வெள்ளி, 8 மார்ச், 2013

102--திருக்குறள் கதைகள்.-காலத்தினால் செய்த நன்றி.

செல்லப்பன் ஒரு தொழிற்சாலையில் பணி புரிந்து வந்தான்.அவனுக்கு ஒரு மகன் இருந்தான்.ரவி என்று பெயரிட்டு மிகவும் செல்லமாக வளர்த்து வந்தான்.அவனுக்கு பத்து வயதுதான் இருக்கும்.
செல்லப்பனுக்கு தன மகன் மீது கொள்ளை பிரியம்.தினமும் அருகில் இருக்கும் ரொட்டிக் கடையில் ரொட்டி வாங்கிக்கொடுத்து அவன் தின்ற பிறகே வேலைக்குச் செல்வான். ரவியும் அப்பாவின் மடியில் அமர்ந்து கொண்டு ரொட்டி தின்றுவிட்டுப் பள்ளிக்குச் செல்வான்.
ஒருநாள் தொழிற்சாலைக்குச் சென்ற செல்லப்பன் விபத்தில் அடிபட்டு இறந்துவிட்டார்.
அவன் அம்மாவோ ராணிமாதிரி வாழ்ந்தவள் இப்போது கணவன் செய்த கூலிவேலைக்குச் செல்லத் தொடங்கினாள். சிலநாட்கள் வரை தன கணவன் செய்தது போல் மகனுக்கு ரொட்டி வாங்கிக் கொடுத்தாள். அவளுக்கு உடல்நலம் பாதிக்கப் பட்டதால் வேலைக்குச் செல்ல முடியவில்லை.அதனால் ரொட்டி வாங்கிக் கொடுக்க இயலவில்லை.ஆனால் சிறுவனான ரவிக்கு இதெல்லாம் புரியாது. அவன் தினமும் ரொட்டிக் கடைமுன் சென்று நின்று அழுதுகொண்டு இருப்பான்.
ஒருநாள் அந்த ரொட்டிக் கடை முதலாளி அவனிடம் ஒரு ரொட்டியைக் கொடுத்தார். மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்டான்.மறுநாளும் அங்கு வந்து நின்றான்.அந்த முதலாளி அவன் கையைப் பிடித்து அருகே அமர்த்திக் கொண்டார்.
"தம்பி ரவி, நான் தினமும் உனக்கு ரொட்டி தாரேன்.தின்னுட்டு நீ பள்ளிக்கூடம் போகணும்.அங்கே உனக்கு மதியச் சாப்பாடு போடுறாங்க இல்லே 
அதைச் சாப்பிட்டுட்டு நல்லாப் படிக்கோணும்.உனக்குப் பதினெட்டு வயசானப்புறம் நீ ப்ளஸ் டூ முடிச்சப்புறம் என் கடையிலேயே வேலை செய்யணும்.செய்வியா?"என்றார். தினமும் ரொட்டி கிடைக்கும் என்ற மகிழ்ச்சியுடன் தலையை ஆட்டினான் ரவி.ரொட்டியை வாங்கித் தின்றுவிட்டு பரபரப்புடன் வீட்டுக்குள் நுழைந்தான். தன் நீலக் கால்சட்டையையும் வெள்ளைச் சட்டையையும் தேடிப்  போட்டுக் கொண்டான். நெற்றியில் திருநீற்றை இட்டுக் கொண்டு கையால் தலையை ஒதுக்கிக் கொண்டான்.மூலையில் கிடந்த தன பையையும் புத்தகங்களையும்  தேடி எடுத்துக் கொண்டவன் 'அம்மா, நான் இஸ்கூலுக்குப் போய்வாறேன்"  என்றபடியே ஓடினான். அவன் செயலைப் பார்த்துக் கொண்டிருந்த அவன் அம்மாவுக்கு மனம் மகிழ்ச்சியடைந்தது.
வருடங்கள் செல்லச் செல்ல ரவிக்குக் கல்வி அறிவோடு நல்ல ஒழுக்கமும் வளர்ந்தது.இப்போது அவன் பத்தாவது படிக்கும் மாணவன்.
மாலைநேரத்தில் பள்ளிவிட்டபின் ரொட்டிக்கடை முதலாளிக்கு உதவியாக இருக்கத் தொடங்கினான்.ஏனென்றால் தினமு ஓசியில் ரொட்டி வாங்கித் தின்ன அவன் மனம் இடம் கொடுக்க வில்ல.அவன் தன்மானத்தைப் பார்த்த அந்த முதலாளிக்கு அவன்மீது மிகுந்த மதிப்பு  ஏற்பட்டது.
நல்ல முறையில் பத்தாம் வகுப்புத் தேறிய ரவிக்கு அந்த முதலாளி பாராட்டுத் தெரிவித்ததோடு மேலே படிக்க உதவுவதாகக் கூறினார்.ஆனால் தன அம்மாவை நல்ல முறையில் காப்பாற்றவேண்டுமானால் வேலை செய்துதான் ஆகவேண்டும் என்ற ரவி அந்தக் கடையிலேயே வேலை செய்வதாகக் கூறிவிட்டான்.
அதை ஏற்றுக் கொண்ட கடை முதலாளி அவனுக்கு ஒரு சிறிய ரொட்டிக் கடை வைத்துக் கொடுத்தார். ஐந்தாண்டுகளில் ரவி நல்ல நிலைக்கு உயர்ந்தான்.அவனது அயராத உழைப்பும் நாணயமும்தான் அவனை உயர்த்தின.
அன்று ரவியின் கடை திறந்த ஐந்தாம் ஆண்டு விழா.கடை அலங்கரிக்கப்பட்டு வந்தவர்களுக்கு அமர இருக்கைகள் போடப்பட்டிருந்தன தனக்கு உதவி செய்து தன்னை உயர்த்திய முதலாளியை வணங்கி அவருக்கு மாலையிட்டு மரியாதை செய்தான் ரவி.
மிகவும் கூச்சத்துடன் அந்த முதலாளி,"ரவி இதென்னப்பா, எனக்குப் போயி மாலையெல்லாம்..." என்று கூறினார். 
ரவியோ அவர் கால்களில் விழுந்து வணங்கினான்.
"ஐயா, நீங்க இல்லேன்னா இன்னைக்கி நான் இல்லே."
"என்னப்பா ரவி,உன்னோட உழைப்பாலே நீ முன்னுக்கு வந்தே.என்னை எதுக்கு இப்படி உயர்த்தி வைக்கிறே?"
"ஐயா, நான் சின்னப் பையனா இருந்தப்போ நீங்க ரொட்டித் துண்டைக் குடுத்து பள்ளிக்கூடம் போன்னு  சொன்னதாலே நான் படிச்சேன்.
நல்ல விஷயங்களைக் கத்துக்கிட்டேன்.உங்ககிட்டேருந்து உழைப்பையும் கத்துகிட்டேன்.நீங்க என்னை அன்னிக்கி விரட்டி விட்டிருந்தா,ஒரு ரொட்டித்துண்டாலே நான் திருடனா ஆகியிருப்பேன்.இன்னைக்கி நான் உயர்ந்து நிக்க நீங்கதான் ஐயா காரணம்."
"என்னப்பா இது, ஒரு சின்ன உதவி செய்ததையா நீ இவ்வளவு புகழ்கிறே?"
"ஐயா, 
                   "காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும் 
                     ஞாலத்தின் மாணப் பெரிது."     அப்படீன்னு படிச்சிருகேனய்யா. என்னுடைய சின்ன வயசுல நீங்க செஞ்ச உதவி இந்த உலகத்தை விடப் பெருசுங்கய்யா."என்று கண்களில் நன்றிக் கண்ணீருடன் பேசினான் ரவி.
ரவியின் நன்றி பாராட்டும் பண்பையும் அவன் முதலாளியின் தகுந்த காலத்தில் உதவி செய்யும் குணத்தையும் மறவாமல் அவர்களைப் போல வாழ்ந்தால் வாழ்க்கை சிறப்பாக அமையுமல்லவா?





ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

ஞாயிறு, 13 ஜனவரி, 2013

pongal vaazhththu.

பொங்கல் வாழ்த்து.


அன்பு நெஞ்சங்களுக்கு என் இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
 இறையருளும் திருவருளும் கிடைக்கப் பெற்று அனைவரும் வாழ்வாங்கு வாழ்ந்திட 
இறைவனை வேண்டிக் கொள்கிறேன். பால் பொங்குவதுபோல் உள்ளம் மகிழ்ச்சியில் பொங்கட்டும்.பொங்கலைப் போல 
வாழ்வில் இனிமை  பெருகட்டும்.
அன்புப் பாட்டி,
ருக்மணி சேஷசாயி.






ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

வெள்ளி, 28 டிசம்பர், 2012

anumaan


-
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

101-ஆழி கடந்தான் வாழி.


இதிகாச நாயகனான் ஸ்ரீராமபிரான் மனைவிசீதையைப் பிரிந்து அவளைத் தேடிக் கொண்டு வரும்போது ரிஷ்ய முகப் பர்வதம் என்னும் இடத்தில் 

ஆஞ்சநேயனைச் சந்திக்கிறான்.

இருவர் உள்ளங்களும் அன்பினால் இணைகின்றன அனுமா என அழைத்து அவனைத் தன அன்பு வலைக்குள் கட்டுகிறான் ராமன்.

சீதையைப் பற்றிக கூறி  அவளைத் தேடிக் கண்டுபிடித்து வர  அனுமனே ஏற்றவன் என முடிவு செய்து அவனிடம் அப்பணியை தருகிறான் ராமன். . 

வானர சேனை புறப்படுகிறது.ராமன் அவர்களிடம், வழியில் ஒரு பறவை கூறியதான செய்தியைக்  கூறுகிறான்.

"அனுமா, சீதையை தெற்குப் பக்கமாக ஒரு அரக்கன் தூக்கிச் சென்றதைக் கண்டதாக ஜடாயு என்னும் பறவைகூறியது .எனவே எல்லாப் பக்கமும் 

செல்லுங்கள்.ஆனால் தெற்குப் பகுதிக்கு அனுமன் செல்லட்டும்" எனக் கூறினான்.

வானரங்கள் எல்லாம் ஆரவாரத்துடன் புறப்பட்டன.தெற்குப் பகுதிக்குச் செல்ல அனுமன் கடற்கரையில் வந்து நின்றான்.பெரிய கடல்.இதைத் தாண்ட 

வேண்டுமே.என்னால் எப்படி முடியும் இதைத் தாண்டிச் செல்லக் கூடிய வலிமை என்னிடம் உள்ளதா?எனச் சிந்தித்தவாறு நின்று விட்டான் அனுமன்.

அப்போது ஜாம்பவான் என்ற கரடிராஜா அனுமனைப் பற்றி அறிந்தவர் அவனது பண்பு நலன்களைக் கூறுகிறார்.இளம் வயதில் அனுமான் விளையாட்டுப் பிள்ளையாக ரிஷிகளைத் தொல்லைப் படுத்தி வந்தான். அதன் பயனாக ரிஷிகள்  அவனது பலம் அவனுக்கு மறந்து போகும். யாரேனும் நினைவு படுத்தினால்தான் அவனுக்கு அது மீண்டும் பயன்படும் என்று சாபமும் அதன் விமோசனமும் கூறியிருந்தனர்.இதனை அறிந்தவர் ஜாம்பவான் மட்டுமே.
அதனால் கடலை எப்படிக் கடப்பது என்று சோர்ந்திருந்த அனுமன் முன்பு அவனைப் பற்றி கூறலானார்."அனுமா, மிகவும் பராக்கிரமம் வாய்ந்தவன் நீ.உன்னால் ஆகாத செயல் என்று ஒன்றும் இல்லை."எனப் பலவாறு கூற அனுமன் நிமிர்ந்து நின்றான். அவன் பலமும் திறமையும் அவனுக்குப் புரிபடலாயிற்று.தேவர்கள் பல வரங்களை அளித்ததும் கடைசியில் பரமேஸ்வரன் சிரஞ்சீவி எனக் கூறியதும் அனுமனின் நினைவுக்கு வர 
தான் ஒருவனல்ல.தேவர்களின் தொகுப்பே நான் என்ற எண்ணம் எழ புதிய பலத்தோடு எழுந்தான் அனுமன்.ஜாம்பவானை வணங்கினான்.தன்னை யாரெனக் காட்டிய மகானல்லவா அவர்!
தெற்கு நோக்கி அனுமனைச் செல்லப் பணித்த ராமன் அடையாளமாகக் கொடுத்த கணையாழியை பக்தியுடன் எடுத்து வணங்கிய அனுமன்
இனியும் தாமதித்தல் தகாது என எண்ணி சூரியனையும் தன தந்தையான வாயுவையும் வணங்கினான் .அடுத்த கணம் அவன் உடலுக்குள் பெரிய மாற்றம் ஏற்பட்டது.ஆகாயத்தை நோக்கி பறந்தான் அனுமன்.
ராமபாணம் எப்படிப் பறக்குமோ அப்படிப் பறந்து கொண்டிருந்தான் அனுமன்.அப்போது கடலின் நடுவே இருந்து ஒரு பெரிய மலை அவன் முன்னே தோன்றி அவனது வழியை மறித்தது.அனுமன் திகைத்து நின்றான்.
மைனாகமலை என்ற பெயர் கொண்ட அந்த மலை அனுமனைப் பார்த்துப் பேசியது."அனுமா, ராம காரியமாகப் போகிறாய் நீ என்பது எனக்குத் தெரியும்.இந்திரனிடமிருந்து நான் தப்பிக்க உன் தந்தை ஒரு சமயம் உதவி புரிந்தார்.அவருக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு உனக்கு நான் உதவ எண்ணுகிறேன்.களைத்திருக்கும் நீ என்மலையில் சற்று நேரம் ஓய்வெடுத்துச் செல்,உன்மேனி என்மீது படுவதால் நானும் ராமனுக்கு உதவியவனாவேன்." என்ற மைனாகமலையின் சொற்களைக் கேட்டு அனுமன்,"மைனாகபர்வதமே, உன் சொல் கேட்டு மிக்க மகிழ்ச்சியடைந்தேன். ஆனால் ராமகாரியத்தை முடிக்கும் வரை எனக்கு களைப்பே ஏற்படாது உன் உபசரிப்புக்கு மிக்க நன்றி" எனக் கூறி "திரும்பி வரும்பொழுது உன் சொற்படி நடப்பேன். இப்போது என்னைப் போக விடுக"என்றான்.
மைனாகபர்வதத்தினால் அதற்குமேல் அனுமனைத் தடுக்க  இயலாமல் போகவே  மேலே போக விடுத்தான்.மீண்டும் வேகமெடுத்துப் பறந்தான் அனுமன்.ஒரே சீரான வேகத்தில் பறந்த அனுமனின் முன் ஒரு அரக்கி தன கோர உருவத்தோடு காட்சியளித்தாள்.பெரும் புதர் போன்ற தலைமயிரும். பெரும் மைதானம் போன்ற நெற்றியும்,இரண்டு குளங்களைப் போன்ற கண்களும், மரத்தின் தண்டு போன்ற மூக்கும், பெரிய குகை போன்ற வாயும் அவளைப் பார்க்கவே அருவருப்பாகவும் அச்சமாகவும் இருந்தது. அவள்தான் சுரசை என்னும் அரக்கி.
வேகமாகப் பறந்து கொண்டிருந்த அனுமான் தன வேகத்தைக் குறைத்து அவள் முன் நின்றான்.
"ஏ  அரக்கியே, என்னை ஏன் தடுக்கிறாய்?ராமகாரியமாக நான் செல்வதைத் தடுக்கும் நீ  யார்?"
"எனக்குப் பசிக்கிறது உன்னைத் தின்று என் பசியைப் போக்கிக் கொள்ளப் போகிறேன் " என்ற அந்த அரக்கி தன வாயை மிகவும் பெரிதாகத் திறந்தாள்.அனுமனும அவள் வாயை விடப் பெரிதாக வளர்ந்தான். திடீரெனத் தன உருவத்தை ஒரு கட்டைவிரல் அளவு சுருக்கிக் கொண்டுஅரக்கியின் வாய் வழியே உள்ளே நுழைந்து மூக்கின் வழியே வெளியே வந்து குதித்தான்.
சற்று நேரத்திற்குள் நடந்த நிகழ்ச்சியை அறிந்த சுரசை "வாயுகுமாரா உன் திறமையை மெச்சினேன்.உன் ஆற்றலை அறியவே நான் இவ்வாறு வந்தேன்.நீ செல்லும் காரியம் வெற்றி பெறும்.இனித் தொடர்ந்து செல்வாயாக" என்று வாழ்த்தி வழியனுப்பி வைத்தாள். அந்த சுரசை.
அவளிடமும் வரம் பெற்று தொடர்ந்து பறந்தான் அனுமன்.
இனி ஏதும் தடை வராது என்று எண்ணியவனது வேகம் தடைப் பட்டது. விண்ணில் பறந்து கொண்டிருந்தவனின் நிழல் நீரில் விழ அந்த நிழலைப் பற்றி இழுத்தாள் சிம்ஹிகை என்ற அரக்கி.அவள் இலங்கையைச சுற்றியுள்ள கடல் பகுதியைக்  காவல் காக்கும் அரக்கி.ஒருவரின் நிழலையே பற்றி அந்த நிழலுக்குரியவரையே தன வசம் இழுத்து சம்ஹாரம் செய்யக்கூடிய ஆற்றல் வாய்ந்தவள்.
அனுமன் தன உயரத்திலிருந்து கீழே இறங்கி சிம்ஹிகையைப் பார்த்தான். சுரசையைப் போலவே மிகப் பெரிய வாயும் தலையுமாக மிகக் கோர ரூபத்தோடு காட்சியளித்தாள் சிம்ஹிகை.சுரசையிடம் காட்டிய அதே தந்திரத்தை இவளிடமும் காட்டுவோம் என முடிவு செய்து கொண்டான்.சிறு தும்பிப் பூச்சியளவு தன்னைச் சுருக்கிக் கொண்டு அவளின் தொண்டை வழியாக வயிற்றுக்குள் சென்றவன் அடுத்த நொடி உடலை மலையளவு ஆக்கிக் கொண்டு சுரசையின் உடலைப் பிளந்து கொண்டு வெளியே வந்தான்.அலறிக் கொண்டே உயிரை விட்டாள்  அந்த அரக்கி.
தொடர்ந்து பறந்தவன் முன் இலங்கை தென் படலாயிற்று.
மகிழ்ச்சியுடன் அம்மாநகரின் வாயிலில்உள்ள லம்ப பர்வதத்தின் மேல்  சென்று குதித்தான் அனுமான்.
அங்கிருந்து இலங்கை மாநகரின் எழிலைப் பார்த்துத் திகைத்தான்.தேவேந்திரப் பட்டணம் போலத் திகழ்ந்தது இலங்கை.மெதுவாக இடது காலை முதலில் எடுத்துவைத்து நகருக்குள் புக எண்ணினான்.
அப்போது திடீரென்று இடி இடிப்பது போல் நகைப்புச் சத்தம் கேட்டது.எக்காளச் சிரிப்புடன் ஒரு பெண் அங்கு நின்றிருந்தாள். அவள் உருவமும் சுரசையின் உருவம்போல மிகப் பயங்கரமாக இருந்தது.சடை பிடித்த தலைமயிரும் கரிய பெரிய நெற்றியும் அதில் தீப்பிழம்பு போன்ற கண்களும் பெரிய பாறைகளை அடுக்கிவைத்ததுபோலப் பற்களும் கழுத்தில் அணிந்திருந்த கபாலமாலைகளும் அவள் ஒரு அரக்கி என்று பறைசாற்றின.
அவளை நேராகப் பார்த்தான் அனுமான்.அவளுக்கோ அதிர்ச்சி. தன்னைப் பார்த்து அஞ்சாமல் வேடிக்கை பார்க்கும் ஒரு வானரனைப் பார்த்து 
"யார் நீ?" என்று இடி போல முழக்கினாள். "நீ யார் என முதலில் கூறு."என பதிலுக்குக் குரல் கொடுத்தான்.அனுமான்.
தன்னை நோக்கி அஞ்சாத அனுமனைக் கண்டு திகைத்த அரக்கி "நான் லங்கிணி. இந்த இலங்காபுரியின் காவல் தேவதை. லங்காபுரிக்குள் அந்நியர் 
யாரையும் அனுமதிக்க முடியாது  இது ராவணனின் கட்டளை.ஓடிப்போ" என்று கர்ஜித்தாள்.
"நான் உள்ளே நுழைந்தே தீருவேன் "என்று கூறி முடிக்குமுன் லங்கிணி அவன் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டாள்.அடுத்தகணம் அனுமான் உள்ளம் கோபத்தீயால் நிறைந்தது. தன வலிமையைத் தன ஒரு கைக்குள் தேக்கி கையை மடக்கி அவள் மார்பில் ஓங்கி ஒரு குத்து விட்டான்.அவ்வளவுதான். வாயில் ரத்தம் கக்கியபடி லங்கிணி தரையில் சாய்ந்தாள். அவள் வாய் "பிரம்மன் சாபம் பலித்து விட்டது "என்று முணுமுணுத்தது.
அதைக்கேட்ட அனுமான் "லங்கிணி என்ன கூறுகிறாய் நீ?" என்றான் வியப்புடன்.
"நான் பிரம்மனை ஆராதிப்பவள்.  இந்த  இலங்கைக்கு ஒரு வானரன் வருவான் அவன் கையினால் நீ தாக்கப் படுவாய். அப்போது முதல் இந்த இலங்கைக்கு அழிவு காலம் ஆரம்பம்.விரைவிலேயே இந்த மாநகரம் அக்கினிக்கு இரையாகும் என்று கூறினார். அவர் கூறியபடி உன்னால் நான் தாக்கப் பட்டேன் இனி இந்த நகரம் அழிவது உறுதி.உனக்கு இனி வெற்றி கிட்டும். நான் வருகிறேன்" என்றபடி மறைந்தாள்  லங்கிணி.
மகிழ்ச்சியுடன் இடது காலை முன்னே வைத்து இலங்கைக்குள் புகுந்தான் அனுமான்.
இரவு வந்துவிட்டது.அரண்மனை முதல் அனைத்து இல்லங்களிலும் மக்கள் உறங்கும் இடங்கள் முழுவதும் தேடினான்.
  தோளில் அவன் ஆயுதமான "கதை"யைச  சுமந்துகொண்டு நிமிர்ந்த நடையும் எங்கே சீதை என்று தேடிய கண்களுமாக இலங்கை நகரின் வீதிகளில் ராஜநடை நடந்து தேடினான்.
நேரம் ஓடிக்கொண்டிருந்தது. அழகிய அரண்மனைக்குள் புகுந்த அனுமான் ராவணன் மனைவி மண்டோதரியைப் பார்த்து சற்றே சந்தேகப் பட்டான்.
பின் மாற்றான் அரண்மனையில் ஜானகி மாதா சயனித்திருக்க மாட்டாள் என்று தெளிந்து தொடர்ந்து தேடினான்.
கும்பகர்ணன் விபீஷணன் போன்றோர் அனைவரின் அரண்மனைகளிலும் தேடிக் களைத்தான். உயரமான உப்பரிகையில் நின்று பார்த்தபொழுது தொலைவில் அடர்ந்த வனம் தெரிவதைக் கண்டான்.அதில்தான் சீதை சிறைப் பட்டிருக்கவேண்டும் என முடிவு செய்து அங்கு மரத்தினூடே ஒளிந்து சென்றான். தான் ஒளிந்திருந்த சிம்சுபா மரத்தை விலக்கிக் கீழே பார்த்தான்.
பகல் நேரத்து நிலவாக ஒளியிழந்து சோகமே உருவாக அமர்ந்திருந்த சீதையைக் கண்டான். 
ராவணனின் ஆசை வார்த்தைகளால் அவமானமும் துயரமுமடைந்த சீதை தன உயிரை மாய்த்துக் கொள்ளத் துணிந்தாள். அதைத் தடுக்க ராம நாமத்தை ஜபிக்கத் தொடங்கினான் அனுமான்..அதிகாலை நேரம் ராம நாமத்தை கேட்ட சீதை மனம் மகிழ்ந்து  தன முன் நின்ற அனுமனைக் கனிவுடன் பார்த்தாள்.
சீதையிடம் தான் ராமதூதன் என்பதை நிலைநாட்டி ராமன் கொடுத்த கணையாழியைத் தந்து சீதையிடமிருந்து சூளாமணியைப் பெற்றுக் கொண்டு சீதையிடம் விரைவில் ஸ்ரீராமர் படையுடன் வருவார் எனக் கூறிவிட்டு சீதையிடம்  ஆசி பெற்றுப்  புறப்பட்டான் அனுமான்.
பின் அசோகவனத்தையும் ராவணனின் பல படைவீரர்களையும் அழித்தான். ராவணனை எச்சரித்துவிட்டு அவன் தன வாலில் வைத்த நெருப்பால் இலங்கையை எரியூட்டி ராமன் முன் வந்து நின்றான்  கண்டேன் சீதையை என்று கூறி தெற்கு திசை நோக்கி கற்பின் சிகரமாம் சீதாதேவியை வணங்கி ராமனிடம் சூளாமணியைக் கொடுத்தான் அனுமன்.
சுந்தரனான அனுமனின் பெருமையைக் கூறுவது சுந்தரகாண்டம். அனுமனின் அறிவுத் திறன்,செயல்திறன், சொல்லாற்றல்,பக்தி ஆகியவற்றை விளக்குவது சுந்தரகாண்டம். இதைப் படிப்பவர்களுக்கு அனுமனுக்குள்ள ஆற்றல் அனைத்தும் கிட்டும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

இந்தப் புத்தாண்டில் நம் இளைய சமுதாயம் அனுமனைப் போல ஆற்றலும் அறிவும் பெற்றுத் திகழவேண்டும் என்று உங்கள் பாட்டி வாழ்த்துகிறேன்.
ஜனவரி 11-ம் நாள் அனுமத் ஜெயந்தி வருகிறது. அந்தநாளில் கீழ்வரும் பாடலைப் படித்து அனுமனின் அருளைப் பெறக் கேட்டுக் கொள்கிறேன்.
                                                       "அஞ்சிலே ஒன்று பெற்றான் (காற்று)   
                                                         அஞ்சிலே ஒன்றைத் தாவி(கடல்-நீர்) 
                                                         அஞ்சிலே ஒன்று ஆறாக (ஆகாயம்)-ஆரியர்க்காக ஏகி 
                                                         அஞ்சிலே ஒன்று பெற்ற (பூமாதேவி-நிலம்)அணங்கைக் கண்டு  அயலார் ஊரில் 
                                                         அஞ்சிலே ஒன்றை வைத்தான் (நெருப்பு)
                                                         அவன் நம்மை அளித்துக் காப்பான்."
   "அனைவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்"

ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

புதன், 21 நவம்பர், 2012

100- உண்மை நண்பன்

அன்பு நெஞ்சங்களுக்கு பாட்டியின் வாழ்த்துக்கள். எனது நூறாவது கதையை இந்த முறை எழுதியுள்ளேன்.இதுவரை நான் எழுதிவந்த கதைகளைப் படித்து கருத்துகள் கூறியும் விமரிசித்தும்  வந்த அன்பர்களுக்கு எனது நெஞ்சம் கனிந்த நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்தக் கதைகள் மூலம் உங்களின் இல்லத்துச் சிறுவர்களின் மனம் மகிழ்ந்திருக்குமாயின் மனம் பண் பட்டிருக்குமாயின் 
அதுவே உங்கள் பாட்டிக்கு நீங்கள் அளித்த  பரிசு என மகிழ்வேன்.
 தொடர்ந்து படித்து கருத்துகள் கூறவும்.உங்கள் நண்பர்களுக்கும் கூறி அவர்களையும் படிக்குமாறு கூறவும்.
உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் அனைவரின் ஆதரவை விரும்பும் உங்கள் அன்புப் பாட்டி,
ருக்மணி சேஷசாயி.

                    





உண்மை நண்பன்


ஓர் ஊரில் இரண்டு நண்பர்கள் வாழ்ந்து வந்தனர்.இருவரும் எப்போதும் இணைபிரியாமல் இருந்தனர்.ஒருவன் பாலு. மற்றொருவன் சோமு.இருவரில் சோமு பாலுமீது உண்மையான அன்பு கொண்டிருந்தான்.எப்போதும் பொறுமையாகவும், பணிவுடனும் இருப்பான்.ஆனால் பாலு தன நட்புதான் உயர்ந்தது.தனக்குதான் நட்பைப் பற்றி அதிகமாகத் தெரியும் என்று பெருமையாகப் பேசிக் கொண்டிருப்பான்.
ஒரு முறை இருவரும் பக்கத்து ஊருக்கு ஒரு விழாவுக்குப் போகவேண்டி இருந்தது.அதிகாலையிலேயே இருவரும் புறப்பட்டனர்.ஊருக்கு  வெளியே ஒரு அடர்ந்த காடு இருந்தது இருவரும் அந்தக் காட்டின் நடுவே இருந்த ஒத்தையடிப் பாதையில் நடக்கத் தொடங்கினர்.
திடீரென்று ஊஊ என்று சோமு குரல் எழுப்பினான்.
அந்தக் குரலைக் கேட்டு திடுக்கிட்ட பாலு பட்டென்று சோமுவின் கன்னத்தில் ஒரு அறை  கொடுத்தான்.திடுக்கிட்ட சோமு சற்றும் கோபப்படாமல் "பாலு, என்னை ஏன் அடித்தாய் என்று தெரிந்து கொள்ளலாமா?"
"இப்படித் திடீரென்று கத்தினால் நான் பயந்து விட மாட்டேனா?இப்போது சொல் ஏன் அப்படிக் கத்தினாய்?" 

இந்த பகுதியில் விலங்குகள் ஏதேனும் இருந்தால் விலகி ஓடட்டும் என்றுதான் குரல் எழுப்பினேன் என்று சொன்னவுடன் சோமு மெளனமாக நடந்தான்.அப்போது வழியில் ஒரு ஆறு ஓடிக் கொண்டிருந்தது. அதில் இறங்கிய சோமு ஓடும் நீரில்.'தன்னைத் தன நண்பன் அடித்து விட்டான்' என்று எழுதினான்.அதைப் பார்த்த பாலு ஒன்றும் புரியாமல் திகைத்தான்.
அவன் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு தொடர்ந்து நடந்தான் சோமு.
நடுக்காட்டில் நடந்து கொண்டிருந்தனர் இருவரும்.வழியில் ஒரு சேறு நிறைந்த குட்டை இருந்தது. அதன் கரை ஓரமாக நடந்து கொண்டிருந்த சோமு கால்வழுக்கிக் குட்டையில் விழுந்தான்.அதைப் பார்த்த பாலு அவனைக் காப்பாற்ற தவித்தான். சோமு கொஞ்சம் கொஞ்சமாக சேற்றுள் அமிழ்ந்து கொண்டிருந்தான். வேகமாகத் தன தலையில் கட்டியிருந்த தலைப் பாகையை அவிழ்த்து சோமுவிடம் வீசி அவனைப் பற்றிக் கொள்ளச் சொல்லி சேற்றிலிருந்து மீட்டான். அதற்காக சோமு ஆயிரம் முறை நன்றி சொன்னான்.உடையைச் சுத்தம் செய்துகொண்டு தொடர்ந்து நடந்தனர்.
சற்று த் தொலைவு சென்றவுடன் சோமு  வழியில் தெரிந்த ஒரு பாறையில் சிறு கல்லால் தன நண்பன் காப்பாற்றியதை எழுதினான் புன்னகையுடன் அதைப் பார்த்தான் பாலு..

நண்பர்கள் இருவரும் மகிழ்ச்சியுடன் பேசிச் சிரித்தவாறே காட்டுக்குள் நடந்தனர். பாலு கேட்டான்."சோமு இப்போது பழைய கதையில் வருவது போல் கரடி வந்தால் என்ன செய்வாய்?"
"எனக்குத்தான் மரமேறத் தெரியுமே. மரத்தின்மேல் ஏறித் தப்பிவிடுவேன்."

மரம் ஏறத் தெரியாத பாலு உடனே சிந்தனை வயப்பட்டான்.வாய் பேசாமல்  நடந்தவனுக்கு அச்சம்  ஏற்பட்டது.சோமு சொன்னது போல ஏதேனும் வன விலங்குகள் வந்துவிட்டால் என்ன செய்வது என்று நடுங்கினான்.
அவன் அஞ்சியது போலவே ஒரு சல சலப்பும் உறுமலும் கேட்டது.
சோமுவும் சட்டென நின்றான்.பாலுவின் கரத்தைப் பற்றிக் கொண்டான்.தரதரவென்று அவனை இழுத்துச் சென்று ஒரு பெரிய மரத்தை நோக்கி ஓடினான்.இப்போது ஒலி  எதுவும் கேட்கவில்லை பாலுவுக்குப் பயம் நீங்கியதுபோல் இருக்கவே குரலை எழுப்பி சோமு என்று ஆரம்பித்தான்.சட்டென அவன் வாயைப் பொத்திய சோமு அந்தப் பெரிய மரத்தின் அருகே குனிந்து நின்றான்.மரமேறத் தெரியாத பாலுவைத் தன முதுகின்மேல் ஏறி மரக்கிளையைப் பிடித்துக் கொண்டு மரத்தின் உச்சிக்குப் போக உதவினான்.பின் தானும் ஏறி உச்சியில் அமர்ந்து கொண்டான்.காடு முழுவதும் நன்கு  தெரிந்தது.பாலு எவ்வளவு பெரிய காடு என்று ஆச்சரியப்பட்டான்.
சோமு"பாலு, மெதுவாகப் பேசு.அருகே ஏதோ விலங்கு இருக்கு"என்றவுடன் பாலு வாயை இருக்க மூடிக் கொண்டான்.சற்று நேரத்தில் ஒரு புலி இரைக்காக அங்குமிங்கும் அலைந்தபடி செல்வதைக் கண்டனர்.பாலு அச்சத்தில் சோமுவைக் கட்டிக் கொண்டான்.
அந்தப் புலி வெகு தூரம் சென்று விட்டதை மரத்தின் மேல் இருந்து பார்த்தபின் இருவரும் கீழே இறங்கினர்.அச்சத்துடன் இருவரும் மிக வேகமாக ஊரைச் சென்றடைந்தனர்.
"சோமு, நான்  புலிக்கு இரையாகாமல்  என்னைக் காத்தாய்.நீயே உண்மையான நண்பன்."
"நான் சேற்றில் அமிழ்ந்து போகாமல் என்னைக் காத்தாய் நீயே என் உண்மையான நண்பன்."
"அதுசரி. முதல்முறை உன்னை அடித்தேன் அதை நீரில் எழுதினாய். மறுமுறை சேற்றிலிருந்து காப்பாற்றியதைக்  கல்மேல் எழுதினாயே. அதுதான்
ஏனென்று விளங்கவில்லை."
"நண்பன்தவறாகத்  தீங்கு செய்யும் பொழுது அதை நீர்மேல் எழுத்துப் போல மறந்துவிட வேண்டும். ஆனால் அவன் செய்யும் நன்மையைக்  கல்மேல் எழுத்துப் போல ஒருகாலும் மறக்காமல் இருக்கவேண்டும்.அதற்காகத் தான் நீர்மேலும் கல்மேலும் அந்த செய்கைகளை எழுதினேன். ஒரு உண்மையான நண்பனை பொறுத்துப் போவதுதான் உண்மையான நட்பு.ஒருவர் பொறை  இருவர் நட்பு என்பதுதான் நட்பின் இலக்கணம்.அத்துடன் அவன் செய்த நன்மைகளை எப்போதும் மறவாமல் நன்றியறிதலோடு நடந்து கொள்ள வேண்டும்."என்று சோமு சொன்னவுடன் பாலு வேகமாக ஓடினான்.அவன் பின்னாலேயே குரல் கொடுத்தவாறு ஓடினான் சோமு.
சற்றுத் தொலைவில் இருந்த ஒரு பாறைமீது மற்றொரு கல்கொண்டு சோமு தன்னை புலியிடமிருந்து காப்பாற்றியதை எழுதத் தொடங்கினான் பாலு.அதைப் பார்த்த சோமு பாலுவை அன்புடன் கட்டிக் கொண்டான். இரண்டு நண்பர்களும் உண்மை அன்போடு சிரித்து மகிழ்ந்தனர்.






ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

திங்கள், 12 நவம்பர், 2012

தீபாவளி வாழ்த்துகள்.


சுட்டிக்கதையைப் படிக்கும்  அனைத்து அன்புள்ளங்களுக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் தங்களின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் மகிழ்ச்சி நிறையட்டும் என்று வாழ்த்தும் உங்கள் அன்புப் பாட்டி.
ருக்மணி சேஷசாயி.
 





ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

ஞாயிறு, 4 நவம்பர், 2012

99- சான்றாண்மைஎன்பது

 ஒரு கிராமத்தில் அப்பாசாமி என்பவர் வாழ்ந்து வந்தார்.அவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்.மூத்தவன் பெயர் கணேசன்.இளையவன் பெயர் 
வேலு. இருவரும் அந்த ஊரிலுள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தனர். கணேசன் எட்டாவதும் வேலு ஆறாவதும் படித்து வந்தனர்.கணேசனுக்குத் தன 
தம்பி வேலுவின் மேல் மிகவும் பிரியம். அதனால் அவன் செய்யும் சிறு தவறுகளை எப்போதும் சமாளித்து விடுவான்.மற்றவர் தன தம்பியை ஏதும் குறை கூறிவிடக் கூடாது என்பதில் எப்போதும் கவனமாக இருப்பான்.ஆனால் இதை சற்றும் உணராத வேலு எப்போதும் தன்னையே கவனிக்கும் தன அண்ணன்மேல் கோபப் படுவான்.
ஆனாலும் தன பழக்கத்தை மாற்றிக் கொள்ளவில்லை கணேசன். தம்பி யாருடன் பேசுகிறான், எங்கே வெளியே போகிறான் அவன் நண்பர்கள் யார் யார் என கவனித்துக் கொண்டிருப்பான். ஒருமுறை வேலுவின்மீது பொறாமை கொண்ட துஷ்டப் பையன் கோபி  வேறு ஒரு பையனின் புத்தகத்தைத் திருடி வேலுவின் பைக்குள் வைத்துவிட்டான்.வீட்டுக்கு வந்த வேலுவின் பையிலிருந்த அந்த புத்தகத்தை எடுத்துப் பார்த்த கணேசன் உடனே சைக்கிளில் போய்  அந்தப் புத்தகம் யாருடையதோ அந்தப்  பையனிடமே கொடுத்துவிட்டு வந்தான்.மறுநாள் கோபி  தன எதிரி  வேலுவுக்குத் திருட்டுப் பட்டம் கட்ட முடிய வில்லையே என வருந்தினான். இந்தச் செய்தியை வேலுவின் நண்பன் சொன்னபோது வேலு திகைத்தான். அந்தப் புத்தகம் என்னிடம் இருப்பதை ஆசிரியர் பார்த்திருந்தால் நான்தான் திருடன் என நினைத்திருப்பாரே.நல்லவேளை புத்தகம் என்னிடம் இல்லாதது நல்லதாய்ப் போயிற்று என எண்ணியவன் இது எப்படி நடந்திருக்கும்? என சிந்தித்தான்.ஆனாலும்  திருடனுக்குத் தேள் கொட்டினாற்போல் அந்த கோபி   தவித்ததைப் பார்த்துச் சிரித்தான் வேலு.
இது எப்படி நடந்தது.  வீட்டுக்கு வந்தவனிடம் வகுப்பில் நடந்த நிகழ்ச்சியைப் பற்றி கணேசன் கேட்கவே வேலு அவன்தான் புத்தகத்தை எடுத்து நண்பனின் வீட்டில் கொடுத்திருக்கிறான் எனப் புரிந்து கொண்டான்.ஆனாலும் வழக்கம் போல என் பையை நீ ஏன்  எடுத்தாய்? என்று சண்டைக்கு வந்தான். ஆனால் கணேசன் சிரித்துக் கொண்டே ஓடிவிட்டான்.
வேலு அப்பாவிடம் வந்து படிக்க உட்கார்ந்தான்.நடந்த செய்தியை ஏற்கெனவே கணேசு அப்பாவிடம் சொல்லிவிட்டான்.ஆனால் வேலு எதுவுமே நடவாதது போல் திருக்குறளைப் பற்றி அப்பாவிடம் கேள்வி கேட்டான்."
"அப்பா, சான்றாண்மைன்னா என்ன பொருள் அப்பா " என்றான். அவனைக் கூர்ந்து பார்த்த அப்பா "நாளைக்குச் சொல்கிறேன்."என்று சொல்லிவிட்டுச் சிரித்தார்.
மறுநாள் அன்று விடுமுறை தினம். மாலையில் வேலுவையும் கணேசனையும் கடற்கரைக்குப் போவோம் வாருங்கள் என்று அழைத்தார்.ஆனால் கணேசன் எனக்குப் பரீட்சை வருகிறது. நான் படிக்கணும் நான் வரவில்லை என்று சொல்லவே வேலுவை மட்டும் அழைத்துக் கொண்டு கடற்கரை சென்று மணலில் அமர்ந்தார் அப்பாசாமி.
தண்ணீரில் விளையாடிக் களைத்தபின் அப்பாவின் அருகில் வந்து அமர்ந்தான் வேலு. அப்போது நாலைந்து மீனவப் பையன்கள் கரையோரமாக ஒலியெழுப்பிய வண்ணம் எதையோ தேடினர். அப்போது வேலுவின் அருகே ஒரு நண்டு பரபரவென்று நடந்து சென்றது.அதன் கால்கள் பதிந்த இடத்தில் ஈரமண்ணில் விதம் விதமான கோடுகள் பதிந்தன.அதைப் பார்த்துக் குஷியில் குதித்தான்வேலு.அடுத்த நொடியில் ஒரு அலை வந்து அந்தக் கால்தடத்தை அழித்துச் சென்றது.இப்படி நண்டு கோலம் போடுவதும் அலைகள் அழிப்பதுமாக இந்த விளையாட்டை ரசித்துப் பார்த்தான் வேலு.
திடீரென்று அந்த மீனவச் சிறுவர்கள் அங்கு வந்து நண்டைப பிடிக்க அதன் வளையைத்  தேடினார்கள்.அது சென்ற வழியான கால்தடத்தைத் தேடிப்  பார்த்தனர்.எங்கும் தடம்  இல்லாதபடி அலைதான் அழித்து விட்டதே.நண்டு கிடைக்காமல் ஏமாற்றத்துடன் அவர்கள் திரும்பிச் சென்று விட்டனர்.
இந்தக் காட்சியை வேலுவுக்குக் காட்டினார் அப்பா.
"அவர்கள் எதற்காக வந்தனர் தெரியுமா?"
"நண்டு பிடிக்க வந்தனர்.இல்லையாப்பா?"
"நண்டைப் பிடிக்க முடிஞ்சுதா?"
"அதுதான் வளைக்குள்ளே ஓடி ஒளிஞ்சுடிச்சே"
"அப்படி ஓடி ஒளிய  யார் காரணம்?"
"அலை வந்து அதனுடைய கால்தடத்தை அழிச்சுட்டதாலே நண்டு வளையைக் கண்டு பிடிக்க முடியாமே போய்ட்டாங்கப்பா."
"ரொம்ப சரி.அந்த நண்டு நான் போட்ட அழகான கோலத்தை அழிக்கறியே அப்படீன்னு கோபப் பட்டு அலையைத்  திட்டியிருக்கும் இல்லையா?"
"ஆமாம்ப்பா"
"அந்த அலையும் ரோஷப் பட்டு நண்டின் கால்தடத்தை அழிக்காமே விட்டிருந்தா என்ன நடந்திருக்கும்?"
"ஐயோ,அந்தப் பையன்கள் வளையைக் கண்டு பிடிச்சு  நண்டைப் பிடிச்சிருப்பாங்களே "
"இப்போ அந்த நண்டு என்ன நினைக்குது தெரியுமா? தன உயிரைக் காப்பாத்தின அலைகிட்டப் போயி என்ன சொல்லும்?"
"அந்த அலைகிட்டே மன்னிப்புக் கேட்குமா அப்பா?"
"இன்னும் அது மன்னிப்புக் கேட்கலையே."
"அது எப்படி உங்களுக்குத் தெரியும்?"
"நீதான் அந்த நண்டு.உன் அண்ணன்தான் அந்த அலை.அவன் செய்யும் ஒவ்வொரு உதவியையும் அந்த நண்டைப் போல நீ தப்பாக நினைத்து கோபப் படுகிறாய் இல்லையா?"
வேலு தன தவறை இப்போது உணரலானான்.அண்ணன் செய்யும் ஒவ்வொரு செயலும் தன்னைப் பாதுகாக்கவே என்பதை அவன் புரிந்து கொண்டான்.
"நீ உன் அண்ணனிடம் மன்னிப்புக் கேட்டால்தான் அந்த நண்டும் மன்னிப்புக் கேட்கும்.அந்த அலையும் மகிழ்ச்சியடையும்."
"இனிமே நான் அண்ணன் கூட சண்டை போடா மாட்டேம்பா .அண்ணன் ரொம்ப நல்லவம்ப்பா "
"நீ கேட்டியே சான்றாண்மைன்னா என்னப்பான்னு? அதுக்குப் பொருளே உங்கண்ணன் தான் வேலு."
"எனக்குப் புரியலப்பா."
"சொல்றேன்.
"நம்ம திருவள்ளுவர் ஒரு குரள்  சொல்லியிருக்கிறார்."
                       "கடனென்ப நல்லவை எல்லாம் கடனறிந்து 
                        சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு."
"அப்படின்னா என்னப்பா?"
"சொல்றேன். நம்ம கடமை இதுன்னு தெரிஞ்சு அதை நல்ல முறையிலே செய்து முடிக்கிறதுதான் நம்ம கடமைன்னு இருக்கிறவங்களை சான்றோர்னு சொல்வாங்க.உங்கண்ணன் உனக்கு எப்பவும் நல்லதே செய்யறானே அவன் சான்றோன் தானே?"
"ஆமாம்ப்பா. சான்றாண்மைன்னா நல்ல குணங்கள் இருக்கிறவங்கன்னு சொல்லலாம் இல்லையா?"
"சரியாப் புரிஞ்சிகிட்டே வேலு.நாம கடற்கரைக்கு வந்தவேலை  முடிஞ்சுடுச்சு. வா போகலாம்."என்று எழுந்தார் அப்பாசாமி.
அவருடைய கையைப் பற்றிக் கொண்டு மனம் நிறைய அண்ணனின் அன்பைப் பற்றி எண்ணிக் கொண்டு வாயில் கணேசண்ணே , கணேசண்ணே என்றபடியே  அவருடன் நடந்தான் வேலு.

"ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

புதன், 17 அக்டோபர், 2012

98-.திருக்குறள் கதைகள்.- விதியையும் வெல்லலாம்


பாட்டி சொல்லும் கதைகளைப் படிக்கும் அன்பு நெஞ்சங்களுக்கு ஒரு வார்த்தை.குழந்தைகளுக்காக தமிழ்ப் பாடல்களும்,கதைகளும், தமிழ் பயில 

i pod, iphone,  applications    இருக்கிறது.www.haviga.com     <http.www.haviga.com> என்ற தளத்தில் பாட்டி சொன்ன கதைகளில் பாட்டியே கதை சொல்வதைக் 

கேட்கலாம். இந்த தளத்திற்கு விஜயம் செய்யவும்.

உங்கள் அன்புப் பாட்டி,

ருக்மணி சேஷசாயி.
                                         விதியையும் வெல்லலாம்.

     வீரப்பன் என்பவர் ஒரு தொழிலாளி. அவருக்கு இரண்டு மகன்கள்  இருந்தனர்.பெரியவன் சிவா. இளையவன் சங்கரன்.சிவா நல்ல ஆரோக்யமான உடலுடன் அழகாக இருந்தான். ஆனால் சிறியவன் சங்கரன்  இரண்டு கால்களும்  செயலிழந்து  நடக்க இயலாதவனாக இருந்தான்.எப்போதும் தனியாக அமர்ந்து ஆகாயம் மரங்கள் பறவைகள் என வேடிக்கை பார்த்துக் கொண்டு  இருப்பான்.அதிகமாகப் பேசமாட்டான்.
      எப்போதும் தனியாக ஒரு அறையில் அமர்ந்து கொண்டு ஜன்னல் வழியாக வெளியே பார்த்தபடி இருப்பான்.எப்போதாவது அவனைப் பார்க்க நேர்ந்தால் வீரப்பன் கடுகடுவென முகத்தை வைத்துக் கொள்வார். ஏதேனும் பேச நினைத்தால் கூட சங்கரன் அவர் முகத்தைப் பார்த்து பயந்து பேசாமல் வெளியே பார்த்துக் கொண்டு  அமர்ந்து விடுவான்.
       ஒருமுறை சங்கரனுக்குப் பிறந்த நாள் வந்தது.அன்று அப்பா கோபமாக,எ' இவன் பிறக்கவில்லையென்று யார் அழுதாங்க?ஒன்றுக்கும் உபயோகமில்லை. தன்னையே பார்த்துக் கொள்ள துப்பில்லை" என்று திட்டிவிட்டுப் போய்விட்டார்.ஆனால் அம்மாதான் மனம் கேட்காமல் சங்கரனுக்குப் புதுச் சட்டை வாங்கிவந்து போட்டு தலைவாரிவிட்டு அவனுக்கு இனிப்பும் ஊட்டிவிட்டார்கள்.அப்போது சங்கரனின் மனம் மிகவும் மகிழ்ச்சி அடைந்தது.
        அந்தப் பிறந்த நாள் சங்கரனின் வாழ்வில் மறக்கமுடியாத நாள்.அவன் மாமா அவனுக்கு ஒரு வண்ணம் தீட்டும் பெட்டியைக் கொண்டுவந்து பரிசாகக் கொடுத்தார்.  அதிலிருக்கும் வண்ணங்களைக் கண்டு சங்கரன் மிகவும் மகிழ்ந்தான்.கைக்குக் கிடைத்த தாள்களில் எல்லாம் அவனுக்குத் தோன்றிய படங்களை வரைந்து தள்ளி மகிழ்ந்தான். பொழுது போகாமல் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவன் இப்போது நேரம் போதாமல் வரையும் வேலையில் ஆழ்ந்து போனான்.                         
            அவன் இருந்த அறை  முழுவதும் தாள்கள் சிலசமயங்களில் அவன் அப்பா வீரப்பன் இதென்னடா குப்பை என்று திட்டிவிட்டுச் செல்வார்.ஆனாலும் ஏதோ பொழுதைக் கழிக்கட்டும் என்று பேசாமல் இருந்து விடுவார்.அவனுடைய வரையும் ஆர்வத்திற்கு தூண்டுகோலாக இருந்தவன் அவன் அண்ணன் சிவாதான்.தினமும்  பள்ளியில் இருந்து வந்தவுடன் தன தம்பியுடன் சேர்ந்துதான் டீ அருந்துவான். சங்கரும் தன அண்ணனுக்காகக் காத்திருப்பான்.  இருவரும் ஒருவர்மேல் ஒருவர் மிகுந்த அன்பு வைத்திருந்தனர்.
           அன்றும் பள்ளி விட்டு ஓடிவந்த சிவா தன தம்பி வரைந்த ஓவியங்களை எடுத்துக் கொண்டு அதே தெருவில் வசித்த ராதா டீச்சர் வீட்டுக்குப் போனான். அவர்களிடம் அத்தனை ஓவியங்களையும் கொடுத்தான்.அதைப் பார்த்த டீச்சர் மிகவும் மகிழ்ந்தார்.ஒருவாரம் கழிந்ததும்தான் அவர்கள் ஏன்  அந்த ஓவியங்களைக் கேட்டார்கள்  என்று புரிந்தது.சிவா படித்த பள்ளியில் கலைப் பொருள் கண்காட்சி ஒன்று நடத்துவதாக ஏற்பாடாகியிருந்தது.அந்த சமயம் ஒரு அறை  முழுவதும் சங்கரனின் ஓவியங்களுக்கு    அழகாக தலைப்புகளைக் கொடுத்து வரிசைப் படுத்தி காட்சிக்கு வைத்திருந்தனர்.அதைப் பார்த்த அனைவரும் அந்த ஓவியங்களைப் பாராட்டினர்.
                பள்ளிவிழாவுக்கு வந்திருந்த பிரமுகர்    அந்த ஓவியங்களைப் பாராட்டியதோடு சிறுவர்களுக்கான கலைப் போட்டி டில்லியில் நடக்கிறது அதற்கு இந்த ஓவியங்களில் சிறந்ததை அனுப்புமாறு ஆலோசனை கூறினார். ராதா டீச்சர் மிகுந்த மகிழ்ச்சியோடு அப்படியே செல்வதாக வாக்களித்ததோடு அடுத்த நாளே ஐந்து சிறந்த ஓவியங்களை அனுப்பிவைத்தார். அத்துடன் பள்ளியில் அந்த ஓவியங்களைப் பார்ப்பவர்கள் தங்களால் இயன்ற காசுகளைத் தருமாறு ஒரு உண்டியலும் வைத்திருந்தார்.பதினைந்து நாட்களில் அந்த உண்டியலில் கிட்டத்தட்ட நாலாயிரம் ரூபாய்கள் சேர்ந்திருந்தன. 
அன்று மாலையே ராதா டீச்சர்  அந்தத் தொகையை எடுத்துக் கொண்டு சிவாவுடன் அவர்களின் இல்லம் நோக்கிச் சென்றார்.  ஏதோ படத்தை வரைந்து கொண்டிருந்த சங்கரன் அண்ணனைப் பார்த்து மகிழ்ச்சியுடன் அதைக் காட்டினான்.அவனுடன் வந்திருக்கும் டீச்சரைப் பார்த்து வெட்கத்துடன் தலைகுனிந்து கொண்டான்.                  
ராதா டீச்சர் வீரப்பனையும் அவர் மனைவி தேவானையையும் அழைத்து அவர்களிடம் பேசினார்.
"ஐயா, உங்கள் மகன் மிகுந்த திறமைசாலி. அவனுடைய படங்கள் டில்லிக்குப் போயிருக்கின்றன. கட்டாயம் அவன் திறமைக்குப் பரிசு கிடைக்கும்.அவனை இன்னும் நீங்கள் ஊக்கப்படுத்தினால் சிறந்த ஓவியனாக வளருவான். இதோ அவனுடைய படங்களுக்கான வெகுமதி இந்தப் பணம். இதைவைத்து அவனுக்கு மரக்கால்களைப் பொருத்துங்கள்.நானும் உதவி செய்கிறேன்.அவனை உலகின் சிறந்த மனிதனாகத் தலை நிமிர்ந்து நிற்கச் செய்யலாம். அதோடு அவனைப் பெற்ற நீங்களும் பெருமைப் படலாம்." 
 .துயரமும் மகிழ்ச்சியும் கலந்த குரலில் தேவானை பேசினார்." அம்மா, இத்தனை நாள் நாங்கள் செய்த பாவம். அவன் விதி இதுன்னு இருந்தோம். ஆனா நீங்க சொன்ன பிறகுதான் அவனும் நல்லா வருவான்னு எங்களுக்குத் தெரியுதும்மா.உங்களுக்குத்தான் நாங்க நன்றி சொல்லணும்." என்று டீச்சரின் கரங்களைப் பற்றிக் கண்களில் ஒத்திக் கொண்டாள்  தேவானை.
வீரப்பன் ஏதும் பேசத் தோன்றாமல் கண்களில் நன்றியும் மகிழ்ச்சியும் கலந்த நீர் நிறைய சங்கரனை அணைத்துக் கொண்டார்.

            அடுத்தமாதமே  அந்த ஊர் பிரமுகர்கள் ஒன்று கூடி பரிசுப் பொருள்களுடன் சங்கரனைத் தேடிவந்ததும் அவனுக்கு டில்லிக்கு வரச்சொல்லி அழைப்பு வந்திருப்பதும் விழாவில் குடியரசுத் தலைவரின் கையால் அவன் பரிசு பெறப் போவதையும் அறிந்த போது வீரப்பனால் நம்பவே முடியவில்லை. சாதாரணத் தொழிலாளியான தனக்கு இத்தனை மதிப்பா என மகிழ்ந்து போனார். 
இப்போது சங்கரன் செயற்கைக் கால்களுடன் தனக்கென ஒதுக்கப்பட்ட தனியறையில் நின்று கொண்டு தூரிகை பிடித்து வரைந்து கொண்டு இருக்கிறான்
அவனைத் தேடி பத்திரிகைக்காரர்களும் சினிமாப் படம் எடுப்பவர்களும் பணத்தைக் கொட்டிப் படம் வேண்டுமென்று கேட்டுத் தவம் கிடக்கின்றனர்.
விதியையும் வெல்லலாம் எனத் தனக்குள் சொல்லிக் கொண்ட வீரப்பன் பெருமையுடன் தன மகனைப் பார்த்தார்.                                   
           அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் 
            பெருமை முயற்சி தரும் 
உண்மைதானே.வள்ளுவர் கூறும் பொன்மொழி நம் வாழ்க்கைக்கு எத்தனை சிறந்த வழிகாட்டி!  தன்னால் ஏதும் இயலாதென்று தயங்கி தளர்ந்து இராமல் முயற்சி செய்தால் வாழ்வில் பெருமை பெறலாம் என்ற உயந்த அறிவுரைநாம் அனைவரும் முக்கியமாக வளரும் இளைய சமுதாயம் உணரவேண்டும்.












ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com