திங்கள், 20 ஜூலை, 2009

பொறுமையின் பரிசு

ஓர் ஊரில் அரசனுக்கு இணையான செல்வம் படைத்த செல்வந்தர் இருந்தார். அவருக்குக்குழந்தைகள் கிடையாது. ஆனால் குழந்தைகளைக் கண்டால் மிகவும் பிடிக்கும். அவர் தனக்குப்பிறகு தன சொத்துக்களுக்கு ஒரு வாரிசு வேண்டும் என விரும்பினார். பல இடங்களுக்குப்போய்ப் பார்த்தார்.ஒரு குழந்தையும் அவருக்குக் கிடைக்கவில்லை. யாரையும் அவருக்குப்பிடிக்கவில்லை. தான் வாரிசாக ஏற்றுக்கொள்ளும் சிறுவன் நல்ல பண்புள்ளவனாக இருக்கவேண்டும் என விரும்பினார். அதனால் அவர் பல ஊர்களுக்கும் போய் அங்கங்கே இருக்கும் குழந்தைகளைப் பார்த்துப் பழகி வந்தார்.

ஒரு நாள் ஒரு சிறு கிராமத்துக்கு வந்தார்.அந்த கிராமம் மிகவும் அழகாக இருந்தது.ஊருக்குள் நுழையும் போதே பச்சைபசேல் என்று வயல்களும் மாந்தோப்பும் தென்னந்தோப்பும் மனதுக்கு மகிழ்ச்சியையும் குளிர்ச்சியையும் தந்தன. ஊருக்கு எல்லையாக சிலு சிலுவென்று பளிங்கு போன்ற நீரை உடைய ஆறு ஓடிக்கொண்டிருந்தது. சிறிய அம்மன் கோயிலும் பிள்ளையார் கோயிலும் அவ்வூர் மக்களின் பக்தியைப் பறை சாற்றிக்கொண்டிருந்தன. செல்வந்தர் அவ்வூரில் தனது வீட்டை அடைந்தார்.அந்த ஊரிலுள்ள சில தனவந்தர்கள் அவரைத்தேடி வந்து மரியாதை செலுத்திவிட்டுச் சென்றனர். செல்வந்தர் அவர்களிடம் " இவ்வூரில் உள்ள குழந்தைகளுக்கு நான் இனிப்பும் பரிசும் வழங்கப்போகிறேன். மாலை நான்கு மணிக்கு குழந்தைகள் அனைவரையும் எங்கள் வீட்டுத்தோட்டத்தில் கூடச்சொல்லுங்கள்." என்றார்.
நிறைய விளையாட்டுச் சாமான்களும் இனிப்புகளும் வீடு நிறைய குவித்திருந்தார்.

அந்த ஊரில் அமிர்தம் என்ற ஒரு பெண்மணி வசித்து வந்தாள். அவள் கணவன் தோட்டவேலை செய்து வந்தான். அவர்களுக்கு ஒரே மகன். கண்ணன் என்று அவனைச் செல்லமாக அழைத்து வந்தனர். கண்ணன் நல்லவனாக இருந்தாலும் பொறுமை என்பதே அவனிடம் இல்லை இதனால் அவன் என்ன நல்லதைச்செய்தாலும் அது தவறாக முடியும் அல்லது கெட்ட பெயரை த்தரும்.அவன் அம்மா பொறுமையாக இருக்கும்படி பல முறை சொல்லியும் அவன் கேட்கவில்லை. பொறுமையாக இருந்த பலரது வரலாறுகளைச் சொல்லியும் அவனால் பொறுமையாக இருக்க முடியவில்லை.

அத்துடன் "ஏம்மா நான் நல்லா படிக்கிறேன். ஒழுங்காக பள்ளிக்கூடம் போகிறேன். நீயும் அப்பாவும் சொன்னபடி கேட்கிறேன்.பொறுமை இல்லாததால் சில சமயம் தவறு நேர்ந்து விடும். அதனால் என்ன குறைந்து விடப்போகிறது." என்று வாதாடுவான்.
அமிர்தமும் " பொறுத்தார் பூமியாள்வார் போகாதவர் காடாள்வார் என்ற பழமொழி தெரியாதா உனக்கு? நீ பொறுமையைக் கடைப்பிடித்தால் இன்னும் சிறப்பாக ப்போற்றப்படுவாய்."என்று சொல்லிப்பார்த்தாள் ஆனால் கண்ணன் பொறுமையில்லாமல் எல்லாவற்றிலும் அவசரம் காட்டினான். அவனது அவசர புத்தியைப் பார்த்து மிகவும் வருத்தப் பட்டாள் அவனைத்திருத்த வழி தெரியவில்லையே என ஏங்கினாள்.

அன்று பள்ளிசெல்ல அவசரமாக ஓடி வந்து சாப்பிட அமர்ந்தான். தன்னுடைய தட்டை வைத்துக்கொண்டு " அம்மா! அம்மா!" என்று அழைத்தான். அம்மா வரத்தாமதமாகவே தானே சாதம் போட்டுக்கொண்டு குழம்பை எடுத்து வேகமாக ஊற்றிக்கொண்டான். பாத்திரம் கீழே விழுந்து அத்தனை குழம்பும் கொட்டிவிட்டது. அமிர்தத்துக்கு கோபத்தை விட அழுகையும் வருத்தமும்தான் ஏற்பட்டது.குற்றம் செய்த கண்ணன் தலை குனிந்து கொண்டான்.

அவன் அம்மா "கண்ணா எனக்காக என்று ஒரு நாள் மட்டும் இரவு வரை பொறுமையாக இருந்து பார்.அது உனக்கு எத்தனை நன்மைகளைச்செய்யும் என்பதை அனுபவ பூர்வமாக நீ அறிவாய்..அப்போதுதான் பொறுமையின் பெருமை உனக்குப்புரியும். என்று மட்டுமாவது நீ பொறுமையாக இருப்பதாக இருந்தால் என்னுடன் பேசு இல்லாவிட்டால் அம்மா என்று கூப்பிடாதே." என்று வருத்தத்துடன் சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.

கண்ணன் சிந்தித்தான்." அம்மா சொல்வதுபோல் இன்று ஒரு நாள் மட்டும் பொறுமையாக இருந்து பார்ப்போமே என்ன நன்மையெல்லாம் ஏற்படுகின்றன என்பதைத்தெரிந்து கொள்வோமே " என முடிவு செய்து கொண்டான்.

பாத்திரத்தில் மீதியிருந்த குழம்பைத் தட்டில் ஊற்றிக்கொண்டு கொஞ்சமாக சாப்பிட்டு விட்டு நிதானமாக எழுந்து கையைக் கழுவிக்கொண்டு செம்பைக்கீழே வைத்தான்.அம்மாவின் புடவைத்தலைப்பில் கையைத் துடைக்காமல் துண்டைத் தேடி எடுத்துத் தன கையைத் துடைத்துக்கொண்டு மெதுவாக அம்மாவிடம் வந்தான்.

"அம்மா! நான் பள்ளிக்குப்போய் வருகிறேன். நீ சொன்னது போல் இன்று முழுவதும் பொறுமையாக இருப்பேன்." என்று சொன்னபோது அமிர்தம் மகிழ்ச்சியுடன் தலை அசைத்து விடை கொடுத்தாள். அவன் செல்வதைப்பார்த்துக்கொண்டே நின்றுகொண்டு இருந்தாள். அவசரமாக ஓடும் தன மகன் இன்று நிதானமாக நடந்து செல்வதைப் பார்க்க அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. திருப்தியாகவும் இருந்தது.

தெருமுனையில் கன்னக் நிதானமாக வந்து கொண்டிருந்த போது ஒரு லாரி வேகமாக வந்தது.நிதானமாக நடந்து சென்றவன் சட்டென ஒதுங்கி நின்றான். அந்த லாரி வேகமாக கண்ணனைக்கடந்து சென்று மறைந்தது. அங்கு நின்ற ஒரு பெரியவர் கண்ணனைப் பார்த்து ' தம்பி! நல்லவேளை நீ தப்பினாய். நீ நிதானமாக பொறுமையாக வந்ததால் பிழைத்தாய் இல்லாவிட்டால் அந்த வண்டியில் அடிபட்டு உயிரை இழந்திருப்பாய்." என்றபோது அச்சத்தால் ஒரு கணம் அவன் உடல் நடுங்கியது. பள்ளியில் அவன் மிகவும் பொறுமையாக நடந்து கொண்டான்.

பொறுமையைக் கடைப் பிடித்த சிறிது நேரத்திலேயே தனக்கு எப்பேர்ப்பட்ட அனுபவம் ஏற்ப்பட்டு விட்டது. என நினைத்துக்கொண்டான்.
தான் உயிர் பிழைத்த நிகழ்ச்சி அவன் உள்ளத்தில் ஆழப்பதிந்து விட்டது.

அன்று மாலை நான்கு மணிக்கு ஒரு செல்வந்தர் பரிசுகளும் இனிப்பும் வழங்கப் போகிறார். எல்லாச்சிறுவர்களையும் வரச் சொல்லியிருக்கிறார். என்று அவன் நண்பர்கள் சொன்னபோது வழக்கம்போல் அவசரம் அவன் மனதில் துளிர் விட்டது. ஆனால் அவன் தாயாரிடம் சொன்னசொல்லைத் தவறக்கூடாது என்று எண்ணிப பொறுமையாக இருக்கலானான்.

பள்ளி விட்டவுடன் எல்லா சிறுவர்களும் அந்த செல்வந்தர் வீட்டை நோக்கி ஓடினார்கள். இப்போதும் கண்ணன் பொறுமையாக நடந்தபடியே செல்வந்தர் வீட்டுத்தோட்டத்தில் போய் நின்றான். அங்கே நிறைய விளையாட்டுப் பொருள்களும் பொம்மைகளும் வைக்கப்பட்டிருந்தன. பெரிய கூடையில் இனிப்புப் பொட்டலங்கள் இருந்தன. செல்வந்தர் நாற்காலியில் அமர்ந்திருந்தார். சிறுவர்கள் அத்தனை பேரையும் கூர்ந்து கவனித்தபடி இருந்தார். எல்லாச் சிறுவர்களும் முண்டியடித்துக்கொண்டு நின்றிருந்தனர்.
சற்று நேரத்தில் செல்வந்தர் எழுந்து நின்றார். " சிறுவர்களே இந்த விளையாட்டுப் பொருள்களும் இனிப்புகளும் உங்களுக்காகவே வைக்கப் பட்டுள்ளன.ஒவ்வொருவராக வந்து ஒரு விளையாட்டுப் பொருளையும் இனிப்புப்பொட்டலத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். " என்று சொன்னவுடன் அத்தனை சிறுவர்களும் அவரவருக்குப் பிடித்த பொருளை பொறுக்கிக் கொள்ள ஆரம்பித்தனர்.கொஞ்ச நேரம் ஒரே அமர்க்களமாக இருந்தது அந்த இடம். கண்ணனுக்குக் கையும் காலும் பரபரத்தன. ஆனாலும் பல்லைக்கடித்துக்கொண்டு பொறுமையாக நின்றிருந்தான். அனைவரும் எல்லாப் பொருள்களையும் எடுத்துச் சென்ற பிறகு நிதானமாக மீதி இருந்த இனிப்பையும் இருந்த பொருள்களில் உடையாததாகப் பார்த்து ஒன்றைப் பொறுக்கி எடுத்துக்கொண்டான். இவனையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்த ஏல்வந்தருக்கு நன்றி சொல்லிவிட்டுச் சென்றான்.

அவனை அருகே அழைத்த செல்வந்தர் அவனைப்பற்றி விசாரித்தார். அவனுடைய பொறுமையான பண்பைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். அவனுடன் அவன் வீட்டுக்கு வந்த செல்வந்தர் அமிர்தத்திடம் கண்ணனை தனக்கு வாரிசாகக்கொள்ள நினைத்திருப்பதாகச் சொன்னபோது அவனால் நம்பவே முடியவில்லை. ஒரே ஒரு நாள் பொறுமையாக இருந்ததற்கு எப்பேர்ப்பட்ட பரிசு!.

மெதுவாகத் தாயாரிடம்" அம்மா! இனி என் வாழ்நாள் முழுவதும் நான் பொறுமையுடன் இருப்பேனம்மா. பொறுமையின் பெருமையை உணர்ந்து கொண்டேன்." என்று சொன்னபோது அமிர்தம் மிகவும் மகிழ்ச்சியடைந்தாள்.

என்ன! நீங்களும் இனி பொறுமையாக இருப்பீர்கள் அல்லவா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக