வெள்ளி, 18 டிசம்பர், 2015

மந்த்ராலய மகான் --8

                           ஸ்ரீ ராகவேந்தரரின் பெயருக்கு மட்டுமல்ல அவரது கையிலிருந்து பெற்ற மிருத்திகைக்கும் மகிமை உண்டு என்பதை மற்றொரு சம்பவத்தால் அறியலாம்.ஸ்ரீமடத்தில் சேவை செய்து வந்த ஒரு சிஷ்யருக்கு வெகு நாட்களாகத் திருமணம் ஆகாமல் இருந்தது.காரணம் செல்வம் ஏதும் இல்லாமைதான்.ஒருநாள் ஸ்ரீ ராகவேந்திரர் காவிரியில் ஸ்நானம் செய்யும்போது அவருக்கு சேவை செய்யும் சிஷ்யன் அருகே நின்றிருந்தான்.அவனிடம் கேட்டார்
 "என்னப்பா, என்னிடம் ஏதோ கேட்கவேண்டுமென்று நினைக்கிறாய் இல்லையா?"
"ஆம் சுவாமி"
"கேளேன். தயக்கம் எதற்கு?" என்றபடியே காவிரியின் வண்டல் மண் எடுத்து உடலில் தேய்த்துக் குளித்துக் கொண்டிருந்தார்.
"ஸ்வாமீ , திருமணம் செய்து கொள்ளவேண்டுமென எண்ணியுள்ளேன்."
"அதற்கென்ன?பேஷாகச் செய்து கொள்"
"ஸ்வாமீ ,நான் பீஜாபூர் செல்லவேண்டும். மேலும்......."தயங்கியவனை இடைமறித்தார் ஸ்வாமிகள்.
"விவாகத்திற்குப் பொன்னும் பொருளும் வேண்டும்.அதுதானே ?"
சிஷ்யன் மகிழ்ச்சியுடன் "ஆம் ஸ்வாமி " என்று சொன்னவுடன் ஸ்ரீ ராகவேந்திரர் அவனிடம் "இந்தா இதைப் பிடி.
இதை வைத்து உன் விவாகத்தை முடித்துக் கொண்டு வா. என் ஆசிகள் உனக்கு." என்று கூறியபடியே காவிரியிலிருந்து ஒரு பிடி மண் எடுத்து அவனிடம் கொடுத்தார்.
'பொன்னைக் கேட்டால் மண்ணைக் கொடுக்கிறாரே ' என்று நினைக்காமல் அதை பயபக்தியுடன் பெற்றுக் கொண்டு ஒரு சம்புடத்தில் வைத்து இடுப்பில் வைத்துக் கொண்டான் சிஷ்யன் 
                     
                     ஸ்வாமிகளிடம்  ஆசிபெற்றவன் அன்றே சொந்த ஊரைப் பார்க்கப் புறப்பட்டான்.கால்நடையாகவே கும்பகோணத்தை விட்டுப் புறப்பட்டவன் இரவு வந்ததும் ஓய்வு எடுத்தபின் விடிந்ததும் செல்லலாமென எண்ணி ஒரு வீட்டின் திண்ணையில் படுத்துக் கொண்டான்.நடு இரவில் நல்ல உறக்கத்தில் இருந்தவனை யாரோ எழுப்பவே எழுந்து உட்கார்ந்தான்.அப்போது வீட்டின் உள்ளேயிருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டது.
தன எதிரே  பெரிய பூதம் ஒன்று நிற்பதைப் பார்த்த  சிஷ்யன்  திடுக்கிட்டான்.
உடனே  ஸ்ரீ ராகவேந்திரரை மனதில் தியானித்துக் கொண்டு தைரியத்தை வரவழைத்துக் கொண்டான்.
ஓம் ஸ்ரீ ராகவேந்த்ராய நமஹ என்று ஒரு முறை சொல்லிக் கொண்டான்.பின் அந்த பூதத்தைப் பார்த்து 
"
"ஏய்  பூதமே, யார் நீ? என்னை ஏன் எழுப்பினாய்?" என்றான் 

"ஐயா, நான் ஒரு பிரம்மராக்ஷசன். உங்களை ஒன்றும் செய்யமாட்டேன்.எனக்கு நீங்கள் ஒரு உதவி செய்ய வேண்டும்.அப்படிச் செய்தால் நிறைய பொன் தருகிறேன்."

"நான் உனக்கு உதவி செய்வதா? ஒன்றும் புரியவில்லையே?"

"சொல்கிறேன் ஐயா. இந்த வீட்டின் சொந்தக்காரன் ஒரு படுபாவி.போன ஜென்மத்தில் இவன் என் குழந்தைகளையெல்லாம்  கொன்று விட்டான்.அதனால் இந்த ஜென்மத்தில் இவன் குழந்தைகளை நான் கொன்று வருகிறேன்.ஏழு குழந்தைகளைக் கொன்று விட்டேன். இப்போது பிறந்திருப்பது எட்டாவது குழந்தை.இதை நான் கொல்ல .வேண்டும். ஆனால் உள்ளே செல்லவிடாமல் உங்களிடமிருந்து வரும் ஜ்வாலை  தடுக்கிறது. தயவு செய்து நீங்கள் தள்ளிச் செல்லுங்கள். உங்களுக்கு நிறைய பொன் தருகிறேன்."

"குருகளவரின் ம்ருத்திகையல்லவா என்னிடம் இருப்பது! இதற்கு இத்தனை சக்தியா? என வியந்து மனதில் அவரை வணங்கிக் கொண்டிருந்தவன் முன் ஒரு குடம் நிறைய பொன்னைக் கொண்டு வந்து வைத்தது அந்த பிரம்மராக்ஷஸ்.அவர் நகரமாட்டாரா எனக் காத்துக் கொண்டு நின்றிருந்தது அது.

ம்ருத்திகை தடுக்கிறது என்றால் பிரம்மராக்ஷசம் உள்ளே போகக் கூடாது என்றுதானே பொருள். அத்துடன் எனக்கு இத்தனை பொன்னைக் கொடுத்து உதவிய இதற்கு நானும் ஏதேனும் நன்மை செய்ய வேண்டும் என 
எண்ணியவனாய் ம்ருத்திகையைக் கையில் எடுத்து 'ஓம் ஸ்ரீ ராகவேந்த்ராய' என்று ஜெபித்தான்.

"சுவாமி, இந்த பிரம்மராக்ஷசத்திற்கு சாப  விமோசனம் அளியுங்கள் " என்று மனதார வேண்டிக்கொண்டு ம்ருத்திகையை அந்த பிரம்மராக்ஷசத்தின் மீது வீசினார்.அவ்வளவுதான். சுடர் ஒன்று தோன்றி அதைச் சுட்டெரித்தது.ஜகஜ்ஜோதியான உருவம் பெற்று நற்கதி அடைந்து மறைந்தது பிரம்மராக்ஷசம். 

                              வீட்டிற்கு வெளியே வரப் பயந்துகொண்டு வீட்டிற்குள்ளேயே முடங்கியிருந்தவர்கள் பிரம்மாண்ட சத்தமும் வெளிச்சமும் வந்ததை அறிந்து ஓடிவந்தனர்.அக்கம்பக்கம் அனைவரும் கூடிவிட்டனர்.நடந்ததை அனைவரும் அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தனர்.மிருத்திகையின் பெருமையை எண்ணி வியந்தனர்.
அந்த வீட்டின் எஜமானன் தன குழந்தை பிழைத்ததை எண்ணி நன்றி தெரிவித்துக் கொண்டதுடன் தன சகோதரியின் மகளை  அவனுக்குத் திருமணமும் செய்து வைத்தார். அந்த சிஷ்யன் மனைவியுடன் கும்பகோணம் வந்து நடந்ததைக் கூறி சுவாமிஜியின் முன் வணங்கி நின்றான்.
ஸ்ரீ ராகவேந்திரரின் மிருத்திகைக்கு இன்றும் பெருமை உண்டு. என்றும் பெருமை உண்டு. 












.
 

--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக