புதன், 4 ஏப்ரல், 2012

82. நல்ல நூல்களைப் படி


ஓர்  ஊரில் அண்ணன் தம்பி இருவர் வாழ்ந்து வந்தனர்.இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். அண்ணன் பெயர் துந்துகாரி.தம்பியின் பெயர் கோகர்ணன்.பெற்றோர் இல்லாத இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் துணையாக அந்த இல்லத்தில் வாழ்ந்து வந்தனர்.அண்ணன் துந்துகாரி பல தீய காரியங்கள் செய்து பணம் சம்பாதித்து வந்தான்.தம்பி கோகர்ணன் மிகவும் நல்லவன். இறைவனிடம்  பக்தி உள்ளவன்.நல்ல வழியில் பணம் சம்பாதித்து தான தர்மங்கள் செய்து திருப்தியாக வாழ்ந்து வந்தான்.

ஒருநாள் தீயவனான துந்துகாரி தீயவர்களால் கொல்லப்பட்டான்.அண்ணன் இறந்ததற்காக மிகவும் வருந்தினான் கோகர்ணன்.அண்ணனது ஈமக்கிரியைகளை காசியில் உள்ள கயா என்னும் புனித க்ஷேத்திரத்தில் செய்து முடித்தான். இதனால் அண்ணனின் ஆத்மா நற்கதி அடையும் என நம்பினான். மீண்டும் தன் இல்லம் திரும்பி தன் தினசரி வாழ்க்கையைத் தொடங்கினான்.
                             ஒருநாள் இரவு தன் கடமைகளை முடித்துவிட்டு படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தான் கோகர்ணன்.நள்ளிரவில் ஏதோ ஒலி கேட்கவேதிடுக்கிட்டுக் கண் விழித்தான்.அவன்எதிரே  முற்றத்தில் பயங்கரமான எருமை ஒன்று நின்றிருந்தது.மிகவும் அஞ்சிய கோகர்ணன் இறைவன் நாமாவை உச்சரிக்கத் தொடங்கினான்.மனதில் இறைவனை நினைத்துக் கொண்டு எதிரே நின்ற உருவத்தைப் பார்த்துக் கேட்டான்.
"ஏய், யார் நீ? இங்கு ஏன் வந்தாய்?" உடனே அந்த கருத்த எருமை பேசிற்று.
"கோகர்ணா, நாந்தானடா உன் அண்ணன் துந்துகாரி.பாபாத்மாவான நான் இந்த பேய் உருவத்தில் அலைகிறேன். நான் செய்த பாபங்களை நினைத்து இப்போது வருந்துகிறேன்.நான் விமோசனமடைய நீதான் உதவ வேண்டும்."
"உனக்காகத் தானே நான் கயா சென்று கிரியைகள் செய்தேன்."
"அதெல்லாம் நான் செய்த பாவத்திற்குப் போதாது.நான் மகா பாவி.வேறு ஏதேனும்வழி செய்து என் பிறவி மோட்சமடைய 
செய்வாய்."
"சரி.ஏதேனும் வழி கிடைக்குமா என்று விசாரிக்கிறேன்.நீ நாளை வா. இப்போது இங்கிருந்து செல்."
தம்பியின் ஆறுதலான சொற்களைக் கேட்டு அங்கிருந்து அந்த எருமை உருவம் மறைந்தது.  
           மறுநாள் காலை கோகர்ணன் மனதில் பக்தியுடன் சூரிய பகவானை வேண்டிக் கொண்டான்.அவனது பக்தியை மெச்சிய சூரிய பகவானும் அவன் முன் தோன்றினார்.அவரை வணங்கிய கோகர்ணன் தன் அண்ணனின் நிலையைக் கூறி அவனது விமோசனத்திற்கு வழி கேட்டான்.சூரிய பகவானும் "கோகர்ணா, உன் அண்ணன் மீது நீ கொண்டுள்ள அன்புக்கு மெச்சினேன்.
உன் சகோதரனின் இந்தப் பேயுருவம் நீங்க வேண்டுமெனில் நீ பாகவத ப்ரவசனம் செய்.அதை உன் அண்ணன் கேட்கட்டும்.
அவனது பிறவி முடிந்து அவன் மோட்சம் செல்வான்."என்று கூறி மறைந்தார்.   
            அவர் கூறியபடியே கோகர்ணன் சப்தாஹா என்று சொல்லப்படும் ஏழு நாள் படிப்பைத் தொடங்கினான்.பாகவதக் கதையை எழுநாட்களுக்குள் படித்து முடிப்பதே சப்தாஹா என்று சொல்லப்படும்.அந்தக் கதையைக் கேட்க பலரும் அந்த இல்லத்தில் கூடினர்.
அந்த இடத்திற்கு பேயுருவில் துந்துகாரியும் வந்தான்.அந்தச் சிறு வீட்டில் அவனுக்கு அமர்ந்து கதை கேட்க இடம் கிடைக்கவில்லை. காற்று உருவில் அங்கும் இங்கும் திரிந்து கொண்டிருந்தான்.இதைக் கவனித்தான் கோகர்ணன்.ஒரு மூங்கில் கழியைக் கொண்டு வந்து ஒரு மூலையில் சாய்த்து வைத்தான் அந்தக் கழியில் ஏழு கணுக்கள் இருந்தன.அதனுள் புகுந்து கொண்டு கதை கேட்குமாறு கூறினான் கோகர்ணா.துந்துகாரியும் அதேபோல் அந்த மூங்கில் உள்ளே அமர்ந்து கொண்டான்.
            கதை தொடங்கியது.துந்துகாரி பக்தியுடன் அதைக் கேட்டான்.முதல்நாள் கதை முடிந்தவுடன் முதல் கணுவாக இருந்த முடிச்சு உடைந்தது.இதே போல் ஏழு நாட்களும் துந்துகாரி கதை கேட்டு முடிந்ததும் அந்த மூங்கிலில் இருந்த ஏழு முடிச்சுகளும் முரிந்து துந்துகாரி வெளியே வந்து நின்றான்.அவன் கழுத்தில் துளசி மாலையுடன் கரம் கூப்பி நின்ற காட்சியைக் கண்டு கோகர்ணா இறைவனுக்கு நன்றி தெரிவித்தான்.அதே சமயம் அங்கு வந்த விஷ்ணு தூதர்கள் தங்களின் புஷ்பக விமானத்தில் அவனை அமருமாறு கேட்டுக் கொண்டனர்.துந்துகாரி தன் தம்பியை நோக்கி, "தம்பி, கோகர்ணா, நீ சப்தாஹம் என்ற எழுநாள் பாகவதப்ரவசனம் செய்ததால் அதைக் கேட்டு நான் என் பாபத்திலிருந்து விடுபட்டேன்.இதோ விஷ்ணு தூதர்களுடன் நான் வைகுண்டம் செல்கிறேன்.ஸ்ரீமத் பாகவதத்தின் மகிமையே மகிமை." என்றவன் புஷ்பகவிமானத்தில் அமர்ந்து விஷ்ணு தூதர்களுடன் விண்ணில் பறந்து மறைந்தான்.
       ஸ்ரீமத் பாகவதம் என்ற நூலைப் படித்ததாலும் படிப்பதைக் கேட்டதாலும் மனிதருக்கு பாபங்கள் விலகும். நல்ல கதி கிடைக்கும் என்ற உண்மையை இந்தக் கதைமூலம் புரிந்து கொண்டோம். 
       நாம் புரிந்து கொள்ளவேண்டிய செய்தியும் இதிலிருந்து கிடைக்கிறது.நல்ல நூல்களைப் படிப்பதனால் நமக்கு அறிவுடன் நல்ல பண்பும் வளர்கிறது.அதனால் எப்போதும் வள்ளுவர் கூறியபடி,"கற்க கசடறக் கற்க என்பதைப் புரிந்து கொண்டு அதன்படி கற்று அதன்பின் "அதற்குத் தக நிற்க "என்றபடி கற்றதனபடி நடப்போமானால் நாமும் வாழ்வாங்கு வாழ்வோம் என்பதையே இந்தக் கதை மூலம் நாம் தெரிந்து கொள்கிறோம் அல்லவா?






 







  

--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com