வெள்ளி, 25 டிசம்பர், 2020

kal thandha maatram.

                                       கல் தந்த மாற்றம்.

 ஒரு சிறு கிராமத்தில் எட்டாம் வரையே உள்ள பள்ளிக்கூடம் இருந்தது அந்த கிராமத்துச் சிறுவர் சிறுமியர் அந்தப் பள்ளியில் தான் படித்து வந்தனர்.சோமுவும் சுதாகரும் அந்தப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் படிக்கும் சிறுவர்கள். சோமு சற்று துடுக்குக்காரன். பிறர் துன்பப பட்டால் பார்த்துச் சிரிக்கும் பண்புடையவன்.

     ஆனால் சுதாகரோ அவனுக்கு நேர்மாறானவன். பிறருக்கு உதவும் பண்புள்ளவன்.சோமுவின் குணத்தை அறிந்த பிற மாணவர்கள் அவனிடம் அதிகமாகப் பழகுவதில்லை.ஆனால் சோமுவை எப்படியும் நல்லவனாக மாற்றவேண்டும் என்பதற்காகவே அவனிடம் நட்புப் பாராட்டினான் சுதாகர்.சுதாகரிடம் நட்புடன் பழகவேண்டும் என்று நினைப்பவர்கள் கூட சோமுவின் அருகாமையில் அவனிடம் பேசவே பயப்பட்டார்கள்.

   அன்று நண்பர்கள் இருவரும் பள்ளி விட்டவுடன் பேசியவாறே நடந்து வந்துகொண்டிருந்தனர்.அப்போது சுதாகர் சோமுவின் கையைப் பிடித்து நிறுத்தினான்.அவன் ஏன் என்று கேட்குமுன் ஓடிப்போய் எதிரே கிடந்த பெரிய கல் ஒன்றைத் தூக்கி ஓரமாக வைத்தான்.அதைப் பார்த்த சோமு சிரித்தான். "ஏண்டா சுதா அதுபாட்டுக்கு வழியில கிடந்துட்டுப் போகுது அதைத் தூக்கி ஓரமா போடாட்டா என்னடா?"

"அப்படியெல்லாம் இருக்கக்கூடாது சோமு.யாராவது கவனமில்லாமே அதிலே இடிச்சுக்கிட்டா பாவமில்லே.அதனாலேதான் தூக்கிப் போட்டேன், "

"நீயொரு பைத்தியக்காரன்டா வேலெமெனக்கிட்டு பெரிய உதவி செய்யிறாராம்".என்று சொல்லிச் சிரித்தான்.

"சரி சரி வா. உனக்கே ஒருநாள் தெரியும்."என்றவாறு சோமுவின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு ஓடினான் சுதாகர்.

            நாட்கள் கடந்தன.ஒருநாள் திடீரென்று சோமுவின் தாத்தா பம்பாயிலிருந்து வந்திருந்தார்.வந்தவர் சோமுவுக்குப் பரிசாக சைக்கிள் ஒன்றைக் கொண்டு வந்திருந்தார்.சோமுவுக்கு ஏக சந்தோஷம் நாள் முழுவதும் அதிலேயே சுற்றிக் கொண்டிருந்தான்.சுதாகரைக் கூட பெருமையாகப் பார்த்துக் கொண்டே சைக்கிளில் பறந்து சென்றான்.மற்ற நண்பர்கள் சுதாகரிடம் நெருங்கி "என்னடா சுதா, உன்னைக் கூட கவனிக்காமல் போகிறானே.நீதான் அவனது நெருங்கிய நண்பன்."என்றபோது சுதாகர் சிரித்துக் கொண்டே அவர்களுடன்  வேறு ஏதோ பேசிக்கொண்டு சென்றான்.

               இரவு எட்டுமணி இருக்கும். சுதாகர் படித்துக் கொண்டிருந்தான்.வாசலில் சைக்கில்மணி சத்தம் கேட்டது.சோமுதான் சைக்கிளில் போகிறான் தன வீட்டுமுன் வேண்டுமென்றே மணி அடிக்கிறான் எனப் புரிந்து கொண்டான்.மெல்லப் புன்னகைத்து விட்டுப் பாடத்தில் கவனம் செலுத்தினான்.

           சற்று நேரத்தில் தெருவில் ஒரே அமர்க்களம் ."ஓடு கார் கொண்டு வா, "இல்லை ஆம்புலன்சுக்கு போன் பண்ணு ." "தண்ணி கொண்டாப்பா," "காத்து விடுங்க"என்று பல குரல்கள்.ஓடினான் சுதாகர்.கூட்டத்தின் நடுவே அடிபட்டுக் கிடந்தான் சோமு.அவனை யாரும் நெருங்கமுடியவில்லை.அவன் அருகே சைக்கிள் உருத்  தெரியாமல் உடைந்து கிடந்தது.

ஒருவாரம் கடந்தது.சுதாகர் மெதுவாக சோமுவின் வீட்டுக்குச் சென்றான்.அவனைப் பார்த்து புன்னகையுடன் வரவேற்றான் சோமு

திடீரென்று சுதாகரின் கையயைப் பற்றிக்கொண்டு கண்களில் நீர் மல்கக்  கூறினான்.. "சுதா,ஒருவாரமா கைதி மாதிரி இருக்கேண்டா.ஏண்டா யாருமே என்னைப்  பார்க்க வரலே?"

"அது இருக்கட்டும் உனக்கு எப்படி அடிபட்டது?நீதான் சைக்கிள்  நல்லா ப்ராக்டிஸ் பண்ணியிருந்தாயே?"

"எல்லாம் உன் பேச்சைக் கேட்காததால் வந்த வினை."

"என்னடா சொல்றே?"

"ஆமாண்டா.எல்லார்கிட்டயும் சண்டை போடாதே. அன்பா இருஅப்படின்னு நீ சொல்லும்போதெல்லாம் நான் அலட்சியம் செய்தேன் அதான் என் மேலே யாருக்கும் பிரியமில்லாம போச்சு.நீ கூட என்னை  பார்க்க வரலே" என்றான் தேம்பியபடியே.

"அதெல்லாம் இல்லேடா.நீ ஆஸ்பத்திரியிலிருந்து வந்திருக்கே.உனக்கு ஒய்வு தேவை அதனாலதான் நானும் மற்ற நண்பர்களும் வரலே.உன்னைப்பற்றி 

நா ங்கள் பேசிக்கொண்டுதான் இருந்தோம். அதெல்லாம் சரி உனக்கு எப்படி அடிபட்டது?"

தலையைக் குனிந்தவாறே சொன்னான் சோமு."நான் உன் வீட்டு முன்னாலே பெல் அடிச்சுட்டு வேகமா சைக்கிளில் போய் க் கொண்டிருக்கும் பொது வழியில் ஒரு பெரிய கல் கிடந்தது. அதை எடுத்து  போடணும்னு எனக்குத் தோணி னாலும் என் பின்னால் வரும் கார் அதிலே ஏறி இறங்கும் குலுங்கும். உள்ளே இருப்பவங்க எப்படி கூச்சல் போடுவாங்கன்னு வேடிக்கை பார்க்க நினைச்சேன். அதனால சைக்கிளில் ஒரு சுற்று சுற்றிவிட்டு அதே தெருவுக்கு நான் வந்தேன் நல்லா இருட்டிடுச்சு அதே சமயம் கரண்டும் கட்டாயிடுச்சு..நான் காரைக்காணமேன்னு நினைப்பிலேயே வந்தேன்.திடீர்னு எதிரேஎதன் மேலோ  என் சைக்கிள் டமார்னு  முட்டி மோதி உருண்டது. அவ்வளவு வேகத்திலே நான் ஓட்டிவந்தேன் கண்ணைத் திறக்கும்போது கைகால் தலையிலே கட்டுப் போட்டு ஆஸ்பத்திரியில் கிடந்தேன்."

"எதிலே உன் சைக்கிள் மோதிச்சுன்னு பார்த்தியா?"

"அதாண்டா விதி.நான் தூக்கி ஓரமாய் போடாத அந்தக் கல் மேலயே  ஏறி விழுந்தேன் அதோட அருகிலேயே நின்னுக்கிட்டிருந்த காரின் பின்புறம் மோதி என் சைக்கிளும் ஒடஞ்சுது என் தலை கை  காலும் உடைஞ்சுது."

"இனிமேலாவது தெரிஞ்சுக்கோ மற்றவங்களுக்குத் துன்பம் செய்ய நினைச்சாலே கூட அந்தத் துன்பம் நமக்கே வரும்னு."

"அதுமட்டுமில்லே சுதா, மற்றவர்களிடம் அன்பாயிருந்தால்தான் நம்மிடமும் மற்றவர்கள் அன்பாயிருப்பாங்க.இந்த ஒருவாரத்தில் தனிமையாயிருக்கும்போது  நண்பர்கள் எவ்வளவு தேவைன்னு  நான் புரிஞ்சுக்கிட்டேன். இனி உன்னைப்போல எல்லாரிடமும் அன்பாயிருப்பேன்"

எல்லாம் கல் தந்த  பாடம்டா சுதா."

ரொம்ப சந்தோஷமாயிருக்கு சோமு.  உன் குணம் மாறியதைச் சொல்றேன்.

என்று சொல்லிப் புன்னகைத்தான். நண்பர்கள் இருவரும் கைகோர்த்து மனம் விட்டுச் சிரித்தனர்.

செவ்வாய், 17 நவம்பர், 2020

கண்ணன் பாடல்  

பல்லவி 

கண்ணன் என்னும் போதிலே என்  

எண்ணம் முழுதும் இனிக்குதே.   (கண்ணன்)

அனுபல்லவி 

கண்ணன் குழலோசையில் -புவி 

வண்ண மயமாய்த் தோணுதே      (கண்ணன்)

சரணம் -1

வெண்ணை பால் தயிரிலே அவன் 

கள்ள கதைகள் தெரியுதே 

எள்ளத்தனை போதிலும் -என் 

உள்ளம் மறந்து போகுமோ               (கண்ணன்)

சரணம் -2 

அன்னை தாய் யசோதையின் 

அன்பில் மயங்கி கிடந்தவன் 

ஆயர்பாடி தன்னையே  தன் 

அகத்துள் வைத்துக் காத்த அந்த (கண்ணன் )

                ---------------------------------

சனி, 10 அக்டோபர், 2020

                               ஐயப்பன்  பாடல்.

பல்லவி 

ஐயப்பா சாமி ஐயப்பா -ஐயப்பா 

சரணம் ஐயப்பா 

அனுபல்லவி 

அய்யப்பா உனையென்றும் மறவோம் அய்யா 

மெய்யப்பா நீயே துணை என்றும் அய்யா.--(ஐயப்பா )

சரணம்-1

பாதங்கள் நொந்தாலும் உன் பாதம் பணிவோம் 

பலகாதம் நடந்தே  உன்பதம் காண வருவோம் 

கால் கைகள் துவண்டாலும் உனைப்பற்றி நடப்போம் 

துணைநீயே எனக் கொண்டோம் துணையாக வருவாய்.-(அய்யப்ப)

சரணம்-2

கருமலை ஏறிட துணையாக வருவாய் 

அழுதாவில் மூழ்கிட இணையாக இருப்பாய் 

பதினெட்டுப் படியேறி உனைக்காண  அருள்வாய் 

பதியே   அருள்நிதியே  இனி எனக்கேது குறையே -(ஐயப்பா )

------------------------------------------------------------------------------------------------------------------


புதன், 7 அக்டோபர், 2020

சிறுவர்க்குச் சிறுகதைகள் 1 

                                  வெற்றி தரும் அறிவு  

ஒரு ஊரில் ஒரு சிறுவன் வாழ்ந்து வந்தான்.அவனுக்கு இரண்டு கால்களும் நடக்க முடியாதபடி சிறுத்துப் போயிருந்தன.அவன் பெற்றோர்  இருவருக்கும் வயதானதாலும் வறுமை காரணமாகவும் கண்கள் சரியாகத்  தெரிவதில்லை. மூவரும் ஒரு குடிசையில் வாழ்ந்து வந்தனர்.ஆனால் நடக்க முடியாத தங்கள் மகனுக்கு நடராஜா என்று பெயர் வைத்து அன்போடு அழைத்து வந்தனர்.

      தினமும் தங்கள் மகனை ஒரு கூடையில் அமரவைத்து சுமந்து  கொண்டு கோயில் வாசலுக்கு வருவார்கள் அங்கு அமர்ந்து கொள்வார்கள்.கோயிலுக்கு வருபவர்கள் தரும் பொருளையும் கோயிலில் தரும் பிரசாதத்தையும் வைத்துக் கொண்டு காலம் கழித்தார்கள்.

       தினமும் கோயில் வாசலில் அமர்ந்து கொண்டு நடராஜன் கோபுரத்தையே பார்த்துக் கொண்டு இறைவனை தியானித்தபடி இருப்பான்.கிட்டத்தட்ட தவம் என்றே சொல்லலாம்.இப்படியே சில ஆண்டுகள் ஓடிவிட்டன.

இப்போது சிறுவன் நடராஜன்  வாலிபனானான்.அவனது பெற்றோருக்கு கண்கள் சுத்தமாகக் குருடாகி விட்டன.ஆனாலும் பசிக்கிறதே என்ன செய்வது.குடிசை வாசலில் அமர்ந்து கொண்டு வருபவரிடம் கையேந்தியபடி அமர்வார்கள். இரக்க குணமும் தயாள சிந்தையும் கொண்டவர்கள் போடும் சிறிய பொருளை வைத்துக் கொண்டு அரைவயிற்றுக் கஞ்சி குடித்து வாழ்ந்து வந்தனர்.

           ஒருநாள்.அன்று பௌர்ணமி. முழுநிலவு பளீரென்று ஒளிவீசிக் கொண்டிருந்தது.இரவு வெகு நேரம் ஆகியிருந்தது.குடிசை வாயிலில் அமர்ந்து கொண்டிருந்த நடராஜன் அந்த நிலாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.அவன் மனம் கற்பனை செய்தது.

பெரிய மாளிகையின் மேல்மாடம்.நடராஜன் கால்களை வீசி நடை போட்டுக் கொண்டிருந்தான்.அருகே அவன் மனைவி தன மகனுக்கு தங்கத்  தட்டில் பால்சாதம் ஊட்டிக் கொண்டிருக்கிறாள். நடராஜனின் பெற்றோர் குழந்தைக்கு நிலவைக் காட்டி மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.அந்த இன்பகரமான சூழலை நினைத்தபடி அங்கேயே உறங்கி விட்டான்.

          நடுஇரவு.அவன் இத்தனை நாட்களாக கோபுரத்தைப் பார்த்து செய்த தவத்துக்குப் பலன் தர இறைவன் திருவுளம் கொண்டார்.நடராஜனின் கனவில் தோன்றி பக்தா, உன் பக்திக்கு மிக்க மகிழ்ச்சி.உனக்கு வரமளிக்கவே வந்தோம்.வேண்டும் வரம் கேள்."என்றபோது உடல் நடுங்க வாய் குழற கைகூப்பி நின்றான் நடராஜன்.

          "தயங்காதே, நீ வேண்டும் வரம் கேள்."

நடராஜன்"இறைவா ,முதலில் என் "       என்று இழுத்தான்.

குறுக்கிட்ட இறைவன்,"அப்பனே, நிறுத்து முதல் இரண்டு என்பதெல்லாம் கிடையாது.ஒரே வரம்தான் தரமுடியும் எதுவேண்டுமோ கேள்."என்றார்.

நடராஜன் சற்றே யோசித்தான்."ஸ்வாமி, மேல்மாடத்தில் என்மனைவி என் மகனுக்குத் தங்கத்  தட்டில் சோறு ஊட்டும்போது அதை  என் பெற்றோர் மகிழ்ச்சியுடன் பார்ப்பதைஅங்கே  நடைபயிலும் நான் கண்டு மகிழவேண்டும்."

இந்த வரத்தின் மூலம் செல்வம் சமூக அந்தஸ்து பெற்றோருக்குப் பார்வை தனக்கு கால்கள் என்ற எல்லா வரங்களையும் ஒரே வரத்தில் கேட்டு விட்டான் நடராஜன்.ஒரு நிமிடம் இறைவன் திகைத்தார் பின்னர் கடகடவென சிரித்தார்."அப்பனே உன்திறமையை சோதித்தேன் நீ வென்றுவிட்டாய்.நீ நினைத்தபடி வரம் தந்தோம்." என்று கூறிய இறைவன் மறைந்தார்.

சமயோஜித அறிவு இருந்தால் யாரையும் வென்று விடலாம்.என்ற உண்மையை தன கனவு மூலம் அறிந்து கொண்டான் நடராஜன். இனி அவன் தன்  இயலாமையை மறந்து  விட்டு அறிவு பூர்வமாக சிந்தித்து வாழ்வில் முன்னேறும் வழியைத் தேடுவான் அல்லவா?அதில் அவன் வெற்றியும் பெறுவான் என்று நம்புவோம்.








ஞாயிறு, 20 செப்டம்பர், 2020

murugan paadal

                      ஸ்ரீ முருகன் பாடல்  

பல்லவி 

மலைமீது விளையாடும் மால்மருகா புள்ளி 

மயில் மீது விரைந்தோடி வா முருகா -(மலை )

அனுபல்லவி 

எழில் தெய்வ மகளுடனும் குறவள்ளி துணையுடனும் 

எளியேன் என் குறைதீர்க்க வாமுருகா -(மலை)

சரணம் -1

குன்றேறி நின்ற எங்கள் திருக்குமரா -பறங்

குன்றத்தில் காக்கின்ற அருட்குமரா 

பழமுதிர்சோலையின் மணவாளா -சுவாமி 

மலைதன்னில் அருள்கின்ற தவசீலா -(மலை)

சரணம்-2

கனி தந்து அவ்வைக்கு அருள்செய்தாய் -மாங்

கனிக்காக உலகத்தை வலம் வந்தாய் 

கன்னல்  தமிழாக உருவெடுத்தாய் -எங்கள் 

கந்தா நீ அழகன் எனப்பெயர் கொண்டாய் (மலை)

                                -----------------------------


வியாழன், 20 ஆகஸ்ட், 2020

chuttikadhai.blogspot.com

 மாணவச் செல்வன் 

Inbox
x

Rukmani Seshasayee rukmani68sayee@gmail.com

18 Aug 2020, 13:24 (2 days ago)
to rukmani68sayee.avva

அனைவரும் ஒன்றும் புரியாமல் ஆசிரியர் பின் சென்றனர்.அனைவரையும் நிற்கச் சொன்ன துரோணர் துரியோதனனை மட்டும் அழைத்துக் கொண்டு மரத்தின் மறுபக்கம் சென்றார்.அங்கு தரையில் ஒரு மந்திரத்தை எழுதிக் காட்டி படிக்கச் சொன்னார்.துரியோதனனும் அந்த மந்திரத்தைப் படித்துவிட்டு குருவைப் பார்த்தான்."இப்போது ஒரு அம்பை இந்த மரத்தின் உச்சியைப் பார்த்து விடு" என்று கட்டளையிட்டார்.
துரியோதனனும் ஒரு அம்பை எடுத்து மரத்தை நோக்கி விட்டான்.என்ன ஆச்சரியம் அந்த அம்பு எங்கு மறைந்ததோ ஆனால் மரத்தின் ஒவ்வொரு இலையிலேயும் ஓட்டை விழுந்திருந்தது.
"துரியோதன, இந்த அஸ்திரத்தை நீ படைக்களத்தில் பிரயோகித்தால்  ஆயிரக்கணக்கான வீரர்களை இது  பலிவாங்கும் "
துரியோதனனுக்கு ஒரே மகிழ்ச்சி.அர்ச்சுனனுக்குத் தெரியாத ஒரு அஸ்திர பிரயோகம் தனக்கு மட்டும் தெரிந்து விட்டது என அறிந்து மிக்க மகிழ்ச்சி கொண்டான். மிக்க நன்றி குருவே என்று அவர் கால்களில் பணிந்தான்.
                  அனைவரையும் அழைத்துக் கொண்டு ஆற்றுக்குப் போனார் துரோணர்..சற்று நேரத்தில் அங்கு வந்த அர்ச்சுனன் அவரிடம் மேலாடையை பணிவுடன் அளித்தான்.அனைவரும் நீராடிப் புறப்பட்டனர்.
வரும் வழியில் அதே ஆலமரத்தடிக்கு வந்தனர். துரோணர் சற்று நின்று அந்த மரத்தை நிமிர்ந்து பார்த்தார்.துரியோதனனும் பார்த்தான்.என்ன ஆச்சரியம் ஒரே ஓட்டை இருந்த இலைகளில் இப்போது இரண்டாவது ஓட்டை விழுந்திருந்தது.இது எப்படி சாத்தியமாயிற்று.குரு  தனக்கு மட்டும்தானே இந்த அஸ்த்திரத்தைக்  கூறினார். சற்றே சந்தேகத்தோடு அவரைப் பார்த்தான் துரியோதனன்.
அப்போது துரோணர் அர்ச்சுனனைப் பார்த்தார்.அவரை வணங்கிய அர்ச்சுனன்,"ஸ்வாமி தங்களின் வஸ்த்திரத்தை எடுத்துக் கொண்டு நான் வரும்போது இந்த ஆலமரத்தடியில் பல காலடித் தடங்களைப்பார்த்தேன் அதோடு இரண்டு பேரின் காலடிகள் மட்டும் தனியே போயிருப்பதைப் பார்த்து அதன் பின் சென்றேன்.அங்கே ஒரு மந்திரம் கீழே எழுதியிருப்பதைப் பார்த்தேன் அதோடு மரத்திலுள்ள ஆயிரக் கணக்கான இலைகளிலும் ஓட்டை விழுந்திருப்பதையும் பார்த்தேன்.
இது ஏதோ அஸ்திரம்தான் என்று புரிந்து கொண்டேன்.அதை நானும் பிரயோகித்துப் பார்த்தேன்."
"அப்படியானால் என் மேலாடையைக் கீழே வைத்துவிடட்டாயா?"
"இல்லை குருவே, இந்த மேலாடையை  ஆகாயத்தில் தூக்கிப் போட்டேன் அது மேலே சென்று திரும்பி கீழே விழுவதற்குள் இந்த அஸ்திரத்தைப் பிரயோகித்துவிட்டேன் தங்களின் உத்தரீயமும் கீழே விழாமல் கைகளில் தாங்கி கொண்டேன்.என் அஸ்திர பிரயோகம்தான் இலைகளில் இரண்டாவது ஓட்டை.முதலில் இருக்கும் ஒட்டையைப் போட்டவர் யாரென்று அறியமாட்டேன் ஸ்வாமி.".
மாணவர்களே பார்ப்பதையெல்லாம் குற்றமில்லாமல் கற்று மனதில் நிறுத்திக் கொள்பவனே உண்மையான மாணவன் தனக்கு உகந்தவை என்று தேர்ந்தெடுத்துக் கற்றுக் கொள்ளும் 
பண்பு யாரிடத்தில் உள்ளதோ அவனே உண்மையான மாணவச் செல்வன்.அர்ச்சுனன் உண்மையான மாணவன்.அவன் திறமைசாலி என்பதற்கு இதைவிடச் சான்று தேவையில்லை " என்று முடித்தவர் துரியோதனனைப் பார்த்து ஆசிரியர் காட்டிய வழியைப் பின்பற்றி தாங்களாகவே முனைந்து கற்பதே அறிவு. இதை உணர்ந்து கொண்டாயா துரியோதன "என்றார் துரியோதனனும் அதை ஒப்புக் கொண்டவன்போல் தலைகுனிந்து நின்றான்.
ராமசாமி கதையை முடித்தார்.
"தெரிந்து கொண்டாயா பாலு.ஆசிரியர் சொல்லிக் கொடுப்பார். அதை  நல்ல முறையிலே மீண்டும் மீண்டும் படித்துப் புரிந்து கொள்ளவேண்டியது மாணவன்  கடமை.அவனைத்தான் மாணவச் செல்வன் என்று ஆசிரியர்கள் சொல்வார்கள் புரிந்ததா?"என்றவாறு படுத்துக்க கொண்டார். "சரிப்பா நானும் இனி அருச்சுனனைப் போலவே படிப்பேன். எல்லாவற்றையும் புரிந்துகொண்டு அறிவை வளர்த்துக் கொள்வேன்."என்றான் உறுதியோடு.






 
ருக்மணி சேஷசாயி



 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com 

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

 மாணவச்  செல்வன் 


             பள்ளிக்கூடத்தில் கொடுத்த மதிப்பெண் பட்டியலைத் தன அப்பாவிடம் காட்டியபடி நின்றான் பாலு. அதைப் பார்த்த ராமசாமி சற்றே கோபம் கொண்டார்.பாலுவை கோபமாகப் பார்த்தார்.சிணுங்கியபடியே பேசினான் பாலு.

"அந்த வாத்தியாரு நல்லாவே சொல்லிக் குடுக்கலேப்பாஅதான் "என்றவனை இடைமறித்துப் பேசினார்."ஏண்டா நீ கவனிக்காமே வாத்தியாரு மேலே பழி போடாதே உனக்கு முன்னாலே நூறு மார்க் வாங்கியவனுக்கெல்லாம் வேறே வாத்தியாரா பாடம் சொன்னாரு இல்லேல்ல."

தலைகுனிந்து நின்றான் பாலு."சரி சரி கவனித்து ப் படி.அடுத்தமுறை நல்ல மார்க்கோட வா.".என்றவர் வெளியே சென்று விட்டார்.

அன்று இரவு படுத்தபடி அப்பாவுடன் பேச்சுக்கு கொடுத்தான். அப்பா ஒரு கதை சொல்லுங்கள் என்றான்.

 ராமசாமியும் படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தார்.அவர் கதைசொல்லப்போவதை அறிந்துகொண்ட பாலுவின் தம்பியும் அருகே வந்து அமர்ந்து கொண்டான்.

கதைசொல்ல ஆரம்பித்தார் வீராசாமி.மஹாபாரதத்தில் பாண்டவர்கள் அஞ்சுபேர் கௌரவர்கள் நூறுபேர்.இவங்க எல்லாருக்கும் துரோணர் அப்படிங்கற முனிவர்தான் பாடம் சொல்லித் தருகிற வாத்தியார்.பாண்டவர்களுக்கு தருமன் மூத்தவன். கௌரவர்களுக்குத் துரியோதனன் மூத்தவன்.இ ந்த துரியோதனனுக்கு அருச்சுனன் மேல பொறாமை.ஏன்னா வில்வித்தையில் அவன் ரொம்பக் கெட்டிக்காரனா இருக்கறதால.அதோட பங்காளிகளான பாண்டவர்கள் அஞ்சுபேரையும் கௌரவர்களுக்குப் பிடிக்காது.அருச்சுனன் கெட்டிக்காரனா இருப்பதற்கு ஆசிரியர் காரணம்னு அவர்மேல் கூட துரியோதனனுக்கு கோபம்இருந்தது..இது துரோணருக்கும்  தெரியும். ஆனாலும் இளவரசர்கள் ஆயிற்றே ஒன்றும் சொல்ல முடியாதே.

இந்த எண்ணத்தைத் துரியோதனனிடம் எப்படியாவது நீக்க வேண்டுமே என்று நினைத்தார்.அதற்கு காலம் வந்தது.ஒருநாள் அதிகாலை நேரம் தன நூற்று ஐந்து மாணவர்கள் புடைசூழ துரோணர் ஆற்றுக்கு குளிக்கப் போனார்.எல்லோரும் நடந்து போய்க்  கொண்டிருக்கும் பொழுது துரோணர் திடீரென நின்றார்.  .மாணவர்கள் அவர்பின் நின்றனர்.அவர்  பார்த்து,"அர்ச்சுனா, என் மேலாடையை ஆசிரமத்திலேயே .விட்டு .விட்டேன். நீ சென்று அதை எடுத்து .வா "என்று கூறவே அர்ச்சுனனும் உடனே புறப்பட்டான் 

அவனைத் தடுத்து நிறுத்தியவர் "அர்ச்சுனா, என் உத்தரீயத்தை வழியில் எங்கும் கீழே வைக்கக்  கூடாது."என்று கூறினார்.அர்ச்சுனனும் அப்படியே ஸ்வாமி என்றவன் வேகமாக  ஆசிரமம்  நோக்கிச் சென்றான். 

அவன் சென்ற பின் மற்றவர்களை நோக்கி அருகே   வளர்ந்து நின்றிருந்த பெரிய ஆலமரத்தின் அருகே வரச்  சொன்னார்.













வியாழன், 25 ஜூன், 2020

vinayagar paadal

                                     பல்லவி 
வினையைத தீர்க்கும்  விக்ன  விநாயகனே 
வேண்டும் வரம் தரும் வேத முதல்வனே        (வினை)
                                   அனுபல்லவி 
வளமுடன் நலமும்வாழ்வும்   உயர்வும் 
வளரும்படியாய் வரந்தனை அருள்வாய்    (வினை)

                                       சரணம்-1
வேதவ்யாசரின் வேண்டுதல் ஏற்றாய் 
பாரதம் எழுதி ஒற்றைக்கொம்பன் ஆனாய் 
காவிரி விரைந்திட சாகசம் புரிந்தாய் 
யாவரும் பணிந்திட  தத்துவம் ஆனாய்     (வினை)
                                    சரணம்-2
சந்திரன் சாபம் நீங்கிடச் செயதாய் 
சங்கரன் மைந்தனே சங்கடம் தீர்ப்பாய் 
ஐந்து கரத்தனே  ஆதிமுதல்வனே 
வந்து பணிந்தோம் வாழ்த்தி அருள்வாய்  (வினை)
                     ---------------------------------------



ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com 

வெள்ளி, 20 மார்ச், 2020


நண்பர்களே நலமா?
--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com