சனி, 24 நவம்பர், 2018

4. புத்திமானே பலவான்

ஒரு காட்டில் நிறைய விலங்குகள் வசித்து வந்தன.புலி, கரடி,நரி, குரங்கு, மான், முயல், யானை என பல மிருகங்கள் மகிழ்வோடு வாழ்ந்து வந்தன.
இவற்றுக்கெல்லாம் ராஜாவாக ஒரு சிங்கம் அந்தக் காட்டில் வாழ்ந்து வந்தது.
அந்தச் சிங்கம் தன குகைக்குள் எப்போதும் படுத்து உறங்கிக்  கொண்டிருக்கும். பசியெடுக்கும் போது மட்டும் குகையை விட்டு வெளியே வரும்.அப்போது கண்ணில் காணும் விலங்கையெல்லாம் கொன்று தின்று வந்தது,பல்மிருகங்கள் இதேபோல் சிங்கத்தால் இறந்தன.
         ஒருநாள் எல்லா விலங்குகளும் ஒன்றாகக் கூடி யோசித்தன.தினமும் பல விலங்குகள் இறப்பதால் அவையெல்லாம் கவலையோடு ஒன்று கூடின.என்ன செய்வது என்று பேசியபோது யானை ஒரு ஆலோசனை சொன்னது.
"நம்மைச் சிங்கம் கொல்வதைவிட நாமே நாளுக்கு ஒன்றாய் சிங்கத்துக்கு இரையாகப் போகலாமே"
இந்த ஆலோசனையை எல்லாமிருகங்களும்  ஏற்றுக் கொண்டன..
          உடனே எல்லா விலங்குகளும் ஒன்றாய்க் கூடி கூட்டமாகச் சிங்கத்தின் குகைக்குச் சென்றன.சிங்கம் குகை வாயிலில் நின்றிருந்தது.எல்லா விலங்குகளும் வணங்கி நின்றன.யானை முன்னே வந்தது 
"சிங்கராஜாவே, நீங்கள் கஷ்டப்பட்டு வேட்டையாடி உணவு உண்ண வேண்டாம்.  எங்களில் தினமும் ஒருவராக  உங்களுக்கு உணவாகிறோம்."
இதைக்கேட்டு சிங்கராஜாவும் மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டது.
அதேபோல் முதல்நாள் குதிரை சென்றது.சிங்கம் அதைக் கொன்று தின்றது. மறுநாள் கழுதை சென்றது.அதையும் சிங்கம் கொன்று தின்றது.அடுத்தநாள் குரங்கு சென்றது.அதுவும் சிங்கத்திற்கு 
உணவாயிற்று.
           அன்று ஒரு முயலின் முறை வந்தது.முயல் அச்சத்துடன் மெதுவாக நடந்து.சென்றது.முயல் வெகுநேரம் அங்குமிங்கும் அலைந்துவிட்டு மெதுவாகச் சென்றது.சிங்கம் பசியோடு காத்திருந்தது. முயலைக் கண்டதும் கோபத்தோடு  கர்ஜித்தது.
"என் இவ்வளவு தாமதமாக வந்தாய்? நான் பசியோடு காத்திருப்பேன் என்று தெரியாதா?" முயல் மிகவும் பணிவோடு நடுங்கியபடியே கூறிற்று.
"சிங்கராஜா,என்மேல் எந்தத் தவறும் இல்லை.வரும் வழியில் வேறொரு சிங்கத்தைக் கண்டேன்.அதனால் ஒரு புதரில் மறைந்திருந்து விட்டு வருகிறேன்."
சிங்கம் மிகவும் கோபத்தோடு கர்ஜித்தது."என்ன..?இந்தக் காட்டில் 
வேறொரு சிங்கமா?எங்கே இருக்கிறது காட்டு."
முயல் பயந்தபடியே,"வாருங்கள் சிங்கராஜா, காட்டுகிறேன்"
என்று சொல்லி  நடந்து சென்றது.சிங்கமும அதைத் தொடர்ந்து 
சென்றது.சற்றுத் தொலைவில் ஒரு பெரிய கிணறு இருந்தது.இரண்டும் அந்தக் கிணற்றின் அருகே சென்றன.
முயல்"சிங்கராஜா, இந்தக் கிணற்றுக்குள்தான் அந்தச் சிங்கம் இருக்கிறது."என்றது.உடனே கோபத்துடன் சிங்கம் அந்தக் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தது.கிணற்றின் உள்ளே கொஞ்சமாக நீர் இருந்தது.அந்த நீரில் சிங்கத்தின் உருவம் தெரிந்தது.உடனே கோபத்துடன் கர்ஜித்தது நிழலும் அதேபோல் கர்ஜிக்கவே அதைவேறொரு சிங்கம் என நினைத்தது.தன்னைப் பார்த்து கர்ஜனை செய்த அந்தச் சிங்கத்தைப் பார்த்துக் கோபத்தோடு பாய்ந்தது.கிணற்றுக்குள் நிறைய சேறு இருந்ததால் சேற்றில் அமிழ்ந்து இறந்தது.
      எல்லா விலங்குகளும் இதைப் பார்த்து மிக்க மகிழ்ச்சி கொண்டன.அறிவாளியாக முயல் இருந்ததால் மிக்க பலமுள்ள சிங்கத்தைக் கொன்று விட்டது.எனவே புத்திமான் பலவான் என்று முயலைப் புகழ்ந்தன.அந்தக் காட்டில் எல்லா மிருகங்களும் மகிழ்ச்சியோடு .வாழ்ந்து வந்தன.
-------------------------------------------------------------------------------------------------------------

















ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

2 கருத்துகள்: