செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

94- திருக்குறள் கதைகள்..என்பும் உரியர் பிறர்க்கு

ஒருமுறை விருத்ராசுரன் என்ற அசுரன் பிரம்மாவைக் குறித்துத் தவமிருந்தான்.பல ஆண்டுகள் கடுந்தவமிருந்தான். அவனது தவத்திற்கு மெச்சிய பிரம்மா அவன் முன் தோன்றினார்.
மனமகிழ்ந்த விருத்ராசுரன் அவரை வணங்கி நின்றான்.
"விருதரா, உன் தவத்திற்கு மெச்சினேன். என்ன காரணத்திற்காக இந்தத் தவம் உனக்கு என்ன வேண்டுமோ கேள் "என்று அன்புடன் கேட்டார் பிரம்மா.
"சுவாமி, நான் என்றுமே சாகாதிருக்க அருள் செய்யுங்கள். இந்த வரம்தான் தேவை"என்றான் வேகமாக.
"விருதரா, உலகில் தோன்றியவை அனைத்துமே அழியவேண்டியது இயற்கை நியதி. அதை மாற்ற என்னால் மட்டுமல்ல மும்மூர்த்திகளாலும் ஆகாது.எப்படியெல்லாம் சாகக் கூடாது என்றுவேண்டுமானால் கேள். வரம் தருகிறேன்."என்றார் பிரம்மா.
சற்று சிந்தித்தான் அசுரன். பின்னர் "தேவா, நான் எந்த உலோகத்தாலான ஒரு ஆயுதத்தாலும் பஞ்ச பூதங்களாலும் உலகில் தோன்றிய எந்த உயிரினத்தாலும் நான் சாகக் கூடாது."என்று கேட்டுக் கொண்டான்.அப்படியே ஆகட்டும் என்று வரம் தந்து மறைந்தார் பிரம்மா.
பிரம்மாவின் இந்த வரத்தால் மிகவும் கர்வம் கொண்ட விருத்ராசுரன் அனைவரையும் கொடுமைப் படுத்த ஆரம்பித்தான்.யாராலும் அவனை வெல்ல இயலவில்லை.
மக்கள், ரிஷிகள் தேவர்களும் கூட அவனை வெல்ல முடியாமல் திகைத்தனர்.எந்த ஆயுதம் கொண்டு அவனைத் தாக்குவது சாகாவரம் பெற்ற காரணத்தால் அவனை வீழ்த்த இயலவில்லை.தேவர்கள் அனைவரும் சிவ பெருமானிடம் சென்று முறையிட்டனர். உலக உயிர்களின் துன்பம் கண்டு சிவன் அவர்களுக்கு அனுக்ரகம் செய்ய எண்ணினார்.தன் முன்னே பணிவுடன் நின்ற தேவேந்திரனைப் பார்த்து "தேவேந்திரா, மனமுவந்து யாரேனும் தனது எலும்பைக் கொடுத்தால் அதை ஆயுதமாக்கி அந்த அசுரனை நீ வென்று விடலாம்."என்றபோது மகிழ்ச்சியுடன் இந்திரன் "அப்படியே கொண்டு வருகிறேன் சுவாமி."என்று புறப்பட்டான்.
எலும்பைக் கொடுப்பார் யாரிருப்பார் என பூலோகம் முழுவதும் தேடி வருகையில் ஒரு மலை மீது ஒரு காலில் நின்றபடியே தவம் செய்யும் ஒரு ரிஷியைக் கண்டான்.அவரே ததீசி முனிவர்.
நேரே அவர் முன் சென்று நின்று கைதொழுதான்.வெகு நேரம் கழித்துக் கண் திறந்த ரிஷி ததீசி ஆச்சரியமாகப் பார்த்தார்.
"யாரது? தேவேந்திரனா என் முன் நிற்பது?"
"ஆம் மாமுனியே, தங்களால் ஆகவேண்டிய காரியம் ஒன்று இருக்கிறது."
"என்ன வேண்டும் சொல் தேவேந்திரா."
"சுவாமி, லோக க்ஷேமத்துக்காக ஒரு அசுரனை வதைக்க வேண்டியுள்ளது அதற்கு ஆயுதமாக உபயோகிக்க ஒரு மனிதரின் முதுகெலும்பு வேண்டும்.உலக மக்களின் நன்மை கருதி தவம் செய்யும் தாங்கள்தான் அதற்கு உதவ வேண்டும்"
ரிஷி புன்னகை புரிந்தார்."இந்த உடல் ஒரு நல்ல காரியத்திற்குப் பயன் படுமாயின் மிக்க மகிழ்ச்சி.நான் என் தவ வலிமையால் நெருப்பில் என் உடலை எரித்துக் கொள்கிறேன்.பின்னர் அந்த சாம்பலின் உள்ளே இருக்கும் என் முதுகெலும்பை நீ எடுத்துச் செல். உனக்கு ஆசிவழங்குகிறேன்."
என்று கூறித் தன் உடலை எரித்துக் கொண்டார்.அந்த்சாம்பலின் ஊடே இருந்த முதுகெலும்பை எடுத்துக் கொண்டு இந்திரன் சிவனை நாடிச் சென்று கொடுத்தார்.
அனைத்தையும் அறிந்த சிவன் ததீசி முனிவருக்கு கைலாச பதவி அளித்தார். தேவேந்திரன் கொடுத்த முதுகெலும்பை வஜ்ராயுதம் என்னும் ஒரு ஆயுதமாக ஆக்கித் தந்தார்.அதைக் கொண்டு படை நடத்தி வெற்றி பெறுவாய் என்றும் ஆசி வழங்கினார்.
அந்த எலும்பாலான ஆயுதமே வஜ்ராயுதம். அதைக் கொண்டு படை நடத்தி விருத்ராசுரனை அழித்தான் இந்திரன்.
அன்புடையவர்கள் தங்களின் எலும்பையும் மற்றவருக்குக் கொடுப்பார்கள் என்ற உண்மையை இந்த கதை மூலம் தெரிந்து கொள்ளலாம்.'
இதைத்தான் வள்ளுவரும்
                     "அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
                       என்பும் உரியர் பிறர்க்கு." என்று கூறியுள்ளார்.
அன்பில்லாதவர் எல்லாப் பொருள்களும் தமக்கே உரியன என நினைப்பார்.ஆனால் அன்புடைய உயர்ந்த மனிதர் தனது உடமையையும் பிறர்க்குக் கொடுப்பார். உடமை மட்டுமன்றி தம் உடலோடு சேர்ந்த எலும்பையும் பிறர்க்குக் கொடுப்பார் அன்புடையோர்.
இப்படிப் பட்ட மனிதர்கள் நம் வாழ்வின் வழிகாட்டிகளன்றோ?



ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

வெள்ளி, 20 ஜூலை, 2012

93--துவாரகா ராமதாசர்.

கிருஷ்ண பரமாத்மா  ஆட்சி செய்து வந்த துவாரகைக்கு அருகில் இருக்கும் ஒருஅழகிய  சிறிய கிராமம் டாஙகேர் என்பது. அந்த கிராமத்தில் வாழ்ந்தவர்தான் ராமதாசர் என்ற அந்தணர்.சிறந்த கிருஷ்ண பக்தர்.
இவர் அல்லும் பகலும் அந்த துவாரகைக் கண்ணனையே எண்ணி என்று அவன் அருள் கிட்டும் என ஏங்கி இருந்தார். அதனால் இவரை துவாரகா ராமதாசர் என அனைவரும் அழைத்தனர்.
ஒவ்வொரு ஏகாதசி அன்றும் துவாரகை சென்று விரதமிருந்து அன்று முழுவதும் கண்ணனையே பாடி பஜனை செய்வார்.. மறுநாள் துவாதசி அன்று ஏழைகளுக்கு தன்னால் இயன்ற அளவு உணவு தந்து பின்னர் இவர்  உணவு கொள்வார்.
-
காலம் சென்றது.ராமதாசருக்கு இப்போது வயதாகிவிட்டது. அவரால் முன்போல் நடந்து துவாரகைக்கு வர இயலவில்லை. அந்த நிலையிலும் இவர் ஒவ்வொரு ஏகாதசி அன்றும் தனது விரதத்தை விடாது  கடைப்பிடித்து வ்ந்தார்.
ஒருமுறை அவர் தளர்ந்தவாறு கோயிலுக்குள் அமர்ந்திருந்தார்.அவர் மனத்துக்குள்
ஸ்ரீ கிருஷ்ணன் புன்னகை புரிந்தவாறு நின்றிருந்தான்.மானசீகமாக அவருடன் பேசினார் ராமதாசர்.
"கண்ணா, என் உடல் மிகவும் தளர்ந்து விட்டது. அடுத்த ஏகாதசிக்கு என்னால் இங்கு வந்து உன்னைத் தரிசிக்க இயலுமோ இயலாதோ தெரியாது. ஆனால் கண்ணா, என்னால் இயலாவிடில் நீ வந்து எனக்கு தரிசனம் தரவேண்டும்.ஒரு போதும் தவறக்கூடாது கண்ணா,"என்றவாறு இறைவனின் காலடியில் விழுந்து விம்மி விம்மி அழுதார்.
இறைவனின் நெஞ்சம் உருகியது."தாஸ,அஞ்சாதே.என்னை உங்கள் ஊருக்கு அழைத்துச் செல்" கண்ணனின் இந்த  மொழியைக் கேட்ட ராமதாசர் திகைத்தார்.

"என்னால் எப்படி உன்னை அழைத்துச் செல்ல இயலும்."
"தாஸ, என்னுடைய தேர் வரும் அதில் ஏறிச் செல்லலாம்."

மகிழ்ச்சியுடன் கண்ணனுடன்  தேரிலேறி டாங்கேர் வந்து சேர்ந்தார் ராமதாசர்.  
கண்ணனை நடுக் கூடத்தில் இறக்கிவிட்டுத  தேர் மறைந்து போனது.
மறுநாள் பொழுது விடிந்தவுடன் துவாரகையின் கோயில் கதவுகள் திறக்கப் பட்டன. ஆனால் அங்கே கண்ணனின் விக்ரகத்தைக் காணோம்.அனைவருக்கும் ராமதாசர் மேல்தான் சந்தேகம் வந்தது.
உடனே கூட்டமாக அனைவரும் டான்கேர் நோக்கிச் சென்று ராமதாசரின் வீட்டின் முன் நின்று கூச்சலிட்டனர். ராமதாசர் அமைதியாக இருந்தார்.வந்தவர்கள் தாசரின் வீட்டுக்குள் புகுந்து கண்ணனைக் கண்டனர். அவரை மீண்டும் துவாரகை எடுத்துச் செல்ல முயன்றனர்.
கண்ணன் தன்னைப் பிரிவதைப் பொறுக்காத ராமதாசர் அழுதார்.அப்போது கண்ணன்
"தாஸ,என் எடைக்கு எடை பொன் தருவதாகச் சொல்." அவர்கள் என்னை இங்கேயே விட்டுச் செல்வார்கள்."என்றான் புன்னகைத்தபடியே. ஆசையுடன் தாசர் அர்ச்சகர்களிடம் கேட்டார்.
"இறைவனின் எடைக்கு எடை பொன் தந்தால் இந்த இறைவனை எனக்குக் கொடுப்பீர்களா?"
அர்ச்சகர்கள் சிரித்தனர்."நீரோ அன்னக் காவடி.தினமும் உஞ்சவிருத்தி செய்து உண்பவர்.
இந்த இறைவனின் எடைக்கு துலாபாரமாகப் பொன் தருவாயா?" என்று கேலி பேசினர்.
அதற்குள் ஊர் மக்கள் அங்குக் கூடிவிட்டனர்.
விக்ரகத்தின் எடைக்கு எடை பொன் தருகிறாராம் தாசர், என்று மக்கள் பேசிக் கொண்டே நின்று வேடிக்கை பார்த்தனர்.அர்ச்சகர்களும் தாசரின் பேச்சைக் கேட்டு சிரித்தபடியே சம்மதித்தனர்.தாசரால் இயலாத காரியம் கண்ணனின் எடைக்குப் பொன் தருவது என நம்பினர்.
அவரின் விருப்பப்படியே தராசு நிறுத்தப் பட்டது.ஒரு தட்டில் கிருஷ்ண விக்ரகம் வைக்கப் பட்டது.'அன்று ருக்மிணி தேவியின் மெய்யன்பை நிரூபிக்க தராசில் ஏறினேன். இன்று இந்த தாசனுக்காக தராசில் ஏறுகிறேன்.'என்று சொல்வதுபோல் நகைத்தபடி நின்றிருந்தான் கண்ணன்.
ராமதாசர் வீட்டினுள் நுழைந்தார். தன் மனைவியுடன் வெளியே வந்தவர் கையில் ஒரு மூக்குத்தி இருந்தது.தாசரின் கையில் ஒன்றும் இல்லாதது கண்டு அர்ச்சகர்" தாசரே, எங்கே பொன்? என்று கேட்டனர்."

இதோ இருக்கிறது என்று தன் கையிலிருந்த மூக்குத்தியைக் காட்டினார்.பின் அதை இறைவனை எண்ணித் தராசில் இட்டார். என்ன ஆச்சரியம்! அனைவரும் வியக்கும் வண்ணம்
ஒரு மூக்குத்தியின் எடைக்குச் சமமாகக் கண்ணனின் எடை நின்றது.
மக்கள் ஆரவாரம் செய்தனர்.என்னே தாசரின் பக்தி. அவரது பக்திக்குக் கண்ணனே திருவுள்ளம் இரங்கியுள்ளான்.இவரே பரம பக்தர் என அனைவரும் அவரை வணங்கினர்.
அர்ச்சகரோ வாயடைத்து நின்றார்."தாசரே, இறைவனுக்கே இங்கு வாசிக்கத்தான் விருப்பம்போலும் .நீர் பெரும் பாக்யசாலி. உமது பக்தி உலகினருக்கு ஒரு படிப்பினையாகும்
என்று நிலத்தில் விழுந்து கண்ணனுடன் சேர்த்து தாசரையும் வணங்கினார்.
பலன் நோக்காப் பக்தியால் இறைவனையே அழைக்க முடிந்தது தாசரால். 
இவரது பக்தியும் நம்பிக்கையும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்ற உண்மையை நாமும் புரிந்து கொள்ள வேண்டும்.







ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

சனி, 14 ஜூலை, 2012

92-நம்பிக்கையின் சிறப்பு.

ஒரு ஊரில் ஒரு பண்டிதர் வாழ்ந்து வ்ந்தாr.அவர்  பெரும்   கல்விமானாக இருந்தார்.சமஸ்கிருத மொழியில் மிகவும் பண்டிதராக விளங்கினார். தினமும் ஊரிலுள்ள மக்களுக்கு   பாகவதக்
கதைகளைச் சொல்லி வ்ந்தார்.
.அவ்வூரிலுள்ள மக்களும் இவர் சொல்லும் கதைகளைப  பிரியமாகக் கேட்டு வந்தனர்.
அக்கம் பக்கத்து ஊர்களிலிருந்தும் மக்கள் இவரைக்  கதை கூறும்படி தங்கள் ஊருக்கு அழைத்துச் சென்றனர்.
ஒரு நாள் இவர் கதை சொல்லிக் கொண்டிருக்கும்போது ஒரு திருடன் திருடுவதற்காக உள்ளே நுழைந்தான். மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கவே கூட்டத்தோடு சேர்ந்து அமர்ந்து கொண்டான்.
அன்று பாகவதம் பத்தாவது சர்க்கம். கிருஷ்ண லீலை பற்றியும் கிருஷ்ணரின் அழகை வர்ணித்தும் கதை கூறினார். அந்தக் கதையில் மெய்மறந்து அமர்ந்திருந்தான் திருடன்.
கதை முடிந்து கூட்டமும் கலைந்தது.
பண்டிதரும் தனக்குக் கிடைத்த தட்சணைப் பணத்தை எடுத்துக் கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டார். சற்றுத  தொலைவு நடந்தவுடன் திருடன் அவரைப் பின் தொடர்ந்தான்.அவரிடம் இருந்த பணத்தைத் திருட எண்ணி அவர் முன் சென்று அவரை வழி மறித்தான். அச்சத்துடன் தன் பணத்தைக்  கெட்டியாகப் பிடித்துக் கொண்ட பண்டிதர் "ஏனப்பா. நான் ஏழை என்னிடம் இருக்கும் சிறு தொகையால் உனக்கு எந்தப் பயனும் இல்லை. பணக்காரராகப் பார்த்துப் போயேன்."என்றார் நடுங்கியபடியே.
திருடன் சிந்தித்தான்."அப்படியானால் நீ கதையில் சொன்னாயே, அந்த ராஜகுமாரன், அவன் எங்கிருக்கிறான் சொல்.அவனிடம் அவன் அணிந்திருப்பதாக நீ சொன்ன நகைகளைக் களவாடிக் கொள்கிறேன்"என்றான்.
பண்டிதர் சிந்தித்தார்.கதையிலே தான் சொன்ன கிருஷ்ணனின் அலங்காரத்தைப் பற்றித்தான் இவன் கேட்கிறான் என்று புரிந்து கொண்டார்.கண்களை மூடி கண்ணனை வேண்டிக்கொண்டார்."கண்ணா, ஆபத்திலிருந்து நான் தப்பிக்க உன் பெயரைக் கூறுகிறேன்.
அருள்செய் கண்ணா"என்று வேண்டிக்கொண்டு.திருடனைப் பார்த்துச் சொன்னார்.
"ஆமப்பா, அந்த ராஜகுமாரன் இந்த ஊருக்கு வடக்கே ஐந்து கல் தொலைவில் உள்ள காட்டுப் பகுதிக்கு மாடுகளை மேய்த்துக் கொண்டு வருவான்.அங்கே ஒரு பாறை இருக்கும் அருகே ஒரு புன்னைமரமும் இருக்கும்.அங்குதான் மாடுகளை மேய விடுவான்."
"சரி அவன் வருகிறான் என்று நான் எப்படித் தெரிந்து கொள்வது?"
"அவன் வரும்போதே சுற்றிலும் மணம் வீசும் புல்லாங்குழலின் ஓசை கேட்கும். அப்போது அவன் வருகிறான் என்று நீ தெரிந்துகொள். சமயம் பார்த்து அவன் நகைகளைக் களவாடிக் கொள்."என்று சொன்னதைக் கேட்டு திருடன் மனம் மாறினான்.
"அப்படியானால் சரி.அவனிடம் நிறைய நகைகள் நீ சொன்னபடி கிடைத்தால் உனக்கும் பங்கு தருகிறேன்.இல்லையேல் மீண்டும் உன்னைத் தேடி நான் வருவேன்.நீ போகலாம் "
பண்டிதர் திருடன் நம்மைத் தேடி மீண்டும் வருவதற்குள் நாம் வேறு ஊருக்குப்போய் விடலாம் என்று என்ணிக் கொண்டே வேகமாக அங்கிருந்து நடந்தார்.
திருடனும் வடதிசையில்  பண்டிதர் சொன்ன இடத்தை அடைந்தான்.அவன் மனம் முழுவதும் அந்தச் சிறுவனின் தோற்றமே நிறைந்திருந்தது.அந்த ராஜகுமாரன் எப்போது வருவான் என்று ஆவலே வடிவாய் புதர் மறைவில் ஒளிந்திருந்தான்.
அதிகாலை நேரம் சற்றும் தளராமல் கண்ணனையே  எண்ணி அவன் எப்போது வருவான் எப்போது வருவான் என திசையெங்கும் சுற்றிப் பார்த்து அமர்ந்திருந்தான் அந்தத் திருடன். பசி தாகம் தூக்கம் எதையும் அவன் லட்சியம் செய்யவில்லை.வெள்ளி முளைத்தது. புள்ளினங்கள் கூவத் தொடங்கின. "என்ன இன்னும் அந்தச் சிறுவனைக் காணோமே" என்று ஏங்க ஆரம்பித்தான் திருடன்.
திடீரென்று அவன் மூக்கு நல்ல மணத்தை நுகர்ந்தது. மெல்லிய குழலோசையும் கேட்கவே அருகே இருந்த மரத்தின் மேல் ஏறி தொலைவில் பார்த்தான். அழகே வடிவாக உடம்பு நிறைய நகைகளுடன் அந்தக் கண்ணன் தெரிந்தான். வேக வேகமாக மரத்தைவிட்டு இறங்கி புதரில் மறைந்து கொண்டான்.
மாடுகளை மேயவிட்டு குழல் ஊதி யபடி புன்னை மரத்தடியில் அமர்ந்தான் அந்த ராஜகுமாரன்.
உடனே அவன் முன் தோன்றிய திருடன் அவன் முன் சென்று "ஏய் சிறுவனே உன் நகைகளைக் கொடுத்துவிடு.இல்லையேல்..."என்று மிரட்டினான்.
"வேண்டுமானால் நீயே கழற்றிக் கொள்"என்றான் கண்ணன் புன்னகையுடன்.
திருடன் வேகமாக நகைகளைக் கழற்றத் தொடங்கினான்.ஆனால்கண்ணனின்  உடலைத் தொட்டவுடன் மின்சாரம் பாய்ந்ததுபோல் உணர்ந்தான். உள்ளமும் உடலும் பரவச நிலையை அடைந்ததை உணர்ந்தான்.
அவன் முன் நின்று கூர்ந்து பார்த்தான்."நீ யாரென்று தெரியவில்லை ஆனால் உன் நகைகளைக் கழற்ற மனம் வரவில்லை. உன்னைப் பார்த்துக் கொண்டே இருக்கவேண்டும் போல் இருக்கிறது. தினமும் இதே  நேரம் வந்து நான் உன்னைப் பார்ப்பேன். நீயும் வரவேண்டும். உன் நகைகளைக் காணவில்லை என்றால்   உன் பெற்றோர் உன்னைக் கோபிப்பார்கள். வேண்டாம் "என்று கண்ணனின் முன்  அமர்ந்து அவனையே பார்க்கத தொடங்கினான் திருடன்.
"பரவாயில்லை எடுத்துக் கொள்.எங்களிடம் இன்னும் நிறைய நகைகள் உள்ளன. நாளைக்கும் தருகிறேன் "என்றபடி நகைகளைக் கொடுத்தான்.
பதில் சொல்லத் தோன்றாமல் தன்னிலை மறந்து அவைகளைப் பெற்றுக் கொண்டு ஊருக்குள் ஓடி வந்தான் அந்தத் திருடன்.
நேராக பண்டிதர் வீட்டை அடைந்தான்.அவரிடம் கண்ணன் நகைகள் கொடுத்ததைக் கூறி நகைகளைக் காட்டினான்.பண்டிதரால் நம்பமுடியவில்லை. ஆனால் நகைகளைப் பார்த்து நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.
"அந்தச் சிறுவன் எங்கே இருக்கிறான் காட்டு" என்றபடி அவனுடன் ஓடினார் பண்டிதர். அதே மரத்தடியில் அமர்ந்து குழலிசைத்துக் கொண்டிருந்தான் கண்ணன்.
"அதோ பாருங்கள்."திருடன் காட்டிய திசையில் அவருக்கு ஒன்றுமே தெரியவில்லை.
"அய்யோ என் கண்ணுக்கு நீ தெரியவில்லையே கண்ணா மணிவண்ணா இந்தப் பாமரன் செய்த புண்ணியம் நான் செய்யவில்லையா. உன்னையே சதாகாலமும் ஜபித்துக் கொண்டிருக்கும் எனக்கு தரிசனம் கொடு." பண்டிதர் அழத் தொடங்கினார். கண்ணன் புன்னகையோடு நின்றிருந்தான்.
திருடனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.கண்ணன் அவன் கையைப் பற்றினான்.திருடனின்
அஞ்ஞானம் விலகியது. உடல் புல்லரிக்க கண்களில் நீர் மல்க கண்ணனின் பாதத்தில் வீழ்ந்தான்.
"ஐயா, பண்டிதரால்தான் உன் தரிசனம் எனக்குக் கிடைத்தது. அவருக்கும் உன் திவ்ய தரிசனத்தைக் காட்டு." என்று வேண்டிக் கொண்டான்.
"அப்படியானால் அவரது கையை நீ பற்றிக் கொள்."என்றான் கண்ணன். பண்டிதரின் கையைப் பற்றிக் கொண்டான் திருடன்.
நீலமேக வண்ணனாக அலங்கார சொரூபனாக அருள் பொங்கும் முகத்துடன் காட்சி கொடுத்தான் கண்ணன்.
அவர் உள்ளத்தில் தோன்றிய சந்தேகத்தைப் புரிந்து கொண்டு பேசினான் கண்ணன்.
"பண்டிதரே. உங்களுக்கு  பாண்டித்தியம் இருக்கிறது ஆனால் பக்தி இல்லை. ஆனால் திருட வந்தாலும் நம்பிக்கையும் என்னைக் காணவேண்டும் என்ற ஆசையும் கொண்டு காத்திருந்த இந்தப் பாமரனே உம்மை விட மேலானவன்.  இந்த நம்பிக்கை உம்மிடம் இல்லாததுதான் என் தரிசனம் உமக்குக் கிட்டத் தாமதமாயிற்று."
என்று கூறி இருவருக்கும் ஆசி கூறி மறைந்தான் கண்ணன்.
திருடனும் தன் திருட்டுத் தொழிலைவிட்டுபண்டிதரையே தனகுருவாகக கொண்டான். இருவரும் இறைவனின் தொண்டு செய்து   இனிதே வாழ்ந்தனர்.
கடவுளை நம்பினோர் கைவிடப் படார்.
























ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

சனி, 7 ஜூலை, 2012

91. நீதிபதியின் திறமை.

 

                  ஒரு ஊரில் ஒரு வட்டிக் கடைக்காரர் இருந்தார்.அவரது பெயர் காஞ்சனன். அந்த ஊரிலேயே பெரும் பணக்காரராக இருந்தார். ஊரிலுள்ளோர் யாவரும் அவரிடம் வட்டிக்குப் பணம் வாங்கிச் செல்வர்.அவர்களிடம் காஞ்சனன் பெரும் பொருளை வட்டியாகப் பெற்று வ்ந்தார்.
                   ஒருமுறை அந்த ஊரில்  மழையே பெய்யவில்லை.அதனால் ஏழை விவசாயிகள் சிலர் மிகவும் கஷ்டப்பட்டனர். அவர்கள் தங்களின் கஷ்டம் தீர காஞ்சனனை அணுகினர்.வழக்கம் போல அவரும்  பெரும் தொகையை வட்டியாகப் பெற்றுக்  கொண்டு கடன் கொடுத்தார்.. அந்தக் கடனை ஓராண்டுக்குள் அடைத்து விடுவதாகவும் அப்படிச் செய்யாவிடில் காஞ்சனனின் விருப்பத்துக்குத் தக்கபடி தண்டனை அனுபவிப்பதாகவும் எழுதிக் கையொப்பமிட்டுக் கொடுத்தனர். எப்படியும் ஓராண்டுக்குள் விளைச்சல் மூலம் அவரது  கடனை அடைத்து விட முடியும் என்றே அனைவரும் நம்பினர்.  அவர்களுள் காமேஷ் என்ற வாலிபனும் இருந்தான்.
                   இந்த காமேஷ் என்ற வாலிபன் பெயருக்கேற்றபடி அனைவரிடமும் அன்பும் இரக்கமும் காட்டி அனைவரின் மனத்திலும் நல்ல மதிப்பைப் பெற்றிருந்தான். காஞ்சனனுக்கு காமேஷ் மீது மிகவும் பொறாமை. பெரும் செல்வந்தனான தன் மீது கூட இத்தனை அன்பைச் செலுத்தாத மக்கள் இவன் மீது மட்டும் இத்தனை அன்பைப் பொழிவானேன். மேலும் தன்னிடம் இவன் மட்டும் கடன் வாங்காமல் காலம் கழிக்கிறானே என்றும் அவன் மீது பொறாமை கொண்டிருந்தான். அதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.
                    பல விவசாயிகளுடன் சேர்ந்து வந்து காமேஷும் கடன் கேட்கவே நல்ல சந்தர்ப்பம் என்று அனைவருக்கும் கடன் கொடுத்து உதவுவதுபோல் காமேஷுக்கும் கொடுத்தான். ஆனால் மறக்காமல் தன் பத்திரத்தில் எழுதி வாங்கிக் கொண்டான் காஞ்சனன்.எல்லோரையும் போலவே காமேஷும் எப்படியும் ஓராண்டுக்குள் பணத்தைக் கட்டிவிடலாம் என எண்ணி காஞ்சனனின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தான்.
ஆனால் அந்த ஆண்டும் பயிர் செய்ய முடியாமல் வானம் பொய்த்து விட்டது. அத்தனை விவசாயிகளும் பெரும் துன்பத்துடன் காஞ்சனனை அணுகினர். அவர்களின் நிலை கண்டு காஞ்சனன் மிகவும் மகிழ்ந்தான். எப்படியாவது காமேஷை தண்டித்து அவனைக் கொன்று விடவேண்டும் அல்லது ஊரைவிட்டு விரட்டிவிட வேண்டும் என்பதே காஞ்சனனின் எண்ணமாக இருந்தது.
ஊர் மக்கள் அனைவரும் காஞ்சனனை சந்தித்தனர்.வானம் பொய்த்ததை எடுத்துச் சொல்லி இன்னும் ஓராண்டு கழித்துப் பணம் தருவதாகச் சொன்னபோது காஞ்சனன் சம்மதிக்கவில்லை.அவர்கள் சொன்ன கெடுவுக்குள் பணம் தராவிடில் அவரவருக்குச் சொந்தமான நிலங்களை என்னிடம் ஒப்படைக்கவேண்டும் இல்லையேல் காமேஷின் மார்பிலிருந்து ஒரு கிலோ சதையை  வெட்டித் தரவேண்டும் என்று வழக்குத் தொடுத்தார். வழக்கு நீதிபதியின் முன் சென்றது.
வழக்கைக் கேட்டமக்கள் அனைவரும் தங்கள் நிலத்தைக் கொடுத்து காமேஷின் உயிரைக் காக்க முன் வந்தனர். ஆனால் காமேஷ் அவ்வாறு செய்வதைவிட தான் ஒருவன் அனைவரின் வழ்வுக்காக உயிர் விடுவது சிறந்தது என்று முடிவு செய்தான்.நீதிபதியிடம் அனைவரின் கடனுக்காகத் தன் உடலிலிருந்து ஒரு கிலோ சதையை வெட்டித் தரச் சம்மதித்தான். அவனது நல்ல உள்ளத்தையும் காஞ்சனனின் பொறாமை உள்ளத்தையும் நீதிபதி புரிந்து கொண்டார்.
அவர் மிகவும் யோசித்தார். காமேஷின் உயிரைக் காப்பதோடு காஞ்சனனுக்கும் தண்டனை தர விரும்பினார். பேராசையும் பிறரைத் துன்புறுத்திவாழும் எண்ணமும் கொண்ட காஞ்சனனுக்குப் புத்தி புகட்ட விரும்பினார்.
வழக்கை நன்கு விசாரித்துத் தீர்ப்புக் கூறினார்."காஞ்சனரே, இத்தனை மக்களின் நிலத்தையும் உமது கடனுக்கு ஈடாக நீர் கேட்பது நியாயமே. ஆனால் அதற்குப் பதிலாக காமேஷின் இதயத்திலிருந்து ஒரு கிலோ சதையைக் கேட்பது என்பது சரியல்ல. தயவு செய்து உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள்."
"இல்லையில்லை. எனக்கு காமேஷின் இதயத் தசை ஒருகிலோ கொடுத்துவிட்டால் அத்தனை பேரின் கடனையும் நான் தள்ளுபடி செய்து விடுகிறேன்"
"உண்மையாகத்தான் சொல்கிறீர்களா? வார்த்தை மாறமாட்டீர்களே?"
"கண்டிப்பாக மாறமாட்டேன்.ஒரு கிலோ சதையை நானே அறுத்து  எடுத்துக் கொள்கிறேன்."
"சரி. இத்தனை பேரும் பட்ட கடனுக்காக காமேஷின் ஒரு கிலோ சதையை காஞ்சனன் அறுத்து எடுத்துக் கொள்ளட்டும்."என்று தீர்ப்பளித்தவுடன் காமேஷிடம் அன்பு கொண்டவர்கள் அழுது புலம்பினர்.ஆனால் காஞ்சனன் மிகவும் மகிழ்ச்சியோடு தராசு கத்தி சகிதமாக அருகே வந்தான்.அவன் முகத்தில்  மகிழ்ச்சியும் பலநாள் எண்ணத்தைத் தீர்த்துக் கொள்ளும் வெறியும் தெரிந்தது. அதை அருகே இருந்த நீதிபதியும் கவனித்தார்.
ஆவலோடு காமேஷின் அருகே கத்தியோடு நெருங்கிய காஞ்சனனைப் பார்த்து,"நீ ஒரு கிலோ சதைதானே கேட்டாய். அதற்குமேல் ஒரு கிராம் கூடவோ குறைவாகவோ நீ வெட்டக் கூடாது.. அதுமட்டுமல்ல. ஒரு துளி ரத்தம் கூட சிந்தக் கூடாது.இதை நினைவில் கொள். உன் விருப்பப்படி சரியாக ஒரு கிலோ சதையை ரத்தம் சிந்தாமல் வெட்டி எடுத்துக் கொள். என்றார். காஞ்சனன் திகைத்தார். மக்கள் கோஷம் போட்டு மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். அளவாக ஒருகிலோ வெட்டுவது அதுவும் ரத்தம் சிந்தாமல் முடியுமா. ஏமாற்றத்துடன் கத்தியைக் கீழே போட்டுவிட்டு
ஏமாற்றத்துடன் நின்றார.
"காஞ்சனன் செய்த சூழ்ச்சிக்காகவும், அவன் காமேஷைக் கொல்ல எண்ணியதற்காகவும் அவனுக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கிறேன்."என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.நீதிபதியின் திறமையை அனைவரும் பாராட்டினர்.
ஒருவனைக் கெடுக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றுமானால் அது நம்மையே அழிக்கும் என்ற உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.





ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

சனி, 23 ஜூன், 2012

90- திருக்குறள் கதைகள்.- ஒரு பைசாவின் அருமை.

.
ஓர் ஊரில் சபாபதி என்ற தனவந்தர் வாழ்ந்து வ்ந்தார். பல ஆண்டுகளாகக் குழந்தை இல்லாதிருந்த அவர் பல கோயில்களுக்கும் சென்று வேண்டிக்கொண்டதால் ஒரு மகன் பிறந்தான்.தவமிருந்து பெற்ற பிள்ளை என்று சபாபதி மிகவும் செல்லமாக வளர்த்தார். அதனால் அந்தச் சிறுவன் மிகவும் கர்வமும் அடங்காப் பிடாரித் தனமும் கொண்டு வளர்ந்தான்.
ஒரு நாளைக்குப் பத்துத்தரமாவது "கதிர்வேலு  கதிவேலு" என்று தன் மகனை அழைக்காமல் இருக்கமாட்டார் சபாபதி.இதுமட்டுமல்லாமல் அவன் பள்ளியில் செய்து விட்டு வரும் விஷமங்களை எல்லாம் கண்ணன் செய்த திருவிளையாடல் போல் ரசித்தார்.அவன் செய்யும் தவறுகளையும் சுட்டிக் காட்டித் திருத்தாது  மன்னித்து மறந்து வந்தார். அதனால் கதிர்வேலு மிகவும் பொல்லாத்  தனத்துடன்  வளர்ந்தான்.
சில வருடங்கள் கழிந்தன.கதிர்வேலுவின் கெட்ட செயல்களும் வளர்ந்தன. நிறைந்த செல்வம் இருந்ததால் அவன் செய்யும் தீய செயல்களையெல்லாம் செல்வ பலத்தால் மறைத்துவந்தான்.
சாகும் தருவாயில் சபாபதி மகனிடம் இனியேனும் யார் வம்புக்கும் போகாமல் தான் சேர்த்து வைத்திருக்கும்  நிறைந்த செல்வத்துடன் சுகமாக இரு என்று அறிவுரை சொன்னார்.
ஆனால் சபாபதி இறந்த பிறகும் கதிர்வேலு தன் தீய குணங்களை விடவில்லை.தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் அல்லவா?
இவன் அடிக்கடி தவறு செய்து விட்டு நீதிமன்றம் வருவதும் செல்வ பலத்தால் தண்டனை பெறாமல் தப்புவதும் வழக்கமான ஒன்றாகிவிட்டது.அவ்வூர் நீதிமன்ற நீதிபதி இவனுக்கு எப்படியும் தண்டனை
வழங்கி அதை இவன் அனுபவிக்கும்படி செய்யவேண்டும் என நினைத்தார்.ஆனால் பொய் சாட்சிகளை வைத்து குற்றங்களிலிருந்து மீண்டு விடுவான்.
ஒரு முறை அவ்வூரில் இருந்த விவசாயிக்குக் கடன் கொடுத்ததாகப் பொய் வழக்குப் போட்டான்.அவன் நிலத்தை அபகரிக்கத் திட்டம் போட்டான்.வழக்கு நீதி மன்றத்திற்குச் சென்றது.
                நீதிபதி வழக்கை விசாரித்தார். இதை நேரில் பார்த்ததாகச் சொன்ன  விவசாயியை அழைத்து வந்து விசாரித்தார்.அவனும் கதிவேலுவிடம் பணம் வாங்கிக் கொண்டு பொய்சாட்சி சொல்வதற்காக நீதிபதிமுன் நின்றான்.
அப்போது கதிர்வேலுவின் பணியாள் கட்டுக் கட்டாகப் பணத்தைக் கதிர்வேலுவிடம் கொடுப்பதை நீதிபதி கவனித்தார். இவன் அபராதப் பணத்துடன் வந்துள்ளான்.எனவே இவன் குற்றம் செய்தவன் என்பது தெரிகிறது. இம்முறை இவனைத் தப்பவிடக்கூடாது என முடிவு செய்தார்.
கதிர்வேலு அழைத்து வந்திருந்த பொய் சாட்சியை  நீதிபதி விசாரணை செய்தார். அந்த விவசாயி பலநாட்களாக மனதுக்குள் கதிர்வேலுவுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்று எண்ணியிருந்தான்.அதனால் நீதிபதியிடம் உண்மையைக் கூறியதோடு தனக்கு அவன் லஞ்சம் கொடுத்துக் கூட்டிவந்ததையும் கூறினான்.
"பொய் சாட்சி சொல்ல பணம் வாங்கிக் கொண்டாயா?"
"ஐயா, மன்னிக்கணுங்க.நான் பணம் வாங்கினது நிஜம் ஆனா,நான் வரலையின்னா வேறே ஆள் வந்து இவனுக்கு சாதகமா சாட்சி சொல்லிடுவானே. அதனால நானே வந்திட்டனுங்க.இதோ இருக்குதுங்க அவரு கொடுத்தபணம்."என்று ரூபாயை நீதிபதியிடம் கொடுத்தான்.
நீதிபதி கதிர்வேலுவிடம் "இப்போது உன் குற்றத்தை ஒப்புக் கொள்கிறாயா இல்லையா?"என்று கேட்க கையும் களவுமாகப் பிடிபட்டதால் கதிர்வேலு அமைதியாக நின்றான்.
"நீ செய்த குற்றத்திற்கும் லஞ்சம் கொடுத்து பொய் சாட்சியை அழைத்து வந்ததற்கும் உனக்கு அபராதம் விதிக்கப் போகிறேன்."என்றார்.அதுவரை கவலையோடு நின்றிருந்தவன் நீதிபதியின் இந்தச் சொற்களைக் கேட்டு முகம் மலர்ந்தான்."ஐயா,இந்தக் குற்றத்துக்கு நீங்க எவ்வளவு வேணும்னாலும் அபராதம் விதிங்க ஐயா.நான் இப்பவே கட்டிடறேன். "என்றான் கர்வமாக.
அவன் மடியில் கட்டுக் கட்டாகப் பணம் இருந்ததே அதுதான் காரணம். நீதிபதி புன்னகையுடன்,
"நீ யாரிடமும் கேட்கக் கூடாது. உன்கையிலிருந்து பணத்தைக் கட்டவேண்டும் .பிறகு பின்வாங்கக் கூடாது."என்றார்.
சரியென்று தலையை அசைத்தான் கதிர்வேலு.
"அப்படியானால் ஒரே ஒரு பைசாவை அபராதமாகக் கட்டிவிட்டுப்போ.இல்லையென்றால் ஒரு வருடம் சிறைத் தண்டனை அனுபவிக்கவேண்டும்."
திடுக்கிட்ட கதிர்வேலு தன் பையைத் துழாவினான்.சட்டை மடியென எங்கு தேடியும் அவனுக்கு ஒரு பைசா கிடைக்கவில்லை. நோட்டுக் கட்டுக்களாக இருந்தனவே தவிர ஒரு பைசா காசு  அவனுக்குக் கிடைக்கவே இல்லை.
புன்னகை புரிந்த நீதிபதி,"இப்போது ஒரு பைசா உனக்கு எவ்வளவு முக்கியமானதாக இருக்கிறது பார்த்தாயா.அதுபோலத்தான் மனிதர்களுக்குள் ஏழை என்றும் எளியவன் என்றும் துச்சமாக எண்ணி அவர்களைத் துன்புறுத்தக் கூடாது. இந்த உண்மையை சிறைவாசம் செய்தபிறகாவது புரிந்து நடந்துகொள். உன்னைத் திருத்தத்தான் இந்த சிறைத் தண்டனை."என்றார்.
அதுநாள் வரை தான் தவறாக நடந்து வந்ததற்காக வருந்தியபடியே சிறைச்சாலைக்குச் சென்றான் கதிர்வேலு.
இனி அவன் திருந்திவிடுவானல்லவா?
ஒரு பைசாதானே என எளிதாக எண்ணியதால் அதுவே அவன் சிறைசெல்லக் காரணமாக அமைந்தது. ஏழைகள் என்று பிறரை எண்ணி ஏளனமாக நடத்தியதால் குற்றவாளியென்று நிரூபிக்கப் பட்டான்.
அதனால் உருவத்தைப் பார்த்தும் செல்வ நிலையை வைத்தும் மனிதரை நாம் மதிப்பிடக் கூடாது.
இதையே வள்ளுவரும்,
       " உருவுகண்டு  எள்ளாமை வேண்டும் உருள் பெருந்தேர்க்கு
          அச்சாணி அன்னார் உடைத்து"   
என்றார்.
ஒரு தேரின் அச்சாணி சிறிதாக இருந்தாலும் அதன் பயன்பாடு மிகப் பெரிதன்றோ.அதனால் உருவத்தைப் பார்த்து யாரையும் மதிப்பிடக் கூடாது.செல்வத்தின் பெருமையை ஒரு பைசாவின் மூலம் கதிர்வேலுவும் தெரிந்து கொண்டிருப்பான்.




ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

செவ்வாய், 19 ஜூன், 2012

89- எவ்வுயிரும் நம் உயிரே. திருக்குறள் கதைகள்

.
ஒரு காட்டில் நல்ல பாம்பு ஒன்று வாழ்ந்து வந்தது. சற்று வயதான பாம்பு அது. ஒரு நாள் அது இரை தேடிக்கொண்டே காட்டுக்குள் அலைந்து திரிந்து கொண்டிருந்தது.அப்போது ஒரு மரத்தடியில் முனிவர் ஒருவர் தவம் செய்து கொண்டு அமர்ந்திருந்தார்.அவரிடம் சென்று பணிந்து நின்றது பாம்பு.
அதைக் கண்களைத் திறந்த முனிவர் பார்த்தார்.புன்னகை புரிந்தார்.
"உனக்கு என்ன வேண்டும்?"
"சுவாமி, நான் போன பிறவியில் பாவம் செய்து இந்தப் பிறவியில் பாம்பாகப் பிறந்துள்ளேன்.அதனால் மீண்டும் பிறவாதிருக்க நான் என்ன செய்யவேண்டும் தயவு செய்து எனக்கு உபதேசம் செய்ய வேண்டும்." என்று கேட்டுக் கொண்டது.அதைப் பார்த்துப் புன்னகை புரிந்த முனிவர்,
"நீ இந்தப் பிறவியில் யாரையும் கடித்துத் துன்புறுத்தாமல் இருந்தால் போதும்.உனக்கு அடுத்த பிறவியில் நல்ல உயர்ந்த பிறவி கிட்டும்" என்று உபதேசித்து ஆசிகூறினார்.
அதைக் கேட்டு மகிழ்ந்த பாம்பு அவரை வணங்கி விடைபெற்றது.
சில நாட்கள் கழிந்தன.காட்டில் திரிந்த பாம்பு தைரியமாக ஊருக்குள் வந்தது.நாம்தான் யாரையும் கடிப்பதில்லை யாருக்கும் தீங்கு செய்வதில்லை என முனிவரிடம் கூறிவிட்டோமே.அதனால் நமக்கும் யாரும் தொந்தரவு தரமாட்டார்கள் என எண்ணிக் கொண்டது.
அதனால் அந்தப் பாம்பு ஊரின் ஓரமாக உள்ள ஒரு மைதானத்தில் உலவியபடி இரை தேடிக்கொண்டு  இருந்தது. அப்போது அங்கு விளையாட வந்த சில சிறுவர்கள் அங்கு உலவும் பாம்பைப் பார்த்து அலறினார்கள்.அந்த நல்ல பாம்பு யாரையும் லட்சியம் செய்யாமல் தன் வழியே போய்க் கொண்டு இருந்தது.ஆனால் சிறுவர்கள் விடுவார்களா? பாம்பின் அருகே வந்து சூ., சூ எனக் குரல் கொடுத்து அந்தப் பாம்பை விரட்டினர்.
அப்போதும் அந்தப் பாம்பு தன் வழியிலேயே போய்க் கொண்டு இருந்ததைக் கண்டு சிறுவர்களின் பயம் சற்று விலகியது."டேய், பாம்புக்குக் கண் தெரியலை போல இருக்குடா.,நம்மளைப் பார்த்தும் அது ஓடாமல் மெல்லப் போகுதுடா!"என்றான் ஒருவன் அதைக் கேட்ட மற்ற சிறுவர்களுக்கு பயம் அறவே நீங்கியது. பாம்பின் அருகே இருந்த கற்களை எடுத்து வீசத் தொடங்கினர்.சில கற்கள் பாம்பின் மீது பட்டு ரத்தம் கசியத் தொடங்கியது.
அப்போதும் பாம்பு தன் தலையைத் தூக்காது மெல்ல மெல்ல ஊர்ந்து கிடைத்த பொந்தில் நுழைந்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டது. சற்று நேரம் சிறுவர்கள் அந்தப் பொந்தின் முன் நின்று கூச்சல் போட்டுவிட்டுச் சென்று விட்டனர்.
பாம்பு இரவானதும் அந்த இடத்தை  விட்டு வெளியே வந்து தன் இருப்பிடமான காட்டை நோக்கிச் சென்றது.அதனால் ஊர்ந்து செல்ல முடியாதபடி உடல் முழுவதும் காயம்.ரத்தம் சிந்தும் உடலை வலியுடன் நகர்த்திக் கொண்டு சென்று முனிவர் முன் நின்றது.
அதிகாலையில் ரத்தம் சொட்டும் உடம்புடன் வந்து நின்ற பாம்பைப் பார்த்து திடுக்கிட்ட முனிவர்,"என்னவாயிற்று?ஏன் இப்படி காயப் பட்டு வந்திருக்கிறாய்?"என்று அன்போடு வினவினார்.
துக்கம் தொண்டையை அடைக்க கூறியது பாம்பு. "சுவாமி, நீங்கள் சொன்னபடியே யாரையும் கடிப்பதில்லை என முடிவு செய்து விட்டோமே என்று  ஊருக்கு வெளியே இருந்த மைதானத்துக்குச் சென்றிருந்தேன்.அங்கு யாரையும் தொந்தரவு செய்யாமல் என் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் அங்கு விளையாடவந்த சிறுவர்கள் என்னைப் பார்த்ததும் என்னை இந்த நிலைக்கு ஆளாக்கி விட்டார்கள்."என்று கூறிக் கண்ணீர் விட்டது.
அதன் பரிதாப நிலைக்கு இறங்கிய முனிவர் அதன் காயத்துக்கு மருந்து போட்டபடி பேசினார்.
"உன்னைக் கடிக்காதே என்றுதானே சொன்னேன். நீ உன் பிறவிகுணத்தைக் காட்டவேண்டியதுதானே?"
பாம்புக்குப் புரியவில்லை.அது "என்ன சுவாமி சொல்கிறீர்கள்?"என்று கேட்டது.
"ஆமாம் உன் பாம்பு குணமான சீறும் குணத்தைக் காட்டியிருந்தால் ஓடியிருப்பார்கள் நீயும் அடிபடாமல் தப்பியிருக்கலாமே என்றுதான் சொன்னேன்."
"உண்மைதான் சுவாமி நீங்கள் கடித்துத் துன்புறுத்தாதே என்றுதான் கூறினீர்கள் சீறிப் பயமுறுத்தாதே என்று சொல்லவில்லையே"
புன்னகையோடு அந்தப் பதிலை ஏற்றுக் கொண்ட முனிவர் பாம்புக்கு விடை கொடுத்து அனுப்பினார்.
சில நாட்கள் கழித்து அந்தப் பாம்பு காட்டின் எல்லையில் ஒரு பாறை அருகே படுத்திருந்தது. அப்போது சில மாடு மேய்க்கும் சிறுவர்கள் அங்கு வந்தனர். பாம்பு படுத்திருப்பதைப் பார்த்தனர். ஒவெனக்  கூவியவாறு ஓடினர்.
மீண்டும் அருகே வந்தபோது பாம்பு புஸ் என  சீறவே தங்களின் மாடுகளை விரட்டிக் கொண்டு அவ்விடம் விட்டு விலகினர்.பாம்பு நலமுடன் தன் இருப்பிடம் வந்து சேர்ந்தது.
அடுத்த பிறவி நல்ல பிறவியாக அமையவேண்டுமாயின் இப்பிறவியில் யாருக்கும் தீங்கு செய்யாமல் இருக்கவேண்டும் என்ற கொள்கையைக் கடைபிடித்தது அந்தப் பாம்பு.அதே போல் தனக்கு தீமை  ஏற்படுமாயின் தன் குணத்தைக் காட்டித் தப்பிப்பதும் தவறு அல்ல என்பதைப் புரிந்து கொண்டது அந்தப் பாம்பு.
இந்தக் கருத்தையே வள்ளுவரும் கூறுகிறார்.
"தீப்பால  தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை  அடல்வேண்டா  தான்."
எவனொருவன் தீமையின்றி வாழ நினைக்கிறானோ அவன் யாருக்கும் தீங்கு செய்யாதிருப்பானாக. என்கிறார்.இக்கருத்தை நாம் பாம்பின் வாழ்க்கையிலிருந்து தெரிந்து கொண்டோமல்லவா?
"எவ்வுயிரும் என்னுயிர்போல் எண்ணியிருக்கும்" உயர்ந்த வாழ்வைப் பெற்று இன்புற்றிருப்போம்.



ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

ஞாயிறு, 10 ஜூன், 2012

88- பிறர் பொருளை விரும்பாதே. -திருக்குறள் கதைகள். --

சன்னாசிக்கிழவன் களைப்போடு வீட்டுக்குள் நுழைந்தான்.நடுவீட்டின் உச்சியை அண்ணாந்து பார்த்தான்.ஆகாயத்திலிருந்து நிலாவெளிச்சம் பளீரென்று வீட்டுக்குள் அடித்தது.பெருமூச்சு விட்டவாறே தன் முண்டாசை உதறித் தரைமீது போட்டுக் கீழே அமர்ந்தான்.
"என்னாப்பா, மோட்டுவளையைப் பாக்குறே?எதாச்சும் பணம் கொட்டுமான்னு பாக்குறியா?"
என்றவாறே அவன் மகன் சின்னச்சாமி உள்ளே நுழைந்தான்.
"பணம் கொட்டுதோ இல்லையோ மழை வந்தா தண்ணி கொட்டும்."
" ஆமாம்பா, இந்த மழைக் காலம் வாரதுக்குள்ளே நம்ம வீட்டை இடிச்சுக் கட்டிடணும் அப்பா.".
"எனக்கும் ஆசைதான். ஆனா அதுக்கு  நீ சொன்ன மாதிரி பணம் கூரையிலேந்து கொட்டினாத்தான் உண்டு."
"ஏம்பா அப்பிடிச் சொல்றே.வீட்டக் கட்டிடணும் அப்படீங்கற எண்ணத்தோட உழைச்சா கட்டாயம் நம்மாலே முடியும் அப்பா."
இவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த பச்சையம்மா "சரி சரி நேரத்தோட சோறு திங்க வாங்க. கெனா அல்லாம் அப்பால காங்களாம்" என்றாள் சலிப்போடு.
தந்தையும் மகனும் தங்கள் பேச்சை நிறுத்திவிட்டு சாப்பிடச் சென்றார்கள்.
மறுநாள் பொழுதோடு எழுந்து வேலைக்குச் சென்றான் சன்னாசி.அந்த ஊர் பூங்காவில் பழுது பார்க்கும் வேலையில் அவன் ஒரு தோட்டக்காரனாக வேலை பார்த்து வந்தான்.
முதல்நாள் விடுமுறை தினமாதலால் நிறைய பேர் பூங்காவுக்கு வந்து சென்றிருந்தனர்.பூங்கா முழுவதும் குப்பையும் கூளமுமாக இருந்தது.அதைச் சுத்தப் படுத்திக் கொண்டிருந்தான் சன்னாசி.
செடியைக் கொத்தி சீர் படுத்தும் போது அதனுள்ளே பளபளவென்று தெரியவே என்னவென்று எடுத்துப் பார்த்தான்.இரண்டு சவரன் தேறும் ஒரு தங்கச் சங்கிலி.
சட்டென அதைத் தன் இடுப்பில் செருகிக் கொண்டான்.ஏதும் அறியாதவன்போல் வேலையில் ஈடுபட்டான்.
சற்று நேரத்தில் அழுது கொண்டிருக்கும்  ஒரு சிறுமியைக் கையைப் பிடித்து இழுத்து வ்ந்தார் அவள் தந்தை.அவளிடம் கடுமையாகக் கேட்டார். "எங்கே விளையாடினே?இங்கேயா, இங்கேயா, சொல்லித்தொலையேன்.தேடிப்பார்க்கலாம்."என்றவர் நான்கு தோட்டக்காரர்களையும் விசாரித்தார்.
"யாராவது ஏதேனும் நகை கிடப்பதைப் பார்த்தீர்களா?"
யாரும் பார்க்கவில்லை எனக் கூறிவிட்டனர். சன்னாசிக் கிழவனும் தன் தலையைப் பலமாக இல்லையென்று ஆட்டிவிட்டான்.கண்களில் நீர் நிறைய "அய்யோ  ஆசையாக வாங்கியது போச்சே.
இந்தக் கடனை அடைக்க நான் இன்னும் எத்தனை கஷ்டப் படணுமோ."என்று புலம்பியவாறே தன் பெண்ணை இழுத்துக் கொண்டு வெளியேறினார் அந்த அப்பாவி அப்பா.
சன்னாசிக்குப் பார்க்கப் பாவமாக இருந்தாலும் இதையெல்லாம் பார்த்தால் நாம் கல்லு வீட்டில் உக்கார முடியுமா என்ற எண்ணமும் கூடவே தோன்றியது.
வேகவேகமாக வேலைகளை முடித்துவிட்டு வீட்டுக்குச் சென்று அந்தச் சங்கிலியை பத்திரப் படுத்தி வைத்தான்.
ஒரு வாரத்தில் சன்னாசி நினைத்தவாறே கல்லு வீடு எழும்பத் தொடங்கிற்று. சின்னச்சாமிக்கும் அவன் அம்மாவுக்கும் ஆச்சரியம்.என்ன கேட்டும் சன்னாசி "ஆண்டவன் கொடுத்தாண்டி" என்று சொல்லி அவள் வாயை அடைத்து வந்தான்.
ஒரு மாதம்  ஓடிவிட்டது.வெளியே மழை கொட்டிக் கொண்டிருந்தது.ஈரமான தலையைத் துடைத்தவாறே உள்ளே நுழைந்தான் சின்னச்சாமி.
"ஏண்டா தம்பி இம்மா நேரம்? வேலை எதுவும் கெடைக்கலியா?"
 "அதில்லம்மா, ஒரு பெரியவரு பார்க்குல உக்காந்திருந்தாரு. எழுந்து போகையில பொட்டிய மறந்து வச்சுட்டுப் போயிட்டாரு.அதை எடுத்துக்கினு அவரு வீட்டத் தேடி கொண்டுபோய் கொடுத்திட்டு
வாரதுக்குஇம்மா நேரமாயிடுச்சம்மா."
சன்னாசி மெதுவாக,"அது என்னா பொட்டிடா?"என்று கேட்டான்.
"அது எனக்குத் தெரியாதுப்பா"
"பொழைக்கத் தெரியாத புள்ள"என்றபடியே வெளியே சென்றான் சன்னாசி.
வெளியே லேசாகத் தூறிக்கொண்டிருந்தது திடீரென்று பெரும் மழை பிடித்துக் கொண்டது.நடு இரவில் வெளியே ஒரே கூச்சலாயிருந்தது  கேட்டு சன்னாசி சின்னச்சாமி அவன் தாய் பச்சை  அனைவரும் கதவைத் திறந்து பார்த்தனர்.வெளியே இருந்த குடிசை வீடுகள் எல்லாம் மழையில் அடித்துச் செல்லவே மக்கள் அனைவரும் தங்கள் உடமைகளோடு அருகே இருந்த பள்ளியை நோக்கி ஓடித் தஞ்சம் புகுந்தனர்.
சன்னாசி தான் கல்லு வீட்டில் இருப்பதால் மிகவும் பெருமையோடு மீண்டும் வந்து பாயில் படுத்துக் கொண்டான்.
ஒரு மணி நேரம் போயிருக்கும். திடீரென்று பச்சையம்மா "அய்யோ! எந்திரிங்க வீட்டுக்குள்ளாற தண்ணி வந்திருச்சு" என்று அலறியவாறே சன்னாசியை உலுக்கி எழுப்பினாள். அதற்குள் வீட்டுக்குள் மளமளவென தண்ணீர் உயரத் தொடங்கவே செய்வதறியாமல் உயிருக்கு அஞ்சி ஊர் மக்கள் அனைவரும் தங்கியிருக்கும் பள்ளிக்கூடத்திலேயே மூவரும் தஞ்சம் புகுந்தனர்.
சிறிய பள்ளிக்கூடம் மக்கள் ஏற்கனவே நிறைந்திருந்ததால் சன்னாசி குடும்பத்திற்கு ஒண்டிக் கொள்ளத்தான்  இடமிருந்தது.மீதி இரவை நின்று கொண்டே கழித்தனர் சன்னாசியும் அவன் மகன் மனைவியும்.
மறுநாளும் மழை விடவில்லை. வானம் பொத்துக்கொண்டு ஊற்றியது.வாயிலில் வெள்ளமாகத் தண்ணீர் ஓடியது.பலரது வீடுகள் நீரில் மிதந்து செல்வதைக் கண்டும் செய்வதறியாது அனைவரும் புலம்பிக்கொண்டு நின்றிருந்தனர்.
திடீரென்று சன்னாசியும் கதறினான்.அவனுடைய கல்லுவீட்டின் கதவு மிதந்து சென்றதை கண்டுதான் அலறினான்.யாருக்கு யார் சமாதானம் செய்வது.
அரசு கொடுத்த உணவை உண்டு அன்று பொழுது கடந்தது.மாலை நேரம் சற்றே மழை விட்டதும் அணைத்து ஆண்களும் தங்கள் வீட்டில் உடமைகள் ஏதேனும் மிச்சம் இருக்கிறதா என்று பார்க்க வீட்டுக்குச் சென்றனர்.சன்னாசியும் ஓடினான்.அந்தோ, பரிதாபம்.அங்கே அவன் கட்டியிருந்த வீடு இடிந்து மண்மேடாகக் காட்சியளித்தது.
அப்படியே சரிந்து அமர்ந்தான்.அவன் பின்னால் வந்த சின்னச்சாமி அவனைக் கைத்தாங்கலாக அழைத்து வந்தான்.
அப்போது ஒரு பெரியவர் வண்டிநிறைய துணிமணிகள் போர்வை ஆகியவற்றுடன் உணவுப் பொட்டலங்களும் ஏற்றிக் கொண்டு அங்கு வந்து நின்றார்.இன்னும் தூறல் நின்றபாடில்லை. இருப்பினும் பள்ளியில் ஒதுங்கியிருந்த மக்கள் அனைவரும் உணவுப் பொட்டலத்துக்காக ஓடி வந்தனர்.
அவர்களை வரிசையில் வரும்படி பணியாளர்கள் கூறிக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்தபடியே நின்றிருந்த பெரியவர் தன் முன்னே சின்னச்சாமியைப் பார்த்ததும் முகம் மலர்ந்தார்.
"ஏய் தம்பி, நீதானே அன்னிக்கி என் பொட்டியைக் கொண்டுவந்து கொடுத்தது."அவரைப் பார்த்து வணக்கம் கூறினான் சின்னச்சாமி.
"ஏம்பா, பொட்டியக் குடுத்துட்டு சொல்லாம போயிட்டியே. உன்னை எங்கெல்லாம் தேடினேன்."
"ஏனுங்க ஐயா?என்னை ஏன் தேடினீங்க?"
"உன் பேர் என்ன சொன்னே,  ஆங் சின்னச்சாமி.எவ்வளவு பெரிய உதவி செஞ்சுட்டு நீ பாட்டுக்குப் போயிட்டியே.உனக்கு ஏதானும் பரிசு குடுக்கணுமே அப்படின்னுதான் தேடினேன்."
"ஐயா, உங்க பொட்டியக் கொண்டாந்து குடுத்ததா பெரிய வேலைன்னு சொல்றீங்க.அது என்ன பெரிய காரியமா?"
"ஆமாம் சின்னச்சாமி அம்பது லட்ச ரூபா சொத்து அந்தப் பொட்டில இருந்துது.அதனாலே உனக்கு நான்கடமைப் பட்டிருக்கேன்."
சின்னச்சாமி திகைத்து நின்றிருந்தான்   "சின்னச்சாமி, இந்த இருபதாயிரத்தை  வாங்கிக் கொள். பாவம், மழையில் வீடிழந்து இருப்பாய்.இதை வைத்து கொள். உனக்கு உதவியாக இருக்கும். மழை நின்ற பிறகு என்னை வந்து பார்."என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டுப் போனார்.
தன் மகனின் கையில் ரூபாய் நோட்டுக்களைப் பார்த்த சன்னாசிக்குப் பேச நா எழவில்லை.
அவன் மனம் தான் செய்த செயலையும் தன் மகன் செய்த செயலையும் எண்ணிப் பார்த்தது.ஒரு 'ஏழைத் தந்தை அழ அவரது பொருளைத் தான் எடுத்துக்  கொண்டதால்தான் தான் அழ அந்தப் பொருள் தன்னை விட்டுச் சென்று விட்டது.என்ற உண்மையும் ஒரு நல்ல வழியில் வந்த பொருள் நாம் இழந்து விட்டாலும்  நம்மை வந்து அடைந்தே தீரும்' என்ற அறிவும் அவன் உள்ளத்தைச் சுட்டது. அவன் மனம் திருந்தியது போல் வானம் பளீரென ஒளிவிடத் தொடங்கியது.
வள்ளுவரின் வாக்கு எத்தனை சத்திய வாக்கு!
"அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
 பிற்பயக்கும் நற்பா லவை."
                                  
இந்த உண்மையை அனைவரும் அறிந்து கொண்டால் நமது தேசத்தந்தை மகாத்மா காந்தி கண்ட ராமராஜ்யம் நம் கண் முன்னே தோன்றுமே.





                                                                        


ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

திங்கள், 4 ஜூன், 2012

87-சிறந்த நீதிபதி

ஒரு காலத்தில் நம் நாட்டில் விக்ரமாதித்தன் என்னும் அரசன் உஜ்ஜயினி என்னும் நாட்டை ஆண்டு வந்தான். அவன் காலத்தில் அந்நாட்டில் கலைஞர்களும் கவிஞர்களும்  நிறைந்திருந்தனர். அரசன் குடிமக்களிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்தான்.நீதிநெறி தவறாது ஆட்சி செய்தான்.
மன்னன் விக்ரமாதித்தன் குற்றவாளியைக் கண்ணால் பார்த்தே அவன் குற்றவாளியா நிரபராதியா என அறிந்து கொள்வான்.அத்தகு திறமை படைத்திருந்தான்.அத்தகைய அரசனின் காலம் முடிந்து நகரமும் அழிந்து போயிற்று.அந்த உஜ்ஜயினி நகரமே மண் மேடாகக் காட்சியளித்தது.அந்த நகரம் இருந்த இடத்தில் ஒரு காடும் சிறு கிராமமும் தோன்றியிருந்தது.அந்த கிராமத்தில் வாழும் சிறுவர்கள் மாடு மேய்க்கும் தொழிலைச் செய்து வந்தனர்.
ஒருநாள் அந்தச் சிறுவர்கள் மாடுகளை மேயவிட்டுவிட்டு விளையாடத் தொடங்கினார்கள்.ஒரு சிறுவன் தான்தான் அரசன் என்று கூறிக் கொண்டு அங்கு சற்று உயரமாக இருந்த இடத்தில் வந்து அமர்ந்து கொண்டு மற்ற சிறுவர்களை மிகுந்த அதிகாரம் செய்யத் தொடங்கினான்.அவன் பேச்சுக்கு மறுபேச்சுப் பேசத் தோன்றாத சிறுவர்களும் அவன் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தனர்.
மேடைமேல் அமர்ந்த சிறுவன் சிறந்த நீதிபதி போல் பேசத் தொடங்கினான்.மற்றவர்கள்  வழக்கைக் கூறுவதும் சிறுவன் தீர்ப்புக் கூறுவதுமாக விளையாட்டு தொடர்ந்தது.
தினமும் அவர்கள் அங்கே வந்து விளையாடத் தொடங்கினர்.நீதிபதி விளையாட்டு அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.இந்தச் செய்தி ஊருக்குள் பரவ உண்மையான வழக்குகளும் அந்தச் சிறுவனிடம் வரத் தொடங்கின..மேடை மீது அமர்ந்தவுடன் இந்தச் சிறுவனின் நடை பார்வை பேச்சு எல்லாம் மாறிவிடுவதை ஆச்சரியத்துடன் மக்கள் மன்னனிடம் தெரிவித்தனர்.
இதைக் கேள்விப்பட்ட மன்னன் அந்தச் சிறுவனைக் காணவும் அவன்
தீர்ப்பு சொல்வதைப் பார்க்கவும் மாறுவேடத்தில் நேரில் வந்து கவனித்தான்.அப்போது அந்தச் சிறுவன் முன் வந்த வழக்கை அவன் தீர்த்துவைத்த விதமும் அவனது பேச்சும் ஒரு சிறந்த அரசனுக்குரிய
சிறப்புடன் இருப்பதைக் கவனித்தான். அரண்மனைக்குச் சென்ற மன்னன் அந்த சிறுவனைப் பற்றியும் ஊரைப் பற்றியும் விசாரிக்குமாறு கூறினான்.அப்போதுதான் அந்தக் காடு இருந்த இடத்தில்தான் உஜ்ஜயினி  நகர மன்னர் விக்ரமாதித்தன் வசித்த அரண்மனை இருந்தது என்ற விவரம் தெரிந்தது. உடனே மன்னன் அந்த இடத்தில் ஏதேனும் சிறப்பு இருக்கக்கூடும் என்று எண்ணி அந்த காட்டுக்கு மந்திரி பிரதானிகளுடன் சென்றான்.அங்கு பூமியைத் தொண்டி சோதனை செய்யப் பணித்தான்.அங்கு ஆழத்தில் ஒரு நகரம் இருந்த  அடையாளங்களான கட்டடங்களின் இடிபாடுகள் தெரிந்தன.சிறுவன் அமர்ந்து தீர்ப்புக் கூறிய இடத்தைத் தோண்டியபோது அங்கே ஆழத்தில் ஒரு கல்லாலான பலகை தெரிந்தது.அதைக் கவனமாக வெளியே எடுத்தபோது அதை இருபத்தைந்து பதுமைகள் தாங்கியிருப்பது போல் இருந்ததைக் கண்டு வியந்தான்.
அந்த ஆசனத்தை தன் அரண்மனைக்கு கொண்டு சென்று நல்ல நாளில் சிறப்புப் பூஜைகள் செய்து அந்த ஆசனத்தில் அமரச் சென்றான்.
திடீரென்று அந்த ஆசனத்தில் இருந்த ஒரு பதுமை பேசத் தொடங்கிற்று.
"மன்னா, நீ எந்த ஆசையும் இல்லாமல் இருக்கிறாயா?ஆசையை விட்டவருக்குத்தான் இந்த ஆசனத்தில் அமரும் தகுதி இருக்கிறது."
இந்த வார்த்தைகளைக் கேட்ட மன்னன் தயங்கி நின்றான்.
"எனக்குத்தான் இன்னும் பல நாடுகளைப் பிடிக்கவேண்டும் என்னும் ஆசை இருக்கிறதே "என்று நினைக்கும் போதே அந்தப் பதுமை மறைந்தது.மன்னன் மீண்டும் தன் மனத்தின் ஆசையை ஒழித்துவிட்டு
மீண்டும் பூஜைகள் செய்து அந்த ஆசனத்தில் அமரவந்தான்.அப்போதும் இரண்டாவது பதுமை பேசியது."
"மன்னா,நீ பொறாமையில்லாமல் இருக்கிறாயா?"
 இப்போதும் மன்னன் தயங்கினான்."மன்னனாகிய என்னைவிட அறிவிலும் மதிநுட்பத்திலும் சிறந்தவர்களைப் பார்க்கும்போது என் மனத்தே பொறாமை தோன்றுகிறதே."இவ்வாறு நினைத்த உடனே அடுத்த பதுமையும் மறைந்தது.சற்றும் சலிக்காத மன்னன் மீண்டும் தன் உள்ளத்தைப் பண்படுத்திக் கொண்டான்.ஒருமாதம் கழித்து மீண்டும் சிறப்புப் பூஜைகள் செய்து ஆசனத்தில் அமர வந்தான்.
இப்போது மூன்றாவது பதுமை பேசியது."மன்னா, நீ பொய் பேச எண்ணியதுண்டா?நீதிபதியாய் இருந்து நீ வழங்கிய தீர்ப்பு எல்லாம் சரியானது என்று நினைக்கிறாயா?"
மன்னன் தயங்கினான்.அரசாங்கத்துக்கு கேடு வருமானால் அதை சில பொய்கள் பேசித்தானே  விலக்க வேண்டியுள்ளது.என எண்ணியவன் தான் சொன்ன தீர்ப்பு எல்லாம் சரியாக இருக்குமா என்றும் எண்ணியஉடனே  அந்தப் பதுமையும் மறைந்தது.இப்படியே இருபத்துநான்கு பதுமைகளும் மறைந்தன.
கடைசி நாள் ஒரே ஒரு பதுமை அந்த ஆசனத்தைத் தாங்கி நின்றிருந்தது. இனியாவது இந்த ஆசனத்தில் அமர இயலுமா என்ற ஆசையுடன் மன்னன் அதில் அமரவந்தான்.அப்போது பதுமை பேசிற்று.
"மன்னா, இப்போதும் நீ பொறாமை ஆசை பொய், வஞ்சம் சூது போன்ற தீய குணங்களை விட்டு விட்டு அந்தச் சிறுவனைப் போல களங்கமில்லாமல் இருக்கிறாயா?"
ஆம் என்று துணிச்சலாகக் கூற மன்னனால் இயலவில்லை.ஒரு சிறுவனுக்குள்ள களங்கமற்ற மனம் தன்னிடம் உள்ளதா என எண்ணிப் பார்த்தான்.
அப்போது பதுமை,"மன்னா இந்த ஆசனத்தில் அமரவேண்டும்  என்னும் ஆசையை நீ என்னும் விடவில்லையே. நீ எப்படி களங்கமில்லா மனமுள்ளவன் என நினைக்க முடியும்?"என்று கேட்டவுடன் அந்தப் பதுமை தான் தாங்கியிருந்த ஆசனத்தொடு விண்ணில் பறந்து மறைந்தது.
விக்ரமாதித்தனைப்போல் அவன் அமர்ந்து நீதி சொன்ன ஆசனத்தில் அமர்வதற்கு ஒரு தகுதி வேண்டும்.
"சமன்செய்து சீர்தூக்கும் கொல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி." அன்றோ.
இவ்வாறு எண்ணிய மன்னன் அன்றே தன் தகுதியை உயர்த்திக் கொள்ளும் முயற்சியைத் தொடங்கினான்.
ஒரு நீதிபதி எத்தகு தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும் என்பதை
நாமும்  தெரிந்து கொண்டோமல்லவா.






























ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

செவ்வாய், 22 மே, 2012

86- மானம் காத்த மாவீரன்.-- திருக்குறள் கதைகள்.

சிவந்த கண்களைப் பெற்றிருந்ததால் சோழ மன்னன் செங்கணான் எனப் பெயர் பெற்றிருந்தான்.இவனை வரலாறு கோச்செங்கணான் என்று கூறும்..பெரும் வீரனாக இருந்ததோடு சிறந்த சிவ பக்தனாகவும் இருந்தான்.
ஒரு முறை சேர மன்னன் கணைக்கால் இரும்பொறைக்கும் கோச்செங்கனானுக்கும் போர் மூண்டது.
இருவரும் பெரும்படை கொண்டு போரிட்டனர்.மலைகள் போல் யானைகள் இருதிறத்தில் இருந்தும்  மோதிக் கொண்டன. பல நாட்கள் போர் நீண்டது. சோழனின் பெரும்படையை சேரனின் படைகள் வீரத்துடன் எதிர்த்தன.ஆயினும் கடைசியில் சேரன் தோல்வியைத் தழுவினான்.
கோச் செங்கணான் அவனைக் கைது செய்து குணவாயில் கோட்டம் என்னும் இடத்தில் சிறையில் அடைத்தான். சிறைப்பட்ட கணைக்கால் இரும்பொறை சற்றும் அஞ்சாது நிமிர்ந்து நின்றான்.பகைவனுக்குத் தலை வணங்க மறுத்தான்.அஞ்சாது பேசினான்.நாட்கள் கழிந்தன.
சிறைப்பட்ட சிங்கம்போல் சிறையில் அடைபட்டிருந்தான் இரும்பொறை.
ஒருமுறை சேரனுக்கு சிறையில் தாகமெடுத்தது.நீர் வேண்டும் என்று சிறைக்காவலரைக் கேட்டான்.
கூப்பிட்ட குரலுக்கு உடனே ஆயிரம் பேர் வரக்கூடிய நாடாளும் மன்னனின் குரலுக்கு அந்த சிறைக் காவலர் செவி சாய்க்கவில்லை.காலம் நீட்டித்துப் பின் நீர் கொணர்ந்து கொடுத்தனர்.
அவர்களது அலட்சியத்தை  பார்த்து மிகுந்த அவமானப் பட்டான் கணைக்கால் இரும்பொறை.
அந்த நீரைப பருகாமல் தாகத்தால் வாடித் தன் உயிரை மாய்த்துக் கொண்டான்.
அவன் இறக்குமுன் ஒரு பாடலை எழுதி விட்டு இறந்தான்.
    "குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
       ஆள் அன்று என்று வாளில் தப்பார்"
என்று தொடங்கும் பாடல்தான் அது.தமிழனின் மானத்தின் பெருமையை காட்டக்கூடிய இப்பாடல் புறநானூறு என்னும் நூல் தொகுப்பில் உள்ளது.இதன் பொருள், குழந்தை இறந்து பிறந்தாலும்
வெறும் மாமிசப் பிண்டமாகப் பிறந்தாலும் அதனை வாளால் கீறி மார்பில் வீரத் தழும்பை உண்டாக்கித்தான் புதைப்பர்.அப்படிப்பட்ட வீர மரபில் உதித்த மன்னனான நான் சிறையில் காவலரின் அலட்சியமாகக் கொணர்ந்த இந்த நீரைப் பருகி உயிர் வாழ்வதோ" என்று ஒரு பாடலைப் பாடி உயிர் நீத்தான்.
இந்த வரலாறு பொதிந்த பாடல் இலக்கியச் சான்றாக இருந்து தமிழரின் மானத்தின் உயர்வையும் மானம் இழந்து உயிர் வாழாமை என்ற சிறப்பையும் நமக்கு எடுத்துக் காட்டுகிறதன்றோ.
வள்ளுவரின்
"மயிர்நீப்பின் வாழாக் கவரிமான் அன்னார்
 உயிர்நீப்பர்  மானம் வரின்."
என்ற குறளின் பொருளையும் நமக்கு நன்கு உணர்த்துகிறதன்றோ?




ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

வெள்ளி, 11 மே, 2012

85- மரியாதைராமன் கதைகள்.

.   ஒரு ஊரில்மூன்றுசோம்பேறிகள் இருந்தனர்..அவர்கள் ஊரை ஏமாற்றிப பிழைப்புநடத்திவந்தனர்.
கிடைத்ததை உண்டு கோவில் குட்டிச் சுவரில்  படுத்து உறங்கி காலம் கழித்து வந்தனர். .ஒரு நாள் அவர்கள்யாராவது பெரிய பணக்காரரிடம் பெரும் பணத்தைத் திருடுவது
 என்று முடிவு செய்தனர்..        
அதன்படியே அருகே இருந்த பெரிய நகருக்குச் சென்று ஒரு நகை வியாபாரியின் வீட்டில் நகைகளைத் திருடி விட்டு மீண்டும் தங்கள் ஊருக்கே வந்தனர்.திருடிய நகைகளை ஒரு குடத்தில் போட்டு மூடி வைத்தனர்.அதை யாரிடமாவது கொடுத்து பத்திரப் படுத்த வேண்டும் என நினைத்தனர்.
அந்த ஊரில் ஒரு வயதான பாட்டி இருந்தார்.அவர் ஒரு உணவுக்கடை நடத்தி வ்ந்தார்.
அந்தப் பாட்டியிடம் தாங்கள் திருடிய குடத்தைக் கொடுத்து வைப்போம் என முடிவு செய்தனர் திருடர்கள்.
அனைவரும் பாட்டியின் வீட்டுக் கதவைத் தட்டினர்.தூக்கக் கலக்கத்துடன் வந்து கதவைத் திறந்த பாட்டி,"ஏனப்பா இந்த வெய்யில் நேரம் வந்து கதவைத் தட்டுறீங்க.சாப்பாடெல்லாம் காலியாயிடுச்சே"
என்றார்.
ஒரு திருடன் "ஏய் பாட்டி, எங்களுக்குப் பசிக்குது உடனே சாப்பாடு செஞ்சு போடு. உனக்குப் பணம் தரோம் "என்று ஆசை காட்டினான்."
பாட்டி சிரித்தார்."தம்பி பணத்துக்காக இல்லாட்டாலும் பசியால வாடுற உங்க முகத்துக்காக சமைச்சிப் போடுறேன்"
அனைவரும் மகிழ்ச்சியுடன் "பாட்டி நீ ரொம்ப நல்ல பாட்டி"என்றபடியே அமர்ந்தனர்.
அப்போது மூத்தவனாக இருந்த திருடன் பாட்டியிடம் நகைகள் வைக்கப்பட்டிருந்த அந்தக் குடத்தைக் கொடுத்து"பாட்டி நாங்க மூணு பேரும் வந்து கேட்டாதான் இந்தப் குடத்தைக்  கொடுக்கணும். தனியா யார் வந்து கேட்டாலும் குடுக்கக்கூடாது."என்றான்.அந்தக் குடத்தைப் பெற்றுக் கொண்ட பாட்டி
"சரிப்பா, நீங்கெல்லாம் குளிச்சுட்டு வாங்க .சமையல் முடிஞ்சுடும் "என்றார்.
மூன்று பெரும் மகிழ்ச்சியாகச் சிரித்தபடியே தொலைவில் இருந்த கிணற்றுக்குச் சென்றனர்.
கிணற்றுக்குள் குதித்துக் குளிக்கலாம் என எண்ணி எட்டிப் பார்த்தனர். தண்ணீர் மிக ஆழத்தில்
இருந்தது.நீரை இறைத்துத்தான் குளிக்கவேண்டும் என முடிவு செய்தனர்.
மூத்தவன் மற்றவனைப் பார்த்து "நீ போய் பாட்டியிடம் குடமும் கயிறும் வாங்கி வா.நீரை இறைத்துக் குளிப்போம்."என்றான்.
கிணறு சற்றுத் தொலைவில் இருந்தது.எனவே கட்டளையை ஏற்றுக் கொண்ட திருடன் வேகமாக ஓடினான்.வீட்டு வாயிலில் நின்று யோசித்தான்.அந்தக் குடத்தை நாமே எடுத்துச் சென்றால் நல்லதாயிற்றே.பொருள் முழுவதும் நமக்கே சொந்தமாகிவிடுமே"என சிந்தித்தான்.
பாட்டியை அழைத்து அவளிடம் அந்தக் குடத்தைக் கேட்டான்.
"மூணு பேரும் சேர்ந்து வந்தால்தானே குடுக்கச் சொன்னார். நீ மட்டும் வந்து கேட்கிறாயே?"
"நாங்கள் இங்கேயே பங்கு பிரித்துக் கொள்ளப் போகிறோம் அதனால்தான் கேட்டனுப்பினார்.
வேண்டுமானால் நீயே கேட்டுக் கொள்."
உடனே பாட்டி உரக்க "என்னப்பா குடுக்கட்டுமா?" என்றார்.
கிணற்றடியில் அமர்ந்திருந்த பெரிய திருடன் அங்கிருந்தபடியே, "குடு பாட்டி, குடு."என்று கத்தினான்.பிறகு மற்றவனுடன் சுவாரசியமாகப் பேசத் தொடங்கினான்.
குடத்தைப் பெற்றுக் கொண்டவன் அங்கிருந்து பின்வாசல் வழியாக வேகமாக  ஓடி மறைந்தான்.
வெகு நேரமாகியும் குடத்தை வாங்கி வரச் சென்றவன் வரவில்லையே என்று காத்திருந்த இருவரும்
பாட்டியிடம் வந்தனர்."என்ன பாட்டி எங்க தோஸ்து வந்தானே குடத்தைக் கொடுக்க இத்தனை நேரமா?"
"நான் அப்போதே குடுத்திட்டேனே.அவன் வரலையா?"
"என்ன! அப்போதே குடுததிட்டயா?நீ எந்தக் குடத்தைச் சொல்றே?நாங்க குடுத்த குடத்தையா?"
"ஆமாம். நீதானே கேட்டு அனுப்பினே?நானும் உன்னைக் கேட்டேனே?நீதானே குடுன்னு சொன்னே?"
அந்தத் திருடன் தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டான். இரண்டு பேரும் தங்களிடம் நண்பனாக இருந்தவன் தங்களை ஏமாற்றி விட்டான் எனப் புரிந்து கொண்டனர்.
"ஐயோ ஏமாற்றி விட்டானே! கூட இருந்தே குழி பறித்துவிட்டான்."எனப் புலம்பினர்.அவர்களின் துயரமெல்லாம் பாட்டியின் மீது கோபமாகத் திரும்பியது.
"ஏய் கிழவி, உன்னிடம்தான் குடத்தைக் கொடுத்தேன். நாங்கள் மூணு பேரும் வராமே ஒருத்தன் மட்டும் வந்து கேட்டா நீ ஏன் குடத்தைக் குடுத்தே. இப்போ நீதான் எங்களுக்கு அந்தக் குடத்தைக் குடுக்கணும்.இல்லாட்டா வா எங்களுடன் நியாய சபைக்கு."
பாட்டி எவ்வளவு சமாதானம் செய்தும் அந்தத் திருடர்கள் இருவரும் பாட்டியை மரியாதை ராமனின் நியாய சபைக்கு இழுத்துச் சென்றனர்.
நீதிபதி ஆசனத்தில் ஒரு இளம் பாலகன் அமர்ந்திருந்தான்.அவன்தான் மரியாதை ராமன்
இவர்களின் வழக்கைக் கேட்டான் ராமன்.பாட்டியிடம் அன்புடன் பேசினான். பாட்டியின் வாக்கு உண்மை என்பதைப் புரிந்து கொண்டான்.அந்தத் திருடர்களைப் பார்த்து விசாரித்தான்.
"அந்தக் குடத்தில் என்ன இருக்கிறது.?"
"அத்தனையும் நகைகள் ஐயா, எங்கள் பூர்வீக சொத்துங்க"
"அதை மூன்று பேரும் பங்கிடவேண்டுமானால் நீங்கள் மூவரும் சகோதரர்களா?"
இதைக் கேட்ட இருவரும் திரு திருவென விழித்தனர்.
அதே சமயம் , ஒரு நகை வியாபாரி தன் கடையிலிருந்த நகைகள் திருட்டுப் போய் விட்டன. தயவு செய்து அதை மீட்டுத் தரவேண்டும் என்று ஓவென்று அழுதார்.
ராமனுக்கு இப்போது புரிந்து விட்டது.இந்தத் திருடர் மூவரும் இந்த நகைகளைத்தான் திருடி குடத்தில் போட்டு பாட்டியிடம் கொடுத்திருக்கிறார்கள்.அதை ஒருவன் ஏமாற்றி விட்டான்.
இவர்கள் பாட்டியின் மேல் பழி சுமத்துகிறார்கள்  என்பதைப் புரிந்து கொண்டான்.
"ஐயா நீங்கள் கவலைப் படாதீர்கள் உங்கள் பொருள் என்னும் ஒரு வாரத்தில் உங்களுக்குக் கிடைக்கும் போய்வாருங்கள்" என நகைக் கடைக்காரரை அனுப்பினான்.
பின்னர் அழுது கொண்டிருக்கும் பாட்டியைப் பார்த்து,"பாட்டி அழாதீங்க.உங்கள்மேல் எந்தக் குற்றமும் இல்லை.இப்போது அந்தக் குடம் உங்களிடமே இருக்கிறது என வைத்துக் கொள்ளுங்கள் .இவர்கள் மூவருமாக வந்து கேட்டால் கொடுப்பேன் எனச் சொல்லுங்கள் மூன்றாமவனை இவர்களே தேடிக் கொண்டுவரட்டும்.நீங்கள் அமைதியாகச் செல்லுங்கள் இதுவே நான் வழங்கும் நீதி.."என்று பாட்டியை அனுப்பிவிட்டு
திருடர்களைப் பார்த்து"நீங்கள்தானே நகை வியாபாரி வீட்டில் திருடியது? அந்த நகையைத் தானே குடத்தில் மறைத்து வைத்தது?உண்மையைச் சொல்லுங்கள் இல்லையேல்..."
திருடர்கள் இருவரும் மரியாதை ராமனின் முன் மண்டியிட்டு குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.
அவர்களைச் சிறையில் அடைக்கச் சொன்னான் ராமன்.திருட்டு நகையுடன் ஓடிவிட்ட மூன்றாமவனை ஒரு வாரத்தில் பிடிக்கவேண்டும் என சேவகர்களுக்குக் கட்டளை பிறப்பித்தான்.
தங்களது விதியை நொந்துகொண்டே சிறைக்குச் சென்றனர் இரண்டு திருடர்களும்.ராமனை மனமார வாழ்த்தினார் பாட்டி.
நல்ல நீதி வழங்கிய ராமனை மக்களெல்லாரும் பாராட்டினர்.
இப்படிப்பட்ட சிந்திக்குக் ஆற்றல் நீதி வழங்கும் நீதிபதிகளுக்கு வேண்டும் என்பதை இந்த வரலாறு நமக்குச் சொல்கிறது.


ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com