வியாழன், 20 டிசம்பர், 2018

பாட்டி சொன்ன கதைகள்

7.இரண்டு நண்பர்களும் கரடியும்.
      -       
                        பூஞ்சோலை  என்ற ஊரில்  ராமு சோமு என்ற இரண்டு நண்பர்கள் இருந்தனர்.அவர்கள் இருவரும் வேலை தேடி அலைந்து கொண்டிருந்தனர். அப்போதுதான் ராமு நண்பனிடம் அடுத்துள்ள நந்திவனம் என்ற பெரிய ஊருக்கு வேலைதேடிச் செல்லலாம் என்று யோசனை கூறினான்.சோமுவும் சம்மதித்தான்.  அந்த ஊரின் எல்லையில் ஒரு பெரிய காடு இருந்தது.அந்தக் காட்டைக் கடந்துதான் நந்திவனத்துக்குச் செல்லவேண்டும்.
                          ஒருநாள் அதிகாலையில் இருவரும் புறப்பட்டனர்.இருவரும் கையில் கட்டுச்சோறு கட்டிக் கொண்டு கையில் ஒரு கம்புடனும் புறப்பட்டனர்.பேசிக்கொண்டே வழிநடந்தனர். சூரியன் உச்சியில் சுள்ளென்று அடித்தது.இருவருக்கும் பசியெடுக்க ஆரம்பித்தது. இன்னும் சிலகாததூரம் செல்லவேண்டும். உட்கார்ந்து ஓய்வெடுத்தபின் செல்லலாம் என்று எண்ணினான் சோமு.
"ராமு ரொம்பப் பசிக்கிறது காலெல்லாம் வலிக்கிறது சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்துச் செல்லலாம்."
"அய்யோ  சோமு நாம்  காட்டின் நடுவில் இருக்கிறோம்.இங்கே கரடி நரி ஏன் புலிகூட வரலாம்.சீக்கிரம் ஊரின் அருகே சென்று விடலாம் அங்கே காட்டு விலங்குகள் வராது.வா சீக்கிரம் போகலாம்."
"பயப்படாதே ராமு நான் சிலம்பம் கற்றிருக்கிறேன்.எந்த விலங்கையும் சமாளிக்கும் திறமை இருக்கிறது. எந்த சமயத்திலும் உன்னை நான் காப்பாற்றுவேன்.இப்போது   சாப்பிடலாம் வா."
                 நண்பன் சோமு சொன்ன வார்த்தைகளால் சற்று தைரியம் அடைந்த ராமு எங்காவது குளம் குட்டை ஏதாவது இருக்கிறதா என்று சுற்றிலும் பார்த்தான்.
           "ராமு வரும் வழியில் குளிர்ந்த காற்று அடித்ததே அங்குதான் அருகில் ஏதாவது குளம் இருக்கும்." என்றபடியே நடந்தான் சோமு.அவன் சொன்ன படியே அருகில் ஒரு குளம் இருந்தது.
             இருவரும் சோற்று மூட்டையைப் பிரித்து உண்ணத் தொடங்கினர்.அதற்குள் வானத்தில் கருமேகங்கள் திரண்டு, காற்றும்  வீசியது.காடும் இருண்டு  காட்சியளித்தது.
இருவரும் வேகமாக சாப்பிட்டு முடித்தனர்.ராமு பயத்தில் நடுங்கிக்கொண்டிருந்தான்.
"வா,வா, சீக்கிரம் போய்விடலாம் "என்று அவசரப்பட்டான்.
"நீ ஏன் இப்படிப் பயப்படுகிறாய்?நான் இருக்கிறேன் என்று சொல்கிறேனே."என்ற சோமு அவன் தோளில்  கை போட்டு சிரித்தபடி நடந்தான். சற்று நேரத்தில் ராமு பயம் தெளிந்து சிரித்தான்.பேச்சு சுவாரஸ்யத்தில் இருவருக்கும் இருள் லேசாகக் கவிழ்ந்தது கூடத்தெரியவில்லை.
திடீரென்று ராமு நின்றான்.
"ஏன் ராமு ஏன்  பயப்படுகிறாய்?"
"ஏதோ சத்தம் கேட்கிறது.உனக்கு கேட்க வில்லையா?"
சோமு சற்று கூர்ந்து கவனித்தான் அப்போது அருகே புதரில் சளசளவென்ற சத்தம் கேட்கவே அந்த இடத்தை விட்டு வேகமாக ஓடத தொடங்கினான். அந்தப் புதருக்குள்ளிருந்து ஒரு கரடி மெதுவாக இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தது தான் 
காரணம்.இதைப் பார்த்த ராமு 
"சோமு, சோமு" என்று கத்திக் கொண்டே பின்னால் ஓடினான்.ஆனால் சோமுவோ அருகே இருந்த ஒரு மரத்தில் ஏறி மறைந்து கொண்டான்.
                   கரடியோ ராமுவை நெருங்கிக்  கொண்டிருந்தது.என்ன செய்வது என்று அறியாது திகைத்தவனுக்கு தான் படித்தது நினைவுக்கு வந்தது. இறந்தவர்களைக்  கரடி தின்னாது . அடித்துக் கொன்றுதான் தின்னும்  என்ற செய்திதான் அது.
             உடனே சட்டென்று கீழே படுத்து மூச்சை அடக்கிக் கொண்டான்.இறந்தவன் போலக்  கிடந்தான். கரடி படுத்துக் கிடந்த ராமுவை முகர்ந்து முகர்ந்து பார்த்தது பின்னர்  அவனை விட்டு விலகிச் சென்று விட்டது கரடி போய்விட்டதை அறிந்து சோமு மெதுவாக மரத்தைவிட்டுக்  கீழே இறங்கினான்.ராமுவின் அருகே வந்து அவனிடம் 
"நண்பா, கரடி உன் காதில் என்னவோ சொல்லிற்றே, என்ன அது?"என்றான் தயங்கியபடியே.
அவனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்த ராமு,,"அதுவா, ஆபத்தில் உதவாத நண்பனுடன் சேராதே.அவனால் உனக்கு ஒரு பயனும் இல்லை என்று சொல்லிவிட்டுப் போனது."என்றான்.
          இதைக்கேட்டு வெட்கத்தில் தலை குனிந்து நடந்தான் சோமு.
ராமுவும் பின்தொடர்ந்து நடந்தான்.
எந்த நேரத்திலும் நம் நண்பர்களுக்கு நாம் உதவியாக இருக்க வேண்டும்.
-------------------------------------------------------------------------------------------------------------------------












                 
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

செவ்வாய், 18 டிசம்பர், 2018

பாட்டி சொன்ன கதைகள்

                                   6.ஆமையும் முயலும் 
                           ஒரு காட்டில் கரடி நரி யானை முயல் முதலிய பல மிருகங்கள் வாழ்ந்து வந்தன. அந்தக் காட்டின் நடுவே  பெரிய குளம் ஒன்று இருந்தது.எல்லா மிருங்களும் அந்தக் குளத்தில்தான் தண்ணீர் குடித்துவிட்டுப் போய்க் கொண்டிருந்தன.அந்தக் குளத்தில் இருந்த  மீன்களுடன் ஒரு ஆமையும் நீந்தி விளையாடிக் கொண்டிருந்தது 
                           ஒருநாள் அந்த ஆமை கரையில் நடந்து கொண்டிருந்தது.அதை அங்கு நீர் குடிக்க வந்த ஒரு முயல் பார்த்தது ஆமை மெதுவாக நகர்ந்து நகர்ந்து செல்வதைப் பார்த்து 
அந்த முயலுக்குச் சிரிப்பு வந்தது.ஆமையைப் பார்த்து கேலியாகக் கேட்டது முயல்.
"ஆமையாரே, இவ்வளவு வேகமாகச் சென்றால் நீர் நினைத்த இடம் போய்ச் சேர  எத்தனை நாட்கள் பிடிக்கும்? ஏன்  நடக்கிறீர் பேசாமல் நீந்திக் கொண்டிருக்க வேண்டியதுதானே?"
"முயலாரே நீர் வேகமாக ஓடுகிறீர் என்று கர்வம் கொள்ளாதீர்.நினைத்ததை முடிக்க மனம்தான் வேண்டும். "
"என்ன ஆமையாரே என் ஓட்டமும் உம நடையும் ஒன்றாகுமா? மனம் இருந்தால் மட்டும் போதுமா?"
" சரி நமக்குள் என் போட்டி ?"
ஆமையாரே,தப்பிக்கப் பார்க்காதீர். வேண்டுமானால் ஓட்டப் பந்தயம் வைப்போம்.மனம் இருக்கும் உங்களால் வெற்றி பெற முடியுமா பார்க்கலாம்."
ஆமைக்குப் புரிந்தது.முயல் வம்புக்கிழுக்கிறது என்று.
"சரி பார்க்கலாம் என்று பதில் சொல்ல,முயல்
" எங்கே எப்போது?யார் நடுவர்?அதையும்நீங்களே சொல்லுங்கள்."என்றது முயல் கர்வமாக.
அப்போது அங்கே ஒரு நரி நீர் குடிக்க வந்தது.இவர்களின் உரையாடலைக் கேட்டு அருகே வந்தது.
"ஆமையாரே, கவலைப் படாதீர்கள் நானே நடுவராக இருக்கிறேன்.நாளை காலை நண்பர்கள் அத்தனை போரையும் கூட்டி வருகிறேன்.இருவருக்கும் சம்மதமா?"என்றபோது ஆமையும் முயலும் சரி என்றன
மறுநாள் காலை வனத்திலிருக்கும் விலங்குகள்  எல்லாம் அங்குள்ள பெரிய ஆலமரத்தின் அடியில் கூடிவிட்டன.ஆமையும் வந்து நின்றிருந்தது.சற்று நேரம் கழித்து மெதுவாக கர்வத்துடன் முயல் வந்து சேர்ந்தது.
என் வேகத்துக்கு  ஆமையின் வேகம் ஈடாகுமா?நாந்தான் ஜெயிக்கப்போகிறேன்.பாவம் இந்த ஆமை.என்று எண்ணியபடியே வந்து நின்றது.நரியார் நடுவே வந்து பேசியது.
"இப்போது நான் கையை அசைத்தவுடன் இருவரும் ஓடவேண்டும்.
இந்தக் குளத்தைச் சுற்றிவிட்டு வந்து சேர வேண்டும்.குளத்தைச்சுற்றியிருக்கும் ஆலமரம் அரசமரம் புளியமரம் புங்கமரம் நான்கு மரங்களையும் சுற்றிவரவேண்டும் இந்த நான்கு மரங்களிலும் நான் சொல்லும் அடையாளத்தைப் போடவேண்டும்.ஆமை  இந்தக் கரியால் கோடு  போடணும் முயல் இந்த சுண்ணாம்புக் கட்டியால் கோடு போடவேண்டும்.இருவரும் வந்து சேர்ந்தபின் நான் சென்று பார்த்து வருவேன்.பிறகு தீர்ப்புச் சொல்லுவேன்" என்று சொல்லி ஒரு கரித்துண்டையும் சுண்ணாம்புக் கட்டியையும் ஆமையிடமும் முயலிடமும் கொடுத்தது.அதை அலட்சியமாக வாங்கி கொண்டது முயல்.
நரி கையைஅசைத்தவுடன் இரண்டும் ஓடத்  தொடங்கின முயல்  முதலிலிருந்த ஆலமரத்தில் ஒரு கோடு போட்டு விட்டு மெதுவாக நடந்தது. அடுத்துவந்த அரசமரத்திலும் கோடு போட்டு விட்டு ஆமைக்காகத் திரும்பிப் பார்த்தது.ஆமை வரும் சுவடையே காணோம்.அடுத்துவந்த புளியமரத்தில் கோடு போட்டு விட்டு மெதுவாக நடந்து கடைசி மரமான புங்க மரத்திற்கு வந்தது. அங்கு நின்று மீண்டும் திரும்பிப் பார்த்தது. ஆமை  வருவதாகத் தெரியவில்லை.
                   முயல் புங்கமரத்து நிழலில் நின்றது அருகே நிறைய புல்லும்  இலந்தைப் பழங்களும்  கண்ணில் படவேமுயலுக்குப் பசிக்கத் தொடங்கியது. அந்தப் பழங்களை சுவைத்து உண்ணத்  தொடங்கியது. பசி அடங்கியவுடன் மரத்து நிழலில் சுகமாக உறங்கியது.சற்று நேரத்தில் அங்கு வந்த ஆமை முயல் உறங்குவதைப் பார்த்தது. தன வழியே வேகமாக நடக்கத தொடங்கியது. 
                    எல்லைக் கோட்டை நெருங்கிய ஆமையைப் பார்த்து எல்லா மிருகங்களும் ஓ.. ஓ எனக் கூச்சலிட்டுக் குதித்தன.இந்த சத்தத்தைக் கேட்ட முயல் தூக்கத்திலிருந்து விழித்தது.ஆமை தன்னைத் தாண்டிவிட்டதை அறிந்து வேகமாக ஓடிவந்தது ஆமை கோட்டைப் பிடிக்கும்  அதே நேரம் முயலும் ஆமையுடன் வந்து சேர்ந்தது.
                   இரண்டும் ஒரே நேரத்தில் வந்து சேர்ந்தன.மிருகங்கள் நரியார் என்ன தீர்ப்பு சொல்லப் போகிறார் என்று ஆவலுடன் காத்திருந்தன.நரியார்,"இரண்டு பேரும் ஒன்றாகவே வந்துள்ளீர்கள் ஆனால் தீர்ப்பு சொல்லுமுன் நன்கு  சோதித்து விட்டுச் சொல்கிறேன் சற்றுநேரம் காத்திருங்கள் " என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டது.குளத்தைச் சுற்றிவிட்டுச்  சற்றுநேரத்தில் வந்து சேர்ந்தது.
நரியார் கனைத்தபடி சொல்லத்தொடங்கினார்.'நண்பர்களே,முயல் ஆமை இருவரும் ஒன்றாகவே வந்துள்ளார்கள்.அதனால் இருவரும் வென்றார்கள் என்று சொல்வேன் என்றுதான் நினைப்பீர்கள்.ஆனால் நான்கு  மரங்களையும் சோதித்தபோது ஆமை நான்கு மரங்களிலும்  கோடு போட்டுள்ளது ஆனால் முயல் மூன்று மரங்களில்தான் கோடு போட்டுள்ளது. கடைசி மரமான புங்க மரத்தில் கோடு போடவில்லை அதனால் 
விதிப்படி ஆமைதான் வென்றது."
இந்த தீர்ப்பைக் கேட்டபிறகுதான் முயலுக்குத் தான் மரத்தடியில்  உறங்கியதும் அவசரமாக ஓடி வந்ததும் தவறு எனப் புரிந்தது.
ஆமை முயலைப்   பார்த்தது.முயல் தலை கவிழ்ந்து நின்றிருந்தது.ஆமை நட்புடன், "நண்பா, கவலைப் படாதே இது நமக்கொரு பாடம்.நாம் எந்த இலக்கை அடைய நினைக்கிறோமோ அதில்தான் கவனமாக இருக்கணும்.இடையில் வேறு விஷயத்தில் கவனம் கூடாது.நீ இடையில் தூங்கி விட்டாய்.அதனால் நான் ஜெயித்தேன்.நாம் இருவரும் என்றும் நண்பர்களே." என்று நட்புக்கரம் நீட்டவே முயலும் புன்னகை புரிந்தது.இதைப் பார்த்து எல்லா மிருகங்களும் மகிழ்ச்சி ஆரவாரமிட்டபடி கலைந்து சென்றன.
நாம் செய்யும் காரியத்தில் எப்போதும் கவனம் வேண்டும் என்பதைப்  புரிந்து கொள்ள வேண்டும் 
------------------------------------------------------------------------------------------------------------------------------------

























 

--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

செவ்வாய், 27 நவம்பர், 2018

காக்கைகளும் பூனையும்

               ஒரு ஊரில் ஒரு பாட்டி இருந்தாள். அவள் தினமும் ஊரின் ஓரமாக ஒரு மரத்தடியில் அடுப்பு வைத்து தினமும் வடை சுட்டு விற்று வந்தாள் .அவள் வியாபாரம் செய்யும் இடத்திலிருந்த மரத்தின் மேல் அக்காவும் தங்கையுமாக இரண்டு காகங்கள் தினமும் வந்து உட்காரும். பாட்டியின் கையில் நீண்ட கொம்பு இருந்தது. அதைவைத்து காகங்களை அடித்து விரட்டிக் கொண்டிருந்தாள்
                ஒருநாள் இரண்டு காகங்களும் பேசிக்கொண்டன.
"அக்கா, நீ அந்தக் கொம்பைப் பிடித்துக் கொள். நான் இரண்டு வடைகளைத் தூக்கிக் கொண்டு பறந்து விடுகிறேன்.பிறகு நீயும் பறந்து வந்து விடு. இருவரும் வடையைத் தின்போம்"
தங்கை சொன்னதைக் கேட்டு அக்கா  காக்கை சரி சரியென்று தலையை அசைத்தது.
              சொன்னபடியே சற்று நேரத்தில் அக்கா காக்கை கொம்பைப் பிடித்துக் கொள்ள தங்கை காக்கை இரண்டு வடைகளை மூக்கில் கொத்திக் கொண்டு பறந்தது.
பாட்டி வாயில் வந்தபடி திட்டிக் கொண்டே கொம்பை விடுவிக்கப் படாத பாடு பட்டாள் 
சட்டென கொம்பை விட்டு விட்டு அக்கா காக்கை பறந்தது.இரண்டும் சற்றுத் தொலைவிலுள்ள மரத்தின் மீது அமர்ந்து மூக்கில் வடையைப் பிடித்துக் கொண்டு மகிழ்ச்சியோடு 
தலையை அசைத்துக் கொண்டிருந்தன.
அப்போது அந்த வழியே ஒரு பூனை வந்தது.இரண்டு காக்கைகளும் மகிழ்ச்சியோடு இருப்பதைப் பார்த்தது.அவற்றின் வாயில் இருக்கும் வடைதான் காரணம் என்று புரிந்து கொண்டது.
மெதுவாக மரத்தின் அடியில் வந்து நின்று காக்கைகளைப்  பார்த்துப் புன்னகை புரிந்தது.
"அக்காவும் தங்கையும் மிக  அழகாக இருக்கிறீர்களே ஒரு பாட்டுப் பாடுங்களேன் கேட்கிறேன்"என்றது பூனை.
அக்காள் காக்கை தங்கையைப் பார்த்தது.தங்கைக் காக்கை புரிந்து கொண்டது பூனையின் சூழ்ச்சியை.உடனே இரண்டும் தங்கள் கால்களில் வடையை வைத்துக் கொண்டு கா,கா...என்று கரைந்தன.பிறகு மீண்டும் வடையைத் தங்களின் வாயில் வைத்துக் கொண்டன.ஏமாந்துபோன பூனை சற்றும் சளைக்கவில்லை.
"ஆஹா,   மிக அழகாகப் பாடினீர்கள்.கொஞ்சம் நடனமாடிக் காட்டமுடியுமா?"
இரண்டு காகங்களும் தங்கள் வாயில் வடையை வைத்துக் கொண்டு கால்களை மாற்றிப் போட்டு நடனம் ஆடின.
அதையும் ஆஹா என்று ரசித்த பூனை "இப்போது பாடிக் கொண்டே நடனம் ஆடினால் நான் ரொம்ப மகிழ்ச்சியடைவேன்"என்றது.
அப்போது காகங்களின் காகா என்ற சத்தத்தைக் கேட்ட பாட்டி மறுபடியும் வடையைத் திருட வந்துவிட்டன காகங்கள் என்று கோபமாகத் தன கையிலிருந்த கொம்பைத் தூக்கிப் போட்டாள் அது சரியாக அங்கு அமர்ந்து காகங்களை ஏமாற்றிக் கொண்டிருந்த பூனையின் கால்களில் படவே பூனை வலி தாங்காமல் கத்திக் கொண்டே ஓடியது. காகங்களும் தங்கள் வாயில் வடையுடன் வெகு தொலைவு பறந்து சென்று வேறொரு மரத்தின் மேல் அமர்ந்து மகிழ்ச்சியோடு வடையைத் தின்றன.
------------------------------------------------------------------------------------------------------------------------






















--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

சனி, 24 நவம்பர், 2018

4. புத்திமானே பலவான்

ஒரு காட்டில் நிறைய விலங்குகள் வசித்து வந்தன.புலி, கரடி,நரி, குரங்கு, மான், முயல், யானை என பல மிருகங்கள் மகிழ்வோடு வாழ்ந்து வந்தன.
இவற்றுக்கெல்லாம் ராஜாவாக ஒரு சிங்கம் அந்தக் காட்டில் வாழ்ந்து வந்தது.
அந்தச் சிங்கம் தன குகைக்குள் எப்போதும் படுத்து உறங்கிக்  கொண்டிருக்கும். பசியெடுக்கும் போது மட்டும் குகையை விட்டு வெளியே வரும்.அப்போது கண்ணில் காணும் விலங்கையெல்லாம் கொன்று தின்று வந்தது,பல்மிருகங்கள் இதேபோல் சிங்கத்தால் இறந்தன.
         ஒருநாள் எல்லா விலங்குகளும் ஒன்றாகக் கூடி யோசித்தன.தினமும் பல விலங்குகள் இறப்பதால் அவையெல்லாம் கவலையோடு ஒன்று கூடின.என்ன செய்வது என்று பேசியபோது யானை ஒரு ஆலோசனை சொன்னது.
"நம்மைச் சிங்கம் கொல்வதைவிட நாமே நாளுக்கு ஒன்றாய் சிங்கத்துக்கு இரையாகப் போகலாமே"
இந்த ஆலோசனையை எல்லாமிருகங்களும்  ஏற்றுக் கொண்டன..
          உடனே எல்லா விலங்குகளும் ஒன்றாய்க் கூடி கூட்டமாகச் சிங்கத்தின் குகைக்குச் சென்றன.சிங்கம் குகை வாயிலில் நின்றிருந்தது.எல்லா விலங்குகளும் வணங்கி நின்றன.யானை முன்னே வந்தது 
"சிங்கராஜாவே, நீங்கள் கஷ்டப்பட்டு வேட்டையாடி உணவு உண்ண வேண்டாம்.  எங்களில் தினமும் ஒருவராக  உங்களுக்கு உணவாகிறோம்."
இதைக்கேட்டு சிங்கராஜாவும் மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டது.
அதேபோல் முதல்நாள் குதிரை சென்றது.சிங்கம் அதைக் கொன்று தின்றது. மறுநாள் கழுதை சென்றது.அதையும் சிங்கம் கொன்று தின்றது.அடுத்தநாள் குரங்கு சென்றது.அதுவும் சிங்கத்திற்கு 
உணவாயிற்று.
           அன்று ஒரு முயலின் முறை வந்தது.முயல் அச்சத்துடன் மெதுவாக நடந்து.சென்றது.முயல் வெகுநேரம் அங்குமிங்கும் அலைந்துவிட்டு மெதுவாகச் சென்றது.சிங்கம் பசியோடு காத்திருந்தது. முயலைக் கண்டதும் கோபத்தோடு  கர்ஜித்தது.
"என் இவ்வளவு தாமதமாக வந்தாய்? நான் பசியோடு காத்திருப்பேன் என்று தெரியாதா?" முயல் மிகவும் பணிவோடு நடுங்கியபடியே கூறிற்று.
"சிங்கராஜா,என்மேல் எந்தத் தவறும் இல்லை.வரும் வழியில் வேறொரு சிங்கத்தைக் கண்டேன்.அதனால் ஒரு புதரில் மறைந்திருந்து விட்டு வருகிறேன்."
சிங்கம் மிகவும் கோபத்தோடு கர்ஜித்தது."என்ன..?இந்தக் காட்டில் 
வேறொரு சிங்கமா?எங்கே இருக்கிறது காட்டு."
முயல் பயந்தபடியே,"வாருங்கள் சிங்கராஜா, காட்டுகிறேன்"
என்று சொல்லி  நடந்து சென்றது.சிங்கமும அதைத் தொடர்ந்து 
சென்றது.சற்றுத் தொலைவில் ஒரு பெரிய கிணறு இருந்தது.இரண்டும் அந்தக் கிணற்றின் அருகே சென்றன.
முயல்"சிங்கராஜா, இந்தக் கிணற்றுக்குள்தான் அந்தச் சிங்கம் இருக்கிறது."என்றது.உடனே கோபத்துடன் சிங்கம் அந்தக் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தது.கிணற்றின் உள்ளே கொஞ்சமாக நீர் இருந்தது.அந்த நீரில் சிங்கத்தின் உருவம் தெரிந்தது.உடனே கோபத்துடன் கர்ஜித்தது நிழலும் அதேபோல் கர்ஜிக்கவே அதைவேறொரு சிங்கம் என நினைத்தது.தன்னைப் பார்த்து கர்ஜனை செய்த அந்தச் சிங்கத்தைப் பார்த்துக் கோபத்தோடு பாய்ந்தது.கிணற்றுக்குள் நிறைய சேறு இருந்ததால் சேற்றில் அமிழ்ந்து இறந்தது.
      எல்லா விலங்குகளும் இதைப் பார்த்து மிக்க மகிழ்ச்சி கொண்டன.அறிவாளியாக முயல் இருந்ததால் மிக்க பலமுள்ள சிங்கத்தைக் கொன்று விட்டது.எனவே புத்திமான் பலவான் என்று முயலைப் புகழ்ந்தன.அந்தக் காட்டில் எல்லா மிருகங்களும் மகிழ்ச்சியோடு .வாழ்ந்து வந்தன.
-------------------------------------------------------------------------------------------------------------

















ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

வியாழன், 8 நவம்பர், 2018

பாட்டி சொன்ன கதை.

அருமைக் குழந்தைகளுக்கு பாட்டியின் தீபாவளி நாள் வாழ்த்துகள்.
இதுவரை பெரிய குழந்தைகளுக்குக்  கதை சொல்லி வந்த பாட்டி இனி சின்னப்  பாப்பாவான  உங்களுக்கு தாத்தா பாட்டி சொன்ன கதைகளை  நான் சொல்லப் போகிறேன்.பழைய கதை என்றாலும் புதிதாய்க் கேட்கும் உங்களுக்குப்  பிடிக்கும் என நம்புகிறேன்.

                               துஷ்டரைக் கண்டால் தூரவிலகு 

     ஒரு காட்டில் நிறைய விலங்குகள் வாழ்ந்து வந்தன.ஒரு சமயம் சில வேட்டைக்காரர்கள் அந்தக் காட்டுக்கு வந்தனர்.அவர்கள் ஒரு புலியைப் பிடித்து கூண்டுக்குள் அடைத்து விட்டனர்.இன்னும் சில விலங்குகளைப்  பிடிக்கக் காட்டுக்குள் சென்று விட்டனர்.புலி உறுமியபடியே கூண்டுக்குள் இங்கும் அங்குமாக அலைந்து கொண்டிருந்தது.அப்போது அந்த வழியாக ஒரு அந்தணர் வந்தார். அவர் தன ஊரிலிருந்து பக்கத்து ஊருக்குப் பூஜை செய்யப் போய்க்கொண்டிருந்தார்.
         அவர் புலியைப் பார்த்ததும் பயந்து ஒதுங்கி நின்றார்.அவரைப் புலி பார்த்தது.தன அருகே வருமாறு அழைத்தது.அந்தணர்"நீ என்னைத்   தின்று விடுவாய்.நான் வரமாட்டேன்."என்றார் பயத்துடனேயே.
ஆனால் புலியோ சாதுவாகத் தன முகத்தை வைத்துக் கொண்டு "
"என்னைப்  பார். எனக்கோ வயதாகிவிட்டது பல்  இல்லை நான் எப்படி உன்னைக் கடிப்பேன்?நான்  இப்போது சைவம்.அதனால் யாரையும் கொல்லமாட்டேன்  . தயவு செய்து என்னைத் திறந்து விடு. உனக்குப் புண்ணியமாய்ப் போகும்."என்று கெஞ்சியது.
அதைக்கேட்ட அந்தணர் மெதுவாக அருகே வந்தார்.புலி அவரைக் கெஞ்சியது " சத்தியமாக உன்னைக் கொல்ல மாட்டேன் கூண்டைத் திறந்து விடு."என்று சத்தியம் செய்தது.
அந்தணரோ புலியைப் பார்த்துப் பரிதாபப் பட்டார்.அதை நம்பினார் அதனால் கூண்டைத் திறந்து புலி யை வெளியே விட்டார்
உடனே புலி பாய்ந்து வெளியே  வந்தது. அந்த அந்தணர் மேல் தன முன்னங்கால்கள் இரண்டையும் வைத்துக் கடிக்க முயன்றது.அப்போது அந்தணர் பயந்து அலறினார்.
"ஏ, புலியே ,கொல்ல மாட்டேன் என்றாயே.சத்தியம் செய்தாயே இப்போது கொல்ல  வருகிறாயே"என்று நடுங்கியபடியே கூறினார்.
அதற்குப் புலி "நாந்தான் மனிதனைத் தின்பவனாயிற்றே.உன்னை விடுவேனா. எனக்கும் நல்ல பசி."என்றபடியே அவரைப் பிடித்துக் கடிக்கப் போயிற்று.
அப்போது அந்தணர் "இரு, யாரிடமாவது நியாயம் கேட்போம்.அவர்கள் சொல்வதைக் கேட்போம் என்றார். அப்போது ஒரு நரி அங்கு வந்தது.உடனே அந்தணர் "ஏ, புலியே இந்த நரியிடம் நியாயம் கேட்போம் "என்றார்.
புலியும் நரிதனக்கு ஏற்றாற்போலத்தான் நியாயம் சொல்லும் என்று நினைத்தது. அதனால் சரியென்றது. அந்தணர் ",ஏ, நரியாரே  எங்களுக்கு நியாயம் சொல்லு."என்றார்.
நரியும் சம்மதித்தது.நரியாரிடம் அந்தணர் விஷயத்தைச் சொல்லி 
"புலி கூண்டில் இருந்தது."என்றார்.புரிந்துகொண்ட ந ரி ஒன்றும் புரியாதது போல் பாசாங்கு செய்து,"என்ன என்ன அந்தணரே  நீர் சும்மா இரும். புலியாரே  நீங்கள் சொல்லுங்கள் நீங்கள் எங்கு இருந்தீர்கள்?"என்று கேட்டது.
புலி பெருமையுடன் சொல்லத்  தொடங்கியது.
"நான் கூண்டுக்குள் இருந்தேனா," என்று சொன்னதை இடைமறித்த நரி,"என்ன என்ன எங்கு இருந்தீர்கள்?ஒன்றும் புரியவில்லையே" என்று பாசாங்கு செய்தது.உடனே புலி கூண்டுக்குள் சென்று நின்றுகொண்டு "இப்படித்தான் நின்று கொண்டிருந்தேன்"என்று 
கூறியது.
உடனே நரி அந்தணரைப்  பார்த்து "சீக்கிரம் போய்க்கதவைச் 
சாத்துமய்யா"என்று சொல்லவே அந்தணரும் ஒரே ஓட்டமாய் ஓடிக் கூண்டின் கதவைச் சாத்தினார்.
புலி திகைத்து நின்றது. நரி "ஓய் அந்தணரே , துஷ்டரைக் கண்டால் தூர விலகாமல் அதற்கு உதவுகிறீரே. வழியைப் பார்த்துக் கொண்டு போமய்யா",என்றது. 
அப்போது வேட்டைக்காரர்கள் வரும் சத்தம் கேட்கவே நரி ஓட்டமாக ஓடிவிட்டது அந்தணரும் துஷ்டரைக் கண்டால் தூர விலகுன்னு பெரியவங்க சொன்னதைப் புரிஞ்சிக்கிட்டேன் என்று சொல்லியவாறு தன வழியே நடந்தார்.
-----------------------------------------------------------------------------------------------------------------------




ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

செவ்வாய், 30 அக்டோபர், 2018

மானும் காகமும்

              ஒரு காட்டில் ஒரு மானும் காகமும் நண்பர்களாய் வசித்து வந்தன.அந்த மானைத் தின்ன ஒரு நரி விரும்பியது.
அதனால் நரி மானிடம் தந்திரமாக,"நான் உன் நண்பனாக இருக்க விரும்புகிறேன்.உனக்கு உதவி செய்துகொண்டு உன்னுடன் இருக்கிறேன் "என்றது.மானும் நரியின் வார்த்தையை நம்பி அதை நண்பனாக ஏற்றுக் கொண்டது.
              தினமும் ஒரு மரத்தடியில் நண்பர்கள் கூடுவது வழக்கம்.அப்போது காகம் சேரக்கூடாத நரியுடன் நட்பு வேண்டாம் என்றது. அதை மான் ஏற்கவில்லை.ஒருநாள் நரி  "உனக்கு நிறைய புல்  இருக்கும் இடத்தைக் காட்டுகிறேன் வா."என்று வயல்வெளிக்கு அழைத்துச் சென்றது.அங்கு நிறைய பயிர் விளைந்திருப்பதைப் பார்த்த மான் தினமும் அதைப் புசித்து வந்தது.பயிர் குறைந்து வருவதை அதன் சொந்தக்காரன் கவனித்தான்.மறுநாள் ஒரு வலையை அங்கு விரித்து வைத்தான்.வழக்கம்போல அங்கு மேய வந்த மான் வலையில் மாட்டிக் கொண்டது.ஒளிந்திருந்த    நரிக்குக் கொண்டாட்டம். இரவு அந்த மானைத் தின்னலாம் என்று காத்திருந்தது.மான் பயந்து நடுங்கியபடி அந்த வலைக்குள் அமர்ந்திருந்தது.
              நண்பனான மானைக் காணாமல் காகம் தேடிக் கொண்டே வந்தது.வயலில் வலைக்குள் மான் அகப்பட்டிருப்பதைப் பார்த்தது.
"நண்பா, பயப்படாதே. நான் உன்னைக் காப்பாற்றுகிறேன்.நான் சொல்வது போல் செய்.நீ செத்தது போல  கிட.நான் உன் கண்ணைக்  கொத்துவது போல நடிக்கிறேன் காவலாளி வலையை எடுத்துவிடுவான். நான் குரல் கொடுத்ததும் எழுந்து ஓடிவிடு."என்றது. மானும் அதேபோல செத்தது போலக்  கிடந்தது.
            சற்று நேரத்தில் தோட்டக்காரனும் வந்தான்.மான் செத்துக் கிடப்பதைப் பார்த்தான். ஹய்யோ செத்துவிட்டதே எனது தனக்குள் பேசியவன் வலையைச் சுருட்டி மரத்தடியில் வைத்துவிட்டு மானை எடுக்க வந்தான்.அதே சமயம் காகம் கா,...கா,,எனக் குரல் எழுப்பியதும் மான் ஒரே ஓட்டமாக ஓடி மறைந்தது.தோட்டக்காரன் ஏமாந்து விட்ட கோபத்தில் கையிலிருந்த கம்பை ஓங்கி வீசினான்.
அந்தக் கொம்பு மறைந்திருந்த நரியின் தலையில் படீரென்று விழுந்தது.நரியும் செத்து விழுந்தது.
காகமும் மானும் மகிழ்ச்சியுடன்  மரத்தடியில் சந்தித்தன..
அப்போது காகம்" சேரக்கூடாதவருடன் சேரக்கூடாது என்று இப்போதாவது புரிந்ததா "என்றது.மானும்,
      மானும், " நன்றாகக் புரிந்தது. என் உயிரைக் காப்பாற்றிய உனக்கு மிகவும் நன்றி."என்று மகிழச்சியுடன் கூறியது.
--------------------------------------------------------------------------------------------------------------







ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

வெள்ளி, 19 அக்டோபர், 2018

சிங்கமும் சுண்டெலியும்

              ஒரு காட்டில் ஒரு சிங்கம் வாழ்ந்து கிட்டிருந்துச்சு..அந்த காட்டுக்கே அது ராஜாவா சுத்திகிட்டிருந்துச்சு .அந்தக் காட்டில் புலி கரடி மான் போல  பல மிருகங்களும் வாழ்ந்து கிட்டு இருந்துச்சு.எலி முயல் போல சின்னச் சின்ன பிராணிகளும் இருந்துச்சு. மயில் குருவி மைனா போல நிறையபறவைங்களும் மரத்துக்கு மரம் பற ந்துகிட்டு சந்தோஷமா இருந்துச்சுங்க.
          ஒருநாள் காலநேரம்.சிங்கராஜா தன்னோட வீட்டுல அதுக்குப் பேருதான் குகை அப்படீன்னு சொல்லுவாங்க.பெரீய்ய மலைக்குள்ள ஒரு பெரீய்ய ஓட்டை இருக்கும் அதுதான் சிங்கத்தோட வீடு. அந்த வாசல்ல சிங்கம் சுகம்மா தூங்கிகிட்டு இருந்துச்சு.அப்போ அங்க வந்த ஒரு சின்ன சுண்டெலி அங்கேயும் இங்கயுமா ஓடி விளையாடிக்கிட்டிருந்துச்சு.அந்தப் பெரிய சிங்கத்து மேலயும் ஓடி விளையாடத தொடங்கிச்சு.சிங்கத்துக்கு முழிப்பு வந்துடுச்சு. அது கோபமா எலிக்குஞ்சைப்  பார்த்து பெரிசா கர்ஜனை பண்ணிச்சு. தூக்கம் கெட்டுப் போச்சேன்னு அதுக்கு ஒரே கோபம்.தன முன்னால ஒடின அந்த சுண்டெலியப்பிடிச்சுக்கிட்டு கோவமா பார்த்துச்சு. அப்பதான் எலிக்குஞ்சுக்குப் பயம் வந்துச்சு.திருதிருன்னு முழிச்சுது.அப்போ சிங்கம் சொல்லிச்சு," 
ஏ சுண்டெலியே,என்னை ப்  பாத்தா எல்லா மிருகங்களும் பயந்து நடுங்கும் உனக்கு என்ன தயிரியம் இருந்த எம்மேலேயே விழுந்து விளையாடுவே உன்னை அப்படியே தின்னுடறேன் பாரு"அப்படீன்னுச்சு.உடனே அந்த சுண்டெலி "என்ன மன்னிச்சுடுங்க தெரியாம விளையாடிட்டேன். "அப்படீன்னு கெஞ்சிச்சு.சிங்கம் பேசாமே இருக்குறதைப்பார்த்து "சிங்கராஜா என்னிக்காச்சும் உங்களுக்கு உதவுறேன். நான் இத்துனூண்டு இருக்கேன் உங்க பல்லுக்கு கூட காணமாட்டேன்.என்ன விட்டுடுங்க "அப்படீன்னு கெஞ்சுனதும் சிங்கராஜா "போ தூரப்போயி விளையாடு"அப்படீன்னு சொல்லி விட்டவுடன் சுண்டெலி ஒரே ஓட்டமா மலை இடுக்கில்  ஓடிட்டுது 
           கொஞ்ச நாளாச்சு. ஒருநாள் சுண்டெலி விளையாடிக்கிட்டிருந்துச்சு. அப்போ திடீருன்னு சிங்கத்தோட கர்ஜனை கேட்டுது. சுண்டெலி உடனே அது சிங்கராஜா கர்ஜனைன்னு புரிஞ்சிக்கிடுச்சு.ஒரே ஓட்டமா அந்தக் குரல் வந்த இடத்தைப்பார்த்து ஓடிச்சு.பாத்தா அந்த  சிங்கத்தைப் பிடிக்க சர்க்கஸ்காரன் விருச்ச வலையில அது  மாட்டியிருந்துச்சு.உடனே சுண்டெலி அந்தச்சிங்கத்து முன்னால போயி நின்னுச்சு.
"சிங்கராஜா பயப்படாதீங்க நா இந்த வலய அறுத்து உங்கள விடுதலை பண்றேன். நீங்க என்னை  உயிரோட விட்டீர்களே அதனால நான் உங்களுக்கு உதவுறேன்."அப்படீன்னு சொல்லி வலய பல்லால கடிச்சுக் கடிச்சு தூளாக்கிடுச்சி.இப்போ சிங்கம் வெளிய வந்து 
"சுண்டெலியே உனக்கு ரொம்ப நன்றி "அப்படீன்னு சொல்லிட்டுக் காட்டுக்குள்ள ஓடிப் போயிடுச்சு.
சுண்டெலியும் சந்தோஷமா தன்னோட வீட்டுக்கு ஓடிடுச்சு. எப்படி சிறு துரும்பும் பல் குத்த உதவும் அப்படீன்னு பெரியவங்க சொன்னாங்களே அது நெசம்தானே.











ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

பாட்டி சொன்ன கதை

          அன்புள்ள பேரக் குழந்தைகளே பாட்டியின் நல்வாழ்த்துக்கள் 
இதுவரை உங்கள் அக்காக்கள் அண்ணன்களுக்கு கதை சொல்லி வந்தேன்.இனி எங்கள் தாத்தா பாட்டி எங்களுக்குச் சொன்ன கதைகளை உங்களுக்குச்  சொல்லப் போகிறேன். இந்தக் கதைகளை உங்கள் பாட்டி தாத்தாக்கள் படித்து உங்களுக்குச் சொல்வார்கள்.இவை எல்லாமே பழைய கேட்ட கதைகள்தான்.ஆனாலும் புதிதாகக் கேட்கும் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும் என்று நம்புகிறேன்.
உங்கள் அன்புப் பாட்டி

ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

திங்கள், 10 செப்டம்பர், 2018

மேன்மக்கள்

பழனி என்ற பதினாறு வயதுப் பையன் தலைகுனிந்து நின்றிருந்தான். அவன் கண்களில் கண்ணீர் எப்போது கொட்டட்டும் என்பதுபோல் நின்றிருந்தது.அவன் எதிரே அவனைப் பெற்ற  தாய் கீழே அமர்ந்துகொண்டு கீரையை ஆய்ந்து கொண்டு இருந்தாள்  அவள் கண்களிலும் கண்ணீர் உதிரத்  தயாராக இருந்தது.என்ன செய்வது ஏதேனும் பலம் இருக்கவேண்டும் பேசவேண்டும். பணபலம் மனிதர் பலம் இரண்டுமே இல்லாதிருக்கும் போது  எதைச் சொல்லித் தேற்றுவது என்று புரியாமல் தான் அவள் அமைதியாக இருந்தாள்  மகனுடன் சேர்ந்து கண்ணீர் வடிப்பதைத் தவிர அவளுக்கு வேறு ஒன்றும் தெரியவில்லை.
சற்றுநேரத்தில் மனம் தெளிவடைந்தவளாய் மகனிடம் கூறினாள் 
"பழனி மனதைத் தேத்திக்கோ.இந்த இஞ்சினீர் படிப்புப் போனால் என்ன? வேறே படிப்பு இல்லையா என்ன?எதைப் படிச்சாலும் ஒண்ணுதான்.ஆண்டவன் அருளும் நல்ல உழைப்பும் இருந்தா வாழ்க்கையிலே எப்படியும் முன்னேறலாம்.கண்ணைத் தொடச்சிக்கோ . அடுத்து ஆக வேண்டியதைப் பாரு."
பழனியும் தெளிவடைந்தான்.சற்றே புன்னகைத்தான்.அவன் அம்மாவும் மகன் தெளிவடைந்ததை எண்ணி சற்றே நிம்மதிப் பெருமூச்செறிந்தாள்.
"ஆனாலும் அந்த வீட்டு அய்யாவுக்கு நன்றி கொஞ்சம் கூட இல்லை அம்மா.அதை நெனச்சாதான் எனக்கு கொஞ்சம் கோபம் வருதும்மா."முகம் சிவக்க பழனி கூறியதைக் கேட்ட அவன் தாய் அஞ்சலையும் அதை ஆமோதித்தாள் "என்ன செய்யறதுப்பா. நாம் ஏழையாயிட்டோம்.நம்ம உழைப்பும் உண்மையும் தவிர நம்ம கிட்டே எந்த  செல்வமும் இல்லையே தம்பி. அதை வச்சுக்கிட்டு பெரிய படிப்பெல்லாம் படிக்க முடியுமா. ஆனாஒண்ணு  வாழ்க்கையிலே முன்னுக்கு வர இது இரண்டும் இருந்தாபோதும் பழனி."
அம்மாவை ஆமோதித்தான் பழனி.
கிட்டத்தட்ட பத்து வருஷமாக ஆடிட்டர் சக்திவேல் வீட்டில் சமையல் வேலை செயது ஒரே மகன் பழனியை தன எஜமானின் மகன் படிக்கும் உயர்ந்த பள்ளியிலேயே படிக்கவைத்தாள்.பத்தாம் வகுப்பில் பள்ளியிலேயே முதல் மாணவனாகத் தேர்வானபொழுதே பழனியின்மேல் சக்திவேலுக்கும் அவர் மகன் ராஜவேலுக்கும் மனதில் பொறாமை ஏற்படத் தொடங்கியது .

அஞ்சலியிடம் அவர் ஒருநாள் கேட்டார்."ஏம்மா, உன் மகனை ஏன்  கஷ்டப் பட்டுப் படிக்கவைக்கறே?என் ஆபீஸிலேயே ஒரு வேலை போட்டுத் தரேன்.படிப்பை விட்டுட்டு வேலைக்குப் போனால் உனக்கும் வசதியாய் இருக்குமில்லையா?எத்தனை நாள்தான் நீயே கஷ்டப்படுவே?
நல்ல சம்பளம் போட்டுத் தரேன். என்ன சொல்றே?"
"யோசிச்சுச் சொல்றேன் .என் மகனைக் கேக்கணும்."
"அவனை என்கிட்டே வரச்  சொல்லு. நான் பேசறேன்."
அப்போதே அவர் மனம் புரிந்து விட்டது அஞ்சலைக்கு.
அவர் எதிர்ப்பினூடே எப்படியோ பனிரெண்டாம் வகுப்பிலும் முதன்மை மாணவனாகத் தேர்ச்சிபெற்றான் பழனி.
ஆனால் ராஜவேலுவோ எல்லாப் பாடங்களிலும் குறைந்த மதிப்பெண் பெற்றே தேர்ச்சி பெற்றிருந்தான்.
பழனி ராஜவேலு இருவருமே இன்ஜினீயருக்குப்  படிக்க விரும்பினர்.தன மகன் படிப்பில் பின்தங்கியிருப்பதும் தன்னிடம் வேலை அதுவும் சமையல் வேலை செய்யும் ஒரு பெண்ணின் வளர்ப்பில் ஒருபையன் முதல் மதிப்பெண் பெறுவதும் அவரால் தாங்கிக்  கொள்ள முடியவில்லை.
அவரிடம் தன் மகனின் படிப்பிற்கு உதவி கேட்டபோது மீண்டும் முதலில் சொன்ன அதே செயதியையே கூறினார்.எப்படியேனும் அவன் படிப்பை நிறுத்தி தன னிடமே தன அடிமையாக வைத்துக் கொள்ள விரும்பினார். தன் மகனும்சமையல்காரி மகனும்சரிநிகர் சமமாகப் படிப்பில் விளங்குவது அவருக்குப் பிடிக்கவில்லை. அதனாலேயே கல்விக்காக உதவி செய்யாமல் தவிர்த்தார்.
இதைத்தான் தாயும் மகனும் ஆரம்பத்தில் பேசிக்கொண்டனர்.
மகனின் ரோஷத்தை அஞ்சலை மதித்தாள்.மறுநாளிலிருந்து அஞ்சலை வேலைக்குப் போகாமல் நிறுத்திக் கொண்டாள்.சக்திவேல் ஆளனுப்பியபோது அஞ்சலையும் பழனியும் வீட்டைக் காலிசெய்துவிட்டு ஊரைவிட்டே போய் விட்டதாகச் சொன்னான் வேலையாள் .
          ஆண்டுகள் உருண்டன.இப்போது ராஜவேல் ஒரு இஞ்சினீயர்.சென்னையில் கடந்த ஓராண்டாக வேலைதேடி அலையும் ஒரு பொறியியல் பட்டதாரி.எங்கு சென்றாலும் இவனைவிட மதிப்பெண் பெற்றவர்களாக நேர்முகத் தேர்வுக்கு வந்ததினால் இவனுக்கு வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருந்தது.
          அன்றும் ஒரு நேர்முகத் தேர்வுக்குத்தான் காத்திருந்தான்.ஒவ்வொருவராக எம்.டி யின் அறைக்குள் சென்று வந்தனர். நேரம் செல்லச் செல்ல ராஜவேலுவின் படபடப்பு அதிகமாகியது.இந்தவேலையாவது கிடைக்க வேண்டும். கடவுளை வேண்டிக்கொண்டான்.அவன் கண்கள் அங்கிருந்த பெயர்ப்பலகையை நோக்கின. பழனிவேல் முருகன் என்ற பெயரைப் பார்த்ததும் அவனுக்குத் தன பழைய நண்பன் பழனியின் நினைவு வந்தது.சொல்லாமல் ஊரைவிட்டுக்காலி செய்ததும் அவன் படிப்பைத் தொடர்ந்தானா இல்லையா இப்போது எங்கிருக்கிறானோ என்ற நினைவும் அவனைச் சுற்றி படர்ந்தன. நினைவை எங்கோ செலுத்தியிருந்தவனை உதவியாளர் ராஜவேல் என்று பெயர் சொல்லி அழைத்ததும் நினைவு வந்து வேகமாகத் தன உடையைச் சரி செயது கொண்டு எம்.டி என்ற கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே சென்றான்.தனக்குப் பின் வந்தவர்களை அழைத்துவிட்டுத் தன்னைக் கடைசியாக அழைத்ததை எண்ணி சற்றே கடுப்பில் இருந்தான் ராஜவேல். இருந்தாலும் முகத்தில் பொய்ச்சிரிப்பைத் தாங்கிக்  கொண்டு "வணக்கம் சார்." என்றான் 
அடுத்தகணம் அமர்ந்திருந்த எம்.டி. எழுந்து நின்றார்.
ராஜவேல் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான்."பின்னாலே யாருமில்லை ராஜவேல். உனக்காகத்தான் எழுந்து நின்றேன்."
குரலையும் உருவத்தையும் பார்த்த ராஜவேல் திகைத்தான்.

"நீ...நீங்க...பழனி ..."
கலகலவென்று பெரிதாக நகைத்த பழனி,"பழனியேதான்.உன் பழைய நண்பன்தான்.வா, வீட்டுக்குப் போகலாம்.உன்னைப் பார்த்தால் எங்கம்மா ரொம்ப சந்தோஷப்  படுவாங்க."என்றபடி அவன் கையைப் பிடித்து இழுத்துச் சென்றான் தன காரை நோக்கி.
அப்போதுதான் தன்னை ஏன் கடைசியாக அழைத்தான் என்பதைப் புரிந்து கொண்டான் ராஜவேல்.
அஞ்சலை இருவரையும் பார்த்து மிகவும் சந்தோஷப பட்டாள்  தந்தை செய்த தவறுக்கு மகனைத் தண்டிக்காமல் அவனது நட்புக்கு மதிப்புக் கொடுத்த தன மகனின் பண்பைக் கண்டு மிகவும் மகிழ்ந்தாள் 
ஆறாண்டுக் கதையை இருவரும் சாப்பிட்டுக் கொண்டே பேசினார்.
அஞ்சலைதான் பேசினாள் "ராஜா, ஊரை விட்டு நாங்கள் வந்ததும் இந்த ஊரில் ஒரு ஸ்கூட்டர் மோட்டார் பைக் தயாரிப்பாளரிடம் வேலைக்குச் சேர்ந்தான்.அங்கே என்ன உதிரி பாகங்கள் அதிக மாகத் தேவைப் படுகிறதோ அந்த பொருளை வங்கியில் கடன் வாங்கி தயாரிக்க ஆரம்பித்தான் இரண்டே வருடங்களில் பெரிய தொழிற் சாலைகட்டிவிடடான்.இப்போது அங்கே முப்பது பேர் வேலை செயகிறார்கள்.அவனுடன் துணையாக இன்னொருவரும்தேவை என்றுதான் வேலைக்கு ஆள் தேடிக் கொண்டிருந்தான். சரியாக நீ வந்து சேர்ந்தாய்.உன் விண்ணப்பப் படிவத்தைப் பார்த்தே தெரிந்து கொண்டோம். இன்று உன்னை அழைத்து வருவதாகத்தான் சொல்லியிருந்தான்.அதுதான் ஸ்பெஷல் சமையல்."என்றபடியே புன்னகைத்தாள் 
அவர்கள் அன்பைப் பார்த்துக் கண்கள் குளமாக அவர்களைப்  பார்த்தான் ராஜவேல்.
"உங்களுக்குச்  செய்த பாவம்தான் அப்பா சென்ற ஆண்டே காலமாகிவிட்டார். உங்களைப் பற்றி கடைசி காலத்தில் கேட்டுக் கொண்டேயிருந்தார்.
அண்டியிருந்தவர்களை உதவிசெய்யாமல் கைவிட்டு விட்டேன் என்று ரொம்பவும் வருந்திப் பேசினார்."
என்றபோது அஞ்சலை,"அதனால் என்ன, என் மகன் நல்ல நிலைக்கு வர அதுவே காரணமாகிவிட்டதே, அவர் நல்லதுதான் செய்திருக்கிறார்."
என்றபோது மன நிறைவுடன் சிரித்தான் ராஜவேல்.அவன் கையைப் பற்றி அழுத்தி தன நட்பை உறுதிப் படுத்தினான் பழனி.அவர்கள் இருவரையும் பார்த்து மனது திருப்தியுடன் புன்னகை செய்தாள்  அஞ்சலை.அவர்களின் உயர்ந்த உள்ளத்தைப் பார்த்து நன்றியுடன் மனம் நெகிழ்ந்து நின்றிருந்தான் ராஜவேல்.அவன் மனம் கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும் என்று பழைய பாட்டை நினைவு கூர்ந்தது.

                                                                  
























































































 
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

புதன், 15 ஆகஸ்ட், 2018