திங்கள், 3 அக்டோபர், 2011

74- பேராசை பெருநஷ்டம்

பெருமாள் என்பவரும் நாகப்பன் என்பவரும் மிகவும் நண்பர்களாக இருந்தனர். எப்போதும் இருவரும் ஒன்றாகவே எல்லா இடங்களுக்கும் செல்வார்கள். ஒன்றாகவே அமர்ந்து பேசிக்கொண்டு இருப்பார்கள்.அவ்வூரில் அனைவருக்கும் இவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்பது தெரியும்.
இருவருக்கும் திருமணம் முடிந்து பலகாலம் ஆகியும் குழந்தைச் செல்வம் இல்லை.நாகப்பன் எல்லாத தெய்வங்களையும்  வேண்டிக்கொண்டார். சில ஆண்டுகளில் நாகப்பனுக்கு ஒரு மகன் பிறந்தான்.
மகன் பிறந்த மகிழ்ச்சியைத தன் சக்திக்கும் மீறி ஒரு விழாவாகக் கொண்டாடினார் நாகப்பன்.பின்னர் தன் மகனுக்காக மிகவும் பாடுபட்டு உழைத்து பணம் சேர்த்தார் நாகப்பன்.அவரது கடும் உழைப்போடு சரியாக சாப்பிடாமலும் தூங்காமலும் எப்போதும் செல்வம் சேர்ப்பதிலேயே கவனமாக இருந்ததால் விரைவிலேயே நோய்வாய்ப்பட்டார் நாகப்பன்.
நாகப்பனின் மகன் பிறந்த சில ஆண்டுகளிலேயே அவரது மனைவியும் இறந்து விட்டதால் தன் மகனை மிகவும் கவனமாக வளர்க்க வேண்டி வந்தது. இப்படி எல்லாப் பொறுப்புகளும் சேர்ந்ததால் நாகப்பன் விரைவிலேயே கடும் நோய்க்கு ஆளானார்.தன் மகனுக்கு  இப்போதுதான் பத்து வயதாகிறது. தனக்குப் பின் தன் மகனைப பார்த்துக் கொள்ள சரியான ஆள் தன் உயிர்நண்பன் பெருமாள்தான் என முடிவு செய்தார்.
நண்பனை அழைத்தார்.
"பெருமாள், நான் இனி வெகு நாட்கள் வாழ மாட்டேன். எனக்கு ஏதாவது ஆகிவிட்டால் நீதான் என் மகனைப பார்த்துக் கொள்ள வேண்டும்."
"என் உயிர் நண்பன் நீ. உன்னைப் பிரிந்து நான் எப்படி உயிர் வாழ்வேன்."
"அப்படிச் சொல்லாதே. நான் விட்டுச் செல்லும் கடமைகளை நிறைவேற்றுவதுதான் இந்த உன் உயிர் நண்பனுக்கு நீ செய்யும் கடமையும் கைம்மாறும் ஆகும். எனவே என் மகனை உன் மகனாகப் பார்த்துக் கொள்."எனக் கண்ணீருடன் கேட்டுக் கொண்டு பத்து வயதான தன் மகனின் கரங்களைப் பிடித்துத் தன் நண்பன் பெருமாளின் கரங்களில் வைத்தார் நாகப்பன்.
"மகனே, குமரா, இனி இவர்தான் உனக்கு தாயும் தந்தையும்.இவரது சொல் கேட்டு நடந்து பெரியவனாகி என்னைப் போல் நல்லவன் என்று பெயர் பெறவேண்டும்."
தந்தையின் சொல்லைக் கேட்ட குமரன் "அப்படியே செய்கிறேன் அப்பா."என்றான் அழுதுகொண்டே.
நாகப்பன் தன் நண்பனைப் பார்த்து "பெருமாள், என்னுடைய இத்தனை நாள் சேமிப்பாக பத்து லட்சம் ரூபாய்களை உன்னிடம் தருகிறேன் என் மகனுக்குத் தக்கவயது வந்ததும் நீவிரும்பும் பணத்தை அவனுக்குக் கொடுத்து அவனையும் வாழ வைக்கவேண்டுமென்று உன்னை வேண்டிக் கொள்கிறேன்."என்று தன் கரங்களைக் கூப்பிக் கேட்டுக் கொண்டார் நாகப்பன்.
"இது என் கடமை நாகப்பா.நீ கவலையே படாதே.உன் மகன் நல்லபடியாக வாழ்வான்."என்ற பெருமாளின் சொல்லைக் கேட்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டார் நாகப்பன்.
சிலநாட்களில் நாகப்பன் இறந்துவிட குமாரனைத் தன்னுடன் அழைத்துச் சென்று வளர்த்து வ்ந்தார் பெருமாள். ஆண்டுகள் கடந்தன.
இப்போது குமரனுக்கு இருபது வயதாகிவிட்டது. அவனுக்குத் தன் தந்தையார் கூறியது நினைவுக்கு வந்தது. தந்தை விட்டுச் சென்ற பணியத் தான் தொடர்ந்து செய்ய விரும்பினான்.அத்துடன் இனியும் பெருமாளுக்குச் சுமையாக இருக்க விரும்பவில்லை.எனவே தனியே வாழ்வது என்று முடிவு செய்தான். 
ஒருநாள் பெருமாளிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்தான்.பெருமாளும் மகிழ்ச்சியுடன் "அதற்கென்ன, அப்படியே செய்.உன் விருப்பமே என் விருப்பம்."என்று மகிழ்ச்சியுடன் விடை கொடுத்தார்.அத்துடன் நாகப்பன் தன்னிடம் கொடுத்த பணத்தில் ஒரு லட்சம் ரூபாயையும் அவனிடம் கொடுத்தார்.அதைக் கண்டு திகைத்தான் குமரன்.
"ஐயா, என் தந்தையார் தங்களிடம் பத்துலட்சம் கொடுத்துள்ளார். தாங்கள் ஒரு லட்சம் திருப்பித் தருகிறீர்களே?இத்தனை ஆண்டுகள் நான் உழைத்ததற்கும் தாங்கள் எந்தப் பணமும் தரவில்லை. இன்றோ என் பணத்தையே தராமல் இப்படிச் செய்கிறீர்களே! தங்கள் நண்பருக்கு நீங்கள் தரும் மரியாதை இதுதானா?"
பெருமாள் கோபத்துடன் பேசினார்."இதோ பார் உன் தந்தையார் என்னிடம் கூறும்போது நான் விரும்பும் பணத்தை உனக்குத் தரச் சொன்னாரல்லவா?அதன்படிதான் செய்துள்ளேன்.போய்வா.இதை வைத்துப் பிழைத்துக் கொள்."
வாலிபனான குமரன் மனம் அழுதது.பெருமாளின் பேராசையைக் கண்டு மனம் வருந்தினான்.ஆனால் தன் தந்தை தனக்காகக் கஷ்டப்பட்டுச் சேர்த்த பணத்தை விட்டுவிடவும் மனம் இல்லை.என்ன செய்வது என்று சிந்தித்தான்.
அந்த ஊரில் மரியாதை ராமன் என்று ஒரு திறமைசாலி அறிவாளி இருந்தார். அவர் பல வழக்குகளை நல்ல விதமாகத் தீர்த்துவைப்பதாகக்  கேள்விப்பட்டான்.அவரது துணையை நாடுவது என்று முடிவு செய்தான்.
நேராக மரியாதைராமன் இருந்த இல்லத்தை நோக்கிச் சென்றான்.அவரிடம் தன் வழக்கை எடுத்துச் சொன்னான்.மரியாதைராமன் வழக்கைக் கூர்ந்து கேட்டுக் கொண்டார்.மறுநாள் பெருமாளையும் தன் இல்லத்திற்கு வரச் சொன்னார்.இப்போது பெருமாளும் குமரனும் மரியாதைராமன் முன் நின்றனர்.
மரியாதைராமன் பெருமாளிடம் விசாரித்தார்.பெருமாள்"ஐயா, நாகப்பன் இறக்கும்போது என்னிடம் பத்து லட்சம் ரூபாய்கள் கொடுத்தது உண்மைதான்.குமரனைப் பாதுகாக்கும் பொறுப்பையும் என்னிடம் கொடுத்ததும் உண்மைதான்.நாகப்பன்  சாகும்போது நான் விரும்பும் பணத்தைத் தன் மகனுக்குக் கொடுக்கும்படி கூறிவிட்டுச் சென்றான்.அதனால் நான் ஒரு லட்சம் ரூபாயை குமரனுக்குக் கொடுத்தேன்.இது எப்படித் தவறாகும் ஐயா?" என்றார்.
மரியாதைராமன் சிரித்தார்."சரிதான்.நாகப்பன் கூறியது போல்தான் செய்திருக்கிறீர்கள்.ஆனால் நீ விரும்பும் பணத்தைத் தருமாறு கூறினாரல்லவா?அதில்தான் ஒரு சந்தேகம்.நீர் விரும்பும் பணத்தைத்தான் கொடுத்தீரா?"
பெருமாள் இடைமறித்துக் கூறினார்."அதிலென்ன சந்தேகம்?நான் விரும்பிய பணத்தைத்தான் கொடுத்திருக்கிறேன்."
"இல்லையே நீர் விரும்பிய பணத்தைத் தரவில்லையே. உமது நண்பர் என்ன சொல்லிச் சென்றார்?நீர் தர விரும்பிய பணம் என்று சொல்லவில்லையே. நீர் விரும்பும் பணம் என்றுதானே சொன்னார். அப்படியானால் நீர் தர விரும்பியது ஒரு லட்சம். நீர் விரும்பியது ஒன்பது லட்சம் அல்லவா?"
பெருமாள் திடுக்கிட்டார்."ஐயா, "தடுமாறினார்.
"உமது நண்பரின் வார்த்தையின்படி நீர் விரும்பும் பணம் ஒன்பது லட்சம் அல்லவா?அந்த ஒன்பது லட்சத்தை குமரனிடம் கொடுத்து விடவேண்டும்.அத்துடன் பத்து ஆண்டுகளாக அவனிடம் வேலை வாங்கிக் கொண்டு ஊதியம் ஏதும் தராததால் அவனுக்கு பத்தாண்டு ஊதியமாக ஒரு லட்சத்தையும் தந்து விட வேண்டும்.இதுவே என் தீர்ப்பு."
தனது பேராசையின் காரணமாக தனக்குக் கிடைக்கவேண்டிய ஒரு லட்சமும் கையை விட்டுப் போனதற்காக மனம் வருந்திய படியே சென்றார் பெருமாள்..
ஊர் மக்களும் பேராசை பெருநஷ்டமாகியது.பேராசைப்பட்ட பெருமாளுக்கு இது நல்ல தண்டனைதான் என்று பேசிக்கொண்டே கலைந்து சென்றனர்.








ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com