வெள்ளி, 2 ஏப்ரல், 2010

முற்பகல் செய்யின்

முற்பகல் செய்யின்

பல ஆண்டுகளுக்கு முன் பத்ராசலம் என்ற ஊரில் கோபன்னா என்ற ஒரு அதிகாரி இருந்தார். அவர் சிறந்த ராமபக்தராக இருந்தார். அவர் ஹைதராபாத் நவாபான தானேஷா விடம் பணிபுரிந்து வந்தார். நவாப் தானேஷா இவருக்கு பத்ராஜலத்தின் தாசில்தார் பதவி கொடுத்து அனுப்பியிருந்தார். இவரும் வரி வசூலிக்கும் பணியைச் செய்து வந்தார். ஒரு முறை ஆறு லக்ஷம் பொன் வரியாகச் சேர்ந்திருந்தது. மிகவும் சிதிலமடைந்திருந்த அந்த ஊரிலுள்ள ராமர் கோயிலை செப்பனிட்டு கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்று விரும்பினார் கோபன்னா. ராமரின் மீது பக்தி அதிகமான காரணத்தால் எல்லாச் செலவையும் நவாபின் வரிப்பணத்தை வைத்தே செய்து முடித்தார். சீதா லக்ஷ்மண ஹனுமத் சமேதரான ஸ்ரீ ராமபிரான் கோவில் அழகுடன் கம்பீரமாகத் திகழ்ந்தது. அத்துடன் அழகிய வைர வைடூர்ய ஆபரணங்கள் கொண்டு சீதா ராமரை அழகு படுத்திமகிழ்ச்சி கொண்டார். அடியார்கள் வருவதும் வழிபடுவதுமாக இருப்பதைக் கண்டு கோபன்னாவின் மனம் அளவற்ற ஆனந்தம் கொண்டது.

கடந்த ஒரு வருடமாக கோபன்னா வரிப்பணம் தராது கோவிலைச் சீரமைத்த செய்தியைக் கேள்விப்பட்டநவாப் தானேஷா மிகுந்த கோபம் கொண்டார். உடனே ராமதாசரை அழைத்து விசாரித்தார். அவர் வரிப்பணத்தை எடுத்துச் செலவு செய்தது உண்மை என்று அறிந்து கொண்டார். அந்தப்பணம் முழுவதையும் கஜானாவில் கட்டும் வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். ராமதாசர் சிறையில் அடைக்கப்பட்டுச் சித்ரவதை செய்யப்பட்டார்.

இந்தத் தண்டனை ஒருமாதம் ஒரு வருடம் அல்ல. பன்னிரண்டு ஆண்டுகள் இப்படிச் சிறையில் துன்பப்பட்டார். முச்சந்தியில் நிறுத்திக் கசையடி கொடுப்பதும் தலையில் பாறாங்கல்லை வைத்துச் சுமக்கவைப்பதும் சுடுமணலில் கை கால்களைக் கட்டி உருட்டுவதுமாக சித்ரவதை தொடர்ந்தது.
மக்கள் ராமனின் பக்தனுக்கா இந்தக் கதி என்று வருந்தினர். கோபன்னாவும் ராமனைப் பலவாறு துதித்து சோர்ந்து போனார்.ராமரை நிந்திக்கத் தொடங்கினார்.
"ஹே ராமா! உன்னை என் தெய்வமாக நினைத்தேனே.எல்லாவற்றையும் உனக்குத் தானே செலவிட்டேன்.கோவிலைக் கட்டினேன். நகைகளும் பொன்னாடைகளும் எவ்வளவு வாங்கினேன்.உன் மாமனா வாங்கினான்?எல்லாம் தானேஷாவின் பணமஅன்றோ? எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு வேடிக்கை பார்க்கிறாயே?இன்னும் இந்த கோபன்னா எத்தனை சித்ரவதைப் படுவான்? இனி தாங்க முடியாதய்யா."

என்று கதறினார் கோபன்னா. ராமரின் மனம் இளகுவதாக இல்லை.சீதையின் கனிந்த முகத்தை எண்ணிப் பார்த்தார். தாயின் கருணை தன்னைக் காக்கும் என்று நம்பினார்.
"அம்மா!சீதம்மா! என் துயரம் போக்க நீயாவது ராமனிடம் சொல்லக்கூடாதா? தாயே, நீ கருணையின் வடிவம். உன் மகனின் துயர் தீர்க்க வழி காட்டம்மா."என்று கதறிய கோபன்னா மயக்கமானார்.
அப்போது வைகுண்டத்தில் சீதாதேவி "சுவாமி, கோபன்னா படும் துயரம் உங்கள் கண்களில் படவில்லையா?"என்று நினைவு படுத்தினாள்.

"சீதே! அவன் முன் பிறவியில் ஒரு கிளியைப் பிடித்துக் கூண்டில் அடைத்துத் துன்புறுத்தினான். பன்னிரண்டு நாட்கள் அடைத்து வைத்ததால் இந்தப் பிறவியில் பன்னிரண்டு ஆண்டுகள் இந்தச் சிறைவாசம். இன்றோடு அவனது தண்டனை முடிகிறது. இன்று இரவே தானேஷாவின் கடனைத் தீர்த்துவிட்டு வருவோம்."

"சுவாமி, ஆயுள் முழுவதும் உங்களையே பூஜித்த கோபன்னாவுக்குக் காட்சி தராமல் தானேஷாவிற்குக் காட்சியளிப்பது ஏன்?"
"அதுவும் முன்வினைப் பயனே. முன் பிறவியில் தானேஷா காசியில் ஒரு அந்தணனாக இருந்தான். இறைவனுக்கு ஆயிரம் குடங்கள் அபிஷேகம் செய்தால் இறைவன் தரிசனம் கிட்டும் என்று தொடங்கினான்.ஆனால் 999 குடங்கள் முடிந்தும் இறைவன் காட்சி தெரியவில்லையே என்று குடத்தைப் போட்டு
உடைத்து விட்டான்.அதன் பயனாகவே அவன் இவ்வாறு பிறக்க நேரிட்டது.அதுவும் அரசனாகப் பிறந்துள்ளான். அவனுக்கு சிவபெருமான் இப்பிறவியில் ராமதரிசனம் பெறுவாய் என்று வரமளித்துள்ளார்.ஆகவே அவனுக்குக் காட்சி தரவேண்டும்."
புன்னகையுடன் கூறிய ராமபிரான் இலக்குவன் பின்தொடர தானேஷாவின் அரண்மனைக்குப் புறப்பட்டார்.

நடுநிசி.தானேஷாவின் அந்தப்புரம். கனவு கண்டு கண் விழித்த தானேஷாவின் முன்னால் பேரழகுடன் சேவகன் வேடத்தில் ராம லக்ஷ்மணர் நின்றனர்.அவர்களின் பேரழகு தானேஷாவின் கண்களைக் கூசச் செய்தது."யார் நீங்கள்?எங்கிருந்து வருகிறீர்கள்?"
"நவாப்ஜி! நாங்கள் பத்ராஜலத்திலிருந்து வருகிறோம். நாங்கள் கோபன்னாவின் பணியாட்கள்.நான் ராம்ஜி இவன் லக்ஷ்மண்ஜி."
"நீங்கள் எத்தனை வருடங்களாக கோபன்னாவிடம் பணி புரிகிறீர்கள்?அவர் உங்களுக்கு எவ்வளவு சம்பளம் தருகிறார்?"
"நாங்கள் பல தலைமுறைகளாக அவர்களுக்குப் பணிவிடை செய்கிறோம்.கோவில் பிரசாதத்துக்கு ஆசைப் பட்டுத்தான் நாங்கள் பணி செய்கிறோம்."
"சரி,இப்போது இங்கு வந்த காரணம் என்ன?"
"என் கடனைத் தீர்த்து வா என கோபன்னா கூறினார். பணத்தைக் கொண்டு வந்தோம்.என்று கூறி கை யிலிருந்த பையை அவிழ்த்துக் கொட்டினான். தங்க நாணயங்களின் ஒளியினால் அந்த அறையே மின்னியது.
"உமக்குச் சேரவேண்டிய ஆறு லக்ஷம் வராகன் இருக்கிறதா பார்த்து ரசீது கொடுங்கள்."

தானேஷா அந்த அழகு உருவங்களையே பார்த்து பிரமித்து நின்றிருந்தான்.
சீக்கிரம் கொடுங்கள். என்ற ராம்ஜியின் குரல் கேட்டு உடனே ரசீதைக் கொடுத்தான் நவாப். மறுகணம் அந்த சேவகர் இருவரும் மறைந்தனர்.
அடுத்த கணம் இருண்ட சிறை வாயிலில் நின்றனர்.கோபன்னாவின் அருகே அந்த ரசீதை வைத்தனர். சிறையின்
அவல நிலையைப் பார்த்த லக்ஷ்மணன் ராமனிடம் "அண்ணா! சுவை மிக்க உணவை நமக்குப் பிரசாதமாக்கிப் பின் ஊருக்கெல்லாம் வழங்கிய பக்தனுக்கு முன்பே கருணை காட்டியிருக்கலாமே?"என்றான்.
"லக்ஷ்மணா!ஊழ்வினை. வாயில்லாப் பட்சியைக் கூண்டிலே அடைத்து வைத்த பாவம்தான் இந்தச சிறைவாசம்."
இருவரும் கோபன்னாவிற்கு ஆசி வழங்கி விட்டு மறைந்தனர்.

கோபன்னாவின் சேவகர் கொடுத்தமுஹராக்களைக்கண்டுஅதிசயித்தார்தானேஷா.பத்ராஜலத்திலிருந்து வந்தவர் ராம லக்ஷ்மணர் தான் என அறிந்து கொண்டார்.உடனே ஓடினார் சிறைச் சாலைக்கு. அவரது அகக்கண் திறந்தது. கோபன்னாவை விடுவித்து அவர் கால்களில் பணிந்தார்.

"கோபன்னா! உமது பெருமையை அறிந்து கொண்டேன்.பக்தனுக்காக பகவானே வந்தார் என அறிந்து கொண்டேன்.உமது அந்த பணியாட்களைப் பார்த்துக் கொண்டே இருக்கவேண்டும் போல உள்ளதே! உமது கருணையினால் அந்த ராம லக்ஷ்மணர் இருவரையும் தரிசிக்கும் பெரும் பேறு கிடைத்தது. கோபன்னா இனி நீர் கோபன்னா அல்ல. ராமதாசர்."என்று கோபன்னாவின் பாதங்களில் வீழ்ந்தான் நவாப்.

நடந்த நிகழ்ச்சிகளைக் கேட்டறிந்த கோபன்னா தானேஷாவை அணைத்துக் கொண்டார்.
"நீர் பாக்யசாலி. பல ஆண்டுகள் அவரின் பக்தனான எனக்குக் காட்சி கிட்டவில்லை. நீர் அந்தப் பேறு பெற்றீர்.
ராமா!எனக்கும் காட்சி தர மாட்டாயா?"என ஏங்கினார்.

ராமதாசர் தானேஷாவினால் பூஜிக்கப்பட்டார்.பெரும் பொருளோடு மிகுந்த மரியாதையுடன் அவரை பத்ராஜலத்திற்கே வழியனுப்பிவைத்தார் தானேஷா.
அதன்பின்ராமதாசர் நெடுநாள் ராமசேவை செய்து வந்தார். ராமன்மீது பலபாடல்களைப் பாடினார். ஒருநாள் ராமனைப் பாடியவாறு இருந்த இவரது முன்னால் ஒரு பொன்மயமான தேர் வந்து நின்றது.அந்தத் தேரின் மீது அமர்ந்த ராமதாசர் ராமநாம உபதேசம் செய்தவாறே வானவெளியில் பறந்து மறைந்தார்.
நாம் எந்த உயிருக்கும் தீங்கு இழைத்தல் ஆகாது என்பதை இவரது கதையின் மூலம் அறிந்து கொள்ளலாம்.


ஞாயிறு, 28 மார்ச், 2010

சோதிடனைக் கொன்ற கதை

ஒரு சமயம் பீஜப்பூர் சுல்தான் கிருஷ்ண தேவ ராயரின் படை வலிமையைப் பற்றிக் கேள்விப்பட்டான்.ராயர் சுல்தானுடன் போர் தொடுக்க எண்ணியுள்ளதையும் அறிந்து கொண்டான்.இதை எப்படியேனும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று எண்ணம் கொண்டான்.
அதனால் ஒரு சூழ்ச்சி செய்தான்.அரசர் ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர் என்பதை அறிந்து கொண்டான். ரகசியமாக அரண்மனை ஜோதிடரை சந்தித்தான் சுல்தான்.நிறைய பொன்னைக் கொடுத்து ராயரின் படையெடுப்பை எப்படியாவது தடுத்து நிறுத்துமாறு கேட்டுக் கொண்டான்.
 
                                   பொன்னுக்கு ஆசைப்பட்ட அந்த வஞ்சக ஜோதிடன் நேராக விஜயநகர அரண்மனைக்கு வந்தான்.கிருஷ்ணதேவ ராயர் படையெடுக்கத் தயாராக உள்ளதை அறிந்துகொண்டான். அவன் உள்ளம் வேகமாக வேலை செய்தது. மன்னர் முன் சென்று நின்றான்.மிகவும் தயங்குவது போல் பாசாங்கு செய்தவன் "அரசே! தற்போது தாங்கள் படையெடுப்பது சரியல்ல.ஏனெனில் தங்களின் கிரகநிலை தற்போது சரியில்லை.எனவே படையெடுப்பில் தற்போது இறங்க வேண்டாம்." என்று கூறினான். மந்திரி பிரதானிகளும் அதையே கூறினர். அவர்களும் மன்னரின் உயிரைப் பெரிதென மதித்தனர்.அரசியரும் மன்னரையுத்தத்திற்குப்  போகவேண்டாம் எனத் தடுத்தனர். அரசரும் யோசித்தார்.தெனாலிராமன் இவற்றையெல்லாம் கவனித்தவண்ணம் இருந்தான்.அவனுக்கு ஜோதிடன் மேல் சந்தேகம் ஏற்பட்டது.எனவே மன்னனிடம்"அரசே! நீங்கள் ஏன் தயங்குகிறீர்கள்? சோதிடன் சொன்ன பலன்கள் எல்லாம் நடந்து விடுகின்றனவா என்ன?" என்று தைரியம் சொன்னான்.
 
ராயரும் அதை ஆமோதித்தார்."ராமா! நீ சொல்வதும் சரிதான். ஆனால் இதை எப்படி மற்றவர்களுக்கு நிரூபிப்பது?சோதிடம் பொய் என்று நிரூபிப்பவருக்குபத்தாயிரம்  பொன் பரிசு என்று அறிவியுங்கள்" என்றும் ஆணையிட்டார்.
 
தெனாலிராமனுக்கு மிக்க மகிழ்ச்சி.
"அரசே! நானே இதை நிரூபிக்கிறேன். ஆனால் அந்த சோதிடனுக்குத் தண்டனை தருகின்ற உரிமையையும் எனக்குத் தரவேண்டும் " என்று கேட்டுக்கொண்டான். மன்னரும் இதை ஒப்புக்கொண்டார். 
 
     மறுநாள் சபா மண்டபத்தில் சோதிடனும் தெனாலிராமனும் எதிரெதிரே அமர்ந்திருந்தனர். ராமன் சோதிடரைக் கூர்ந்து கவனித்தான்.அவர் மேல் அவனுக்குச் சந்தேகம் உண்டாயிற்று.
அவன், "சோதிடரே! நீர் கூறும் சோதிடம் தவறாமல் பலிக்குமல்லவா?" என்றான் மெதுவாக.
 
 "அதிலென்ன சந்தேகம்? நான் சொன்னால் அது கண்டிப்பாக நடந்தேறும்."
தன் கரங்களைக் குவித்தபடியே "நீங்கள் பல்லாண்டு வாழ்ந்து பலன்களைச் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்" என்றான் ராமன்  பணிவாக.
சோதிடனும் கர்வத்துடன் தலையை அசைத்துக் கொண்டான். 
"அப்படியானால் தங்களின் ஆயுள் காலத்தையும் தாங்கள் அறிவீர்கள் அல்லவா?"
 
"ஓ! நான் இன்னும் நாற்பது ஆண்டுகள் உயிர் வாழ்வேன். இது சத்தியம்." சோதிடன் பெருமையுடன் கூறினான்.
 "உமது வாக்கு இப்போதே பொய்த்து விட்டதே! " என்றவாறே அருகே நின்ற சேனாதிபதியின் வாளை உருவி அந்த வஞ்சக சோதிடனின் தலையை வெட்டினான் ராமன்.
 
அனைவரின் திகைப்பையும் நீக்கிய ராமன் அந்த சோதிடனின் சுவடிக்கட்டை பிரித்துக் காட்டினான். அதனுள் பிஜாபூர் சுல்தான் சோதிடனுக்கு அனுப்பிய கடிதங்கள் இருக்கக் கண்டான். அந்த சோதிடன் பீஜப்பூர் சுல்தானின் கைக்கூலி என்று அறிந்து அவனுக்குத் தண்டனை அளித்ததற்காக ராமனைப் பாராட்டினார்.தன் வாக்குப் படியே பத்தாயிரம் பொற்காசுகளையும் அளித்து மகிழ்ந்தார். அதன்பின் தன் எண்ணப்படியே பீஜபூரையும் குர்ப்பாகானையும் வெற்றி கொண்டார் கிருஷ்ணதேவராயர்.

வியாழன், 25 பிப்ரவரி, 2010

ராதையின் பக்தி

அலங்கார ஸ்வரூபனாக கண்ணன் பாமாவின் இல்லத்துள் புகுந்தான். அவனைக் கண்டதும் முகத்தைத் திருப்பிக் கொண்டு அமர்ந்தாள் பாமா. அவளைக் கண்ட கண்ணன் அவளின் முன்னால் அமர்ந்து அவளது முகவாயைப் பிடித்துக் கொஞ்சினான்.திரும்பிப் பாராமலேயே பேசினாள் பாமா. "இந்த அலங்காரங்களை அவளிடம்தான் செய்து கொள்ள வேண்டுமா?ஏன்?நான் செய்ய மாட்டேனா?"
"இதற்காகவா இத்தனை கோபம்?வேண்டுமானால் இந்த அலங்காரங்களைக் கலைத்து விடுகிறேன். நீ எனக்கு அலங்காரம் பண்ணி விடு."
பாமாவின் கரங்களைப் பற்றிக்கொண்டு கெஞ்சினான் கண்ணன்.
ஒரு வழியாக சமாதானமானாள் பாமா. அன்று முழுவதும் கிருஷ்ணன் பாமாவின் இல்லத்திலேயே கழித்தான்.
சிலநாட்கள் கழிந்தன. அன்றும் பாமாவிற்குக் கோபம். என்ன என்று புரியாமலேயே தவிப்பது போல நடித்தான்   கண்ணன்.   
வெகுநேரம் கண்ணன் கெஞ்சவே சற்றே கோபம் தணிந்தாள் பாமா.
"நீங்கள் என்னிடம் இருப்பதை விட அந்த கோபிகையரிடமே அதிக நேரம் தங்கிவிடுகிறீர்களே. அதுதான் எனக்குப் பிடிக்கவேயில்லை."
"இனி அந்த கோபியருடன் சேருவதில்லை. உனக்கு மகிழ்ச்சிதானே பாமா?" பாமா சற்றே புன்னகையை உதிர்த்தாள். சினம் தணிந்த பின் தன் கிருஷ்ணனின் மீது அன்பைப் பொழிந்தாள். கண்ணனும் அவள் அன்பில் திளைத்தான்.
                         இரண்டு நாட்கள் கழிந்தன.அன்றும் பாமா கண்ணனை எதிர்பார்த்துக் காத்துக்கிடந்தாள்.  கண்ணன் வரவில்லை. ஆனால் கண்ணனைத் தேடி அவன் அன்பிற்குரியவளான ராதை பாமாவின் வீட்டிற்குள் நுழைந்தாள்.அவளைப் பார்த்ததும் அவள் மீது பொறாமையும் கோபமும் கொண்டாள் பாமா. தனக்கே உரிய கண்ணன் மீது அவள் அன்பு செலுத்துவது பாமாவிற்குப் பிடிக்கவில்லை.இருப்பினும் இல்லம் வந்தவளை 
கல்கண்டு கலந்த பால் கொடுத்து உபசரித்தாள்.
                          அதை மகிழ்ச்சியுடன் வாங்கிய ராதை" கிருஷ்ணார்ப்பணம்"  என்று சொல்லிப் பருகினாள். மீண்டும் கண்ணனைத் தேடி வெளியே ஓடிவிட்டாள் ராதை.
                           வழக்கம்போல் மாலைவேளையில் கண்ணன் பாமாவைத் தேடி அவளது இல்லத்திற்கு வந்தான்.வரும்போதே மிகுந்த வேதனையை முகத்தில் தாங்கி வந்தான். நேராக ஊஞ்சலில் போய்ப் படுத்துக் கொண்டான். ஒருநாளும் இல்லாத் திருநாளாக கண்ணன் இப்படிச் செய்தது பாமாவுக்குப பேரதிர்ச்சியாக இருந்தது.கண்ணனின் அருகே ஓடி வந்தாள்.அவன் முகத்தை வருடினாள்."சுவாமி! என்னவாயிற்று தங்களுக்கு?ஏன் இந்தச் சோர்வு? "
"பாமா! என் கால் மிகவும் வலிக்கிறது. ஏனென்று தெரியவில்லை." என்றபடியே கால்களைக் காட்டினான் அந்த மாயக் கள்ளன்.பாமாவும் அவன் காலடியில் அமர்ந்து கால்களைத் தன் மடிமீது வைத்துக் கொண்டு வருடினாள்.
திடுக்கிட்டாள். கண்ணனின் பாதங்கள் இரண்டிலும் பெரிய பெரிய கொப்புளங்கள் இருந்தன.துடித்து விட்டாள் பாமா. "தங்களுக்கு ஏனிந்த நிலை சுவாமி?"
"பாமா! நான் என்ன செய்வேன்? யாரோ என் பக்தைக்கு சூடான பானம் அருந்தக் கொடுத்துள்ளார். அவள் அதை எனக்கு அர்ப்பணித்துவிட்டுப் பின் பருகினாள். அந்தப் பானத்தில்  இருந்த சூட்டை நான் ஏற்றுக் கொண்டேன். அந்த பக்தை தன்  உள்ளத்தில் எப்போதும் என் பாதங்களை வைத்துப் பூஜிக்கிறாள்.அத்தகைய பக்தையைக் காக்க வேண்டியது இந்தப் பரந்தாமனின் கடமையல்லவா பாமா?"
பாமா வெட்கித் தலை குனிந்தாள். ராதைக்குத் தான் கொடுத்த சூடான பால்தான் இந்த நிலைக்குக் காரணம் என்பதைத் தெரிந்து கொண்டாள்.அவள் கண்களில் கண்ணீர் பெருகியது.
"பரந்தாமா! என்னை மன்னித்து விடுங்கள். நான் செய்த தவறுதான் உங்களின் இந்த நிலைக்குக் காரணம்.தங்கள் மீது அளவு கடந்த அன்பைப் பொழியும் ராதையின் மீது நான் பொறாமைப் பட்டேன். அதன் காரணமாக மிகவும் சூடான பாலை அவள் பருகக் கொடுத்தேன்.அவள் துன்பப் படுவாள் என நினைத்தேன். நான் செய்த இந்தத் தவறை மன்னித்து விடுங்கள்.உண்மையான பக்தி கொண்ட ராதாவை நான் சோதித்து விட்டேன். என் தவறைப் பொறுத்தருளுங்கள்." கண்ணனின் கால்களைப் பற்றிக் கொண்டு பாமா கதறினாள்.
அவளது கண்ணீர் பட்ட மறுகணமே கொப்புளங்கள் மறைந்தன. அதனுடன் சேர்ந்து பாமாவின் பொறாமையும் மறைந்தது.
__________________________________________________________________________________________________________--

காளிதாசனின் பெருமை.

போஜராஜனின் அவையில் நவரத்தினங்கள் என்று சொல்லத்தக்க ஒன்பது கவிகள் இருந்து அவையை அலங்கரித்தனர்.அவர்களுள் தண்டிகவியும் காளிதாசனும் மிகவும் சிறப்புப் பெற்றவர்கள்.அதிலும் காளிதாசன் மன்னனின் தனி அன்பையும் நட்பையும் பெற்றவன்.முதன்மைக் கவியான தன்னை விட காளிதாசன் எந்த விதத்தில் உயர்ந்தவன் என்று மன்னன் காளிதாசனைக் கொண்டாடுகிறார்? என மனதுக்குள் பொறாமை கொண்டார் தண்டிகவி.
இருப்பினும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

ஒருநாள் தண்டி வழக்கம்போல் சரயு நதியில் நீராடி நதிக்கரையில் யோகநிலையில் அமர்ந்தார். வெகு நேரம் கடந்து கண்களைத் திறந்தார். காளிதாசன் அப்போதுதான் நதியில் மகிழ்ச்சியோடு நீந்தி நீராடிக் கொண்டு இருந்தான். ஒரு கவியாக இருப்பவன் அத்துடன் பெரும் காளி பக்தனாக இருப்பவன் சூரியன் உதித்து இத்தனை நேரம் கடந்து நீராடுகிரானே! இவன் எப்போது காளியைப் பூஜை செய்வது அவைக்கு எப்போது வருவது.இன்று அவைக்குத் தாமதமாகத்தான் வரப்போகிறான். என எண்ணியவாறே புன்னகையுடன் காளிதாசனை ஏளனமாகப் பார்த்தவாறே சென்றார் தண்டிகவி.

                                   இல்லம் சென்ற கவி ஆடை ஆபரணம் பூண்டு அலங்கரித்துக் கொண்டு உணவு உண்டு அவைக்கு வந்தார். அவைக்கு வணக்கம் 
கூறியவாறே காளிதாசனின் இருக்கையைப் பார்த்தவுடன் திகைத்தார். அங்கே அவருக்கு முன்னாலேயே அவைக்கு வந்து அமர்ந்திருந்தான் காளிதாசன். அத்துடன் பொருள் பொதிந்த புன்னகையை தண்டியின் மேல் வீசியவாறே அமர்ந்தான். தனக்குப் பின்னால் தான் நீராடியவன் எப்படி இவ்வளவு விரைவில் வந்து அமர்ந்துள்ளான் என எண்ணியவாறே தன் ஆசனத்தில் அமர்ந்தார் தண்டிகவி.

                                    அன்று தண்டியின் மனம் நிலை கொள்ளாமல் தவித்தது. காளிதாசன் எந்த கடமையும் செய்யாமல் அவைக்கு வந்துள்ளான் அதனால்தான் இவ்வளவு விரைவில் அவனால் வரமுடிந்துள்ளது.ஆனால் மன்னனோ இவனைத் தன் உயிர் நண்பனாகவும் சிறந்த 
காளிபக்தனாகவும் எண்ணி பெருமைப் படுததுகிறாரே? எப்படியும் இவனது பெருமையைக் குலைத்து விடவேண்டும்.மீண்டும் சிறந்த காளிபக்தன் என்ற பெயர் எனக்கே வரும்படி செய்ய வேண்டும் என முடிவு செய்து கொண்டார்.

                                   வழக்கம்போல் தண்டிகவி நதியில் ஸ்நானம் செய்து கரையில் கண்களை மூடிமனதுக்குள்  இறைவியைப் பூஜித்தார். அன்றும் அவர் கண்களைத் திறந்தபோது புன்னகையுடன் காளிதாசன் தன்னைக் கடந்து செல்வதைக் கண்டார். இதே நிகழ்ச்சி தொடர்ந்து பல நாட்கள் நீடித்தது.சூரிய உதயத்திற்கு முன்பே தண்டிகவி நீராடி கரையில் அமர்ந்து தேவியைப் பூஜிப்பதும் வெகு நேரம் கழித்து காளிதாசன் வருவதுமாக நாட்கள் நகர்ந்தன.

                                அன்று தண்டி ஸ்நானம் முடித்து ஜபதபங்களை முடித்து நிஷ்டையில் அமர்ந்து காளியைப் பூஜிக்கத் தொடங்கினார்.ஆனால் அவரது கவனம் நீராடும் காளிதாசன் மேல் சென்றது. அதனால் மனதில் காளிக்கு அலங்காரம் செய்யும் போது கழுத்தில் மாலையிடாமலேயே அவள் தலையில் கிரீடத்தைச் சூட்டிவிட்டார். சட்டென கவனத்தைத் திருப்பியவர் தன் பிழையை அறிந்தார்.இப்போது என்ன செய்வது? இப்படியே மாலையிட்டால் கிரீடம் விழுந்துவிடும் கிரீடத்தை எடுத்துவிட்டு மாலையிட்டால் அலங்காரத்தைக் கலைத்த தோஷமாகுமே என்ன செய்வது 
எனத் திகைத்தவாரே "தாயே! இது என்ன சோதனையம்மா எனக்கு?"     என்று மனதுக்குள் கலங்கியவாறே அமர்ந்து விட்டார் தண்டி.

                              நிதானமாக ஸ்நானத்தை முடித்துக் கொண்டு கரையேறினான் காளிதாசன்.கலக்கத்தோடு அமர்ந்திருந்த தணடியைக் கண்டான்.
நிதானமாக அவரது அருகே வந்து நின்றான்."புலவரே! ஏன் தயக்கம்? கிரீடத்தைக் கழற்றிவிட்டு மாலையைச் சூட்டுங்கள்.பிறகு கிரீடத்தை வைத்து அலங்காரத்தை முடியுங்கள். பூஜையை தொடங்குங்கள். காளி மாதா ஏற்றுக்கொள்வாள்." என்று கூறிவிட்டு அவரைத் தாண்டிச் சென்று விட்டான் காளிதாசன்.

திடுக்கிட்டுக் கண்விழித்தார் தண்டிகவி."என்ன ஆச்சரியம்! என்மனதில் நடக்கும் போராட்டத்தை அறியும் வல்லமை படைத்துள்ளானே? காளிதாசன் உண்மையில் என்னினும் உயர்ந்தவன்தான். அவனே சிறந்த காளிபக்தன்.என் மனமாசு அகன்றது. தாயே காளிமாதா! உன் மகனைச் சந்தேகித்த என்னை மன்னித்துவிடு." என்றபடியே காளிதாசன் சென்ற திசையை நோக்கிக் கரம் குவித்தார் தண்டிகவி.

இறைவனிடம் அன்பு காட்ட செயல்கள் அவசியமல்ல. மனமே முக்கியம்.அன்புக்கே இறைவன் கட்டுப் படுபவன் என்ற உண்மையை நாமும் புரிந்து கொள்வோம்.
___________________________________________________________________________________________________________________________________________

வியாழன், 18 பிப்ரவரி, 2010

மனக்கோயில்


 பல்லவநாட்டை ராஜசிம்ம பல்லவன் ஆண்டுவந்தான். காஞ்சீபுரம் அவனது தலைநகராக இருந்தது. அந்நகரத்தில் ஒரு பெரும் சிவன்கோயில் கட்ட வேண்டும் என்று மன்னன் விரும்பினான். பெரும் பல்லவ நாட்டு மன்னன் விரும்பினால் நடக்காத காரியமும் உண்டா?உடனே அதற்கான முயற்சியில் இறங்கினான். கோயில் உருவாகத் தொடங்கியது.


அந்தப் பல்லவ நாட்டில் திருநின்றவூர் என்ற ஒரு சிற்றூர் இருந்தது. அந்த ஊரில் பூசலார் என்ற ஒரு துறவி வாழ்ந்து வந்தார். நமச்சிவாயம் என்ற இறைவனின் நாமத்தைத் தம் உயிர் மூச்சாகக் கொண்டிருந்தார். அவரது உள்ளத்திலும் திருநின்றவூரில் ஒரு சிவாலயம் கட்டவேண்டும் எனும் எண்ணம் தோன்றியது.முற்றும் துறந்த துறவிக்கும் உள்ளத்தில் ஆசை தோன்றியது.அதற்கான முயற்சியாகப் பல தனவந்தர்களை நாடினார்.அவருக்குக் கிடைத்ததெல்லாம் பரிகாசம் மட்டுமே. மனம் வருந்தியவாறு இறைவனின் திருப்பெயரை தியானித்தவாறு தமது இருப்பிடத்தில் வந்து அமர்ந்தார்.

நாட்கள் மாதங்கள் கடந்தன. ராஜசிம்மன் தாம் கட்டும் கோயிலின் வளர்ச்சியைக் கண்டு பெருமிதம் கொண்டான். என்னாட்டில் இதுபோன்ற கோயில் இனி யாரும் கட்ட இயலாது என்று கர்வம் கொண்டான்.மிக விரைவிலேயே கோயில் கட்டி முடிக்கப்பட்டது. அன்று மன்னன் ராஜசிம்மன் தன் மந்திரி பிரதானியருடன் கோயில் முடிக்கப்பட்டதைப் பார்வையிட்டான். மந்திரியாருடன் ஆலோசனை செய்து அக்கோயிலின் கும்பாபிஷேகத்திற்கு நல்ல நாள் குறிக்கச் சொல்லி ஆணையிட்டான்.

மன்னரின் ஆணைப்படியே மந்திரியாரும் அரண்மனை சோதிடர்களைக் கேட்டு நல்ல நாள் ஒன்றைக் குறித்துக் கொடுத்தார். மன்னரும் அந்த நாளில் தான் கட்டிய கைலாசநாதர் கோயிலுக்கு கும்பாபிஷேகம்  என்று மக்களுக்கு                                          அறிவித்தார்.அந்த நாளும் வந்தது. எல்லா ஏற்பாடுகளையும் பார்த்து முடித்த மன்னன் அரண்மனை திரும்பினான். பொழுது விடிந்தால் கோயில் கும்பாபிஷேகம் என்று ஊரே கோலாகலமாக இருந்தது.இரவு நேரம் மன்னன் படுத்து உறங்கினான். நள்ளிரவு. மன்னனுக்குக் கனவு. இறைவன் காட்சி கொடுத்தார்.மன்னன் அவரிடம் கேட்டான்.
"இறைவா! நாளை உன் கோயிலுக்குக் கும்பாபிஷேகம் வைத்துள்ளேன். கோயிலில் குடிகொண்டு  எம்மையும் இந்நாட்டு மக்களையும் வாழ்த்தியருள வேண்டும்."                                                                                                                                

இறைவன் புன்னகைத்தார்."ராஜசிம்மா! நீ  குறித்துள்ள அதே நாளில் வேறு ஒரு கோயிலுக்கு நான் செல்ல வேண்டியுள்ளது. எனவே நீ வேறு ஒரு நாளில் உன் கோயில் கும்பாபிஷேகத்தை வைத்துக் கொள்."

இப்படிக் கூறிவிட்டு இறைவன் மறைந்தார். விழித்தெழுந்த ராஜசிம்மன் உடனே சபை கூட்டினான். தன் நாட்டில் தனக்குத் தெரியாமலேயே ஒரு கோயில் கட்டப் பட்டுள்ளது. அந்தக்கோயில் எங்கே உள்ளது என அறிந்து வரவேண்டும். என்று கூறியபோது அனைவரும் திகைத்தனர்.யாருக்கும் அப்படி ஒரு கோயில் கட்டப்பட்டதாகவேதெரியவில்லை. எனவே மன்னன் தானே புறப்படுவதாகக் கூறிவிட்டுப் புறப்பட்டான்.

வெகு தூரம் கடந்தும் எந்தக் கோயிலும் தென்படவில்லை.கடைசியாகத் திருநின்றவூர் என்ற ஊரை அடைந்தான்.

அவ்வூரிலும் கோயில் பற்றி யாருக்கும் தெரிய வில்லை.ஆனால் அவ்வூரில் பூசலார் என்ற ஒரு சிவனடியார் இருப்பதாகவும் அவருக்குக் கோயில் பற்றித் தெரிந்திருக்கலாம் என்றும் கூறவே பூசலாரை நாடி மன்னனும் மற்றவர்களும் சென்றனர். மன்னன் ராஜசிம்மன் அடிகளாரை வணங்கினான்.

கண்களை மூடி அமர்ந்திருந்த பூசலார் "வருக மன்னா! கும்பாபிஷேகம் இனிதே நடந்தது மன்னா.இவ்விழாவிற்கு மக்கள் புடைசூழ மன்னர் வந்துள்ளது குறித்து மிக்க மகிழ்ச்சி.என் இறைவன் தன் நல்லாசிகளை வழங்குவான்."
என்று வரவேற்றதை அறிந்து திகைத்தான் மன்னன்.

தயங்கியவாறே கேட்டான் மன்னன்."சுவாமி தாங்கள் எந்தக் கோயில் கும்பாபிஷேகத்தைப் பற்றிக் கூறுகிறீர்கள் என நான் அறியலாமா?இங்கு எங்கும் கோயில் தென்படவில்லையே?"
பூசலார் புன்னகைத்தார்."மன்னா, மனதுக்குள் கட்டியுள்ள கோயிலை வெளியே எப்படிக் காண இயலும்? ஆம் மன்னா .இது என் மனதுக்குள் தினமும் கொஞ்சமாகக் கட்டிவந்துள்ளேன்.இன்றுதான் கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது.நீயும் வந்துள்ளாய்.ஆனால் உனக்கெப்படித் தெரிந்தது என்பதுதான் அதிசயமாக உள்ளது."

ராஜசிம்மன் இறைவன் அவரது மனக் கோயிலுக்கே  முதலிடம் கொடுத்து வந்துள்ளது புரிந்தது.பூசலாரின் பாதங்களைப் பணிந்தான் மன்னன்.அவனது கர்வமும் மறைந்தது.

இறைவன் தன்  கனவில் தோன்றி தான் கட்டியுள்ள கோயிலின் கும்பாபிஷேகத்தை வேறு ஒரு நாளைக்கு மாற்றச் சொன்னதையும் பூசலாரின் மனக் கோயிலுக்கே தான் செல்ல வேண்டும் எனக் கூறியதையும் கூறினான்.அதனால்தான் அக்கோயிலை தேடி புறப்பட்டதாகவும் கூறினான். அவரது இறை பக்திக்கு முன் அடிபணிவதாகவும் கூறி வணங்கினான் மன்னன். பூசலாரின் மனக் கோயிலைப் பற்றி நாடே வியந்து போற்றியது. அன்றுமுதல் பூசலார் அறுபத்து மூன்று  நாயன்மார்களின் வரிசையில் வைத்துப் போற்றப் படுகிறார்.

சனி, 9 ஜனவரி, 2010

குரு பக்தி

துரோணர்  என்ற  முனிவர்  ஒருவர்  இருந்தார். அவர்  அரசகுமாரர்களான   பஞ்ச பாண்டவர்களுக்கும்   கௌரவர்களான   துரியோதனன்  முதலான  நூற்றுவருக்கும் குருவாக    இருந்தார். அவர்களுக்கு   வில்   வித்தை யை   சிறப்பாகக்   கற்பித்து   வந்தார்.  வில்   வித்தையில்  அர்ஜுனனை    விடச்  சிறந்தவர்  எவருமில்லை   எனக்கூறும்படி   செய்வதாகச்   சபதம்   செய்திருந்தார்.   இதனால்   துரியோதனனுக்குக்   கோபமும்   பொறாமையும்   அர்ஜுனன் மீது  ஏற்பட்டிருந்தது.  இயல்பாகவே  அர்ஜுனன்  வில்லில்  அம்பை  ஏற்றி   எய்வதில்    மிகவும்  சிறந்தவன்.  அதனால்  துரோணர்  அர்ஜுனனிடம்  தனி  அன்பு  கொண்டிருந்தார்.

ஒரு  நாள்  துரோணர்  தன்  மாணவர்களுக்காகக்  காத்திருந்தார்.  அப்போது  ஓர்  ஏழைச்சிறுவன்  வந்து  துரோணரைப்   பணிந்து  நின்றான்.
அவனை  ஆசிர்வதித்தார்  துரோணர்.
"யாரப்பா நீ?  எங்கு  வந்தாய்?"

"குருவே!,  நான்  தங்களிடம்  வில் வித்தை   பயிலவேண்டும்  என  விரும்புகிறேன்.  பலநாட்களாகத்  தங்களைத்  தேடித்  திரிந்தேன்.  இன்றுதான்  தங்களின்  தரிசனம்  கிடைத்தது.  என்னைத்  தங்கள்  மாணாக்கனாக  ஏற்றுக்   கொண்டு  அருள்  செய்ய  வேண்டும்" 

"என்ன  கேட்டாய்?  உன்னை  மாணவனாக   ஏற்றுக்கொள்ள  வேண்டுமா?    நான்  அரச  குடும்பத்தாருக்கு  மட்டுமே  கற்பிப்பவன்.  உன்னைப்  போன்ற  ஏழைச்  சிறுவனுக்குக்  கற்பிக்க  மாட்டேன்.  அரசகுமாரர்கள்  வரும்  நேரம்  நீ  போய்  வா.  உனக்கேற்ற  ஆசானைத்  தேர்ந்தெடுத்துக்  கொண்டு  வித்தையைக்  கற்றுக்கொள். என்  பூரண  ஆசி  உனக்கு."
 கைகளை  உயர்த்தி  ஆசி  வழங்கிவிட்டு  துரோணர்  அங்கிருந்து  சென்று  விட்டார். மண்டியிட்டு  அமர்ந்திருந்த  அந்த  வேடுவச்  சிறுவன்  கண்களில்  நீர்  பெருக  நின்றான்.  அவனது  பல  நாள்  ஆசை  நிறைவேறாமல்  போனது  பற்றி  மிகவும்  வருந்தினான்.  எங்கே  துரோணர்  பாதங்களை  வைத்திருந்தாரோ  அந்த  இடத்திலிருந்து  மண்ணை  அள்ளிக்  கொண்டான்.  துரோணர்  சென்ற  திசை  நோக்கி  வணங்கினான்.
விடுவிடுவெனத்  தன்  இருப்பிடம்  நோக்கி    நடந்தான். 

இல்லம்  சேர்ந்த  அச்சிறுவன்  மண்ணைக்  குழைத்து  துரோணரைப்  போன்ற  ஒரு  சிலையைச்  செய்து  வைத்துக்  கொண்டான். அந்தச் சிலையின்  முன்னால்  நின்று கொண்டு  வணங்கினான்.  பின்னர்  தனது  பயிற்சியைத்  தொடங்கினான்.  துரோனரையே   தனது  குருவாக  மானசீகமாக  வரித்துக்  கொண்டான்.  விரைவிலேயே  சிறந்த  வில்  வீரனாக  ஆனான்.

நாட்கள்  கடந்தன. ஒரு  நாள்  துரோணரும்  அவரது  மாணாக்கரான  நூற்று  ஐய்வரும்   காட்டுவழியே   சென்று  கொண்டிருந்தனர்.  அப்போது  அந்தவழியில்   இரண்டு  காட்டுப்பன்றிகள்  ஒன்றோடு  ஒன்று  மோதிக்கொண்டு  சண்டையிட்டுக் கொண்டு  இருந்தன.அப்போது "  அர்ஜுனா!     இப்பன்றிகளைக்   கொல்"  எனக்கட்டளையிட்டார்  குரு.
அர்ஜுனன்  திகைத்தான். " ஒரே  பாணத்தினால்  இரண்டு  உயிர்களை  ஒரே  சமயத்தில்  கொல்ல  முடியுமா? குருவே,  அப்படிப்பட்ட  கலையை  நீங்கள்  இன்னும்  எனக்குக்  கற்பிக்கவில்லையே."  இதற்குள்  இரண்டு  பன்றிகளும்  வெகு  உக்கிரமாகப்  போரிட்டுக்  கொண்டு  வழியை  அடைத்துக்  கொண்டு  இருந்தன.  அப்போது  எங்கிருந்தோ  அம்புகள்  வந்து  ஒரே  அடியில்  இரண்டு  பன்றிகளையும்  வீழ்த்தியது.  பன்றிகள்  இரண்டும்  ஒரே  சமயத்தில்  வீழ்ந்து  இறந்தன.   இதைப்  பார்த்த  அர்ஜுனன்  திகைத்து  நின்றான்.  தன்  குருவை  சந்தேகத்தோடு  பார்த்தான்.  "தன்னினும்  சிறந்த  வில்வீரன்  ஒருவன்  உள்ளான்.  அவன்  விட்ட  பாணமே  இதற்குச்  சாட்சி.  இந்தக்கலையை  அறிந்தவர்  துரோணர்  ஒருவரே.  இன்று  மற்றொருவர்  உள்ளார்  எனில்  இதைக்  கற்பித்தவர்  தனது  குருவே. "  இவ்வாறு  அர்ஜுனன்  எண்ணம்  ஓடிற்று.

அப்போது  வில்லும்  கையுமாக  அங்கு  வந்தான்  அன்று  வந்த  வேடுவச்  சிறுவன்.  துரோணரைக்  கண்டதும்  மண்டியிட்டு  வணங்கினான்.

"ஏ  சிறுவனே!  உனக்கு  இக்கலையைக்  கற்பித்தவர்  யார்?  உன்  குரு  யார்?"  சற்றே  கோபமாகக்  கேட்டார்  துரோணர்

"தாங்கள்தான்  எனது  குருநாதர். தினமும்  நான்  உங்கள்  முன்னிலையில்தானே  பயிற்சி   மேற்கொள்கிறேன்."

"பொய் சொல்லாதே!   ராஜகுமாரர்களைத்  தவிர  நான்  யாருக்கும்  கற்பித்ததில்லை. உண்மையைச்  சொல்."

"என்னுடன்  வாருங்கள்."  என்று  அழைத்த  சிறுவனுடன்  அனைவரும்  அவன்  இல்லம்  சென்றனர்.  காட்டின்  நடுவே   ஒரு  குடிசை.  அதன்  முன்னே  ஒரு  திறந்த  வெளியில்  நாடு  நாயகமாக  துரோணரின்  சிலை  அமர்ந்த  நிலையில்  அமைக்கப்  பட்டிருந்தது.  அச்சிலையை  வணங்கிய  சிறுவன்  "இவர்தான்  என்  குருநாதர்.  இவர்  முன்னால்தான்  நான்  பயிற்சி  செய்கிறேன்." என்றான்  பணிவோடு.

"இது  எனது  உருவம்போல்  உள்ளதே"

"ஆம்  குருதேவா. தங்களின்  பாதம்  பதித்த  மண்ணைக்  கொண்டுவந்து  அதைச்சேர்த்து  ஒரு  சிலை  செய்து  தாங்களே  அமர்ந்து  எனக்குப்  பாடம்  சொல்வதாக  நினைத்துக் கொண்டேன்.  தங்களை  என்  மனதில்  குருவாக  எண்ணிக்  கொண்டு  தினமும்  வணங்கி  வருகிறேன்."

துரோணர்  அச்சிறுவனின்  குருபக்தியே  அவனுக்கு  இத்தனை  திறமைகளும்  வளரக்காரணம்  என்பதைத்  தெரிந்து  கொண்டார்.  ஆயினும்   அர்ஜுனனுக்கு   வில்லுக்கு  விஜயன்  என்ற  பெயரைப  பெற்றுத்  தருவதாக  வாக்குக்  கொடுத்திருப்பதால்  இந்தச்  சிறுவன்  இனியும்  வில்லை  தன்  கையில்  எடுக்கக் கூடாது என  முடிவு  செய்தார். சிறுவனை  அன்புடன்  பார்த்தார்.

"சிறுவா!, உன்  பெயர்  என்ன?"

"என்  பெயர்  ஏகலைவன்.  இந்தக்  காட்டில்  வசிக்கும்  வேடுவர்  தலைவரின்  மகன்  நான்."

"உன்  திறமையைக்  கண்டு  மிகவும்  மகிழ்ந்தேன்.  குருதக்ஷிணை   தரவேண்டாமா  நீ?"

"குருவே!  எதுவேண்டுமானாலும்  கேளுங்கள். சிங்கம்  புலி  இவை வேண்டுமா?   மான்கள்  வேண்டுமா?  நொடியில்  பிடித்துவருவேன்  .உங்களுக்குக்  குருதக்ஷிணை  யாகத்  தருவேன்"

"அதெல்லாம்  வேண்டாம்.  ஏகலைவா!   நீயே  சிறந்த  மாணவன். என்பதை  நான்  ஒப்புக்கொள்கிறேன். எனக்குக்  குருதக்ஷிணையாக  உன்  வலதுகைக்  கட்டை  விரலைத்  தருவாயா?"

"தாங்கள்  எனது  குரு  என  ஒப்புக்  கொண்டதே  எனக்குப்  போதும்.   தாங்கள்  குருதக்ஷிணை  என  என்  உயிரையே  கேட்டாலும்  நான்  தரத்  தயாராக  உள்ளேன்.  பெற்றுக்கொள்ளுங்கள்."
மறுகணம்  தனது  இடது  கை  வாளால்  வலதுகை  கட்டை  விரலை  வெட்டி  ஒரு  இலையில்  வைத்து  அவர்  பாதத்தில் வைத்துப்   பணிந்து  நின்றான்  ஏகலைவன்.
மனம்  மகிழ்ந்த  துரோணர்  "ஏகலைவா!  குருபக்தி  என்ற  சொல்லுக்கு  நீயே  ஒரு  உதாரணம்.  உலகம்  உள்ளவரை  உன்  பெருமையை  இவ்வுலகம்  பேசும்." என்று  ஆசிகூறி  அங்கிருந்து  சென்றார்.  அர்ஜுனனுக்குப்  போட்டியாக  ஒருவன்  வருவதைத்  தடுத்து  விட்ட  நிம்மதி  இருந்தாலும்  ஒரு  நல்ல  வில்வீரனை  அவனது  வீரத்தை  திறமையை  அழித்துவிட்டோமே  என்ற  வருத்தமும்  துரோணருக்கு  இருந்தது.

ஆனாலும்  குருபக்தியில்  சிறந்தவன்  ஏகலைவன்  என்ற  புகழை  அவனுக்குக்  கொடுத்து  விட்டோம்  என்ற  பெருமை   துரோணருக்கு  நிம்மதியைக்  கொடுத்தது.

வெள்ளி, 25 டிசம்பர், 2009

அம்மாவும் நீயே என்ற மெட்டு

காத்தருளுவீரே கர்த்தாவே எம்மை

தோத்திரங்கள் செய்து நாங்கள் வாழ்த்தி நின்றோம் உம்மை (காத்தருளுவீரே )
--
நாட்டுமக்கள் நலமடைய நன்மை செய்தவரே பிறர்

துயரைத் தீர்க்கத் தன் துயரைத் தாங்கிக் கொண்டவரே

பகைவருக்கும் அன்பருளும் பண்பு கொண்டவரே

உம்மைப் பணிந்து நின்றோம் இனிமை தரும் ஏசுநாதரே

தேவா தேவா தேவா தேவா (காத்தருளுவீரே)

கன்னிமேரி அன்னையீன்ற அண்ணல் ஏசுவே -எமக்

கின்னலின்றி வாழும் வகை சொன்ன தியாகியே

அன்பு செய்தால் இன்பம் வரும் என்று சொன்னவரே

எமக்குப் பரமண்டல வழி காட்டிய பரம பிதாவே

தேவா தேவா தேவா தேவா (காத்தருளுவீரே)

செவ்வாய், 15 டிசம்பர், 2009

பலன் நோக்காத பக்தி

பஞ்சபாண்டவர்கள் ஐந்து பேர். தருமன், பீமன் அர்ஜுனன் நகுலன் சகாதேவன் என்று அவர்களுக்குப் பெயர்.இவர்களுள் அர்ஜுனன் கண்ணனிடம் மிகவும் அன்பும் பக்தியும் கொண்டவன். தினமும் ஒரு வண்டி அளவு பூக்களைப் பறித்து வந்து கிருஷ்ணனைப் பூசிப்பான். அதனால் தானே மிகவும் பக்திமான் என்ற கர்வம் அவனிடம் குடி கொண்டது. தன்னை விட கண்ணனை நேசிப்பவர் இவ்வுலகில் யாருமில்லை என்று இருமாந்திருந்தான். உறவு முறையில் கண்ணன் அர்ஜுனனுக்கு மைத்துனன். கண்ணனின் சகோதரி சுபத்திரையை அர்ஜுனன் மணந்திருந்தான்.

பாரதப் போர் முடிந்து தருமன் பட்டமேற்று பல ஆண்டுகள் ஆட்சி செய்தான். காலம் ஓடியது. பாண்டவரின் காலம் முடிந்தது. அனைவரும் ஸ்வர்க்கம் செல்ல விண் வழியே பயணப்பட்டனர். தருமன் முன்னே செல்ல அவனைத் தொடர்ந்து கண்ணன் செல்ல அவனருகே பீமன் சென்றான். அவன் பின்னே அர்ஜுனன் சென்றான். அர்ஜுனன் எவ்வளவு முயற்சித்தும் பீமனைத் தாண்டி கண்ணனின் அருகே செல்ல இயலவில்லை.


அப்போது அர்ஜுனன் கண்ணனிடம் கேட்டான். " கண்ணா! ஏன் உன்னிடம் என்னால் நெருங்க முடியவில்லை? என் பக்தியில் ஏதேனும் குறை உண்டா? பீமனால் மட்டும் உன்னருகே நெருங்க முடிகிறதே?


கண்ணன் புன்னகைத்தான். "அர்ஜுனா! என்னைப் பூஜித்ததால் அதுவும் வண்டி அளவு பூக்களைப் போட்டுப் பூஜித்ததால் நீயே மிகவும் பக்தி கொண்டவன் என்று எண்ணிக்கொண்டாயல்லவா?" என்று கூறியபோது அர்ஜுனன் திகைத்தான்.


"ஆம் கண்ணா! அதிலென்ன சந்தேகம்? எண்ணற்ற மலர்களைக் கொண்டு உன்னைப் பூஜித்தவனல்லவா நான்?"


"அப்படியானால் உ ன்னிலும் அதிக மலர்களைக் கொண்டு என்னைப் பூஜித்தவனை உன்னை விட அதிக பக்தியுள்ளவன் என்று கூறலாமல்லவா?"


"அப்படிப் பூஜித்தவன் உள்ளானா கிருஷ்ணா?"

"ஆம். அவன்தான் பீமன்.உன் அண்ணன்." அர்ஜுனன் திகைத்தான்.
"கண்ணா! பீமன் ஒருநாள் கூட உன்னைப் பூஜித்து நான் பார்க்கவில்லையே? "


"உண்மைதான். பீமன் பூஜித்தது யாருக்கும் தெரியாது. எனக்கும் பீமனுக்கும் மட்டுமே தெரியும்."


அர்ஜுனன் துக்கத்தில் ஆழ்ந்தான். அவன் உள்ளம் துயரத்தில் மூழ்கியது.கண்ணனைக் கண்ணீர் மல்கப் பார்த்தான்.


"அர்ஜுனா! துயரப்படாதே. உன் உள்ளத்தில் நீயே பக்திமான் என்றும் உனக்கே நான் உரிமையானவன் என்றும் நீ கர்வம் கொண்டிருந்தாய்.

அது சரியல்லவென்பதை அறிவிக்கவே இந்நிகழ்ச்சி நடந்தது."
"பீமன் யாரும் அறியாதவாறு எவ்வாறு பூஜை செய்தான்?"

"அர்ஜுனா! நீங்கள் வனவாசத்தின் போதும் அக்ஞாத வாசத்தின் போதும் காடுகளிலும் பல ஊர்களிலும் அலைந்து திரிந்தீர்கள் அல்லவா?

அப்போது பீமன் தன் கண்ணில் கண்ட மலர்கள் அத்தனையையும் கிருஷ்ணார்ப்பணம் என்று எனக்கு அர்ச்சித்து விடுவான். நானும் அவனது உள்ளத்தின் அன்பைப் புரிந்து கொண்டு அனைத்தையும் ஏற்றுக்கொண்டேன். அப்படி அவன் அர்ச்சித்த மலர்கள்தன்ன் அதோ பார். மலைபோல் குவிந்துள்ளது. நீஅர்ச்சித்தவை இதோ இச்சிறு குன்று போல் உள்ளது. உள்ளத்தின் தன்னலமில்லாத அன்பே உண்மையான பக்தி. நீ மலர் பறித்து பூஜை செய்ததை விட மனதளவில் பூஜித்த பீமனின் பக்தியே சிறந்தது. ஒப்புக்கொள்கிறாயா?"


அர்ஜுனனின் கண்கள் திறந்தன. அவனது கர்வம் அகன்றது. பரிசுத்தமான மனதோடு கண்ணனை தியானித்தான். தூய்மையான அர்ஜுனனை இப்போது கண்ணன் கைகளைப் பற்றி அழைத்துச் சென்றான். அனைவரும் வைகுண்டம் சேர்ந்தனர்.

வியாழன், 3 டிசம்பர், 2009

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

சிரவணன்  என்று  ஒரு  சிறுவன் இருந்தான். அவனது  தாயும்  தந்தையும்  மிகவும்  வயதானவர்கள்.அத்துடன்  இருவரும்  கண்  தெரியாதவர்கள்.தங்களின்  மகனின்  உதவியில்லாமல்  எந்த ஒரு  வேலை யையும்  செய்ய  இயலாதவர்கள்.  சிரவணனின்  தந்தையார்  ஒரு  ரிஷி.
 

ஆகவே  அவர்கள்  ஒரு  வனத்தில்  வாழ்ந்து  வந்தனர்.

அவர்கள்  தங்கியிருந்த  வனத்தில்  நீரின்றி  வறட்சி  ஏற்பட்டது.  ஆகவே  வேறு  வானத்தைத்  தேடிப்  புறப்பட்டனர்.  நடக்க இயலாமலும்  கண்  தெரியாமலும்  தவிக்கும்  தன்  பெற்றோருக்கு  ஊன்றுகோலாகவும்  கண்ணாகவும்  இருந்தான்  சிரவணன்.  இரண்டு  பெரிய  பிரம்புத் தட்டுகளில்  இருவரையும்  அமரவைத்து  அத்தட்டுகளைத்   தராசு  போல்  அமைத்து   அதைத்தன்  தோளில்  தூக்கிக்  கொண்டான்.  வாலிப  வயதை  நெருங்கியவன்  ஆனதால்  சிரவணன்  சிரமமின்றி   தன்  பெற்றோரைச்  சுமந்து  சென்றான்.

வெகு தூரம்  நடந்து  வேறு ஒரு  காட்டுப்  பகுதியை  அடைந்தனர்.  சிரவணனின்  தயார்  நீர்  அருந்தக்  கொண்டுவருமாறு  கூறினார். தந்தையாரும்  தாகமாக  உள்ளது   எனக்கூறவே  இருவரின்  தாகத்தையும்  நீக்க  எண்ணினான்.  குடுவையில்  நீர்  காலியாக  இருந்ததால்  குளமோ  கிணறோ  அருகில்  உள்ளதா  எனத்  தேடிச்  சென்று  நீர்  கொண்டு  வருவதாகக்  கூறினான்  சிரவணன்..விரைவில்  வந்துவிடுமாறு  கூறி   அனுப்பிவைத்தனர்  அந்த  வயோதிகத்  தம்பதியர்.   அவர்களை  வணங்கி  விடை  பெற்றுப்  புறப்பட்டான்  சிரவணன்.

அந்தப்  பகுதி  அயோத்தி  நகரைச்  சேர்ந்தது.  அயோத்தி  அரசன்  தசரதன்.  காட்டுவிலங்குகளின்  துன்பத்திலிருந்து  மக்களைக்  காப்பதற்காக  துஷ்ட    மிருகங்களை  வேட்டையாட  தசரதன்  கானகம்  வந்திருந்தான்.  மாலைநேரம்.  இருள்  லேசாகக்  கவிந்து  கொண்டிருந்தது.  மரத்தடியில்  ஓய்வெடுத்துக்  கொண்டிருந்தான்   மன்னன்.  அவன்  அருகே  மிருகம்  ஒன்று  தண்ணீர்  குடிப்பதுபோல  சத்தம்  கேட்டது. மன்னன்  துள்ளி  எழுந்தான்.தன்  வில்லில்  நாணைத்  தொடுத்தான்.  வில்லிலிருந்து  அம்பு  புறப்பட்ட  மறுகணமே   "அம்மா !"  என்ற  அலறல்  குரல்  கேட்டது.

மனிதக்  குரலைக்  கேட்ட  மறுகணம்   மன்னன்  திடுக்கிட்டான்.  குரல்  வந்த  திசை  நோக்கி  ஓடினான்.  அங்கே  சிரவணன்  அம்பு  பட்டு  வீழ்ந்து  கிடந்தான்.  அவனிடம்  தசரதன்  மன்னிக்குமாறு  வேண்டினான். தவறு  நேர்ந்துவிட்டது  என்று  புலம்பி அழுதான். அவனைத்  தடுத்த  சிரவணன்,
"அரசே!  என்  பெற்றோர்  வனத்தில்  தாகத்தால்  தவித்தவாறு  உள்ளனர்.  அவர்களிடம்  நான்  இறந்த  செய்தியைச்  சொல்லாமல்  அவர்களை  நீர்  அருந்தச்  செய்துவிடுங்கள். பெற்ற  தாய்  தந்தையரின்  நீர்  வேட்கையைத்  தீர்க்காமல்  சாகிறேன்  .நீங்கள்  அவர்களின்  மகனாக  இருந்து  அவர்கள்  தாகத்தைத்  தீர்த்து  விடுங்கள்.  இதுதான்  என் கடைசி  ஆசை."என்று  கூறிவிட்டு  இறந்தான். 

சிரவணன்  கூறியது  போல்  நீரை  எடுத்துக்கொண்டு  அவன்  பெற்றோர்    இருக்குமிடம்  நோக்கிச்  சென்றான்  தசரதன்.  குரலைக்  காட்டாமல்  நீரை  அந்த  வயோதிகத்  தாயிடம்  கொடுத்தான்.  தசரதனின்   கை  பட்டதுமே  "யார்  நீ?" என்று  சத்தமிட்டாள்  அந்தத்தாய்.  இருவரும்  "எங்கள்  மகன்  எங்கே?  நீ  ஏன்  வந்தாய்? எங்கள்  மகனுக்கு    என்னவாயிற்று?"  என்று  அழுது  புலம்பினர்.  அதைத்  தாங்காத  தசரதன்  தான்  தவறாக  அம்பெய்திய  காரணத்தால்  சிரவணன்  மாண்ட  செய்தியைக்  கூறினான்.  புத்திர  சோகம்  தாங்காத  அந்தப் பெற்றோர்  "ஏ! மன்னா!  நாங்கள்  மகனை  இழந்து  தவித்து  உயிர்  விடுவது  போலவே  நீயும்  எத்தனை  புத்திரர்களைப்  பெற்றாலும்  யாரும்  அருகே  இல்லாமல்  புத்திர  சோகத்தாலேயே உயிர்  விடுவாய்.   இது  எங்கள்  சாபம்  "  என்று  சபித்துவிட்டு  உயிர்  விட்டனர்.

பின்னாளில்  இந்த  தசரதன்  ராமனை  வனவாசத்திற்கு  அனுப்பிவிட்டு  புத்திரசோகத்தில்  ஆழ்ந்து  துன்பப்பட்டான்.  பரதனும்  சத்ருக்னனும்   கேகயநாடு  செல்லவும்   ராம  இலக்குவர்  வனம்  ஏகவும்  தசரதன்  தனிமையில்  தவித்து  பின்  உயிர்  விட்டான்.  நல்லோர்  சொல்லுக்கு  வலிமை  உண்டு.பெற்றோரை  தெய்வமாக  எண்ணி  அவர்களுக்கு  அன்புடன்  சேவை  செய்து  வந்த  சிரவணன்  பண்பால் பெருமை  பெற்றான். அவன்  பெற்றோரின்  சாபம்  பலித்துவிட்டது.  எனவே   பெற்றோரிடம்  நாம்  ஆசிபெற   என்றும்  அவர்களை  வணங்க  வேண்டும்.




ஞாயிறு, 8 நவம்பர், 2009

பிசிராந்தையார் நட்பு

பாண்டிய நாட்டில்  உள்ளது  பிசிர்  என்ற  ஊர்.ஆந்தையார்  என்பது  இவரது  இயற்பெயர்.ஆதலால்  பிசிராந்தையார்  என்று  அழைக்கப்பெற்றார்.  இவர்  சோழ  மன்னன் கோப்பெருஞ்சோழன்  மீது  அன்பு  கொண்டு  அவனைப்  பற்றிய  பாடல்களைப்  பாடியுள்ளார்.சோழனைக்  காணவேண்டும்  என்னும்  பேரவா  கொண்டிருந்தார்.  ஆனால்  பாண்டிய  நாட்டிலுள்ள  பிசிர்  வெகு  தொலைவு  உள்ளதால்  இவரால்  சோழ  நாட்டுக்குச்  செல்ல  இயலவில்லை.

இவரது புகழையும்  தமிழையும்  கேள்விப்பட்ட  சோழனும்  இவரைக்  காணவேண்டும்  என்னும்  அவா  கொண்டிருந்தான்.  எனவே  இருவரும்  உயிர்  ஒன்றாகவும்  உடல்  வேறாகவும்  வாழ்ந்து  வந்தனர். இருவரும்  தாம் ஒருவருக்  கொருவர் சந்திக்கும்  திருநாளை  ஆவலுடன்  எதிர்  பார்த்துக்  கொண்டிருந்தனர்.


கோப்பெருஞ்சோழனின்  தலைநகர்  உறையூர்.  இம்மன்னன்  பிசிராந்தையாரை  நேரில்  காணாமலேயே  அவருடன்  நட்புக் கொண்டவன்.  இவனது  ஆட்சி  நடந்துகொண்டிருக்கும்  போதே  இவனது  இரண்டு  புதல்வர்களும்  சோழ  ஆட்சிக்  கட்டில்  ஏறுவதற்காக  தந்தையுடன்  போரிடத்  துணிந்தனர்.


இதை  அறிந்த  கோப்பெருஞ்சோழன்  ஆட்சியை  விட்டு  வடக்கிருந்து  உயிர்  விடத்  துணிந்தான்.  அப்போது  தன்  மந்திரியிடமும்   மற்றையோரிடமும்   பிசிராந்தையார்  என்னைக்  காண  வருவார்.  என்னுடன்  வடக்கிருப்பார்.  அவருக்கும்  ஓர்  இடத்தைத்  தயார்  செய்யுங்கள்  எனக்  கூறினார்.    அதேபோல்  பிசிராந்தையாருக்கும்  ஒரு  இடம்  அமைக்கப்பட்டது.  நாட்கள்  கடந்தன.  சோழன்    பிசிரந்தையாரைக்  காணாமலேயே  வடக்கிருக்கத்  துணிந்தான்.   எப்படியும்  ஆந்தையார்  வந்து  விடுவார்  எனக்  கூறித்  தன்  தவத்தை  மேற்கொண்டான்.   


இவ்வுலக  வாழ்வைத்  துறக்க  விரும்பும்  மன்னவர்  வடக்கிருந்து  உயிர்  விடுதல்  அக்கால  மரபு.  வடக்கிருத்தல்  என்பது  தன்நாட்டில்  உள்ள  ஆறு  குளம்   போன்ற    நீர்  நிலைக்குச்  சென்று  அதன்  இடையே  மணல்  திட்டு  ஒன்றை    அமைத்து   வடக்கு  திசை  நோக்கி  அமர்ந்து  உண்ணாநோன்பிருந்து  உயிர்  விடுதல்.


தன்  மக்கள்  மீது  இருந்த   மனக்  கசப்பின்  காரணமாக  கோப்பெருஞ்சோழனும்   வடக்கிருந்தான்.
இதனைக்  கேள்விப்பட்டார்  பிசிராந்தையார்.  உடனே   சோழ  நாட்டை  நோக்கி  ஓடி  வந்தார்.
வழியில்  எதிர்ப் பட்டவர்  இவரைப்  பார்த்து  மிகவும்  ஆச்சரியப்  பட்டனர்."புலவரே!  நான்  என்  சிறுவயது  முதலே  தங்களைப்  பற்றி  என்  தந்தையார்   கூறக்  கேட்டிருக்கிறேன்.  தங்கள்  மிகவும்  வயதானவராக  இருப்பீர்கள்  என்று  எண்ணியிருந்தோம்.  தங்களோ  மிகவும்  இளமையாக  இருக்கின்றீர்களே, அது  எப்படி?"என்று  வியந்து  கேட்டனர்.  அதற்கு  மறுமொழியாக  ஆந்தையார்   ஒரு  பாடல்  பாடினார்.  புறநானூற்றில்  உள்ள  இப்பாடல்  நமது  வாழ்வியலுக்கு  மிகவும்  தேவையான  ஒன்று.


         " யாண்டு  பலவாக  நரையில வாகுதல்
          யாங்காகியர்  என வினவுதிராயின், 
           மாண்ட  என்  மனைவியொடு  மக்களும்  நிரம்பினர்
           யான்  கண்டனையர்  என்  இளையரும்   வேந்தனும் 
          அல்லவை  செய்யான்   காக்கும்  அதன்  தலை 
           ஆன்று  அவிந்து  அடங்கிய  கொள்கைச்
           சான்றோர்  பலர்  யான்  வாழும்  ஊரே."    



என்று  பாடிய  பாடல்  மூலம்  " வயோதிகரானாலும்  இளமையோடிருக்கும்  காரணத்தைக்  கேட்பீரானால்   சிறந்த  பண்புள்ள  மனைவி,  மக்கள்  குறிப்பறிந்து  பணி  செய்யும்  பணியாளர்கள்  அறத்தையே  நாடிச்  செய்யும்  மன்னன்  இத்துணை  பேருடன்  நன்கு  கற்று    நல்ல  பண்புகளுடன்  விளங்கும்  சான்றோர்  பலரும்  எம்மைச்  சூழ்ந்து  இருக்க  நான்  வாழ்வதால்  எனக்கு  நரை  தோன்றவில்லை.  மூப்பும்  எம்மை  அணுகவில்லை."   என்று  விளக்கினார்.   

சோழனின்  இறுதி  நேரம்  வந்துற்றபோது  பிசிராந்தையார்  ஓடிவந்தார்.  நண்பனைக்  கண்டார்  தனக்காக த்  தயாராக  அமைக்கப்பட்ட  இடத்தில்  வடக்கிருந்து  சோழனுடன்  தானும்   தன்  இன்னுயிர்  விடுத்தார்.


இச்செய்தியை    இக்காட்சியைக்  கண்ட   பொத்தியார்  என்னும்  புலவர்   தன்  பாடலில்  இதனைக்  கூறுகிறார்.


      "இசைமரபு  ஆக  நட்பு  கந்தாக
       இனியதோர்   காலை  ஈங்கு  வருதல்
       வருவன்  என்ற  கோனது  பெருமையும் 
       அது  பழுதின்றி  வந்தவன்   அறிவும்
       வியத்தொறும்  வியத்தொறும்   வியப்பிறந்தன்றே."


பிசிராந்தையார்  என்ற  புலவரும்  கோப்பெருஞ்சோழன்  என்ற  மன்னனும்  தம்முள்  காணாமலேயே  நட்புக்  கொண்டு  ஒன்றாக  உயிர்  நீத்த  இச்சிறப்பினை  இலக்கியங்கள்  நமக்கு  எடுத்து  இயம்புகின்றன.  இத்தகு  நண்பர்களை  நம்மால்  மறக்க  இயலுமா?