செவ்வாய், 17 அக்டோபர், 2017

வாழ்த்து

அன்பு நண்பர்களுக்கும் உறவுகளுக்கும்  இனிய தீபாவளி  நல் வாழ்த்துக்கள்.புத்தாடை உடுத்தி பட்டாசு கொளுத்தி பட்சணங்கள் உண்டு ஊரோடும்  உறவோடும் களிப்புடன் கொண்டாடுங்கள்.
உளம் நிறைந்த வாழ்த்துக்களுடன் 
ருக்மணி சேஷசாயி 

ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

புதன், 19 ஜூலை, 2017

குறள்நெறிக் கதைகள்.சான்றோர் வினை

                                       சான்றோர் வினை  

           ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரம் முடிவுக்கு வந்ததை அறிந்த பாண்டவர்களும் திரௌபதியும் உலக வாழ்வை முடித்துக் கொள்ள முடிவு செய்தனர். அதன்படி உயிருடன் சுவர்க்கம் செல்ல எண்ணினர் . .அதன்படி அனைத்து செல்வங்களையும் துறந்தனர்.ஆசாபாசமற்றவர்களாய் அறுவரும் புறப்பட்டனர்.இமயமலையைத் தாண்டி அப்பாலுள்ள மேரு மலையை நோக்கி நடந்தனர்.அறுவரும் ஒருவர்பின் ஒருவர் தொடர்ந்து நடந்தனர்.அவர்களுடன் ஒரு நாயும் நடந்தது.
நடந்துகொண்டே இருக்கையில் திடீரென திரௌபதி கீழே விழுந்தாள். அதைக் கண்ட பீமன் தருமரிடம்  திரௌபதி உயிர்துறக்க என்ன காரணம் என்று கேட்டான்.

  •            ஐவரிடமும் ஒரே மாதிரி அன்பு செலுத்தாமல் அர்ச்சுனனிடம் அதிக அன்பு செலுத்தினாள்  அதன்காரணமாகவே உயிரை இழக்கநேரிட்டது. என்றார் திரும்பாமலே.இப்போது ஐவரும் வரிசையாக நடந்தனர்.
சற்று நேரத்தில் சகாதேவன் கீழேவிழுந்தான்.திடுக்கிட்ட பீமன் அண்ணா, என்று கூவினான்.
சற்றும் பதறாத தருமர், இவனுக்குத் தான் சாஸ்த்திரத்தில் வல்லவன் என்ற கர்வம்.அதுதான் இந்த நிலைக்கு காரணம்.என்றவர் திரும்பாமலே மேலே நடந்தார்.அடுத்து சிறிது நேரத்தில் நகுலன் உயிரற்று விழுந்தான்.
வழக்கம்போல் திரும்பிப் பார்க்காத தருமர்,பீமா, இவனுக்குத் தான் மிகுந்த அழகன் என்ற கர்வம். அதனால் தான் ...என்று சொன்னபடியே வேகமாக நடந்தார்.அடுத்து அர்ச்சுனன் விழுந்ததைப் பார்த்துப் பதறிக் கதறினான் பீமன்.
"பீமா, இவனுக்குத் தான்தான் வில் வித்தையில்  உலகிலேயே சிறந்தவன் என்ற கர்வம்."என்றபடியே நிற்காமலும் திரும்பாமலும்  நடந்தார்.

         சிறிது நேரம் சென்றது.பீமனுக்கும் தலைசுற்றத் தொடங்கியது கண்கள் மங்கத தொடங்கியது. அண்ணனைத் தொடர்ந்து செல்ல இயலாமல்  உயிரற்று வீழ்ந்தான்.
'ம்...உலகிலேயே பலசாலி தான்தான் என்ற கர்வம் உனக்கு.,என்று தனக்குள் பேசியவர் திரும்பிப் பாராமலேயே நடந்தார்.
         
         வெகு தூரம் நடந்து நடந்து மேரு மலையை அடைந்தார். அவருடன் அந்த நாயும் உடன் நின்றது.அங்கு தயாராக நின்றிருந்த இந்திரன் தன புஷ்பக விமானத்தினின்றும் இறங்கி தருமர் முன் நின்றான்.'வருக வருக தர்மராஜரே வருக.தேவர்கள் அதிபதி இந்திரன் 
வணங்குகிறேன்.உங்களை சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்லவே வந்துள்ளேன்.புஷ்பக விமானத்தில் ஏறுங்கள்."என்றபடி வணங்கி நின்றான். 

"வணங்குகிறேன் தேவாதி தேவரே.தேவர்கள் தலைவரே.முதலில் இந்த நாய் ஏறட்டும் "என்றபடி அந்த நாய் ஏற உதவினார்.

பதறிய இந்திரன்," தர்மபுத்திரரே  தாங்கள்மட்டுமே சுவர்க்கம் வரலாம் நாய்க்கு அங்கு இடமில்லை."என்றார்.

தன காலை விமானத்தில் வைத்தவர் உடனே அதை எடுத்துவிட்ட தருமர் இந்திரனைப் பார்த்தார் 

"இதுவரை என் கூடவே பயணித்த இந்த நாயும் உடன் வர அனுமதித்தால் நான் சுவர்க்கம் வருவேன் இல்லையேல் என்னை நம்பி இதுவரை வந்த நாயை விடுத்து நான் மட்டும் வரும் நன்றி மறந்த செயலைச் செய்ய மாட்டேன். தங்களின் சுவர்க்கத்தைவிட இந்த நாயின் நம்பிக்கைக்கு மதிப்பளிப்பதே சிறந்தது என்று நினைக்கிறேன். நானும் இந்த நாயுடன்  இங்கேயே இருப்பேன். தாங்கள் செல்லலாம்."

இந்த சொற்களைக் கேட்ட அடுத்த கணம் அந்த நாய்நின்ற இடத்தில்  தரும தேவன்  நின்றார். இந்திரன் புன்னகையுடன் 'தருமரே  தாங்கள்  பெயருக்கேற்றபடி இருக்கிறீர்களா என்பதை சோதிக்கவே நாங்கள் இருவரும் எண்ணினோம்.தாங்கள் தருமம் தவறாதவர் 
 என்பதை நிரூபித்துவிட்டீர்கள்.மிக்க மகிழ்ச்சி. இனி விமானத்தில் ஏறலாமே."என்றபடி அவருடன் சுவர்க்கம் நோக்கிப் பறந்தார் இந்திரன்.
சான்றோர் என்றும் சான்றோரே உண்மை தெரிகிறதல்லவா?   









-- 
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

வெள்ளி, 2 ஜூன், 2017

கனிமொழிக் கதைகள்--பதறாத காரியம் சிதறாது.


.                          களத்தூர் சிறுகிராமம். அந்த கிராமத்தில் விவசாயம் செய்து பிழைக்கும்   குடும்பங்கள் தான் அதிகம்.    அந்த   ஊரில் வாழும் பல குடும்பங்களில் கனகாவின் குடும்பமும் ஒன்று. 
                           கனகாவுக்கு இரண்டு பெண்கள்.அவர்களில் பெரியவள்       சுதா.  இளையவள் லதா. சுதா  பெரியவளானாலும் பொறுமையே இல்லாதவள். அவசரக் குடுக்கை. எப்போதும் பதற்றமாகவே ஒரு காரியம் செய்வாள்.அவளது அவசரமான காரியத்தால் பல பொருட்கள் கெட்டுப்  போயிருக்கின்றன.அம்மாவிடம் சுதா அடியும் வாங்கியிருக்கிறாள். ஆனாலும் அவளது பதறும் குணம் மாறவேயில்லை.எவ்வளவோ முறை எடுத்துச் சொல்லியும் சுதா திருந்தவேயில்லை.
                         ஆனால் லதா அப்படியில்லை. அக்காவுக்கு நேர் எதிரானவள்.அம்மாவுக்குத் துணையாக எல்லாவேலைகளையும் செய்வாள். அம்மாவுக்குத் துணையாக எப்போதும் இருப்பாள். 
தினமும் பள்ளிக்கும் தவறாமல் சென்று வருவாள் லதா.ஆனால் சுதா அடிக்கடி பள்ளிக்குச் செல்லாமல் விளையாட்டில் கவனம் செலுத்துவாள். யாரும் துணையில்லை என்றாலும் தான் மட்டுமே விளையாடிக் கொண்டிருப்பாள்.
                     ஒருநாள் இரவு சாப்பிடும்போது கனகா தன பிள்ளைகளிடம் சொன்னாள்.
" சுதா, லதா இந்த வருஷம் பொங்கலுக்கு நாம மாமா வூட்டுக்கு போவலாம் அதுக்கு துட்டு சேக்கோணுமுன்னா நாம எதுனாச்சும் யாவாரம் செய்யோணும் என்னா செய்யலாம் நீங்களே சொல்லுங்க "

"யம்மா மிட்டாய் யாவாரம் செய்யலாம்மா "
"பத்து பைசா இருவது பைசாவா எத்தனை நாளு  சேக்கறது?"

"அப்போ நீயே சொல்லும்மா."என்றபடியே  அம்மாவைப்பார்த்தாள் லதா. 

"எனக்குத் தெரிஞ்ச   யாவா ரம் களையெடுக்கறதும்  கஞ்சி காச்சறதும்தான். இத்தினி நாலு களையெடுத்து என்னாத்த சேக்க முடிஞ்சுது?"

"அதால என்ன செய்யப்போற?"பொறுமையிழந்த சுதா அவசர அவசரமாகக் கேட்டாள் 

"பொறுடி அம்மாவே யோசிச்சுச்சொல்லட்டும். ஏண்டி அவசரப்படுற?" அவளை அடக்கினாள்  இரண்டே வயது சிரியவளான லதா.
அவளை முறைத்துப் பார்த்துவிட்டு அமைதியானாள் சுதா.
தலையை வாரி முடித்தவாறே எழுந்த கனகா "அடியே பொண்ணுங்களா நானு செட்டியார் வீட்டு வரைக்கும் போயிட்டு அந்தம்மாகிட்ட ஏதாச்சும் காசு கடனா வாங்கிட்டு வாறன்.
இட்டலி சுட்டு வித்தால் நல்ல லாபம் கிடைக்கும்னு செட்டியாரம்மா சொல்லியிருக்காங்க நீங்க பத்திரமா வூட்டாண்டையே இருங்க.".
  
என்றபடியே புடவையைஉருவித் தட்டிக் கொண்டு புறப்பட்டாள் கனகா..
நானுவாரதுக்குள்ளாற   இந்த எடத்தைச்சுத்தப்படுத்தி கடைபோட ஏத்தமாரி செஞ்சு வையிங்கடீ போகிறபோக்கில் பெண்களிடம் சொல்லிவிட்டுப் போனாள் தங்களுக்கென கொடுத்த வேலை  பங்களிப்பில் மகிழ்ந்து போனார் கள்  சுதாவும் லதாவும்.பரபரவென காரியத்தில் இறங்கினார்கள். ஒருமணிநேரத்திற்குள் வீட்டு வாசல் பத்துபேர் உட்காரும் அளவிற்கு சமன் படுத்தப் பட்டு சீராகவும் அழகாவும் காட்சியளித்தது.வேலை முடித்து சகோதரியர் அமரவும் கனகம் கையில் பெரிய பையுடன் வரவும் சரியாக இருந்தது. 
மளமளவென காரியத்தில் இறங்கினாள்  கனகம்.மாலைக்குள் மாவு தயார்.செட்டியாரம்மாவே பழைய இட்டலி  பாத்திரங்களைக் கொடுத்திருந்தார்.அதையெல்லாம் சுதாவும் லதாவும் தேய்த்துவைப்பதில் உதவினார். 
          இரவு வெகுநேரம் தூக்கம் வரவில்லை சிறுமிகளுக்கு. அன்று பள்ளிவேறு  விடுமுறையானதால் நான் தெருவில் சென்று விற்று வருவேன். இந்தத் தெருவிற்கு நான் அடுத்த தெருவிற்கு நீ என்றெல்லாம் பேசிக் கொண்டே தூங்கினர் 
மறுநாள் வேகமாக எழுந்து பார்த்தபோது அம்மா கடையில் சுறுசுறுப்பாக இருந்தார். 
"என்னம்மா எங்களை எழுப்பக் கூடாதா?"கண்களைக் கசக்கியவாறே நின்றாள் சுதா.
"சரிசரி , பல்லத் தேச்சுட்டு  ரெண்டு இட்டலி தின்னுட்டு மேலத்தெருவுக்குப் போ."
"ம்..லதா எங்கம்மா?"அப்போது லதா காலியான பாத்திரத்துடன் வந்து அம்மாவிடம் பணத்தை எண்ணிக் கொடுத்தாள் .சுதாவிற்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
"அவளைமட்டும் மொதல்ல அனுப்பிட்டு என்னை ஏன் எழுப்பல?"
"நீயாத்தாண்டீ எழுந்திருக்கனும் அவளை  யார் எழுப்பினா?என் கூடவே அவளே எழுந்து ஒத்தாசையா இருந்தா. நீமட்டும் ஏன் தூங்கினே?"
சுதாவின் கோபம் அழுகையாய் மாறியது. ஓ..வெனக்  கூச்சலிட்டு அழுதாள். வியாபாரத்தைக் கவனிக்க முடியாமல் போகவே 
அவளை அடிக்கக் கையை ஓங்கினாள் கனகா.அவளை அணைத்து சமாதானப் படுத்தினாள்  லதா. முகம் கழுவி சாப்பிடவைத்து அவளை வியாபாரத்துக்குச் செல்லத தயார்படுத்தினாள் .அதற்குள் தன குணம் மேலோங்க அவளைத் தள்ளிவிட்டு அவசர அவசரமாகத் தானே தலையை வாரிக் கட்டினாள்சுதா. லதா இரண்டாம் முறை இட்டிலி வியாபாரம் செய்யப் புறப்படுமுன் அவளை முந்திக் கொண்டு அம்மாவின்முன்  பாய்ந்து சென்று நின்றாள்.கனகம் அப்போதுதான் தட்டுகளில் மாவை ஊற்றிக் கொண்டிருந்தாள். ஒரு பக்கம் வாளித் தண்ணீர் மறுபக்கம் பெரிய தூக்குப் பாத்திரத்தில் இட்டலிமாவு.இவற்றுக்கிடையே எரியும் அடுப்பு. அருகே வந்து நின்ற தங்கையைத் தள்ளிவிட்டு தானே முன்னாள் வந்து நின்றாள் சுதா .
நிலமையைத் தாங்க முடியாமல் கனகா "போங்கடீ தள்ளி.அடுப்புல விழுந்து வக்காதீங்கடீ"
சுதா இரண்டு கைகளையும் நீட்டிக் கொண்டு நின்றாள்.கனகா "அடியேய், எதையானும் உருட்டிடப் போறே. ஒண்ணுமில்லாமப் போகப் போகுது. பதறாம உக்காருடீ."சொல்லக் சொல்ல சுதா பதற்றமாகவே நின்றாள் அங்கும் இங்கும் சுற்றிச் சுற்றி வந்தாள் 
கனகா இட்டலிப்  பானையைத் திறக்கும் நேரம் வேகமாக அருகில் வந்தவள் ஆவியின் வேகம் தாங்காமல் மறுபக்கம் தாண்டினாள்  அங்கே இருந்த மாவுப் பாத்திரத்தில் கால்பட மாவு உருண்டது நீரோடு கலந்து ஓடியது அருகே இரு ந்த வாளி நீரும் உருண்டது.
இவற்றோடு சேர்ந்து சுதாவும் உருண்டவள் அலறி கொண்டே இருந்தாள் அங்கிருந்தவர்கள் அத்தனைபேரும் திக்பிரமை பிடித்து நின்றுவிட்டனர்.லதா ஓடிச் சென்று அக்காவைத் தூக்கி வீட்டு வாசலில் அமர வைத்தாள் .
ஒவ்வொருவரும் அவள் அவசரத்தால் ஏற்பட்ட நஷ்டத்தைச் சொல்லித் திட்டித்  தீர்த்தனர். ஆனால் பொறுமையாக அவள் முகத்தைக்  கழுவி அவளை சமாதானப் படுத்தினாள்  லதா.
ஏதாவது மிஞ்சுமா என்று தேடி ஏமாந்த கனகா,"ஒன்னய பதறாதே பதறாதேன்னு எத்தினி வாட்டி சொல்லியிருக்கேன் இப்படி மொத நாளே ஒன்  பதட்டத்தால ஒண்ணுமில்லாம ஆக்கிட்டியே.என்று வருந்தினாள்.
மெதுவாக அவள் அருகே வந்த சுதா, "அம்மா, மன்னிச்சுக்கம்மா. இனிமே அவசர படமாட்டேம்மா, என்றவள் அவள் மடியில் அமர்ந்து மெதுவாக "அம்மா, மூஞ்சி எரியுதும்மா, என்றவள் விக்கி விக்கி அழத் தொடங்கினாள்.
அப்போதுதான் அவள் முகத்தைப் பார்த்தவள்கனகா பதறிப் போனாள் சுதாவை அழைத்துக் கொண்டு  வைத்தியர் வீட்டுக்கு ஓடினாள்.
                                               கருமை படர்ந்து விட்ட சுதாவின் முகம் வைத்தியரின் கடும் முயற்சியால் சற்றே நிறம் மாறிவந்தது.
மூன்று மாதங்கள் கழிந்தபின்னரே சுதாவின் முகம் பழைய நிலைக்கு திரும்பியது. அதுவரை சுதாவும் எங்கும் வெளியே செல்ல வெட்கப் பட்டுக் கொண்டு வீ ட்டிலே அடைந்து கிடந்தாள்.அவளுடைய வேண்டாத குணங்கள் அவளைவிட்டு நீங்க மூன்று மாதங்கள் தேவைப் பட்டது.
கனகாவும் அடிக்கடி பதறாத காரியம் சிதறாது என்று சொல்லிச் சொல்லி அவளின் பொறுமையை வளர்த்தாள் இப்போது மிகவும் பொறுமைசாலியான சுதாவைப் பார்த்து லதாவும் மிகவும் மகிழ்ந்தாள்.










ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee







திங்கள், 30 ஜனவரி, 2017

கனிமொழிக் கதைகள் --எதிலும் அளவு தேவை.

                                             ராமன் ஒரு ஏழை விவசாயி.அவன் கிராமத்தில் ஒரு சிறு அளவு நிலத்தில் காய்கறி கீரை விளைவித்து விற்று பிழைத்துக் கொண்டிருந்தான்.அவனும் அவன் மனைவி ரத்தினமும்  தினமும் அதிகாலை முதல்மாலை வரை  தங்கள் நிலத்தில் பாடு பட்டுப் பயிரைப் பராமரித்து வந்தனர்
விளைந்த காய்கறிகளில் நல்லனவாகத் தேர்ந்தெடுத்து ஒரு பெரிய கூடையில் வைத்துக் கொண்டு ரத்தினம் தெருக்களில் சுற்றிவருவாள்.இவர்களது காய்கறிகளின் செழுமையைக் கண்ட பெண்கள் இவள் வருகைக்காகவே காத்திருந்து வாங்கிச் செல்வர்.விரைவாகவே வியாபாரத்தை முடித்துக் கொண்டு ரத்தினம் கணவருக்குத் துணையாக தோட்டத்திற்கு வந்து விடுவாள்.இருவரும் மகிழ்ச்சியக வாழ்ந்து வந்தனர். 

ஒரு நாள் ரத்தினம் வியாபாரத்திற்குச் சென்றிருந்தபோது ராமன் தனியாக தோட்டத்தைக் கொத்திக் கொண்டிருந்தான்.அப்போது அவன் எதிரே ஒரு இளைஞன் வந்து நின்றான்.நின்றவன் வாயெல்லாம் பல்லாக இளித்துக் கொண்டு நின்றான்.அவனைப பார்த்த ராமன் 
"யாருப்பா நீ?எங்கே வந்தே?"
என்று கேட்டவாறு கரையில் ஏறி பானையில் இருந்த நீரைக் குடித்து முகத்தையும் துண்டால் துடைத்துக் கொண்டான்.
"மாமா, என்னயத்  தெரியலையா மாமா.நாந்தேன் உங்க அக்கா ராசாத்தியோட மவன்  வேலு.ரொம்...ப நாளாச்சில்ல அதால மறந்திட்டிய போல ...."
என்று நீட்டி முழக்கியவாறு நெளிந்தான்.
"அப்பிடியா? நீதான் மூத்தவனாலே?"சற்றுக் கண்டிப்புடன் பேசினான் ராமன்.
"இல்ல மாமோவ் நானு ரெண்டாமத்தவன்.மூத்தவன் அய்யா கூட பற்றையில வேல செய்யிறானுங்க மாமோவ்."
அதற்குமேல் அவனுடன் பேசி நேரம் கடத்த ராமனுக்கு விருப்பமில்லை.கையில் மண்வெட்டியை எடுத்துக் கொண்டு பாத்திக்குள் இறங்கினான்.
பாய்ந்து அவன் கையிலிருந்த மண்வெட்டியைப் பறித்துக் கொண்டான் வேலு..
"என்ன மாமோவ், நானு இருக்கையிலே நீ இந்த வேலயச் செய்யலாமா, செய்யத்தே நானு விடுவனா?நீயி ஒக்காரு மாமோவ், எங்கே கொத்தணும்னு 
சொல்லு இப்பிடிங்கறதுக்குளாற கொத்தி முடிக்கிறேனா இல்லையா பாரு.ஒக்காரு மாமோவ்."
அவன் அன்பிலும் பேச்சிலும் ராமன் மயங்கித்தான் போனான்.அத்துடன் அக்காள் மகன் என்னும் பாசம் அவன் கண்களை மறைத்தது.எனவே புன்னகையுடன் அவன் சொற்களை ஏற்றுக் கொண்டு வரப்பின் மேல் அமர்ந்து கொண்டான்.

                                   ஆனால் ரத்தினத்திற்கு இவன் வெகுநாட்கள் கழித்து வந்து ஒட்டிக் கொண்டது சற்றும் பிடிக்கவில்லை.ராமனிடம் சொல்லவும் தவறவில்லை. ஆனால் அதை ராமன் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை.நாட்கள் கடந்தன.தை பொங்கலுக்கு இன்னும் இரண்டு நாட்கள் இருந்தபோது ராமனின் காய்கறி வியாபாரமும் சூடு பிடித்தது. அப்போதெல்லாம் வேலுவின் துணை மிகவும் உபயோகமாக இருந்தது. ஆனால் ரத்தினம் என்னவோ இவனை நம்பவேண்டாம் என்றே சொல்லிவந்தாள் ஆனால் அதை அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை ராமன்.
                                  அன்று  மெதுவாகராமனிடம் வந்து நின்றான் வேலு.என்னாலே என்பது போல அவனைப்பபார்த்தான் ராமன்.
"மாமோவ்,.. மாமோவ்,"
என்னாலே?
"மாமோவ், பொங்க வருது மாமோவ், நானு ஊருக்குப் போயி அம்மாவைப் பார்த்திட்டு வாறன் மாமோவ்."
"சரி,சரி...இந்தா, இந்த ஐநூறு ரூபாவை உங்க அம்மாகிட்டக் குடு. தம்பியோட பொங்கல் சீர்ன்னு சொல்லு.போயிட்டு  வா". 
தன பங்குக்கு ரத்தினமும் பலகாரங்கள் மஞ்சள் இஞ்சிக் கொத்து என்றும் தோட்டத்துக் காய்கறிகள் என்றும் மூட்டை கட்டிக் கொடுத்தாள் 
மகிழ்ச்சியோடு புறப்பட்டுப் போனான் வேலு.
நன்கு நாட்கள் கடந்தன.
  அன்று ராமனும் ரத்தினமும்தோட்ட  வேலை  செய்து கொண்டே பேசிக் கொண்டிருந்தனர்.அவர்கள் பேச்சு வேலுவைப் பற்றியதாகவே இருந்தது.
ரத்தினம் "அவன் இனிமே வருவான்னு நெனைக்கிறீயளா?"
"என் வரமாட்டான்?"
அவனும் அவன் முழியும்  எனக்கென்னவோ அவன் ஒண்ணும்  நல்லவனாப் படல."  
ராமன் புன்னகைத்தான். "உனக்கேன் அவன் மேல இத்தனை வெறுப்பு?"
ம்..ம்..என்று நொடித்தவளைப் பார்த்துச் சிரித்தான் ராமன்.
"என்னப்பா, ராமா, இந்த வருசம் நல்ல யாவாரம் போல"  என்றபடியே வந்தான் பக்கத்துத் தோட்டத்துக்குச் சொந்தக்காரனான செல்வம்.
வாங்க அண்ணாத்தே என்று வரவேற்றாள் ரத்தினம். 
ராமன் புன்னகையுடன் வரவேற்றான்."ஆமாம்பா.பொங்கலுக்காக  வளர்த்த இஞ்சி மஞ்சள் பூசணி பரங்கின்னு நல்ல வியாபாரம்தான்.                                    
"ரொம்ப சந்தோஷம்பா.ஆமா உங்க தோட்டத்துல வேலை செஞ்சுகிட்டிருந்த பயலை எங்கே காணோம்?"
"அவனா, அவன் எங்க அக்கா மவன்தானே. அம்மாவைப் பாத்துட்டு வாரேன்னு சொல்லி ஊருக்குப் போயிருக்கான். இன்னும்வரல."
"அட, நீ என்னப்பா, இம்புட்டு ஏமாளியாயிருக்க, அவனை பொங்க அன்னிக்கி சினிமாக் கொட்டாயில பாத்தேன். வெள்ளையுஞ்சொள்ளையுமா ."
"ஏம்பா, அவன்தானா, நல்லாப்  பாத்தியா?" 
"அந்தப் பயல எனக்குத் தெரியாதா?"நேத்து கூட டவுன்ல அந்தப் பய பெரிய சோத்துக் கடையில பிரியாணியை ஒரு வெட்டு வெட்டிக்கிட்டிருந்ததைப் பாத்தேன்."
ராமனின் முகம் இருண்டது.அதைப் பார்த்த ரத்தினம் "சரிதா. விடுங்க. ஏதோ தருமம் பண்ணினதா நெனச்சிக் கிடுங்க.இனி அந்தப் பயல 
சேக்காதீங்க." என்றாள் சமாதானமாக. 
'அந்தப் பய இனிமேல் வரமாட்டாம்ல.நானு அவனைப் பாத்ததை அவனும் பாத்திட்டான்ல"

"ரொம்ப நல்லதாச்சு அண்ணாத்தே, இதுக்குத்தான் ஆத்துல கொட்டினாலும் அளந்து கொட்டணும்னு சொல்லுவாங்க.சொந்தம்னு நெனச்சு பண்டபவிசோட ரூவாயும் கொடுத்து அனுப்பிச்சாருல்ல.அவனைப் பத்தி நல்லாத தெரியாம சொந்தமின்னு சொன்னதை வச்சு அள்ளிக் குடுத்தாரு..நல்லவேளை பீடை இதோடு விட்டது."
என்று சொன்னவளை ஆமோதித்து மௌனமானான் ராமன். 
























--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com