ஞாயிறு, 27 மார்ச், 2011

64th story இறைவனின் கருணை.

இறைவனின் கருணை.

மங்களபுரி மன்னன் மகேந்திரன் இறைவனைப் பற்றிய எண்ணமே இல்லாதவன். எல்லாக் காரியங்களும் தன்னைப் போன்ற மன்னர்களால்தான் நடக்கிறதே அன்றி இறைவனால் அல்ல என்று எண்ணம் கொண்டவன்.மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழிதானே.எனவே ஒரு சிலரைத் தவிர மற்றையோர் மன்னனின் வழியிலேயே நடந்து வந்தனர்.

ஒருநாள் மன்னன் சபையில் அமர்ந்திருக்கும் வேளையில் காட்டின் அருகே வசிக்கும் மக்கள் கூட்டமாக மன்னனைக் காண வந்தனர்.

"மன்னர் பெருமானே! எங்கள் வயலில் விளைந்த கரும்பு நெல் போன்ற தானியங்களைஎல்லாம் காட்டு மிருகங்கள் அழிக்கின்றன. அவற்றைத் தாங்கள்தான் தடுக்கவேண்டும்" என வேண்டினர்.

அருகே நின்றிருந்த மெய்க்காப்பாளன் மெதுவாக "எல்லாம் ஈசன் கருணை.." என்று முணு முணுத்தான்.

மன்னர் கோபமாக அவனைப் பார்த்தார்."என்ன சொன்னாய்? எல்லாம் ஈசன் கருணையா ?  வனவிலங்குகளை ஏவிவிட்டு மக்களைத்  துன்புறுத்துவதுதான் ஈசன் கருணையா?" 

மெய்க்காப்பாளன் தலையைக் குனிந்து கொண்டான்.

அன்று காலையிலேயே மன்னன் சில வீரர்களை அழைத்துக் கொண்டு காட்டுக்குச் சென்று விலங்குகளை வேட்டையாடத் தொடங்கினான். அவனது உண்மையான மெய்க்காப்பாளனான சித்திரசேனன் மன்னனை நிழல் போலப் பின்தொடர்ந்து வந்தான்.

வெகுநேரம் வேட்டையாடிக் களைத்துப் போன மன்னன் ஒரு மரத்தின் நிழலில் கூடாரம் அடித்துத் தங்கினான். 
அவனுடன் வந்த வீரர்களும் இளைப்பாறினர். ஆனால் சித்திரசேனன் மட்டும் கண்ணும் கருத்துமாக மன்னனைப் பாதுகாத்தான்.

கூடாரத்தைச் சுற்றிவந்துகொண்டிருந்த சித்திரசேனன் ஏதோ சத்தம் கேட்டுத் தன் காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டான். சற்றுத் தொலைவிலிருந்து யாரோ இருவர் மறைந்து கொண்டு தன்னைக் கண்காணிப்பதைக் கண்டான்.

அவர்களைக் கவனியாதவன்போல் நடித்தவன் தன் உடன் இருக்கும் படைவீரருக்கு ஜாடை காட்டினான்.அதைப் புரிந்து கொண்ட படைவீரர்களும் ஒளிந்திருந்த இருவரையும் பிடிக்க விரைந்தனர். ஆனால் அதற்குள் அவர்கள் எங்கோ மறைந்து விட்டனர்.

சத்தம் கேட்டு மன்னன் கூடாரத்தினின்றும் வெளியே வந்தான்.
செய்தியைக் கேட்டு மிகுந்த கோபமடைந்தான் மகேந்திரன்.

" எல்லாம் ஈசன் கருணை " என்று கூறியபடியே மன்னன் முன் கைகட்டி நின்றான் சித்திரசேனன்.

"பகைவன் நம்மை உளவு பார்த்துச் சென்றிருக்கிறான் இதையா  ஈசன் கருணை என்கிறாய்?"

"மன்னர்மன்னா, கோபம் வேண்டாம். எந்தச் செயலும் அவனது கருணையாலேயே நடக்கிறது. இதை நம்புங்கள். நல்லதே நடக்கும்"

ம்... என உறுமிய மன்னன் தன் படைவீரருக்குக் கட்டளை பிறப்பித்தான் "என்னுடன் வந்திருப்பவர் அனைவரும் இந்தக் காட்டிலிருக்கும் அந்த பகைவர்களைப்  பிடித்தபின்தான் நாடு திரும்ப வேண்டும்."

வீரர்கள் ஒற்றர்களாக மாறி காட்டில் அலைந்து தேடினர்.

மறுநாளே இரண்டு வீரர்கள் மன்னனை அணுகி காட்டின் நடுவே மறைந்துகொண்டிருக்கும் பகை மன்னனின் படைகளைப் பற்றிய செய்தியைச் சொன்னபோது மகேந்திரன் திடுக்கிட்டான். நமது நாட்டைப் பிடிக்க அண்டைநாட்டான் செய்துள்ள சூழ்ச்சி தெரிந்தது.

சற்றும் தாமதியாது காட்டில் மறைந்து படையெடுக்கக் காலம் பார்த்திருந்த பகைவனை வென்று பகை முடித்தான் மகேந்திரன்.

வெற்றிவிழாவின்போது சரியான சமயத்தில் மறைந்தவிரோதிகளைக் கண்டுபிடித்த சித்ரசெனனுக்குப் பரிசளித்தான் மன்னன். "இறைவனின் கருணையே" என்றபடியே வணங்கினான் சித்திரசேனன்.

"இதுகூடவா ஈசன் கருணை?"

"ஆம் மன்னா. விலங்குகள் பயிரை அழித்ததால் வேட்டைக்குச் சென்றீர்கள். அதனால்தான் பகைவரைக் காணமுடிந்தது. பகையும் முடிந்தது.ஈசனின் கருணையன்றி வேறு எதுவும் இல்லை மன்னா."

ஆனாலும் அவனை  இகழ்ச்சியாகப் பார்த்துச் சிரித்தான் மன்னன் மகேந்திரன்.

நாட்கள் கழிந்தன. வசந்த காலம் வந்தது. மன்னன் மன மகிழ்ச்சிக்காக காட்டில் வேட்டைக்குப் புறப்பட்டான்.  மெய்க் காப்பாளனான சித்திரசேனனும் உடன் சென்றான்.

மகேந்திரனும் சித்திரசெனனும் வேட்டையாடிக் களைத்தனர். வேட்டையாடும் மகிழ்ச்சியில் காட்டுக்குள் வெகு தொலைவு வந்ததையே இருவரும் அறியவில்லை.வெகு நேரம் வேட்டையாடியும் விலங்குகளும் ஒன்றும் கிட்டவில்லை.மாலைநேரம் நெருங்கிக் கொண்டிருந்தது.மன்னனுக்கோ நல்ல பசி.

"சித்ரசேனா, என்னால் பசிதாள முடியவில்லை."

"இறைவன் கருணையால் விரைவில் உங்கள் பசி நீங்கும் மன்னா.
, இந்த மரத்தடியில் ஓய்வெடுங்கள் உங்களுக்கு கனிகளைத் தேடிக்கொண்டு வருகிறேன்."

"இந்த பசி நேரத்திலும் இறைவனின் கருணை என்றுபேசுகிறாயே  . இங்கேயே அமர்ந்திருந்தால் உன் இறைவனின் கருணை உணவளிக்குமா?"

"ஈசனின் கருணை இருந்தால் எதுவும் நடக்கும்"

"அப்படியானால் நீ இங்கேயே இரு. நான் கனிகளைத் தேடிச் சென்று புசித்துவிட்டு வருகிறேன். உன் ஈசன் உனக்குக் கருணை புரிகிறானா பார்ப்போம்."

"இதுவும் ஈசன் கருணையே" என்றபடியே மரத்தின் அடியில் அமர்ந்து கொண்டான் சித்திரசேனன்.

மிகுந்த களைப்பால் அப்படியே தூங்கி விட்டான். யாரோ அவனைத் தட்டி எழுப்புவதை அறிந்து கண் விழித்தான் சித்திரசேனன்.

கையில் வில்லும் அம்புமாய் ஒரு வேடன் நின்றிருந்தான்.அவனது கையில் இருந்த மான் இருவருக்கும் உணவானது.

வெகு நேரம் கழித்து மன்னன் மிகுந்த களைப்போடு தள்ளாடியபடி அங்கு வந்தான். தான் இருந்த இடத்திலேயே மானைச் சமைத்துச் சாப்பிட்ட சித்திரசேனன் மன்னனின் பசியை  முதலில் தணித்தான்.

"சித்ரசேனா, இது வசந்த காலம் என்பதை நீயும் மறந்தாய். நானும் மறந்தேன்.எல்லா மரங்களும் பூக்களைச் சுமந்து கொண்டுள்ளன. எனவே எனக்கு கனிகளோ காய்களோ கிட்டவில்லை."

"இதைத்தான் ஈசனின் கருணை என்று சொன்னேன்  மன்னா. மனதில் நாம் கொள்ளும் நம்பிக்கையே இறைவனின் கருணையாக நமக்கு நல்ல பலனைத் தருகிறது. நம்பிக்கை இருக்கும் உள்ளத்துக்குள்ளேதான் ஈசன் குடியிருக்கிறான் ".  

"உண்மைதான் சித்ரசேனா. ஈசனின் கருணையை நானும் நம்புகிறேன்."

இருவரும் மிக்க மகிழ்ச்சியுடன் அரண்மனை நோக்கி குதிரையைச் செலுத்தினர். இறைவனின் கருணையைப் புரிந்துகொண்ட மன்னன் மகேந்திரன் புது மனிதனாகத் திரும்பினான். 

அந்த மன்னனைப் போலவே நாமும் இறைவனின் கருணையை எண்ணி நம் வாழ்வில் பல வெற்றிகளைப் பெறுவோம்.





ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com : email : rukmani68sayee@gmail.com 

செவ்வாய், 22 மார்ச், 2011

63rd story அன்பால் வென்ற அரசன்.

அன்பால் வென்ற அரசன்.

ஒரு சிற்றரசன் தனக்குரிய சிறிய நாட்டை சிறப்பாக ஆண்டு வந்தான். அந்நாட்டு மக்களும் தங்களின் மன்னனின் அன்புள்ளத்தைப் புரிந்து கொண்டு அவனைத தங்களின் தந்தையாகவே எண்ணி வாழ்ந்து வந்தனர்.

சுதர்மன் என்ற அந்த மன்னன் பெயருக்கேற்ப தர்ம சிந்தையும் பிறருக்கு உதவும் நற்பண்பும் பெற்றிருந்தான். இவனது பெருமையைக் கேள்விப் பட்ட சோழநாட்டை ஆண்டு வந்த சோழச் சக்ரவர்த்தியானவர் தனக்கில்லாத பெருமையும் புகழும் ஒரு சிற்றரசனுக்கு இருப்பதா எனப் பொறாமை கொண்டார்.

மனதில் பொறாமை எழுந்த காரணத்தால் சுதர்மனின் நாட்டின் மேல் படைஎடுத்தான். அந்த நாட்டைத் தன் நாட்டுடன் இணைத்துக் கொள்ள விரும்பினான்.

வீரமும் விவேகமும் நிறைந்தவன் சுதர்மன். அவனால் சோழ மன்னனை எதிர்த்துப் போரிட்டு வெற்றி பெற இயலாது எனப் புரிந்து கொண்டவன்.சோழனின் பொறாமையே தன்மீது அவன் படையெடுக்கக் காரணம் என்பதையும் தெரிந்து கொண்டான்.

ஒரு பேரரசனின் சுயநலனுக்காகத் தன் நாட்டு மக்களைத் துன்புறுத்துவதா என சுதர்மன் எண்ணினான். ஆனாலும் மக்களும் மற்ற அரண்மனை அதிகாரிகளும் சோழ மன்னனை எதிர்த்துப் போராடியே தீரவேண்டும் என்று கூறவே சுதர்மனும் படை திரட்டிப் போருக்குப் புறப்பட்டான்.

அவன் நினைத்தது போலவே போரில் தோற்று விடும் நிலை வந்தது. சுதர்மனின் உண்மை ஊழியர்களான மெய்க்காப்பாளர்கள் சுதர்மன் தப்பிப் போக வழி வகுத்துக் கொடுக்க காட்டில் மறைந்து கொண்டான் சுதர்மன். அவனைத் தேடிக்கொண்டு சோழ வீரர்கள் காட்டில் அலைந்து திரிந்தனர்.

சோழ மன்னனால் சுதர்மனைக் கண்டு பிடிக்க முடியவில்லை. சுதர்மனைப் பற்றிய உண்மையை அவன் நாட்டு மக்கள் வெளியிடவே இல்லை.காட்டிலே அலையும் சுதர்மனைப் பிடிக்க ஒரு படையை அனுப்பினான் மன்னன்.சோழவீரர்கள் காடு மேடு எங்கும் தேடினர்.

ஒருநாள் சுதர்மன் ஒரு குகையினுள்ளே படுத்து உறங்கிக் கொண்டிருந்தான்.அந்தக் குகை வாயிலுக்கு வந்த சோழவீரர்கள் உள்ளே எட்டிப்பார்த்தவாறு பேசிக் கொண்டனர்.

"இந்தக் குகைக்குள்ளே மன்னர் இருக்கமாட்டார்."

"எப்படிக் கூறுகிறாய்?"

"வாயிலை மூடிக் கொண்டு ஒரு சிலந்தி வலை பின்னியிருக்கிறதே. மன்னர் உள்ளே சென்றிருந்தால் அந்த வலை அறுந்திருக்குமே?" 

"உண்மைதான். நாம் வேறு இடங்களில் தேடலாம்" வீரர்கள் பேசியபடியே நடந்து சென்றனர்.

வீரர்கள் உரையாடலும் கடந்து செல்லும் ஒலியும் மன்னனின் காதுகளில் விழுந்தது. பெருமூச்சுடன் இறைவனுக்கு நன்றி சொன்னான் சுதர்மன். வெளிப் பக்கம் வந்து தான் மறைந்திருந்த குகை வாயிலில் வலை பின்னி அதில் உறங்கிக்  கொண்டிருந்த சிலந்திக்கும் கரம் குவித்து நன்றி கூறினான்.

சிறிய நாடாக இருந்தாலும் மன்னன் மீது மக்கள் மிகுந்த அன்பு வைத்திருந்த காரணத்தால் தங்கள் மன்னன் பகைவன் கைகளில் பிடிபடாமல் காத்து வருவதை சோழன் அறிந்து கொண்டான். இத்தனை அன்புள்ளம் கொண்டவனா இந்த சுதர்மன்?அவனை அழித்தால்தான் தன் புகழ் ஓங்கும் என எண்ணினான்.

ஒருபக்கம் சோழ வீரர்கள் சுதர்மனைத் தேடிக்கொண்டிருக்க மறுபக்கம் சுதர்மன் காட்டில் மறைந்து வாழ்ந்து வந்தான். ஒருநாள் மழை பெய்து ஓய்ந்த நேரம் மாலை மயங்கி இருட்டு படரும் வேளை. ஒரு குகையின் வாயிலில் அமர்ந்து மீண்டும் படை திரட்டுவது பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தான்.

திடீரென்று ஒரு சிங்கம் கர்ஜனை செய்யும் ஒலி மிக அருகில் கேட்டது. திடுக்கிட்டு எழுந்த சுதர்மன் தன் கையில் குறுவாளை ஓங்கிக் கொண்டு மெதுவாக ஒலி வந்த திசையில் நடந்தான்.சற்றுத் தொலைவு நடந்ததும் அங்கு ஒரு பெரிய சிங்கம் அமர்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தான் சுதர்மன்.

மெதுவாக அதன் அருகே சென்று பார்த்தான். அதன் கண்களில் ஏதோ வேதனை தெரிந்தது.சற்று அருகே சென்றான். சிங்கம் வலியில் கர்ஜித்தது.
அதன் அருகே சென்று அமர்ந்து கொண்ட சுதர்மன் அதன் பிடரியைத் தடவிக் கொடுத்தான். தாயின் அரவணைப்பில் இருக்கும் சேயைப் போல் சிங்கம் அமைதியாக அமர்ந்திருந்தது.

அதன் உடல் முழுவதும் தடவிக் கொடுத்தபோது காலில்  பெரிய முள் ஒன்று ஆழமாகத் தைத்திருப்பதைப் பார்த்தான்.அக்காலைத் தன் மடிமீது வைத்துக் கொண்டான். பின்னர் பக்குவமாக அந்த முள்ளைக் காலிலிருந்து பிடுங்கி எடுத்தான். தன் கையிலிருந்த துணியைக் கிழித்து அதன் காலில் ரத்தம் வராமல் கட்டுப் போட்டான்.

இப்போது சிங்கத்தின் வலி நீங்கியது. நன்றியுடன் மன்னனைப் பார்த்துவிட்டுத் தன் வழியே நடந்து சென்று காட்டினுள் மறைந்தது அச் சிங்கம்.சில நாட்களில் மன்னன் சுதர்மன் இந்த நிகழ்ச்சியை மறந்து விட்டான்.அவன் எண்ணமெல்லாம் மீண்டும் படைதிரட்டுவதிலேயே இருந்தது.

ஒருநாள் அதிகாலை.குளிர் அதிகமாக இருக்கும் ஒரு பனி நாள்.ஒரு பாறைமீது நல்ல வெய்யிலில் படுத்திருந்தான் சுதர்மன். சற்றேகண் அயர்ந்தவன்  பெரும் கூச்சல் கேட்டுக் கண்களைத் திறந்து பார்த்தான். அவனைச் சுற்றி சோழவீரர்கள் நின்றிருந்தனர்.பல நாட்களாகக் கிடைக்காத பகை அரசர் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் வீரர்கள் ஆரவாரம் செய்தனர். அவர்கள் சுதர்மனைச் சங்கிலியால் கட்டி இழுத்துச் சென்றனர்.

சிறையில் அடைக்கப்பட்ட சுதர்மன் பல கொடுமைகளுக்கு ஆளானான். மாபெரும் மன்னனான சோழச் சக்கரவர்த்திகளை எதிர்த்துப் போரிட்டமைக்காக பல நாட்கள் சிறையில் அடைக்கப் பட்டிருந்தான்.

மன்னன் சபைகூட்டி மன்னிப்பு வேண்டுமாறு கூறியபோதும் மறுத்து விட்ட சுதர்மனுக்கு மரண தண்டனை விதித்தான் சோழன் .மறுநாள் சிங்கக் கூண்டினுள் தள்ளப் பட்டு சிங்கத்திற்கு இரையாகவேண்டும் எனத் தீர்ப்பு வழங்கப் பட்டது.

பொழுது விடிந்தது.தங்களின் மன்னனின் நிலையைக் கேள்விப்பட்ட மக்கள் துயரத்துடன் கூடினர். சோழமன்னனும் மற்றயோரும் வந்து அமர்ந்தனர். சிங்கம் ஒன்று கூண்டினுள் பசியுடன் அலைந்துகொண்டு கர்ஜனை புரிந்தபடி இருந்தது.

அந்தப் பெரும் பள்ளத்தில் சுதர்மனைத் தள்ளிவிட்டு சிங்கத்தின் கூண்டையும் திறந்து விட்டார்கள் காவலர்கள்.
அனைவரும் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.வீரசிங்கத்திற்கும்  காட்டு சிங்கத்திற்கும் பெரும் சண்டை தொடங்கப் போகிறது.

 பலநாட்களாகப் பட்டினியாக இருக்கும் சிங்கம் வெல்லுமா?பலநாட்களாகப் பட்டினியாக இருக்கும் சுதர்மன் வெல்வானா? அனைவரின் கண்களும் இமைப்பதை மறந்தன.

கூண்டைத் திறந்து விட்டவுடனேயே சிங்கம் பாய்ந்து வந்தது. சுதர்மனின் இரண்டு கரங்களிலும் தன் முன்னங்கால்களை வைத்து தன் பெரிய வாயைத் திறந்து பெரும் கர்ஜனை செய்தது. அதைக் கேட்ட மக்கள் அனைவரும் நடுநடுங்கினர்.

மன்னன் மாய்ந்தான் என சிலர் கண்களை மூடிக் கொண்டனர். சிலர் அவரவர் இறைவனை வேண்டிக்கொண்டனர்.வேறு சிலர் இந்தக் கொடூரக் காட்சியை ரசிக்கக் காத்திருக்கும் சோழனை வெறுப்போடு பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் நடந்தது என்ன.ஒரு ஆச்சரியம் நடந்தது அங்கே.ஆம்.சீறி வந்த சிங்கம் சிறு நாயக் குட்டிபோல சுதர்மனின் அருகே மண்டியிட்டு அமர்ந்தது. அவனது காலை நக்கிக் கொடுத்தது.அன்போடு அவன் மடியில் தன் தலையைச் சாய்த்துக் கொண்டது.

இக்காட்சியைக் கண்ட மக்கள் பெரும் ஆரவாரம் செய்தனர். சுதர்மர் வாழ்க. அன்புள்ளம் கொண்ட பண்பாளர் வாழ்க.
என்ற மக்களின் குரல் ஓங்கி ஒலித்தது. சோழன் தன் இருக்கையிலிருந்து எழுந்து வந்து சுதர்மனை  அணைத்துக் கொண்டான்.

"சுதர்மரே! உமது அன்புள்ளத்திற்கு நான் அடிபணிகிறேன். அன்பால் யாரையும் வெல்லலாம் என்ற உண்மையைப் புரிந்து கொண்டேன். இந்த சிங்கத்திடம் நீர் என்ன கூறினீர் என்பதை  மக்கள் அறியக் கூறுங்கள் "என்றார்.

"அரசே! நான் காட்டில் அலையும் போது ஒரு  சிங்கத்தின் காலில் தைத்த முள்ளை நீக்கி அதன் வேதனையை நீக்கினேன். அது இந்தச் சிங்கம்தான். நன்றி மறவாத சிங்கம் என்னையும் நான் செய்த உதவியையும் நினைவில் வைத்துக் கொண்டு என்னிடம் அன்புடன் நடந்து கொண்டது."

"நண்பரே! அன்பால் மனிதரை மட்டுமின்றி விலங்குகளையும் வெல்லலாம் என்ற உண்மையைப் புரிந்து கொண்டேன். இனி நீர் சுதந்திரமாக உமது நாட்டுக்குச் செல்லலாம். நாம் இனி நண்பர்களாக இருப்போம்.
இந்தச் சிங்கம் உமக்கு நான் அளிக்கும் பரிசு." 

சுதர்மன் மகிழ்ச்சியுடன் தன் நாடு திரும்பினான். மக்கள் அவனை அன்பால் வென்ற அரசன் என்று போற்றினர். 
நாமும் அன்பை கைக் கொள்வோம் அன்பால் உலகை வெல்வோம்.
 



ருக்மணி சேஷசாயி 





Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com : email : rukmani68sayee@gmail.com 

ஞாயிறு, 13 மார்ச், 2011

62nd story குருவும் சீடனும்.

குருவும் சீடனும்.

ஒரு காட்டில் ஒரு குரு இருந்தார். அவருக்கு பல சீடர்கள் இருந்தனர். அவர்களுள் ஒரு சீடனுக்கு அடிக்கடி சந்தேகங்கள் தோன்றிக்கொண்டே இருக்கும்.

தன் குருவிடம் அதனைக் கேட்டுக் கொண்டே இருப்பான். குருவும் அவனுக்குப் புரியும்படி கூறி அவன் சந்தேகங்களைப் போக்கிக் கொண்டே இருப்பார். 

பல சமயங்களில் அவரது விளக்கங்கள் அந்த சீடனுக்குத் திருப்தியைத் தருவதில்லை. இருப்பினும் குருவுக்கு மரியாதை தரும் நிமித்தமாக 

மெளனமாக இருப்பான். புரிந்தது போலவும் தலையை அசைப்பான்.

குருவும் இதைப் புரிந்துகொண்டு புன்னகை செய்வார்.

வழக்கம்போல அந்த சீடனுக்கு ஒரு சந்தேகம் வந்துவிட்டது. அதைத் தன் குருவிடம் கேட்டான்.

"குருவே, இறைவன் பாதங்களைப் பற்றிக்கொண்டால் இந்த பவசாகரத்தைக் கடந்து விடலாம் என்கிறீர்களே அது எப்படி குருவே? எனக்குப் புரியும்படி 

கூறுங்கள்" என்றான் அந்த சீடன்.

குரு அந்த சீடனிடம் தன்னை இரவு தனிமையில் சந்திக்கும் படி கூறியனுப்பினார்.

இரவு வந்தது. குருவை நாடிச் சென்றான் அந்தசீடன். அவனைத் தன் முன்னே அமர்த்திக் கொண்டார் அந்த குரு.

" மகனே இப்போது நாம் இருவரும் வேறு ஒரு உயிராக மாறப் போகிறோம். அந்த உயிர் போகும் இடமெல்லாம் நீ உடன் வந்தால் உனக்கு உண்மை 

புரியும்" என்றார் அந்த குரு. சீடனும் அவர் சொல்லியபடியே தன் கண்களை மூடிக்கொண்டான்.

இப்போது குருவும் சீடனும் இரண்டு புழுவாக உருவெடுத்தனர். அவர்கள் இருந்ததோ ஒரு மலையின் உச்சி. அங்கே பல பயங்கர மிருகங்கள் உலவின.

இரண்டு புழுக்களின் அருகே ஒரு சிங்கம் கர்ஜித்துக் கொண்டு அமர்ந்திருந்தது. குருவான புழு சீடனிடம் அந்த சிங்கத்தின் காலில் ஏறி அமர்ந்துகொள்ளச் 

சொல்லியபடி தானும் ஏறிக் கொண்டார். சீடனும் அப்படியே செய்தான். 

"சீடனே நாம் இப்போது இந்த மலை உச்சியில் இருந்து அடுத்த மலை உச்சிக்குப் போகப் போகிறோம்."

"எப்படி குருவே?"

"பொறுத்திருந்து பார் "

சற்று நேரத்தில் சிங்கம் அடுத்த மலையிலுள்ள இரையைப் பார்த்தது. ஒரே பாய்ச்சலில் அடுத்த மலை உச்சியை அடைந்தது. 

குரு சீடனைப் பார்த்துக் கூறினார். "பார்த்தாயா. எவ்வளவு சுலபமாக மலையைக் கடந்தோம்!"

"குருவே, ஓரளவு புரிந்தது. இதுபோல  விண்ணைக் கடக்க இயலுமா?"

"கண்டிப்பாக முடியும்" என்ற குரு சற்று தூரம் நெளிந்தபடி சென்றார். சீடனும் அவரைப் பின்பற்றினான். அப்போது அங்கே ஒரு காட்சியைக் கண்டனர்.

ஒரு கருடன் இரையைக் கொத்திக் கொண்டிருந்தது.

"சீடனே! இந்த கருடனின் சிறகின் அடியில் மறைந்து கொள்." என்றபடியே குருவும் தன்னை சிறகில் மறைத்துக் கொண்டு அமர்ந்தார்.

சற்று நேரத்தில் கருடன் விண்ணில் பறக்கத் தொடங்கியது. 

சீடன் பயந்தான்."குருவே விண்ணில் பறந்தது போதும் கீழே இறக்குங்கள்."

"  பொறு சீடனே. அதோ அந்த ஆற்றின் அருகே எப்படியும் கருடன் இறங்கும். அப்போது இறங்கிவிடலாம்."

இப்போது கருடனிடமிருந்தும் இறங்கியாயிற்று. இப்போதும் மற்றொரு சந்தேகம் சீடனுக்கு. தன் எதிரே இருக்கும் நீண்ட ஆற்றைப் பார்த்தான்.

"குருவே, இந்தப் பெரிய ஆற்றை நாம் எப்படிக் கடப்பது?"

"அதோ அந்த ஓடக்காரனின் முண்டாசு இருக்கிறது பார். அதில் ஏறி மறைந்து கொள்." என்றபடியே குரு தானும் முண்டாசில் மறைந்து கொண்டார்.

சற்று நேரத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு படகு புறப்பட்டது.அக்கரையை அடைந்த படகோட்டி தரையில் இறங்கித் தன் முண்டாசை எடுத்து 

உதறிவிட்டு முகத்து வியர்வையைத் துடைத்துக் கொண்டான். அப்போது இரண்டு புழுக்களும் தரையில் வைக்கப்பட்டிருந்த ஒரு கயிற்றின் அருகே 

விழுந்தன.

அந்தக் காட்டுக்கு விறகுவெட்ட கோடாலியுடன் வந்த விறகுவெட்டியின் கையிலிருந்த அந்தக்  கயிற்றில் ஏறிக்கொண்ட குருவும் சீடனும் தாங்கள் 

வசிக்கும் காட்டுக்கு வந்து சேர்ந்தனர்.

அப்போது சூரியன் முளைத்துவிட்டதால் குரு கண்களைத் திறந்தார். சீடனைத் தட்டி எழுப்பிக் கேட்டார்..

"சீடனே, எத்தனை இடங்களுக்குப் போய் வந்தாய்?" 

"குருவே! நான் ஒரு சிறு புழுவாக இருந்தாலும் மலையையும் விண்ணையும் பெரும் நீர்ப்பரப்பையும் கடந்து என்னிடத்திற்கே வந்து சேர்ந்துவிட்டேன்.

இது எப்படியென்றுதான் புரியவில்லை."

"மகனே! ஒரு உயிர் இறைவனின் பாதங்களைப் பற்றிக் கொண்டால் எந்த இடரையும் கடக்கலாம் என்பதற்காகவே உனக்கு நான் இந்தக் காட்சியைக் 

காட்டினேன். ஒவ்வொரு இடத்திலும் உனக்குத் துணையாக வந்தது இறைவனின்  வேறு வேறு அவதாரங்களே. மலை உச்சியில் கண்ட சிங்கம் 

நரசிம்மமாகவும் கருடனின் உருவில் மகாவிஷ்ணுவும் ஓடக்காரன் உருவில் அந்த பராசக்தியும் விறகு வெட்டியாக  அந்த பரமேஸ்வரனும் நம்மைப் 

பாதுகாக்கக் காத்திருக்கிறார்கள். அவர்களின் பாதங்களைப் பற்றிக் கொண்டால் உலகத் துன்பங்களிலிருந்து கண்டிப்பாக மீளலாம்.

இப்போது புரிந்து கொண்டாயா மகனே!"

அனுபவத்தினால் ஏற்பட்ட அறிவினால் ஆண்டவனின் கருணையைப் புரிந்து கொண்ட சீடன் கண்ணீருடன் குருவின் பாதங்களைப் பணிந்தான்.

இறைவனின் மீது உண்மையான பக்தி செலுத்தி நம்பிக்கையுடன் அவனை நாமும் பணிந்து நற்கதி அடைய முயல்வோம்.

கடவுளை நம்பினோர் கைவிடப் படார் என்பதையும் தெய்வம் நமக்குத் துணை பாப்பா என்று சொன்னதையும் 

நாம் மறக்கலாகாது.





















ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com : email : rukmani68sayee@gmail.com 

ஞாயிறு, 6 மார்ச், 2011

61st story - மானம் காத்த மாவீரன்

                                                                        மானம் காத்த மாவீரன்.

தமிழக வரலாற்றில் தனிச் சிறப்புப் பெற்றவன் சேரமான் கணைக்கால் இரும்பொறை. மானம் காத்த மாவீரன் என்று வரலாறு இவனைப் போற்றுகிறது. இம்மன்னன் தொண்டி என்ற ஊரைத்  தலைநகராகக் கொண்டு ஆண்ட சேர மன்னரின் மரபிலே வந்தவன்.ஒருமுறை சோழ மன்னன் கோ செங்கனானுக்கும் இரும்பொறைக்கும் போர் நடந்தது. திருப்போர்ப்புறம் என்ற இடத்தில் நடந்த அந்தப் போரில் இரும்பொறை தோல்வியடைந்தான்.

தோல்வியடைந்த கணைக்கால் இரும்பொறையை குணவாயில் கோட்டம் என்னும் இடத்தில் சோழன் சிறை வைத்தான். நாட்கள் கடந்தன. தோல்வியால் மனம் வருந்தி அவமானத்தால் மிகவும் நொந்து போயிருந்தான் இரும்பொறை.

இரும்பொறையின் உயிர்நண்பர் பொய்கையார் என்ற புலவர். தன் நண்பனான இரும்பொறையின் விடுதலையை வேண்டி சோழனைக் காணச் சென்றார். அவனது அவையில் நின்று செங்கனானைப் பாட்டுடைத் தலைவனாக்கி களவழி நாற்பது என்ற நூலை இயற்றினார். மனம் மகிழ்ந்த சோழன் கோச் செங்கணான் பொய்கையாருக்குப் பரிசில் தர விழைந்தான்.

ஆனால் தான் விரும்பும் பரிசிலையே தரவேண்டுமெனக் கேட்டார் புலவர். அதற்கு இசைந்த சோழன் அவரது விருப்பத்தைக் கேட்டான். சேர மன்னனும் தன் உயிர்நண்பனுமான இரும்பொறையை விடுவிக்கக்  கேட்டார் பொய்கையார். அவரது நட்பின் ஆழத்தைப் புரிந்து கொண்ட சோழன் அவரது விருப்பப் படியே சேரனை விடுவிக்க சம்மதித்தான்.

மனமகிழ்ச்சியுடன் மன்னன் பின்தொடர சிறைச் சாலை நோக்கி வ்ந்தார் பொய்கையார். ஆனால் அந்தோ அங்கே உயிரற்றவனாகக் கிடந்தான் சேரமான் கணைக்கால் இரும்பொறை.
துயருற்றவராகப புலவர் அவனருகே சென்று பார்த்தார். அருகே ஒரு கலயம் உருண்டு கிடந்தது.உள்ளே இருந்த நீர் சிந்திக் கிடந்தது.

சேரமான்கணைக்கால் இரும்பொறை  தமிழ்ப் புலமை மிக்கவன். எனவே தன் அப்போதைய நிலையை ஒரு பாடலாக எழுதி வைத்துவிட்டு தன் இன்னுயிரை விட்டு விட்டான்.
தன் நண்பன் எழுதிய அப்பாடலை எடுத்துப் படித்தபோதுதான்  மானம் காத்துக் கொள்ள உயிரை விட்டு விட்டான் என்பது புரிந்தது சோழனுக்கும் புலவருக்கும்.

                                     " குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
                                     ஆளன்று என்று வாளின் தப்பார்
                                     தொடர்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய  
                                     கேளல் கேளிர் வேளாண் சிறுபதம் 
                                     மதுகை இன்றி வயிற்றுத் தீத் தணியத 
                                     தாம் இரந்து உண்ணும் அளவை 
                                     ஈன்மரோ இவ்வுலகத் தானே?" 
இப்பாடலைப் பார்த்துக் கண்ணீர் வடித்தார் புலவர்.
என்ன நடந்திருக்கும் என்பதைப் புரிந்து கொண்டார் .நீர்வேட்கையால் நீர் வேண்டுமென்று கேட்ட மன்னன் அந்நீரைக் காவலர் காலம் தாழ்த்திக் கொடுத்ததால் அதனை உண்ண மனமின்றி அவமானத்தால் குன்றி அந்நீரைக் கொட்டிவிட்டு நீர்பருகாது உயிர் விட்டுள்ளான்.

அதற்குமுன் தன் உள்ளுணர்வுகளை ஒரு பாடலாக வடித்துவிட்டுப் போய்விட்டான். மன்னர்தம் மானம் காக்கும் திறம் இப்பாடலிலே கூறப்பட்டுள்ளது.

மன்னர் மரபில் ஒரு குழந்தை இறந்து பிறந்தாலும் ஒரு தசைப் பிண்டம் பிறந்தாலும் அவற்றையும் ஒரு ஆளாகக் கொண்டு வாளால் வெட்டிப் பின்னரே அடக்கம் செய்வர்.போரில் வாளால் வெட்டுப் பட்டு மடியாது இப்படி நாய் போல சங்கிலியால் கட்டப்பட்டு சிறையிலே இடப்பட்டு அந்தப் பகைவரின் கையால் தரப்படும் நீரை உண்டு வாழும் இந்த இழிநிலையை அடைந்தவனை இவ்வுலகத்தார் பெற்றேடுப்பாரோ?

இப்பாடலைக் கேட்ட செங்கனானும் மனம் வருந்தினான். இத்தகு மானம் காத்த மாவீரனது வரலாற்றைப்  புறநானூறு என்ற சங்க நூல் நமக்கு எடுத்து இயம்புகின்றது.

போர்க்களத்தில் வீர மரணம் அடைவதையே வீரர்கள் விரும்பினர் என்பதும் அப்போதுதான் அவர்கள் வீர சுவர்க்கம் அடைவர் என்பதும் அனைவரின் நம்பிக்கையாகவும் விருப்பமாகவும் இருந்தது. அந்தநிலையை எய்தாத மன்னன் நீர்வேட்கை மிகுந்த காலத்துப் பகைவரின் கையால் நீர் பருக மனமின்றி மானத்தோடு உயிர் விட்ட வரலாறு நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது அல்லவா?.
அத்துடன் அக்காலமக்களின் வீரமும் நமக்குத் தெரிகிறதல்லவா?














Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com : email : rukmani68sayee@gmail.com 

புதன், 16 பிப்ரவரி, 2011

60th story நான்கு கோடி.

நான்கு கோடி.

தமிழகத்தை ஆண்டுவந்த அரசர்களில் மூவேந்தரான சேர சோழ பாண்டிய மன்னர்கள் மிகவும் முக்கியமானவர்கள். அதிலும் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த பாண்டிய மன்னர்கள் மிகச் சிறப்பானவர்கள். பாண்டியமன்னர்களுக்கு அடிக்கடி சில சந்தேகங்கள் ஏற்படுவதுண்டு.

பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே  மணமுண்டா இல்லையா என்று ஒரு மன்னனுக்கு சந்தேகம் ஏற்படவில்லையா அதுபோல.
ஏதேனும் ஒரு அதிசயமான செயலைச் செய்யச் சொல்வது அவர்களுக்கு வழக்கமான ஒன்று.

பாண்டிய மன்னன் ஒருநாள் சபையில் அமர்ந்திருந்தான். அவனுக்கு எதிரே சங்கப் புலவர்கள் அமர்ந்திருந்தனர்.நானூறு புலவர்கள் அம்மன்னனின் சபையில் இருந்தனர். அவர்கள் தங்களின் புலமை பற்றி மிகவும் பெருமைப் பட்டுக் கொண்டிருந்தனர்.

இவர்களின் தற்பெருமையைக் கண்டு மன்னன் கோபம் கொண்டிருந்தான். இவர்களின் இந்த பண்பு தவறு என அவர்கள் அறிய வேண்டுமென 
முடிவு செய்தான்.அதனால் அன்று சபையில் ஒரு கேள்வி எழுப்பினான்.

ஒரே நாளில் எத்தனை பாடல்கள் பாட முடியும்? என்று கேட்டான். ஒவ்வொரு புலவரும் ஒவ்வொரு எண்ணைச் சொன்னார்கள். 
"மன்னனோ நீங்கள் நானூறு புலவர்கள் உள்ளீர்கள். எனவே நான்கு கோடி பாடல்களைப் பாடி வாருங்கள். நாளைக் காலைக்குள் நான்கு கோடிப் பாடல்களைப் பாடவேண்டும். இல்லையேல் உங்கள் தலை மண்ணில் உருளும்" என்று ஆணையிட்டான்.

நானூறு புலவர்களும் கைகளைப் பிசைந்தார்கள். மன்னனுக்கு என்ன ஆயிற்று. இப்படி புத்தி போகிறதே. நடக்க இயலாத ஒரு காரியத்தை செய்யச் 
சொல்கிறாரே. ஒரே இரவில் ஒவ்வொருவரும் நூறு பாடலைப் பாடினாலே அது நாற்பதாயிரம் பாடல்தானே ஆகும் நான்கு கோடிக்கு எங்கே போவது எனத் திகைத்தனர்.

மன்னனோ அவர்களை உடனே "அவையை விட்டுச் செல்லுங்கள். உங்கள் பணியை உடனே தொடங்குங்கள்" எனக் கூறி அனுப்பிவைத்தான்.
புலவர்கள் வழியறியாமல் குனிந்த தலையுடன் வெளியேறினர்.

ஊரைவிட்டு வெகு தூரத்தில் இருந்த காட்டில் ஒன்று திரண்டனர். என்ன செய்வது எப்படி மன்னனை திருப்திப் படுத்துவது என ஒவ்வொருவரும் ஆலோசனை செய்தனர்.கடைசியில் வயதில் மூத்தவர் எழுந்தார். நாம் அனைவரும் சேர  நாட்டுக்குச் சென்று விடுவோம். இங்கிருந்தால் நம் தலை தப்பாது. என்று ஆலோசனை சொல்ல அனைவரும் அதுவே சரியென முடிவு செய்தனர்.

நானூறு புலவர்களும் இரவோடு இரவாக பாண்டிய நாட்டை விட்டு சேர நாடு நோக்கி நடக்கலானார்கள்.

சேர மன்னனிடமிருந்து பரிசில் பெற்றுக்கொண்டு அதே வழியாக பாண்டிய நாடு நோக்கி வந்துகொண்டிருந்தார் ஔவையார். ஏதோ பெருங்கூட்டம் ஒன்று தன முன்னே வருவதைப் பார்த்துத் திகைத்து நின்றார். எதிரே வந்த புலவர் கூட்டமும் ஔவையாரைப்  பார்த்துத திகைத்தனர்.

"புலவர்களே! பாண்டிய நாட்டுக்கு என்ன நேர்ந்தது? ஏன் அனைவரும் வெளியேறிச் செல்கிறீர்கள்?" வினாக்களை அடுக்கினார் ஔவையார்.

தங்களுக்கு பாண்டிய மன்னனால் வந்த சோதனையைக் கூறினர் புலவர்கள். "புலவர்களே இதில் ஏதோ சூது உள்ளது வாருங்கள். மன்னனை 
அதே சூதினால் வெல்வோம்." என்று அவர்களுக்கு ஆறுதல் கூறிய ஔவையார் அனைவருடன் பாண்டியன் அரண்மனை நோக்கி நடந்தார். புலவர்களும் உடன் நடந்தனர்.

பாண்டியமன்னன் அவையில் அமர்ந்திருந்தான். மந்திரி பிரதானியர் சூழ்ந்திருந்தனர். பொது மக்களும் நிரம்பியிருந்தனர்.
அவைக்குள் ஔவையார் நானூறு புலவர்கள் புடைசூழ நுழைந்தார். மன்னன் தன் சிம்மாசனத்திலிருந்து எழுந்து வந்து அவரை வரவேற்றான்.ஔவையார் சற்றே கோபத்துடன் பேசினார்.

"பாண்டிய மன்னா!  இது என்ன அநீதி? ஒரே நாள் இரவுக்குள் நான்கு கோடி பாடல் பாடவேண்டுமென்றாயே. தமிழ் படித்த புலவர்களை அவமதிக்க வேண்டும் என எண்ணினாயா?"

"தாயே மன்னிக்க வேண்டும். தங்களால் ஆகாதது எதுவும் இல்லை என்கிற எண்ணம் இவர்களுக்கு வந்ததாலேயே இந்தக் கட்டளையை விதித்தேன்.  உயிருக்குப் பயந்து ஓடுவார்கள் என நான் எண்ணவில்லை.  அதனால் இவர்களுக்கு இட்ட தண்டனையை நிறைவேற்றுவதே என் எண்ணம்.

"பாண்டியமன்னனே, பொறு. நீ கேட்ட நான்கு கோடிப் பாடல்களை நான் பாடினால் இந்தப் புலவர்களை விடுவித்து மீண்டும் அவையில் சேர்ப்பாயல்லவா?"

"என்ன! நான்கு கோடிப் பாடல்களை தாங்கள் பாடுகிறீர்களா?" என்று திகைத்தான் மன்னன். அவையினர் அனைவரும் ஆவலுடன் பார்த்தனர்.

"ஆம்" என்றார்  ஔவையார். பாண்டியனும் சம்மதித்தான்.

ஔவையார் பாடிய பாட்டுதான் இது. 

"மதியாதார் தலைவாசல் மதித்தொருகால் சென்று மிதியாமை கோடி பெரும்.

உண்ணீர் உண்ணீர் என்று ஊட்டாதார் தம்மனையில் உண்ணாமை கோடி பெரும்.

கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு கூடியிருப்பது கோடி பெரும்.

கோடானு கோடி கொடுப்பினும் தன் நா கோடாமை கோடி பெரும்"
  
"மன்னா! இந்த உண்மைகளை நீ ஒப்புக் கொள்கிறாயல்லவா?  நீ கேட்டபடி நான்கு கோடிகளைப  பாடிவிட்டேன். இனி புலவர்களை பழைய படி அவையில் அமர இடம் கொடு.
தமிழ் கற்றவர்களை தண்டித்தால் அவர் கற்ற தமிழ் உன்னைத் தண்டிக்கும்."

மன்னன் ஒளவையின் சொல்லுக்குத் தலைவணங்கினான். புலவர்களும் தங்களின் கர்வம் நீங்கி ஒளவையை வணங்கினர்.








--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com : email : rukmani68sayee@gmail.com 

சனி, 5 பிப்ரவரி, 2011

59th story. வீர மகளிர்--2

வீர மகளிர்--2
காக்கை பாடினியார் நச்செள்ளையார் என்ற புலவர் ஒருவர் தமிழகத்தில் வாழ்ந்து வ்ந்தார். செள்ளை என்பது இவரது இயற்பெயர். நற்செள்ளை என்பது திரிந்து நச்செள்ளை என்றாயிற்று என்பர் ஆராய்ச்சியாளர்.

"விருந்து வருமாயின் கரைந்து காட்டுக. வாராதாயின் நடந்து காட்டுக"என்று காக்கையைப் பார்த்துக் கூறும் பழக்கம் தமிழகத்தில் இருந்தது. இக்கருத்தை வைத்துப் பாடல் இசைத்தமையால் இப்புலவர் காக்கைபாடினியார் என்ற சிறப்புப் பெயர் பெற்றார்.

இப்புலவர் சேரலாதன் என்ற மன்னனைப் பாடிப் பரிசில் பெற்றவர்.அவ்வையாரும்  அதியமானும் போல சேரலாதனுடன்  நட்புக் கொண்டு வாழ்ந்தவர். இவரது பாடல் மூலம் அக்கால மங்கையரின் வீரம் அறியக் கிடைக்கின்றது.

"நரம்பெழுந்துலறிய நிரம்பா மென்றோள்....." எனத் தொடங்கும் பாடலில் மறக்குல மங்கையொருத்தியின் வீரத்தினைப் பாடுகிறார்.

ஒருமுறை ஒரு போரில் வீரன் ஒருவன் பகைவனின் வாளால் வெட்டுண்டு இறந்தான். மிகுந்த வீரத்துடன் போர் புரிந்த அவ்வீரன் பல பகைவர்களைக் கொன்றான். இறுதியில் பகைவரின் வாளால் அவன் உடல்  துணிபட்டுச் சிதைந்து வேறு வேறாய்க் கிடந்தது.கையில் பிடித்த வாளுடன் கிடந்தான் அம்மாவீரன்.

போர்வீரர் போர் முடிந்து வீடு திரும்பினர். இறந்து பட்ட அவ்வீரனின் தாய் முதியவள்.மெலிந்த தோள்களை உடையவள். தன் மகன் வருகிறானா என எதிர்பார்த்துக் காத்திருந்தாள்.அவன் வாராமையால் வீரர்களை விசாரித்தாள்.

அவள் மகனின் நிலையை அறியாத சிலர் "உன் மகன் பகைவர்க்குப் புறமுதுகு காட்டி ஓடினான். போர்க்களத்தில் இறந்து விட்டான்." எனக் கூறினர்.
இதைக் கேட்ட முதியவள் பதறித் துடித்தாள்.

முதுமை எய்திய நிலையில் இருந்தாலும் அச்சொல்லைத் தாங்காது துடித்தாள்.தன் மறக்குடியின் பெருமைக்கு இழுக்கு நேர்ந்ததே என எண்ணினாள்.கோபத்தில் அவள் கண்கள் தீப்பிழம்பென ஒளிர்ந்தன.அவ்வீரர்களை நோக்கிக் கூறினாள்.

"எனது மகன் நீங்கள் கூறியது போலப் போரில் புறமுதுகிட்டு மாண்டிருப்பான் எனில் அவன் வாய் வைத்துப் பாலுண்ட என் மார்பை  அறுத்தெறிவேன்.
இது என் மறக்குடியின் மீது ஆணை."

இவ்வாறு வஞ்சினம் கூறிய அம்மூதாட்டி தன் கையில் வாளொன்றை ஏந்திக்கொண்டு போர்க்களத்திற்குச் சென்றாள்.அங்கே போர்வீரர்களின் உடல்கள் சிதறிக் கிடந்தன.
தன் மகனின் உடலை அவளால் காண இயலவில்லை. ஒவ்வொரு உடலாகப் புரட்டிப் புரட்டிப் பார்த்தாள். முடிவில் தன் மகனின் உடலைக் கண்டாள்.

வேறு வேறாகக் கிடந்த தன் மகனின் உடலை ஒன்றாகச்  சேர்த்தாள்.ஒழுங்கான தன் மகனின் உடல் கண்டு பூரித்தாள். ஆம். அவள் மகன் ஒரு வீரன். தன் கையில் பிடித்த
வாளைக் கீழே போடாமல் விழுப்புண் பட்டு இறந்து கிடந்தான்.

"என் மகன் வீரன்.அவன் புறமுதுகு காட்டி ஓடவில்லை.மார்பிலும் முகத்திலும் புண் பட்டு வீழ்ந்துள்ளான்." என அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி கொண்டாள்.
அவனைப் பெற்ற பொழுது அடைந்த மகிழ்ச்சியினும் பெரு மகிழ்வு கொண்டாள். அவள் மனத்துயர் நீங்கிற்று.தன் மகன் தான் பிறந்த குடிக்கு இழுக்கு சேர்க்கவில்லை பெருமைதான் சேர்த்துள்ளான். என மகிழ்ச்சி கொண்டாள்.

இதைப் பார்த்த நச்செள்ளையாருக்குப் பெரு வியப்பு ஏற்பட்டது. "என்னே இந்த மறக்குலப் பெண்ணின் வீர உணர்வு!" என எண்ணிய போழ்து அவரது உள்ளத்தில் தோன்றிய
பாடலே புறநானூற்றில் உள்ள இப்பாடல்.

"நரம்பெழுந  துலறிய  நிரம்பா மென்றோள்
முளரி மருங்கின் முதியோள் சிறுவன்
படையழிந்து மாறினான் என்று  பலர்கூற
கொண்ட வாளொடு படுபிணம் பெயராச்
செங்களம் துழவுவோள் சிதைந்து வேறாகிய
படுமகன் கிடக்கை காணூஉ
ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே."

இப்பாடல் மூலம் தமிழ் மகளிரின் வீரம்  கண்டு நாம் பெருமிதம் அடையலாம்.  இதுபோன்ற பல செய்திகளை நமது சங்க இலக்கியங்கள் நமக்கு எடுத்து இயம்புகின்றன.
இவற்றின் மூலம் நமது பழநதமிழர்களின் வாழ்க்கையைப் பற்றி நாம் அறியலாம்.









ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com : email : rukmani68sayee@gmail.com 

வியாழன், 27 ஜனவரி, 2011

58th story. வீர மகளிர்--1

வீர மகளிர்--1

ஒக்கூர் என்னும் ஊரில் மாசாத்தியார் என்பவர் வாழ்ந்து வ்ந்தார். ஒக்கூரில் பிறந்தமையால் ஒக்கூர் மாசாத்தியார்  என அழைக்கப் பட்டார். சங்க காலத்து நல்லிசை மெல்லியலாருள் மாசாத்தியாரும் ஒருவர். பறந்து சென்று இரை தேடும் பறவைகள் போல நாடு விட்டு நாடு சென்று வள்ளல்களை நாடிப் பரிசில் பெற்று வாழும் இயல்புடையோர் புலவர் பெருமக்கள். தமக்கெனத் தமியர் உண்ணாது பிறர்க்கு அளித்து உண்டு பொருள் தேவைப் படும்போது மன்னர்களை நாடிச் செல்வது இவர்களின் பண்பு.

அதுபோன்ற ஒரு சமயத்தில் மாசாத்தியார் பொருள் வேண்டிப் புறப்பட்டார்.  வெகு தொலைவு நடந்து சென்று ஒரு நாட்டின் பெரு நகரம் ஒன்றில் நுழைந்தார். அது சமயம் அந்த நாடு அண்டை நாட்டுடன் போரில் ஈடுபட்டிருந்தது.  ஊரின் நிலையைப் பார்த்தபடியே ஒரு மறக்குடி மங்கையின் வீட்டினுள் நுழைந்தார் புலவர் பெருமாட்டி.

அங்கு இவர் கண்ட காட்சி இவரது உள்ளத்தைக் கொள்ளை கொண்டது.  பெருமிதம் அடையச் செய்தது.  நம் நாட்டு மறக்குடி மகளிரின் வீரம் எத்தகையது என எண்ணி எண்ணி மகிழத் தக்கதாக இருந்தது.

அவர் கண்ட அக்காட்சியை வியந்து ஒரு பாடலாகப் பாடினார் புலவர் பெருமாட்டி.  இத்தகு பாடல்களே நமக்கு இலக்கியச் சான்றாக விளங்கி பண்டைய வரலாற்று நிகழ்ச்சிகளை நமக்கு அறிவிக்கின்றன.  அம்மங்கையின் வீரத்தைக் கூறும் இப் பாடல் புறநானூறு என்னும் நூலில் உள்ளது.

அப்பாடல் இதோ.
                "கெடுக சிந்தை கடிதிவள் துணிவே.
                  மூதின் மகளிர் ஆதல் தகுமே.
                 மேனாளுற்ற செருவிற்கிவள் தன்னை
                  யானை எரிந்து களத்தொழிந்தனனே
                  நெருநல் லுற்ற செருவிற் கிவள்கொழுனன்
                  பெருநிரை விலக்கி ஆண்டுப் பட்டனனே.
                  இன்றும் செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி
                  வேல்கைக் கொடுத்து வெளிது விரித்து உடீஇப்
                  பாறு மயிர்க் குடுமி எண்ணெய் நீவி
                  ஒருமகன் அல்லது  இல்லோள்
                  செருமுக  நோக்கிச்  செல்கென  விடுமே."                        

இப்பாடல் மூலம் அந்த வீர மங்கையின் செயல் நமக்குக் கண்முன் காட்சியாகக் காணக் கிடைக்கின்றது. ஒரு  மறக்குடி மங்கையின் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சியாகக கூறப்படுகிறது.

என்னே இவள் துணிவு.இவள் மறக்குடியில் பிறந்தவள் எனக் கூறல் தக்கதே. முன்னாளில் நிகழ்ந்த போரில் இவளது தந்தை யானையைக் கொன்று தானும் இறந்தான். இவள் கணவனோ ஆநிரைகளைப் பகைவர் கொள்ளாதவாறு  விலக்கி போர்க்களத்தே மாண்டான். இன்றும் போர்ப்பறை ஒலி கேட்டது.

இவளது முகத்தில் மறத்தீ கிளர்ந்து  எழுந்தது.  தனக்கு ஒரேமகன் இவன்எனவுமஎண்ணவில்லைஅம்மாதரசி.வினை முடித்தற்கு தன் மகனை அனுப்புவது என முடிவு செய்தாள்.  தன் மகனை அருகே அழைத்து
அவன் தலையில் எண்ணெய் பூசி இழுத்து முடித்தாள். அரையில் தூய வெண்ணிற ஆடையை எடுத்து உடுத்தினாள்.
அம்மகன் கையில் கூர்மையான வேலோன்றைத் தந்தாள்.

அவன் முகத்தை நோக்கினாள் "மகனே! உன் தந்தையும் தனையரும் போர்க்களத்தே பொருது மாண்டனர். நம் மறக்குலப் பெருமையை நிறுவினர்.  நீயும் அவர்போன்று போருக்குச் செல்க " என அனுப்பி வைத்தாள்.

இக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த மாசாத்தியார் மனத்துள் வியந்து பாராட்டினார். அக்காட்சியை  பாடலாக வடித்து அழியாப் புகழை அம்மங்கை அடையும்படி செய்தார்.  நம் நாட்டு மறக்குடி மகளிரின் வீரம் நாம் அறிந்து போற்றத் தக்கது அன்றோ!.





ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com : email : rukmani68sayee@gmail.com 

வியாழன், 13 ஜனவரி, 2011

57th story .உயர்ந்த வாழ்வு.

" பாட்டி சொல்லும் கதைகளைப் படிக்கும் அன்பர்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துகள்.பொங்கட்டும் பொங்கல் இல்லம்தோறும்.பூக்கட்டும் மகிழ்ச்சி உள்ளம் தோறும்".

                                                     உயர்ந்த வாழ்வு..

சுவர்க்கத்தின் வாயிலில் ஜெயா விஜயர்கள் காவலிருந்தனர். அவர்களின் அருகே பரமாத்மாவான நாராயணரின் பாதரட்சைகள் இரண்டும் சாதுவாகக் கிடந்தன.

உள்ளே அனந்த சயனத்தில் இருந்தார் பெருமான். அவரது இரண்டு கைகளில் சங்கமும் சக்கரமும் பெருமையுடன் வீற்றிருந்தன.பெருமானான நாராயணன் யோக நித்திரையில் இருந்தார்.

அப்போது இறைவனின் இடது கையிலிருந்த சங்கு வாயிலில் இருந்த பாதுகையைப் பார்த்து நகைத்தது. வலது கையிலிருந்த சக்கரம் "ஏன் சிரிக்கிறாய்?" என்று கேட்டது.

"வாசலில் கிடக்கும் பாதுகைகளைப் பார்த்தேன் பாவமாக இருந்தது.
அதுதான்  சிரித்தேன்." என்றது சங்கு கர்வத்துடன்.

சக்கரமும் அதைக்கேட்டபின் பாதுகையைப்  பார்த்து நகைத்தது. "ஏ பாதரட்சையே! உன் நிலையைப் பார்த்தாயா? வாசலிலேயே கிடந்து காவல் காத்துக் கொண்டிருக்கிறாய். நாங்கள் உன்னை விட உயர்ந்தவர்கள் என்பதைப் புரிந்து கொள்."

"நாங்கள் பகவானின் கையில் தவழ்ந்து கொண்டிருக்கிறோம். நீயோ வாசலிலேயே கிடக்கிறாய். உன் மதிப்பு அவ்வளவுதான்." என்றது சங்கு.

பாதரட்சை நிமிர்ந்து அவர்களைப் பார்த்தது. சற்றே துணிவை வரவழைத்துக் கொண்டது."நீங்கள் பகவானின் கையில் இருந்தாலும் நான்தான் பகவானைத் தாங்கிக் கொள்கிறேன். என்மீது நின்று கொண்டுதான் பகவான் திரிலோகமும் சஞ்சாரம் செய்கிறார்."

"உன்மீது நின்று கொண்டிருப்பதால்தான் நீ வேலைக்காரன். ஏனெனில் உன்னை வாசலிலேயே கழற்றி வைக்கிறாரே. நாங்கள் அவரது பிள்ளைகளைப் போன்றவர்கள். எங்களைக் கையிலேயே வைத்துப் பாதுகாக்கிறாரே."

இதைக்கேட்ட பாதரட்சை மனவருத்தத்துடன் தலைகுனிந்து நின்றிருந்தது. இந்த உரையாடலை பகவானும் ஆதிசேஷனும் கேட்டுக் கொண்டிருந்தனர்.

ஆதிசேஷன் சிரித்தார். நாராயணரோ "ஏ பாதுகையே! வருந்தாதே. உனக்கும் ஒரு காலம் வரும்.உன்னையும் இவர்கள் வணங்கும் காலம் வரும்." என்றார் ஆறுதலளிக்கும்படியாக.

பகவானின் சொற்களைக் கேட்டு பாதரட்சை சமாதானமடைந்தது. இதன் நிலை கண்டு இரக்கப் பட்ட ஜெய விஜயர்கள் ஆறுதலாகப் பேசினார்கள்.

"ஏ, பாதரட்சையே பகவானின் பாதகமலங்களைப் பற்றி எத்தனை அடியார்கள் பாடல் பாடியுள்ளனர்!.
அதையெல்லாம் சொன்னால் இந்த ஜன்மம் போதாது. இப்படிப்பட்ட திருவடி நிழலுக்காகத்தான் பூமியில் பிறவியெடுத்த அடியார்கள் எல்லாம் பக்திமூலமாக அதனை அடைய முயன்றனர். அத்தகைய பாதங்களைத்தான் நீ தாங்கிக் கொண்டு உலவுகிறாய். எனவே நீயும் பெருமைப் படத்தக்கவன்தான்."

"அத்துடன் இந்த அகிலங்களை எல்லாம் தாங்கியுள்ளவன் பரமாத்மா. அவனையே நீ தாங்கி நிற்கிறாய்.. உன் புகழ் அகிலம் முழுவதும் பரவும்." என்றான் ஜெயன்.

இச்சொற்களைக் கேட்ட பாதுகை ஒருவாறு சமாதானமடைந்தது.

கிருதயுகம் முடிந்து த்ரேதாயுகம் தொடங்கியது. ஸ்ரீ நாராயணன் ஸ்ரீராமனாக அவதரித்தான். தசரதனின் மகனாகத் தோன்றி வளர்ந்தான். விசுவாமித்திரருடன் வனம் சென்று அரக்கரை அழித்து அகலிகைக்கு சாப விமோசனம் அளித்தான். மிதிலை சென்று வில்லை முறித்து சீதையை மணந்தான். பட்டாபிஷேகத்திற்கு நாள் குறித்தான் தசரதன். ஆனால் கைகேயி கேட்ட இரு வரத்தினால் ராமன் வனம் செல்ல நேர்ந்தது.

கைகேயியின் மகன் பரதனைப் பட்டமேற்கச் சொன்னபோது அவன் மறுத்து அண்ணனுடன் தானும் வனவாசம் செய்வதாகச் சொல்லி சத்ருக்னன் பின்தொடர வனம் வந்தான்.ராமனைத் தொழுது மீண்டும் அயோத்தி வந்து முடிசூட்டிக் கொள்ளும்படி வேண்டினான்.

ஆனால் அன்னையின் ஆசையையும் தந்தையின் ஆணையையும் நிறைவேற்றுவதே தன் கடமை என்று மறுத்தான் ராமன்.

 பரதனோ அயோத்தி நகருக்குள்  மீண்டும்  அண்ணன் ஸ்ரீ ராமனுடன்தான் நுழைவேன் என்று கூறிவிட்டான்.
அயோத்தியின் எல்லையிலுள்ள நந்திகிராமத்திலேயே ஆசிரமம் அமைத்து அங்கேயே துறவிபோல வாழப் போவதாகச் சொன்னான் பரதன்.

அயோத்தி மக்களின் கதியைப் பற்றிக் கேட்டபோது ராமனின் பிரதிநிதியாக அவன் பாதுகைகளைப் பெற்று  நந்திகிராமத்தில் இருந்தபடியே நாட்டை ஆள்வதாகக் கூறினான்.அதற்காக ராமனின் பாதுகைகளைப் பெற்றுக் கொண்ட பரதன்  அதைத் தன் தலைமீது தூக்கிக் கொள்ள சத்ருக்கனன் தொழுதபடி பின்தொடர்ந்தான்.
.
இப்போது  ராமனின் பாதுகைகள் மனமகிழ்வுடன் ராமனை வணங்கின. என்னை இகழ்ந்த சங்கு சக்கரம் இரண்டும் பரத சத்ருக்கனராக அவதரித்து என்னைத் தன் தலைமேல் தூக்கிச் செல்லும் நிலையை ஏற்படுத்திக் கொடுத்த அவதார புருஷன் ராமனை நன்றியுடன் வணங்கிச் சென்றன.

நந்திகிராமத்தை அடைந்த பரதன் பாதுகைகளை பொன் சிம்மாசனத்தில் வைத்து ஒரு அரசனுக்குரிய மரியாதையுடன் தினமும் வணங்கி அயோத்தியை ஆண்டு வந்தான்.

ஒருநாள் தன்னை ஏளனமாக இகழ்ந்ததற்காக பதினான்கு ஆண்டுகள் தன்முன் சிரம் தாழ்த்தி வணங்கும்படி இந்த சங்கு சக்கரத்திற்கு நாராயணர் தண்டனை அளித்ததை எண்ணி மனம் ஆறுதல் அடைந்தது.. அத்துடன் எளியாரை இகழ்தல் எப்போதும் இறைவனுக்குப் பிடிக்காத செயல் என்பதையும் புரிந்து கொண்டது  அப்பாதுகை.

தன்னினும் எளியாரை இகழ்தல் தகாது என்ற உண்மையையும் "எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்" என்ற உண்மையையும்  நாம் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.
.
இத்தகு உயர்ந்த உண்மைகளையும் நன்நெறிகளையும் புதைத்து வைத்துள்ள நமது இதிகாசங்களை ஆழ்ந்து படித்து அறிந்துகொண்டு அதனைப் பின்பற்றி வாழ்வது உயர்ந்த வாழ்வாகும் அன்றோ?  



ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com : email : rukmani68sayee@gmail.com 

செவ்வாய், 4 ஜனவரி, 2011

56th story. கண் திறந்த கன்னி.

                                                               
       " பாட்டி சொல்லும் கதைகளைப் படிப்பவருக்கும் அவர்களின் குடும்பத்தார் நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். வளமும் நலமும்பெற்று பல்லாண்டு வாழ்க."
அன்புடன் பாட்டி,
ருக்மணி சேஷசாயி.

                                                                 கண் திறந்த கன்னி.

 மலைநாடு என்று ஒரு நாடு இருந்தது. அந்த நாடு வளம் மிகுந்து காணப் பட்டது. காலம் தவறாது மழை பொழிந்தது. விளைச்சலும் நன்றாக இருந்தது. 
ஆனால் அந்த நாட்டு மன்னனுக்குப் பெண்கள் அறிவாளியாக இருப்பதும்  கல்வி கற்பதும் பிடிப்பதில்லை. 
 அதனால் பெண்கள் பள்ளி சென்று படிப்பதைத் தடை செய்திருந்தான்.
அந்தநாட்டு ஆண்களும் இதை ஏற்றுக் கொண்டு தங்களின் மகன்களை மட்டும் பள்ளிக்கு அனுப்பி விட்டு சிறுமியரை வீட்டு வேலைசெய்யவும் கழனி வேலை செய்யவும் ஏவினர்.

ஆனாலும் நல்லசெழிப்பினால் செல்வ வளத்துடன் எல்லா செல்வங்களும் பெற்றிருந்தனர். அதனால் 
அந்தநாட்டு மக்கள் யாவரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர்.அந்த மலைநாட்டின் பின்னால் பெரிய மலைகள் இருந்தன.

அந்த மலைக்குகையில் ஒரு அரக்கன் வாழ்ந்து வந்தான்.அவனுக்கு அந்தநாட்டு மக்கள் மகிழ்ச்சியாய் வாழ்வது பிடிக்கவில்லை.அதனால் மழை தரும் மேகங்களை ஒரு பையினுள் அடைத்து அதைத் தன் இடுப்பில் செருகிக் கொண்டான். 

அதுமுதல் அந்த நாட்டுக்கு மழை பொழிவது நின்றது. மலைநாடும் தன் வளமிழந்தது. அந்தநாட்டு மன்னன் செய்வதறியாது திகைத்தான்.

ஒரு நாள் அவனது நாட்டுக்கு ஒரு அடியவர் வ்ந்தார்.அவர் பெரும் ஞானி. அவர் மன்னனின் முக வாட்டத்தைப் பார்த்துக் காரணம் கேட்டார்.
மன்னன் நாட்டு வளம் குன்றிய காரணம் யாதெனத் தெரியவில்லை எனக் கவலையுடன் கூறினான்.
அதைக் கேட்ட முனிவர் புன்னகை புரிந்தார். தன் ஞானத்தினால் காரணத்தைக் கண்டார்.அவர் 

மன்னனிடம் "அரசே! கவலை வேண்டாம். மழையைப் பிடித்து மடியில் மறைத்து வைத்துள்ளான் ஒரு அரக்கன். அந்த அரக்கனை வென்றால் மட்டுமே மேகத்தை விடுவிக்க முடியும்.மேகம் மீண்டால்தான் உன் நாட்டில் மழை பொழிந்து நாடு சுபிக்ஷமடையும்." என்றார்.


மன்னன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். "இப்போதே பறையறைவித்து அந்த அரக்கனைக் கொல்லத் தக்க வீரனைக் கண்டு பிடித்து அனுப்புகிறேன் "என்றான்.

முனிவர் தடுத்தார்" நில் மன்னா! அந்த அரக்கனைக் கொல்ல பெரியவர்கள் யாரும் செல்லக் கூடாது.
பன்னிரண்டு வயதுக்குட்பட்ட ஒரு சிறுவன்தான் செல்ல வேண்டும்."

"அப்படியே பறையறைவிக்கிறேன். குழந்தையில்லாத நான் வெற்றிபெறும் அந்தச் சிறுவனை என் மகனாக ஏற்றுக்கொள்கிறேன்."

மன்னனின் கட்டளை  கேட்ட மக்கள் உடனே தங்கள் தங்கள் மகன்களுக்குப்  பல பயிற்சிகளைக் கொடுத்துஅரக்கனை வெல்ல  தயாரானார்கள்  
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறுவன் செல்லத் தொடங்கினான். ஒரு வாரம் காத்திருந்து அவன் 
திரும்பவில்லையானால் அடுத்த சிறுவன் சென்றான். இப்படியே ஆறு மாதங்களாயிற்று.

அந்த ஊரில் சாத்தன் என்று ஒரு விவசாயி வாழ்ந்து வந்தான்.அவனுக்கு இரண்டு மனைவிகள். முதல் 
மனைவிக்கு ஒரு மகனும் இரண்டாவது மனைவிக்கு ஒரு மகளும் இருந்தனர். மகன் பெயர் முருகு.இரண்டாவது மனைவியின் மகளுக்கு காந்தாமணி  என்று பெயர்.

காந்தாவின் தாயார் காந்தா குழந்தையாக இருக்கும் போதே இறந்து விட்டாள். எனவே சிறுமி காந்தாவை ஒரு வேலைக்காரியைப் போல  பல வேலைகள் செய்யச் சொல்லிக் கடுமையாகப் பேசுவாள் அவள் பெரியம்மா.

காந்தா பிறவியிலேயே மிகவும் பொறுமைசாலி. நல்ல அறிவாளியும் கூட. அந்த ஊரில் சிறுவர்கள் மட்டும் பள்ளி செல்வதும் சிறுமியர் வீட்டு வேலை செய்வதும்  கழனி வேலைக்குப் போவதுமாக இருப்பதைப் பார்த்து மனம் வருந்தி இருந்தாள்.

சாத்தனுக்கும்  தன் மகன் மன்னனாகி அந்த நாட்டை ஆளவேண்டும் என்னும் ஆசை இருந்ததால் அரக்கனைக் கொல்ல தன் மகன் முறை எப்பொழுது வரும் எனக் காத்திருந்தான்.

ஒருநாள் காந்தா  வீட்டு வேலை முடித்து தன் தந்தைக்குச் சோறு கொண்டுபோய்க் கொண்டு இருந்தாள்.
வழியில் ஒரு வயதான கிழவர் களைப்புடன் அமர்ந்திருந்தார்.அவரருகே சென்ற காந்தா,"தாத்தா, பசிக்குதா?" என்றாள் அன்புடன்.
'
ஆம்' என்பதுபோல் தலையசைத்தார் அந்த முதியவர்.காந்தா அங்கேயே அமர்ந்து தான் கொண்டு வந்த சோற்றில் கொஞ்சம் எடுத்து ஒரு இலையில் வைத்துக் கொடுத்தாள். வாய்க்காலில் இருந்து நீர் மொண்டு வந்து கொடுத்துச் சாப்பிடச் சொன்னாள்.
தாத்தா புன்னகையுடன் தலையசைத்தார். 

"நான் வரேன் தாத்தா" என்றபடியே நடந்தாள் காந்தா.
மாலையானதும் அதே வழியில் திரும்பி வந்து கொண்டிருந்தாள் காந்தா. அப்போதும் அந்தமுதியவர் அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தார்.

அவரை நெருங்கிய காந்தா புன்னகையுடன்"சாப்பிட்டீர்களா தாத்தா?"என்றாள் அன்புடன்.

"இங்கே வா அம்மா. நீ கொடுத்த உணவு அமிர்தம் போல இருந்தது. இப்போ நான் உனக்கு ஒரு பரிசு தரப் 
போகிறேன்."என்றார். அதைக்கேட்டு காந்தா மிகவும் மகிழ்ந்தாள்.ஆவலுடன் "என்ன பரிசு தாத்தா?" 
என்றாள்.
முதியவர் தனது பையிலிருந்து ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்தார்.அதை காந்தாமணியிடம் 
கொடுத்தார்.அதைப் பெற்றுக் கொண்ட  காந்தா" மிக்க நன்றி தாத்தா" என்றாள் பணிவுடன். 

"இது சாதாரணக் கண்ணாடி இல்லை. உன் கேள்விக்கு விடை காட்டும் கண்ணாடி.இதை உன் கையில் எப்போதும் வைத்துக் கொள்.வெற்றியே கிட்டும்" என்று ஆசி கூறிச் சென்றார்.


மறுநாள் முருகு அரக்கனை வெல்லச் செல்லவேண்டிய தினம். அவனுக்கோ ஒரே பயம். துணைக்கு மலை அடிவாரம் வரை வருவதாகக் கூறி காந்தாமணியும் உடன் சென்றாள்.குறிப்பிட்ட இடம் வந்ததும் 
காந்தாமணி தன் அண்ணனிடம் தானே அரக்கனிடம் செல்வதாகக் கூறினாள். அண்ணன் சம்மதிக்கவே அவனது உடைகளைத் தான் அணிந்து கொண்டு அரக்கனைச் சந்திக்கப் புறப்பட்டாள் காந்தா. 

குகைக்குள் சற்றே துணிவை வரவழைத்துக் கொண்டு நுழைந்தாள். பெரும் சிரிப்போடு அவளை வரவேற்றான் அரக்கன்."என்னை வெல்ல ஒரு சிறுமியா வந்துள்ளாய்?" என வினவியபடியே அவள் முன் வந்து நின்றான்.அவனை நிமிர்ந்து பார்த்து நின்றாள் காந்தா.
"
"என் கேள்விக்கு விடை சொன்னால் நீ வென்றதாக ஒப்புக் கொள்கிறேன்" என்றான் அரக்கன் . 

தைரியத்துடன்" உன் கேள்வியைக் கேள்" என்றாள் காந்தா.

" அக்காள் ஒருத்தி அழுது கொண்டே தம்பி சட்டையைக் கழற்றினாள். கழற்றக் கழற்ற சட்டை வந்தது.கழற்றி முடித்த பின் தம்பியைக் காணோம்.அவன் யார்?" 

ஒரு நிமிடம் திரும்பி நின்றவள் இடுப்பில் இருந்த கண்ணாடியை எடுத்துப் பார்த்தாள்.  உடனே அரக்கன் முன் திரும்பி "வெங்காயம்" என்றாள்.

"சரி அடுத்த கேள்வியைக் கேட்கிறேன். அப்பன் சொறியன் ஆத்தாள் சடைச்சி பிள்ளசக்கரைக்கட்டி.இவன் யார்?"
அப்போதும் பின்னால் திரும்பி கண்ணாடியில் விடை பார்த்தாள். "பலாப்பழம்" என்று விடை சொன்னாள். அடுத்த கேள்வி என்ன?என்பதைப்போல நிமிர்ந்து நின்று அரக்கனைப் பார்த்தாள் காந்தா.

சற்றே தயக்கத்துடன் "ஒருமுகம் கொடுக்கும் திருமுகம். ஓங்கி அடித்தால் ஓராயிரம் தரும் முகம் .அது என்ன?" என்று கேட்டு விட்டு கைகளைக் கட்டிக் கொண்டு நின்றான் அரக்கன்.

 சற்றே திரும்பிய காந்தா கண்ணாடியைப் பார்த்தாள்.அதில் எந்த உருவமும் தெரியவில்லை.சற்று திகைத்தாள். அந்தப் பெரியவரை மனதில் வணங்கினாள். திடீரென கண்ணாடி பல துண்டுகளாகத் தெரிந்தது ஒவ்வொரு துண்டிலும் அவளது முகம் தெரிந்தது.மகிழ்ச்சியுடன் "முகம்பார்க்கும்  கண்ணாடி" என்று விடைகூறினாள். 

அரக்கன் மனம் மகிழ்ந்தான்."குழந்தாய் உன்னால் என் சாபம் நீங்கியது.இதோ உனது நாட்டு மேகங்களை விடுவிக்கிறேன் இனி உன் நாடு மழை பொழிந்து செழிப்பாகும்."

காந்தா மகிழ்ச்சிய்டன்  " ஐயா, எங்கள் நாட்டுச் சிறுவர்கள் எல்லோரையும் விடுவியுங்கள்."என்று கேட்டுக் கொண்டாள். அதுவரை அரக்கனின் சிறையில் அடைபட்டுக் கிடந்த சிறுவர்கள் அத்தனைபேரும் ஆரவாரத்துடன்  ஓடிவந்து காந்தாவைச் சூழ்ந்து நின்றனர். 

அரக்கன் காந்தாவுக்கு நிறைய பரிசுப் பொருட்களைக் கொடுத்து அனுப்பிவைத்தான். பின் தனது இருப்பிடம் சென்றான்.வெற்றியுடன் அனைவரும்வருவதைக் கண்ட முருகு தங்கையை மகிழ்ச்சியுடன் வரவேற்றான் அனைவரும் நாடு திரும்பினர்.

 மழை மேகங்கள் உருவாகி மழைபொழியத்  தொடங்கியதை அனைவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். மன்னரும் மக்களும் வெளியில் நின்று வெற்றியுடன் வரும் சிறுவர்களை வரவேற்றனர்.

ஆணுடையில் இருந்த காந்தாவைப் பெருமை பொங்கப் பார்த்தார் மன்னர்."குழந்தாய், இன்று முதல் நீயே என் மகள் உனக்கு இந்த நாடு மிகவும் கடன் பட்டுள்ளது." என்று காந்தாவின் தலையை தடவிக் கொடுத்தார்.

அவளது பெரியம்மா காந்தாவை வாரி அணைத்துக் கொண்டாள்.காந்தா மன்னரிடம் "அரசே, தயவு செய்து என் அண்ணனைத் தங்கள் மகனாக ஏற்றுக் கொள்ளுங்கள். நான் என் பெற்றோருக்கு உதவி செய்து கொண்டு இருக்கவே விரும்புகின்றேன். அத்துடன் எனது ஆசை ஒன்று உண்டு அதைத் தாங்கள் நிறைவேற்றித் தர வேண்டும் "எனக் கேட்டுக் கொண்டாள். 

மன்னர் மகிழ்வுடன் "எதுவேண்டுமானாலும் கேள்"என்றார்.

"எனது நாட்டில் இருக்கும் பெண்கள் அனைவரும் கல்வி கற்க தாங்கள் அனுமதி தரவேண்டும் சிறுவர்களுடன் சேர்ந்து சிறுமிகளும் பள்ளி செல்ல வேண்டும்." 

மன்னர் மகிழ்ச்சியுடன் "உன் விருப்பப் படியே இனி அனைவரும் படிக்கலாம். பெண்கள் அறிவில் சிறந்தவர்கள் என்பதை உன் மூலமாக நான் அறிந்து கொண்டேன். இனி நீயும் பள்ளி சென்று படிக்கலாம்" என்றபோது அனைவரும் "கல்விக்கண் திறந்த காந்தாமணி வாழ்க" எனக் கோஷமிட்டதை விண்ணில் இருந்த மேகங்களும் ஆமோதிப்பதுபோல இடி இடித்து  அவளை வாழ்த்தியது.அறிவுக்கு ஆண் பெண் என்ற பேதம் இல்லை என்ற உண்மையை நாம்  அனைவரும் உணர்ந்து கொள்வோம்.
.
  .
.




















ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com : email : rukmani68sayee@gmail.com 

வியாழன், 23 டிசம்பர், 2010

55th story சூடிக் கொடுத்த சுடர்க்கொடி.

                          சூடிக் கொடுத்த சுடர்க்கொடி.
ஒன்பதாம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டில் ஸ்ரீவில்லிப்புத்தூர் என்னும் ஊரில் பெரியாழ்வார் என்று பெயர் பெற்ற பெரியார் ஒருவர்  வாழ்ந்து வந்தார். இளமையில் இவர் பெற்றோர் இவருக்கு விஷ்ணுசித்தர் என்று பெயரிட்டு தக்க வயதில் கல்வி கற்பித்தனர்.

இளம் வயதிலேயே திருமாலிடம் பேரன்பு கொண்ட விஷ்ணு சித்தர் தமக்கென ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து அதில் நல்ல மலர்களையும் துளசியையும் பயிரிட்டு தினமும் மாலை கட்டி அவ்வூரில்  உள்ள திருமாலுக்குச் சார்த்தி வந்தார்.


தினமும் தோட்டத்திற்கு நீர்பாய்ச்சுவதும் அதைப் பராமரிப்பதும் பின் புத்தம் புது மலர்களால் பெருமானுக்கு மாலை
கட்டிக் கொடுப்பதுமாகத் தெய்வத்திற்குப் பெரும் தொண்டாற்றிவந்தார்.

பூமாலைதொடுத்துவந்த விஷ்ணுசித்தர் இறைவனுக்குப் பாமாலையும் பாடிவந்தார். இவர் திருமாலைப் பல்லாண்டு பாடி வாழ்த்தியமையால் 'பெரியாழ்வார்' என்று வைணவர்கள் இவரைக் கூறலானார்கள்.

ஒருநாள் மலர்பறிக்கும்போது துளசிச் செடியருகே ஒரு குழந்தையின் அழுகுரலைக் கேட்டார்.ஓடிச் சென்று பார்த்தபோது அங்கே அழகே உருவான ஒரு பெண்குழந்தையைக் கண்டார்.களிப்பு மிகக் கொண்டார். அன்று ஆடிமாதம் வளர்பிறை சதுர்த்தசி திதி பூரம் நட்சத்திரம்.

அக்குழந்தையைத் தனது மகளாகப் பாவித்து  கோதை எனப் பெயரிட்டு சீரோடும் சிறப்போடும் வளர்த்து வரலானார். கோதைக்கு உணவூட்டும் போதே அந்த ரங்கமன்னாரிடத்தில் பக்தியையும் சேர்த்தே ஊட்டினார் பெரியாழ்வார். அதனால் கோதையும் அந்தக் கண்ணனே தனக்கு மணாளன் என்று எண்ணி அவனையே சதா சர்வ காலமும் எண்ணியும் பாடியும் வந்தாள்..

அரங்கன் மீது கொண்ட பேரன்பினால் சதாசர்வமும் அவனையே  நினைந்து பக்திப் பரவசத்துடன் தொண்டு செய்து வாழ்ந்து வந்தாள் கோதை. பக்தி மேலீட்டினால் நாள்தோறும் விஷ்ணுசித்தர் அரங்கனுக்காகக் கட்டிவைத்திருக்கும் மலர்மாலையை  அவர் அறியாவண்ணம் எடுத்துத் தன் கழுத்தில் அணிந்து அழகு பார்த்து என் இறைவனுக்கு நான் இணையாக உள்ளேனா எனத் தனக்குள் சிந்திப்பாள்.

அந்த கண்ணனுக்கு இணையாகத் தானும் அணிகலன் அணிந்து தன்னை அழகு படுத்திப் பார்ப்பாள்.பின்னர் தந்தையார் அறியாவண்ணம் மாலையைக் களைந்து முன்போலவே வைத்து விடுவாள்.

இதனை அறியாத பெரியாழ்வாரும் அம்மாலையை இறைவனுக்கு சமர்ப்பித்து வ்ந்தார். மனமகிழ்வுடன் இறைவனும் அம்மாலையை ஏற்றுக்கொண்டார்.

இவ்வாறு பலநாட்கள் கழிந்தன. ஒருநாள்  மாலைகட்டி வைத்துவிட்டு வெளியே சென்றார் பெரியாழ்வார். வழக்கம்போல அம்மாலையை எடுத்துத் தன் கழுத்தில் அணிந்துகொண்ட கோதை கண்ணாடியின்முன் நின்று தன் அழகினைக் கண்டு பெருமானுக்கு  இந்த அழகு ஈடாமோ என்று தனக்குள் நினைத்துக் கொண்டிருந்தாள்.

அன்று விரைவிலேயே இல்லம் திரும்பிய பெரியாழ்வார் கழுத்தில் மாலையுடன் ஆடியின்முன் நின்று அழகு பார்த்துக் கொண்டிருக்கும் தன் மகள் கோதையைப் பார்த்துத் திடுக்கிட்டார்.

பாசம் மிகுந்த மகளாயினும் பரமனுக்கு உரியதைப் பாழ்படுத்தி விட்டாளே என்று பதைபதைத்தார். மகளைக் கடிந்துகொண்ட
வர் இறைவனுக்குச் செய்யும் பணிக்கு ஊறு நேர்ந்ததே என வருந்தியிருந்தார்.

அன்றிரவு இறைவன் ஆழ்வாரின் கனவில் தோன்றினார்."அன்பினால் நம்மை ஆண்டவளான- கோதை சூடிக்கொடுத்த பூமாலையே நமக்குப் பெருவிருப்பமானது. அத்தகைய  மாலையையே கொணர்க" எனக் கூறி மறைந்தார்.

துயில் நீங்கிய விஷ்ணுசித்தர் தமது மகள் கோதை ஒரு அவதார மங்கை என உணர்ந்து கொண்டார்.அன்பால் ஆண்டவனையே ஆண்டவளானதால்  அவளை ஆண்டாள் எனவும் மலரைச் சூடிப் பின் இறைவனுக்கு அளித்ததால் சூடிக்கொடுத்த நாச்சியார் எனவும் அழைக்கலானார்.

பருவ வயதை அடைந்த கோதை அந்தக் கண்ணனின் பிரிவைத் தாங்க மாட்டாதவளாய் அவனை அடையும் வழியைச் சிந்தித்தாள். ஆயர் குல மங்கையர் போல இறைவனை அடைய பாவைநோன்பு நோற்றாள். இறைவனுக்கு உகந்த மாதமாகிய மார்கழிமாதத்தில்  அதிகாலை  எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி தன் அன்பை திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் பாடல் மூலமாக வெளிப்படுத்தி மகிழ்ந்திருந்தாள்.

தன் மகளுக்கு மணமுடிக்கும் விதமாக விஷ்ணுசித்தர் ஆண்டாளுக்கேற்ற மணமகனைத் தேடலானார்.ஆனால் ஆண்டாளோ நான் அந்த திருமாலுக்கே உரியவள்.மானிடர் யாரையும் மணந்து வாழமாட்டேன் என்று உரைத்துவிட்டாள்.

பின்னர் அந்தத் திருமாலின் பெருமைகளைப் பற்றிக் கூறும்படி கேட்க தந்தையாராகிய பெரியாழ்வாரும் இறையனாரின் பெருமைகளை விவரித்துக் கூறினார்.தந்தையார் கூறுவதைக் கேட்கக் கேட்க ஆண்டாள் அளவற்ற மகிழ்ச்சியடைந்தாள்.அவற்றில் அரங்கநாதனின் பெருமையைக் கேட்டு அவருக்கே தான் மனையாளாக ஆகவேண்டும் என்னும் பெரு விருப்புக் கொண்டாள்.


நாளாக நாளாக திருவரங்கன் இவளை மணமுடிக்கக் கூடுமோ?இது நடக்கும் செயலோ? என மிகவும் கவலை கொண்டார் பெரியாழ்வார்.

அன்றிரவு  அரங்கன் அவரது கனவில் தோன்றி " ஆண்டாளை கோவிலுக்கு அழைத்து வாரும் யாம் அவளை ஏற்போம்" எனக்கூறி மறைந்தார்.

அதேபோல் அந்நாட்டு மன்னனான பாண்டியனின் கனவிலும் தோன்றி "நீ பரிவாரங்களுடன் ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்று பெரியாழ்வார் மகளான கோதையை திருவரங்கத்திற்கு அழைத்து வருவாயாக.அவளை முத்துப் பல்லக்கில் ஏற்றி பரிவாரங்களுடன் அழைத்து  வருவாயாக." எனவும் கூறினார்.

அதே சமயம் கோதை நாச்சியாரும் "மைத்துனன் நம்பி மதுசூதன் வந்தென்னைக் கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழி நான்"எனத் தான் கண்ட கனவினை பத்துப் பாடல்களில் பாடி அந்த அரங்கனின் அழைப்புக்காகக் காத்திருந்தாள்.

இறைவன் கட்டளைப் படி மன்னனும் மற்றையோரும் ஸ்ரீவில்லிப்புத்தூருக்கும் திருவரங்கத்துக்கும் இடையிலுள்ள பாதையை முத்துப் பந்தர் அமைத்து அழகு படுத்தி  பெரியாழ்வாரின் இல்லம் சென்று வணங்கி ஆண்டவனின் கட்டளையை எடுத்து இயம்பினர்.

ஆண்டாளை ஏற்றிக்கொண்டு முத்துப் பல்லக்கு புறப்பட்டது வழிநெடுகிலும் மக்கள் "ஆண்டாள் வந்தாள். சூடிக் கொடுத்த சுடர்க்கொடி வந்தாள்" என முழங்கினர்.

திருவரங்கம் கோயிலுக்குள் நுழைந்த கோதை இறைவனை கண்ணாரக் கண்டு மெய் சிலிர்த்தாள்.அந்த  அழகும் அன்பும்  ஈர்க்க கோதை சிலம்பு ஒலிக்க பாம்பணைமேல் பள்ளி கொண்ட பெருமானிடம் ஓடினாள். அப்படியே மறைந்தாள். ஆண்டாள் இறைவனால் ஆட்கொள்ளப் பட்டாள்.

அரங்கன் அர்ச்சகர் மூலமாக "பெரியாழ்வாரே நீர் எனக்கு மாமனாராகிவிட்டீர். ஸ்ரீவில்லிப்புத்தூருக்கே சென்று அங்கே உமது தொண்டினைச் செய்து கொண்டிரும்" எனக் கூறி வழியனுப்பி வைத்தார்.

மார்கழியில் பாவைநோன்பிருந்தால் இறைவனை அடையலாம் என்பதற்கு ஆண்டாளின் வரலாறு இன்றும் சான்றாக நிற்கிறது.இன்றும்  மார்கழி மாதத்தின் சிறப்பை அவளது   முப்பது திருப்பாவைப் பாடல்கள் இயம்பி
நிற்கின்றன.
















ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com : email : rukmani68sayee@gmail.com