செவ்வாய், 21 ஜூலை, 2009

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் - முதல் பகுதி

பொன்வயல் ஒரு கிராமம். அந்தக் கிராமத்தில் முருகன் வயலில் நாற்று நாடும் வேலை செய்து பிழைத்து வந்தான். அவனுக்கு கேசவன் என்ற ஒரு மகன் இருந்தான். அவன் ஒரு வயதாக இருக்கும்போதே அவனது தாயார் இறந்து விட்டார். குழந்தை கேசவனை வளர்க்க இயலாமல் முருகன் இரண்டாம் முறை மணந்து கொண்டார். கேசவன் ஐந்து வயது முதலே தந்தையுடன் வயலுக்குச் சென்று நாற்று நடும் வேலை செய்து வந்தான்.

அவனுக்குப் பின்னால் தம்பி தங்கை என்று நான்கு பேர் பிறந்தனர். அதனால் கேசவனுக்கு வீட்டில் வேலை அதிகமானது. சுதந்திரமாக சுவாசிக்க முடியாமல் அந்தச் சின்ன குடிசைக் குள்ளே அவன் வாழ்வு முடங்கிப் போனது. அத்துடன் அவன் சின்னம்மாவின் கடுஞ் சொற்கள் வேறு. சிறுவனான அவனுக்கு வாழ்வே வெறுத்து விட்டது.

ஒரு நாள் நல்ல வெய்யில் நேரம். கஞ்சி எடுத்துக் கொண்டு தந்தையைத் தேடி வயலுக்குச் சென்றான் கேசவன். அவன் தந்தைக்குக் கஞ்சியைக் கொடுத்து விட்டு அந்த கலயத்தைக் கழுவி கையில் எடுத்துக் கொண்டு நடந்தான். தன் தந்தையை ஒரு முறை திரும்பிப் பார்த்தான். பின்னர் வேகமாக நடந்தான். அருகே உள்ள நகரத்தை நோக்கி அவன் கால்கள் நடந்தன. அவன் கண்கள் பாதை நோக்கி இருந்தன. உள்ளமோ சுதந்திரத்தை நாடித் துடித்துக் கொண்டிருந்தது. எப்படியேனும் வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற துடிப்பு அவன் முகத்தில் தெரிந்தது.

இருள் சேரும் நேரம். ஏதோ ஒரு வீட்டுத் திண்ணையில் படுத்து உறங்கினான். விடியும் முன்னரே எழுந்து நடக்கத் தொடங்கினான். பட்டணம் சென்று விட வேண்டும். ஏதேனும் வேலை செய்து பணம் சம்பாதித்துக் கொண்டு வந்து கஷ்டப்படும் தந்தைக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணமே அவன் உள்ளம் முழுவதும் நிறைந்திருந்தது. பன்னிரண்டு வயது பாலகன் அழுக்குப் பனியன் மட்டுமே அணிந்து கையில் சிறு கலயத்துடன் நகரை அடைந்தான்.

அவன் நகரத்துள் நுழைந்து ஏதோ ஒரு தெருவை அடைந்து பசியுடன் ஒரு வீட்டின் முன் நின்றான். பிச்சை எடுக்க மனமில்லை.பசியோ வயிற்றைப் புரட்டியது. அப்படியே சாய்ந்து அமர்ந்தான். அந்த வீட்டிலிருந்த ஒரு அம்மாள் கையில் பாத்திரத்துடன் வெளியே வந்தாள்.

"இந்தாப்பா தம்பி இந்த மோரைக் குடிக்கிறயா?" என்றபடியே மோரை அவன் கலயத்தில் இட்டாள். அந்த மோர் அவனின் சிறிய வயிற்றுக்குப் போதுமானதாக இருந்தது. மடமடவெனக் குடித்தான். புளித்த மோராக இருந்தாலும் வயிற்றின் பசி எரிச்சலுக்கு அந்தப் புளித்த மோர் உகந்த மருந்தாக இருந்தது. மோரைக் குடித்தவன் " அம்மா! ஏதாவது வேலை இருந்தாக் குடுங்கம்மா! " என்றான். அதற்கு அந்த அம்மாள், "வேலையெல்லாம் ஒன்றுமில்லையப்பா. ஏற்கெனவே வேலையில்லாமே ரெண்டு பசங்க உட்கர்ந்திருக்குங்க " என்று முணுமுணுத்து விட்டுச் சென்றாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக