வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

மந்த்ராலய மகான் --11

                           ஸ்ரீ ராகவேந்திரர் ஆதோனிக்கு வரப்போகிறார் என்ற செய்தியைக் கேட்ட வெங்கண்ணா அவரை வரவேற்க சகல ஏற்பாடுகளையும் செய்தான் நகரம் விழாக்கோலம் பூண்டது.
ராகவேந்திரருக்குப் பூர்ணகும்ப மரியாதை செய்து அவரை வரவேற்றபின்  அவர் கால்களில் பணிந்து எழுந்தான் வெங்கண்ணா.அவன் கண்களில் நீர் நிறைய 
"தெய்வமே, எத்தனை காலமாயிற்று தங்களைக் காண.என்று அவர் பாதங்களைப் பற்றிக் கொண்டான்.
"திவான் எழுந்திருங்கள்." என்று சுவாமிகள் சொல்லக் கேட்ட வெங்கண்ணா பதறினான். 
"சுவாமி என்னை வெங்கண்ணா என்றே அழையுங்கள்.  மாடு மேய்க்கும் போதுநீங்கள்  பார்த்த அதே வெங்கண்ணா தான் நான்." என்றான் பணிவோடு.
 "வெங்கண்ணா, நீயும் உன் நாட்டுமக்களும் நலமா?"எனப் புன்னகையுடன் கேட்டவாறே அரண்மனைக்கு எழுந்தருளினார் ஸ்ரீ ராகவேந்திரர்."                    
"தங்களின் ஆசியால் அனைவரும் நலமே சுவாமி" எனப் பணிவுடன் பகர்ந்தான் வெங்கண்ணா 

                      ஸ்ரீமூலராமரின் பூஜைக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.அன்றைய பூஜையில் நவாப் கலந்துகொள்வதாக இருந்ததால் அரண்மனை அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது.சற்று நேரத்திற்கெல்லாம் பூஜையை ஆரம்பித்தார் சுவாமிகள்.பூஜை விசேஷமாக நடந்துகொண்டிருந்தது.அப்போது நவாப் அங்கு வந்து சேர்ந்தார். அவர் பின்னே  சிப்பாய்கள் வந்தனர். ஒரு சேவகன் கையில் பெரிய வெள்ளித் தட்டு ஒன்று இருந்தது.பட்டுத்துணி ஒன்று அந்த தட்டிலிருந்த பொருளை மூடியிருந்தது.ஸ்ரீராகவேந்திரருக்கு சலாமிட்ட நவாப் ஆசனத்தில் அமர்ந்தார்.சேவகன் வெள்ளித்தட்டை  ராகவேந்திரர்முன் வைத்தான்.
"சுவாமிகளே, எங்கள் அரசரின் காணிக்கை. இதைத் தங்கள் பூஜைக்கு ஏற்றுக் கொள்ள வேண்டும்."என்றான் பணிவோடு.
"அப்படியே ஆகட்டும்" புன்னகையுடன் கூறினார் சுவாமிகள்.
                   
                      பூஜை முடிந்து காணிக்கைப் பொருட்களை ஸ்ரீமூலராமருக்கு நிவேதனமாக அர்ப்பணிக்கும் கட்டம் வந்தது.கையிலிருந்த கமண்டல நீரை அந்த காணிக்கைப் பொருட்களின் மீது தெளித்தார் ராகவேந்திரர்.

"நவாப்ஜி, உங்கள் காணிக்கையை என் மூலராமர் ஏற்றுக் கொண்டு விட்டார்."என்றதும் பதறிவிட்டார் நவாப் அவர்கொண்டுவந்தது மாமிசமல்லவா அதையா ஏற்றுக் கொண்டார்? அபசாரம் செய்துவிட்டோமே என்று மனதுக்குள் தவித்தார் நவாப்.வாய்திறந்து எதையும் சொல்லமுடியாமல் தவித்தபடி அமர்ந்திருந்தார்.அப்போது சிஷ்யர் ஒருவர்  காணிக்கைப் பொருளை  மூடியிருந்த பட்டுத்துணியை நீக்கினார்.

"சுவாமிஜி!"என நவாப் அலறிவிட்டார்.ஆம். அவர் கொண்டுவந்திருந்த மாமிசங்கள் எல்லாம் மலர்களாகவும் பழங்களாகவும் மாறியிருந்தன.நவாப் தன கண்களையே நம்ப முடியாமல் கசக்கிக் கொண்டு பார்த்தார்.
துக்கம் தொண்டையை அடைக்க எல்லோரையும் போலவே பிரசாதம் வாங்கிக் கொண்டு அவ்விடம் விட்டு அகன்றார்.

                     நாட்கள் செல்லச் செல்ல நவாப்பின் குற்ற உணர்வு அவரை நிம்மதியில்லாமல் செய்து விட்டது.
வெங்கண்ணா சொல்வது போல் அவர் தெய்வீகப் பிறவியே. நான் செய்த தவறு தெரிந்திருந்தும் அதை வெளியே தெரியாமல் மறைத்ததும் அல்லாமல் அவருக்குத் தக்காற்போல் அதை மாற்றியும் விட்டாரே.இந்தத் தவறுக்கு நான் ஏதேனும் பிராயச்சித்தம் செய்தே ஆகவேண்டும் என முடிவு செய்தார்.
நவாப் வேங்கண்ணாவை அழைத்தார்.
"உங்கள் குரு மிகப்பெரியவர்.மகாஞானி.தெய்வப்பிறவி .அவருக்கு நாம் ஏதேனும் தானம் தர விரும்புகிறோம்."
என்று கூறியபோது மிகவும் மகிழ்ந்தார் வெங்கண்ணா. ராகவேந்திரரை சந்தித்து "எங்கள் நவாப் உங்களை சந்திக்கத் தயங்குகிறார்.அன்றைய பூஜையில் அவர் தவர் செய்து விட்டதை எண்ணி வருந்துகிறார்."என்று சொல்லி வாய்புதைத்து நின்றார்.
"அவர் மதாசாரப்படி காணிக்கை கொடுத்தார் தனக்கு ஏற்றபடி என் மூலராமர் அதை மாற்றிக் கொண்டார்.அவ்வளவுதான் "
குருவின் பேச்சைக் கேட்ட திவான் எப்பேற்பட்ட மகான் என மனதுக்குள் வியந்து வணங்கினார்.பின்னர் நவாபின் விண்ணப்பம் என்று கூறி நின்றார்.
"என்ன?"
"செய்த தவறுக்குப் பிராயச்சித்தமாக தங்களுக்கு தானம் அளிக்க விரும்புகிறார்.தாங்கள் அருள்கூர்ந்து அதனை ஏற்க வேண்டும் "
ஸ்ரீராகவேந்திரர் ஒருகணம் கண்களை மூடி ஸ்ரீ மூலராமரை தியானித்தார்.

நவாப் அளிக்க முன்வந்த தானம் என்ன அதை சுவாமிகள் ஏற்றுக் கொண்டாரா? என்ற செய்தியை அடுத்த தொடரில் பார்ப்போம்.
                                                                ( தொடரும் )









--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

வெள்ளி, 22 ஜனவரி, 2016

மந்த்ராலய மகான் -10

             சென்ற   யாத்திரையின்போது ஆதோனி சமஸ்தானத்தின் ஒரு கிராமத்தின் அருகே  இவர் பயணித்துக் கொண்டிருக்கையில் மாடு மேய்க்கும் ஒரு சிறுவன் இவரைப் பணிந்து நின்றான்.வெங்கண்ணா என்ற சிறுவன் தாய் தந்தையற்றவன் தன தாய்மாமனால் மாடு மேய்த்துக் கொண்டிருப்பவன் எனவும் கூறி அழுதான்.பிராமணனாக இருந்தும் கல்வி அறிவற்றவனாக இருப்பதாகச் சொல்லி அப்படி இருப்பது தனக்கு மிகவும் துக்கமாக இருப்பதாகவும் சொன்னபோது ராகவேந்திரர் புன்முறுவலுடன் "கலங்காதே, உனக்குத் துன்பம் வரும்போது என்னை ஸ்மரித்துக் கொள் "என்று சொல்லி மந்த்ராக்ஷதை கொடுத்துச் சென்றார்.
              இப்போது அந்த வெங்கண்ணா வாலிபனாக வளர்ந்து தாய்மாமன் மறைவுக்குப் பின் நிலபுலன்களை வைத்து விவசாயம் செய்துவந்தான்.

             ஒருநாள் சுல்தான் பாதுஷாவின் சிற்றரசர்களில் ஒருவனான 'சித்தி மசூத்கான் 'வரிவசூல் செய்யும் பொருட்டு குதிரைமீது ஏறிக்  கொண்டு வெங்கண்ணாவின் கிராமத்துக்குள் வந்தான். வெங்கண்ணாவும் மற்றவர்களும் மரியாதை செலுத்தியபடி ஓரமாக நின்றனர்.அப்போது அவசரமாக நவாபிடம் இருந்து சேவகன் ஒருவன் ஒரு கடிதம் கொண்டு வந்து கொடுத்தான்.அதை யாரிடம் கொடுத்துப் படிக்கச் சொல்வது என்று சுற்று முற்றும் பார்த்தான்.அவன் கண்களில் வெங்கண்ணா பளிச்செனத் தெரிந்தான்.அவனை  அருகே அழைத்தான். வெங்கண்ணா கைகளைக் குவித்தபடி அருகே வந்தான்.அவனிடம் கடிதத்தைக் கொடுத்துப் படிக்கச் சொன்னான் சித்தி மசூத்கான்.
              
             கடிதத்தைக் கையில் வாங்காமலேயே மறுத்தான் வெங்கண்ணா.
"'ஐயா  எனக்குப் படிக்கத்தெரியாது.நான் பள்ளிக்கே சென்றதில்லை."

"பொய் சொல்லாதே உன் தலையை இப்படியே துண்டாக்கி விடுவேன்."
"அரசே, என்னை நம்புங்கள்.நான் பிரம்மணன்தான்.ஆனாலும் படிபறிவற்றவன்"
"யாரை நம்பச் சொல்கிறாய். சுத்தப் பிராமணனாக இருந்துகொண்டு படிப்பறிவு இல்லையென்று பொய் வேறு சொல்கிறாயா?உன்னை......"என்று பற்களைக் கடித்தபடி  வாளை  உறுவினான். 
 
"ஐயா ,பொறுங்கள் என்ற வெங்கண்ணாவுக்கு ராகவேந்திரர் சொன்ன சொற்கள் நினைவுக்கு வந்தன.

"வெங்கண்ணா, உனக்குத் துன்பம் வரும்போது என்னை நினைத்துக் கொள்."
வெங்கண்ணா அந்தக் கடிதத்தைக் கையில் வாங்கி கைகளைக் குவித்துக் கொண்டு ஸ்ரீ ராகவேந்திரரை    
 ஸ்மரித்தான். .
"ஸ்ரீ ராகவேந்திரா ஸ்ரீ ராகவேந்திரா " என மனதிற்குள் ஜபித்தான்.
என்ன ஆச்சரியம். திடீரென அந்தக் கடிதத்திலுள்ள எழுத்துக்களெல்லாம் பரிச்சயமானவை போல் தோன்றின.செய்தியை மெதுவாகப் படித்து முடித்தான்.

"சித்தி மசூத்கானின் ராஜ்ஜியம் விரிவு படுத்தப் பட்டுள்ளது.மந்த்ராலயம் உள்ளிட்ட பல கிராமங்களை அத்துடன் இணைத்திருக்கிறோம். ஆதோனி சமஸ்தானத்திற்கு யாரையேனும் திவானாக நியமித்துக் கொள்ளலாம்" எனவும் வெங்கண்ணா படிக்கக் கேட்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தான் சித்தி மசூத்கான்.

அத்துடன் நில்லாமல்  அவன் "இந்த ஆதோனி சமஸ்தானத்துக்கு எனக்குப் பிடித்தமானவனான வெங்கண்ணா வையே திவானாக நியமிக்கிறேன் " என்று அறிவித்து வெங்கண்ணா வைத் தன்னுடன்அரண்மனைக்கு  அழைத்துச் சென்று அங்கு  ஆசனத்திலும் அமர்த்தினான்.

வெங்கண்ணா வினால் எதையும் நம்ப முடியவில்லை.குரு ஸ்ரீ ராகவேந்திரரின் நாமத்துக்கு இத்தனை சக்தியா என எண்ணி எண்ணி வியந்ததோடு இதை சித்தி மசூத்கானி டமும்  கூறினான்.
அவரது பெருமையை அறிந்த மசூத்கான் தாமும் அவரைத் தரிசிக்க விரும்புவதாகக் கூறினான்.ஆனால் மனதுக்குள் 'அவரை நான் பார்க்க நேர்ந்தால் நிச்சயம் அவரை பரீட்சை செய்து பார்த்து விடுவேன்'என்று முடிவு செய்து கொண்டான். 
இதிலும் ஒரு மகிமையை எடுத்துக் காட்டினார் ஸ்ரீ ராகவேந்திரர். அதையும் அடுத்து  பார்ப்போம்.


































--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

ஞாயிறு, 10 ஜனவரி, 2016

மந்த்ராலய மகான் -9

            ஸ்ரீ ராகவேந்திரரை  நினைத்த மாத்திரத்தில் அனுக்ரஹம் செய்யும் கருணையுள்ளம் கொண்டவர் அந்த மகான். அவர் தேச சஞ்சாரம்  செய்யத் தொடங்கி கும்பகோணத்திலிருந்து புறப்பட்டு  தேவநகரம்  கமலாலயம் 
தரிசித்தார். தெற்கு நோக்கிப் பயணித்து பல ஊர்களைக் கடந்து  உடுப்பி க்ஷேத்ரம் வந்தடைந்தார்.உடுப்பி கிருஷ்ணனின் அழகில்  மெய்மறந்தார். இங்கு தங்கி பல நூல்களுக்கு வியாக்யானங்களும் விரிவுரைகளும் பாஷ்ய உரைநூல்களும் இயற்றினார்.அத்துடன் நியாயமுக்தாவளி
'சந்திரிகா பிரகாசிகா ' என்ற நூல்களையும்  முன்பே எழுதிய 'சுதா பரிமளத்தையும் ' ஸ்ரீ உடுப்பி கிருஷ்ணனுக்குஅர்ப்பணம் செய்தார்.
உடுப்பியில் ஸ்ரீராகவேந்திரர் பொன்னால் ஒரு சந்தானகோபால விக்ரகம் செய்து பூஜை செய்துவந்தார்.
பின் அங்கிருந்து புறப்பட்டு  மைசூரில் சிலகாலம் தங்கியபின் கிரீடகிரி என்னும் ஊர் வந்து சேர்ந்தார்.அந்த ஊரில் வேங் கிடதேசாய் என்பவர் வாழ்ந்து வந்தார்.அன்று அவர் இல்லத்தில் மூலராமர் பூஜையும்  பிக்ஷையும் 
நடத்த ஏற்பாடுகள் நடந்தன.
               சிறப்பாக ப் பூஜை நடக்கும் இடத்தில் தேசாயும் அவர் மனைவியும் பக்தியுடன் அமர்ந்திருந்தனர்.சமையற்கட்டில் சமையல் ஏற்பாடாகிக் கொண்டிருந்தது.தேசாயின் மூன்று வயது மகன் விளையாடிக் கொண்டே சமையற்கட்டுக்குப் போனவன் தடுமாறி பெரிய அண்டாவில் விழுந்தான்.அதில்  மாம்பழ ரசம் நிறைந்திருந்தது. அதில் விழுந்த குழந்தை உயிரிழந்தது.சற்று நேரத்தில் அங்கு வந்த தேசாயின் மனைவி தன மகன் இறந்து மிதப்பது கண்டு பதறினாள் கதறினாள். அங்கு வந்த தேசாய் செய்தியறிந்து துடித்தார்.இருவரும் சேர்ந்து சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தனர். 
.
          அப்போதுதான் மூலராமர் பூஜை முடிந்துள்ளது.அனைவருக்கும் சாப்பாடு போடவேண்டிய நேரம்.வெளியில் விஷயம் தெரிந்தால் யாரும் சாப்பிட மாட்டார்கள் என்ன செய்வது என கையைப் பிசைந்தவர்  ஒரு முடிவுக்கு வந்தவராய் தன மகனின் உடலைத் தூக்கினார் . அங்கிருந்த பெரிய இலைக் கட்டினுள் வைத்து மூடினார் அதை வேறு அறைக்குள் வைத்து மூடிவிட்டு பூஜையில் வந்து நின்று கொண்டனர் 
 
எல்லோருக்கும் தீர்த்தம் வழங்கிய ராகவேந்திரர் தேசாயிடம் உங்கள் மகனையும் அழைத்து வாருங்கள்.அவனுக்கும் தீர்த்தம் வழங்க வேண்டும்.என்றபோது துக்கம் பீறிட அழுது நின்றனர் தம்பதிகள்.
நடந்ததை அறிந்த ராகவேந்திரர் 'குழந்தையைத் தூக்கி வாருங்கள்' என்று சொல்லவே தேசாய் தன மகனைத் தூக்கிவந்து அவர்முன் கிடத்தினார்.
             புன்னகையுடன் தீர்த்தத்தை வேகமாக அச்சிறுவன்  மீது புரோக்ஷிக்க அவன் மெதுவாகக் கண் திறந்தான்.பெற்றோர் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தனர்.தேசாய் அந்த கிரீடகிரி கிராமத்தையே காணிக்கையாக்கினார்.அங்கு கூடியிருந்த மக்கள் அவரது பெருமையைச் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தனர்.
இன்னும் எத்தனை எத்தனையோ மகிமைகள் சொல்லச் சொல்ல வளரும்.
                                                                         (தொடரும் )







ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

வெள்ளி, 18 டிசம்பர், 2015

மந்த்ராலய மகான் --8

                           ஸ்ரீ ராகவேந்தரரின் பெயருக்கு மட்டுமல்ல அவரது கையிலிருந்து பெற்ற மிருத்திகைக்கும் மகிமை உண்டு என்பதை மற்றொரு சம்பவத்தால் அறியலாம்.ஸ்ரீமடத்தில் சேவை செய்து வந்த ஒரு சிஷ்யருக்கு வெகு நாட்களாகத் திருமணம் ஆகாமல் இருந்தது.காரணம் செல்வம் ஏதும் இல்லாமைதான்.ஒருநாள் ஸ்ரீ ராகவேந்திரர் காவிரியில் ஸ்நானம் செய்யும்போது அவருக்கு சேவை செய்யும் சிஷ்யன் அருகே நின்றிருந்தான்.அவனிடம் கேட்டார்
 "என்னப்பா, என்னிடம் ஏதோ கேட்கவேண்டுமென்று நினைக்கிறாய் இல்லையா?"
"ஆம் சுவாமி"
"கேளேன். தயக்கம் எதற்கு?" என்றபடியே காவிரியின் வண்டல் மண் எடுத்து உடலில் தேய்த்துக் குளித்துக் கொண்டிருந்தார்.
"ஸ்வாமீ , திருமணம் செய்து கொள்ளவேண்டுமென எண்ணியுள்ளேன்."
"அதற்கென்ன?பேஷாகச் செய்து கொள்"
"ஸ்வாமீ ,நான் பீஜாபூர் செல்லவேண்டும். மேலும்......."தயங்கியவனை இடைமறித்தார் ஸ்வாமிகள்.
"விவாகத்திற்குப் பொன்னும் பொருளும் வேண்டும்.அதுதானே ?"
சிஷ்யன் மகிழ்ச்சியுடன் "ஆம் ஸ்வாமி " என்று சொன்னவுடன் ஸ்ரீ ராகவேந்திரர் அவனிடம் "இந்தா இதைப் பிடி.
இதை வைத்து உன் விவாகத்தை முடித்துக் கொண்டு வா. என் ஆசிகள் உனக்கு." என்று கூறியபடியே காவிரியிலிருந்து ஒரு பிடி மண் எடுத்து அவனிடம் கொடுத்தார்.
'பொன்னைக் கேட்டால் மண்ணைக் கொடுக்கிறாரே ' என்று நினைக்காமல் அதை பயபக்தியுடன் பெற்றுக் கொண்டு ஒரு சம்புடத்தில் வைத்து இடுப்பில் வைத்துக் கொண்டான் சிஷ்யன் 
                     
                     ஸ்வாமிகளிடம்  ஆசிபெற்றவன் அன்றே சொந்த ஊரைப் பார்க்கப் புறப்பட்டான்.கால்நடையாகவே கும்பகோணத்தை விட்டுப் புறப்பட்டவன் இரவு வந்ததும் ஓய்வு எடுத்தபின் விடிந்ததும் செல்லலாமென எண்ணி ஒரு வீட்டின் திண்ணையில் படுத்துக் கொண்டான்.நடு இரவில் நல்ல உறக்கத்தில் இருந்தவனை யாரோ எழுப்பவே எழுந்து உட்கார்ந்தான்.அப்போது வீட்டின் உள்ளேயிருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டது.
தன எதிரே  பெரிய பூதம் ஒன்று நிற்பதைப் பார்த்த  சிஷ்யன்  திடுக்கிட்டான்.
உடனே  ஸ்ரீ ராகவேந்திரரை மனதில் தியானித்துக் கொண்டு தைரியத்தை வரவழைத்துக் கொண்டான்.
ஓம் ஸ்ரீ ராகவேந்த்ராய நமஹ என்று ஒரு முறை சொல்லிக் கொண்டான்.பின் அந்த பூதத்தைப் பார்த்து 
"
"ஏய்  பூதமே, யார் நீ? என்னை ஏன் எழுப்பினாய்?" என்றான் 

"ஐயா, நான் ஒரு பிரம்மராக்ஷசன். உங்களை ஒன்றும் செய்யமாட்டேன்.எனக்கு நீங்கள் ஒரு உதவி செய்ய வேண்டும்.அப்படிச் செய்தால் நிறைய பொன் தருகிறேன்."

"நான் உனக்கு உதவி செய்வதா? ஒன்றும் புரியவில்லையே?"

"சொல்கிறேன் ஐயா. இந்த வீட்டின் சொந்தக்காரன் ஒரு படுபாவி.போன ஜென்மத்தில் இவன் என் குழந்தைகளையெல்லாம்  கொன்று விட்டான்.அதனால் இந்த ஜென்மத்தில் இவன் குழந்தைகளை நான் கொன்று வருகிறேன்.ஏழு குழந்தைகளைக் கொன்று விட்டேன். இப்போது பிறந்திருப்பது எட்டாவது குழந்தை.இதை நான் கொல்ல .வேண்டும். ஆனால் உள்ளே செல்லவிடாமல் உங்களிடமிருந்து வரும் ஜ்வாலை  தடுக்கிறது. தயவு செய்து நீங்கள் தள்ளிச் செல்லுங்கள். உங்களுக்கு நிறைய பொன் தருகிறேன்."

"குருகளவரின் ம்ருத்திகையல்லவா என்னிடம் இருப்பது! இதற்கு இத்தனை சக்தியா? என வியந்து மனதில் அவரை வணங்கிக் கொண்டிருந்தவன் முன் ஒரு குடம் நிறைய பொன்னைக் கொண்டு வந்து வைத்தது அந்த பிரம்மராக்ஷஸ்.அவர் நகரமாட்டாரா எனக் காத்துக் கொண்டு நின்றிருந்தது அது.

ம்ருத்திகை தடுக்கிறது என்றால் பிரம்மராக்ஷசம் உள்ளே போகக் கூடாது என்றுதானே பொருள். அத்துடன் எனக்கு இத்தனை பொன்னைக் கொடுத்து உதவிய இதற்கு நானும் ஏதேனும் நன்மை செய்ய வேண்டும் என 
எண்ணியவனாய் ம்ருத்திகையைக் கையில் எடுத்து 'ஓம் ஸ்ரீ ராகவேந்த்ராய' என்று ஜெபித்தான்.

"சுவாமி, இந்த பிரம்மராக்ஷசத்திற்கு சாப  விமோசனம் அளியுங்கள் " என்று மனதார வேண்டிக்கொண்டு ம்ருத்திகையை அந்த பிரம்மராக்ஷசத்தின் மீது வீசினார்.அவ்வளவுதான். சுடர் ஒன்று தோன்றி அதைச் சுட்டெரித்தது.ஜகஜ்ஜோதியான உருவம் பெற்று நற்கதி அடைந்து மறைந்தது பிரம்மராக்ஷசம். 

                              வீட்டிற்கு வெளியே வரப் பயந்துகொண்டு வீட்டிற்குள்ளேயே முடங்கியிருந்தவர்கள் பிரம்மாண்ட சத்தமும் வெளிச்சமும் வந்ததை அறிந்து ஓடிவந்தனர்.அக்கம்பக்கம் அனைவரும் கூடிவிட்டனர்.நடந்ததை அனைவரும் அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தனர்.மிருத்திகையின் பெருமையை எண்ணி வியந்தனர்.
அந்த வீட்டின் எஜமானன் தன குழந்தை பிழைத்ததை எண்ணி நன்றி தெரிவித்துக் கொண்டதுடன் தன சகோதரியின் மகளை  அவனுக்குத் திருமணமும் செய்து வைத்தார். அந்த சிஷ்யன் மனைவியுடன் கும்பகோணம் வந்து நடந்ததைக் கூறி சுவாமிஜியின் முன் வணங்கி நின்றான்.
ஸ்ரீ ராகவேந்திரரின் மிருத்திகைக்கு இன்றும் பெருமை உண்டு. என்றும் பெருமை உண்டு. 












.
 

--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

புதன், 16 டிசம்பர், 2015

மந்த்ராலய மகான் -7

               ஸ்ரீ ராகவேந்திரரின் புகழின் மீது அசூயை கொண்ட சிலர் இவரது புகழுக்குக் களங்கம் கற்பிக்க முடிவு செய்தனர்.அதன்படி ஒரு திட்டம் தீட்டினர்.ராகவேந்திரர் வரும் வழியில் ஒரு சிறுவனை இறந்தவன் போல் படுக்கச் சொல்லி போலியாக அழுது கொண்டே அவனைச் சுற்றி அமர்ந்து கொண்டனர்.அவ்வழியே வந்த ராகவேந்திரர் அருகே வந்து "என்னப்பா, ஏன் அழுகிறீர்கள்?என்ன நடந்தது?" என்று கேட்க அவர்களில் ஒருவன்,
"ஐயா ,  சாமி எங்க புள்ள திடீர்னு செத்துப் போனானுங்க. நீங்கதான் அவனை எப்படியாச்சும் காப்பாத்திக் கொடுக்கணுமுங்க." என்று குறும்பாகப் பார்த்துக் கொண்டே கேட்டான்.மற்றவர்களும் ஆமாம்சாமி என்றபடியே நின்றனர்.

               உண்மையான சோகத்துடன் "அப்பா, இந்தச் சிறுவன் இறந்துவிட்டானே. இறந்தவனை நான் எப்படியப்பா  உயிர்ப்பிக்க முடியும்? மனதைத் தேற்றிக்கொள்."என்றார்.அந்த மூடர்கள் "நாங்க எழுப்பறோம். பாக்கறீங்களா?" என்றபடியே, "டேய் எழுந்திரிடா.எழுந்து வாடா."என்றனர். 
           "இத்தனை நாளா செத்தவனை உயிர்ப்பிக்கறதா இவரு நாடகமாடிக்கிட்டிருந்தாரு.இன்னிக்கி முடியாதுன்னு ஒத்துகிட்டாரு."என்று எள்ளி நகையாடினர்.ராகவேந்திரர் புன்னகையுடன் அங்கிருந்து நடக்கத் தொடங்கினார்.இறந்தவனை எழுந்திரு என்று சொல்லி வெகு நேரமாகியும் எழுந்திருக்காததைப் பார்த்தவர்கள் அச்சத்துடன் அவனை நெருங்கித் தொட்டுப் பார்த்தபோதுதான் அவன் உண்மையாகவே இறந்து விட்டதைக் கண்டார்கள்.ராகவேந்திரரைத் தொடர்ந்து ஓடினார்கள். அவர் காலில் விழுந்தார்கள்.
"சாமி, உங்களை சோதிக்க நினச்சது தப்புதாங்க. எங்கள மன்னிச்சுடுங்க சாமி. எங்க புள்ளைய காப்பாத்துங்க சாமி"
காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டு மன்றாடினார்.
"அப்பா, அவன் விதி முடிந்து விட்டது.உண்மையிலேயே இறந்துவிட்டான்.மனதை சமாதானப் படுத்திக் கொள்ளுங்கள்."ஆறுதல் கூறியபடியே அங்கிருந்து அகன்றார் ராகவேந்திரர்.இவரது தெய்வாம்சத்தை
நம்பாதவர்களையும் நம்பும்படி செய்து  அவர்களுக்கும் அனுக்ரஹம் செய்தார்.
                  ஒருமுறை தஞ்சை நகரம் பஞ்சத்தால் பீடிக்கப் பட்டிருந்தது.அந்நாட்டில் மழை பொழியாது பயிர்களும் விளையாது மக்கள் அவதிப் பட்டனர். மன்னர் ரகுநாதபூபதி ராகவேந்திரரிடம் நாட்டில் மழை பொழியவேண்டும் என வேண்டிக் கொண்டார்.தாமே நேரில் சென்று ராகவேந்திரரைத் தன நாட்டிற்கு அழைத்து வந்தார்.
                      ராகவேந்திரர் தாம் பட்டமேற்ற அந்த நகரின் வீதிகளில் நடந்து சென்றார் அந்நாட்டில் நிலவியிருந்த பஞ்சத்தைக் கண்டு மனம் கனிந்தார். மன்னரின் தானியக் கிடங்கில் பீஜாக்ஷரத்தை எழுதிவைத்து  யாகங்கள் ஹோமங்கள் நடத்தி அந்நாட்டில் நிலவி வந்த பல ஆண்டுகால பஞ்சத்தைப் போக்கினார். மன்னன் ரகுநாத பூபதி மனம் மகிழ்ந்து நன்றியறிதலோடு ஒரு உயர்ந்த வைரமாலையை அளித்தான்.அதைப் பெற்றுக் கொண்ட ஸ்ரீ ராகவேந்திரர் அதை யாகத் தீயில் இட்டார்.அதைப் பார்த்த மன்னன் திடுக்கிட்டான்.
"எவ்வளவு விலையுயர்ந்த மாலை. இதைத் தீயில் இட்டுவிட்டாரே என்று கலங்கினான்.அவன் அகத்தின் அழகு முகத்தில் தெரிவதைக்  கண்டு புன்னகை புரிந்த ராகவேந்திரர் ,மன்னனை அருகே அழைத்தார்.
"ஹே  ராஜன்! கலங்காதே உன் மாலையை உனக்கு மீண்டும் வரவழைத்துக் கொடுக்கிறேன்"என்றவர் அக்னி பகவானிடம் வேண்ட அந்த ஹோமகுண்டத்திலிருந்து வைரமாலை பிரகாசத்துடன் வெளியே வந்தது.
அதை எடுத்து மன்னனிடம் கொடுத்தார். மன்னனோ அவரது கால்களில் விழுந்தான்."சுவாமி, நான் தானமாகக் கொடுத்ததைத் தாங்கள் என்ன செய்தாலும் அதைப் பற்றி நான் கவலைப் படக் கூடாது.மறந்துவிட வேண்டும்.ஆனால் நான் தவறாக எண்ணிவிட்டேன் என்னை மன்னியுங்கள் என்று அடிபணிந்து வேண்டி நின்றான். அத்துடன் இந்த வைர மாலையைத்  தாங்கள் ஸ்வீகரிக்கவேண்டும் எனவும் வேண்டிக் கொண்டான்.
புன்னகையுடன் அதை ஏற்றுக் கொண்ட ராகவேந்திரர் இதை என் மூலராமனுக்கு சமர்ப்பிக்கிறேன் என்று கூறியவாறு பெற்றுக் கொண்டார்.

                    இத்தகைய அதிசயங்களை நிகழ்த்தியவர் கல்வி அறிவே சிறிதும் இல்லாதவனுக்கு பெரும் பதவி 
கிட்டும்படி செய்த அதிசயமும் உண்டு.அதை அடுத்து காண்போம்.
                                                                              
                                                                                   (தொடரும்)










 






















ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee

பாட்டி சொன்ன கதைகள்

அன்பு நேயர்களே,

சில வருடங்களுக்கு முன்பு இத்தளத்தில் “பாட்டி சொன்ன கதைகள்” (Grandma Tales Tamil) என்ற தலைப்பில் Apple iOS App Storeல் App பற்றி சொல்லி இருந்தேன். இது Haviga (http://www.haviga.com) என்ற நிருவனம் என்னுடைய சிறுவர் கதைகளை, என் குரலில், அழகான சித்திரங்களுடன் குழந்தைகள் ரசிக்கும் வண்ணம் வெளியிட்டு உள்ளது. இதை இப்பொழுது இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் முதல் கதையை இலவசமாக உங்கள் குழந்தைகளுடன் ரசிக்கலாம். மற்றும் 6 கதைகளை 2 பாகங்களாக சிறிய தொகை கொடுத்து ரசிக்கலாம். 

நீங்களும் இந்த படிக்கேற்றத்தை (App) பதிவிறக்கம் செய்து தங்களின் கருத்தை இங்கும், iOS App Storeல் விமர்சனத்தின் மூலமும் தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.

"பாட்டி சொன்ன கதைகள்" பதிவிறக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்: http://itunes.apple.com/us/app/grandma-tales-tamil/id556775899?mt=8

நன்றி,
ருக்மணி சேஷசாயி

செவ்வாய், 8 டிசம்பர், 2015

மந்த்ராலய மகான்--6

மனைவியின் நிலை; கணவர் சந்நியாசம் மேற்கொண்டார் என்ற செய்தி காதில் விழுந்ததும் துன்பத்திலும் துயரத்திலும் ஆழ்ந்தாள். இனி அவரைக் காண இயலாது  என்ற உண்மையை அறிந்த சரஸ்வதி பாய் துடித்தாள். அவர் இல்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.அவரைப்பிரிந்து வாழும் நிலையை விரும்பாத சரஸ்வதிபாய் ஒரு பாழுங்கிணற்றில் விழுந்து  தன்வாழ்வை முடித்துக்  கொண்டாள்.அதனால் பிசாசு ஜென்மமாக ராகவேந்திரரையே சுற்றிச் சுற்றி வந்தாள் .அந்த பிசாசு உருவத்தின் மீது தன்  கமண்டல நீரைப் புரோக்ஷிக்க அவள் விமோசனம்  பெற்றாள். 
அவள் நினைவாக அந்த வம்சத்தார் தத்தம் இல்லங்களில் நடக்கும் எல்லாசுபகாரியங்களுக்கும் முன்னர் சரஸ்வதியின் நினைவாக சுமங்கலிகளுக்கு வஸ்திரதானம் அன்னதானம் செய்யவேண்டும் என்ற நியதியை ஏற்படுத்தினார்.
இப்போதும் அவர் வம்சத்தாரிடையே சுமங்கலிப் பிரார்த்தனை நடைபெற்று வருகிறது.
ராகவேந்திரர் நிகழ்த்திய அற்புதங்கள்;
நாளடைவில் ஸ்ரீ ராகவேந்திரர் மூலராமர் பூஜையை மிகுந்த ஈடுபாட்டோடும் பக்தியோடும் செய்வதையும் ஸ்ரீமடத்தின் காரியங்களைக் கவனிப்பதையும் பிரச்சினைகளை சுமுகமாகத் தீர்ப்பதையும் கண்டு உள்ளம் பூரித்தார் குரு சுதீந்திரர்.இனி ஸ்ரீமடத்தைப் பற்றி கவலையின்றி தேச சஞ்சாரம் செல்லத் திட்டமிட்டார்.அதன்படி கும்பகோணம் விட்டுப் புறப்பட்டார்.
                            குருவின் ஆக்ஞைப் படியே ஸ்ரீமடத்தைப் பராமரிப்பதும் சிஷ்யர்களுக்கு உபதேசம் செய்வதுமாய் மூலராமரைப் பூஜித்து வந்தார் ஸ்ரீ ராகவேந்திரர். இவர் வேங்கடநாதனாக இருந்தபோதே செய்த அற்புதங்கள் சில என்றால் ராகவேந்திரராக மாறியபின் நிகழ்த்திய அற்புதங்கள் அநேகம்.செல்லுமிடமெல்லாம் அற்புதங்களை நிகழ்த்திய வண்ணம் இருந்தார்.
 ஒருமுறை இவரது சிஷ்யர்களில் ஒருவன் திருமணத்திற்காக இவரிடம் ஆசீர்வாதம் பெற வந்து நமஸ்கரித்தான்  "சிரஞ்சீவியாக வாழ்வாயாக" என்று ஆசீர்வதித்துசிறிது செல்வமும் கொடுத்து  அனுப்பினார் .அந்தசிஷ்யன் திருமணம் முடிந்து மகிழ்ச்சியுடன் சென்றவன் வீட்டின் நிலைப் படியில் மோதி மயக்கமடைந்து கீழே விழுந்தவன் எழுந்திருக்கவே இல்லை.
                    அவன் இறந்துவிட்டான் என அனைவரும் அழுதனர்.இந்தச் செய்தி ஸ்ரீராகவேந்திரரின் செவிகளுக்குப் போயிற்று. அவர் சிஷ்யனை அழைத்துவரச் சொல்லி அனுப்பினார்.அந்தச் சீடனின் பெற்றோர் அழுத படியே மாப்பிள்ளையான அவனைக் கொணர்ந்து ராகவேந்திரர்முன் படுக்க வைத்தனர். ராகவேந்திரர் தன கமண்டலத்திலிருந்த தீர்த்தத்தை அவன்மீது ப்ரோக்ஷிக்க தூக்கத்திலிருந்து விழிப்பவன்போல் விழித்து குருவை வணங்கினான்.
                                     (தொடரும்)



ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

புதன், 2 டிசம்பர், 2015

மந்த்ராலய மகான் -5

பட்டாபிஷேகம்;  
                                    சில நாட்கள் கழிந்தன.ஒருநாள் தனிமையில் இருக்கும்போது சுதீந்திரர் வேங்கடநாதனை

அழைத்தார்.பணிவோடு வந்து நின்ற வேங்கடநாதனுக்கு உபதேசம் செய்தார்.

"வத்ஸ ! இந்த ஸ்ரீமடத்தையும் வைஷ்ணவ சம்பிரதாயத்தையும் கட்டிக்காக்கவே உன்னை அனுப்பியுள்ளாரஜகத்குருவான ஸ்ரீமன் நாராயணன்.  அவன் இச்சைப்படியே நீயே இந்த பொறுப்புகளை ஏற்று ஸ்ரீமூலராமனுக்குப் பூஜை செய்யும்  பேற்றையும் பெற்று இந்த ஜெகத்தினை உத்தாரணம் செய்ய வேண்டும் இது உன் விதி. இதுவே என் ஆசையும் கூட.'' என்றபோது வேங்கட நாதன் திடுக்கிட்டார்.

                   "சுவாமி நான் சந்நியாசி ஆகிவிட்டால் என்மனைவி மக்களின் கதி என்னவாகும்? அவர்களைத் தவிக்கவிட்டுவிட்டு இந்த பட்டம் எனக்கு வேண்டாம் ஸ்வாமி  என்னை மன்னியுங்கள்." என்று கூறியவர் சிந்தனையுடன் இல்லம் வந்து சேர்ந்தார்.தனிமையில் சிந்தனை வயப்பட்டவராய    இருந்தார். காரணம் தெரியாமல் தவித்தாள் சரஸ்வதி .              
                     
                 இரவு படுக்கையில் படுத்தபோதும் சிந்தனை வயப்பட்டவராகவே இருந்தார். திடீரென ஒரு வெளிச்சம் 
தூக்க நிலையா விழிப்பு நிலையா   எனத் தெரியாத ஒருவித மயக்க நிலையில் இருந்தார் வேங்கடநாதன்.அவர் முன்  தெரிந்த வெளிச்சத்தில் வெண்தாமரை மீது வீற்றிருந்தபடி கையில் வீணையை ஏந்தியபடி சரஸ்வதி பிரசன்னமானாள். கைகளைக்  குவித்தபடி  அவள் முன் நின்றிருந்தார் வேங்கட நாதன். அந்த தேவி  ஆசி கூறிப பின்வாய்   திறந்து பேசலுற்றாள் 

"வத்ஸ! நானே சரஸ்வதி வித்யாலட்சுமி.. மத்வர் வியாசராயர் விஜயேந்திரர் சுதீந்திரர்முதலான   யதிகள் தங்கள் கிரந்தங்களால் என்னை  அலங்கரித்தனர். இன்னும் இரண்டு வருடங்களே சுதீந்திரரின் வாசம் இருக்கும்.அதன்பின் உன்னையே நான் எதிர்பார்த்திருக்கிறேன். ஸ்ரீமூலராமருக்குப் பூஜை செய்யும் 
தகுதி உன்னிடமே உள்ளது.நீ சந்நியாசி ஆகி வைஷ்ணவ சம்பிரதாயத்தைக் காக்க வேண்டும்.நீ யதியாகியே தீர வேண்டும் நானும் உன்னிடமே வாசம் செய்யவேண்டும். இது உனக்கேற்பட்டுள்ள விதி.இதிலிருந்து நீ தப்ப முடியாது. போ.யதியாகி இந்தப் பூவுலகை  உத்தாரம் செய்." என்று கூறி அவர் தலையில் தன அபயஹஸ்தத்தை  வைத்து ஆசி கூறினாள்.பின்னர் அவர் நாவில் பீஜாக்ஷரம் எழுதி மறைந்தாள். 
 
                  விடிந்தது மூலராமரின் சுப்ரபாதம் கேட்டது.திடுக்கிட்டுக் கண்விழித்த வேங்கடநாதன் ஏதோ புதிய உலகிலிருந்து எழுந்து வந்தது போல் உணர்ந்தார்.மறுநாள் சுதீந்திரர் முன் சென்று பணிந்து  நின்றார்.யதியாக சம்மதம்  என்ற வேங்கடநாதனின் சொல் கேட்டு மிகவும் மகிழ்ந்தார் சுதீந்திரர். நிறைய திரவியம் கொடுத்து மகன் லக்ஷ்மி நாராயணனுக்கு  உபநயனம் செய்வித்து வரும்படி கூறி அனுப்பினார்..
குமாரன் லக்ஷ்மிநாராயண னுக்கு உபநயனம் செய்வித்து மனைவி மகன் இருவரையும் அண்ணன் குருராஜரின் இல்லத்திற்கு அனுப்பி வைத்தார்.
                    பின்னர் மடத்தையடைந்து குரு சுதீந்திரர் முன் யதியாக சம்மதம் என்று கூறி நின்றார். அவருக்கு சந்நியாசம் வழங்க சம்மதம் என்று கூறி அக்ஷதை கொடுத்து ஆசி வழங்கினார் சுதீந்திரர்.தனக்குப் பின்னால் யதியாக வரப் போகும் வேங்கடநாதனுக்குப் பட்டாபிஷேகம்  என்ற செய்தியை எல்லா இடங்களுக்கும் அனுப்பினார் தஞ்சை மன்னன் ராஜா ரகுநாத பூபதியின் முன் இந்த வைபவம் நடைபெற ஏற்பாடாகியது.
அரண்மனையில் நடக்கும் வைபவம் .கேட்கவேண்டுமா?ஊர்முழுவதும் தோரணங்கள் மலர் அலங்காரங்கள் வாசனை வீசிக் கொண்டிருந்தது.வாசனைத் திரவியங்களான  சந்தனம் ஜவ்வாது புனுகு போன்றவற்றால் மெழுகப்பட்டு ஊரெங்கும் மணம் பரப்பிக் கொண்டிருந்தது. மக்கள் அனைவரும் யாகசாலையை மொய்த்தனர் 
                     அதோ அதோ பிரகாசமாய் ஸ்ரீ சுதீந்திரர் அவருக்குப் பின்னால் ஞானப் பிரகாசமாய் ஸ்ரீ வேங்கட நாதன்.
மக்கள் சொல்லிச் சொல்லிப் பரவசப்பட்டனர். ஒவ்வொரு சடங்காக நடந்து முடிந்தது.
சாலிவாகன சகம் 1623 ருத்ரோத்காரி வருடம் பால்குன சுத்த த்விதீயை  சுபயோக சுபதினம்.வேதகோஷங்கள் மங்கலவாத்யங்கள் முழங்க ஸ்ரீ சுதீந்திரர் வேங்கட நாதருக்கு காஷாய வஸ்திரத்தைக் கொடுத்தார்.மக்கள் கண்களில் கண்ணீர் வெள்ளம்.
                     காஷாய வஸ்திரம் தரித்துசந்நியாச கோலத்தில்  வேங்கடநாதன்  அக்னிஎன ஜொலித்தார்.
மக்கள் மெய் சிலிர்த்தார்.பல புண்ணிய தீர்த்தங்களால் அவருக்கு அபிஷேகம் செய்து அவருக்கு 
"ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தர் " என்ற நாமத்தை ஆசிரமப் பெயராக சூட்டினார் ஆயகலைகள் அனைத்தையும் போதித்த ஸ்ரீ சுதீந்திரர். சகலவித சாஸ்த்திர சுவடிகளையும் கொடுத்து ஸ்ரீ மூலராமர் ஸ்ரீ திக்விஜயராமர் ஸ்ரீ ஜெயராமர் ஸ்ரீ வ்யாஸ முஷ்டி போன்ற புராதனபுண்ய விக்ரகங்களையும்  சாளிக்ராமங்களையும் கொடுத்து ஸ்ரீமடத்தின் பொறுப்புகள் அனைத்தையும் ஒப்படைத்து  நிம்மதியடைந்தார் சுதீந்திரர்.          
மக்கள் "ராஜாதி ராஜ குருசார்வ பௌம ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தருக்கு " ஜய்" என ஜெயகோஷமிட்டனர்.
மன்னரும் மக்களும் அவருக்குப் பாதகாணிக்கை செலுத்தி அவரது ஆசியைப் பெற்று மகிழ்ந்தனர்.
ஸ்ரீ ராகவேந்திரரின் பெருமையை கோபாலதாசர் தனது பாடல் வாயிலாகத் தெரிவிக்கிறார்.
              "ரா"என்று சொன்னால் ரட்சிப்பார். "கா" என்று சொன்னால் சர்வ பயமும் ஓடிவிடும். "வே" என்று சொன்னால் வியாதிகள் பறந்துவிடும். "இந்திரா" என்று சொன்னால் சகல செல்வங்களும் வந்து சேரும் என்று பெருமைபடக் கூறுகிறார்."

                                                                             (தொடரும்)





ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

செவ்வாய், 24 நவம்பர், 2015

மந்த்ராலயமகான் -4.

திருமணம் ;

 
                                சகல சாஸ்திரங்களையும் கற்றுணர்ந்த வேங்கடநாதன் மீண்டும் புவனகிரிக்கு வந்தார். தம்பிக்கு தக்க பருவம் வந்ததென எண்ணிய அண்ணன் குருராஜர்  சரஸ்வதிபாய் என்ற மங்கை நல்லாளை இவருக்குத்  திருமணம் செய்து வைத்தார். வேங்கடநாதனும் சரஸ்வதிபாயும் மனமொத்த  தம்பதிகளாக இனிதே இல்லறம் நடத்தினர்.தக்க காலத்தில் புதல்வன் லக்ஷ்மி நாராயணன் பிறந்து இவர்கள் வாழ்வில் வசந்தமானான்.ஆனால் பூர்வ ஜன்ம பலன் யாரையும் விடுவதில்லை. அதனால் மிகுந்த வறுமையில் வாடினார் வேங்கடநாதன். வறுமையின் பிடியிலிருந்து விடுபடுவதற்காக பொருள் ஈட்டிவரப் புறப்பட்டார்.
                                 
                                                                            வழியில் ஒரு கிராமம். அங்கு தனவந்தர் ஒருவர் வீட்டில் சமாராதனை நடந்து  கொண்டிருந்தது.
அங்கு சென்றார் வேங்கடநாதன்.இவரைப் பார்த்ததும்  இவரிடம் ஏதேனும் வேலை வாங்கிக் கொண்டு சாப்பாடு போடவேண்டும் என்ற எண்ணம் தோன்றவே அங்கிருந்தவர்களில் ஒருவர் இவரிடம் சந்தனம் அரைக்கச் சொல்லி ஆணையிட்டார். வேங்கடநாதனும் தன்  பசித்துன்பம் நடந்துவந்த களைப்பு எதுவும் தெரியாதிருக்கும் பொருட்டு "அக்னி சூக்தம்" என்ற ஸ்லோகத்தைச் சொல்லிக் கொண்டே சந்தனத்தை அரைக்கத் தொடங்கினார்.அக்னிபகவான் அவர் அரைத்த சந்தனத்தில் ஆவிர்ப்பவித்தார்.அதனால் அக்னியின் நெருப்புச் சூடு அந்த சந்தனத்தில் நிறைந்தது.

                                                       சாப்பாடு முடிந்து அனைவரும் தாம்பூலம் தரித்து சந்தனம் பூசிக் கொண்டனர்.அடுத்த நொடி "ஆஹா எரிகிறதே..எரிகிறதே"  என அலறத் தொடங்கினர். சந்தனம் அரைத்த வேங்கடநாதனைப் பிடித்து என்ன செய்தாய் எனக் கேட்டனர்  அவர் அக்னிசுக்தம் சொல்லியபடி சந்தனம் அரைத்ததைக் கூறியவர்  மீண்டும் அந்த சந்தனத்தை வாங்கித் தன கையில் வைத்து வருண சூக்தம் சொல்ல அந்தசந்தனம் குளிர்ந்தது. அதைப் பூசிக்கொண்ட அனைவரும் எரிச்சலில் இருந்து விடுபட்டு பெருமூச்சு விட்டனர். வேங்கடநாதனை ஒரு மகாஞாநிஎன அறிந்து அவருக்குத் தக்க மரியாதை செய்தனர்.பொன்னையும் பொருளையும் தட்சிணையாகக் கொடுத்து வழியனுப்பி வைத்தனர். இவரது புகழ் பல ஊர்களுக்கும் பரவலாயிற்று.

                                             கிடைத்த திரவியத்தைக் கொண்டு சில காலம் தான தருமங்கள் செய்து வாழ்ந்து வந்தார். மீண்டும் கும்பகோணம் சென்று குரு சுதீந்திரரைக் கண்டு மடத்திலேயே இருக்க விருப்பம் கொண்டார். மனைவி சரஸ்வதிபாயிடம்  இதுபற்றிக் கேட்க பாவம் நடக்கப்போவது இன்னதென்று அறியாமல் அவளும் மிக்க மகிழ்ச்சியுடன் புறப்பட்டாள். மூவரும் கும்பகோணம் ஸ்ரீமடம் வந்து சேர்ந்தனர்.வேங்கடநாதன் குரு சுதீந்திரரைப் பார்த்து சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து நின்றார். அவரைப் பார்த்த குரு மனம் மிக மகிழ்ந்தார்.வயதாகிவிட்டதனால் முன்போல் மடத்து விவகாரங்களையும் ஸ்ரீமூலராமரின் பூஜையையும் சரியாகக் கவனிக்க இயலாமல் தவித்தபடி இருந்தார். தமக்குப் பின் சரியானவர் இந்த பீடத்திற்கு யார் வருவார் என ஏங்கிக் காத்திருந்த  சுதீந்திரர் முன்  வேங்கடநாதன் வந்துநின்றது அவருக்குப் பெரும் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் அளித்தது.

                                                                (தொடரும்)








Rukmani Seshasayee











வெள்ளி, 20 நவம்பர், 2015

மந்த்ராலய மகான்

            பரிமளாச்சார் ;                                                                                            தொடர்ச்சி.
       மேலும் பயிலவேண்டும் என்னும் எண்ணத்திலிருந்த வேங்கடநாதன் கும்பகோணம் வந்து சேர்ந்தார்.அங்கு மடத்தில் ஸ்ரீ விஜயேந்திரருடன்  ஸ்ரீ சுதீந்திரரும் தங்கியிருந்தார். இவர்கள் முன் சென்று பணிந்து நின்றார் வேங்கடநாதன். இவர் சாதாரண பிறப்பல்ல என்பதை அறிந்து இருவரும்  பரவசப்பட்டனர். இவரது பிறவி மக்களின் நன்மைக்காகவும் அவர்களின் வாழ்க்கைத் தத்துவத்தை உணர்த்துவதற்காகவும் ஏற்பட்டுள்ளது என்பதைப்  புரிந்துகொண்ட இருவரும் வேங்கடநாதனை ஆசீர்வதித்தனர்.
     
         மேலும் சாஸ்த்திர ஞானம் ஏற்படவேண்டும் என்னும் பேரவாவினால் சுதீந்திரரிடம் சிஷ்யனாக வேண்டும் என அவர்முன் நமஸ்கரித்து நின்றார் வேங்கடநாதன்.மிக்க மகிழ்ச்சியுடன் இவரைச் சீடனாக ஏற்றுக்கொண்டு பல சாஸ்திர விஷயங்களைக் கற்பித்து வந்தார்  சுதீந்திரர்.
           
        ஒருநாள்  குரு பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போதே இன்று பாடம் போதும் என்று சொல்லி எழுந்து விட்டார்.அனைவரும் படுக்கச் சென்று விட்டனர். ஆனால் வேங்கடநாதனோ தனிமையில் அமர்ந்து கொண்டு குரு சொன்னவற்றையே சிந்தித்துக் கொண்டிருந்தார்.
அன்றைய பாடம்  ஸ்ரீமத்வரின் பிரம்மசூத்திர பாஷ்யத்திற்கு  ஸ்ரீ ஜெயதீர்த்தர் கொடுத்துள்ள உரைநூல்' நியாயசுதா' என்ற நூலுக்கு விளக்கத்தைக் கூறிக் கொண்டிருந்தார். திடீரென்று விளக்கம் சொல்ல இயலாமல்  பாதியில் நிறுத்திவிட்டு எழுந்து சென்றுவிட்டார்.அதையே நினைத்துக் கொண்டிருந்த வேங்கடநாதன் அப்படியே பனியில்படுத்து  உறங்கிவிட்டார். 
      நடுஇரவு. குரு சுதீந்திரர் சிஷ்யர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்க்க வெளியில் வந்தபோது அனைவரும் உறங்கிக் கொண்டிருக்க அங்கு வேங்கடநாதனை மட்டும் காணாததால் தேடிக் கொண்டே சென்றார்.கொட்டும் பனியில் பல ஓலைச்சுவடிகளுக்கு நடுவே குளிரில் நடுங்கியவாறே உறங்கிக் கொண்டிருந்த வேங்கடநாதனைக் கண்டார். அவரருகே கிடந்த ஓலைச்சுவடிகளை எடுத்துப் பார்த்த சுதீந்திரர் திடுக்கிட்டார்.தான் சொல்ல இயலாமல் விட்ட நியாயசுதாவிற்கு எளிமையான உரையை எழுதியிருந்ததைக் கண்டு உள்ளம் உருகிய குரு சுதீந்திரர் தன மேல்  அங்கவஸ்த்திரத்தை அவருக்குப் போர்த்திவிட்டு வந்துவிட்டார்.
         அதிகாலை கண்விழித்த வேங்கடநாதன் பதறிப்போனான். குருவின் மேலாடை தன்மீது எப்படிவந்தது என அறியாமல் அதை மரியாதையுடன் கைகளில் ஏந்திக் கொண்டு குருவின் முன் நின்றார்.புன்னகையுடன் அவரை வரவேற்ற சுதீந்திரர் அன்புடன் பார்த்து,
"வேங்கடநாதா,அரிய நூலுக்கு மிகச் சிறப்பாக விளக்க உரை  எழுதியுள்ளாய். இந்த உரைநூலுக்கு "சுதா பரிமளா"என்று பெயர் சூட்டுகிறேன்.
அரியநூல் எழுதிய உனக்கு "பரிமளாச்சாரியார்" என்ற பட்டத்தைச் சூட்டுகிறேன்."என்று அகமகிழ்ந்து கூறி அவருக்கு மந்த்ராக்ஷதை கொடுத்து ஆசீர்வதித்தார் குரு சுதீந்திரர்.கூடியிருந்தவர்கள் பரிமளாச்சாரியார் வாழ்க என ஒலிஎழுப்ப குருவையும் பெரியோரையும் பணிந்து நின்றார் வேங்கடநாதனான பரிமளாச்சாரியார்.
                                                                              (தொடரும்)




ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com