ஞாயிறு, 21 மே, 2023

vandhaan vadivelan

 வந்தான் வடிவேலன்.

      வள்ளியூர் ஒரு சிற்றூர்.அந்த ஊரில் சுமார் நான்கு தெருக்கள் இருந்தன.அனைவரும் ஆடுமாடு வைத்தும் வயல்வெளிகளில் வேலை செய்தும் வாழ்க்கை நடத்துபவர்கள்.ஆறுமுகம் என்பாரும் அப்படி வாழ்பவர்தான்.அவருக்கு செந்தில் என்ற ஒரு மகன் இருந்தான்.அவன் அப்பாவுக்கு உதவியாக ஆடுகளை மேய்த்துவந்தான்.

      அந்த ஊரில் ஒரு முருகன் கோவில் இருந்தது.மிகவும் பழமையான கோவில்.யார்கட்டினார்கள் என்பதே தெரியாது.ஊரின் எல்லையில் ஆற்றின் கரையில் அமைந்திருந்தது.உள்ளே கையில் வேலுடன் அழகாகசிரித்தபடி  முருகன் நின்றிருந்தான்.அவனைக்கவனிப்பார் யாருமில்லை.

      ஆனால் தினமும் ஆடுகளை மேய்த்தபடி வரும் செந்தில் அந்தக் கோவில் வாசலில் அமர்ந்துதான் ஆடுகளைக் கவனித்தபடி அமர்ந்திருப்பான்.ஒருநாள் கையில் கொம்பனு வைத்துத் தட்டிக் கொண்டே அமர்ந்திருந்தவர் முன் ஒரு சிறுவன் வந்து சிரித்தபடி நின்றான்.அவனைப் பார்த்த செந்திலுக்கு ஆச்சரியமும் ஆனந்தமும் ஏற்பட்டது.எவன் எங்கிருந்து வந்தான் என்பது ஆச்சரியம் விளையாட ஒரு நண்பன் கிடைத்தானே என்ற ஆனந்தம்.

வந்தவனைப் பார்த்து "ஏய் யார்நீ? எங்கிருந்து வந்தே?"என்றான் .புன்னகைத்த சிறுவன் "நான் இங்கேதான் இருக்கேன்.உன்னைத் தினமும் பார்க்கிறேன் .இன்னைக்கி உன்கூட விளையாடலாமேன்னு வந்தேன்.என்றான்.

மிகுந்த மகிழ்ச்சி கொண்டான் செந்தில்.

"வாவா எனக்கும் விளையாட ஆசைதான்."என்றபடி அவனை வரவேற்றான்.

"ஆமா...உன் பேர் என்ன?"

"என்னை வேலய்யா வேலா அப்படின்னு கூப்பிடுவாங்க."

"

செவ்வாய், 2 மே, 2023

paatti sollum kadhaigal - பெற்றோரே தெய்வம்

 பெற்றோரே தெய்வம்.

கைலாயத்தில் பார்வதியுடன் அமர்ந்திருந்த சிவபெருமான் விநாயகரின் அறிவு  திறமையை  உலகுக்கு காட்ட விரும்பினார்.உடனே தன கையில் ஒரு  மாம்பழத்தை வரவழைத்தார்.அதைத் தன மக்களான விநாயகருக்கும் முருகனுக்கும் காட்டினார்.அதைப் பார்த்த இருவருமே தனக்குத் தான் அப்பழம் வேண்டும் என போட்டியிட்டனர் 

           இரண்டு பிள்ளைகளில் யாருக்கு கொடுப்பது எனத்  தெரியாமல் பார்வதி திகைத்தாள்.சிவபெருமானிடம் தன சங்கடத்தைத் தெரிவித்தாள்.இருவருக்கும் ஒரு போட்டி வைத்து யார் வெல்கிறார்களோ அவருக்கே அந்தப்பழத்தைக் கொடுப்பதே சரி என்று கூறவே அவரையே  போட்டி வைக்குமாறு பார்வதி வேண்டிக்கொண்டாள்.

          சிவபெருமானும் தன பிள்ளைகளிடம் யார் முதலில் இந்த உலகைச் சுற்றிவருகிறார்களோ அவருக்கே இந்தப் பழம் உரியது என்று கூறினார்.உடனே மயில்வாகனனாகிய முருகப் பெருமான் தன வாகனத்தின் மேலேறி உலகை வலம் வர புறப்பட்டார்.விநாயகர் சற்றே சிந்தித்தார்.

        அவர் சிந்தனையில் ஒரு உண்மை பளிச்சிட்டது.உடனே அப்போது அங்குவந்த நாரத முனிவரிடம் உலகில் ஒவ்வொருவருக்கும் உலகம் எது எனக்கேட்டார்.கலகத்துக்கே காத்திருந்த நாரதர் இந்த சமயத்தை நழுவ விடுவாரா உடனே சட்டென்று அம்மையும் அப்பனும்தான் உலகம் என்று கூறிவிட்டுச் சிரித்தார்.

உடனே விநாயகரும் தன பெற்றோராகிய சிவா பார்வதியைச் சுற்றி வலம் வந்து பழத்தைப் பெற்றுக் கொண்டார்.உலகைச் சுற்றி விட்டு வந்த முருகனுக்கு கோபம் வந்து மலைமீது அமர்ந்து கொண்டார்.விநாயகர் முருகனிடம் பழத்தை நீயே பெற்றுக் கொள்  எனக் கூறினார்.

        விநாயகர் கூறியதைக் கேட்ட முருகன் அண்ணா நீயே இந்தப் பழத்தைப் பெற்றுக் கொள் ஞானப் பழத்தைப் பெற்று ஞானவிநாயகன் என்று உலகோர் போற்றி வணங்கட்டும்.உன்னால் இந்தப் பூவுலகில் பெற்றோரே முதல் தெய் வம் என்பதைப் புரிந்து நடந்து கொள்ளட்டும்.இந்த உண்மையை உலகிற்கு எடுத்துக் காட்டவே சினம் கொண்டதாகத் தோற்றம் கொண்டேன் என்று தெரிவித்தார் முருகப் பெருமான். 

         முருகப் பெருமான் சொன்னதைகே கேட்ட விநாயகரும் மிக்க மகிழ்ச்சி தம்பி உலகில் அனைவரும் தம் பெற்றோரே தெய் வம் என்பதைப் புரிந்து நடந்து கொள்வது  மிகவும் அவசியம் என்று கூறினார். இருவரும் சேர்ந்து பெற்றோரை வணங்கினர். சிவனும் பார்வதியும் மகிழ்ந்து தம் மக்களுக்கு ஆசி கூறினர்.






    



சனி, 24 செப்டம்பர், 2022

vandhaan velan.

சிறுவர்களுக்கான சிறுகதைகள். 

  1.                                வந்தான் வேலன் 


                   அது ஒரு சிற்றூர்.சுமார் நூறு குடும்பங்கள் இருந்தால் அதிகம் .அனைவரும் வயல் வெளிகளில் வேலை செய்பவர்கள்.அவரவர்கள் தங்கள் சொந்த நிலங்களில் பயிர் விளைவித்துக் கொண்டிருந்தனர். எனவே அனைவரும் வசதி படைத்தவர்களாகவே இருந்தனர்.அவர்களில் ஆறுமுகமும்  ஒருவன்.அவனுக்கு செந்தில் என்று ஒரு மகன் இருந்தான்.அப்பாவுக்கு உதவியாக ஆடு மேய்த்து வந்தான்.

                   அந்த ஊரில் ஒரே ஒரு முருகன் கோயில் இருந்தது.மிகப்பழமையான கோயில் இருந்தது.யார் கட்டினார்கள் என்று தெரியாது.ஊரின் எல்லையில் ஆற்றின் கரையோரமாக அமைந்திருந்தது.கையில் வேலுடன் முருகன் அழகாய் சிரிப்புடன் நின்றிருந்தான்.ஆனால் அவனைக் கவனிப்பார் யாருமில்லை.

             ஆனால் தினமும் ஆடுகளை மேய்த்துக் கொண்டு வரும் செந்தில் அந்த முருகன் கோயில் படிக்கட்டில் அமர்ந்துதான்ஆடுகளைக் கவனித்துக் கொள்வான். ஒருநாள் கையில்   ஒரு நாள் கையில் கொம்பை வைத்துத் தட்டிக் கொண்டே அமர்ந்திருந்தான்.அவன் முன் அவனையொத்த ஒரு சிறுவன் வந்து நின்றான்.அவனைப் பார்த்த செந்திலுக்கு ஆச்சரியமும் அதே சமயம் ஆனந்தமும் ஏற்பட்டது.

            இவன் எங்கிருந்து வந்தான்? என்பது ஆச்சரியம் .நல்லவேளையாக உடன் விளையாட தன்னைப்போல் ஒருவன் வந்தானே என்பது ஆனந்தம்.ஆனாலும் வந்தவனைப் பார்த்து செந்தில் "ஏய், யார் நீ ? எங்கிருந்து வந்தே?என்றான்.

புன்னகைத்த அந்தச் சிறுவன், "நான் இங்கேயேதான் இருக்கேன்.உன்னைத் தினமும் பார்க்கிறேன்.இன்னிக்கி உன்கூட விளையாடலாம்னு வந்தேன்."என்றான்.மிகுந்த மகிழ்ச்சி கொண்டான் செந்தில்.

"வா,வா எனக்கும் விளையாடணும்னு ஆசைதான் "என்றபடி வரவேற்றான்,

"ஆமா உன் பேரு என்ன?"

"என்னை வேலய்யா வேலா வேலு எப்படிவேணாலும்  கூப்பிடலாம் "

"நான் உன்னை வேலான்னு கூப்பிடறேன்.அதான் சத்தமா கூப்பிட சௌகரியமா இருக்கும்."

புன்னகையுடன் அதை ஏற்றான் வேலன் 

பொழுது போவது தெரியாமல் இருவரும் விளையாடினார்கள்.

சற்று நேரத்தில் சூரியன் மறையவே செந்தில் ஆடுகளை ஓட்டினான்.

வேலனைப் பார்த்து "சரி வேலா, நேரமாச்சு நான் வரேன் நாளைக்கு சீக்கிரம் வா. விளையாடலாம்."என்றான்.

வேலன்  சரியென்று தலையசைத்தவன் புன்னகையோடு விடை கொடுத்தான் 

                       மறுநாள் பொழுது விடிந்தவுடன் அவசர அவசரமாக குளித்து உடைமாற்றி ஆடுகளை அவிழ்க்க ஆரம்பித்தான் செந்தில்.

அவன் தந்தைக்கு ஒரே ஆச்சரியம்.என்றும் ஆடுகளை மேய்க்கப் போக மாட்டேன் என்று அடம் பிடிப்பவன் இன்று தானே ஆடுகளை மேய்க்கத் தயாராகி விட்டானே என்று சாறு ஆச்சரிய பட்டாலும் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

வழக்கம்போல கோயில் வாசற்படியில் அமர்ந்தவன்" வேலா, ஏய் வேலா" என்று கூவினான்.செந்திலின் தோளில் கை  வைத்தபடி வேலன் வந்து அருகே அமர்ந்தான்.

"அட, நீ இங்கேயா இருக்கே நான் பார்க்கவே இல்லையே"

"நீ என்னைக் கவனிக்கவே இல்லை.கோயில்லதான் இருந்தேன்."

"சரி இந்தா  கடலைமிட்டாய் சாப்பிடு.எங்கப்பா வாங்கி குடுத்தாரு."

மகிழ்ச்சியோடு கடலைமிட்டாயை வாங்கிச் சுவைத்தான் வேலன்.

"நல்லாருக்கா"என்றவன் கையை உதறிக்கொண்டு எழுந்தான்.இருவரும் விளையாட ஆரம்பித்தார்கள்.

                      ஒருநாள் ஒரு பெரியவர் அந்த வழியே வந்தவர் முருகன் கோயிலைப் பார்த்து வணங்கி நின்றார்.பின்னர் நன்கு முருகனை உற்றுப் பார்த்து விட்டு ஆச்சரிய பட்டுப் போனார்.மேலும் தனக்குள் 'வேலாயுதம் இல்லாமல் வேலனா? ஆச்சரியமாயிருக்கு "என்று சொல்லிக் கொண்டார்.

இந்தச் செயதியை அவர் ஊருக்குள் சென்று சொல்ல ஊர்ப்பெரியவர்கள் தனவந்தர்கள் எல்லாரு மாக பத்துப்பேர் கோவிலுக்கு வந்து ஆச்சரிய பட்டுப் போனார்கள்.ஆளாளுக்கு வேல் இருந்ததே நான் பார்த்திருக்கேன்.என்று பேசிக்கொண்டார்கள்.மேலும் நாம கவனிக்காததால்தான் வேலை யாரோ திருடிச் சென்றுவிட்டார்கள்.அந்த வேலைத் தேடுவதே இனி நம் வேலை. 'என்று முடிவு செய்தனர்.

தினமும் அந்த இடத்தில் ஆடு மேய்க்கும் செந்திலிடம் விசாரித்தனர்.

"உன்கூட இன்னொரு பையன் வந்து விளையாடுவான் அவன் கிட்ட விசாரிக்கணுமே எங்கே அவன்?"என்றபோது அவன் இன்னும் வரவில்லை என்றவன் அதோ வந்து விட்டான் என்றான் உற்சாகக் குரலில்.செந்திலின் அருகே வந்து அவன் கையைப் பற்றிய வேலன்  "செந்தில் நான் இனிமே விளையாட வரமாட்டேன் "என்றான்.

"ஏன் வேலா?"என்றான் செந்தில் சோகமான குரலில்.

"சரி சரி நீ வருத்தப்படாத இப்போ விளையாடலாம் வா."என்று அவன் கையைப் பற்றினான் வேலன். ஜனங்களே அதிகம் வராத அந்தஇடத்துக்கு திடீரென்று பத்துப் பேர் கூட்டமாக வந்திருப்பதை அறிந்த செந்தில் அதிசயித்துப் போனான்.

"இது என்ன அதிசயம் இத்தினி நாளு  யாரும் வராத இந்தக் கோயிலுக்கு இத்தினி பேரு வந்திருக்காங்களே "என்று ஆச்சரியக் குரலில் கூவினான் செந்தில்.புன்னகையுடன் அவர்களைப்  பார்த்துக் கொண்டு நின்றான் வேலன். 

வந்திருந்தவர்களில் பெரியவர் ஒருவர் வேலனின் கையைப் பற்றினார்.

"டேய் தம்பி யார்வீட்டுப் பிள்ளை நீ?உங்கப்பா பேர் என்ன?" 'என்றார் வேகமாக.

"நானா நானு சொக்கநாதன் மகன் வேலன் .இதே ஊர்லதான் ரொம்ப வருஷமா இருக்கேன்.நீங்கதான் என்னைக் கவனிக்கவே இல்லையே."என்றான்.

"உங்கப்பாரு என்ன சய்யிறாரு?உங்க வீடு எங்க இருக்கு?எந்தத் தெருவில இருக்கு காட்டு அதை."என்று கேள்வியாக அடுக்கினர் .தன்னைப் பற்றியிருந்த கையை உதறிக்கொண்டு  "இதுதான் எங்க வீடு. இங்கதான் நான் இருக்கிறேன்."என்றவாறு கோயில் கர்ப்பக்கிரகத்தில் நுழைந்து மறைந்துபோனான் வேலன்.

அதேசமயம் முருகனின் காலியாக இருந்த கைக்குள் வேலும் பளபளத்தது.

அதைப்பார்த்த ஊர்மக்கள் "வேலா, வடிவேலா, நீயா சிறுவனாக வந்தாய்?என்று கூவினர்.

சிலர் செந்திலைத் தலைமேல் தூக்கிக் கொண்டாடினர்.மகிழ்ச்சியில் அந்த ஊர்மக்கள் திளைத்தனர்.

பலரும் தன்  நிலை மறந்து முருகா வேலா எனக் கூவிக் கண்ணீர் மல்க கோவிலை வலம் வந்து தொழுதனர்.

அன்றே  அந்தக் கோவிலுக்கு குடமுழுக்கு செய்யவும் திருவிழாநடத்தவும் ஊர்ப்பெரியவர்கள் ஏற்பாடு செய்யத் தொடங்கினர்.செந்திலுக்கு வடிவேலனுடன் விளையாடிய சிறுபிள்ளை என்ற நற்புகழும் கிடைத்தது.

வேலன்  கேட்பாரற்றுக் கிடந்த தன இல்லத்துக்கு பெரும் புகழை வலிய வந்து சேர்த்துவிட்டான் .

--------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2022

வாழ்த்து.

அனைவருக்கும் கோகுலாஷ்டமி தின நல்வாழ்த்துகள்  


வெள்ளி, 22 ஏப்ரல், 2022

  சில  மாதங்களாக உடல்நலமின்றி இருந்ததால் உங்களை சந்திக்க  இயலவில்லை.

திங்கள், 16 ஆகஸ்ட், 2021

 நம்பினால் நடராசன்.

      ஆண்டுத் தேர்வு முடிந்து பள்ளிகளெல்லாம் ஒருமாதம் விடுமுறை அறிவித்து விட்டார்கள். பல மாணவர்கள் ஊருக்குப் போவதைப் பற்றியும் அவரவர் கிராமத்தைப் பற்றியும் சொந்த ஊர் பற்றியும் மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டே நடந்தனர்.ரவியும் சேதுவும் அவர்கள் பேச்சை ரசித்தபடி நடந்தனர்.சேதுவும் ம் ஊரில் இருக்கும் தன மாமா பற்றியும் பாட்டி தனக்கு கதை சொல்வதைப் பற்றியும் பேசிக் கொண்டே வந்தான்.

         ரவிக்கு தான் எப்போதும் ஊருக்கே போவதில்லை. எப்போதாவது கோயில்களுக்குப் போவதோடு சரி என்பதை நினைத்து மௌனமாகவே வந்தான்.

சற்றுநேரம் கழித்தே அவனைக் கவனித்த சேது  "ஏண்டா, நீ எங்கேயும் போவதில்லையா?உனக்கு பாட்டி மாமா என்று யாரும் இல்லையா?'என்றான் சற்றே தலைகுனிந்து ரவி  வருத்தத்தோடு  தலையை அசைத்தான்.

"கவலைப்படாதேடா. இந்தமுறை என்கூட எங்க ஊருக்குப் போகலாம் நான் உங்க அப்பாகிட்ட கேட்கிறேன்."என்றான் உற்சாகத்தோடு.

அதைக் கேட்டதும் சற்றே உற்சாகமானான் ரவி.

                        சேது தன தந்தையிடம் கேட்கும் வரை ரவிக்கு இருப்பே கொள்ளவில்லை.அவ்வளவு ஆர்வமாக இருந்தான்.

சேது சொல்வதைக்கேட்ட ரவியின் தந்தை ரவியிடம்"ஏண்டா, அங்கே போய் ஒழுங்கா இருந்து நல்ல பெயர் வாங்கி வருவாயா/'என்றார்."ஓ  ஓ" என்று தலையை ஆட்டினான் ரவி.

அவர் சேதுவைப்பார்த்து "உங்கப்பாகிட்டே சொல்லிட்டியா ரவியும் வருவான்னு?என்று கேட்டார்.

"சொல்லிட்டேன் மாமா.அவரும் சரின்னு சொல்லிட்டார்."

அதன்பின் என்றைக்கு கிளம்புகிறார்கள் எத்தனை நாள் இருப்பார்கள் என்ற விவரத்தையெல்லாம் கேட்டுக் கொண்டார்.

ஆயிற்று.ரவியும் சேதுவும் புறப்பட்டார்கள்.சேதுவின் அப்பா இருவரையும் அழைத்துக் கொண்டு  பயணமானார்.இரண்டு சிறுவர்களும்  பயணத்தில் மிகவும் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தனர்.இரவு ரயிலை விட்டு இறங்கி பேருந்தில்  அவர்களின் சொந்த கிராமத்தை அடைந்தனர்.இரவு வெகுநேரம் ஆகியிருந்தது.வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டுப் படுத்தனர்.நண்பர்கள் அருகருகே படுத்துக்க கொண்டு பேசிக்கொண்டே இருந்தனர்.திடீரென்று சற்றே அமைதியானான் ரவி. 

"டேய் என்னடா?"என்றான்சேது.

"அது என்ன சத்தம் என்னவோ ஓ  ஓ ன்னு கேக்குதே?"

அதுவா பின்னாடி ஆறு ஓடுது.

அதுவா இந்த சத்தம்?

"ஆமா. அதுல எப்பவானும் தண்ணி வரும் சுத்துப்பட்டு ஊர்கள்ல மழை வந்தால் இந்த ஆத்துல  தண்ணி வரும்.மத்தபடி அது நமக்கெல்லாம் பீச்சுதான்.'

"டேய் பசங்களா. என்னடா பேச்சு நேரமாச்சு தூங்குங்கடா"என்ற அப்பாவின் குரல் கேட்டு அமைதியானார்கள் சேதுவும் ரவியும்.

                                       ஒருவாரம் மிகவும் மகிழ்ச்சியாய் கழிந்தது.அந்த கிராமத்தில் குரங்குகள் அதிகம்.அவை செய்யும் சேட்டைகளை பார்ப்பதே மிகவும் பிடித்தமாயிருந்தது இருவருக்கும்.ஆனால் ரவி அந்தக் குரங்கைப் பார்த்தாலே கல்லெடுத்து அடிப்பான். அந்தக் குரங்கு ஈ என்று பல்லை இளித்துக் கொண்டு குரல்கொடுத்து மரத்தில் தாவுவதை ரசிப்பான். சேது "டேய் ரவி அடிக்காதடா.பாவம் "என்பான்.விலங்குகள் நண்பர்கள்னு நமக்கு ஸ்கூல்ல சொல்லியிருக்காங்கல்ல .சில சமயம் அதுங்க கூட நமக்கு உதவி செய்யும்."என்றான் சேது.

"ஆமா குரங்குதான் வந்து உதவி செய்யுதாக்கும்" என்று சிரித்தான் ரவி.


                   ஒருவாரத்தில் ஆற்றில் வெள்ளம் வடிந்து நீரே இல்லாமல் இருந்தது.. நல்ல வெய்யில் அடித்ததால் நீர் வற்றிப்போய் ஆறு காலியாக இருந்தது.மத்தியான நேரம்.எல்லோரும் சாப்பிட்டுவிட்டு படுத்திருந்தனர்.சேதுவுக்கும் தூக்கம் வந்துவிட்டது.ஆனால் ரவிக்குத் தூக்கம் வரவில்லை.அவன் மெதுவாக எழுந்து வெளியே வந்தான். தெரு வெறிச்சோடி இருந்தது.

     ரவி மெதுவாக தெருவில் நடந்தான். ஒருவார பழக்கத்தில் இடம் நன்கு தெரிந்திருந்தது. மெதுவாக ஆற்றுப் பக்கம் வந்தான்.ஆற்றில் பாதம் நனையும் அளவுக்கு நீர் ஓடிக்கொண்டிருந்தது.அதில் காலை வைத்து விளையாடிக் கொண்டே சற்று தூரம் சென்று விட்டான். அவனைத் தெடிக் கொண்டு அப்போது சேது அங்கே வந்தவன் ஆற்றில் நிற்கும் ரவியைப் பார்த்தான்.சற்று நேரத்தில் ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடத தொடங்கியது. சேது அலறினான்.

" டே ரவி ஓடிவா. வெள்ளம் வர போகுது. வந்துடு" ரவியின் காதில் சேதுவின் சத்தம் விழவில்லை.வெள்ளம் வேகமாக வரவே ரவி அதில் அடித்துச் செல்லப் பட்டான்.அவனால் நிற்க முடியவில்லை வெள்ளம் இழுத்துச் சென்றது. நீரில் மூழ்கி மூழ்கி எழுந்தான். மூச்சு முட்டியது.

        அவனுக்கு பயம் வரவே தெய்வங்களையெல்லாம் துணைக்கு அழைத்தான் 

அவன் தலை மேலே எழும்பியபோது ஆற்றின் கரையிலிருந்த ஒரு பெரிய மரத்தின் கிளை தண்ணீரில் மூழிகியிருப்பதைக் கண்டான்.மனம் கடவுளை வேண்டியது."

'சாமி. அந்தக்கிளை  கீழாய் என் கைக்கு எட்டனும் என்று வேண்டிக் கொண்டான்.ஆனால் திடீரென்று அந்தக் கிளை அவன் கைக்கு எட்டாதவாறு மேலே எழும்பியது.திடுக்கிட்ட ரவி 'அய்யோ கிளை மேலே போயிட்டுதே.நான் கிட்ட வரும்போது மீண்டும் அது நீருக்குள் விழணுமே.சாமி"என்று மனம் உருக வேண்டினான்.அப்போதுதான் கிளையின் அடிபாகத்தில் ஒரு குரங்கு அமர்ந்திருப்பதையும் அது முன்னே வரும்போது கிளை நீருக்குள் விழுவதையும் குரங்கு ஆற்றில் நீர் அருந்தி செல்வதையும் பார்த்தான் கிளையில் அமர்ந்து குரங்கு மேலும் கீழும் குதித்து விளையாடுவதைப் பார்த்தான் அதற்குள் தண்ணீர் அவனை அடித்துச் செல்லவே அவன் குரங்கை வேண்டிக் கொண்டான்.

             இப்போது என்ன தோன்றிற்றோ குரங்கு கிளையின் நுனிக்கு வந்தது அதே சமயம் ரவியும் அதன் அருகே வரவே சட்டென்று கிளையைப் பிடித்துக் கொண்டு மரத்தின் கிளை வழியே ஆற்றை விட்டு கரைக்கு வந்தான். இப்போது குரங்கைப் பார்த்து இரண்டு கைகளையும் கூப்பி ஆஞ்சநேயா நன்றி.என்றான். அதே சமயம் சில ஆட்களுடன் தந்தையை அழைத்துக் கொண்டு கரையோரமாகவே சேது தேடிவந்தான். நண்பனைக் கட்டிக்க கொண்டு ஆனந்தக கண்ணீர் விட்டான்ரவி.

சேதுவின் அப்பா "ரவி இது காட்டாறுப்பா. அதிலெல்லாம் எப்போ வேணும்னாலும் தண்ணி வரும் இப்படியெல்லாம் தனியா புது இடத்தில போயி ஆபத்துல மாட்டிக்கலாமா?"

பயம் தெளியாத ரவியை அணை த்து ஆறுதல் சொன்னார் "இனி இதுபோல் மிருகங்களை துன்புறுத்த மாட்டேன் இப்போ அந்தக் குரங்குதான் என்னைக் காப்பாத்துச்சு" என்று சேதுவிடம் மெதுவாகச் சொன்னான் ரவி அவனை அணைத்தபடி வீடு வந்து சேர்ந்தான் சேது...

புதன், 30 ஜூன், 2021

 தங்களின் உடனடியான கருத்துக்கு மிக்க நன்றி.

ஞாயிறு, 27 ஜூன், 2021

dheivame thunai

தெய்வமே துணை.

சேதுவும் ரவியும் சிறந்த நண்பர்கள்.எப்போதும் இணைபிரியாமல் இருப்பார்கள்.பள்ளிக்குச் செல்லும்போதும் சரி பள்ளியிலும் சரி எப்போதும் இருவரையும் சேர்ந்தே பார்க்கலாம்.இருவரது குணமும் ஓரே மாதிரி இருந்ததால்தான் இருவருக்குள்ளும் அப்படி ஒரு நட்பு போலும்.

மிகவும் ஒற்றுமையான குணமிருந்தாலும் ஒரேயொரு குணத்தில் மட்டும் இருவரும் வேறு பட்டார்கள்.சேது இறைவனிடம் மிகவும் பக்தியுடன் இருந்தான் ஆனால் ரவி இறைவனை நம்பமாட்டான்.சேது எங்கே கோவிலைக் கண்டாலும் உள்ளே சென்று கும்பிட்டு வருவான் ஆனால் ரவி அவனுடன்  உள்ளே  போகமாட்டான்.அவனிடம் சேது இறைவன் ஒருவன் இருக்கிறான் என்று எவ்வளவோ சொல்லியும் ரவி கேட்காமல் சிரிப்பான்.எத்தனையோ கதைகளை அவனிடம் சொல்லிப் பார்த்தான்.

            இந்த எண்ணத்தை அவனிடமிருந்து மாற்ற எத்தனையோ முயற்சித்துப்  பார்த்தான் சேது..ஆனால் அவனால் முடியவில்லை.ஆனால் ரவியோ அவ்வப்போது சேதுவை கிண்டல் செய்வான்.சேதுவும் உனக்குப் புரியும் காலம் ஒன்று வரும்.என்று நினைத்துக் கொள்வான்.

      முழுவருடப் பரீட்சை  முடிந்து விடுமுறை தொடங்கியது.எட்டு ஒன்பதாம் வகுப்பு மாணவர்களை தலைநகருக்கு கல்விப்பயணம் அழைத்துச் செல்வதாகக் கூறியிருந்தார் தலைமையாசிரியர்.ஒருவாரம் வீட்டைவிட்டு வெளியே தங்குவதற்குத் தயாராய் இருப்பவர்கள் மட்டும் பெயர் கொடுக்குமாறு சொன்னார் ஆசிரியர்.அப்படிப் பெயர் கொடுத்தவர்கள் தகப்பனாரிடமிருந்து கடிதம் கொண்டுவருமாறும் பயண ச் செலவும் கொண்டு வருமாறு பணித்திருந்தார்.

                ரவியும் சேதுவும் மகிழ்ச்சியோடு புறப்படத்  தயாரானார்கள்.சுமார் எண் பது மாணவர்களும் ஐந்து ஆசிரியர்களும் சுற்றுலா புறப்பட்டனர்.அவர்களில் ஒரு மாணவன் சிகப்புக் கலரில் குல்லாய் அணிந்திருந்தான்.சற்றே ஒல்லியாக உயரமாக இருந்தான்.சற்று அமைதியானவனாகவும் இருந்தான்.அவன் எதிரே அமர்ந்திருந்த ரவி அந்த சிறுவனை ஒரு நாள் முழுவதும் கிண்டலும் கேலியும் செய்ததோடு அவன் சிகப்புக் குல்லாயைப் பிடுங்கி வைத்து அவனைத் தவிக்க விட்டான். சேது எத்தனையோ சொல்லியும் ரவியின் குணம் குறையவே இல்லை.ரவியின்மீது அதிக அன்பு கொண்ட சேதுவுக்கே கோபம் வந்தது.

"டேய்  ரவி எதை நாம்எதை  வெறுக்கிறோமோ அதையே விரும்ப நேரும் யாரை நாம் வெறுக்கிறோமோ அவரே நமக்கு சமயத்தில் உதவுவார்.அதனால் சற்று பேசாமல் வா."சேதுவின் வார்த்தைகளைக் கேட்டு அதையே மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்த்தான் ரவி."ஹை நல்லாருக்கே பழமொழி." என்றும் சொல்லிக் கொண்டான்.

நான்கு நாட்கள் ஓடிவிட்டன..டில்லி மாநகரில் குதுப்மினார் செங்கோட்டை பாராளுமன்றக்  கட்டிடம் முதலிய பல இடங்களையும் சுற்றி பார்த்தனர்.

             அன்றுமாலை அனைவரும் குழுக்களாகப் பிரிந்து கடைத் தெருவழியாக வேடிக்கை பார்ததபடியே நடந்தனர்.கையைப் பிடித்தபடியே வந்துகொண்டிருந்த ரவி ஒரு மிட்டாய்க் கடையைப் பார்த்து ஓடினான். அவனைப் பின் தொடர்ந்த சேது  "போகாதே போகாதே" என்று கத்தினான் ஒரே இரைச்சலும் வண்டிகளுமாக இருந்த அந்தத் தெருவில் சாலையைக் கடந்து ஓடிய ரவியைக் காண முடியவில்லை.அவனைத் தேடித் பின்னால் சென்றால் தன குழுவைப் பிரிந்து விட நேரும்.ரவியைப் பின்தொடரவும் முடியாமல் அவனும் எங்கோ மறைந்து போனான்.

   சிறிது நேரம் திகைத்தவன் தன ஆசிரியரைத் தேடி ஓடினான். இறைத்தபடியே சேது சொன்னதைக்கேட்ட  ஆசிரியர் திடுக்கிட்டார்.எல்லா மாணவர்களையும் ஒன்றாகக் கூடி ஒரே இடத்தில் சற்றே உயரமான இடத்தில் நிற்கச் சொன்னார். சேதுவை அழைத்துக் கொண்டு தெரு வழியே ரவியைத் தேடியபடியே சென்றார். அவர் மனம் இறைவனை வேண்டிக் கொண்டது வெகுநேரம் தெடிக் களைத்துப் போனவர் சேதுவிடம் சற்றே வருத்தத்துடன் பேசினார். 

"ரவி கிடைக்கலையினா நாம் ஊருக்குப் போக முடியாது. போலீசுல சொல்லித்தான் தேடச் சொல்லணும்."

சேது பயத்தில் அழ ஆரம்பித்தான்.அவனைத் தேற்றியபடி எல்லா மாணவர்களும் நிற்கும் இடத்துக்கு வந்து  சேர்ந்தார்.

அனைத்து மாணவர்களும் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.அவர்களுக்கு மத்தியில் ரவியும் சிகப்புக் குல்லாய் சிறுவனும் புன்னகையுடன் நின்றிருந்தனர்.

ஆர்வத்துடன் சேது ரவியைக் கட்டிக் கொண்டான். ஆசிரியர் புன்னகையுடனும் மன நிம்மதியுடனும் அப்பாடா, வந்துட்டியா என்றார் ரவியைப் பார்த்து.ரவி ஆசிரியரிடம் மன்னிப்புக் கேட்டான். "நான் அப்படி ஓடியிருக்கக் கூடாது. அதனால் எத்தனை கஷ்டப் போட்டுட்டேன்.என்னை மன்னிச்சுடுங்க ஐயா "

அவனை அணைத்துக் கொண்ட ஆசிரியர் "அதுசரி எப்படி எல்லாரோடையும் வந்து சேர்ந்தே?"என்றார் ஆர்வத்துடன்

."ஐயா நான் மிட்டாய் வாங்கி கொண்டு திரும்பும்போது ஒரு கூட்டம் என்னைத் தள்ளிக் கொண்டு போய்விட்டது.கண் முன்னே என்னைத் தெடிக் கொண்டு போகும் சேதுவைக் கூப்பிடக் கூட முடியவில்லை.அந்தக் கூட்டத்திலிருந்து விடுபட்டு நான் வருவதற்கு வெகு நேரம் ஆகிவிட்டது. நானும் வெகு தூரம்

போ ய் விட்டேன்.ஒருமணி நேரம் எங்கெங்கோ தேடினேன்.அப்போதுதான் சிகப்புக் குல்லாய் அணிந்திருந்த நண்பனின் தலை தெரிந்தது. அவன் சற்று உயரமாயிருந்ததாலும் அவன் தலையில் சிகப்புக் குல்லாய் அணிந்திருந்ததாலும்  உடனே அடையாளம் தெரிந்தது. ஓடிவந்து சேர்ந்து கொண்டேன் நல்ல வேளையாக நீங்களும் வந்து விட்டீர்கள்".என்று சொன்ன ரவியை சேது சேர்த்துக் கட்டிக் கொண்டான் அன்புடன்.

"சேது நீ சொன்ன வார்த்தை அமுத மொழிடா.நாம் எதை வெறுக்கிறோமோ அதையே விரும்ப நேரும்.நாம் யாரை வெறுக்கிறோமோ அவரே நமக்கு உதவுவார். என்றாயே அது ரொம்ப சரி.அந்த சிகப்புக் குல்லாயை எவ்வளவு ஏளனமாய் நினைத்தேன் அதுதான் எனக்கு வழிகாட்டியாய் இருந்தது. அந்த நண்பனும் எனக்கு உற்ற நண்பனாய் இருந்து துணை புரிந்தான்.

சேது புன்னகையுடன்"இதைத் தான் தெய்வச் செயல் என்பது.தெய்வத்தின் துணையால்தான் இத்தகைய துன்பங்களிலிருந்து நாம் விடுபடுகிறோம். அதனால்தான் தெய்வமே துணை என்று பெரியவங்க சொல்வாங்க.இனிமேலாவது தெய்வத்தை நம்பு."என்றான்.

ரவி வேகமாகத் தலையை அசைத்தான் பாதி மனத்தோடு.

----------------------------------------------------------------------------------------------------------------------------------

----------- 





சனி, 24 ஏப்ரல், 2021

nalladhe sei

நல்லதே செய் 

குமாரசாமி ஒரு தொழிலாளி.அந்த நகரத்திலுள்ள தொழிற்சாலையில் வேலை செய்து வந்தான்.அவனுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்.சின்னவன் ராமு ஒழுங்காகப் பள்ளி சென்று படித்து வந்தான்.பெரியவன் வேலு படிப்பில் நாட்டமில்லாமல் அவ்வப்போது ஊர் சுற்றுவான். 

குமாரசாமி எவ்வளவு சொன்னாலும் அவன் திருந்தவேயில்லை. ஒருநாள் மூன்று பெரும் நிலா வெளிச்சத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.அப்போது குமாரசாமி 

மெதுவாகத் தன பெரிய மகன்மேல் கையை வைத்தான் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்த வேலு அவன் அப்பா அன்பொழுகப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தான். சற்றே புன்னகையுடன் 'என்னப்பா?' என்றான் அதே அன்புடன்.

"நான் ஒண்ணு  சொன்னால் கேட்பியா/?"

சொல்லுங்கப்பா"

"நீ பள்ளிக்கூடம் போ ய் படிக்காட்டியும் பரவாயில்லை.அறிவாளியா ஆகாட்டியும் பரவாயில்லை.எல்லாருக்கும் நல்லதே செய்வேன்னு மனசால நினைச்சுக்கோ.அந்த சந்திரன் சாட்சியா அப்பா கேக்குறேன் எல்லாருக்கும் நல்லதே செய் சரியா?"

அப்பாவின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும் தலையைப் பலமாக ஆட்டிய வேலு "கண்டிப்பா எல்லாருக்கும் நல்லதே செய்வேம்ப்பா"என்றான். 

மறுநாள் வழக்கம்போல ஊர் சுற்றிவந்தான் வேலு.அன்று சனிக்கிழமை. பள்ளி பாதி  நாள் தான். மாணவர்கள் பேரிரைச்சலோடு வீட்டுக்கு ஓடினர்.அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு ஒரு மரத்தடியில் நின்றிருந்தான் வேலு.அப்போது ஆறு வயதுடைய சிறுவன் ஒருவன்  ஒரு கல் தடுக்கிக் கீழே விழுந்தான்.

அவன் கால் கட்டைவிரல் பெயர்த்துக் கொண்டு ரத்தம் வடிய உட்கார்ந்து அழுது கொண்டிருந்தான். பழைய வேலுவாக இருந்தால் நமக்கென்ன என்று போயிருப்பான். இப்போது அப்பாவிடம் சொன்னது நினைவுக்கு வந்தது.உடனே அந்தச் சிறுவனிடம் ஓடி தன்னிடம் இருந்த கைக்குட்டையைக் கட்டிவிட்டான்.அந்தச்சிறுவனைத் தன் தோளி ல் உப்புமூட்டை சுமந்தபடி அவன் வீட்டுக்குச் சென்றான்.அந்தச் சிறுவனின் அம்மா அவனைத் தூக்கிவந்த வேலுவுக்கு பலமுறை நன்றி சொன்னாள் சற்றே வெட்கப்பட்ட அவனை அமரவைத்து வடையும் காப்பியும் கொடுத்து உபசரித்தாள் 

               ஒரு சிறு உதவிக்கு இத்தனை உபசரிப்பா என ஆச்சரியப்பட்டான் வேலு.இரண்டு நாட்கள் சென்றன.வேலைமுடிந்து  தொழிலாளிகள் வந்து கொண்டிருந்தனர்.குமாரசாமியும் நண்பர்களுடன் பேசியபடி வந்து கொண்டிருந்தார்.வழியில் வேலுவை ஒரு பெரியவர் கையைப் பிடித்துக் கொண்டு திட்டிக் கொண்டிருந்தார். இந்தக் காட்சியைப் பார்த்த குமாரசாமி ஊர்சுற்றும் மகன் என்ன தவறு செய்தானோ என்றபடி அருகே சென்றார்.அவர் வாய் திறக்குமுன் அங்கே வந்த ஒரு அம்மாள் பெரியவரிடமிருந்து வேலுவைப்பிரித்துதான் பிடித்துக் கொண்டாள் 

."என்ன தவறு செய்தான் என்று திட்டுகிறீர்கள்?"

என் பேரனைப் போட்டு அடித்து விட்டான்"என்றார் அந்தப் பெரியவர்.குமாரசாமி பேசாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

"அய்யா, பரோபகார சிந்தனையுள்ள இந்தப் பையனைப் பற்றித் தெரியுமா உங்களுக்கு. என் மகன் அடிப்பட்டபோது பள்ளியிலிருந்து உப்புமூட்டை சுமந்து வீட்டுக்கு கூட்டி வந்தவானாய்யா இவன். இவன் உங்கள் பேரனை அடித்தானா.நம்ப முடிபியலையே"என்றால் கோபமாக.பயத்துடன் நின்றிருந்த  வேலு அப்பாவைப் பார்த்ததும் அருகே வந்து நின்றான்.பெரியவர் "அவன் அடித்தானா இல்லையா கேளுங்கள்' என்றார்."நான் கையை  ஓங்கினேன்.அதற்குள் அடித்ததாகப் பொய் சொல்லி அழுதுகொண்டே ஓடிவிட்டான்.

பெரியவர் கோபமாக "பார்த்தீர்களா. பொய் பொய் சொல்கிறான்"என்றார். 

அந்த அம்மாள் வேலுவிடம்,"வேலு என்ன நடந்தது சொல்லப்பா"என்றாள் .

வேலு அப்பாவைப் பார்த்தபடி "'அப்பா, எல்லாருக்கும் நல்லதே செய்ய வேண்டும் என்று நீங்கள் சொன்னதை நான் மறக்கவில்லை.வழியில் ஒரு பூனை இரண்டு குட்டிகளுக்குப் பால் கொடுத்துக் கொண்டு மறைவாகப் படுத்திருந்தது. அதைக் கல்லால் அடிக்கப் போனான் ஒரு பையன் அவனை நான் அடிப்பது போல் கையைத் தூக்கிக் கொண்டு துரத்தி விட்டேன். அவன் அழுதுகொண்டே தன தாத்தாவிடம் நான் அடித்ததாகப் பொய் சொல்லி விட்டு ஓடிவிட்டான் இந்தப் பெரியவரும் என்னை எதுவும் கேட்காமல் அடிக்கப் பார்த்தார்.என்றான்.

அந்த அம்மாள். "வேலு சொல்வது   உண்மையாகத்தான் இருக்கும் மிகவும் நல்லவன் எல்லோருக்கும் நன்மையே செய்யும் பண்புள்ளவன்.பெரியவரே  இப்படி அவசர படலாமா?"என்றபோது மன்னிப்புக் கேட்டவர் அங்கிருந்து தலை குனிந்தபடி சென்றார்.அந்த அம்மாள் குமாரசாமியிடம்"உங்கள் மகனா?"என்றபோது குமாரசாமி தலையசைத்தார்.

              நல்ல பண்புள்ள பையன் நீங்கள் ரொம்ப புண்ணியம் செய்தவர்.என்றுசொன்னவள் தன மகனை வேலு தூக்கிக் கொண்டு வந்த கதையைச் சொன்னாள்.செய்த உதவியை யாரிடமும் சொல்லாமல் இருக்கும் அவன் பண்பைப் பாராட்டுவதாக அந்த அம்மாள் சொன்னபோது மிகவும் பெருமைப் பட்டார்.ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன மகனைச் சான்றோன் எனக் கேட்ட அந்த தந்தை. 

வெள்ளி, 26 பிப்ரவரி, 2021

(thodarchi) magizhchi irukkum idam.

சிந்தனையில் ஆழ்ந்திருந்த தோழியின் தோளைத் தட்டி எழுப்பினாள்  கலா. 

"ரொம்ப யோசிக்காதே.நானே சொல்றேன்.நாம ஆசைப் பட்டதைக் கேட்கும்போது அப்பாகிட்டயோ அம்மாகிட்டயோ பணம் இல்லேன்னா அவங்க நம்ம குழந்தை கேட்டதை வாங்கி குடுக்க முடியலைன்னு நெனச்சு வருத்தப் படுவாங்க  இல்லையா?அந்த வருத்தம்தான் கோபமா நம்ம மேலயே திரும்புது நாம் பிடிவாதம் பிடிக்கும்போது இன்னும் கோபம் அதிகமாகுது. அதனால நம்ம கிட்ட இருக்கிறதையே உசத்தியா நெனச்சு திருப்தி பட்டு சந்தோஷமா இருந்தோமுன்னா அவங்களும் நிம்மதியாவும் சந்தோஷமாகவும் இருப்பாங்க இல்லையா?"

ஆமாம் என்பதைப் போல தலையசைத்தாள் சரளா.ஏதோ புரிந்ததைப் போல அவள் முகம் சற்றே புன்னகையைக் காட்டிற்று.கலா தொடர்ந்தாள் 

"இப்போ எங்க வீட்டுக்கு வந்தியே எங்கம்மா எப்படி சிரிச்சுக்கிட்டு இருந்தாங்க அதைப் பார்த்து நமக்கும் சந்தோஷமா இருந்ததில்லையா. என்ன காரணம் இருக்கிறதையே உசத்தியா நினைக்கிற பழக்கம்தான்.சரி வீட்டுப் பாடம் முடிச்சிட்டேன். நான் வீட்டுக்குப் போறேன்  நாளை க்குப் பார்க்கலாம்."என்றபடியே புத்தகங்களை பையில் போட்டுக் கொண்டு ஓடினாள் கலா.

அந்தப் பெண்ணின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள் சரளாவின் பெற்றோர்.பெருமூச்சுடன் தன வீட்டுக்குள் ஓடினாள் சரளா."

"மெதுவா வாம்மா, பட்டுப் பாவாடை தடுக்கிடப் போகுது "என்றார் அப்பா  சிரித்தபடியே.

"ஆமாண்டி பளிங்குத்தரையில பார்த்து நட  வழுக்கி விட்டுடும் " என்றபடியே புன்னகையுடன் வந்தாள்  அம்மா. ஒரு நிமிடம் திகைத்து நின்ற சரளா மறுகணமே கலகலவென்று சிரித்தாள் அவளுடன் சேர்ந்து அவள் பெற்றோரும் சிரித்தனர். மகிழ்ச்சி இருக்கும் இடம் மனம்தான் என்பதைப் புரிந்து கொண்ட அந்த குடும்பத்தினர்  இனி என்றும்  மகிழ்ச்சியுடன் இருப்பார்கள் என்பதை சொல்லவும் வேண்டுமா?

புதன், 3 பிப்ரவரி, 2021

magizhchchi irukkum idam.

 மகிழ்ச்சி இருக்கும் இடம்.

                  கலா ஆறாம் வகுப்பில் படிப்பவள் .அவள் தோழி சரளா வும் அவளு டன் படித்து வந்தாள் .கலா எப்போதும் சிரித்த முகத்துடன் சந்தோஷமாகப் பேசுவாள்.அதைப் பார்த்து சரளா மட்டுமல்ல மற்ற சிறுமிகளும் அவளிடம் பேசவும் பழகவும் ரொம்பவும் விரும்பினர்.

                  கலா சரளா இருவரின் வீடும் ஒரே தெருவில் இருந்ததால் பள்ளியை விட்டு சேர்ந்தே வருவார்கள்.முதலில் சரளா  வீட்டுக்குச் சென்று விடுவாள் பிறகு தெருக் கோடியில் உள்ள தன வீட்டுக்குச் செல்வாள் கலா.

                  தன வீட்டுக்குச் செல்வதையே பிடிக்காமல் எரிச்சலோடு வீட்டினுள்ளே நுழைவாள்.அவள் மனம் கலா எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறாள்.அவள் வீட்டில் அவளுக்கு எல்லாம் இருக்கிறது.ஆடம்பரமாக இருப்பாள். அதுதான் இப்படி குதித்துக் கொண்டே வீட்டுக்குப் போகிறாள். வீட்டில் சிற்றுண்டி தயாராக இருக்கும்.என்று முணுமுணுத்தவாறே வீட்டில் நுழைவாள் சரளா.

        அவள் நினைத்தது போலவே அவள் அப்பா கடுகடுவென்ற  முகத்துடன் பேப்பரில் முகம் புதைத்து உட்கார்ந்திருப்பார். அம்மா பாத்திரங்களை உருட்டியபடி ஏதோ புலம்பிக் கொண்டிருப்பாள்.

இதில் சிரிப்பது எங்கே? பேசாமல் கைகால் கழுவிக்கொண்டு புத்தகத்துடன் உட்கார்ந்து விடுவாள்.பாவம் சிறுமி.அம்மா அப்பாவின் கோபத்துக்கும் அவள் ஆளாவதும் உண்டு.

               ஒருநாள் கலாவும் சரளாவும் பள்ளியை விட்டு வீட்டுக்கு வழக்கம்போல வந்துகொண்டிருந்தனர்.அப்போது கலா சரளாவைத் தன வீட்டுக்கு வந்து வீட்டுப் பாடங்களை முடித்துச் செல்லலாம் என்று அழைத்தாள் . சரளாவுக்கு தன வீட்டுக்குப் போவதை விட கலாவின் வீட்டுக்குப் போய் மகிழ்ச்சியாக இருக்கலாமே என்று தோன்றியது.  பள்ளி ஒரு பீரியட் முன்னதாகவே  விட்டு விட்டதால் இருவரும் மகிழ்ச்சியுடன் கலாவின் வீட்டுக்குப் பறந்தனர்.

               கலாவின் வீட்டை கற்பனையில் பார்த்து மகிழ்ந்தாள்.அருகே போகப் போக எதையும் காணோம். சின்ன சந்து அதில் ஒரு சந்து. சுவரோடு ஒட்டிய ஒரு கதவு. அதைத் திறந்து உள்ளே போனவள் தயங்கி நின்ற சரளாவைக் கையைப் பிடித்து வா என அழைத்தா ள் "

"இவங்கதான் என் அம்மா. அம்மா இது சரளா  என் தோழி என் வகுப்பிலேயே படிக்கிறாள்."சிரித்த முகத்துடன் அந்த அம்மாள் ஒரு கைப் பிடி வேர்க்கடலையை இருவருக்கும் பகிர்ந்து கொடுத்தாள் அந்த அன்பும் அந்த பிடி வேர்க்கடலையும் அமிர்தமாக இருந்தன சரளாவிற்கு.

எத்தனை ஏழ்மையில் இருந்தாலும் மலர்ந்து முகமே வாழ்வின் மகிழ்ச்சி என்பதைக் கண்டாள் .மனநிறைவோடு தன இல்லம் வந்தா.ள் 

                   ஒருவாரம் கடந்தது.கலாவின் அம்மாவெளியே போவதாகச் சொன்னதால் கலா சரளாவின் இல்லத்திற்குச் சென்றாள் இருவரும் சேர்ந்து வீட்டின் திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அன்று அதிசயமாய் சரளாவின் வீடு அமைதியாக இருந்தது. தன தோழி எதிரே எங்கே தன பெற்றோர் சண்டையிடுவார்களோ என்று அஞ்சியபடியே இருந்தவள் அவர்கள் அமைதி கண்டு நிம்மதியடைந்தாள் 

மெதுவாக சரளா உள்ளே எட்டிப் பார்த்தாள்.அப்பா ஏதோ ஆபீஸ் வேலையாக இருந்தார். அம்மா காய் நறுக்கிக் கொண்டிருந்தாலும் இருவரின் கவனமும் 

அவரவர் காரியத்திலேயே இருத்தது.

"ஏய் கலா, உன்னால எப்படி சிரிச்சுகிட்டே இருக்க முடியுது?என்னால முடியலையே"என்றாள்  மெதுவாக.

"எல்லாம் மனசுதான் காரணம் நாம சிரிச்சுகிட்டே இருந்தா நம்மைப் பார்க்கிறவங்களுக்கும் மனசு லேசாயிடும்.திட்டணும்னு நெனைச்சாக்கூட திட்டத் தோணாது."

"அப்படியா?"

"ஆமாம். நம்ம அப்பா அம்மாவுக்கு ஏன் கோபம் வருது சொல்?"

சற்றே சிந்தித்தாள் சரளா.

       (சிந்தனை தொடர்கிறது.)

வெள்ளி, 25 டிசம்பர், 2020

kal thandha maatram.

                                       கல் தந்த மாற்றம்.

 ஒரு சிறு கிராமத்தில் எட்டாம் வரையே உள்ள பள்ளிக்கூடம் இருந்தது அந்த கிராமத்துச் சிறுவர் சிறுமியர் அந்தப் பள்ளியில் தான் படித்து வந்தனர்.சோமுவும் சுதாகரும் அந்தப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் படிக்கும் சிறுவர்கள். சோமு சற்று துடுக்குக்காரன். பிறர் துன்பப பட்டால் பார்த்துச் சிரிக்கும் பண்புடையவன்.

     ஆனால் சுதாகரோ அவனுக்கு நேர்மாறானவன். பிறருக்கு உதவும் பண்புள்ளவன்.சோமுவின் குணத்தை அறிந்த பிற மாணவர்கள் அவனிடம் அதிகமாகப் பழகுவதில்லை.ஆனால் சோமுவை எப்படியும் நல்லவனாக மாற்றவேண்டும் என்பதற்காகவே அவனிடம் நட்புப் பாராட்டினான் சுதாகர்.சுதாகரிடம் நட்புடன் பழகவேண்டும் என்று நினைப்பவர்கள் கூட சோமுவின் அருகாமையில் அவனிடம் பேசவே பயப்பட்டார்கள்.

   அன்று நண்பர்கள் இருவரும் பள்ளி விட்டவுடன் பேசியவாறே நடந்து வந்துகொண்டிருந்தனர்.அப்போது சுதாகர் சோமுவின் கையைப் பிடித்து நிறுத்தினான்.அவன் ஏன் என்று கேட்குமுன் ஓடிப்போய் எதிரே கிடந்த பெரிய கல் ஒன்றைத் தூக்கி ஓரமாக வைத்தான்.அதைப் பார்த்த சோமு சிரித்தான். "ஏண்டா சுதா அதுபாட்டுக்கு வழியில கிடந்துட்டுப் போகுது அதைத் தூக்கி ஓரமா போடாட்டா என்னடா?"

"அப்படியெல்லாம் இருக்கக்கூடாது சோமு.யாராவது கவனமில்லாமே அதிலே இடிச்சுக்கிட்டா பாவமில்லே.அதனாலேதான் தூக்கிப் போட்டேன், "

"நீயொரு பைத்தியக்காரன்டா வேலெமெனக்கிட்டு பெரிய உதவி செய்யிறாராம்".என்று சொல்லிச் சிரித்தான்.

"சரி சரி வா. உனக்கே ஒருநாள் தெரியும்."என்றவாறு சோமுவின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு ஓடினான் சுதாகர்.

            நாட்கள் கடந்தன.ஒருநாள் திடீரென்று சோமுவின் தாத்தா பம்பாயிலிருந்து வந்திருந்தார்.வந்தவர் சோமுவுக்குப் பரிசாக சைக்கிள் ஒன்றைக் கொண்டு வந்திருந்தார்.சோமுவுக்கு ஏக சந்தோஷம் நாள் முழுவதும் அதிலேயே சுற்றிக் கொண்டிருந்தான்.சுதாகரைக் கூட பெருமையாகப் பார்த்துக் கொண்டே சைக்கிளில் பறந்து சென்றான்.மற்ற நண்பர்கள் சுதாகரிடம் நெருங்கி "என்னடா சுதா, உன்னைக் கூட கவனிக்காமல் போகிறானே.நீதான் அவனது நெருங்கிய நண்பன்."என்றபோது சுதாகர் சிரித்துக் கொண்டே அவர்களுடன்  வேறு ஏதோ பேசிக்கொண்டு சென்றான்.

               இரவு எட்டுமணி இருக்கும். சுதாகர் படித்துக் கொண்டிருந்தான்.வாசலில் சைக்கில்மணி சத்தம் கேட்டது.சோமுதான் சைக்கிளில் போகிறான் தன வீட்டுமுன் வேண்டுமென்றே மணி அடிக்கிறான் எனப் புரிந்து கொண்டான்.மெல்லப் புன்னகைத்து விட்டுப் பாடத்தில் கவனம் செலுத்தினான்.

           சற்று நேரத்தில் தெருவில் ஒரே அமர்க்களம் ."ஓடு கார் கொண்டு வா, "இல்லை ஆம்புலன்சுக்கு போன் பண்ணு ." "தண்ணி கொண்டாப்பா," "காத்து விடுங்க"என்று பல குரல்கள்.ஓடினான் சுதாகர்.கூட்டத்தின் நடுவே அடிபட்டுக் கிடந்தான் சோமு.அவனை யாரும் நெருங்கமுடியவில்லை.அவன் அருகே சைக்கிள் உருத்  தெரியாமல் உடைந்து கிடந்தது.

ஒருவாரம் கடந்தது.சுதாகர் மெதுவாக சோமுவின் வீட்டுக்குச் சென்றான்.அவனைப் பார்த்து புன்னகையுடன் வரவேற்றான் சோமு

திடீரென்று சுதாகரின் கையயைப் பற்றிக்கொண்டு கண்களில் நீர் மல்கக்  கூறினான்.. "சுதா,ஒருவாரமா கைதி மாதிரி இருக்கேண்டா.ஏண்டா யாருமே என்னைப்  பார்க்க வரலே?"

"அது இருக்கட்டும் உனக்கு எப்படி அடிபட்டது?நீதான் சைக்கிள்  நல்லா ப்ராக்டிஸ் பண்ணியிருந்தாயே?"

"எல்லாம் உன் பேச்சைக் கேட்காததால் வந்த வினை."

"என்னடா சொல்றே?"

"ஆமாண்டா.எல்லார்கிட்டயும் சண்டை போடாதே. அன்பா இருஅப்படின்னு நீ சொல்லும்போதெல்லாம் நான் அலட்சியம் செய்தேன் அதான் என் மேலே யாருக்கும் பிரியமில்லாம போச்சு.நீ கூட என்னை  பார்க்க வரலே" என்றான் தேம்பியபடியே.

"அதெல்லாம் இல்லேடா.நீ ஆஸ்பத்திரியிலிருந்து வந்திருக்கே.உனக்கு ஒய்வு தேவை அதனாலதான் நானும் மற்ற நண்பர்களும் வரலே.உன்னைப்பற்றி 

நா ங்கள் பேசிக்கொண்டுதான் இருந்தோம். அதெல்லாம் சரி உனக்கு எப்படி அடிபட்டது?"

தலையைக் குனிந்தவாறே சொன்னான் சோமு."நான் உன் வீட்டு முன்னாலே பெல் அடிச்சுட்டு வேகமா சைக்கிளில் போய் க் கொண்டிருக்கும் பொது வழியில் ஒரு பெரிய கல் கிடந்தது. அதை எடுத்து  போடணும்னு எனக்குத் தோணி னாலும் என் பின்னால் வரும் கார் அதிலே ஏறி இறங்கும் குலுங்கும். உள்ளே இருப்பவங்க எப்படி கூச்சல் போடுவாங்கன்னு வேடிக்கை பார்க்க நினைச்சேன். அதனால சைக்கிளில் ஒரு சுற்று சுற்றிவிட்டு அதே தெருவுக்கு நான் வந்தேன் நல்லா இருட்டிடுச்சு அதே சமயம் கரண்டும் கட்டாயிடுச்சு..நான் காரைக்காணமேன்னு நினைப்பிலேயே வந்தேன்.திடீர்னு எதிரேஎதன் மேலோ  என் சைக்கிள் டமார்னு  முட்டி மோதி உருண்டது. அவ்வளவு வேகத்திலே நான் ஓட்டிவந்தேன் கண்ணைத் திறக்கும்போது கைகால் தலையிலே கட்டுப் போட்டு ஆஸ்பத்திரியில் கிடந்தேன்."

"எதிலே உன் சைக்கிள் மோதிச்சுன்னு பார்த்தியா?"

"அதாண்டா விதி.நான் தூக்கி ஓரமாய் போடாத அந்தக் கல் மேலயே  ஏறி விழுந்தேன் அதோட அருகிலேயே நின்னுக்கிட்டிருந்த காரின் பின்புறம் மோதி என் சைக்கிளும் ஒடஞ்சுது என் தலை கை  காலும் உடைஞ்சுது."

"இனிமேலாவது தெரிஞ்சுக்கோ மற்றவங்களுக்குத் துன்பம் செய்ய நினைச்சாலே கூட அந்தத் துன்பம் நமக்கே வரும்னு."

"அதுமட்டுமில்லே சுதா, மற்றவர்களிடம் அன்பாயிருந்தால்தான் நம்மிடமும் மற்றவர்கள் அன்பாயிருப்பாங்க.இந்த ஒருவாரத்தில் தனிமையாயிருக்கும்போது  நண்பர்கள் எவ்வளவு தேவைன்னு  நான் புரிஞ்சுக்கிட்டேன். இனி உன்னைப்போல எல்லாரிடமும் அன்பாயிருப்பேன்"

எல்லாம் கல் தந்த  பாடம்டா சுதா."

ரொம்ப சந்தோஷமாயிருக்கு சோமு.  உன் குணம் மாறியதைச் சொல்றேன்.

என்று சொல்லிப் புன்னகைத்தான். நண்பர்கள் இருவரும் கைகோர்த்து மனம் விட்டுச் சிரித்தனர்.

செவ்வாய், 17 நவம்பர், 2020

கண்ணன் பாடல்  

பல்லவி 

கண்ணன் என்னும் போதிலே என்  

எண்ணம் முழுதும் இனிக்குதே.   (கண்ணன்)

அனுபல்லவி 

கண்ணன் குழலோசையில் -புவி 

வண்ண மயமாய்த் தோணுதே      (கண்ணன்)

சரணம் -1

வெண்ணை பால் தயிரிலே அவன் 

கள்ள கதைகள் தெரியுதே 

எள்ளத்தனை போதிலும் -என் 

உள்ளம் மறந்து போகுமோ               (கண்ணன்)

சரணம் -2 

அன்னை தாய் யசோதையின் 

அன்பில் மயங்கி கிடந்தவன் 

ஆயர்பாடி தன்னையே  தன் 

அகத்துள் வைத்துக் காத்த அந்த (கண்ணன் )

                ---------------------------------

சனி, 10 அக்டோபர், 2020

                               ஐயப்பன்  பாடல்.

பல்லவி 

ஐயப்பா சாமி ஐயப்பா -ஐயப்பா 

சரணம் ஐயப்பா 

அனுபல்லவி 

அய்யப்பா உனையென்றும் மறவோம் அய்யா 

மெய்யப்பா நீயே துணை என்றும் அய்யா.--(ஐயப்பா )

சரணம்-1

பாதங்கள் நொந்தாலும் உன் பாதம் பணிவோம் 

பலகாதம் நடந்தே  உன்பதம் காண வருவோம் 

கால் கைகள் துவண்டாலும் உனைப்பற்றி நடப்போம் 

துணைநீயே எனக் கொண்டோம் துணையாக வருவாய்.-(அய்யப்ப)

சரணம்-2

கருமலை ஏறிட துணையாக வருவாய் 

அழுதாவில் மூழ்கிட இணையாக இருப்பாய் 

பதினெட்டுப் படியேறி உனைக்காண  அருள்வாய் 

பதியே   அருள்நிதியே  இனி எனக்கேது குறையே -(ஐயப்பா )

------------------------------------------------------------------------------------------------------------------


புதன், 7 அக்டோபர், 2020

சிறுவர்க்குச் சிறுகதைகள் 1 

                                  வெற்றி தரும் அறிவு  

ஒரு ஊரில் ஒரு சிறுவன் வாழ்ந்து வந்தான்.அவனுக்கு இரண்டு கால்களும் நடக்க முடியாதபடி சிறுத்துப் போயிருந்தன.அவன் பெற்றோர்  இருவருக்கும் வயதானதாலும் வறுமை காரணமாகவும் கண்கள் சரியாகத்  தெரிவதில்லை. மூவரும் ஒரு குடிசையில் வாழ்ந்து வந்தனர்.ஆனால் நடக்க முடியாத தங்கள் மகனுக்கு நடராஜா என்று பெயர் வைத்து அன்போடு அழைத்து வந்தனர்.

      தினமும் தங்கள் மகனை ஒரு கூடையில் அமரவைத்து சுமந்து  கொண்டு கோயில் வாசலுக்கு வருவார்கள் அங்கு அமர்ந்து கொள்வார்கள்.கோயிலுக்கு வருபவர்கள் தரும் பொருளையும் கோயிலில் தரும் பிரசாதத்தையும் வைத்துக் கொண்டு காலம் கழித்தார்கள்.

       தினமும் கோயில் வாசலில் அமர்ந்து கொண்டு நடராஜன் கோபுரத்தையே பார்த்துக் கொண்டு இறைவனை தியானித்தபடி இருப்பான்.கிட்டத்தட்ட தவம் என்றே சொல்லலாம்.இப்படியே சில ஆண்டுகள் ஓடிவிட்டன.

இப்போது சிறுவன் நடராஜன்  வாலிபனானான்.அவனது பெற்றோருக்கு கண்கள் சுத்தமாகக் குருடாகி விட்டன.ஆனாலும் பசிக்கிறதே என்ன செய்வது.குடிசை வாசலில் அமர்ந்து கொண்டு வருபவரிடம் கையேந்தியபடி அமர்வார்கள். இரக்க குணமும் தயாள சிந்தையும் கொண்டவர்கள் போடும் சிறிய பொருளை வைத்துக் கொண்டு அரைவயிற்றுக் கஞ்சி குடித்து வாழ்ந்து வந்தனர்.

           ஒருநாள்.அன்று பௌர்ணமி. முழுநிலவு பளீரென்று ஒளிவீசிக் கொண்டிருந்தது.இரவு வெகு நேரம் ஆகியிருந்தது.குடிசை வாயிலில் அமர்ந்து கொண்டிருந்த நடராஜன் அந்த நிலாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.அவன் மனம் கற்பனை செய்தது.

பெரிய மாளிகையின் மேல்மாடம்.நடராஜன் கால்களை வீசி நடை போட்டுக் கொண்டிருந்தான்.அருகே அவன் மனைவி தன மகனுக்கு தங்கத்  தட்டில் பால்சாதம் ஊட்டிக் கொண்டிருக்கிறாள். நடராஜனின் பெற்றோர் குழந்தைக்கு நிலவைக் காட்டி மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.அந்த இன்பகரமான சூழலை நினைத்தபடி அங்கேயே உறங்கி விட்டான்.

          நடுஇரவு.அவன் இத்தனை நாட்களாக கோபுரத்தைப் பார்த்து செய்த தவத்துக்குப் பலன் தர இறைவன் திருவுளம் கொண்டார்.நடராஜனின் கனவில் தோன்றி பக்தா, உன் பக்திக்கு மிக்க மகிழ்ச்சி.உனக்கு வரமளிக்கவே வந்தோம்.வேண்டும் வரம் கேள்."என்றபோது உடல் நடுங்க வாய் குழற கைகூப்பி நின்றான் நடராஜன்.

          "தயங்காதே, நீ வேண்டும் வரம் கேள்."

நடராஜன்"இறைவா ,முதலில் என் "       என்று இழுத்தான்.

குறுக்கிட்ட இறைவன்,"அப்பனே, நிறுத்து முதல் இரண்டு என்பதெல்லாம் கிடையாது.ஒரே வரம்தான் தரமுடியும் எதுவேண்டுமோ கேள்."என்றார்.

நடராஜன் சற்றே யோசித்தான்."ஸ்வாமி, மேல்மாடத்தில் என்மனைவி என் மகனுக்குத் தங்கத்  தட்டில் சோறு ஊட்டும்போது அதை  என் பெற்றோர் மகிழ்ச்சியுடன் பார்ப்பதைஅங்கே  நடைபயிலும் நான் கண்டு மகிழவேண்டும்."

இந்த வரத்தின் மூலம் செல்வம் சமூக அந்தஸ்து பெற்றோருக்குப் பார்வை தனக்கு கால்கள் என்ற எல்லா வரங்களையும் ஒரே வரத்தில் கேட்டு விட்டான் நடராஜன்.ஒரு நிமிடம் இறைவன் திகைத்தார் பின்னர் கடகடவென சிரித்தார்."அப்பனே உன்திறமையை சோதித்தேன் நீ வென்றுவிட்டாய்.நீ நினைத்தபடி வரம் தந்தோம்." என்று கூறிய இறைவன் மறைந்தார்.

சமயோஜித அறிவு இருந்தால் யாரையும் வென்று விடலாம்.என்ற உண்மையை தன கனவு மூலம் அறிந்து கொண்டான் நடராஜன். இனி அவன் தன்  இயலாமையை மறந்து  விட்டு அறிவு பூர்வமாக சிந்தித்து வாழ்வில் முன்னேறும் வழியைத் தேடுவான் அல்லவா?அதில் அவன் வெற்றியும் பெறுவான் என்று நம்புவோம்.








ஞாயிறு, 20 செப்டம்பர், 2020

murugan paadal

                      ஸ்ரீ முருகன் பாடல்  

பல்லவி 

மலைமீது விளையாடும் மால்மருகா புள்ளி 

மயில் மீது விரைந்தோடி வா முருகா -(மலை )

அனுபல்லவி 

எழில் தெய்வ மகளுடனும் குறவள்ளி துணையுடனும் 

எளியேன் என் குறைதீர்க்க வாமுருகா -(மலை)

சரணம் -1

குன்றேறி நின்ற எங்கள் திருக்குமரா -பறங்

குன்றத்தில் காக்கின்ற அருட்குமரா 

பழமுதிர்சோலையின் மணவாளா -சுவாமி 

மலைதன்னில் அருள்கின்ற தவசீலா -(மலை)

சரணம்-2

கனி தந்து அவ்வைக்கு அருள்செய்தாய் -மாங்

கனிக்காக உலகத்தை வலம் வந்தாய் 

கன்னல்  தமிழாக உருவெடுத்தாய் -எங்கள் 

கந்தா நீ அழகன் எனப்பெயர் கொண்டாய் (மலை)

                                -----------------------------


வியாழன், 20 ஆகஸ்ட், 2020

chuttikadhai.blogspot.com

 மாணவச் செல்வன் 

Inbox
x

Rukmani Seshasayee rukmani68sayee@gmail.com

18 Aug 2020, 13:24 (2 days ago)
to rukmani68sayee.avva

அனைவரும் ஒன்றும் புரியாமல் ஆசிரியர் பின் சென்றனர்.அனைவரையும் நிற்கச் சொன்ன துரோணர் துரியோதனனை மட்டும் அழைத்துக் கொண்டு மரத்தின் மறுபக்கம் சென்றார்.அங்கு தரையில் ஒரு மந்திரத்தை எழுதிக் காட்டி படிக்கச் சொன்னார்.துரியோதனனும் அந்த மந்திரத்தைப் படித்துவிட்டு குருவைப் பார்த்தான்."இப்போது ஒரு அம்பை இந்த மரத்தின் உச்சியைப் பார்த்து விடு" என்று கட்டளையிட்டார்.
துரியோதனனும் ஒரு அம்பை எடுத்து மரத்தை நோக்கி விட்டான்.என்ன ஆச்சரியம் அந்த அம்பு எங்கு மறைந்ததோ ஆனால் மரத்தின் ஒவ்வொரு இலையிலேயும் ஓட்டை விழுந்திருந்தது.
"துரியோதன, இந்த அஸ்திரத்தை நீ படைக்களத்தில் பிரயோகித்தால்  ஆயிரக்கணக்கான வீரர்களை இது  பலிவாங்கும் "
துரியோதனனுக்கு ஒரே மகிழ்ச்சி.அர்ச்சுனனுக்குத் தெரியாத ஒரு அஸ்திர பிரயோகம் தனக்கு மட்டும் தெரிந்து விட்டது என அறிந்து மிக்க மகிழ்ச்சி கொண்டான். மிக்க நன்றி குருவே என்று அவர் கால்களில் பணிந்தான்.
                  அனைவரையும் அழைத்துக் கொண்டு ஆற்றுக்குப் போனார் துரோணர்..சற்று நேரத்தில் அங்கு வந்த அர்ச்சுனன் அவரிடம் மேலாடையை பணிவுடன் அளித்தான்.அனைவரும் நீராடிப் புறப்பட்டனர்.
வரும் வழியில் அதே ஆலமரத்தடிக்கு வந்தனர். துரோணர் சற்று நின்று அந்த மரத்தை நிமிர்ந்து பார்த்தார்.துரியோதனனும் பார்த்தான்.என்ன ஆச்சரியம் ஒரே ஓட்டை இருந்த இலைகளில் இப்போது இரண்டாவது ஓட்டை விழுந்திருந்தது.இது எப்படி சாத்தியமாயிற்று.குரு  தனக்கு மட்டும்தானே இந்த அஸ்த்திரத்தைக்  கூறினார். சற்றே சந்தேகத்தோடு அவரைப் பார்த்தான் துரியோதனன்.
அப்போது துரோணர் அர்ச்சுனனைப் பார்த்தார்.அவரை வணங்கிய அர்ச்சுனன்,"ஸ்வாமி தங்களின் வஸ்த்திரத்தை எடுத்துக் கொண்டு நான் வரும்போது இந்த ஆலமரத்தடியில் பல காலடித் தடங்களைப்பார்த்தேன் அதோடு இரண்டு பேரின் காலடிகள் மட்டும் தனியே போயிருப்பதைப் பார்த்து அதன் பின் சென்றேன்.அங்கே ஒரு மந்திரம் கீழே எழுதியிருப்பதைப் பார்த்தேன் அதோடு மரத்திலுள்ள ஆயிரக் கணக்கான இலைகளிலும் ஓட்டை விழுந்திருப்பதையும் பார்த்தேன்.
இது ஏதோ அஸ்திரம்தான் என்று புரிந்து கொண்டேன்.அதை நானும் பிரயோகித்துப் பார்த்தேன்."
"அப்படியானால் என் மேலாடையைக் கீழே வைத்துவிடட்டாயா?"
"இல்லை குருவே, இந்த மேலாடையை  ஆகாயத்தில் தூக்கிப் போட்டேன் அது மேலே சென்று திரும்பி கீழே விழுவதற்குள் இந்த அஸ்திரத்தைப் பிரயோகித்துவிட்டேன் தங்களின் உத்தரீயமும் கீழே விழாமல் கைகளில் தாங்கி கொண்டேன்.என் அஸ்திர பிரயோகம்தான் இலைகளில் இரண்டாவது ஓட்டை.முதலில் இருக்கும் ஒட்டையைப் போட்டவர் யாரென்று அறியமாட்டேன் ஸ்வாமி.".
மாணவர்களே பார்ப்பதையெல்லாம் குற்றமில்லாமல் கற்று மனதில் நிறுத்திக் கொள்பவனே உண்மையான மாணவன் தனக்கு உகந்தவை என்று தேர்ந்தெடுத்துக் கற்றுக் கொள்ளும் 
பண்பு யாரிடத்தில் உள்ளதோ அவனே உண்மையான மாணவச் செல்வன்.அர்ச்சுனன் உண்மையான மாணவன்.அவன் திறமைசாலி என்பதற்கு இதைவிடச் சான்று தேவையில்லை " என்று முடித்தவர் துரியோதனனைப் பார்த்து ஆசிரியர் காட்டிய வழியைப் பின்பற்றி தாங்களாகவே முனைந்து கற்பதே அறிவு. இதை உணர்ந்து கொண்டாயா துரியோதன "என்றார் துரியோதனனும் அதை ஒப்புக் கொண்டவன்போல் தலைகுனிந்து நின்றான்.
ராமசாமி கதையை முடித்தார்.
"தெரிந்து கொண்டாயா பாலு.ஆசிரியர் சொல்லிக் கொடுப்பார். அதை  நல்ல முறையிலே மீண்டும் மீண்டும் படித்துப் புரிந்து கொள்ளவேண்டியது மாணவன்  கடமை.அவனைத்தான் மாணவச் செல்வன் என்று ஆசிரியர்கள் சொல்வார்கள் புரிந்ததா?"என்றவாறு படுத்துக்க கொண்டார். "சரிப்பா நானும் இனி அருச்சுனனைப் போலவே படிப்பேன். எல்லாவற்றையும் புரிந்துகொண்டு அறிவை வளர்த்துக் கொள்வேன்."என்றான் உறுதியோடு.






 
ருக்மணி சேஷசாயி



 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com 

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

 மாணவச்  செல்வன் 


             பள்ளிக்கூடத்தில் கொடுத்த மதிப்பெண் பட்டியலைத் தன அப்பாவிடம் காட்டியபடி நின்றான் பாலு. அதைப் பார்த்த ராமசாமி சற்றே கோபம் கொண்டார்.பாலுவை கோபமாகப் பார்த்தார்.சிணுங்கியபடியே பேசினான் பாலு.

"அந்த வாத்தியாரு நல்லாவே சொல்லிக் குடுக்கலேப்பாஅதான் "என்றவனை இடைமறித்துப் பேசினார்."ஏண்டா நீ கவனிக்காமே வாத்தியாரு மேலே பழி போடாதே உனக்கு முன்னாலே நூறு மார்க் வாங்கியவனுக்கெல்லாம் வேறே வாத்தியாரா பாடம் சொன்னாரு இல்லேல்ல."

தலைகுனிந்து நின்றான் பாலு."சரி சரி கவனித்து ப் படி.அடுத்தமுறை நல்ல மார்க்கோட வா.".என்றவர் வெளியே சென்று விட்டார்.

அன்று இரவு படுத்தபடி அப்பாவுடன் பேச்சுக்கு கொடுத்தான். அப்பா ஒரு கதை சொல்லுங்கள் என்றான்.

 ராமசாமியும் படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தார்.அவர் கதைசொல்லப்போவதை அறிந்துகொண்ட பாலுவின் தம்பியும் அருகே வந்து அமர்ந்து கொண்டான்.

கதைசொல்ல ஆரம்பித்தார் வீராசாமி.மஹாபாரதத்தில் பாண்டவர்கள் அஞ்சுபேர் கௌரவர்கள் நூறுபேர்.இவங்க எல்லாருக்கும் துரோணர் அப்படிங்கற முனிவர்தான் பாடம் சொல்லித் தருகிற வாத்தியார்.பாண்டவர்களுக்கு தருமன் மூத்தவன். கௌரவர்களுக்குத் துரியோதனன் மூத்தவன்.இ ந்த துரியோதனனுக்கு அருச்சுனன் மேல பொறாமை.ஏன்னா வில்வித்தையில் அவன் ரொம்பக் கெட்டிக்காரனா இருக்கறதால.அதோட பங்காளிகளான பாண்டவர்கள் அஞ்சுபேரையும் கௌரவர்களுக்குப் பிடிக்காது.அருச்சுனன் கெட்டிக்காரனா இருப்பதற்கு ஆசிரியர் காரணம்னு அவர்மேல் கூட துரியோதனனுக்கு கோபம்இருந்தது..இது துரோணருக்கும்  தெரியும். ஆனாலும் இளவரசர்கள் ஆயிற்றே ஒன்றும் சொல்ல முடியாதே.

இந்த எண்ணத்தைத் துரியோதனனிடம் எப்படியாவது நீக்க வேண்டுமே என்று நினைத்தார்.அதற்கு காலம் வந்தது.ஒருநாள் அதிகாலை நேரம் தன நூற்று ஐந்து மாணவர்கள் புடைசூழ துரோணர் ஆற்றுக்கு குளிக்கப் போனார்.எல்லோரும் நடந்து போய்க்  கொண்டிருக்கும் பொழுது துரோணர் திடீரென நின்றார்.  .மாணவர்கள் அவர்பின் நின்றனர்.அவர்  பார்த்து,"அர்ச்சுனா, என் மேலாடையை ஆசிரமத்திலேயே .விட்டு .விட்டேன். நீ சென்று அதை எடுத்து .வா "என்று கூறவே அர்ச்சுனனும் உடனே புறப்பட்டான் 

அவனைத் தடுத்து நிறுத்தியவர் "அர்ச்சுனா, என் உத்தரீயத்தை வழியில் எங்கும் கீழே வைக்கக்  கூடாது."என்று கூறினார்.அர்ச்சுனனும் அப்படியே ஸ்வாமி என்றவன் வேகமாக  ஆசிரமம்  நோக்கிச் சென்றான். 

அவன் சென்ற பின் மற்றவர்களை நோக்கி அருகே   வளர்ந்து நின்றிருந்த பெரிய ஆலமரத்தின் அருகே வரச்  சொன்னார்.













வியாழன், 25 ஜூன், 2020

vinayagar paadal

                                     பல்லவி 
வினையைத தீர்க்கும்  விக்ன  விநாயகனே 
வேண்டும் வரம் தரும் வேத முதல்வனே        (வினை)
                                   அனுபல்லவி 
வளமுடன் நலமும்வாழ்வும்   உயர்வும் 
வளரும்படியாய் வரந்தனை அருள்வாய்    (வினை)

                                       சரணம்-1
வேதவ்யாசரின் வேண்டுதல் ஏற்றாய் 
பாரதம் எழுதி ஒற்றைக்கொம்பன் ஆனாய் 
காவிரி விரைந்திட சாகசம் புரிந்தாய் 
யாவரும் பணிந்திட  தத்துவம் ஆனாய்     (வினை)
                                    சரணம்-2
சந்திரன் சாபம் நீங்கிடச் செயதாய் 
சங்கரன் மைந்தனே சங்கடம் தீர்ப்பாய் 
ஐந்து கரத்தனே  ஆதிமுதல்வனே 
வந்து பணிந்தோம் வாழ்த்தி அருள்வாய்  (வினை)
                     ---------------------------------------



ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com 

வெள்ளி, 20 மார்ச், 2020


நண்பர்களே நலமா?
--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com