திங்கள், 23 ஜனவரி, 2012

80- பணிவே வெற்றி.

மகாபாரத யுத்தம் தொடங்குவதற்கு பாண்டவரும் கவுரவரும் ஆயத்தமானார்கள்.கவுரவர்களின் அரசனான துரியோதனன் தனது நட்பு நாட்டு மன்னர்களுக்கெல்லாம் தூதனுப்பித் தன் படை வலிமையைப் பெருக்கிக் கொண்டிருந்தான்.பாண்டவரும் தங்களின் படையைப் பெருக்கிக் கொண்டிருந்தனர்.இரண்டு சாராருமே கிருஷ்ணனின் துணையை நாடவேண்டும் எனத் தீர்மானித்தார்கள்.
த்வாரகை மன்னனான கிருஷ்ணனிடம் இருக்கும் பெரும் படை தனக்குத் துணையாக வந்தால் நமக்கே வெற்றி நிச்சயம் எனக் கூறினான் துரியோதனன்.சகுனி மாமாவும்  இதை ஆமோதித்தார..ஆனால் பாண்டவரின் நண்பனாக இருக்கும் கிருஷ்ணன் அவர்களுக்கு உதவாமல் கவுரவர்களான தங்களுக்கு உதவுவானா, என சந்தேகத்தைக் கிளப்பிவிட்டார். ஆனாலும் துரியோதனன் தானே சென்று கிருஷ்ணனின் படையைக் கேட்பதாகக் கூறிப் புறப்பட்டான்.
இதே நோக்கத்தோடு துவாரகையை  நோக்கி வந்து சேர்ந்தான் அர்ச்சுனன். ஆனால் முதலில் அரண்மனையை அணுகியவன் துரியோதனனே. வாயிலில் நின்ற காவலர் துரியோதனனை எந்தத் தடையும் சொல்லாது உள்ளே அனுமதித்தனர். மன்னர் எவர் வந்தாலும் அவரை உடனே உள்ளே அனுமதிக்கவேண்டும் என கண்ணன் கட்டளை இட்டிருந்ததே காரணம்.
மன்னன் என்ற அகந்தையோடு  உள்ளே கம்பீரமாக நுழைந்தான் துரியன்.
உள்ளே மஞ்சத்தில் சயனத்தில் இருந்தான் கண்ணன்.கண்களை மூடிப் படுத்திருந்தவனின் காலருகே ஒரு ஆசனமும் அவனது தலையருகே ஒரு ஆசனமும் இருந்தன. முதலில் காலருகே இருந்த ஆசனத்தில் அமரச் சென்ற துரியோதனன் சற்றே சிந்தித்தான்.இவனோ மாடு மேய்த்தவன். இன்று அரசனாக உள்ளான் இவனது காலடியில் மன்னனான நான் அமர்வதா என நினைத்தான். உடனே தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டு தலைமாட்டில் இருந்த ஆசனத்தில் சென்று அமர்ந்து கொண்டான். கண்ணன் கண்களைத் திறப்பதற்காகக் காத்திருந்தான்.
சற்று நேரத்திற்கெல்லாம் அர்ச்சுனன் அங்கு வந்து சேர்ந்தான்.துரியோதனன் தனக்கு முன்பாகவே அங்கு அமர்ந்திருப்பதைப் பார்த்து திகைத்தான். முதலில் வந்த துரியன் கண்ணனிடம் தான்  கேட்க நினைத்ததைக் கேட்டு விட்டால் என்ன செய்வது என்றே திகைத்தான்.

ஆனாலும் நம்பிக்கையோடு இரு கரம் கூப்பி கண்ணனின் காலடியில் நின்று கொண்டு இருந்தான்.சட்டென அப்போதுதான் விழிப்பவன் போல் கண்ணன் கண்களைத் திறந்து மகிழ்ச்சிக் குரலில் வா,வா, அர்ச்சுனா, நலமா உன் அன்னையார் குந்தி தேவியார் நலமா என்று கேட்டபடியே எழுந்து அமர்ந்தான்.படுத்தவரின் கண்களுக்கு அவர் எழுந்ததும் முன்னே இருப்பவர் தானே கண்களில் படுவர்.அந்த வகையில் தன் காலடியில் நின்றிருந்த அர்ச்சுனனைப் பார்த்துக் கேட்டான் கண்ணன்.
அதே சமயம் குரலைக் கனைத்துத் தான் அங்கிருப்பதை  அறிவித்தான் துரியோதனன். உடனே துரியன் பக்கம் திரும்பிய கண்ணன் அடேடே துரியோதன மகாராஜாவா? ஏது இவ்வளவு தூரம். வரவேண்டும் வரவேண்டும்.தாங்கள் என்னைத் தேடி வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி.என்று அப்போதுதான் பார்ப்பதுபோல் பேசினான்.
"கிருஷ்ணா, உன்னை சந்திக்க முதலில் வந்தவன் நான்தான். என் விருப்பத்தைத்தான் நீ கேட்கவேண்டும்."
"அப்படியா, ஆனால் நான் முதலில் பார்த்தது அர்ச்சுனனைத்தானே.சரி. உன் விருப்பப்படியே ஆகட்டும்.நீயே சொல். என்னைத்தேடி வந்த காரணம் என்ன?"
"கண்ணா, பாரதப் போரில் உன் உதவி எனக்குத் தேவை.
"அவ்வளவுதானே. சரி அர்ச்சுனா, இப்போது நீ வந்த காரணத்தைக் கூறு.
"பரந்தாமா, நானும் உன் உதவியை நாடியே வந்துள்ளேன்."
"கிருஷ்ணா, அர்ச்சுனனைப் போல் நானும் உனக்கு உறவு முறைதான். எனக்குத்தான் முதல் உரிமை தரவேண்டும் உன்னை முதலில் சந்திக்க வந்தவனும் நான்தான்."
"நீங்கள் இருவருமே எனக்கு வேண்டியவர்கள்தான். துரியோதனா,என்படைவீரர் அனைவரையும் தரட்டுமா? நான் ஒருவனே துணையாக வரட்டுமா?நான் போரில் ஆயுதத்தைக்  கையால் தொடமாட்டேன். இந்த இரண்டு துணையில் ஏது உனக்கு வேண்டும் கேள்."
"கண்ணா, உன் படைவீரர் அனைவரையும் தந்தால் போதுமானது.நீயும் போரில் ஆயுதம் தாங்குவதில்லை என்று கூறியிருப்பதை மறக்காதே."
"உன் விருப்பப்படியே செய்கிறேன். மகிழ்ச்சிதானே."என்ற கண்ணன் துரியோதனனுக்கு உபசாரம் செய்து அனுப்பினான். துரியனும் மகிழ்ச்சியுடன் அஸ்தினாபுரம் வந்து சேர்ந்தான்.
அதன்பின் தன் நண்பனும் மைத்துனனுமான அர்ச்சுனனிடம் "அர்ச்சுனா, போரில் ஆயுதம் எடுக்காத நான் உனக்குத் துணையாக வருவது உனக்கு மகிழ்ச்சியா?இதை நீ விரும்புகிறாயா?"என்றான் கண்ணன்.
"பரந்தாமா, நீ எங்களுக்குத் துணையாக இருந்தாலே போதும்.உன்துணை ஒன்றிருந்தால் நாங்கள் வெற்றி பெறுவது உறுதி.எங்கே துரியோதனன் உன்னைத் தனக்குத் துணையாகக் கேட்டு விடுவானோ என நான் அஞ்சினேன்.நல்லவேளையாக அவன் உன்னைக் கேட்காமல் படையை மட்டும் கேட்டான்."
பின்னர் மகாபாரதப் போரில் கண்ணன் சாரதியாக இருந்து   ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்    அர்ச்சுனனைக் காத்து வந்தான். போர் பதினெட்டு நாட்கள் நடந்தன.
எல்லாப் பகைவரையும் முறியடித்து பாண்டவர் வெற்றி பெற்று தருமன் மீண்டும் அஸ்தினாபுரத்திற்கு அரசனாக முடிசூட்டிக் கொண்டான்.
மூல முதல்வனான கண்ணனின் துணையும், அர்ச்சுனனின் பணிவுமே இந்த வெற்றிக்குக் காரணம் என்று தெரிகிறதல்லவா.வாழ்வில் பல சந்தர்ப்பங்களில் நமது பணிவே நமக்குப் பெரும் துணையாக இருக்கும் என்பதை நாம் இதிகாசக் கதைகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.





ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

சனி, 14 ஜனவரி, 2012

vaazhththu

அன்புள்ளங்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

ஞாயிறு, 8 ஜனவரி, 2012

79- ஏகாதசி மகிமை.

ஏகாதசி என்பது  பதினொன்று என்பதைக் குறிக்கும். பவுர்ணமியிலிருந்தும்அமாவாசையிலிருந்தும்  வரும் பதினோராம் நாளையே ஏகாதசி என்று குறிப்பிடுவர். இந்த நாள் மாதத்தில் இருமுறை வருவது.இந்த நாள் மகாவிஷ்ணுவிற்கு உகந்தநாளாகக் கூறுவர்.இந்தநாள் முழுவதும் உபவாசமிருந்தும் இறைவனைப் பாடியும் பஜனை செய்தும்  இறைவனின் நினைவில் கழிப்பார்கள்.இறைவனுக்கு அருகாமையில் என்பதுதான் இதன் பொருள்.
மறுநாள் துவாதசி. அதிகாலையில் எழுந்து பூஜை நிவேதனம் முதலியன முடித்து அதிதிகளுக்கு அன்னமிட்டுப் பின் உண்பார்கள்.இந்த விரதம் சைவ வைணவர்களிடையே கடைப்பிடிக்கப் பட்டு வந்தது.பலருக்கும் ஏகாதசி விரதம் பற்றித் தெரியாதிருந்தது.
ஆனால் மன்னனான அம்பரீஷன் முனிவர் மூலமாக ஏகாதசி விரதத்தைப பற்றித் தெரிந்து கொண்டான்.இந்த விரதத்தை  விவரம் தெரிந்த நாளிலிருந்து கடைப்பிடித்து வந்தான்.
பல ஆண்டுகளாக ஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று இரவு உண்ணாமல் மறுநாள் ஏகாதசி முழுநாளும் உபவாசமிருந்து அதற்கு மறுநாள் துவாதசி அன்று பூஜை முடித்து அதிதிகளுக்கு அன்னமிட்டுப் பின் உணவு உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.
உபவாசம் என்றசொல்லுக்கே இறைவனின் அருகிருத்தல் என்றே பொருள். அதன்படி எப்போதும் இறை தியானத்தில் இருந்து ஹரியை வழிபட்டு வந்தான் அம்பரீஷன். 
இதனால் ஹரியின் அன்புக்குப் பாத்திரமானவனானான்.
ஒருமுறை ஏகாதசி விரதமிருந்த அம்பரீஷன் துவாதசி பாரணைக்குத் தயாராக இருந்தான்.ஏகாதசி உபவாசத்திற்குப் பின் உணவு உண்பதற்குப் பாரணை என்று பெயர்.அச்சமயம் துர்வாச முனிவர் தன் சீடர்களுடன் அரண்மனைக்குள் நுழைந்தார்.முனிவரைப் பார்த்த அம்பரீஷன் மனம் மிக மகிழ்ந்தான்.அன்புடன் அவரை வரவேற்று உபசாரங்கள் செய்தான்.
"வரவேண்டும் சுவாமி, தாங்கள் என் குடிசைக்கு வந்ததில் மிக்க மகிழ்ச்சி"
கம்பீரமாக ஆசனத்தில் அமர்ந்த முனிவர்,"அம்பரீஷா, இன்று என்ன திதி தெரியுமல்லவா?" என்றார்.
"ஆம் சுவாமி, இன்று துவாதசி திதி. அடியேனுடன் தாங்கள் பாரணைக்கு எழுந்தருள வேண்டும்."என்று மிகுந்த வினயத்துடன் கேட்டுக் கொண்டான் அம்பரீஷன்.
"அதற்காகத்தான் வந்துள்ளேன்.சற்றுப்பொறு யமுனையில் நீராடிவிட்டு வருகிறேன்."
"தங்கள் சித்தம் சுவாமி அடியேன் காத்திருக்கிறேன்."துர்வாசர் சீடர்கள் புடைசூழ யமுனைக்குச் சென்றார்.
வெகுநேரம் வரை அம்பரீஷன் காத்திருந்தான்.அவனுடன் சேர்ந்து அந்தணர்களும் காத்திருந்தனர்.நீராடச் சென்ற முனிவர் வரவில்லை.
இன்னும் சற்று நேரத்தில் துவாதசி திதி கழிந்து விடும்.அதற்குள் பாரணை முடிக்கவேண்டும் இல்லையேல் ஏகாதசி விரதம் தவறிவிடும்.
என்ன செய்வது என்று புரியாமல் அனைவரும் திகைத்துக் கொண்டு இருந்தனர்.
துர்வாசர் வராமல் பாரணை செய்வதும் தவறு.அந்தணர்களிடம் ஆலோசனை கேட்டான் அம்பரீஷன்.துவாதசி கழிய இன்னும் சிறிது நேரமே உள்ளதால் அந்த நேரத்திற்குள் சிறிது துளசி தீர்த்தம் உட்கொண்டால் பாரணை செய்த மாதிரியாகிவிடும். முனிவர் வந்தபின் அவருடன் உணவு உட்கொள்ளலாம்.என்றதால் வேறு வழியின்றி துளசி தீர்த்தம் பருகி விரதத்தை முடித்தனர்.
இவ்வாறு உட்கொண்டதால் உணவு உண்டதாகவும் கொள்ளலாம் பட்டினியாக இருப்பதாகவும் கொள்ளலாம் என்று எண்ணிக்கொண்டு முனிவருக்காகக் காத்திருந்தான் அம்பரீஷன்.
இச்செய்தியை அறிந்தார் துர்வாசர்.மிகுந்த கோபமடைந்தார்.
"அம்பரீஷா, என்னை பாரணை செய்ய அழைத்து விட்டு என்னை விடுத்து நீ பாரணை செய்தது மிகுந்த தவறு. இதற்கான தண்டனையை நீ அனுபவித்தே ஆகவேண்டும்." என்றார் சினத்துடன்.அம்பரீஷன் அஞ்சி நடுங்கினான். மிகுந்த பணிவுடன் பேசினான்."சுவாமி, துவாதசி திதி போய்விடுமே என்று சிறிது நீர் மட்டுமே பருகினேன்.தயவு செய்து உணவு உண்ண வாருங்கள். அனைவரும் காத்திருக்கிறோம்."என்றவனைக் கடுமையாகப் பார்த்தார் முனிவர்.
"நீ நீர் பருகியது கூடத் தவறுதான். அதுவே பாரணை செய்ததற்கு ஒப்பாகும்.மகரிஷியான என்னை அவமதித்து விட்டாய்." 
"முனி சிரேஷ்டரே . மன்னியுங்கள்.தயவு செய்து கோபம் தணியுங்கள்." என்று கால்களில் பணிந்த அம்பரீஷனை உதறித் தள்ளினார்.
"இதோ நான் விடுக்கும் இந்த அக்கினிப் பிழம்பு உன்னைச் சுட்டெரிக்கட்டும்." என்றவாறு மந்திரம் ஜபிக்க அதிலிருந்து உண்டான ஒரு தீப் பிழம்பு அம்பரீஷனை நோக்கி வந்தது.
ஹரியிடம் மாறாத பக்தி கொண்டவனும் ஏகாதசி விரதத்தை மிகவும் கடுமையாக கடைப்பிடித்துவந்தவனுமான அம்பரீஷன் தன் இரு கரங்களைக் கூப்பி நாராயணனைத் துதிக்க, அவரது ஸ்ரீசக்கரம் அம்பரீஷனைக் காத்தது.அத்துடன் தீப்பிழம்பையும் அழித்துவிட்டு 
அதனை ஏவிய துர்வாசரைத் துரத்தவே முனிவர் ஓடினார்.தன்னைத் துரத்திய ஸ்ரீசக்ரத்தின் கோபத்திலிருந்து தப்பிக்க நேரே பிரம்மாவின் சத்யலோகம் சென்றார்.அவரோ" ஸ்ரீ சக்ரத்தைத் தடுக்க என்னால் ஆகாது.நேரே கைலாயம் செல்" எனக் கூறி அனுப்ப முனிவர் சிவனை நாடிச் சென்றார்.கைலாசபதியும் தன்னால் ஆகாது" நீ ஹரியிடமே செல்" எனக் கூற முனிவர் வைகுண்டம் வந்து ஹரியின் காலில் பணிந்தார்.
"பிரபோ, அபயம்,"என்று அபயக் குரல் கொடுத்துக் கதறினார்.நாராயணன் புன்னகைத்தான்.
"துர்வாசரே, ஏனிந்த பதற்றம்? என்ன நடந்தது?" மாயக் கண்ணனல்லவா, ஒன்றும் அறியாதவர் போலக் கேட்டார்.
"பிரபோ, என்னைக்  காப்பாற்றுங்கள். தங்களின் ஸ்ரீ சக்ரம் என்னைத் துரத்துகிறது. தாங்கள்தான் அதைத் தடுத்து நிறுத்தவேண்டும்"
"துர்வாசரே, இது என் பக்தன் மீது நீர் கொண்ட கோபத்தின் மொத்த உரு.இதைத் தடுக்க என் பக்தன் ஒருவனால் மட்டுமே முடியும். அவனிடமே சரணடைவீர்."என்றவர் கபடமாகச் சிரித்தார்.
துர்வாசர் மீண்டும் அம்பரீஷனிடமே ஓடிவந்தார்.
"அம்பரீஷா, ஏகாதசி விரதத்தின் மகிமையும் பெருமையும்  அறியாமல் உன்னைச் சபித்து விட்டேன்.உன் பக்தியையும் பரமாத்மா உன் மீது கொண்டுள்ள அன்பையும் புரிந்து கொண்டேன்.இந்தஸ்ரீசக்ரத்தின் வெப்பத்திலிருந்து என்னைக் காப்பாற்று என வேண்டிக்கொண்டார். 
தன் முன்னே நின்ற துர்வாசரை அன்புடன் பார்த்த அம்பரீஷன்,"சுவாமி, நான் செய்ததும் தவறுதான்.என்னையும் தாங்கள் மன்னிக்க வேண்டும்." என்றவன் தன் கரங்களைக் கூப்பி நாராயணனை த்யானம் செய்தான். .
"பரந்தாமா, பக்தவத்சலா, இந்த அடியவனைக் காக்கும் பொருட்டு என் இல்லம் வந்தது நான் செய்த பெரும் பாக்கியம்.தயவு செய்து அதிதியாக வந்த முனிவரைக் காத்து ரட்சிக்க வேண்டும்."என்று மனமுருக வேண்டினான்.
முனிவரின் எதிரே தீப்பிழம்பாய் நின்ற சக்ரம் மறைந்தது.இதற்குள் ஓராண்டு முடிந்திருந்தது.அதிதியான முனிவருக்கு அன்னமிடாமல் உண்ணக் கூடாது என்று அதுவரை விரதமிருந்து வந்தான் அம்பரீஷன்.இதையறிந்த முனிவரும் மனம் வருந்தி பின் உணவு உண்டு விரதத்தை முடித்துவைத்தார்.

அம்பரீஷன் முனிவருக்குப் பல பரிசுகளைக் கொடுத்து அவரை அனுப்பி வைத்தான்.
நேரே வைகுண்டம் சென்று நாராயணன் முன் நின்றார் மகரிஷி."நாராயணா, ஏனிந்த விளையாட்டு?தங்களின் சக்கரத்தைத் தங்களால்  தடுத்து நிறுத்த இயலாதா?என்னை இப்படி சோதிக்கலாமா?"
"துர்வாசரே, நீர் அம்பரீஷனை சோதிக்கலாமா?துவாதசி முடிந்து விடும் என்று தெரிந்தும் நீர் சரியான நேரத்திற்குச் செல்லாமல் காலம் கடத்தியது தவறல்லவா?"
"இது ஏன் நடந்தது என்று எனக்கே தெரியவில்லை சுவாமி."
"கலங்காதீர். அம்பரீஷன் மூலமாக ஏகாதசி மகிமையை உலகுக்கு உணர்த்தவே இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்தினேன்.உம்மால்  அம்பரீஷன் பெருமையும் உயர்ந்தது.
"தங்களின் இந்த விளையாட்டுக்கு நான் ஒரு கருவியாக இருக்க நேர்ந்ததை அறிந்து நான் மிகவும் பெருமைப் படுகிறேன் பிரபோ"
என்று நாராயணனை வணங்கி விடை பெற்று வைகுண்டத்தை விட்டுப் புறப்பட்டார் துர்வாசர்.
ஏகாதசி விரதம் இருந்து இறைவனை வணங்குவது என்பது ஆன்மீக வழியைக்  காட்டும் என்றாலும் அது ஆரோக்யத்திற்கான வழி என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.உபவாசம் உடலை  மட்டுமல்ல உள்ளத்தையும் பண்படுத்தும் என்பதையே நம் முன்னோர் சொன்ன வாழ்க்கை முறை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.










ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

சனி, 31 டிசம்பர், 2011

புத்தாண்டு வாழ்த்து.

பாட்டி சொல்லும் கதைகளின் வாசகர்களுக்கும் விமரிசித்தவர்களுக்கும் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.எல்லா நலன்களும் வளங்களும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்தும் உங்களின் அன்புச் சகோதரி
ருக்மணி சேஷசாயி.

--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

வியாழன், 15 டிசம்பர், 2011

78- புண்ணியத்தின் பலன்-

ஒரு கிராமத்தில் சாம்பசிவம் என்ற ஒரு அந்தணர் வசித்து வ்ந்தார். சிறு வயது முதலே வேதம் புராணம் முதலிய சாஸ்திரங்கள் பலவும் கற்று சிறந்த மனிதராய் திகழ்ந்தார்.அவர் எவ்வளவுதான் கற்றவராகவும் மற்றவருக்கு உபதேசிப்பவராகவும் இருந்தாலும் அந்த ஊரில் அவருக்கு மரியாதை இருந்ததே ஒழிய செல்வத்தைக் கொடுப்பவர் யாருமில்லை.
அவர் செய்யும் தொழிலுக்கு ஏற்றபடி செல்வத்தைக் கிள்ளிக் கொடுத்தார்களே அன்றி அள்ளிக் கொடுக்கவில்லை.அதனால் நிறைந்த செல்வத்தை அவரால் சேர்க்க இயலவில்லை.
அவரது மனைவியும் இவரை கையாலாகாதவர் என ஏளனமாகப் பேசி வந்தாள்.
அதே ஊரில் தனபாலன் என்ற ஒரு வியாபாரி வாழ்ந்து வந்தார். அவர் பெயருக்கு ஏற்றசெல்வ வளம் மிக்கவராகத் திகழ்ந்தார்.அவரது நிலையைச் சொல்லிக் காட்டி சாம்பசிவத்தின் மனைவி செல்வத்தைச் சேர்க்கும் வழியைப் பின்பற்றும்படி கூறிவந்தாள்.
அதனால் சாம்பசிவம் அடுத்த ஊருக்குச் சென்று பணம் சம்பாதித்து வருவதாகக் கூறிப்  புறப்பட்டார்.
அதேநாளில் தனபாலனும் தன் வியாபாரத்தின் நிமித்தமாகத் தன் வண்டியில் ஏறிக்கொண்டு அடுத்த ஊருக்குப் புறப்பட்டார்.இருவரும் ஒரே பாதையில் போய்க்கொண்டு இருந்தனர்.

தனபாலனின் வில் வண்டி ஜல்ஜல் என்று ஓடிக்கொண்டு இருந்தது. ஆனால் சாம்பசிவமோ வேர்க்கவிறு விறுக்க நடந்து போய்க்கொண்டு இருந்தார்.
இந்த இருவரின் நிலையையும் வைகுண்டத்திலிருந்த மகாலட்சுமி  தாயார் பார்த்தாள். பின்அருகே சயனத்திலிருந்த வைகுண்ட நாயகனான நாராயணனைப் பார்த்தாள்.
கண்களை மூடிப் படுத்திருந்த அந்த மாயக் கண்ணன் புன்னகை புரிந்தார்.
அவரது புன்னகையைக் கண்டு பொறுக்காத லக்ஷ்மி "சுவாமி, இது என்ன அநீதி. சதா வேதம் ஓதிக்கொண்டு உங்களையே ஸ்மரித்துக் கொண்டு இருக்கும் இந்த அந்தணருக்கு ஏன் இந்த நிலை?அவருக்கு செல்வ வளத்தைத் தரக்கூடாதா?"என்றாள் சற்றே கோபத்துடன்.
அதே புன்னகையுடன் நாராயணர்"என்ன லக்ஷ்மி நீதானே தனத்துக்கு அதிபதி?செல்வத்தை அள்ளிக் கொடுக்கவேண்டியதுதானே?" என்றார் கள்ளச் சிரிப்போடு.
"நானே கொடுக்கிறேன் சுவாமி" என்றவளைத் தடுத்தார் நாராயணர்.
"லக்ஷ்மி, அவனுக்கு இந்த ஜன்மாவில் செல்வத்தை அனுபவிக்கும் பேறு இல்லை.நீ கொடுத்தாலும் அதை அவன் அனுபவிக்க மாட்டான்."
"கொடுப்பவள் தனலட்சுமி சுவாமி.அவனுக்கு செல்வம் எப்படி சேருகிறது என்று பாருங்கள்."என்றவளைப் பார்த்துப் புன்னகைத்த நாராயணர்,
"சரி. உன் விருப்பப் படியே அவனுக்கு செல்வம் கொடு. ஆனால்  இரண்டு முறைதான் கொடுக்கவேண்டும்." என்று அனுமதியளித்தார்.
மகாலக்ஷ்மியும் மிகவும் மகிழ்ச்சியுடன் தன் கையிலிருந்து ஒரு பொன் மூட்டையை அந்த அந்தணர் சாம்பசிவம் நடக்கும் வழியில் போட்டாள். எப்படிப்பணம் சம்பாதிப்பது என்ற எண்ணத்துடன் போய்க் கொண்டிருந்த சாம்பசிவத்துக்கு திடீரென்று ஒரு எண்ணம் தோன்றியது.நமது ஐம்புலன்களும் நன்றாக இருக்கும் போதே நம்மால் விரைவாக நடக்க இயலவில்லையே கண்ணில்லாதவர்கள் எப்படி நடப்பார்கள்? நாமும் கண்ணில்லாமல் நடந்து பார்ப்போம் என்ற எண்ணத்துடன் தன் இரு கண்களையும் மூடிக்கொண்டு நடந்தான் சாம்பசிவம்.
 
அதே சமயம் தன் கையிலிருந்த பொன் மூட்டையை அவன் முன் போட்டாள் மகாலட்சுமி.கண்களை மூடிக்கொண்டு நடந்த சாம்பசிவம் அந்த மூட்டையைத் தாண்டிச் சென்று தன் கண்களைத் திறந்தான். "அப்பாடா, கண்ணில்லாமல்நடப்பது  ரொம்ப கஷ்டம்தான். ஆண்டவா எனக்கு நல்லபடியாகக் கண் கொடுத்திருக்கும் உனக்கு கோடானு கோடி நன்றிப்பா" என்று இரு கை கூப்பி வணங்கிவிட்டு நடந்தான்.
வைகுண்ட நாராயணன் சிரித்தார்."என்ன தேவி, உன் பக்தன் நீ கொடுத்த தனத்தை ஏற்கவில்லை போலிருக்கிறதே."
"சுவாமி, இன்னொருமுறை முயற்சித்துப் பார்க்கிறேன்."
"சரி.உன் விருப்பம்."என்று அனுமதி அளித்தார் இறைவன்.
இம்முறை அவன் கண்களில் படும்படி அந்த திரவிய மூட்டையை அவன் நடக்கும் பாதையில் போட்டாள் தேவி.
தன் முன் கிடக்கும் அந்த மூட்டையைக் கையில் எடுத்தான் அந்த ஏழை பிராம்மணன்.மகாலட்சுமி மனம் மகிழ்ந்தாள்.
நாராயணனை சற்றே கர்வத்துடன் பார்த்தாள்.இப்போதும் இறைவன் புன்னகைத்தார்.
"லக்ஷ்மி என்ன நடக்கிறது என்று பார்.உன் விருப்பம் நிறைவேறினால் எனக்கும் மகிழ்ச்சியே.என்ன செய்வது.அவன் கர்மபலனை அவன்தான் அனுபவிக்க வேண்டும்."என்றார் பெருமூச்சுடன்.அதேசமயம் கையில் எடுத்த செல்வத்தைப் 
பிரித்துப் பார்த்த சாம்பசிவம் அச்சமும் ஆச்சரியமும் கொண்டான். மக்கள் அதிகம் நடமாடாதஅந்தப்  பாதையில் யார் இந்த மூட்டையைப் போட்டிருப்பார்?யாரேனும் தேடிவருவார்களா என்று அங்கேயே காத்திருந்தான்.

அப்போது சாம்பசிவத்துக்கு முன்னாலேயே அடுத்த ஊர் சென்று  அடைந்த தனபாலன்  தன் வியாபாரத்தை முடித்துக் கொண்டு திரும்பிக் கொண்டு இருந்தான்.அங்கே அமர்ந்திருந்த சாம்பசிவனைப் பார்த்துஏன் இங்கேயே தங்கிவிட்டாய்? என்று  விசாரிப்பதற்காக வண்டியை மெதுவாக விடச் சொன்னான்.தான் தவறவிட்ட திரவியத்தைப் பற்றிக் கேட்கத்தான் வந்துள்ளான் என நினைத்த சாம்பசிவம் தன்னிடமிருந்த மூட்டையைக் கொடுத்து ஐயா, தாங்கள் தவறவிட்ட மூட்டை இதுதானா?நீங்கள் வருவீர்கள் என்றுதான் காத்திருந்தேன். இந்தாருங்கள் உங்கள் செல்வம்" என்று அந்த மூட்டையை தனபாலனிடம் கொடுத்தான். தனபாலனும் அதைப்  பெற்றுக் கொண்டு விரைந்து ஊர் வந்து சேர்ந்தான்.மிகுந்த நல்ல காரியம் செய்து விட்டது  போல் சாம்பசிவனும் மகிழ்ச்சியுடன் தன் பயணத்தைத் தொடர்ந்தான்.
நாராயணன் "பார்த்தாயா தேவி தனலக்ஷ்மியே கொடுத்தாலும் அந்தசெல்வம் அவனைச் சேரவில்லை பார்.இது அவனது பூர்வ ஜன்மவினை."என்றார் அதே புன்னகையோடு.
இப்போது மகாலட்சுமி நாராயணனைப் பார்த்து "நானே நினைத்தாலும் ஒருவனைச் செல்வந்தனாக ஆக்க முடியாது அவரவர் செய்த புண்ணியங்களும் பாவங்களுமே  அவர்களின் சுக துக்கங்களை முடிவு செய்கின்றன என்பதைப் புரிந்து கொண்டேன் சுவாமி."என்று கூறித  தலைவணங்கி நின்றாள்.
நாமும் எத்தனை பிறவி எடுத்தாலும் அத்தனை பிறவிகளிலும் நன்மையே நினைப்பவர்களாக இருக்க வேண்டும் என்ற உண்மையைப் புரிந்து கொண்டு வாழவேண்டும்.






--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

வெள்ளி, 25 நவம்பர், 2011

77-- பாட்டி சொன்ன கதை- பகுதி- 2

பாட்டி சொன்ன கதை- பகுதி- 2
 தொலைவில்  தெரிந்த  ஒரு   வீட்டை  நோக்கிச்  சென்றனர் . சகோதரர்கள் இருவரும் அந்த வீட்டின் வாயிலில் சென்று நின்றனர். உள்ளிருந்து  பெரும் வெளிச்சம் தெரிந்தது.உள்ளே ஏதோ யாகம் நடப்பதைப் போல நெருப்பு எரிந்து  கொண்டிருந்தது. 
வாயிலில் நின்றபடியே சஞ்சயன் அழைத்தான்."ஐயா, யார் உள்ளே இருக்கிறீர்கள்?" இரண்டு மூன்று முறை அழைத்தபின்" உள்ளே வாருங்கள்" என்று ஒரு கட்டைக் குரல் கேட்டது.இருவரும் மெதுவாக உள்ளே நுழைந்தனர்.
அங்கே அவர்கள் கண்ட காட்சி அவர்களை ஆச்சரியப் படுத்திற்று.ஒரு மனிதன் ஜடாமுடியும் தாடியுமாக இருந்தவன் தன் கையில் ஒரு செடியை வைத்துக் கொண்டு அதை நெருப்பில் காட்டிக் கொண்டிருந்தான். அந்த செடியிலிருந்து சொட்டுச் சொட்டாக நீர் வடிந்து கீழே எரியும் நெருப்பில் விழுந்து கொண்டிருந்தது.
அவன் தன் வேலையை நிறுத்தாமல் "உங்களுக்கு என்ன வேண்டும்?"என்றான் கடுமையான குரலில்.
சஞ்சயன் "ஐயா, நாங்கள் ரத்தினபுரியைச் சேர்ந்தவர்கள்.அனாதைகள். தாங்கள் அடைக்கலம் தரவேண்டும்.யாரேனும் குருவை நாடிப் பிழைப்பதற்காக நாங்கள் அலைகிறோம்."என்றான் பணிவாக.
"அப்படியானால் எனக்குத் துணையாகப் பணி செய்யுங்கள். உங்களுக்கு நான் பிறகுதான் வித்தைகளைக் கற்றுத் தருவேன்."என்றுகூறி ஒரு கிண்ணத்திலிருந்து உணவு வகைகளை எடுத்துச் சாப்பிடக் கொடுத்தான்.
            இப்படியே சில நாட்கள் சென்றன.எப்போதும் அந்த மனிதன் நெருப்பின் முன் அமர்ந்து செடியை நெருப்பில் காட்டிக் கொண்டே இருப்பதைப் பார்த்த சஞ்சயன் எப்படியாவது இந்த ரகசியத்தைத் தெரிந்து கொள்ளவேண்டும் என நினைத்தான்.கொஞ்சம் கொஞ்சமாக அந்த மனிதனின் மனதில் தன் சேவையால் இடம் பிடித்தான்.
தம்பியை முரடனாகக் காட்டிக் கொள்ளச் சொன்னதால் அவனை விட சஞ்சயன் நல்லவன் என்று முடிவு செய்தான் அந்த மனிதன். ஒரு மந்திரவாதி என்பதைக் கண்ணாடி மூலமாகக் கண்டு பிடித்தான் சஞ்சயன்.
யாருமில்லாத அந்த காட்டுக்குள் தனக்கு பணிசெய்ய இருவர் வந்தது அந்த மந்திரவாதிக்கு மிகவும் வசதியாக இருந்தது.எனவே அவர்களைத் தனக்கு சீடர்களாக வைத்துக் கொண்டான்.துர்ஜயன் செய்யும் தவறுகளைக் கண்டிப்பதோடு நிறுத்திக் கொண்டான்.ஆனால் சஞ்சயனுக்குச் சில பொறுப்பான பணிகளைக் கொடுத்தான்.
ஒரு அமாவாசை தினம் வந்தது.மந்திரவாதி சஞ்சயனைப் பார்த்து "சஞ்சயா, என் பெற்றோருக்குத் தர்ப்பணம் கொடுத்து பல ஆண்டுகளாகின்றன.இப்போது நீங்கள் இருவரும் இருப்பதால் அந்த தர்ப்பணம்  கொடுத்து வர விரும்புகிறேன்."என்றான்.
சஞ்சயன் "அப்படியே குருவே. நான் தங்களுடன் துணை வருகிறேன். இங்கே தம்பி பார்த்துக் கொள்வான்" என்றான்.
துர்ஜயனை நம்பாத மந்திரவாதி துர்ஜயனை  உடன் வருமாறு சொல்லிவிட்டு  சஞ்சயனை அந்தச் செடியை விடாமல் நெருப்பின் முன் பிடித்துக் கொள்ளச் சொன்னான்.
பிறகு துர்ஜயனுடன் தொலைவில் உள்ள ஆற்றை நோக்கிச் சென்றான்.அவர்கள் கண் மறைந்ததும் சஞ்சயன் அந்தச் செடியைக் கீழே வைத்துவிட்டு அந்த இடத்தை சோதனை செய்யத் தொடங்கினான்.பலமூலிகை, எலும்பாலான உருவங்கள், மட்பாண்டங்கள் இவற்றோடு சிறு சிறு கல் பொம்மைகளும் இருந்தன.
திடீரென சஞ்சயனுக்கு மந்திரவாதி வந்துவிட்டால் என்ன செய்வது என்ற அச்சம் தோன்றவே அவன் என்ன செய்கிறான் என்பதை அறிய விரும்பினான்.தன் கையிலிருந்த கண்ணாடியைப் பார்த்து அதில் தன் குரு என்ன செய்கிறார் எனக் கேட்டுப் பார்த்தான்.
பார்த்தவுடன் திடுக்கிட்டான்.அதில் தன் தம்பி துர்ஜயனை ஒரு கல் பொம்மையாக ஆக்கித்  தன் மடியில் கட்டிக்கொள்வதையும் அவனது உடல் நடுங்குவதையும்,அவன் வேகமாக அங்கிருந்து வருவதையும்  பார்த்தான்.உடனே பழையபடி செடியைத் தன் கையில் வைத்துக் கொண்டு அமர்ந்து விட்டான் சஞ்சயன்.
கோபத்துடன் உள்ளே நுழைந்த மந்திரவாதி "அடேய், சஞ்சயா, ஏனடா செடியைக் கீழே வைத்தாய்? உன்னால் என் தவத்துக்கு குறை ஏற்பட்டுவிட்டதே.ஓடு இனியும் என்முன் நில்லாதே."என்று விரட்டி விட்டான்.
"ஐயா, என் தம்பி..."
"அவன் நீரோடு போய் விட்டான். அவனை இனி நீ பார்க்க இயலாது. போய்விடு இங்கிருந்து.இல்லையேல் சபித்துவிடுவேன்."என்றபோது இவனை என்ன உபாயத்தால் வெல்வது என்ற சிந்தனை வயப்பட்டவனாகத் தலைகுனிந்து வெளியேறினான் சஞ்சயன்.
அவன் மனம் மட்டும் தம்பியின் பிரிவால் மௌனமாக அழுது கொண்டிருந்தது.கால் போன போக்கில் நடந்து ரத்தினபுரியை அடைந்தான்.வருத்தத்துடன் இரத்தினபுரி ராஜவீதியில் நடந்துகொண்டிருந்தான்.ஊர் மக்கள் ஆங்காங்கே நின்று பேசிக்கொண்டிருப்பதைக் கண்டான்.என்னவென்று விசாரித்தபோது பல ஆண்டுகளாக அழுது கொண்டிருந்த ராஜகுமாரி சில நாட்களுக்கு முன் ஒரு நாழிகைப் பொழுது அழுகையை நிறுத்தி சிரித்தாள். மீண்டும் அழத் தொடங்கிவிட்டாள். மன்னர் இது எப்படி நடந்தது எனத் தெரியாமல் தவிக்கிறார்.ஊர் அதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்தான்.
சஞ்சயன் சிந்தித்தான்.சடாரென அவனுக்கு நினைவுக்கு வந்தது.மந்திரவாதியின் கையிலிருந்த அந்தச் செடிக்கும் இளவரசி அழுவதற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கவேண்டும் என நினைத்தான்.ஏனெனில் சஞ்சயன் ஒரு நாழிகைப் பொழுது அந்தச் செடியைக கீழே வைத்த அதே நேரம்தான் இளவரசி இங்கே அழுகையை நிறுத்தியிருக்கிறாள்.என்பதைப் புரிந்து கொண்டான்.உடனே மன்னனைச் சந்திக்க அரண்மனை சென்றான்.மன்னனைக் கண்டு தான் எப்படியும் ஒரு மாதத்திற்குள் இளவரசியின் அழுகையை நிறுத்துவதாகக் கூறிப் புறப்பட்டான்.
தன்னுடன் நான்கு வீரர்கள் மட்டும் போதும் என்று சொல்லி அவர்களுடன் ஒரு ரிஷி போல வேடமணிந்து புறப்பட்டான் சஞ்சயன்.அவர்கள் அனைவரும் மந்திரவாதி இருக்கும் இல்லத்தின் அருகே காட்டுக்குள் தங்கினர். சஞ்சயன் மட்டும் கமண்டலத்துடன் நதிக்குப் போவதுபோல் மந்திரவாதியின் வீட்டுக்குள் சென்றான்.இடத்தைவிட்டு எழாத மந்திரவாதி" யார்நீ இங்கு ஏன் வந்தாய்?" என்று இரைந்தான்.
"குழந்தாய் உனக்கு உன் ஆயுளைப் பற்றக் கூறவே நான் வந்தேன்." என்றான். மந்திரவாதி பெரிதாக நகைத்தான்.
"என்ன, ஏன் ஆயுளைப் பற்றியா?" 
"ஆம் மகனே, உனக்கு இன்னும் சிறிது நேரத்தில் ஆயுள் முடியப் போகிறது."
"இதோ பார் உன் தலை இப்போது உருளப் போகிறது." என்றபடியே இடது கையால் கத்தியை வீசினான்.ஆனால் காட்டில் அம்மை கொடுத்த வாளால் அதைத் தடுத்தான் சஞ்சயன்.மந்திரவாதி திடுக்கிட்டான். தன் மந்திரசக்திவாய்ந்த வாளைத் தடுத்த அந்த சன்னியாசியை எதிர்க்க எழுந்து நின்றான்.
தன்னை நோக்கிப் பாய்ந்து வந்த மந்திரவாதியிடமிருந்து குனிந்து தப்பிய சஞ்சயன் அந்தச் செடியைக் கையில் எடுத்துக் கொண்டு ஓடத் தொடங்கினான்.ஒரு கையில் செடியும் மறுகையில் மந்திர வாளுமாக ஓடிய சஞ்சயனைப் பின் தொடர்ந்து ஓடினான் மந்திரவாதி.ஆனால் தங்களின் மறைவிடத்திற்கு சென்று தன் வீரர்களுடன் சேர்ந்து கொண்டான் சஞ்சயன். அந்தச் செடியைக் கீழேவைக்காமல் தன் மடியில் இருந்த கண்ணாடியை  எடுத்துப் பார்த்தான். "கண்ணாடியே இந்தச் செடியைப் பாதுகாப்பாக எங்கே வைப்பது என்பதைக் காட்டு" என்றபடி கண்ணாடியைப் பார்த்தான்.
கண்ணாடிக்குள் அருகே இருந்த ஆறு தெரிந்தது. சற்றும் தாமதிக்காத சஞ்சயன் இரண்டு வீரர்களுடன் ஆற்றை நோக்கி வேகமாகச் சென்றான்.தூரத்தில் வந்து கொண்டிருந்த மந்திரவாதி தன் கையைச் சுழற்றி ஏதோ முணு முணுத்தான்.ஆனால் அவன் அவசரத்தில் தன் மந்திரக் கொலைக் கொண்டு வர மறந்து விட்டான். அதனால் அவனது மந்திரம் எதுவும் பலிக்கவில்லை.சற்றும் தாமதிக்காத சஞ்சயன் அந்தச் செடியை ஆற்றில் தூக்கி எறிந்தான்.
அதைப் பார்த்த மந்திரவாதி" ஐயோ என் தவமெல்லாம் போயிற்றே. நூறு பேரைப் பலியிட்டு மகாசக்தியைப் பெற எண்ணினேனே.என் கனவும் தவமும் போச்சே.உன்னை என்ன செய்கிறேன் பார்" என்றபடி சஞ்சயன் மீது பாய்ந்தான். அதற்குள் உடன் வந்திருந்த வீரர்கள் அவனைப் பாய்ந்து பிடித்துவிலங்கிட்டனர்.
அவனையும் இழுத்துக் கொண்டு அவன் தங்கியிருந்த வீட்டுக்கு வந்தனர்.சஞ்சயன் அவனது வீட்டைச் சோதனை போட்டான் எல்லாவற்றையும் தூக்கி வீசினான். வேகம் வேகமாகத் தன் தம்பியைத் தேடினான்.மந்திரவாதியோ சிரித்தான்."உன் தம்பிதான் நீரோடு போய் விட்டானே அவனை இங்கு ஏன் தேடுகிறாய்" என்று திமிறுடன் பேசினான்..
மறைவாகச் சென்ற சஞ்சயன் கண்ணாடியை எடுத்து தம்பியைப் பற்றிக் கேட்க அது ஒரு பெட்டியைக் காட்டிற்று.மிகவும் கஷ்டப்பட்டுத் தேடி அந்தப் பெட்டியைக் கண்டு பிடித்தான் சஞ்சயன்.அதைத் திறந்தபோது தொண்ணூற்று ஒன்பது பொம்மைகள் அந்தப் பெட்டிக்குள் இருப்பதைக் கண்டான்.
 செடியும் முழுவதும் வாடியபின் சஞ்சயனைச் சேர்த்து நூறு பேராக பலி கொடுக்க எண்ணியருந்தான் அந்த மந்திரவாதி என்பதைப் புரிந்து கொண்டான்.அப்போதுதான் அவனுக்கு மேலும் பல சக்திகள் கைகூடும் என்ற செய்தியையும் அறிந்தான்.
இந்த தொண்ணூற்று ஒன்பது   பேரும் உயிர் பெற என்ன வழி என்று மந்திரக் கண்ணாடியைக்  கேட்க அது மந்திரவாதியின் மந்திரக்கோலைக் காட்டிற்று.அது எரியும் நெருப்புக்குக் கீழே இருப்பதைக் காட்டவே குடம் நீரைஎடுத்து நெருப்பை அணைத்தான்.அதே சமயம் மந்திரவாதி உயிரற்றுக் கீழே விழுந்தான்.அந்த மந்திரக் கொலை எடுத்துத் தன் தம்பிமீது தட்டவே அவன் உயிர் பெற்று எழுந்தான். தம்பியைக் கட்டிக் கொண்டு மகிழ்ச்சியில் திளைத்தான்.பின் தொண்ணூற்று ஒன்பது அரசகுமாரர்களும் உயிர் பெற்று எழுந்து சஞ்சயனை வணங்கினர். 
பின்னர் அனைவரும் ரத்தினபுரியை அடைந்தனர்.ரத்தினாங்கியும் தன் அழுகையை நிறுத்தி ஆனந்தமாக சிரிக்கத் தொடங்கி விட்டாள். 
வெற்றி பெற்று வரும் சஞ்சயனையும் பிற அரசகுமாரர்களையும் வரவேற்க மன்னன் ரத்தினவர்மன் காத்திருந்தான்.
இதற்குள் வெற்றிச் செய்தியை சஞ்சயனின் தந்தை சத்திய சீலருக்கு அறிவித்து சஞ்சயன் ரத்தினாங்கி இருவரின்  திருமணத்திற்கு வரும்படி தூதுவரை அனுப்பிவிட்டான் ரத்தினவர்மன்.
வெற்றிவிழாவும் பட்டமேற்பு விழாவும் ஒன்றாக நடந்தது.இரத்தினபுரிக்கு மன்னனாக சஞ்சயனும் சத்தியபுரி மன்னனாக துர்ஜயனும் பட்டமேற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர். அத்துடன் இவர்களின் நல்லாட்சியால் நாட்டு மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர்.இந்த மகிழ்ச்சிக்குக் காரணமான சஞ்சயனின் நல்ல பண்பையும் வீரத்தையும் பாராட்டி மகிழ்ந்தனர்.
 







ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

வெள்ளி, 11 நவம்பர், 2011

76 -பாட்டி சொன்ன கதை.பகுதி -- 1

பாட்டி சொன்ன கதை. பகுதி -- 1
இந்த முறை சற்று வித்யாசமாக இருக்கட்டும் என்று எனக்கு என் பாட்டி சொன்ன கதையை உங்களுக்குச் சொல்கிறேன் இது ரசிப்பதற்கு மட்டும் என்று நினைக்காமல் இதிலும் ஏதேனும் நல்ல விஷயம் இருக்கும் என்று தோன்றினால் அதைப் புரிந்து  கொள்ளவும்.
          இரத்தினபுரி என்ற நாட்டை ரத்தினவர்மன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவனுக்கு ரத்னாங்கி என்ற பெயருள்ள மகள் ஒருத்தி இருந்தாள்.அவள் பிறந்த நாள் முதல் அழுது கொண்டே இருந்தாள். அவள் பெரியவளான பின்பும் அழுகையை நிறுத்தவில்லை.
அவள் அழும் காரணத்தை மன்னன் எவ்வளவு கேட்டும் கூறாமல் அழுதுகொண்டே இருந்தாள். யாராலும் அவள் அழுகையை நிறுத்தவே இயலவில்லை.அதனால் அவளைத் தனியே ஒரு அரண்மனையில் விட்டு சில சேடிப் பெண்களையும் துணைக்கு வைத்து விட்டான் மன்னன் ரத்தினவர்மன்.தனக்குப் பின் நாடாள வேண்டிய  தன் மகள் இவ்வாறு எப்போதும் அழுது கொண்டிருக்கிறாளே என்று மன்னன் மிகவும் கவலைப் பட்டான்.தன் மந்திரிகளுடன் கலந்து ஆலோசனை செய்தான்.
            அவனது மந்திரிகளுள் ஒருவர் ஒரு ஆலோசனை சொன்னார்.அதன்படி தன் மகளின் அழுகையை யார் நிறுத்துகிறார்களோ அவருக்கே அவளை திருமணம் முடித்து தன் நாட்டையும் தருவதாக பறை அறைவித்தான்.
இச்செய்தி அக்கம்பக்கத்து நாடுகளுக்கும் எட்டவே பல நாட்டு அரசகுமாரர்களும் ரத்னாங்கியின் அழுகையை நிறுத்த எண்ணம் கொண்டு இரத்தினபுரிக்கு வந்தனர்.ஆனால் எவ்வளவு முயற்சித்தும் ரத்னாங்கியின் அழுகையை யாராலும் நிறுத்த இயலவில்லை.
           ரத்தினபுரிக்குப் பக்கத்து நாடான சத்தியபுரியின் மன்னன் சத்தியசீலன். அவனுக்கு இரண்டு பிள்ளைகள்.மூத்தமகன் சஞ்சயன்.இரண்டாவது மகன் துர்ஜயன்.இவர்கள் இருவரும் இரத்தினபுரியின் இளவரசியைப் பற்றிக் கேள்விப்பட்டு அவளது அழுகையைத் தாங்கள் நிறுத்துவதாகக் கூறிவிட்டு சத்தியசீலனிடம் ஆசிபெற்றுப் புறப்பட்டனர்.
இருவரும் காட்டுவழியேகுதிரையில்பயணம் செய்து  களைத்துப் போய் ஒரு மரத்தடியில் இளைப்பாற அமர்ந்தனர்.அப்போது அருகே யாரோ முனகும் சத்தம் கேட்கவே சஞ்சயன் திரும்பிப் பார்த்தான். ஒரு வயதான அம்மா அங்கே படுத்திருந்தாள். அவளிடம் சென்று விசாரிக்க சஞ்சயன் எழுந்தபோது துர்ஜயன் அவனைத் தடுத்தான்.ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் சஞ்சயன் அந்த அம்மாளிடம் என்னவாயிற்று என்று கேட்டான்.
"அப்பா, நான் என் குடிசைக்குப் போகவேண்டும். நடக்கமுடியவில்லை.தண்ணீர் தாகமாக இருக்கிறது. கொஞ்சம் தண்ணீர் கொண்டுவந்து தருகிறாயா?"
அப்போது அங்கே வந்த துர்ஜயன்,"வேறு வேலையில்லை? சஞ்சயா, நமக்கு நேரமாகிறது போகலாம் வா," என்று அவனை அழைத்தான்.அவனைத் தடுத்து நிறுத்திய சஞ்சயன் தன்னிடம்  இருந்த குடுவையிலிருந்து கொஞ்சம் நீரை அந்த அம்மைக்குக் கொடுத்தான். தாகம் தீர்ந்த அந்த அம்மாவும் அவனை வாழ்த்தினாள்.அத்துடன் தன் இடுப்பில்  இருந்த ஒரு வாளை எடுத்துக் கொடுத்தாள். "இந்த வாள் உன் கையில் இருக்கும் வரை நீ எல்லோரையும் ஜெயித்துக் கொண்டே இருப்பாய்."என்று ஆசி கூறி அனுப்பினாள்.
அவளை வணங்கி அந்த வாளைப் பெற்றுக் கொண்ட சஞ்சயன் தம்பியுடன்  இரத்தினபுரி நோக்கிப் புறப்பட்டான்.

              வெகு தொலைவு வந்தும் காட்டைவிட்டு வெளியே வர வழி தெரியவில்லை. வழி தவறி விட்டோம் என சஞ்சயன் அறிந்து கொண்டான்.தம்பியிடம் இது பற்றி சொன்னபோது அவன் இங்கேயே படுத்துக் கொள்வோம் என்று படுத்து விட்டான்.நிலவு வெளிச்சத்தில் சஞ்சயன் தண்ணீர் தேடிப் புறப்பட்டான்.அருகே ஒரு சுனை தெரிந்தது. அதை நெருங்கிய போது அருகே ஒரு முதியவர் முள் செடி மீது படுத்திருந்தார்.
அவர்" தம்பி தயவு செய்து என்னைத் தூக்கி அந்தப் பக்கமாகப் படுக்கவை. உனக்குப் புண்ணியமாய்ப் போகும்" என்றபோது சஞ்சயன் ஐயோ பாவம் என்றபடி அவரைத்தூக்க அவர் திடீரென்று மறைந்தார். அங்கே ஒரு கந்தர்வன் தோன்றினார்.
"சஞ்சயா, சாபத்தால் பல ஆண்டுகளாக இந்தக் காட்டில் தவித்தபடி கிடந்தேன்.ஒரு பௌர்ணமி நாளில் நல்ல மனம் படைத்த அரசகுமாரன் உன்னைதொட்டால்  நீ உன் சாபம் நீங்கப் பெறுவாய் என்று முனிவர் கூறினார். இன்று பௌர்ணமி. யாரேனும் வரமாட்டார்களா எனக் காத்துக் கிடந்தேன்.நீ வந்தாய். உன்னால் என் சாபம் நீங்கப் பெற்றேன்.
இதோ இந்தக் கண்ணாடியைப் பெற்றுக்கொள். நீ பார்க்கவிரும்பும் செய்தியை இது உனக்குக் காட்டும்."என்று கூறி ஒரு சிறு கண்ணாடியைக் கொடுத்தார்.
நன்றி சொல்லிய சஞ்சயன் வணங்கி அதைப் பெற்றுக் கொண்டான். கந்தர்வன் மறைந்தபின் சஞ்சயன் நீரை குடுவையில் நிரப்பிக் கொண்டு தம்பி இருக்கும் இடத்துக்கு வந்து படுத்துக் கொண்டான்.
மறுநாள் சூரியன் உதிக்கும் முன் இருவரும் எழுந்து புறப்பட்டனர்.நேரம்  ஆக ஆக இருவருக்கும் நல்ல பசி எடுத்தது. எங்காவது மனிதரோ வீடோ தென்படாதா எனத் தேடினர்.வெகு தொலைவில் ஏதோ புகை மூட்டம் தெரியவே அந்த இடத்தை நோக்கி இருவரும் வேகமாகத் தங்கள் குதிரையைச் செலுத்தினர்.






ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

புதன், 26 அக்டோபர், 2011

நல்வாழ்த்து

பாட்டி சொல்லும் கதைகளைப் படித்து ரசிப்பவர்களுக்கும் படித்ததை விமர்சிக்கிறவர்களுக்கும் மற்றுமுள்ள இனிய சகோதர சகோதரியருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
அன்புடன், 
ருக்மணி சேஷசாயி


--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

சனி, 15 அக்டோபர், 2011

75- கணக்கு நேரான கதை


ஒரு முறை தெனாலிராமன் அரசவைக்குள் செல்ல முயன்றான்.அப்போது காவலர் அவனை வழி மறித்தனர்.
"ஏன் என்னை வழி மறிக்கிறீர்கள்?" என்று கேட்டபோது," எங்களைக் கவனித்துவிட்டுச் செல்" என்றனர்  காவலர்.அப்போது ராமன் புரிந்து கொண்டான்.அவர்கள் கையூட்டுக் கேட்கின்றனர் என்பதை.அவர்களுக்கு அவர்கள் வழியிலேயே சென்று அறிவுறுத்தவேண்டும் என முடிவு செய்து கொண்டான்.
"ஐயா, நான் ஒரு புலவன் அரசரிடம் பாடிக் காட்டிப் பரிசில் பெற்றுப் போகவே வந்தேன்.உங்கள் விருப்பப் படியே அரசர் கொடுக்கும் பரிசிலை நான் அப்படியே உங்களிடம் தந்து விடுகிறேன். நீங்கள் பார்த்துக் கொடுப்பதை நான்பெற்றுச் செல்கிறேன்." என குழைந்து பேசினான்.
காவலரும் அவனை எச்சரித்து உள்ளே அனுப்பினர். 
அவைக்குள் நுழைந்த ராமன் மக்களுடன் கலந்து அமர்ந்து கொண்டான்.அந்த அவைக்கு பல வழக்குகள் வந்தன. அவற்றுக்கெல்லாம் அப்பாஜி யின் ஆலோசனையின் படி மன்னர் தீர்ப்பு வழங்கிக் கொண்டிருந்தார்.அப்போது மூன்று சகோதரர்கள் வந்து ராயரை வணங்கி நின்றனர்.
அவர்களின் வழக்கு என்ன என்று மன்னர் கேட்டார். வந்த மூவரில் மூத்தவன் கூறினான்.
"மகாராஜா, எங்கள் தந்தையார் ஒரு யானைப் பாகன். அவரிடம் இருந்த சொத்துக்கள் மொத்தம் பதினேழு யானைகள்தான்.அவற்றை எங்களுக்குப் பாகம் பிரித்து எழுதி வைத்துள்ளார்."
"அப்புறமென்ன? அவரது சொல்படி பாகத்தைப் பிரித்துக் கொள்ள வேண்டியதுதானே? அதிலென்ன சிக்கல்?"
"அதில்தான் சிக்கல் மகாராஜா,"
அமைதியாக நின்றிருந்த அப்பாஜி கேட்டார்."உங்கள் வழக்கை விவரமாகக் கூறுங்கள்.அப்போதுதான் மன்னர் சரியான தீர்ப்பு வழங்க முடியும்."
இப்போது இரண்டாவது மகன் கூறினான்."பிரபு, எங்கள் தந்தையார் மூத்தவனுக்கு சரிபாதி யானையைத் தரச் சொல்லியுள்ளார்.பதினேழில் பாதி எட்டரை அல்லவா?எப்படிக் கொடுப்பது? முதலாவதுதான் சிக்கல் என்றால் அடுத்தது அதற்குமேல் இருக்கிறது."
"அதையும் சொல்லிவிடப்பா."என்றார் அப்பாஜி.
இரண்டாவது மகனான எனக்கு மீதியில் மூன்றில் ஒரு பங்கு.எட்டரையில் மூன்றில் ஒரு பங்கு எப்படிக் கணக்கிடுவது?"
"மூன்றாமவனுக்கு?"என்று  கேட்ட ராயரிடம் "மீதியில் மூன்றில் ஒரு பங்கு என்று எழுதிவிட்டு இறந்துவிட்டார். இந்த உயிலின் படி தாங்கள்தான் எங்களின் பாகத்தைச் சரியாகப் பிரித்துத் தரவேண்டும்."என்று வேண்டுகோள் வைத்தான் மூன்றாவது மகன்.
அப்பாஜியும் கிருஷ்ண தேவராயரும் சிந்தனை வசப்பட்டனர்.எவ்வளவு யோசித்தும் கணக்கைத் தீர்க்கும் வழி தோன்றவில்லை.ஆனால் இதில் ஏதோ ரகசியம் இருக்கும் என்று மட்டும் மன்னருக்குத் தெரிந்தது. ஆனால் என்னவென்று புரியவில்லை.
வெகு நேரம் சபை அமைதியாக இருந்தது.மக்களின் கூட்டத்திலிருந்து தெனாலிராமன் எழுந்து நின்றான்.
"மாமன்னர் என்னை மன்னிக்க வேண்டும். தாங்கள் சம்மதித்தால் இந்த வழக்கை நான் தீர்த்து வைக்கிறேன்" என்றான் வணங்கியபடியே.
ராமகிருஷ்ணனைக் கண்டு மன்னர் புன்னகைத்தார். "வா ராமகிருஷ்ணா, உன் தீர்ப்பை நீ சொல்."
ராமன் உடனே ஓடிச் சென்று சபை நடுவே நின்றான்.
"மகாராஜா, இப்போது பதினேழு யானை பொம்மைகளைக் கொண்டு வரச் சொல்லுங்கள்." என்றான்.அதன்படியே பொம்மைகள் ராமனுக்கு முன்னால் வைக்கப் பட்டன.
"எல்லோரும் பாருங்கள்.இப்போது நானும் ஒரு யானையில் வருகிறேன்.எங்கே இன்னொரு யானைபொம்மை கொண்டு வாருங்கள்."
இன்னொரு யானை பொம்மை கொண்டு வரப்பட்டது.
ராயர் கேள்விக்குறியுடன் ராமனைப் பார்த்தார்.ராமன் "மகாராஜா மன்னிக்க வேண்டும்.நீதி சொல்லும் நான் யானையின் மேல் வரக்கூடாதா?"என்று சொல்லவே சிரித்தபடி அனுமதியளித்தார் ராயர்.
இப்போது ராமன் கணக்கை சீராக்கத் தொடங்கினான்."ஐயா,இப்போது மொத்தம் பதினெட்டு யானைகள் உள்ளன அல்லவா? முதல் மகனான உங்களுக்கு எவ்வளவு யானைகள்?"
"இவற்றில் சரி பாதி."
"அப்படியானால் ஒன்பது.சரிதானே?"
"சரிதான் ஐயா."தன்னிடம் கொடுக்கப்பட்ட ஒன்பது யானைகளுடன் அவன் விலகி நின்றான்.."அடுத்த மகன் வாருங்கள்" அடுத்தவன் வந்து நின்றான்.
"உங்களுக்கு எவ்வளவு யானைகள்?"
"மீதியில் மூன்றில் இரண்டு  பங்கு."
"மீதி எவ்வளவு?" 
"ஐயா,மீதி ஒன்பது அதில் மூன்றில் இரண்டு பங்கு ஆறு."
"இதோ உமக்கு ஆறு யானைகள்."கடைசியாக மீதி மூன்று யானை பொம்மைகள் இருந்தன.மூன்றாமவனை அழைத்த ராமன் "உமக்கு எவ்வளவு யானைகள் ?" என்று கேட்டான்.
அவனும் "எனக்கு மீதியில் மூன்றில் இரண்டு பங்கு" எனக கூற அவனுக்கு மீதியிருந்த மூன்று யானைகளில் இரண்டு யானையைக் கொடுத்தான் ராமன். 
"இப்போது மீதி இருப்பது ஒரு யானை. நான் ஏறி வந்த அந்த  யானையின் மீதே நான் ஏறிச் செல்லலாமா மகாராஜா"?என்று கேட்டுவிட்டு பணிவுடன் நின்றான் ராமன்.
உயிலின்படி முதல் மகனுக்கு ஒன்பது யானைகளும் இரண்டாவது மகனுக்கு ஆறு யானைகளும் மூன்றாவது மகனுக்கு  இரண்டு யானைகளும் உரியன   என தீர்ப்புக்கூறினார் மன்னர்.சிறப்பாக பாகப்பிரிவினை செய்த தெனாலிராமனைப் பாராட்டிய ராயர் அவனுக்கு என்ன பரிசு வேண்டும் எனக் கேட்டார்.
தெனாலி ராமனுக்கு உடனே வாயில்காப்போனின் நினைவு வந்தது.
 "மகாராஜா, நான் கேட்கும் பரிசைத் தாங்கள் தட்டாமல் தரவேண்டும்.மறுக்கக்கூடாது."
"மறுக்கமாட்டேன். கேள் ராமகிருஷ்ணா"
"எனக்குப் பரிசாக நூறு கசையடிகள் வேண்டும்.அதையும் இந்தச் சபையிலேயே தரவேண்டும்."
அனைவரும் திகைத்தனர்.ராமனுக்கு என்ன பைத்தியமா?
ஆனால் ராமன் மீண்டும் அதையே கூறவே வேறு வழியில்லாமல் மன்னரும் காவலனிடம் ராமனுக்கு நூறு கசையடிகள் கொடுக்கும்படி ஆணையிட்டார்.அவனும் கசையைத் தடவியபடி வந்து நின்றான்.அப்போது ராமன் "மகாராஜா, எனக்குக் கிடைக்கும் பரிசில் பாதியை ஒருவருக்கும் மீதியை மற்றொருவருக்கும் தருவதாக வாக்களித்துள்ளேன் அவர்களுக்கு இந்தப் பரிசுகளைத் தரவேண்டும்."என்றான்.
 ராயர் புரிந்து கொண்டார். அவர்  கண்கள் சிவந்தன.உடனே அவர்களை அழைத்து வருமாறு கட்டளையிட்டார்.இரண்டு வாயில் காப்போரும் நடுங்கியபடியே வந்து நின்றனர்.
மன்னர் "என் நாட்டிலே லஞ்சமா கேட்டாய்?அரண்மனையில் பணிபுரியும் நீ லஞ்சம் கேட்டதற்காக உன் தலையைக் கொய்தால் என்ன?"
எனக் கேட்டு அவர்களுக்கு ஐம்பது கசையடிகள் கொடுத்துச சிறையிலும் அடைக்கச் சொல்லி ஆணை பிறப்பித்தார்.
பின்னர் ராமகிருஷ்ணனுக்குப்  பெரும்பொருள் பரிசாகக் கொடுத்துப் பாராட்டினார்.
 சரியானபடி தீர்ப்புக் கூறியதுமல்லாமல் லஞ்சம் கேட்டவனுக்கும் அறிவு வரும்படி செய்த தெனாலிராமனைப் பாராட்டியபடி மக்கள்  கலைந்து சென்றனர்.








ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

திங்கள், 3 அக்டோபர், 2011

74- பேராசை பெருநஷ்டம்

பெருமாள் என்பவரும் நாகப்பன் என்பவரும் மிகவும் நண்பர்களாக இருந்தனர். எப்போதும் இருவரும் ஒன்றாகவே எல்லா இடங்களுக்கும் செல்வார்கள். ஒன்றாகவே அமர்ந்து பேசிக்கொண்டு இருப்பார்கள்.அவ்வூரில் அனைவருக்கும் இவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்பது தெரியும்.
இருவருக்கும் திருமணம் முடிந்து பலகாலம் ஆகியும் குழந்தைச் செல்வம் இல்லை.நாகப்பன் எல்லாத தெய்வங்களையும்  வேண்டிக்கொண்டார். சில ஆண்டுகளில் நாகப்பனுக்கு ஒரு மகன் பிறந்தான்.
மகன் பிறந்த மகிழ்ச்சியைத தன் சக்திக்கும் மீறி ஒரு விழாவாகக் கொண்டாடினார் நாகப்பன்.பின்னர் தன் மகனுக்காக மிகவும் பாடுபட்டு உழைத்து பணம் சேர்த்தார் நாகப்பன்.அவரது கடும் உழைப்போடு சரியாக சாப்பிடாமலும் தூங்காமலும் எப்போதும் செல்வம் சேர்ப்பதிலேயே கவனமாக இருந்ததால் விரைவிலேயே நோய்வாய்ப்பட்டார் நாகப்பன்.
நாகப்பனின் மகன் பிறந்த சில ஆண்டுகளிலேயே அவரது மனைவியும் இறந்து விட்டதால் தன் மகனை மிகவும் கவனமாக வளர்க்க வேண்டி வந்தது. இப்படி எல்லாப் பொறுப்புகளும் சேர்ந்ததால் நாகப்பன் விரைவிலேயே கடும் நோய்க்கு ஆளானார்.தன் மகனுக்கு  இப்போதுதான் பத்து வயதாகிறது. தனக்குப் பின் தன் மகனைப பார்த்துக் கொள்ள சரியான ஆள் தன் உயிர்நண்பன் பெருமாள்தான் என முடிவு செய்தார்.
நண்பனை அழைத்தார்.
"பெருமாள், நான் இனி வெகு நாட்கள் வாழ மாட்டேன். எனக்கு ஏதாவது ஆகிவிட்டால் நீதான் என் மகனைப பார்த்துக் கொள்ள வேண்டும்."
"என் உயிர் நண்பன் நீ. உன்னைப் பிரிந்து நான் எப்படி உயிர் வாழ்வேன்."
"அப்படிச் சொல்லாதே. நான் விட்டுச் செல்லும் கடமைகளை நிறைவேற்றுவதுதான் இந்த உன் உயிர் நண்பனுக்கு நீ செய்யும் கடமையும் கைம்மாறும் ஆகும். எனவே என் மகனை உன் மகனாகப் பார்த்துக் கொள்."எனக் கண்ணீருடன் கேட்டுக் கொண்டு பத்து வயதான தன் மகனின் கரங்களைப் பிடித்துத் தன் நண்பன் பெருமாளின் கரங்களில் வைத்தார் நாகப்பன்.
"மகனே, குமரா, இனி இவர்தான் உனக்கு தாயும் தந்தையும்.இவரது சொல் கேட்டு நடந்து பெரியவனாகி என்னைப் போல் நல்லவன் என்று பெயர் பெறவேண்டும்."
தந்தையின் சொல்லைக் கேட்ட குமரன் "அப்படியே செய்கிறேன் அப்பா."என்றான் அழுதுகொண்டே.
நாகப்பன் தன் நண்பனைப் பார்த்து "பெருமாள், என்னுடைய இத்தனை நாள் சேமிப்பாக பத்து லட்சம் ரூபாய்களை உன்னிடம் தருகிறேன் என் மகனுக்குத் தக்கவயது வந்ததும் நீவிரும்பும் பணத்தை அவனுக்குக் கொடுத்து அவனையும் வாழ வைக்கவேண்டுமென்று உன்னை வேண்டிக் கொள்கிறேன்."என்று தன் கரங்களைக் கூப்பிக் கேட்டுக் கொண்டார் நாகப்பன்.
"இது என் கடமை நாகப்பா.நீ கவலையே படாதே.உன் மகன் நல்லபடியாக வாழ்வான்."என்ற பெருமாளின் சொல்லைக் கேட்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டார் நாகப்பன்.
சிலநாட்களில் நாகப்பன் இறந்துவிட குமாரனைத் தன்னுடன் அழைத்துச் சென்று வளர்த்து வ்ந்தார் பெருமாள். ஆண்டுகள் கடந்தன.
இப்போது குமரனுக்கு இருபது வயதாகிவிட்டது. அவனுக்குத் தன் தந்தையார் கூறியது நினைவுக்கு வந்தது. தந்தை விட்டுச் சென்ற பணியத் தான் தொடர்ந்து செய்ய விரும்பினான்.அத்துடன் இனியும் பெருமாளுக்குச் சுமையாக இருக்க விரும்பவில்லை.எனவே தனியே வாழ்வது என்று முடிவு செய்தான். 
ஒருநாள் பெருமாளிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்தான்.பெருமாளும் மகிழ்ச்சியுடன் "அதற்கென்ன, அப்படியே செய்.உன் விருப்பமே என் விருப்பம்."என்று மகிழ்ச்சியுடன் விடை கொடுத்தார்.அத்துடன் நாகப்பன் தன்னிடம் கொடுத்த பணத்தில் ஒரு லட்சம் ரூபாயையும் அவனிடம் கொடுத்தார்.அதைக் கண்டு திகைத்தான் குமரன்.
"ஐயா, என் தந்தையார் தங்களிடம் பத்துலட்சம் கொடுத்துள்ளார். தாங்கள் ஒரு லட்சம் திருப்பித் தருகிறீர்களே?இத்தனை ஆண்டுகள் நான் உழைத்ததற்கும் தாங்கள் எந்தப் பணமும் தரவில்லை. இன்றோ என் பணத்தையே தராமல் இப்படிச் செய்கிறீர்களே! தங்கள் நண்பருக்கு நீங்கள் தரும் மரியாதை இதுதானா?"
பெருமாள் கோபத்துடன் பேசினார்."இதோ பார் உன் தந்தையார் என்னிடம் கூறும்போது நான் விரும்பும் பணத்தை உனக்குத் தரச் சொன்னாரல்லவா?அதன்படிதான் செய்துள்ளேன்.போய்வா.இதை வைத்துப் பிழைத்துக் கொள்."
வாலிபனான குமரன் மனம் அழுதது.பெருமாளின் பேராசையைக் கண்டு மனம் வருந்தினான்.ஆனால் தன் தந்தை தனக்காகக் கஷ்டப்பட்டுச் சேர்த்த பணத்தை விட்டுவிடவும் மனம் இல்லை.என்ன செய்வது என்று சிந்தித்தான்.
அந்த ஊரில் மரியாதை ராமன் என்று ஒரு திறமைசாலி அறிவாளி இருந்தார். அவர் பல வழக்குகளை நல்ல விதமாகத் தீர்த்துவைப்பதாகக்  கேள்விப்பட்டான்.அவரது துணையை நாடுவது என்று முடிவு செய்தான்.
நேராக மரியாதைராமன் இருந்த இல்லத்தை நோக்கிச் சென்றான்.அவரிடம் தன் வழக்கை எடுத்துச் சொன்னான்.மரியாதைராமன் வழக்கைக் கூர்ந்து கேட்டுக் கொண்டார்.மறுநாள் பெருமாளையும் தன் இல்லத்திற்கு வரச் சொன்னார்.இப்போது பெருமாளும் குமரனும் மரியாதைராமன் முன் நின்றனர்.
மரியாதைராமன் பெருமாளிடம் விசாரித்தார்.பெருமாள்"ஐயா, நாகப்பன் இறக்கும்போது என்னிடம் பத்து லட்சம் ரூபாய்கள் கொடுத்தது உண்மைதான்.குமரனைப் பாதுகாக்கும் பொறுப்பையும் என்னிடம் கொடுத்ததும் உண்மைதான்.நாகப்பன்  சாகும்போது நான் விரும்பும் பணத்தைத் தன் மகனுக்குக் கொடுக்கும்படி கூறிவிட்டுச் சென்றான்.அதனால் நான் ஒரு லட்சம் ரூபாயை குமரனுக்குக் கொடுத்தேன்.இது எப்படித் தவறாகும் ஐயா?" என்றார்.
மரியாதைராமன் சிரித்தார்."சரிதான்.நாகப்பன் கூறியது போல்தான் செய்திருக்கிறீர்கள்.ஆனால் நீ விரும்பும் பணத்தைத் தருமாறு கூறினாரல்லவா?அதில்தான் ஒரு சந்தேகம்.நீர் விரும்பும் பணத்தைத்தான் கொடுத்தீரா?"
பெருமாள் இடைமறித்துக் கூறினார்."அதிலென்ன சந்தேகம்?நான் விரும்பிய பணத்தைத்தான் கொடுத்திருக்கிறேன்."
"இல்லையே நீர் விரும்பிய பணத்தைத் தரவில்லையே. உமது நண்பர் என்ன சொல்லிச் சென்றார்?நீர் தர விரும்பிய பணம் என்று சொல்லவில்லையே. நீர் விரும்பும் பணம் என்றுதானே சொன்னார். அப்படியானால் நீர் தர விரும்பியது ஒரு லட்சம். நீர் விரும்பியது ஒன்பது லட்சம் அல்லவா?"
பெருமாள் திடுக்கிட்டார்."ஐயா, "தடுமாறினார்.
"உமது நண்பரின் வார்த்தையின்படி நீர் விரும்பும் பணம் ஒன்பது லட்சம் அல்லவா?அந்த ஒன்பது லட்சத்தை குமரனிடம் கொடுத்து விடவேண்டும்.அத்துடன் பத்து ஆண்டுகளாக அவனிடம் வேலை வாங்கிக் கொண்டு ஊதியம் ஏதும் தராததால் அவனுக்கு பத்தாண்டு ஊதியமாக ஒரு லட்சத்தையும் தந்து விட வேண்டும்.இதுவே என் தீர்ப்பு."
தனது பேராசையின் காரணமாக தனக்குக் கிடைக்கவேண்டிய ஒரு லட்சமும் கையை விட்டுப் போனதற்காக மனம் வருந்திய படியே சென்றார் பெருமாள்..
ஊர் மக்களும் பேராசை பெருநஷ்டமாகியது.பேராசைப்பட்ட பெருமாளுக்கு இது நல்ல தண்டனைதான் என்று பேசிக்கொண்டே கலைந்து சென்றனர்.








ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com