வெள்ளி, 28 டிசம்பர், 2012

anumaan


-
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

101-ஆழி கடந்தான் வாழி.


இதிகாச நாயகனான் ஸ்ரீராமபிரான் மனைவிசீதையைப் பிரிந்து அவளைத் தேடிக் கொண்டு வரும்போது ரிஷ்ய முகப் பர்வதம் என்னும் இடத்தில் 

ஆஞ்சநேயனைச் சந்திக்கிறான்.

இருவர் உள்ளங்களும் அன்பினால் இணைகின்றன அனுமா என அழைத்து அவனைத் தன அன்பு வலைக்குள் கட்டுகிறான் ராமன்.

சீதையைப் பற்றிக கூறி  அவளைத் தேடிக் கண்டுபிடித்து வர  அனுமனே ஏற்றவன் என முடிவு செய்து அவனிடம் அப்பணியை தருகிறான் ராமன். . 

வானர சேனை புறப்படுகிறது.ராமன் அவர்களிடம், வழியில் ஒரு பறவை கூறியதான செய்தியைக்  கூறுகிறான்.

"அனுமா, சீதையை தெற்குப் பக்கமாக ஒரு அரக்கன் தூக்கிச் சென்றதைக் கண்டதாக ஜடாயு என்னும் பறவைகூறியது .எனவே எல்லாப் பக்கமும் 

செல்லுங்கள்.ஆனால் தெற்குப் பகுதிக்கு அனுமன் செல்லட்டும்" எனக் கூறினான்.

வானரங்கள் எல்லாம் ஆரவாரத்துடன் புறப்பட்டன.தெற்குப் பகுதிக்குச் செல்ல அனுமன் கடற்கரையில் வந்து நின்றான்.பெரிய கடல்.இதைத் தாண்ட 

வேண்டுமே.என்னால் எப்படி முடியும் இதைத் தாண்டிச் செல்லக் கூடிய வலிமை என்னிடம் உள்ளதா?எனச் சிந்தித்தவாறு நின்று விட்டான் அனுமன்.

அப்போது ஜாம்பவான் என்ற கரடிராஜா அனுமனைப் பற்றி அறிந்தவர் அவனது பண்பு நலன்களைக் கூறுகிறார்.இளம் வயதில் அனுமான் விளையாட்டுப் பிள்ளையாக ரிஷிகளைத் தொல்லைப் படுத்தி வந்தான். அதன் பயனாக ரிஷிகள்  அவனது பலம் அவனுக்கு மறந்து போகும். யாரேனும் நினைவு படுத்தினால்தான் அவனுக்கு அது மீண்டும் பயன்படும் என்று சாபமும் அதன் விமோசனமும் கூறியிருந்தனர்.இதனை அறிந்தவர் ஜாம்பவான் மட்டுமே.
அதனால் கடலை எப்படிக் கடப்பது என்று சோர்ந்திருந்த அனுமன் முன்பு அவனைப் பற்றி கூறலானார்."அனுமா, மிகவும் பராக்கிரமம் வாய்ந்தவன் நீ.உன்னால் ஆகாத செயல் என்று ஒன்றும் இல்லை."எனப் பலவாறு கூற அனுமன் நிமிர்ந்து நின்றான். அவன் பலமும் திறமையும் அவனுக்குப் புரிபடலாயிற்று.தேவர்கள் பல வரங்களை அளித்ததும் கடைசியில் பரமேஸ்வரன் சிரஞ்சீவி எனக் கூறியதும் அனுமனின் நினைவுக்கு வர 
தான் ஒருவனல்ல.தேவர்களின் தொகுப்பே நான் என்ற எண்ணம் எழ புதிய பலத்தோடு எழுந்தான் அனுமன்.ஜாம்பவானை வணங்கினான்.தன்னை யாரெனக் காட்டிய மகானல்லவா அவர்!
தெற்கு நோக்கி அனுமனைச் செல்லப் பணித்த ராமன் அடையாளமாகக் கொடுத்த கணையாழியை பக்தியுடன் எடுத்து வணங்கிய அனுமன்
இனியும் தாமதித்தல் தகாது என எண்ணி சூரியனையும் தன தந்தையான வாயுவையும் வணங்கினான் .அடுத்த கணம் அவன் உடலுக்குள் பெரிய மாற்றம் ஏற்பட்டது.ஆகாயத்தை நோக்கி பறந்தான் அனுமன்.
ராமபாணம் எப்படிப் பறக்குமோ அப்படிப் பறந்து கொண்டிருந்தான் அனுமன்.அப்போது கடலின் நடுவே இருந்து ஒரு பெரிய மலை அவன் முன்னே தோன்றி அவனது வழியை மறித்தது.அனுமன் திகைத்து நின்றான்.
மைனாகமலை என்ற பெயர் கொண்ட அந்த மலை அனுமனைப் பார்த்துப் பேசியது."அனுமா, ராம காரியமாகப் போகிறாய் நீ என்பது எனக்குத் தெரியும்.இந்திரனிடமிருந்து நான் தப்பிக்க உன் தந்தை ஒரு சமயம் உதவி புரிந்தார்.அவருக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு உனக்கு நான் உதவ எண்ணுகிறேன்.களைத்திருக்கும் நீ என்மலையில் சற்று நேரம் ஓய்வெடுத்துச் செல்,உன்மேனி என்மீது படுவதால் நானும் ராமனுக்கு உதவியவனாவேன்." என்ற மைனாகமலையின் சொற்களைக் கேட்டு அனுமன்,"மைனாகபர்வதமே, உன் சொல் கேட்டு மிக்க மகிழ்ச்சியடைந்தேன். ஆனால் ராமகாரியத்தை முடிக்கும் வரை எனக்கு களைப்பே ஏற்படாது உன் உபசரிப்புக்கு மிக்க நன்றி" எனக் கூறி "திரும்பி வரும்பொழுது உன் சொற்படி நடப்பேன். இப்போது என்னைப் போக விடுக"என்றான்.
மைனாகபர்வதத்தினால் அதற்குமேல் அனுமனைத் தடுக்க  இயலாமல் போகவே  மேலே போக விடுத்தான்.மீண்டும் வேகமெடுத்துப் பறந்தான் அனுமன்.ஒரே சீரான வேகத்தில் பறந்த அனுமனின் முன் ஒரு அரக்கி தன கோர உருவத்தோடு காட்சியளித்தாள்.பெரும் புதர் போன்ற தலைமயிரும். பெரும் மைதானம் போன்ற நெற்றியும்,இரண்டு குளங்களைப் போன்ற கண்களும், மரத்தின் தண்டு போன்ற மூக்கும், பெரிய குகை போன்ற வாயும் அவளைப் பார்க்கவே அருவருப்பாகவும் அச்சமாகவும் இருந்தது. அவள்தான் சுரசை என்னும் அரக்கி.
வேகமாகப் பறந்து கொண்டிருந்த அனுமான் தன வேகத்தைக் குறைத்து அவள் முன் நின்றான்.
"ஏ  அரக்கியே, என்னை ஏன் தடுக்கிறாய்?ராமகாரியமாக நான் செல்வதைத் தடுக்கும் நீ  யார்?"
"எனக்குப் பசிக்கிறது உன்னைத் தின்று என் பசியைப் போக்கிக் கொள்ளப் போகிறேன் " என்ற அந்த அரக்கி தன வாயை மிகவும் பெரிதாகத் திறந்தாள்.அனுமனும அவள் வாயை விடப் பெரிதாக வளர்ந்தான். திடீரெனத் தன உருவத்தை ஒரு கட்டைவிரல் அளவு சுருக்கிக் கொண்டுஅரக்கியின் வாய் வழியே உள்ளே நுழைந்து மூக்கின் வழியே வெளியே வந்து குதித்தான்.
சற்று நேரத்திற்குள் நடந்த நிகழ்ச்சியை அறிந்த சுரசை "வாயுகுமாரா உன் திறமையை மெச்சினேன்.உன் ஆற்றலை அறியவே நான் இவ்வாறு வந்தேன்.நீ செல்லும் காரியம் வெற்றி பெறும்.இனித் தொடர்ந்து செல்வாயாக" என்று வாழ்த்தி வழியனுப்பி வைத்தாள். அந்த சுரசை.
அவளிடமும் வரம் பெற்று தொடர்ந்து பறந்தான் அனுமன்.
இனி ஏதும் தடை வராது என்று எண்ணியவனது வேகம் தடைப் பட்டது. விண்ணில் பறந்து கொண்டிருந்தவனின் நிழல் நீரில் விழ அந்த நிழலைப் பற்றி இழுத்தாள் சிம்ஹிகை என்ற அரக்கி.அவள் இலங்கையைச சுற்றியுள்ள கடல் பகுதியைக்  காவல் காக்கும் அரக்கி.ஒருவரின் நிழலையே பற்றி அந்த நிழலுக்குரியவரையே தன வசம் இழுத்து சம்ஹாரம் செய்யக்கூடிய ஆற்றல் வாய்ந்தவள்.
அனுமன் தன உயரத்திலிருந்து கீழே இறங்கி சிம்ஹிகையைப் பார்த்தான். சுரசையைப் போலவே மிகப் பெரிய வாயும் தலையுமாக மிகக் கோர ரூபத்தோடு காட்சியளித்தாள் சிம்ஹிகை.சுரசையிடம் காட்டிய அதே தந்திரத்தை இவளிடமும் காட்டுவோம் என முடிவு செய்து கொண்டான்.சிறு தும்பிப் பூச்சியளவு தன்னைச் சுருக்கிக் கொண்டு அவளின் தொண்டை வழியாக வயிற்றுக்குள் சென்றவன் அடுத்த நொடி உடலை மலையளவு ஆக்கிக் கொண்டு சுரசையின் உடலைப் பிளந்து கொண்டு வெளியே வந்தான்.அலறிக் கொண்டே உயிரை விட்டாள்  அந்த அரக்கி.
தொடர்ந்து பறந்தவன் முன் இலங்கை தென் படலாயிற்று.
மகிழ்ச்சியுடன் அம்மாநகரின் வாயிலில்உள்ள லம்ப பர்வதத்தின் மேல்  சென்று குதித்தான் அனுமான்.
அங்கிருந்து இலங்கை மாநகரின் எழிலைப் பார்த்துத் திகைத்தான்.தேவேந்திரப் பட்டணம் போலத் திகழ்ந்தது இலங்கை.மெதுவாக இடது காலை முதலில் எடுத்துவைத்து நகருக்குள் புக எண்ணினான்.
அப்போது திடீரென்று இடி இடிப்பது போல் நகைப்புச் சத்தம் கேட்டது.எக்காளச் சிரிப்புடன் ஒரு பெண் அங்கு நின்றிருந்தாள். அவள் உருவமும் சுரசையின் உருவம்போல மிகப் பயங்கரமாக இருந்தது.சடை பிடித்த தலைமயிரும் கரிய பெரிய நெற்றியும் அதில் தீப்பிழம்பு போன்ற கண்களும் பெரிய பாறைகளை அடுக்கிவைத்ததுபோலப் பற்களும் கழுத்தில் அணிந்திருந்த கபாலமாலைகளும் அவள் ஒரு அரக்கி என்று பறைசாற்றின.
அவளை நேராகப் பார்த்தான் அனுமான்.அவளுக்கோ அதிர்ச்சி. தன்னைப் பார்த்து அஞ்சாமல் வேடிக்கை பார்க்கும் ஒரு வானரனைப் பார்த்து 
"யார் நீ?" என்று இடி போல முழக்கினாள். "நீ யார் என முதலில் கூறு."என பதிலுக்குக் குரல் கொடுத்தான்.அனுமான்.
தன்னை நோக்கி அஞ்சாத அனுமனைக் கண்டு திகைத்த அரக்கி "நான் லங்கிணி. இந்த இலங்காபுரியின் காவல் தேவதை. லங்காபுரிக்குள் அந்நியர் 
யாரையும் அனுமதிக்க முடியாது  இது ராவணனின் கட்டளை.ஓடிப்போ" என்று கர்ஜித்தாள்.
"நான் உள்ளே நுழைந்தே தீருவேன் "என்று கூறி முடிக்குமுன் லங்கிணி அவன் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டாள்.அடுத்தகணம் அனுமான் உள்ளம் கோபத்தீயால் நிறைந்தது. தன வலிமையைத் தன ஒரு கைக்குள் தேக்கி கையை மடக்கி அவள் மார்பில் ஓங்கி ஒரு குத்து விட்டான்.அவ்வளவுதான். வாயில் ரத்தம் கக்கியபடி லங்கிணி தரையில் சாய்ந்தாள். அவள் வாய் "பிரம்மன் சாபம் பலித்து விட்டது "என்று முணுமுணுத்தது.
அதைக்கேட்ட அனுமான் "லங்கிணி என்ன கூறுகிறாய் நீ?" என்றான் வியப்புடன்.
"நான் பிரம்மனை ஆராதிப்பவள்.  இந்த  இலங்கைக்கு ஒரு வானரன் வருவான் அவன் கையினால் நீ தாக்கப் படுவாய். அப்போது முதல் இந்த இலங்கைக்கு அழிவு காலம் ஆரம்பம்.விரைவிலேயே இந்த மாநகரம் அக்கினிக்கு இரையாகும் என்று கூறினார். அவர் கூறியபடி உன்னால் நான் தாக்கப் பட்டேன் இனி இந்த நகரம் அழிவது உறுதி.உனக்கு இனி வெற்றி கிட்டும். நான் வருகிறேன்" என்றபடி மறைந்தாள்  லங்கிணி.
மகிழ்ச்சியுடன் இடது காலை முன்னே வைத்து இலங்கைக்குள் புகுந்தான் அனுமான்.
இரவு வந்துவிட்டது.அரண்மனை முதல் அனைத்து இல்லங்களிலும் மக்கள் உறங்கும் இடங்கள் முழுவதும் தேடினான்.
  தோளில் அவன் ஆயுதமான "கதை"யைச  சுமந்துகொண்டு நிமிர்ந்த நடையும் எங்கே சீதை என்று தேடிய கண்களுமாக இலங்கை நகரின் வீதிகளில் ராஜநடை நடந்து தேடினான்.
நேரம் ஓடிக்கொண்டிருந்தது. அழகிய அரண்மனைக்குள் புகுந்த அனுமான் ராவணன் மனைவி மண்டோதரியைப் பார்த்து சற்றே சந்தேகப் பட்டான்.
பின் மாற்றான் அரண்மனையில் ஜானகி மாதா சயனித்திருக்க மாட்டாள் என்று தெளிந்து தொடர்ந்து தேடினான்.
கும்பகர்ணன் விபீஷணன் போன்றோர் அனைவரின் அரண்மனைகளிலும் தேடிக் களைத்தான். உயரமான உப்பரிகையில் நின்று பார்த்தபொழுது தொலைவில் அடர்ந்த வனம் தெரிவதைக் கண்டான்.அதில்தான் சீதை சிறைப் பட்டிருக்கவேண்டும் என முடிவு செய்து அங்கு மரத்தினூடே ஒளிந்து சென்றான். தான் ஒளிந்திருந்த சிம்சுபா மரத்தை விலக்கிக் கீழே பார்த்தான்.
பகல் நேரத்து நிலவாக ஒளியிழந்து சோகமே உருவாக அமர்ந்திருந்த சீதையைக் கண்டான். 
ராவணனின் ஆசை வார்த்தைகளால் அவமானமும் துயரமுமடைந்த சீதை தன உயிரை மாய்த்துக் கொள்ளத் துணிந்தாள். அதைத் தடுக்க ராம நாமத்தை ஜபிக்கத் தொடங்கினான் அனுமான்..அதிகாலை நேரம் ராம நாமத்தை கேட்ட சீதை மனம் மகிழ்ந்து  தன முன் நின்ற அனுமனைக் கனிவுடன் பார்த்தாள்.
சீதையிடம் தான் ராமதூதன் என்பதை நிலைநாட்டி ராமன் கொடுத்த கணையாழியைத் தந்து சீதையிடமிருந்து சூளாமணியைப் பெற்றுக் கொண்டு சீதையிடம் விரைவில் ஸ்ரீராமர் படையுடன் வருவார் எனக் கூறிவிட்டு சீதையிடம்  ஆசி பெற்றுப்  புறப்பட்டான் அனுமான்.
பின் அசோகவனத்தையும் ராவணனின் பல படைவீரர்களையும் அழித்தான். ராவணனை எச்சரித்துவிட்டு அவன் தன வாலில் வைத்த நெருப்பால் இலங்கையை எரியூட்டி ராமன் முன் வந்து நின்றான்  கண்டேன் சீதையை என்று கூறி தெற்கு திசை நோக்கி கற்பின் சிகரமாம் சீதாதேவியை வணங்கி ராமனிடம் சூளாமணியைக் கொடுத்தான் அனுமன்.
சுந்தரனான அனுமனின் பெருமையைக் கூறுவது சுந்தரகாண்டம். அனுமனின் அறிவுத் திறன்,செயல்திறன், சொல்லாற்றல்,பக்தி ஆகியவற்றை விளக்குவது சுந்தரகாண்டம். இதைப் படிப்பவர்களுக்கு அனுமனுக்குள்ள ஆற்றல் அனைத்தும் கிட்டும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

இந்தப் புத்தாண்டில் நம் இளைய சமுதாயம் அனுமனைப் போல ஆற்றலும் அறிவும் பெற்றுத் திகழவேண்டும் என்று உங்கள் பாட்டி வாழ்த்துகிறேன்.
ஜனவரி 11-ம் நாள் அனுமத் ஜெயந்தி வருகிறது. அந்தநாளில் கீழ்வரும் பாடலைப் படித்து அனுமனின் அருளைப் பெறக் கேட்டுக் கொள்கிறேன்.
                                                       "அஞ்சிலே ஒன்று பெற்றான் (காற்று)   
                                                         அஞ்சிலே ஒன்றைத் தாவி(கடல்-நீர்) 
                                                         அஞ்சிலே ஒன்று ஆறாக (ஆகாயம்)-ஆரியர்க்காக ஏகி 
                                                         அஞ்சிலே ஒன்று பெற்ற (பூமாதேவி-நிலம்)அணங்கைக் கண்டு  அயலார் ஊரில் 
                                                         அஞ்சிலே ஒன்றை வைத்தான் (நெருப்பு)
                                                         அவன் நம்மை அளித்துக் காப்பான்."
   "அனைவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்"

ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com