் அவரிடம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு கூறினார்.
ராமகிருஷ்ணனும் அதை ஏற்றுக் கொண்டு வியாபாரியிடம் கேட்டான்.
"ஐயா, தாங்கள் எடை காணவேண்டும் என்று கூறும் பொருள் என்னவோ?"
வியாபாரி மிகுந்த கர்வத்துடன் பேசினான்."அதற்கு முன் என் நிபந்தனை தெரியுமா உமக்கு? நான் ஜெயித்தால் நீர் எமக்கு அடிமை.ஆனால் நீர் ஜெயித்தால் எடைக்கு எடை பொன் தருவேன்."
"உங்கள் நிபந்தனையை நான் ஒப்புக் கொள்கிறேன்.நான் ஜெயித்தால் எடைக்கு எடை பொன் தருவது என்பது உண்மைதானே?"
"ஒப்புக் கொள்கிறேன்."
"அப்படியானால் நானும் ஒப்புக் கொள்கிறேன்.எந்தப் பொருளுக்கு எடை சொல்ல வேண்டும்?சொல்லுங்கள்."
வியாபாரி புன்னகைத்தான்.கள்ளச் சிரிப்புடன் தெனாலிராமனைப் பார்த்துச் சொன்னான்.
"வீதியில் நிற்கும் என் யானையின் எடை என்ன என்று சொல்லவேண்டும்"
சபையே அதிர்ந்தது.யானையை எப்படி எடை போடுவது?எந்தத் தராசில் நிற்க வைப்பது என்று அனைவரும் சிந்திக்கத் தொடங்கினர்.மன்னரும் சிந்தனை வயப்பட்டார்.
தெனாலிராமன் இதற்கு மறுநாள் பதில் கூறுவதாகச் சொல்லி இல்லம் திரும்பினான்.
இரவு தன் மனைவியிடம் இந்தப் பிரச்சினையைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தான்.
அப்போது அவனுக்குத் திடீரென்று யோசனை தோன்றியது.
மறுநாள் பொழுது விடிந்ததும் வியாபாரியிடம் அவனது யானையின் எடையைக் கூறுவதாகக் கூறி அழைத்தான். மக்களும் ராமன் எப்படி யானையை எடை போடுகிறான் என்பதைப் பார்க்கக் கூடிவிட்டனர்.
மன்னரும் மக்களுடன் சேர்ந்து ஆவலுடன் பார்த்து நின்றார்.
ராமன் வடநாட்டு வியாபாரியை நதிக்கரைக்கு அழைத்துச் சென்றான்.அவனும் தன் யானையை நடத்திக்கொண்டு ராமனுடன் சென்றான்.நதிக்கரையை அடைந்தவுடன் அங்கிருந்த ஒரு பெரிய படகில் யானையை ஏற்றச் சொன்னான் ராமன்.அந்தப்படகில் யானையை ஏற்றியவுடன் அதைத் தண்ணீரில் மிதக்கவிடச் சொன்னான்.படகு மிதந்தது.படகு நீருக்குள் அமிழ  நீர்படகில்  எந்த அளவு உயர்ந்துள்ளது என்பதைக் குறித்துக் கொண்டான்.பின்னர் மரக்கட்டைகளை அந்தப் படகில் வைத்து நீருக்குள் விட்டான். படகு அமிழ வெளிப்புறம் நீர் உயர்ந்தது. 
யானையை வைத்து எடை பார்த்தபோது உயர்ந்த அதே அளவு நீர் உயர்ந்ததும் கட்டைகளை நிறுத்திவிட்டான்.இப்போது படகில் வைக்கப்பட்ட கட்டைகளின்  எடைதான் யானையின் எடை. இந்தக் கட்டைகளைத் தனித் தனியே எடை போட்டுப் பார்த்தால் யானையின் எடை தெரிந்துவிடும். 
"அரசே, கட்டைகளைத் தனித் தனியே எடை போட்டுப் பார்க்கச் சொல்லுங்கள்."

மன்னர் கிருஷ்ண தேவராயர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.வியாபாரியைப் பார்த்து "அய்யா, நீங்கள் கேட்ட கேள்விக்கு எங்கள் ராமன் சரியான விடை தந்து விட்டான்.அவனிடம் சொன்னது போல் பரிசைத் தருவதுதான் நியாயம்."என்று கூறியவுடன் வியாபாரி தலை குனிந்து ஒப்புக் கொண்டான்.
ஆனால் இடைமறித்த ராமன் "மகாராஜா, பொறுங்கள்."என்றவன் வியாபாரியைப் பார்த்துக் கூறினான்.
"ஐயா வியாபாரியே! நான் வெற்றி பெற்றால் தாங்கள் என்ன தருவதாகக் கூறினீர்கள்?"
"எடைக்கு எடை பொன் தருவதாகக் கூறினேன்."
"அது சரி யாருடைய எடைக்கு எடை என்று நீங்கள் சரியாகச் சொல்லவில்லையே.எடையைப் பார்த்துச் சொன்னவரின் எடைக்கா அல்லது யானையின் எடைக்கா?என்பதைத் தெளிவாகச் சொல்லாததால் நான் யானையின் எடைக்கு எடை பொன் கேட்கிறேன்."
ராமனின் வார்த்தைகளைக் கேட்ட வியாபாரி மயங்கிச் சரிந்தான்.யானையின் எடைக்கு எடை பொன்னுக்கு அவன் எங்கே போவான்.எனவே அவனைச் சிறையில் அடைக்குமாறு மன்னர் கட்டளையிட்டார்.
பல நாடுகளில் மக்களை அடிமைப் படுத்திச் சிறுமைப் படுத்திய வியாபாரிக்குச் சரியான தண்டனைதான் அது.என்று மன்னர் தீர்ப்பளித்தார். 
ராமனுக்குப் பெரும் பொன்னைப் பரிசாகக் கொடுத்து அவனை வாழ்த்தினார். வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில்  உண்டு என்பதை நிரூபித்த  தெனாலிராமனை மக்கள் அனைவரும் பாராட்டி மகிழ்ந்தனர்.
எனவே யாரையும் துன்புறுத்தி மகிழ்தல் தவறு என்பதையும் வல்லவனுக்கு வல்லவன் இவ்வுலகில் உண்டு என்பதையும் நாம் புரிந்து கொண்டால் நலமடைவோம்.







ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com