செவ்வாய், 17 ஏப்ரல், 2012

83.மொழிப்பற்று.

    ஐம்பெரும் காப்பியங்களுள் மணிமேகலை என்னும் காப்பியமும் ஒன்று.சிலப்பதிகாரத்தின் தொடர் காப்பியமானதால்  சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக்காப்பியங்கள் என்று வழங்கப்படுகின்றன. மணிமேகலையில்தான் இந்தக் கதை கூறப்பட்டுள்ளது.

செல்வம்  மிக்க  வணிக  குலத்தைச் சார்ந்தவன் சாதுவன்.இவன் மனைவி ஆதிரை என்ற கற்புக்கரசி.இவர்கள் இருவரும் இனிதே இல்லறம் நடத்தி வந்தனர்.சாதுவன் தன் வாணிபம் காரணமாக கடல் கடந்து செல்ல நேர்ந்தது.தன் மனைவியிடம் கூறிய சாதுவன் நிறைந்த நவரத்தினங்களுடன் கப்பலில் புறப்பட்டான். கப்பல் நடுக்கடலில் சென்று கொண்டிருந்தது.திடீரென்று பெரும் காற்று வீசியது.அது புயலாக உருவெடுத்தது. கப்பல் நிலை தடுமாறி கடலுள் மூழ்கியது.அந்தக் கப்பலில் பயணம் செய்த வணிகர்களும்  பயணிகளும் நீருள் மூழ்கினர்.சாதுவனும் மூழ்கினான்.

அந்தக் காலத்தில்ஆங்காங்கே இருந்த தீவுக் கூட்டங்களில்  மனிதர்களை உண்ணும் நாகர் என்ற இனத்தவர் வாழ்ந்து வந்தனர். அவர்களில் ஒரு கூட்டத்தினர்  நடுக்கடலில் ஒரு தீவில் வாழ்ந்து வந்தனர்.அவர்கள் கடலில் மூழ்கி கரை ஒதுங்கும் மனிதர்களைக் கொன்று தின்று வந்தனர்..
மயக்கமடைந்த சாதுவன் அந்த பயங்கரமான மனிதர் வாழும் தீவின் கரையில் ஒதுங்கினான். கரையில் நின்றிருந்த நாகர்கள் ஒரு மனித உடல் கிடப்பது கண்டு பெரும் ஆரவாரத்துடன் அவனைச் சுற்றி குதித்து ஆடினர்.அவர்கள் ஆரவாரத்துடன் பேசிக் கொண்டதைக் கேட்டுக் கண் விழித்தான் சாதுவன்.

 சாதுவன் கண் விழித்ததைப் பார்த்து அந்தக் கூட்டம் அவனைப் பிடித்து இழுத்துச் சென்றது. தளர்ந்த  நடையுடன்  சென்று  தலைவன்  முன் நின்றான் சாதுவன். அந்தத் தலைவன் எனப்பட்டவன் மனித எலும்புகளால் ஆன ஒரு ஆசனத்தில் அமர்ந்திருந்தான். பயங்கரமான தோற்றத்துடன் காணப் பட்டவனைப் பார்க்கவே அச்சமாக இருந்தது சாதுவனுக்கு.
அவனைப் பார்த்த நாகர்தலைவன் மிக்க மகிழ்ச்சியடைந்தான். இவன் நன்கு கொழுத்த உடம்புடன் உள்ளான். நமக்கு நல்ல இரை.
என்று மகிந்தான்.

அவனது பேச்சைக் கேட்ட சாதுவன் பணிவுடன் பேசினான்."ஐயா, நான் சோழநாட்டுக் காவிரிப்பூம் பட்டினத்தைச் சேர்ந்தவன்.கப்பல் கவிழ்ந்துபோனதால் இங்கு கரை ஒதுங்கியுள்ளேன்.எனக்கு நீங்கள்தான்  உதவி செய்ய வேண்டும் "
சாதுவன் நாகர் மொழியில் பேசியதைக் கேட்ட தலைவன் ஆச்சரியத்துடன் சாதுவனைப் பார்த்தான்."எங்கள் மொழி பேசும் நீயும் எங்களில் ஒருவன்."என்று கூறியவன் தன் பணியாட்களை அழைத்தான்."இவன் நம் இனம்.இவனுக்கு ஒரு ஆசனம் கொண்டுவா.
கள்ளையும்  ஊனையும் உண்ணக் கொடுங்கள்."
"ஐயா, கள்ளையும் ஊனையும் நாங்கள் உண்ண மாட்டோம். அவற்றை உண்பது மகா பாவம் என்று எண்ணுபவர் நாங்கள்."
"என்ன! கள்ளையும்ஊனையும்   உண்ணமாட்டீர்களா! ஆச்சரியமாக உள்ளதே,"
"ஐயா, மனிதனாகப் பிறந்திருந்தும் இந்த ஈனமான வாழ்க்கையை வாழ்வது ஏன்?உயர்ந்த மானிடப் பிறவி பெற்றிருந்தும் விலங்குகள் போல் வாழ்வது ஏன்?தயவு செய்து நான் சொல்வதைக் கேட்டு அதன்படி நடந்து வாழ்வில் முக்தி அடைய வழி பாருங்கள்."
"ஐயா, நீங்கள் சொல்வது உண்மைதான். இதுவரை விலங்குகளாக வாழ்ந்துவிட்டோம்.நீங்கள் சிறிது காலம் எங்களோடு இருந்து வீடுபேறு அடைய வழி கூறுங்கள்." தலைவனின் விருப்பப்படி சாதுவன் அங்கேயே தங்கி தினமும் அருள்மழை பொழிந்தான்.அதைக் கேட்டு அந்நாட்டு மன்னனும் மக்களும் மிக விரைவிலேயே மனம் திருந்தினர்.
சில காலம் அங்கேயே கழித்த சாதுவன் தன் தாய்நாட்டுக்குச் செல்ல விரும்பினான்.
தினமும் கடற்கரையில் நின்று ஏதேனும் கப்பல் வருகிறதா என்று கவனித்து வந்தான்.ஒரு நாள் அவன் விரும்பிய படியே சோழநாட்டு வணிகக்  கப்பல் ஒன்று வழிதவறி அந்த நாட்டுக்கு வந்து நின்றது..நாகர் வாழும் நாடு என்று அஞ்சி நடுங்கிய பயணிகள் அவர்கள் மத்தியில் சாதுவனைக் கண்டு மிகுந்த ஆச்சரியப் பட்டனர்.அச்சத்தையும் விடுத்தனர்.
நாகர்நாட்டு மக்கள் சாதுவனுக்கு பிரியா விடை கொடுத்தனர்.அவனுக்குத் திரண்ட செல்வத்தையும் கொடுத்து அந்தக் கப்பலில் அனு ப்பி வைத்தனர்.  
 தான் எப்போதோ விளையாட்டாகக் கற்றமொழிதன் உயிரைக் காத்தது மட்டுமல்லாமல்  ஒரு இனத்தையே நாகரிகமாக மாற்றி          
அமைக்கவும் காரணமாக அமைந்ததை உணர்ந்து வியந்தான்.நாகரிகமற்ற மக்களாயினும் தங்கள் மொழி . மீது அவர்கள் கொண்டிருந்த பற்றும் அன்பும் மதிப்பும் கண்டு மகிழ்ந்தான்.நாகரிகத்தின் உச்சியில் இருக்கும் நாம் எந்த அளவுக்கு நம் மொழியின் மீது பற்றுக் கொள்ள வேண்டும் என்ற உண்மையை இந்தக் கதை மணிமேகலை என்ற நூல் மூலம் நமக்கு அறிவிக்கிறது .நம் தாய்மொழியை நம் உயிரினும் மேலாக மதிக்கவேண்டும் என்ற எண்ணத்தை நம் உள்ளத்தில் தோற்றுவிக்கிறது.

ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com