சனி, 17 மார்ச், 2012

81- வைரக்கிளி

மரகத நாட்டு மன்னன் மகிபாலன். இவனது மனைவி மாதவி. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தனர்.மூத்தவன் அரசகுமாரன்.அவன் பெயர் ராஜசிம்மன். அரசகுமாரியின் பெயர் ராஜீவி.மரகதநாட்டு சேனாதிபதி மணிவண்ணன் அந்த நாட்டைத் தான் ஆள வேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருப்பவன்.அவன்  மகன் மாறவர்மன் இந்த எண்ணத்தைத் தூபம் போட்டு வளர்த்தான்.இருவரும் எப்போதும் இதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தனர்.அதற்கும் நேரம் வந்தது.
போர் புரியும் பயிற்சிக்காக சில சிற்றரசர்களுடன் ராஜசிம்மனை போருக்கு அனுப்பினான் மன்னன் மகிபாலன்.அவனுக்குத்   துணையாகத் தன் சேனாதிபதி மணிவண்ணனையும் அனுப்பினான்.சில மாதங்கள் போர்நிகழ்த்திவிட்டு சிலரிடம் தோற்றும் சிலரை வென்றும் நாடு திரும்பிக் கொண்டிருந்தனர் ராஜசிம்மனும் மணிவண்ணனும்.
களைத்துப்போன படைகளுடன் காட்டுவழியே வந்து கொண்டிருந்த ராஜசிம்மனும் அவனது படைகளும் ஒரு இடத்தில் ஓய்வெடுக்கத் தங்கினர்.நடு இரவில் ஒரு அழு குரல் கேட்டு விழித்துக் கொண்ட ராஜசிம்மன் வெளியே வந்து பார்த்தான். சற்றுத் தொலைவில் அந்தக் குரல் கேட்க அதைத் தேடிச் சென்று பார்த்தான். அங்கு வயதான முதியவர் ஒருவர் அமர்ந்து அழுது கொண்டிருந்தார். அவரிடம் சென்ற அரசகுமாரன் "ஐயா  எதற்காக அழுகிறீர்கள்? உங்களுக்கு ஏற்பட்ட துன்பம் என்ன? எதுவானாலும் தீர்த்து வைக்கிறேன்." என்றான் ஆறுதலாக. அந்தக் கிழவன் அவனிடம் "உன்னால் என் துயரத்தைத் தீர்க்க இயலாதப்பா." என்றான் சலிப்போடு.
"ஐயா, நான் இந்த நாட்டு அரசகுமாரன் என்னால் இயலாதது வேறு யாரால் இயலும்?உங்கள் துயரைக் கண்டிப்பாகத் தீர்ப்பேன்.சொல்லுங்கள்."
"பின்னர் பேச்சு மாறமாட்டாயே? சத்தியம் செய்தால் கூறுகிறேன்."
"சத்தியமாக உங்களின் துயரத்தைத் தீர்த்து வைப்பேன்."என்று அந்தக் கிழவனின் கையில் அடித்துச் சத்தியம் செய்து கொடுத்தான் ராஜசிம்மன்.
கிழவன் மெதுவாகக் கனைத்துக் கொண்டான்."சத்தியம் செய்து கொடுத்திருக்கிறாய். மறவாதே."
"சொல்லுங்கள் பெரியவரே"ஆவலுடன் கேட்டான் ராஜசிம்மன்.
"என் முதுமையை மனமுவந்து ஏற்றுக் கொண்டு தங்களின் இளமையை யார் தருவார்களோ அப்போதுதான் எனக்கு இந்தத் துயர் தீரும்.அப்போதுதான் எனக்கு சாப விமோசனம் கிட்டும்.உன்னால் அது முடியாதல்லவா?"
"இல்லை பெரியவரே,நான் கொடுத்த வாக்கை மீறமாட்டேன்.இதோ இப்போதே என் இளமையைத் தங்களுக்குத் தருகிறேன்."
அருகே இருந்த குளத்தில் இருந்து நீரை கைகளால் முகந்து பெரியவர் கைகளில் ஊற்றினான் அரசகுமாரன்.
உடனே அந்த இடத்தில் ஒரு கந்தர்வன் தோன்றினான்.புன்னகையுடன் நின்றவன் "ராஜசிம்மா, எனக்கு சாபவிமோசனம் அளித்தாய்.மிக்க மகிழ்ச்சி.உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள் " என்றான் .
"சுவாமி, எனக்குச் சில கடமைகள் இருக்கின்றன. எனவே இப்போது இந்த முதுமை எனக்கு வேண்டாம்.நான் விரும்பும்போது முதுமையை ஏற்றுக்கொள்ளும் வண்ணம் அருள்புரியுங்கள்."
"அப்படியே ஆகட்டும். இதோ இந்த வைரக்கிளியையும் உனக்குப் பரிசாகத் தருகிறேன்."கிளியைப் பெற்றுக்கொண்ட ராஜசிம்மன் "சுவாமி, இந்தக் கிளியின் ரகசியம் என்ன எனக்குத் தெரிவிக்கமுடியுமா?" என்றான்.
"காலம் வரும்போது தானாகத் தெரியும்.உன் முதுமையும் அப்போது விலகும்.உனக்கு மங்களம் உண்டாகட்டும்."என்று ஆசி கூறி மறைந்தான் அந்த கந்தர்வன்.
கிளியைத் தன் ஆடைக்குள் மறைத்துக் கொண்ட ராஜசிம்மன் தன் கூடாரத்தை நோக்கி வந்துகொண்டிருந்தான்.
அப்போது திடீரென ஒரு கூட்டம் அவன் எதிர்பாராசமயம் அவனை கட்டி ஒரு மலைக் குகையில் அடைத்துவைத்தது. அந்த காரியத்தைச் செய்தவன் மாறவர்மனே.
தன் தந்தைக்கும் தெரியாமல் அவன் இந்த சூழ்ச்சியைச் செய்து விட்டு ஒன்றும் அறியாதவன் போல் அமர்ந்திருந்தான்.மகனைக் காணோம் என்ற செய்தி கேட்டு அரசன் மகிபாலன் துடித்தான்.தன் மகனைக் காணாமல் தவித்தான்.
ஊர் முழுவதும் பறையறிவித்தான்.இளவரசனைப் பற்றி அறிவிப்போருக்கு கேட்பதைக் கொடுப்பதாகக் கூறிய அறிவிப்பைக் கேட்டு மாறவர்மன் மிகவும் மகிழ்ந்தான்.இளவரசனைப் பற்றி அவனுக்குத்தானே தெரியும்.சில நாட்கள் கழித்துத் தானே கண்டு பிடித்ததாக இளவரசனை நேரில் கொண்டுவந்து நிறுத்த முடிவு செய்தான்.அதற்குப் பரிசாக அரசகுமாரி ராஜீவியைதிருமணம் முடித்துத் தரக் கேட்க வேண்டும் என நினைத்திருந்தான்.
குகைக்குள் கட்டப் பட்டிருந்த ராஜசிம்மன் மயக்கம் தெளிந்து கண்விழித்தான். தன் நிலையை உணர்ந்தான்.
எப்படியாவது தப்பிப் போக வழியுண்டா எனத் தேடினான்.ஆனால் கட்டப்பட்ட நிலையில் என்ன செய்வது? சற்று சிந்தித்தான்.அவன் அறிவு வேலை செய்தது.அதன்படி செய்தான்.
 சில நாட்கள் கழிந்தன. நான் எப்படியும் இளவரசனை மீட்டு வருவேன் என்று மன்னன் மகிபாலனிடம் வீர முழக்கம் செய்து புறப்பட்டான் மாறவர்மன். தன் தந்தை மணிவண்ணனிடம் கவலைப் படாமல் இருங்கள். இளவரசனுடன் வருகிறேன். என்று ரகசியமாகச் சொல்லிப் புறப்பட்டான். தான் ராஜசிம்மனைக்  கட்டிப் போட்டிருந்த இடத்திற்கு வேகமாக வந்து சேர்ந்தான் மாறவர்மன்.
குகைக்குள் சென்று  பார்த்தவன் திடுக்கிட்டான்.அங்கே ராஜசிம்மனைக் காணோம்.அவனுக்குப் பதிலாக ஒரு கிழவன் அங்கே கட்டப்பட்டிருந்தான்.அவனை நெருங்கிய மாறவர்மன் கோபமாகப் பேசினான்."டேய், இங்கே இருந்த அரசகுமாரன் எங்கேயடா? நீ எப்படி கட்டுண்டாய்?உண்மையைச் சொல். இல்லையேல் கொன்று விடுவேன்."
கிழவன் நடுங்கியபடியே பேசினான்.
"ஐயா, இங்கே ஒரு வாலிபன் கட்டுண்டிருந்தான். நான் மாடு மேய்த்து வரும்போது"யாராவது வாருங்கள்"என்ற குரல் கேட்டு இந்த குகைக்குள் நுழைந்து பார்த்தேன்.அந்த வாலிபன்"இந்தக் கல்லில் ஒரு நாள் கட்டுண்டிருந்தால் இளமையைப் பெறலாம்" என்றதனால் நானும் இளமைக்கு ஆசைப் பட்டு இப்படி அவனால் கட்டப்பட்டேன். ஆனால் அவன் என்னை ஏமாற்றி விட்டான் என்று இப்போது நான் தெரிந்து கொண்டேன்." 
அவன் மட்டும் ஏமாறவில்லை தானும் ஏமாந்து விட்டோம் என்று புரிந்து கொண்ட மாறவர்மன் கோபத்தோடு ராஜசிம்மனைத் தேடி அங்கிருந்து வேகமாகக் குதிரையை ஓட்டிச் சென்றான்.
கட்டவிழ்த்து விடப்பட்ட கிழவன் நேரே அரண்மனையை நாடிச் சென்றான்.மன்னன் மகிபாலனைச் சந்திக்க என்ன வழி என்று சிந்தித்தான்..தனக்கு சோதிடம் தெரியும் என்று கூறி மன்னன் முன் சென்று நின்றான்.
ஒரு சோதிடம் வல்லானைப் போல் முன்னால் நடந்தவற்றைக் கூறவே மன்னன் அவனை அரண்மனையிலேயே தங்க வைத்துக் கொண்டான்.கிழவனும் தன்னிடமுள்ள வைரக் கிளியை இளவரசிக்குப் பரிசாகக் கொடுத்தான். அந்த வைரக் கிளியைப் பாது காப்பாக வைக்கத் தகுந்த இடம் அரண்மனைதான் எனஎண்ணி ராஜீவிக்குப் பரிசாகக் கொடுத்துவிட்டான்.
மன்னனுக்குத் தெரியாமல் தன் தந்தையைச் சந்தித்த மாறவர்மன் நடந்ததை கூறி  அடுத்த நாட்டு மன்னனுடைய உதவியுடன் மகிபாலனுடன் போருக்கு வருவதாக திட்டமிட்டுள்ளதை கூறி படை திரட்ட ரகசியமாகப் புறப்பட்டான்..
இந்த சதியை அறிந்த கிழவன் சோதிடம் சொல்வதுபோல் சேனாதிபதியின் சூழ்ச்சியை மன்னனிடம்  எடுத்துக் கூறினான்.மாறவர்மன் அடுத்த நாட்டுக்கு சென்ற சமயம் மணிவண்ணன் சிறையில் அடைக்கப்பட்டான்.
படை உதவி கேட்ட மாறவர்மன் சூழ்ச்சிக்கு எந்த நாட்டு மன்னனும் இணங்கவில்லை.தோல்வியுடன் நாடு திரும்பியவனுக்குத் தன் தந்தை சிறைப்பட்டதை அறிந்து பெரிய அதிர்ச்சியாக இருந்தது.
எல்லாவற்றுக்கும் இங்கிருக்கும் கிழவன்தான் காரணம் இவனை ஒழிக்கவேண்டும் என்று முடிவு செய்தான்.ஒரு சேவகனிடம் ராஜசிம்மன் எழுதியது போல் கடிதம் ஒன்றை எழுதி அதை அரசர் அறியும் வண்ணம் கிழவனிடம் கொடுக்கச் சொன்னான்.அந்தக் கடிதம் என்னவென அறிந்த மன்னர் மகிபாலன் தன் மகனை இந்தக் கிழவன் எங்கோ மறைத்து வைத்துள்ளான் என நினைத்தான்.அதே சமயம் மாறவர்மனும் மன்னனுக்குத் தூபம் போட்டான்.பின்னர் தானே அந்தக் கிழவனை விசாரித்து உண்மையை அறிவதாகக் கூறி கிழவனை சபை நடுவே நிற்க வைத்து உண்மையைக் கூறும்படி கேட்டு கசையால் அடிக்கத் தயாரானான்.
அதே நேரம் வைரக்கிளியுடன் விளையாடிக் கொண்டிருந்த அரசகுமாரி ராஜீவி அதற்குப் பழம் கொடுப்பதற்காக பழத்தை நறுக்க கத்தி அவள்  கையை வெட்டி விட்டது.அதிலிருந்து தெறித்து விழுந்த ரத்தம் வைரக்கிளியின் மீது பட்டவுடன் அங்கே அழகிய ராஜகுமாரன் தோன்றினான்.ராஜீவி திகைப்புடன் நிற்க அவளை அழைத்துக் கொண்டு அரசபை நோக்கி வந்தான் வைரக்கிளியான அரசகுமாரன்.
அதே சமயம் மாறவர்மன் வீசிய கசையைப் பற்றிக் கொண்ட கிழவன் ராஜசிம்மனாக மாறினான்.மகிபாலன் திகைத்தாலும் மகிழ்ச்சியுடன் மகனை அணைத்துக் கொண்டான்.அதே சமயம் அங்கு வந்த வைரக்கிளி வாலிபனும் ராஜீவியும் மன்னனை வணங்கி நின்றனர்.அவர்களைக் கண்டு அனைவரும் திகைத்தனர்.வைரக்கிளி யாக இருந்த அந்த இளைஞன் இப்போது பேசினான்.
"மகாராஜா, நான் மச்ச நாட்டு மன்னன். வேட்டையாடும்போது ஒரு கந்தர்வனைக் கண்டேன். அவன் கந்தர்வன் என அறியாது சற்று அவமரியாதையாக நடந்து கொண்டேன்.அதனால் என்னை ஐந்தறிவுள்ள ஜீவன்போல் நடந்து கொண்ட நீ கிளியாகப் போ. என சாபம் கொடுத்தான்.அவனும் பிரம்மாவின் சாபத்தால் பூலோகம் வந்திருந்தான். ஒரு கன்னியின் ரத்தம் என்று என்மேல் படுகிறதோ  அன்றே என் சாபமும் விலகும் எனக் கூறினான். இன்று இளவரசியின் ரத்தம் என்மேல் பட்டதால் என் சாபம் நீங்கியது.அத்துடன் நம் இராஜசிம்மனால் ஏற்றுக் கொள்ளப் பட்ட அந்த கந்தர்வன் பெற்ற  சாபமும் விலகியது." என்று கூறியதைக் கேட்டபோது 
மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.மகிபாலனும் தன் மகளுக்கு ஏற்ற மணாளன் தேடாமலேயே கிடைத்துவிட்டான் என மகிழ்ந்தான்.சூதும் சூழ்ச்சியும் புரிந்த மாறவர்மனையும் அவன் தந்தை மணிவண்ணனையும் நாடு கடத்தும்படி உத்தரவிட்டான்.
நல்லதொரு நாளில் ராஜசிம்மனின் முடிசூட்டு விழாவும் ராஜீவிக்கும் மச்சநாட்டு மன்னனுக்கும் திருமண விழாவும் இனிதே நடந்தேறியது.
யாருக்கும் எந்த சமயத்திலும் பலன் எதிர்பாராது உதவி செய்தால் எத்தகைய பகையையும் வெல்லலாம் என்ற உண்மை ராஜசிம்மனின் வரலாற்றிலிருந்து விளங்கும்.
இதைக் கதையென்று கொள்ளாமல் வாழ்க்கைக்கு தகுந்த ஒரு பாடமாகக் கொள்ளவேண்டும்.






ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
 
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com

4 கருத்துகள்:

  1. மிக அருமையான கதை. சூழ்ச்சி செய்பவர்களுக்கு இந்த மாதிரி தான் நடக்கவேண்டும்...

    பதிலளிநீக்கு
  2. யாருக்கும் எந்த சமயத்திலும் பலன் எதிர்பாராது உதவி செய்தால் எத்தகைய பகையையும் வெல்லலாம் என்ற உண்மை ராஜசிம்மனின் வரலாற்றிலிருந்து விளங்கும்
    வாழ்க்கைக்கு தகுந்த ஒரு பாடமாகக் கொள்ளவேண்டும்.


    நல்ல கதை!
    -காரஞ்சன்(சேஷ்)

    பதிலளிநீக்கு