செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

43rd story. sitrerumbum uyir kaakkum.

                                       சிற்றெறும்பும் உயிர் காக்கும்.
ஒரு கோவில் மாடத்தில் புறா ஒன்று மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தது. தினமும் அந்தப் புறா இரை தேட அருகே இருக்கும் காட்டுப் பக்கம் போகும். அந்தக் காட்டில் ஒரு நதி ஓடிக்கொண்டிருந்தது.அதன் கரையில் ஒரு பெரிய ஆலமரம் இருந்தது. அந்தப் பழ மரத்தைத் தேடி புறா செல்வது வழக்கம். இப்படி புறா தினமும் பறந்து செல்வதை ஒரு கழுகு கவனித்து வந்தது. அதன் நாவில் எச்சில் ஊறியது. இந்தக் கொழுத்த புறாவைச் சாப்பிட்டால் எத்தனை ருசியாக இருக்கும் என்று நினைத்தது அந்தக் கழுகு. ஒருநாள் புறா அந்தக் காட்டை நோக்கிச் செல்லும் போது கழுகு பார்த்து விட்டது. புறாவைக் கழுகு துரத்த ஆரம்பித்தது. உணவுக்காகத் துரத்தும் கழுகை விட உயிருக்காகப் பறக்கும் புறாவின் வேகம் அதிகமாயிருப்பதில் ஆச்சரியம் இல்லையல்லவா?
எனவே புறா கழுகிடமிருந்து தப்பி கோவில் மாடத்தில் புகுந்து ஒளிந்து கொண்டது. ஏமாந்து போன கழுகு இன்னொரு சமயத்திற்காகக் காத்திருந்தது.
பொழுதும் விடிந்தது.வழக்கம்போல புறா இரை தேட காட்டிற்குச் சென்றது. வழக்கமான ஆலமரத்திற்குச் சென்று கிளையில் அமர்ந்திருந்தது.
அப்போது தற்செயலாகக் கீழே பார்த்தது. ஒரு சிற்றெறும்பு  நதியில் விழுந்து தண்ணீரில் மூழ்கியபடியே தத்தளித்துக் கொண்டிருப்பதைப்  பார்த்தது.
புறாவிற்கு அந்த எறும்பைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. உடனே மரத்தில் இருந்த இலைகளில் பெரிய இலையாகப் பறித்து நீரில் போட்டது. அந்தஎறும்பும்  புறாபோட்ட இலையின் மேல் ஏறிக் கரை சேர்ந்தது. ஓடிச் சென்று புற்றுக்குள் நுழைந்தது. புறாவும் மகிழ்ச்சியாகத் தன் இருப்பிடம் வந்து சேர்ந்தது.
சிலநாட்கள் கழிந்தன.வழக்கம்போல புறா ஆலமரத்திற்குச் சென்றது. அங்குள்ள பழங்களின் கொட்டைகளைச் சாப்பிட்டது. இந்தப் புறாவைக் கவனித்த வேடன் ஒருவன் புறாவைக் கொல்ல வில்லில் அம்பைப் பூட்டினான்.புறா தப்பிப் பறக்க நினைத்தபோது மேலே கழுகு பறப்பதைப் பார்த்துவிட்டது.பறக்காவிட்டால் வேடன் அம்பை விட்டுக் கொன்று விடுவான். பறந்து சென்றால் கழுகு கொன்று விடும். இன்று நமக்குச் சாவு நிச்சயம் என்று புறா எண்ணியது. கடைசி முறையாகக் கடவுளை வேண்டிக் கொண்டது. திடீரென்று "ஆஆ..."என்று வேடன் அலறும் சத்தம் கேட்டது. புறா கண்களைத் திறந்து பார்த்தது. தன்னைக் குறி பார்த்த வேடன்தன் கால்களைப்  பிடித்தபடி உட்கார்ந்திருந்தான். அவன் விட்ட அம்பும் குறி தவறி புறாவைப் பிடிக்கப் பறந்து கொண்டிருந்த கழுகின்மேல் பட்டு அதைக் கொன்று விட்டது. சரியான சமயத்தில் வேடனின் காலை எறும்பு  கடித்ததால்தான் அவனது குறி தவறித் தன் உயிரும் காப்பாற்றப் பட்டது. அத்துடன் தன் உயிரைப் பறிக்கக் காத்திருந்த கழுகினால் வந்த  ஆபத்தும் நீங்கியது.
மனதுக்குள் எறும்புக்கு நன்றி சொல்லிக் கொண்டே சந்தோஷமாகப் பறந்து சென்றது அந்தப் புறா. சிறு எறும்புதானே என நினைக்கலாகாது. அதுகூட ஒரு உயிரைக் காக்கமுடியும் என்பதைத தெரிந்து கொள்ள வேண்டும். எனவே யாரையும் எளியர் என்று எண்ணலாகாது என்ற உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். வாழ்க்கையில் யாரையும் மதிக்கக் கற்றுக் கொள்ளவேண்டும்.
Blog: http://chuttikadhai.blogspot.com

சனி, 7 ஆகஸ்ட், 2010

42nd story.myththunanai viduviththa kadhai.

                                               மைத்துனனை விடுவித்த கதை.
கிருஷ்ண தேவ ராயருக்கு பழங்கள் என்றால் மிகுந்த விருப்பம். ஒரு பெரிய பழத்தொட்டத்தையே பராமரித்து வந்தார். அந்தத் தோட்டத்துப் பழங்களை மிகவும் விரும்பிச் சாப்பிட்டு வந்தார். அந்தத் தோட்டத்தைக் கண்ணும் கருத்துமாகப் பராமரித்து வந்தார் .மாம்பழம், அன்னாசி, பப்பாளி,கொய்யா எனப் பலவகைப் பழ மரங்களை  அந்தத் தோட்டத்தில் வளர்த்து வந்தார் .எப்போதும் அத்தோட்டத்தில் பழங்கள் பழுத்துத் தொங்கிக்கொண்டே இருக்கும்.ஒரு நாள் தோட்டக்காரன் தோட்டத்தில் பழுத்த பழங்களைக் கொண்டு வந்து ராயர் முன் வைத்தான். அப்போது தெனாலிராமன் மன்னருடன்உரையாடிக்கொண்டு இருந்தான். எனவே அப்பழங்களில் சிலவற்றை மன்னர் ராமனுக்கும் கொடுத்தார். அவற்றை ராமன் தன் வீட்டுக்கு எடுத்து வந்து தன் மனைவியிடம் கொடுத்தான். அந்த சமயம் ராமனின் மைத்துனன் ஊரிலிருந்து வந்திருந்தான். அவனுக்கும் சில பழங்களை ராமன் சாப்பிடக் கொடுத்தான்.
ராமனின் மைத்துனன் பெயர் மல்லையா. அவன் ராமன் கொடுத்த பழங்களைச் சாப்பிட்டு மிகவும் ஆச்சரியம் அடைந்தான்.
ராமனிடம் அவன் "அத்தான், இதுபோன்ற ருசி மிகுந்த பழங்களை நான் இதுவரை சாப்பிட்டதே இல்லை. ஏது இந்தப் பழங்கள்?" என்று விசாரித்தான்.
"இது நமது அரசருக்குச் சொந்தமான தோட்டத்திலிருந்து பறித்த பழங்கள். மன்னர் இவற்றை மிகவும் கவனமாகப் பாதுகாக்கிறார்.  இன்று நீ செய்த அதிருஷ்டம் எனக்குக் கிடைத்த பழங்களை உண்ணும் பேறு பெற்றாய்."என்று பதிலளித்தான் ராமன்.
"அத்தான், ஊரில் அப்பா,அம்மா, இன்னும் மற்றவர்களுக்கும் இதைக் கொண்டு போய்க் கொடுத்தால் மிகவும் மகிழ்வார்கள். இன்று இரவு யாருக்கும் தெரியாமல் கொஞ்சம் பழங்களைப் பறித்துச் செல்கிறேன்." 
ராமன் பதறினான்."அடப்பாவி! கெடுத்தியே குடியை. அப்படியேதும் செய்து விடாதே. மாட்டிக்கொண்டால் மரண தண்டனை நிச்சயம். பிறகு உன்னை அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது. நல்லபடியாய் ஊர் போய்ச் சேர்." என்று எச்சரித்தான்.
ஆசை வெட்கமறியாது பயமும் அறியாது என்பதற்கிணங்க மல்லைய்யாவை ஆசை பிடித்துத் தள்ளியது.  இரவு நேரம். அனைவரும் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர். மல்லையா மெதுவாக எழுந்தான். யாரும் அறியா வண்ணம் அரசரின் பழத் தோட்டத்திற்குள் நுழைந்தான். பழங்களைப் பறித்து மூட்டையாகக் கட்டி கொண்டு மெதுவாக நடந்தான். ஆனால் இலைகளின் ஓசையால் காவலர் விழித்துக் கொண்டு மல்லைய்யாவைப  பிடித்துக்  கொண்டு போய் மன்னர் முன் நிறுத்தினர். கையும்  களவுமாகப் பிடிபட்ட மல்லையாவுக்கு மன்னர் மரண தண்டனை விதித்தார். இதையறிந்த ராமனும் அவன் மனைவியும் ஓடிவந்தனர்.
இவர்களைப் பார்த்தவுடன் கிருஷ்ண தேவராயர் "ராமா! நீ உன் மைத்துனனைக் காப்பாற்ற வந்துள்ளாய். ஆனால் நீ சொன்னபடி நான் சத்தியமாகச் செய்யப் போவது இல்லை."என்றார்.
ஒரு நிமிடன் சிந்தித்த ராமன் "தங்கள் சத்தியத்தை கண்டிப்பாகக் காப்பாற்றுவீர்களா அரசே?" என்றான்.
"சத்தியமாக. உன் சொல்படி நான் செய்யவே மாட்டேன்."
"அப்படியானால் என் மைத்துனனை கொன்று விடுங்கள் அரசே!"
கிருஷ்ண தேவராயர் திகைத்தார். ராமன் சொல்வது போல் செய்வது இல்லை என வாக்களித்து  விட்டாரே!  எனவே மல்லைய்யாவை விடுதலை செய்வதைத் தவிர வேறு வழியே இல்லை மன்னருக்கு. மல்லைய்யாவை விடுதலை செய்தார். தன் சொல்லையே தனக்கு சாதகமாகப பயன்படுத்திக் கொண்ட ராமனின் திறமையைப்  பாராட்டினார் மன்னர்.
ஒருநன்மை ஏற்படுமானால் எந்த ஒரு  சொல்லையோ செயலையோ நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதே உண்மையான அறிவு என்பதை இந்தக் கதையிலிருந்து அறியலாம்.




திங்கள், 2 ஆகஸ்ட், 2010

41st story.

                              அரங்கன் அழைத்த அன்பன்.
வரலாற்றில் சிறப்பிடம் பெற்ற தலைநகரம் உறையூர்.சோழ சாம்ராஜ்யத்தின் சிறப்புமிக்க நகரமாகத் திகழ்ந்தது இந்நகரம். இங்கு வாழும் மக்களின் முக்கிய தொழில் விவசாயமே. சோழநாடு சோறுடைத்து என்னும் வாக்கிற்கிணங்க நெல்லும் கரும்பும் ஏராளமாக விளையும் நாடு சோழநாடு. அந்நகரில் ஒருநாள் சூரியன் உதிக்கும் போதே மிகப் பிரகாசமாக உதித்தான். பறவைகள் எல்லாம் உற்சாகமாகப்  பாடின. நன்னிமித்தங்கள் தோன்றின.
அந்நகரில் வாழ்ந்த பாணர் குலத்தில் பிறந்த ஒரு பாணன் நெல் வயலின் பக்கமாக நடந்து சென்றான். திடீரென்று ஒரு குழந்தை அழுகுரல் கேட்டது. நெற்பயிரை விலக்கிப் பார்க்க அங்கே பயிரின் ஊடே ஒரு அழகிய ஆண்  குழந்தை கிடக்கக் கண்டு அதை எடுத்து உச்சி மோந்தான். பிள்ளையில்லாத தனக்கு ஆண்டவனே அளித்த பரிசு என மிக மகிழ்ந்தான். அவன் மனைவியும் தனக்கு அமுதமே கிடைத்தது போல மகிழ்ந்தாள். திருமால் அருளால்கிடைத்த குழந்தை என மிகவும் சீராட்டிப்   பாராட்டி வளர்த்தனர். இவரும் தாம் புகுந்த குலத்துக்கு ஏற்ற யாழ் பாடலில் சிறப்புற்று விளங்கினார். எனவே பாணர் குலத்தார் யாவரும் இவரை பாணர் குலத் தலைவர் என ஏற்றுக் கொண்டனர். இவரின் சிறப்புக் கருதி இவரை திருப்பாணர் என அழைத்தனர்.
திருப்பாணர் திருவரங்கத்துத் திருமாலான திருவரங்கன் மீது மாறாத அன்பு பூண்டிருந்தார். அவர் மீது பாக்கள் பாடவேண்டும் என்ற எண்ணத்தினால் திருவரங்கம் வந்து சேர்ந்தார். இவர் தன்னைத் தாழ்ந்த குலத்தினன் என்று எண்ணிய காரணத்தால் திருவரங்கத்திற்குள் அடியிடாமல் காவிரியாற்றின் தெற்குக் கரையிலேயே நின்று அரங்கனின் திருக்கோயிலின் கோபுரத்தை தரிசித்து வந்தார். 
சிலநாட்கள் கழிந்தன. தினமும் வைகறையில்காவிரிக் கரையில் நின்று "ரங்கா, ரங்கா," என்றழைத்ததோடு கேட்பவர் உள்ளம் குளிரவு ம் இறைவன் மனம் மகிழவும் பக்தியால் உள்ளம் பரவசமடையப் பாடினார். இவ்வாறு தினமும் இவரது சேவை தொடர்ந்து நடந்தது.
ஒருநாள் வைகறை நேரம் திருப்பாணர் கையில் யாழ்மீட்டிக்கொண்டு இறைவனைக் குறித்துப் பாடிக் கொண்டு இருந்தார். அப்போது உலோகசாரங்க முனிவர் காவிரியில் நீராடித் திருமண் அணிந்து துளசி மாலையும் தாமரைமணி மாலையும் அணிந்து கொண்டு கையில் பொற்குடத்தை ஏந்திக் கொண்டு அங்கு வந்தார். திருவரங்கன் திருவாராதனம் செய்யும் பொருட்டு காவிரியில் நீர் கொண்டு போக அவ்விடம் வந்தவர் திருப்பாணர் தன்னை மறந்து பாடிக்கொண்டு இருப்பதைப் பார்த்து அவரை "ஏய்! தூர விலகிப் போ" என்று கூக்குரலிட்டார். உலகையே மறந்து இறைவனைப் பற்றிப் பாடிக்கொண்டிருந்த திருப்பாணனின்  காதில் இவரது கூக்குரல் விழவில்லை. அதனால் இவரைத் தூர விலக்குவதற்காக உலோகசாரங்கர் ஒரு சிறு கல்லை எடுத்து இவர் மீது வீசினார். அது பாணரின் நெற்றியில் பட்டது. தெளிவு பெற்ற பாணர் தன் எதிரே முனிவர் நிற்பதைப் பார்த்து உடல் நடுங்க கரம் குவித்து அவ்விடம் விட்டகன்றார்.
பின்னர் முனிவர் பொற்குடத்தில் நீர் முகந்து கொண்டு கோவிலுக்கு வந்தார். அரங்கனுக்கு அந்நீரை அபிஷேகம் செய்யும் பொருட்டு அருகில் சென்றார். அருகே சென்றவர் திடுக்கிட்டார். அரங்கநாதனின் நெற்றியிலிருந்து ரத்தம் பெருகி வந்துகொண்டிருந்தது. இச்செய்தி மன்னருக்கும் தெரிவிக்கப் பட்டது. உடனே மன்னன் மந்திரி பிரபுக்கள் புடைசூழ அங்குவந்து  சேர்ந்தான். இறைவனின் நெற்றியிலிருந்து குருதி பெருகக் காரணம் அறியாது அதைப் போக்கவும் வழியறியாது அனைவரும் திகைத்தனர்.
மன்னனோ "இறைவா! அரங்கப் பெருமானே அடியேனோ என்நாட்டு மக்களோ அறியாது ஏதேனும் பிழை செய்திருந்தால் பொறுத்து அருளவேண்டுகிறேன்.இக்குறை தீர வழிஎதேனும் காட்டியருள வேண்டும்" என்று வேண்டிக் கொண்டான்..
அனைவரும் கவலையுடன் சென்றனர்.
இறைவன் திருப்பாணருக்கு அருள் செய்ய எண்ணம் கொண்டான் . அத்துடன் அவரது அன்பையும் பெருமையையும் உலகுக்கு உணர்த்த வும் முடிவு செய்தான். இறைவனின் திருவருள் பெற அன்பே முதன்மையானது என்பதை உலகத்தார் அறியச் செய்ய வேண்டும் என்று திருவுளம் கொண்டான்.
அன்று இரவு உலோகசாரங்க முனிவரின் கனவில் தோன்றிய இறைவன் "எனது அன்பனாகிய திருப்பாணனை அவன் இழிந்தவன் என எண்ணாமல் அவனை உன் தோள் மீது தூக்கி எம்முன் கொணர்க" எனக் கட்டளையிட்டான்.
இக்கனவை எண்ணி வியப்படைந்த உலோகசாரங்க முனிவர் இறைவன் கட்டளைப் படியே திருப்பாணனின் இருப்பிடம் சென்றார். பல அன்பர்கள் புடைசூழ முனிவர் வருவதைக் கண்டு திகைத்தான் பாணன். அவரை நெருங்கிய முனிவர் தன் தலைமேல் கரங்குவித்துஅவரை வணங்கி  இறைவனின் கட்டளையைக் கூறித் தன் தோள் மீது அமருமாறு வேண்டிக்கொண்டார்.ஆனால் பாணன் மறுத்தான். இழிந்த குலத்தவன் இறைவனின் கோயிலின் உள்ளே வருவது தகாது. அத்துடன் உம்மைத் தீண்டுவதும் தகாது. உம தோள் மீது ஏறுவதா! அபசாரம் என்று மறுத்தான்.ஆனால் முனிவர் அரங்கனின் கட்டளைக்குக் கீழ்ப் படிதலே அடியார்க்குக் கடன் என்பதை எடுத்துக் கூறி திருப்பாணனை சம்மதிக்கவைத்தார்.
உலோகசாரங்க முனிவர் பாணரைத் தன் தோளில் வைத்துத் தூக்கிக் கொண்டு இறைவன் முன் நிறுத்தினார். திருவரங்கன் சன்னதியில் நின்ற திருப் பாணன் அவனது அழகிய கோலத்தைப் பாடல்களாகப் புனைந்தான். மக்கள் அனைவரும் திருப்பாணாழ்வார் வாழ்க என்று வாழ்த்தினர்.
மக்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே இறைவனின் திருவடியை  வணங்கி அதிலேயே மறைந்து பேரின்ப நிலையை அடைந்தார்.
திருப்பாணாழ்வார்.
உலோகசாரங்க முனிவர் மனதுக்குள் அழுதார். வாழ்நாள் முழுவதும் இறைவனுக்கு சேவை செய்து வந்த தனக்கு நற்கதி கிட்டவில்லையே என ஏங்கினார்." உயர்ந்த குலத்தொன் என்ற எண்ணம் சிறிதும் இன்றிதிருப்பாணரைத தூக்கிக் கொண்டு வந்தமையால் உன் அன்பு உள்ளம் புரிகிறது. அதனால் உன்னையும் ஆட்கொண்டோம்" என்று அவருக்கும் பேரின்ப நிலையை அருளினார் இறைவன்.
இறைவன் அன்புருவானவன் அன்பு எங்கிருக்கிறதோ அங்கு இறைவன் இருப்பான். உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி என்பது இறைவன் முன் கிடையாது.
அன்பே சிவம். அன்பே ஹரி. அன்பே சக்தி.என்ற உண்மையை வளரும் சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டும்.
திருப்பாணாழ்வார் வரலாற்றிலிருந்து இந்த உண்மை நமக்குப் புரிகிறதன்றோ!






திங்கள், 26 ஜூலை, 2010

40th story.purandharadasar.

                                           புரந்தரதாசர்.
பண்டரிபுரத்துக்கு அருகே ஒரு சிற்றூர். அவ்வூரில் மாதவராவ் என்ற பெரியார் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் மனைவி ரத்தினாபாய் என்ற மாதரசி. அவர்களுக்குப் பல ஆண்டுகளாக மகப்பேறு இல்லாதிருந்தது.   திருப்பதி சீனிவாசனை வேண்டிக்கொண்டனர் தம்பதிகள். ஏழுமலையான் தயவால் அவர்களுக்கு ஓர் அழகிய ஆண்மகன் பிறந்தான். அவனுக்கு சீனிவாசன் என்றே பெயரிட்டு அருமையாக வளர்த்தனர். தக்க வயதில் அவனுக்கு ஒரு லேவாதேவிக் கடை வைத்துக் கொடுத்து வியாபாரம் தொடங்கி வைத்தனர். லக்ஷ்மி பாய் என்ற பெண்ணையும் மணம் முடித்து வைத்தனர்.சீனிவாசன் இசைக் கலையிலும்  கல்வி கேள்விகளிலும் வல்லவனாக இருந்தான்.
அதேபோல் அவனது லோபித்தனமும் அதிகமாகவே இருந்தது. வட்டிக்கடையில் வியாபாரம் வளர வளர சீனிவாசனின் பேராசையும் வளர்ந்தது.
அதிக வட்டி வட்டிக்கு வட்டி என்று வாங்கலானான். அவனது பெற்றோரின் மறைவுக்குப் பின்  பூஜை ,பஜனை அன்னதானம் எல்லாம் மறைந்து போயின. எப்போதும் பணம் பணம் என்று அவன் சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது. லக்ஷ்மிபாய் ஒன்றும் செய்ய இயலாதவளாக இருந்தாள். கண்ணீர் விடுவதைத் தவிர கருணை உள்ளம் கொண்ட அந்த மாதரசிக்கு  வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. 
ஓராண்டு கழிந்தது. லக்ஷ்மி பாயிக்கு ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்தது. ருக்மணிபாய் என்று பெயரிட்டு அருமையாக வளர்த்து வந்தாள். பெண் குழந்தை பிறந்த பின்பும்  சீனிவாசனின் குணம் மாறவில்லை.
ஒருநாள் அந்தக் கிராமத்து வீதியில் ஒரு கிழவர் சீனிவாசனின் வீட்டைத் தேடிக்கொண்டு வந்தார். எதற்கு என்று கேட்டவர்களிடம் "கொஞ்சம் பணஉதவி வேண்டும் அவர் பணக்காரர் அல்லவா. அதுதான் அவரைத் தேடி வந்தேன்." என்றார். அனைவரும் கிழவரைப் பார்த்து "ஐயோ  பாவம்" என்று பரிதாபப் பட்டனர் .கிழவர் சீனிவாசனின் வட்டிக்கடையைத் தேடிச்சென்று அவன் முன் நின்றார். அவரது பஞ்சைக் கோலத்தைக் கண்ட சீனிவாசன் இவரிடம் என்ன இருக்கப் போகிறது என்று நினைத்தவர்" யாரையா நீர்? என்ன விஷயம்?" என்றார்.
கிழவர் தன் வேஷ்டியில் முடிந்து வைத்திருந்த ஒரு எலுமிச்சம் பழத்தைக் கொடுத்து ஆசிகூறினார். "ஓஹோ வியாபாரம் என்று நினைத்தேன் யாசகமா? இங்கு ஒன்றும் கொடுப்பதற்கு இல்லை போய் வாரும்" என்று குனிந்து எழுதத் தொடங்கினார்.கிழவர் விடாக் கண்டராக நின்றார்.                                                                                                             "என் மகனுக்கு உபநயனம செய்விக்கவேண்டும்.ஓராயிரம் வராகன் கொடுத்தால் உங்களுக்குப் புண்ணியமாகப் போகும்" என்று கெஞ்சினார். ஒன்பது கோடிக்கு அதிபதியான சீனிவாசன் நவகோடி நாராயணன் என்று பாராட்டப்பட்டவன் தன்னிடம் பைசாகூட இல்லை என்று கடுமையாகப் பேசி அவரை வெளியில் பிடித்துத் தள்ளிவிட்டான். மக்கள் அவரைப் பார்த்துப் பரிதாபப் பட்டனர். லோபகுணமும் பேராசையும் உள்ள இவனா தருவான்.என்று பேசிக்கொண்டனர். 
கிழவர் விடுவதாயில்லை.தள்ளாடியபடியே அவரது வீட்டினுள் நுழைந்தார். வீட்டினுள் ஒரு முதியவர் வருவதைப் பார்த்த லக்ஷ்மிபாய் அவரை வரவேற்று வணங்கினாள். அவளிடம் தான் அவள் கணவனிடம் பட்ட அவமதிப்பைப் பற்றிச் சொல்லி வருந்தினார். "அம்மா! உன் கணவர் என்னை விரட்டி விட்டார். நீயாவது என்துயரைப் போக்குவாயா?  என் மகனுக்கு உபநயனம் செய்து வைக்கவேண்டும். அதற்கு ஆயிரம் வராகன் வேண்டும்.அதைக் கொடுத்து உதவி செய்வாயா அம்மா?"
அவரது வேண்டுதலைக் கேட்ட லக்ஷ்மிபாய் மனம் உருகினாள். தன்னிடம் பணம் இல்லையே என்று வருந்தினாள். ஆனாலும் அந்த ஏழைப்  பிராமணருக்கு உதவ வேண்டும் என்று எண்ணினாள். தன் தாய் வீட்டுச் சொத்தான தன் மூக்குத்தியைக் கழற்றிக் கொடுத்தாள். "பெரியவரே! என் மூக்குத்தியைத்  தந்துள்ளேன். இது இரண்டாயிரம் வராகன் பெறும். என் கணவருக்குத் தெரிந்தால் ஆபத்து. அதனால் வேற்றூருக்குச் சென்று விடுங்கள்."  என்றபோது பெரியவர் மிகவும் மகிழ்ச்சியுடன் அதைப் பெற்றுக்  கொண்டு அவளை ஆசீர்வதித்தார்.
பின்னர் வேகமாக நடந்து சீனிவாசனின் கடையை அடைந்தார்.
மீண்டும் வந்துவிட்ட முதியவரைக் கோபத்துடன் பார்த்தான் சீனிவாசன். ஆனால் மிகவும் அலட்சியத்துடன்  அவன் முன் அமர்ந்து கொண்டார் முதியவர். தனது கையிலிருந்த மூக்குத்தியைக் காட்டி,"இதன் விலை என்ன சொல். இதற்குரிய விலையைக் கொடு." என்றார் அதிகாரமாக.
மூக்குத்தியைத் திரும்பத் திரும்பப் பார்த்த சீனிவாசனுக்கு சந்தேகமாக இருந்தது. தன் மனைவியின் மூக்குத்திபோல இருக்கிறதே என்று நினைத்தார். கொஞ்ச நேரம் அமர்ந்திருங்கள் எனச் சொல்லிவிட்டு தன் வீட்டினுள் நுழைந்தான் சீனிவாசன். திடீரென்று வந்துள்ள கணவனைப் பார்த்துத் திகைத்தாள் லக்ஷ்மிபாய்.
அவளைப் பார்த்த சீனிவாசன் "லக்ஷ்மி, உன் மூக்குத்தியைக் கொண்டுவா." என்றவுடன் நடு நடுங்கிவிட்டாள் லக்ஷ்மி. என்ன செய்வது என்று அறியாமல் துளசி மாடத்தின்முன் சென்று வேண்டிக்கொண்டாள். "தாயே,கணவருக்குத் தெரியாமல் காரியம் செய்து விட்டேன். இப்போது என்னைக் காப்பது உன் பாரம் அம்மா. இல்லையேல் என் உயிரை எடுத்து விடு." என்று மனமுருக வேண்டிக்கொண்டாள்.அப்போது அவள் முன் இருந்த பஞ்சபாத்திரத்துள் அவளது மூக்குத்தி மின்னியது. அதைக் கையில் எடுத்துக் கொண்டு தேவிக்கு நன்றி சொல்லிவிட்டு கணவரிடம் ஓடோடி வந்து அந்த மூக்குத்தியைக் கொடுத்தாள் லக்ஷ்மிபாய். அதைப் பார்த்த சீனிவாசனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.அது அவளுடைய மூக்குத்தி அன்று. அதைவிட உயர்ந்த வைரம். அத்தகைய வைரத்தை அவன் அதுநாள் வரை வாங்கியதே இல்லை. தன் மனைவியிடம் இந்த மூக்குத்தி ஏது. என்னிடம் உண்மையைச் சொல் என்று கேட்டான். லக்ஷ்மி பயத்துடன் தான் ஒரு பிராம்மணருக்குத தன்  மூக்குத்தியை தானமாகக் கொடுத்த செய்தியைச் சொன்னாள் .பின் இறைவனை வேண்ட அவன் பாத்திரத்துள் மூக்குத்தியைப் போட்ட செய்தியையும் கூறினாள். அதைக் கேட்ட சீனிவாசன் "லக்ஷ்மி அந்த பிராமணர் கடையில் உட்கார்ந்து இருக்கிறார். வா இருவரும் அவரை சேவிக்கலாம் என்று சொல்லி மனைவியையும் அழைத்துக் கொண்டு அந்த மூக்குத்தியை எடுத்துக் கொண்டு கடைக்கு ஓடினார். அங்கே அந்தக் கிழவரையும் காணோம். அவன் பூட்டிவிட்டுச் சென்ற பெட்டியில் இருந்த மூக்குத்தியையும் காணோம். வந்தவன் இறைவனே என்பதைப் புரிந்துகொண்டான் சீனிவாசன். மெய் மறந்து  நெஞ்சுருக "என்னை ஆட்கொள்ள வந்த தெய்வமே!ஒரு முறை காட்சி தரமாட்டாயா? என்று ஏங்கித்  தவித்தது அவனது உள்ளம்.
அன்று வரை தான் செய்த தவறுகளையெல்லாம் எண்ணிப் பார்த்து வெட்கியது  அவன்உள்ளம்.  இனி இறைவனின் சேவை தவிர வேறொன்றும் தன் வாழ்வில் கிடையாது என்று முடிவு செய்துகொண்டான் சீனிவாசன். இறைவனின் பேரருள் அவன் உள்ளத்தை முழுவதுமாக மாற்றி விட்டது.
சீனிவாசனின் மனமாற்றம் ஊர்முழுவதும் பரவியது. இறைவனின் கருணையை எண்ணிப் புகழலாயினர். சீனிவாசனின் பெட்டியில் இருந்த செல்வமனைத்தும் கோவில் குளம்  சத்திரம் நந்தவனம் வேத பாடசாலை எனப் பலவகையாக உருவெடுத்தன. 
செல்வமனைத்தையும் தானம் செய்த சீனிவாசன் தன் கையில் தம்பூரி மீட்டியவாறு தெருவில் இறங்கி நடந்தான். கற்புக்கரசியான லக்ஷ்மிபாயும் அவன் மக்களும் உடன் நடந்தனர். செல்வமனைத்தையும் இறைவன் பணிக்கே செலவிட்டு அதே ஊரில் உஞ்சவிருத்தியை மேற்கொண்டான் சீனிவாசன். இசையில் வல்லவனான சீனிவாசன் பல பாடல்களை இயற்றினான். ஒருமுறை திருப்பதி சென்று இறைவனை வணங்கி அவன் மீது பாடல் புனைந்து வாழ்ந்தான். அப்போது அங்கிருந்த புரந்தரி என்ற தாசியின் இல்லத்தில் விருந்தினராகத் தங்கினர்.
ஒருநாள் நடுஇரவில் புரந்தரி தன்னை நன்கு அலங்கரித்துக் கொண்டு வீணையை ஏந்திக் கொண்டு வெளியே சென்றாள். விடிந்தபின் இல்லம் வந்தாள்.மறுநாளும் அப்படியே சென்றாள். அடுத்தநாள் அவள் செல்லும்போது அவளை வழிமறித்து அவள் செல்லும் இடத்தைப் பற்றிக் கேட்டான் சீனிவாசன் .கோயிலுககுச் சென்று இறைவன் முன் பாடுவதாகவும் இறைவன் தம்முன் ஆடுவதாகவும் கூறவே  தானும் வருவதாகக் கூறினான்.
புரந்தரியும் அவனை உடன் அழைத்துச் சென்றாள். ஒரு தூண் மறைவில் நிற்க வைத்து இறைவனுடன் ஆடியும் பாடியும் மகிழ்ந்த அந்தக் காட்சி அற்புதமாக இருந்தது சீனிவாசனுக்கு.இறைவன் மறைவிலிருந்த சீனிவாசனை அழைத்து ஆசி கூறினார்.அவர் பாதங்களில் வீழ்ந்து எழுந்து பேச நா எழாது நின்றான் சீனிவாசன்.
அவனை புரந்தரியிடமே ஞானோபதேசம் பெறச் சொல்லி புரந்தரதாஸ் என்று பெயரிட்டு பாடல்களை இசைக்குமாறு அருள் செய்து மறைந்து போனான்.
அன்று முதல்  வாய் ஓயாது பாடல் இசைத்தவண்ணம் இருந்தார் புரந்தரதாசர். இறைவன் இவர் வாழ்க்கையில் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளான்.தாசர் தம் வாழ்நாளில் சுமார் நான்கு லக்ஷத்து எழுபத்து ஐந்தாயிரம் பாடல்கள் பாடியுள்ளார். இவை தாசர் பதங்கள் எனவும் தேவர் நாமா எனவும் போற்றப் படுகின்றன. தாசர் முக்தியடைந்த நன்னாளை ஹம்பி க்ஷேத்திரத்தில் இன்றும் கொண்டாடுகின்றனர்.
புரந்தரதாசர் நாரதரின் அவதாரம்.நாரதரைப் பூலோகத்தில் பிறவி எடுக்கச் செய்து அவரைத் தடுத்தாட்கொண்டு தாசருக்கு உபதேசித்தது போல நமக்கெல்லாம் உபதேசிக்கிறான் இறைவன். மனிதன் எத்தனை தவறுகள் செய்தாலும் அவன் மனம் திருந்தி தெய்வ வாழ்க்கையைப் பெறமுடியும் என்ற உண்மையை நாம் உணர்ந்து தவறு செய்திருந்தால் திருத்திக்கொண்டு நல்லமுறையில் வாழவேண்டும்.


ஞாயிறு, 18 ஜூலை, 2010

39th story. petrorin perumai.

                                                                 பெற்றோரின் பெருமை.
ஒரு வனத்திலே ஜன்னு என்ற முனிவர் தன் மனைவி சாத்தகி என்பவளுடன் வசித்து வந்தார். அவர்களுக்கு ஒரு மகன் இருந்தான். புண்டரீகன் என்பது அவன் பெயர். முனிவருக்கே உரிய நற்குணங்கள் ஏதுமின்றி மிகவும் கீழ்த்தரமான பண்புகளோடு  வாழ்ந்து வந்தான். திருமணமானால் திருந்திவிடுவான் என்று எண்ணி ஒரு அழகிய பெண்ணை மணமுடித்து வைத்தனர். அப்போதும் திருந்தாமல் இருந்ததால் பெற்றோர் அறிவுரை கூறித் திருத்த முயற்ச்சித்தனர்.
அதனால் பெற்றோரிடம் வெறுப்புக் கொண்ட புண்டரீகன் தன் மனைவியை அழைத்துக் கொண்டு தனியே சென்று குடியேறினான்.இதனால் மனம் வருந்திய முனிவரும் அவரது மனைவியும் அந்த வழியாகச் சென்ற காசியாத்திரை கோஷ்டியோடு சேர்ந்து காசிக்குப் புறப்பட்டனர்.
இதை அறிந்த புண்டரீகனும் அவன் மனைவியும் தாங்களும் காசிக்குச் செல்லப் புறப்பட்டனர். இருவரும் ஒரு குதிரைமீது ஏறிச் சென்றனர். வழியில் தள்ளாடியபடியே செல்லும் பெற்றோரைத் தாண்டிச் சென்றனர்.' கிழங்கள் எப்படிப் போனால் என்ன' என்று நினைத்தபடியே குதிரையில் வேகமாகப் போனான் புண்டரீகன்.அத்தனை பாவி அவன்.
நெடுநேரம் பயணப் பட்டபின் ஒரு ஆசிரமத்திற்கு அருகே வந்து சேர்ந்தனர். அப்போது அங்கே வந்த குக்குட முனிவர் என்பவரைப் பார்த்து' காசி இன்னும் எவ்வளவு தூரம் உள்ளது?' என்று கேட்டான். அதற்கு முனிவர் "காசியா? அது எங்கே உள்ளது என்று எனக்குத் தெரியாது" என்று பதிலளித்தார். அவரை ஏளனமாகப் பார்த்த புண்டரீகன்' காசியைப் பற்றித் தெரியாமல் இருக்கிறீரே' என்று இகழ்வாகச்  சொல்லிவிட்டுச் சென்றான்.அன்று இரவு அருகே உள்ள சத்திரத்தில் தன் மனைவியுடன் தங்கினான் புண்டரீகன்.. 
அதிகாலை நேரம். தூக்கம் வராமல் உட்கார்ந்திருந்தான் புண்டரீகன். அந்த அதிகாலை வேளையில் மூன்று இளம் பெண்கள் குக்குட முனிவரின் குடிலின் வாசலைப் பெருக்கிச் சுத்தம் செய்தனர். அந்தப் பெண்கள் மிகவும் குரூபிகளாக இருந்ததைப் பார்த்தான் புண்டரீகன். அவர்கள் வேலை முடித்து விட்டு மகிழ்ச்சியுடன் சிரித்தபடியே வந்தனர். அப்போது அவர்களைப் பார்த்து ஆச்சரியப் பட்டான். அந்த அளவுக்கு  அவர்கள் அழகுள்ளவர்களாக மாறியிருந்தனர். ஆச்சரியத்துடன் அவர்களை நெருங்கியவன் அவர்கள் முன் சென்று" நீங்கள் யார்? உங்கள் உருவம் இப்படி மாறக் காரணம் என்ன?" என்று அடக்க இயலாத ஆவலுடன் கேட்டான்.
"நாங்கள் கங்கை,காவேரி, சரஸ்வதி இன்னும் மூன்று நதிகளாவோம். பாவம் செய்த மக்கள் எங்களில் மூழ்கி அவர்கள் பாவங்களை எங்களிடம் விட்டுச் செல்கின்றனர்.அதனால் நாங்கள் குரூபிகளானோம். இங்கிருக்கும் குக்குட முனிவரின் ஆசிரத்தில் சேவை செய்து எங்கள் பாவத்தைத் தொலைத்து நல்லுருவம் பெற்றோம். நீ பெரும் பாவியாக இருந்தாலும் சென்ற பிறவியில் புண்ணியம் செய்திருக்கிறாய். அதனால்தான் இந்த முனிவரின் தரிசனம் உனக்குக் கிடைத்தது." 
"அந்த முனிவர் அப்படி என்ன தவம் செய்தார்?"
"அவர் தன் தாய் தந்தையரைக் கண் போலக் காப்பாற்றி வந்தார்."
"அது அவ்வளவு பெரிய புண்ணியமா என்ன?"
"அந்தப் புண்ணியம் ஒன்றே யாகம் யக்ஞம் தானம் தவம் தீர்த்தாடனம் க்ஷேத்ராடனம் இவைகளால்அடையும்  பயனை விட பெரும் பயனை அளித்துள்ளது. ஆயிரக்கணக்கானோர் இறக்கும் பாவச் சுமையை நாங்கள் இவருக்குப் பணிவிடை செய்வதன் மூலம் போக்கிக் கொள்கிறோம்." என்று சொல்லி மூவரும் மறைந்தனர்.
இதைக் கேட்ட புண்டரீகனின் மனம் மாறியது. பெற்றோரின் பெருமையை உணர்ந்தான். உடனே ஓடிச் சென்று பெற்றோரின் பாதங்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். அவர்களைத் தெய்வம் போல எண்ணிப் பணிவிடை செய்யத் தொடங்கினான்.
அவர்களை அழைத்துக் கொண்டு ஒவ்வொரு ஊராக யாத்திரை செய்தான். எல்லா இடங்களிலும்  பூஜையும் நடைபெற்றது. இப்போது திண்டிரவனத்துக்கும் சந்திரபாகா நதிக்கும் இடையே உள்ள பகுதியில் தங்கித் தன் தாய் தந்தையற்குப் பணிவிடை செய்து கொண்டிருந்தான் புண்டரீகன்.
இவனது பணிவிடைகள் ஸ்ரீமன் நாராயணனையே உருகச் செய்தது. சங்கு சக்ர கதா தாரியாய் புண்டரீகன் முன் தோன்றி நின்றான் அந்தக் கண்ணன்.
இறைவன் வந்திருப்பதை அறிந்தபின்னரும் தன் பெற்றோரின் சேவையை நிறுத்தவில்லை புண்டரீகன். அருகே இருந்த ஒரு செங்கல்லை எடுத்துப் போட்டு அதில் அமர்ந்திருக்கும் படி கேட்டுக் கொண்டான். கடமை தவறாத ஒரு மகனின் சொல்லுக்குக் கட்டுப் பட்டு இறைவன் அந்தச் செங்கல்லின் மேலேயே நின்றிருந்தான். தன் பணிகள் முடிந்ததும் கண்களில் கண்ணீர் மல்க நாரணனின் பாதம் பணிந்தான் புண்டரீகன். அவன் நாத் தழுதழுக்கப் பேசமுடியாமல் கரம் கூப்பி நின்றான்.
"குழந்தாய்!உனக்கு என்ன வரம் வேண்டும்?"
"இறைவா!அக்ஞானிகள் சுலபமாக உன்னைத் தரிசிக்குமாறு நீ இங்கேயே விட்டலனாக இருந்து அருள்பாலிக்க வேண்டும். இங்கிருக்கும் நதி கங்கையினும் சிறந்ததாகக் கருதப்பட வேண்டும். இந்நகரம் என் வரலாற்றை நினைவு கூறும் வண்ணம் என் பெயராலேயே வழங்கப் படவேண்டும்." 
"ததாஸ்து" 
நாளடைவில் புண்டரீபுரம் என்பது பண்டரிபுரம் என ஆயிற்று. பக்தர் கூட்டம்எப்போதும்  விட்டல விட்டல ஜெய் ஜெய் விட்டல எனப் பாடுவதைக் கேட்டுப் பரவசமடையலாம்.
பெற்றோருக்குச் செய்யும் தொண்டே பெரும் தொண்டு. அதில்தான் இறைவனும் மகிழ்கிறான் என்பதை நாம் ஒருநாளும் மறக்கலாகாது என்பதை புண்டரீகன் வாழ்க்கை நமக்கு எடுத்துக் காட்டுகிறதன்றோ?

வெள்ளி, 9 ஜூலை, 2010

38th story.kural koorum kadhai.

               ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் 
                செத்தாருள் வைக்கப் படும்.

வெளியே மழை கொட்டிக் கொண்டிருந்தது. பள்ளிக்கூடம் விட்டவுடன் வீடு வந்து சேர்ந்துவிடும் குமரன் அன்று வெகு நேரமாகியும் வந்து சேரவில்லை.அவன் தாயார் கோமதிக்குக் கவலையாக இருந்தது. இந்த மழையில் எங்கே சென்று மாட்டிக்கொண்டானோ என்று தவித்தவாறு காத்துக் கொண்டிருந்தாள். நல்லவேளையாக காலையில் பள்ளிக்குச் செல்லும்போதே குடை எடுத்துப் போகச் சொன்னது நல்லதாப் போச்சு என்று சற்று ஆறுதல் அடைந்தாள்.
லேசாக இருட்டத் தொடங்கிய நேரம் உடம்பு முழுதும் நனைந்தவனாக உள்ளே நுழைந்தான் குமரன். அவனைப் பார்த்தவுடன் "அப்பாடா வந்துவிட்டாயா" என்று ஆறுதல் அடைந்த கோமதி "மொதல்ல உன் சட்டையை மாத்து.உடம்பை நல்லா தொடைச்சிக்கோ.தலையை நல்லா ஈரம் போகத் போகத் துவட்டு" என்றவள் அவனுக்காக டீ போட உள்ளே போனாள் கோமதி.
உடையை மாற்றிக் கொண்டு  அமர்ந்த குமரன் அம்மா கொடுத்த டீயை ருசித்துக் குடித்தான். கோமதியும் அவனைப் பார்த்தவாறே அவன் அருகே அமர்ந்திருந்தாள் .டீயைக் குடித்து முடித்த குமரன் கோப்பையைக் கீழே வைத்தான்."அம்மா, நான் லேட்டா வந்ததுக்காக என்னை மன்னிச்சுடு அம்மா.என்ன நடந்ததுன்னு சொல்றேன்."
"சொல்லுப்பா.என்ன நடந்தது?"
"பள்ளிக்கூடம் விட்டவுடன் வழக்கம்போல்தான் நான் வீட்டுக்கு வந்துகொண்டு இருந்தேன். வரும் வழியில் ஒரு சின்னப்பொண்ணு இரண்டாம் வகுப்பில் படிக்கிறாளாம் பள்ளிச் சுவர் ஓரமா நின்னு அழுதுகொண்டிருப்பதைப் பார்த்தேன்.ரொம்பப் பாவமா இருந்துதும்மா. அந்தப் பெண்ணைக் கொண்டுபோய் அவங்க வீட்டிலே விட்டுட்டு வந்தேன். போன பிறகுதான் அது என் பிரண்டு சோமுவின் வீடுன்னு தெரிஞ்சுது.அந்தப் பெண் அவன் தங்கச்சிதான்னும்  அப்புறம்தான் தெரிஞ்சுதும்மா."
"அப்படியா"என்று தன் மகனைப் பெருமையுடன் பார்த்தாள் கோமதி.
குமரன் தொடர்ந்து பேசினான்."அங்கே போனா, சோமுவின் வீட்டுச் சுவர் மழைக்கு இடிஞ்சு விழுந்துடிச்சு. சோமுவும் அவங்கம்மாவும் இருந்த சாமானையெல்லாம் எடுத்து பத்திரப் படுத்தி வெச்சாங்க. நானும் அவங்க கூட இருந்து உதவி பண்ணிட்டு வந்தேம்மா. அதுதான் லேட்டாயிடுச்சு."
என்று சொன்ன குமரனை அன்புடன் தலையைக் கோதிவிட்டாள் அம்மா.
"நீ நல்லதுதான் செய்திருக்கே.நேத்து நீ ஒரு குறள் படிச்சியே நினைவிருக்கா?"
"ஆமாம்மா. இன்னைக்கி எங்க தமிழ் வாத்தியார் கூட அந்தக் குறளைத்தான் ஒப்பிக்கச் சொன்னார். அர்த்தமும் சொல்லச் சொன்னார். நான் நல்லாச் சொன்னேன்னு அத்தனை பெரும் கை தட்டினாங்கம்மா."
"அப்படியா. அந்தக்குறளை இப்பச் சொல்லு."
  " ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் 
    செத்தாருள் வைக்கப் படும்."
"பலனை எதிர் பார்க்காமல் உதவி செய்து வாழ்பவனே உயிர் வாழ்பவனாவன். அவ்வாறு செய்யாதவன் உயிரற்றவனாகவே கருதப் படுவான்.அப்படின்னும் பொருள் சொன்னேம்மா."
"அதுதான் நீ உயிருள்ளவன்னு நிரூபிச்சுட்டு வந்திருக்கே. அந்த உன் நல்ல செயலுக்காக நானும் உனக்குக் கை தட்டுகிறேன் குமரா" என்றபடியே கோமதி பலமாகக் கைதட்டினாள்.
அம்மாவின் பாராட்டைக் கேட்டு மனமகிழ்ந்து அவளைக் கட்டிக் கொண்டான் குமரன். இனி எப்போதும் எந்தப் பலனும் எதிபாராமல் மற்றவர்க்கு உதவி செய்ய வேண்டும் என்றும் முடிவு செய்து கொண்டான்.
குமரனின் முடிவை நாமும் பின்பற்றலாமல்லவா!




38th story. kural kadhai.

    ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் 

--
Blog: http://chuttikadhai.blogspot.com

திங்கள், 5 ஜூலை, 2010

37th story. pagaivarkku aruliya panbaalan.

                                                                 பகைவற்கு அருளிய பண்பாளன்.
திருக்கோவிலூரைச் சேர்ந்த பகுதி சேதிநாடு என்று அழைக்கப் பட்டது. அந்நாட்டை மலாடர் குடியிற் பிறந்த மலையமான் காரி என்பவன் ஆண்டுவந்தான். இவன் மலாடர் கோமான் என மக்களால் அழைக்கப்பட்டான்.  மக்களிடம் பாசமும் இறைவனிடம்  பக்தியும் கொண்டு நன்முறையில் அரசாட்சி புரிந்து வந்தான். சிவனிடத்தில் பேரன்பும் சிவனடியார்களிடம் பெருமதிப்பும் கொண்டிருந்தான். சிவனடியார்கள் எவராயினும் அவர் நன்முறையில் உபசரிக்கப்பட்டார். சிவாலயங்கள் அனைத்தும் நன்முறையில் பரிபாலனம் செய்யப்பட்டன.
மன்னன் வீரத்திலும் குறைந்தவனல்லன். இவனை வெல்ல எண்ணிப் போரிட்ட அரசர்களைஎல்லாம் வெற்றி கொண்டு பெரு வீரனாகத் திகழ்ந்தான்.
அண்டை நாட்டு மன்னனான முத்தநாதன் மலையமானிடம் பெரும் பொறாமை கொண்டிருந்தான். எப்படியும் அவனை வீழ்த்தி அவன் நாட்டைக் கைப்பற்ற எண்ணம் கொண்டு செயல் பட்டான் .பெரும் படை கொண்டு தாக்கினான். ஆனால் படு தோல்வி அடைந்து ஓடினான்.மலையமானைவஞ்சனை செய்து வீழ்த்த எண்ணம் கொண்டான்.சிவனடியார்கள் மீது பேரன்பு கொண்ட இவனை வீழ்த்த சிவனடியார் வேடமே சிறந்தது என முடிவு செய்தான்.
அதன்படி ஒரு சிவனடியார்போல் மேனியெங்கும் திருநீறு பூசி உத்திராக்ஷ மாலையணிந்து தலையை முடிந்து கொண்டு அரண்மனைக்குள்  நுழைந்தான். அவன் கையில் ஒரு புத்தகக் கட்டும் அதனுள் ஒரு கத்தியும் மறைத்து வைத்துக் கொண்டு வந்தான்.மலாடர் அரண்மனைக்குள் சிவ்னடியார் எங்கும் எப்போதும் செல்லலாம் என்று ஆணை பிறப்பித்திருந்ததால் முத்தநாதன் தயக்கமின்றி உள்ளே நுழைந்தான். அந்தப்புரம் வரை சென்ற முத்தநாதனை வாயிலில் நின்ற தத்தன் என்ற மெய்க்காப்பாளன் தடுத்தான்.
"அடிகளே, வணக்கம். எமது மன்னர் ஓய்வு எடுத்துக்கொண்டுள்ளார். இது அனைவரும் உறங்கும் நேரமல்லவா?தயவு செய்து தாங்களும் ஓய்வு எடுத்துக் கொண்டு அதிகாலைவரலாமே?"அடக்கத்துடன் கூறிய தத்தனை கோபத்துடன் பார்த்தான் சிவனடியார் வேடதாரி முத்தநாதன்.
"யாருக்கும் கிட்டாத ஆகம நூல் ஒன்றைக் கொண்டு வந்துள்ளேன்.சிவபக்தனான மன்னனுக்கு  உபதேசமசெய்யவந்துள்ளேன்.காலதாமதம் செய்யாமல் மன்னனை எழுப்பு.அல்லது என்னை உள்ளே போகவிடு" என்றபடியே உள்ளே நுழைந்தான் முத்தநாதன்.
அவனைத் தடுக்க இயலாதபடி மன்னனின் கட்டளை தடுத்ததால் தத்தன் செய்வதறியாமல் நின்றான்.
உறக்கம் கலைந்த மன்னன் வேகமாக எழுந்தான். மஞ்சத்தினருகே சிவனடியார் நின்றிருப்பதைக் கண்டு அவரை வணங்கினான். 
"வரவேண்டும் சுவாமி, ஆசனத்தில் அமருங்கள். " என்று உபசரித்தான்.
"சுவாமி இந்த இரவு நேரத்தில் வந்துள்ளீர்களே, ஏதேனும் அவசரகாரியமா சுவாமி. தயங்காமல் கூறுங்கள் எதுவாயினும் செய்யக் காத்திருக்கிறேன்" முத்தநாதன் கபடமாகச் சிரித்தான். 
"மலாடர் கோமானே! எவருக்கும் கிட்டாத ஆகமநூல் ஒன்று எமக்குக் கிட்டியது.அந்தச் சிவத்தின் வாயாலேயே உரைக்கப்பட்டது.அதை உனக்கு உபதேசிக்கவே வந்தேன். இதற்கு நேரம் தேவையா மன்னா?"
"இல்லை சுவாமி. இல்லை. நான் பெரும் பேறு பெற்றேன். தங்கள் வாயாலேயே எனக்கு உபதேசம் செய்யுங்கள் சுவாமி."என்றபடியே முத்தனாதனின் காலடியில் கை கட்டி வாய் புதைத்து அமர்ந்து கொண்டான் மன்னன்.
முத்தநாதன் "இங்கு உன்னையும் என்னையும் தவிர வேறு யாரும் இருத்தல் ஆகாது. உன் மனைவியை அனுப்பிவிடு."என்றான் கபடமாக.
மன்னனின் அருகே நின்ற மகாராணி குறிப்பறிந்து அவ்விடம் விட்டு அகன்றாள். ஆனால் வாயிலில் நின்றிருந்த தத்தன் மட்டும் தன் கவனம் முழுவதையும் முத்தனாதனிடமே வைத்திருந்தான்.
தனிமையில் விடப்பட்ட முத்தநாதன் தன் முன் மன்னனை மண்டியிட்டு அமரச் சொன்னான். இமைக்கும் நேரத்தில் தன் புத்தகக் கட்டினுள் வைத்திருந்த குறுவாளை எடுத்து மன்னனின் உடலில்  பாய்ச்சி விட்டான்.
அதே நேரம் உள்ளே பாய்ந்துவந்த தத்தன் தன் உடைவாளை ஓங்கி முத்தநாதனை வெட்டத் துணிந்தான்.உயிர் நீங்கத் துடித்துக் கொண்டிருந்த மன்னன் அவனைத் தடுத்து "தத்தா அவர் நம்மவர்.அவரைக் கொல்லாதே."என்றார்.
கண்ணீருடன் அவரைத் தாங்கிக் கொண்ட தத்தன் "அரசே! நான் என்ன செய்ய வேண்டும்?"என்று கேட்டான்.
"சிவனடியார் வேடம் தாங்கி வந்தாலும் அவர் நமக்கு அந்தச் சிவமே. எனவே அவரை பத்திரமாக எந்த ஊறும் இன்றி நம் நாட்டு எல்லை வரை சென்று விட்டு வா. நீ வரும் வரை என் உயிர் பிரியாது." என்று கட்டளையிட்டார்.
அவரின் கட்டளையை சிரமேல் தாங்கிய தத்தன் முத்தநாதனை அழைத்துச் சென்றான். வழியில் தமது அரசருக்கு முத்தநாதன் இழைத்த தீங்கை அறிந்த மக்கள் பொங்கி எழுந்தனர்.ஆனால் தத்தன் அவர்களிடம் தமது அரசரின் கட்டளையை எடுத்துக் கூறித  தடுத்தான்.அதனால் முத்தநாதன் எந்த த துன்பமும் இன்றி த தன் நாடு அடைந்தான்.
தத்தன் வேகமாக அரண்மனை சென்று மன்னன் முன் நின்றான்."அரசே! முத்தநாதனை பத்திரமாக விட்டு வந்தேன்." இச்சொற்களைக் கேட்ட மன்னன் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது.
"தத்தா! எனக்குப் பேருதவி செய்துள்ளாய்.உனக்கு என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்"என்றவன் நிம்மதிப் பெருமூச்சு விட்டான். அவன் உயிர் இறைவன் திருவடிநிழலை அடைந்தது.
இத்தகு அன்புள்ளமும் சிவனிடத்திலும் அவன் அடியார்களிடத்திலும் மலாடர் கோமான் கொண்ட பக்தியினால் அவன் அறுபத்து மூன்று நாயன்மார் வரிசையில் வைத்து போற்றப் படுவது நியாயம்தானே.மெய்யடியார்மீது இவன் காட்டிய பரிவின் காரணமாக இம்மன்னன் மெய்ப்பொருள் நாயனார் என்ற திருநாமம் கொண்டு சிறப்பிக்கப் பெற்றார்.
பகைவனுக்கும் அருளும் பேரன்பு கொண்டதால் நாயன்மார்களின் வரிசையில் நின்று நிலைபெற்ற புகழைப் பெற்றார்.பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே பகைவனுக்கருள்வாய் என்று மகாகவியும் பாடினார். 
"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண  
நன்னயம் செய்து விடல்."  என்று வள்ளுவரும் கூறியுள்ளார். நம் உள்ளத்திலும் இத்தகு கருணையை நாம்  வளர்த்துக் கொள்ளவேண்டும்.அதுவே நாம் நல்ல மனிதர்கள் என்பதன் அடையாளமாகும்..


















திங்கள், 28 ஜூன், 2010

36th story.needhi kaaththa mannan.

                                                                      நீதி காத்த மன்னன்.
சோழநாட்டை மனுநீதிச் சோழன் என்ற மன்னன் ஆண்டு வந்தான்.நீதி வழுவாது ஆட்சி செய்து வந்த மன்னனை மக்கள் தங்கள் உயிரினும் மேலாக மதித்து வாழ்ந்தனர். மனுநீதிச் சோழன் வெகு நாட்களாக மக்கட்பேறு இல்லாமல் வாடினான். இறைவனது அருளால் அழகே உருவான ஒரு மகன் பிறந்தான்.மன்னனும் மக்களும் மனம் மிக மகிழ்ந்தனர். வீதி விடங்கன் என்னும் பெயரிட்டு அருமையுடன் வளர்த்து வந்தான் மன்னன். வீதிவிடங்கன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தான்.  அறிவிலும் நற் பண்புகளிலும் சிறந்தவனாகத் திகழ்ந்தான்.குறித்த வயதில் மன்னர் அவனுக்கு யானை ஏற்றம் குதிரைஎற்றம் தேர் ஓட்டுதல் வாட்பயிற்சி ஆகிய கலைகளைக் கற்பித்தார். எல்லாக் கலைகளையும் நன்கு கற்றுத் தேர்ந்தான் வீதிவிடங்கன்.
நீதி தவறாத மன்னன் மனுநீதிச் சோழன். நாட்டு மக்கள் மன்னனான தன்னை எந்தவிதத் தடையும் இன்றி நேரில் காணவேண்டும் என்று சிந்தித்தான்.
அதற்காக சபை கூட்டி ஆலோசனை செய்தான். மக்கள் அனைவரும் மகிழும்படி ஒரு காரியம் செய்தான். தன் அரண்மனை வாயிலில் ஒரு பெரிய மணியைக் கட்டி வைத்தான். மன்னனைக் காண  விரும்பி வருபவர் யாராயினும் அந்த மணியை அடித்து ஒலி எழுப்பினால் மன்னன் நேரிலே வந்து குறைகளைக் கேட்பார். நேரில் கேட்டுக் குறைகளைக் களைவார்.என்று பறையறைவித்தார். மக்கள் தங்கள் மன்னனின் எளிமை கண்டு மகிழ்ந்ததோடு அவனைப் போற்றிப் புகழ்ந்தனர். காட்சிக்கு எளியனாக உள்ள மன்னனை யார்தான் விரும்பமாட்டார்கள்.
ஆண்டுகள் கடந்தன. மனுநீதிச் சோழனால் கட்டப் பட்ட அந்த ஆராய்ச்சி மணியை யாரும் அடிக்கவேயில்லை. மக்கள் எந்தக் குறையும் இன்றி நாட்டில் வாழ்ந்து வந்தனர். காலம் ஒரே மாதிரி செல்லுமா. சோதனை மன்னன் மகன் வீதிவிடங்கன் உருவில் வந்தது. 
ஒருநாள் மாலைவேளை வீதிவிடங்கன் உல்லாசமாக தேரில் ஏறி நகரைச் சுற்றி வந்தான். அதே வேளையில் ஒரு கன்றுக்குட்டியும் தெருவில் துள்ளிக் கொண்டு வந்தது. உல்லாசத்தின் உச்சியில் இருந்த இளவரசன் அதைக் கவனிக்காமல் அக்கன்றின்மேல் தேரை ஏற்றிவிட்டான். கன்றும் அங்கேயே விழுந்து தன் உயிரை விட்டு விட்டது. மகிழ்ச்சியோடு இருந்த கன்றின் மரணத்திற்குக் காரணமாகிவிட்டோமே என்று மதிமயங்கி அங்கேயே அக்கன்றின்  அருகிலேயே அமர்ந்து விட்டான் இளவரசன். மன்னன் மீதிருந்த அன்பாலும் அவன் மகன் இந்நாட்டின்  ஒரே வாரிசு என்ற எண்ணத்தாலும் யாரும் இச்செய்தியை மன்னனுக்குச் சொல்ல விரும்பவில்லை. 
மக்கள் சொல்லாவிட்டாலும் அக்கன்றின் தாயான பசு கண்களில் நீர்சோர அங்குவந்து தன் கன்றைத் தன் நாவால் நக்கிக் கொடுத்தது. பின் வேகமாக அங்கிருந்து அகன்றது. மக்களும் அப்பசுவின் பின் சென்றனர்.அது எங்கு செல்கின்றது என யாருக்கும் தெரியவில்லை. அதை அறிந்துகொள்ளும் பொருட்டே அதன் பின்னே கூட்டமாகச்சென்றனர். அப்பசு மன்னன் கட்டியிருந்த ஆராய்ச்சிமணியின் கயிற்றைப் பிடித்துபெரும்  ஒலி எழுமாறு அடித்தது.
அந்தப்புரத்திலிருந்த மன்னன் திடுக்கிட்டான். மந்திரி பிரதானியர் புடைசூழ ஓடிவந்தான் வாயிலுக்கு. ஒரு மனிதனை எதிர்பார்த்து வந்த அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தன் நாட்டில் யாருக்கும் எந்தக் குறையும் இல்லை என்று இறுமாந்திருந்த மன்னனுக்கு இது பேரிடியாக இருந்தது. என்ன நடந்தது எனக் கேட்டபோது யாரும் எதுவும் பேசாது நின்றனர். மன்னன் அந்தப் பசுவின் பின்னே நடந்து சென்றான். அப்பசு மன்னனைத் தன் கன்று இறந்து கிடந்த இடத்திற்கு அழைத்துச் சென்று தன் நாவால் தான் ஈன்ற கன்றினை நக்கிக் காட்டியது. மன்னன் அக்காட்சியைக்  கண்டு கண்கள் கலங்க நின்றான்.பின் கண்கள் சிவக்க மந்திரியாரைப் பார்த்து "இப்பாவ்த்தைச் செய்தவன் யாவன்? உடனே அவனை என்முன் கொணர்ந்து நிறுத்துங்கள் " எனக் கட்டளையிட்டான். அனைவரும் அமைதியாயிருந்தனர்.
"நீங்கள் கூறாவிட்டால் நீதி தவறிய மன்னனாக நான் ஆவேன். அவ்வாறு நான் உயிர் வாழ விரும்பவில்லை.என் உயிரை நான் மாய்த்துக் கொள்வேன்." என்ற மன்னனைத் தடுத்து நிகழ்ந்த நிகழ்ச்சியைக் கூறித் தானே குற்றவாளியென மன்னன் முன் தலைகுனிந்து நின்றான் வீதிவிடங்கன். ஒருநிமிடம் நிலைகுலைந்துபோன சோழன் சற்றே சிந்தித்தான்.இறந்துபோன கன்றை உயிர்ப்பிக்க இயலாது.ஆனால் உயிருக்கு உயிரைத் தரலாம். அத்துடன் அந்த தாய் படும் வேதனையை இந்தக்குற்றம் செய்தவனின் தாயும் அனுபவித்தலே சரியான தண்டனையாகும்.
என்று முடிவு செய்தான்.  
உடனே ஒரு மன்னனாக நின்று சேவகருக்குக் கட்டளையிட்டான். "உடனே தேரைப் பூட்டுங்கள். அந்தக் கன்று நின்ற இடத்தில் வீதிவிடங்கனை நிறுத்துங்கள்.அவன் மீது தேரை ஏற்றிக் கொல்லுங்கள். தவறு செய்தவன் தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும்." என்று கூறினான்.ஆனால் அவன் கட்டளையை யாரும் ஏற்க முன்வரவில்லை. வருங்கால மன்னனை நாட்டின் இளவலைக் கொலை செய்ய யாரும் விரும்பவில் லை .
.மனுநீதி தவறாத மாமன்னன் மனுநீதிச் சோழன் தானே தேரின் மீது ஏறி அமர்ந்தான்.வீதிவிடங்கனைத் தேர்க்காலில் இட்டு த தேரைச் செலுத்தத் தொடங்கினான்.தேரும் வேகமாக ஓடத் தொடங்கியது. மந்திரி முதலியோர் செய்வதறியாது திகைத்து நின்றனர்.மக்களோ தங்கள் நிலைமறந்து அலறிக் கூக்குரலிட்டனர். எதையும் கவனத்தில் கொள்ளாத சோழமன்னன் தேரை விரைவாகச் செலுத்தினான்.
என்ன அதிசயம்?  தேர் வீதிவிடங்கனின் அருகே வந்து நின்று விட்டது. அங்கே கண்ணீர் சோர நின்றிருந்த பசுவும்  ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த கன்றும் மாயமாய் மறைந்தன. அனைவரும் திகைத்து நின்றனர்.
விண்ணிலிருந்து ஒரு அசரீரியின்  குரல் கேட்டது. "சோழ மன்னா!  தேவேந்திரன் சபையில் உனது நீதியின் சிறப்பைப் பற்றிய சர்ச்சை எழுந்தது. உன் நீதியின் சிறப்பை அறியவே தேவேந்திரனாகிய நானும் எமதர்மனும்  பசுவாகவும் கன்றாகவும் வந்தோம். உன் நேர்மையும் நீதிவழுவாத் தன்மையும் கண்டு மகிழ்ந்தோம். பல்லாண்டு புகழோடு வாழ்வாயாக." என்று வாழ்த்தி மறைந்தது.மன்னன் மனம் மகிழ்ந்து தன் மகனை அணைத்துக் கொண்டு உச்சி மோந்தான்.
நீதி என்று வரும்போது துலாக் கோல்போல் இருந்து நீதிவழங்கிய சோழ மன்னனை நம் வாழ்நாளில் என்றும் மறக்க இயலாதல்லவா!.





ஞாயிறு, 27 ஜூன், 2010

35th story. uyir katha thamizh.

                                                  உயிர் காத்த தமிழ்.

சேர நாட்டை பெருஞ்சேரல் இரும்பொறை என்னும் மன்னன் ஆண்டுவந்தான். இவன் அதியமானின் தகடூரை வென்றதால் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை என்று அழைக்கப்பட்டான். இவன் தன் தாய்நாட்டையும் தாய்மொழியான தமிழையும் தன் உயிரினும் மேலாக மதித்து வாழ்ந்து வந்தான். அதனால் ஊரின் நடுவே ஒரு முரசு கட்டில் அமைத்து அதன்மீது தன் வெற்றி முரசை வைத்து மரியாதை செலுத்திவந்தான். அந்த முரசுக்கு யாரேனும் அவமதிப்பு செய்தால் அவருக்கு மரணதண்டனை விதிக்கப்படும் என அறிவிப்புச் செய்திருந்ததால் அந்தவேற்றி முரசுக்கு மக்கள் அனைவரும் மரியாதை செய்து வந்தனர்.
 அந்தநகருக்கு மோசிகீரனார் என்ற புலவர் வந்து சேர்ந்தார். பல நாட்களாக நடந்து வந்ததால் மிகவும் களைத்துக் காணப்பட்டார். பெருஞ்சேரல் இரும்பொறையின் தமிழ்ப் பற்றைப் பற்றிக் கேள்விப்பட்டு மன்னனிடம் பரிசில் பெற்றுச் செல்லவே அவ்வூருக்கு வந்தார் புலவர் மோசிகீரனார். அவர் வந்த சமயம் முரசு கட்டிலின் மேல் இருந்த முரசத்தை நீராட்டுவதற்காக காவலர் எடுத்துச் சென்றிருந்தனர். கட்டில் மட்டுமே அங்கு வீற்றிருந்தது. அதன் பெருமையை அறியாத புலவர் அக்கட்டிலின் மீது ஏறிப் படுத்துவிட்டார். களைப்பின் மிகுதியால் உறங்கிவிட்டார்
இதைக் கண்ட மக்கள் அஞ்சி நடுங்கினர்.இப்புலவரின்  நிலை என்னவாகுமோ எனத் திகைத்தனர்.
நீராட்டுக்குச் சென்றிருந்த காவலர் முரசத்தை ஏந்தி வந்தனர். முரசு கட்டிலின் மீது ஒரு மனிதன் படுத்து உறங்குவதப் பார்த்துத் திகைத்தனர். இச்சய்தியை மன்னரிடம் சொல்ல ஓடினான் ஒரு காவலன். முரசு கட்டிலின் மீது ஒரு மனிதன் படுத்து உறங்குகிறான் எனக் கேள்விப்பட்ட மன்னன் இரும்பொறை கொண்ட கோபத்திற்கு அளவே இல்லை. கையில் தன் வாளைப் பிடித்தபடி கோபத்துடன் அவ்விடத்திற்கு வந்தான். அம்மனிதனை இரு கூராக்க விழைந்து வாளை ஓங்கினான். சட்டென உறங்கும் மனிதனின் கையில் இருந்த ஓலைச் சுவடிகளைக் கண்டான். இவர் ஒரு புலவர் போலும் எனத் தெளிந்தான். தன் கையிலிருந்த வாளை வீசிவிட்டுத் தன் சேவகரிடம் கவரி கொணருமாறு பணித்தான். சேவகர் கவரி கொண்டுவர அதனால் புலவருக்குக் களைப்பு நீங்குமாறு  விசிறியபடியே அருகே  நின்றான் மன்னன்.
சற்று நேரம்கழித்துக் கண்விழித்த புலவர் மோசிகீரனார் மன்னன் தனக்குக் கவரி வீசி நிற்பதைக் கண்டார். பதறித் துடித்து கட்டிலினின்றும் இறங்கி மன்னன் முன் நின்றார். முரசுடன் சேவகர் நிற்பதைக் கண்டார். தான்செய்த தவறு அவருக்குப் புரிந்தது. முரசு கட்டிலில் படுத்து அதன் பெருமையைக் குலைத்த தன்னைத் தண்டிக்காமல் தனக்குக் கவரி வீசி நின்ற அவனது அன்புள்ளத்தை எண்ணி எண்ணி மகிழ்ந்தார். அவனையும் அவனது தமிழ்ப் பற்றையும் போற்றிப் பாடல் இசைத்தார் புலவர்.
அப்பாடல் புறநானூறு என்னும் நூலில் உள்ளது. அக்கால மன்னர்கள் தாய்நாட்டின் மீதும் தாய்மொழியாம் தமிழ் மொழியின் மீதும் கொண்டிருந்த பற்றின் காரணமாகவே இன்றும் தமிழ்வாழ்கிறது. உலகில்  ஒரு சிறந்த
 இடத்தைப் பெற்றுள்ளது. தவறு செய்தவர் புலவர் எனத் தெரிந்து அவர் கற்ற தமிழின் காரணமாகவே அவருக்குப் பணிவிடை செய்ய முற்ப்பட்ட மன்னனின் பெருமையை தமிழ் உலகம் என்றும் மறவாது.